தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி

This entry is part 10 of 25 in the series 17 மே 2015
.
 Vellore Jail

(வேலூர் மத்திய சிறைச்சாலை)

வேலூர் வாழ்க்கை பிடித்திருந்தது. கோடை காலத்தில் கடுமையான வெயில். நான் சுழலும் காற்றாடி வைத்திருந்தேன். குளிர் காலத்தில் பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய்கூட உறைந்துவிடும். மிகவும் நேர்மாறான சீதோஷ்ண நிலை.

வேலூர் தமிழகத்தின் வட கிழக்கில் உள்ள நகரம். பாலாற்றின் கரையோரத்தில் வேலூர் அமைந்துள்ளது. அப்போது அது வாட ஆற்காடு மாவட்டத்தில் இருந்தது. ( தற்போது வேலூர் தனி மாவட்டமாகிவிட்டது ).

வேலூர் பல அரசாட்சிகளின் கீழ் ஆளப்பட்ட சரித்திரப் புகழ்மிக்க நகரம். பல்லவர்கள், இடைக்கால சோழர்கள். பிற்கால சோழர்கள், விஜயநகர சாம்ராஜ்யம், ராஷ்டிரகுட்டா சாம்ராஜ்யம் ( மகாராஷ்டிரர்கள் ) கர்நாடக சாம்ராஜம் . ஆற்காட்டு நவாப், ஆங்கிலேயர்கள் என்று மாறி மாறி கைப்பற்றப்பட்டு அரசாளப்பட்டது.

          வேலூருக்கு இந்திய அளவிலும் உலக ரீதியிலும் பெருமை சேர்த்தது எங்களுடைய கல்லூரியும் சி.எம்.சி. மருத்துவமனையுமாகும். ( இதன் சிறப்பை தனியாக பின்பு எழுதுகிறேன். )
          வேலூரின் மற்றுமொரு சிறப்பு இங்குதான் வேலூர் மத்திய சிறைச்சாலை உள்ளது. இது தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய சிறைச்சாலை. ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது இங்கிருந்துதான் சுதந்திரப் போராட்ட கைதிகள் அந்தமான் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். இது ஆங்கிலேயர்களால் 1861 ஆம் வருடம் கட்டப்பட்டது. துவக்கத்தில் இது பெண் கைதிகளுக்காகக் கட்டப்பட்ட தமிழகத்தின் முதல் பெண்கள் சிறைச்சாலை. பின்புதான் இது பொதுவான சிறைச்சாலையாக மாறியது. இதன் சிறப்பு என்னவெனில் இதில் சில பிரபலமான அரசியல் தலைவர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூதறிஞர் இராஜாஜி, முன்னாள் ஜனாதிபதிகள் வி.வி. கிரி, ஆர். வெங்கட்ராமன், முன்னாள் தமிழக முதல்வர்கள்   பெருந்தலைவர்  கு. காமராஜ், பேரறிஞர் அண்ணா. ஸ்ரீலங்காவின் கடைசி மன்னரான ஸ்ரீ விக்கிரம ராஜசின்ஹா என்பவரும் ஆங்கிலேயர்களால் இங்குதான் சிறைவைக்கபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
          இந்த புகழ்மிக்க வேலூர் மத்திய சிறைச்சாலை எங்களுடைய விடுதியிலிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான் இருந்தது. ( பின்னாட்களில் இந்த சிறைச்சாலையில் இருந்த ஆயுள் கைதிகளிடையே கிறிஸ்துவ மாணவர் இயக்கத்தின் சார்பில் ” சிறை ஊழியம் ” செய்ய நான் ஞாயிறு மாலைகளில் சென்று வந்தேன். )
           வேலூர் சென்னையின் மேற்கே அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூர் மேற்கே இருநூற்று பதினொன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பொருளாதார ரீதியில் தோல் பதனிடுவது இங்கு பிரபலமானது. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் முப்பத்து ஏழு சதவிகிதம் வேலூரிலிருந்து செல்கிறது.

இந்து கடவுள்களில் ஒருவரான முருகன் இங்கு கையில் வேலுடன் வேட்டையாட வந்ததால் இதற்கு வேலூர் என்ற பெயர் வந்தது என்பர். வேறு சிலர் இங்கு வேல மரங்கள் நிறைந்திருந்ததால் அந்தப் பெயர் வந்ததென்றும் கூறுவார்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த சித்தூர் வேலூருக்கு அருகில்தான் உள்ளது. அங்கு சென்று வர பேருந்துகள் இருந்தன.

இங்குள்ள போதே பெங்களூருக்கும் சித்தூருக்கும் சென்றுவர ஆவல் கொண்டேன். இதில் என்ன விசேஷம் என்றால் பெங்களூரை தலைநகரமாகக் கொண்டுள்ள கர்நாடக மாநிலத்திலும், சித்தூர் இருந்த ஆந்திர மாநிலத்திலும் மதுவிலக்கு கிடையாது. ஆனால் தமிழகம் முழுதும் மதுவிலக்கு. இதனால் இந்த இரண்டு மாநிலங்களுக்கும் வேலூரிலிருந்து சுற்றுப் பயணிகள் அதிகமாக செல்வதுண்டு.

நாங்கள் வேலூரிலிருந்து பேருந்து மூலம் சித்தூர் சென்று அங்குள்ள திரைப்பட அரங்குகளில் படம் பார்த்துவிட்டு, அங்கேயே இரவு உணவையும் முடித்துவிட்டு திரும்பிவிடலாம். அங்குள்ள மக்கள் அதிகமாக தெலுங்கில் பேசினாலும் தமிழும் சரளமாகப் பேசுவார்கள்.

பெங்களூர் செல்ல வேண்டுமென்றால் காட்பாடியில் இரயில் மூலம் போகலாம். அல்லது பேருந்து மூலமும் போகலாம். அனால் அங்கு சென்றால் ஒரு நாள் தங்கிதான் திரும்பவேண்டும்.

இதற்கெல்லாம் செலவு செய்ய கை நிறைய பணம் இருந்தது. அப்பா கொஞ்சமும் சுணங்காமல் மாதந்தோறும் பணம் அனுப்புவார். மாதந்தோறும் விடுதிக்கான செலவு, உணவு செலவு போன்றவற்றையும், மூன்று மாதத்துக்கு ஒரு முறை கல்லூரி கட்டணமும் தவறாமல் கட்டி விடுவேன். மாலைகளில் வேலூர் கடை தெருவுக்குச் சென்றால் அங்கேயே நல்ல உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்புவேன்.

சிங்கப்பூரிலிருந்து அப்பா அவ்வப்போது கடிதம் எழுதுவார். லதாவிடமிருந்தும் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. நன்றாக படித்து முடித்துவிட்டு டாக்டராக திரும்புங்கள் என்று ஊக்கமளிப்பாள். வெரோனிக்காவும் கடிதம் எழுதினாள். பார்ப்பது எப்போது என்று எழுதுவாள். நான் கூடிய விரைவில் என்று கூறி பதில் தருவேன். நான் நினைத்தால் பேருந்து மூலம் சென்னை சென்று அங்கிருந்து தாம்பரம் செல்லலாம். ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த ஆர்வம் இல்லாமல் போனது. விடுதிச் சூழல் அப்படி. படிப்பில் முழுக் கவனம் செலுத்தவேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டேன்.
மருத்துவப் படிப்பை முடிக்க சரியாக ஐந்தரை வருடங்கள் ஆகும். அதன் பின்பு ஒரு வருடம் ” ஹவுஸ் சர்ஜன் ” பயிற்சி உள்ளது. ஆகவே மொத்தம் ஆறரை வருடங்கள் வேலூர்வாசியாவே இருந்தாக வேண்டும். அதிலும் ஒவ்வொரு வருடத் தேர்வில் முறையாகத் தேர்ச்சி பெற்றாகணும். இல்லையேல் மீண்டும் தேர்வு எழுத ஆறு மாதங்கள் கூடிவிடும். தேர்வில் ஒரு முறை தோல்வியுற்றால் ஆறு மாதம் வீணாகும்.வயது கூடுவதுடன் பணமும் விரயமாகும். கூடுமானவரை வருடந்தோறும் தேர்ச்சி பெறுவதே நல்லது.

          மருத்துவக் கல்லூரியின் வளாகம் மிகவும் பெரியது. அதுவே தனி கிராமம் போன்றது. மரம் செடி கொடிகள் நிறைந்துள்ள பகுதியில் ஆங்காங்கே பங்களாக்கள் காணப்படும். கல்லூரியிலும், மருத்துவமனையிலும் பணிபுரியும் மருத்துவர்களும், பேராசிரியர்களும் அங்குதான் வசித்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு குடியிருந்தனர்.
வளாகத்தின் ஒரு பகுதியில் ” நவ ஜீவ நிலையம் ” என்ற பெயர்கொண்ட இன்னொரு ” காலனி ” உள்ளது.. இங்கு தொழுநோயாளிகளின் மறுவாழ்வு இல்லங்கள் இருந்தன. அவர்கள் அங்கு பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.வட ஆற்காடு மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமான தொழுநோயாளிகள் இருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை தந்து மறுவாழ்வு தருவதில் சி. எம். சி. மருத்துவமையின்  பங்கு அளப்பரியது. தொழுநோய் ஆராய்ச்சிக்கென்றே  கரிகிரி என்ற ஊரில் ஒரு பெரிய வளாகமும் உள்ளது. இங்கு பணியாற்றிய டாக்டர் காக்ரேன் என்பவரும், டாக்டர் பால் ப்ரேன்ட் என்பவரும் தொழு நோய் ஆராய்ச்சியிலும் சிகிச்சையிலும் உலகில் பிரசித்திபெற்ற முன்னோடிகளாக விளங்கியுள்ளனர். ( தொழுநோய் பற்றி பின்பு விளக்கமாகக் கூறுவேன். )

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமிதிலாவிலாஸ்-19மூன்று குறுங்கதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *