தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

                                                
                     நாங்கள் வீடு மாறிய போது லதா அனாதை போல் நின்று கையசைத்து விடை தந்தது அடிக்கடி என் மனதில் தோன்றி மறையும். தூக்கத்தில் கனவில் அந்தக் காட்சி தோன்றும்.
          அப்பா எப்போதாவது வெளியில் செல்ல நேர்ந்தால் உடன் புறப்பட்டு அவள் வீடு சென்று விடுவேன்.
          அவளின் பெற்றோர் என் நிலை கண்டு வருந்தினர். அவளுடைய அம்மா என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். நான் நன்றாகப் படிக்கிறேன் என்பதால் அவளின் அப்பாவும் என் மீது அதிக அன்பு காட்டினார்.
          இப்படி முன்பின் தெரிவிக்காமல் திடீரென்று வீடு காலி செய்தது அவ்ர்களுக்கு வியப்பையும் வேதனையையும் அளித்தது. அப்பாவின் போக்கு அவர்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
          நான் சிறுவனாக இருந்தபோது அம்மா தமிழகம் திரும்ப வேண்டிய கட்டாயம் உண்டானது. அங்கு தனியே விட்டு வந்த அண்ணனுக்கு உடல் நலமின்றி போனது.
          அப்போது என் கையைப் பிடித்து அவளுடைய அம்மாவிடம் ஒப்படைத்தார்.
           ” என் பிள்ளையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இனி இவன் உங்கள் பிள்ளை. ” என்றுதான் கண்ணீர் மல்கக் கூறினார்.
          ” கவலைப் படாமல் போய் வாங்க. இவனை எங்களில் ஒருவனாகப் பார்த்துக்கொள்கிறோம் .” என்று லாதாவின் அம்மா ஆறுதல் கூறினார்.
          அன்றிலிருந்து அவர்களில் ஒருவனாகத்தான் வளர்ந்தேன். லதா என்னுடைய விளையாட்டுத் தோழியானாள்.
          அவ்வாறு ஆறு வருடங்கள் பள்ளியிலும் வீட்டிலும் அவள்தான் என் தோழியாக இருந்தாள்.
          கள்ளங் கபடமில்லாமல் வளர்ந்த எங்களை இப்படி வேண்டுமென்றே அப்பா பிரித்து விட்டாரே! அவள் உடன் இல்லாதது பெரும் தவிப்பை உண்டுபண்ணியது.
          நாங்கள் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் இந்த தவிப்பைப் பற்றியும் பேசுவோம்.
           ” நீ போனதிலிருந்து சரியாக சாப்பிடமுடியலை… தூங்க முடியலை….எப்போதும் உன் நினைவுதான்…..ஒரே கவலையாக உள்ளது. ” என்பாள்.
          ” எனக்கும் அதே நிலைதான் லதா. அம்மாவும் அருகில் இல்லை. நீ இருந்தது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. இப்போ என்ன செய்வதென்றே தெரியலை. ” என்பேன்,
          ” இன்னும் கொஞ்ச நாளில் பரீட்சை முடிவும் வந்துடும். நீ ராபிள்ஸ் பள்ளி போவாய். நான் எந்த பள்ளியோ? இனிமேல் பள்ளிக்கு நாம் ஒன்றாகப் போக முடியாது. அடிக்கடி பார்க்கவே முடியாமல் போய்விடும். ” அவள் கண்கலங்கினாள்.
          ஆறாம் வகுப்புத் தேர்வுக்குப் பின் ஆண்களும் பெண்களும் தனித் தனி பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.
          மூன்று மாதங்கள் கழித்து முடிவுகள் வந்தன. நாங்கள் இருவரும்தான் பள்ளி சென்றோம். எதிர்ப் பார்த்ததுபோல் இருவருமே நன்றாக தேர்ச்சியுற்றிருந்தோம்.
          எனக்கு சிங்கப்பூரின் முதன்மையான ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளி கிடைத்திருந்தது. அவளுக்கு அவுட்ராம் உயர்நிலைப் பள்ளி.
          பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியையும் என்னை வெகுவாகப் பாராட்டினர். நான் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளதாகக் கூறினர். ராபிள்ஸ் உயநிலைப் பள்ளியில் சிங்கப்பூரிலேயே முதன்மையாகத் தேறிய நாற்பது மாணவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அந்த நாற்பது பேர்களில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அனைவருமே கொண்டாடினார்!
          லதா என்னைக் கட்டிப் பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியத் தெரிவித்தாள்! மாணவ மாணவிகள் அது பார்த்து கைதட்டி ஆரவாரித்தனர்.
          தேர்வு முடிவுடன் பெருமிதம் பொங்க வீடு திரும்பினேன்.
அப்பா அப்போது தூங்கிக் கொண்டிருந்தார்.
          ” என்ன? ” என்று கேட்டார்.
          ” எனக்கு ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இடம் கிடைத்துள்ளது. ” என்றேன்.
          ” வெரி குட். ” அவர் குதித்தெழுந்தார்.
” அங்கும் நீ வகுப்பில் முதல் மாணவனாகத்தான் வரவேண்டும் . ” ஆவல் பொங்க கூறினார்.
             இப்படி என்னைத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டு, அங்கும் முதல் மாணவனாக வரவேண்டும் என்கிறாரே. படிக்கும் மனநிலையையும் சூழலையும் இவர் உருவாக்கித் தந்தாலே போதும் என்று எண்ணியவாறு, ” சரி. ” என்று தலையாட்டினேன்!
            சற்று நேரத்தில் என்னுடைய முதன்மையான தேர்வு முடிவு எங்கள் வட்டார தமிழ் மக்களிடையே வேகமாகவே பரவியது. அப் பள்ளியின் சிறப்பு அப்படி!
          அப் பள்ளியில் நான் முதன் முதலாகக் காலடி வைத்தது மறக்க முடியாதது. அப்போதுதான் முதன் முதலாக முழுக்கால் சட்டை அணியலானேன்! அப்போதே நான் பெரியவனாகிவிட்டேன் என்ற உணர்வு தோன்றியது. வெள்ளை மேல்சட்டையும் முழுக்கால் சட்டையுமே பள்ளியின் சீருடை. பள்ளியின் சின்னத்தை சட்டையின் இடது புறம் குத்திக்கொண்டேன்.
          நான் உயரமாகவும் கட்டான உடல் அமைப்பும் கொண்டவன். சுருள் சுருளாக அடர்த்தியான கேசமும், அரும்பு மீசையும், எப்போதும் முகத்தில் புன்னகையும் உடையவன்.
           அதிகாலை நான்கு மணிக்கே விழித்து பள்ளி செல்ல தயாராகிவிடுவேன். அன்றன்று கொண்டுச் செல்ல வேண்டிய நூல்களை அன்போடு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பேருந்து ஏறும் இடம் சென்றுவிடுவேன்.
          பேருந்து கடைசியாக நிற்கும் இடம் சூலியா ஸ்ட்ரீட். அங்கிருந்து அடுத்த பேரூந்து ஏறி பிராஸ் பாசா ரோடு செல்லவேண்டும். காசு மிச்சப்படுத்த நான் நடந்தே செல்வேன். திரும்பும்போதும் அப்படித்தான். இவ்வாறு அன்றாடம் இருபது காசுகள் சேர்த்து விடுவேன்.
          ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளி சிங்கப்பூரின் முதல் உயர்நிலைப் பள்ளி. இதை சர் ஸ்ட்டம்பர்ட் ராபிள்ஸ் கட்டினார். இவர்தான் சிங்கப்பூரைக் கண்டுபிடித்தவர்,
          என் வகுப்பு இரண்டாம் படிவம். மொத்தம் நாற்பது மாணவர்கள். என்னைத் தவிர அனைவரும் சீனர்கள்.அவர்கள் என்னை ” இந்தியா ” என்றே அழைப்பார்கள்.
          அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பள்ளியின் முதல் மாணவர். இவர்கள் மத்தியில் வகுப்பில் முதல் மாணவனாக வருவது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்தேன். ஆனாலும் தொடர்ந்து என் பாணியில் பாடங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். மனதில் சஞ்சலம் இல்லாமால் முழு மூச்சுடன் முயன்றால் முதல் மாணவனாகலாம் என்ற நம்பிக்கையுடன் செயல் பட்டேன்.
           ஆனால் என்னுடைய ஆர்வத்தையும் கவனத்தையும் தொடர்ந்து சிதறடித்து கொண்டிருந்தார் அப்பா.
          அதற்குக் காரணம் லதா!
          நான் விடியற் காலையிலேயே பள்ளி சென்று விடுவதால் லதாவைப் பார்ப்பது அரிதாகியது. எப்போதாவதுதான் எதிர்ப்பாராத வகையில் வீடு திரும்பும்போது சந்தித்துக் கொள்வோம். அதைப் பார்த்த சிலர் அப்பாவிடம் சொல்லியுள்ளனர்.
           ” அவள் இவனை விட மாட்டாள் போலிருக்கிறதே? ” தனக்குத்‌தானே கூறிக்கொண்டிருந்தார்.
           ” நீ பள்ளி முடிந்து வரும்போது பஸ் ஸ்டாப்பில் அவளுக்கு காத்திருந்து பேசுகிறாயாமே? டீக்கடையில் சொல்கிறார்களே? ” ஒரு நாள் கோபமாகவே கேட்டுவிட்டார்.
           ” எப்போதாவது பார்த்திருப்பேன். ‘ என்றேன். அதுதான் உண்மையுங்கூட.
            ” இனிமேல் அங்கே அவளிடம் பேசாதே. ” என்று மட்டும் அப்போது கூறினார்.
மீண்டும் ஒரு முறை பார்த்தபோது நடந்தவற்றை அவளிடம் சொன்னேன். அவள் வெகுண்டெழுந்தாள்.
” வீட்டிலும் பார்க்க முடியாது. வெளியிலும் பேசக்கூடாது. நாம் என்னதான் செய்வது? நாம் எப்படிதான் பேசுவது? ” கோபத்துடன் கேட்டாள்.
           ” என்ன செய்வது? அவர் எப்போதும் உன்னைப் பற்றியே பேசுகிறார்.உன்னால் என் படிப்பு கேடுமாம். நான் வகுப்பில் முதல் மாணவனாக வர முடியாதாம். எனக்கு எப்போதும் உன் நினைவுதானாம். படிக்கும் நேரத்திலும் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேனாம். ”
           ” அவர் சொல்வது உண்மையா? என்னால் உன் படிப்பு கேடுமா? இத்தனை வருசமாக நாம் ஒன்றாக படித்தோமே? அப்போதெல்லாம் நீ வகுப்பில் முதலாவதாக வரவில்லையா? ”
           ” உன்னால் என் படிப்பு கெடாது லதா. இனிமேல் இவரால்தான் படிப்பு கெடும்! ”
           ” ஏன் அப்படி சொல்கிறாய்? நீ எப்போதும்போல் வகுப்பில் முதல் மாணவனாகவே வர வேண்டும். ”
           ” அவர்தான் புரியாமல் பேசுகிறார் என்றால் உனக்குமா புரியவில்லை? என் வகுப்பில் எல்லாருமே அவரவர் பள்ளியின் முதல் மாணவர்கள். அவர்களுக்கும் என்னைப் போலவே முதல் மாணவனாக வர ஆசை இருக்கும். அவர்கள் எனக்கு கடுமையான போட்டி தருவார்கள். நான் நன்றாக படித்தால்தான் முதல் மாணவனாக முடியும். இவர் என்னவென்றால் எப்போது பார்த்தாலும் உன்னைச் சுட்டிக் காட்டி என் படிப்பைக் கெடுக்கிறார்! ” சற்று ஆவேசமாகவே கூறினேன்.
          ” அப்படியானால் இனிமேல் நாம் பார்க்கவேண்டாம். ” அவள் சட்டென்று கூறிவிட்டாள்.
          ” பின்பு நாம் எப்படி பேசுவது? உன்னிடம் பேசாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? எப்படி படிக்க முடியும்? நீ ஒருத்திதானே எனக்கு துணை? எனக்கு அம்மா கூட இங்கு இல்லையே! இங்கு இவரிடம் அனாதை போல் வாழ்கிறேன். என் மீது அன்பு செலுத்த உன்னை விட்டால் வேறு யார் உள்ளார்கள்? ”
          அவளின் கண்கள் கலங்கின.
           ” ஏன் அழுகிறாய்? ” கண்களைத் துடைத்து விட்டேன்.
          ” நீ கவலைப் படாதே! உன்னோடு நான் எப்போதும் இருப்பேன். எங்கும் போய்விட மாட்டேன். நாம் எப்போதும் போலவே இருப்போம். சரியா? ”
           நான் சரியென்பதுபோல் தலையசைத்தேன்.
          ( தொடுவானம் தொடரும் )
 

Series Navigationபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுமருமகளின் மர்மம் – 17தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47ஹாங்காங் தமிழ் மலர்திண்ணையின் இலக்கியத் தடம் – 23குலப்பெருமை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *