நன்னயம்

This entry is part 17 of 29 in the series 18 நவம்பர் 2012

இன்னிக்காச்சும் மருந்து வாங்கீட்டு வந்தியாடா சின்ராசு ? ஜுரத்தில் கிடந்த ஆத்தா ஈனமான குரலில், இத்தனை நேரம் மகனின் வரவுக்காகவே காத்திருந்தவளாக , மகன் வீட்டுக்குள்ளே நுழைந்து செருப்பைக் கழட்டும் சத்தம் காதில் கேட்டதும், கேட்கிறாள்.

அடச்சே….என்ன மோசமான தலஎளுத்து என்னுது…ஒரு சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து மாத்திரை வாங்கியாரக் கூட துட்டு இல்லாத சென்மம்…மானங்கெட்ட பொளப்பு பாக்கறேன்..பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்னு….பேரு தான் வீட்டு புரோக்கர்.. தெருத் தெருவா அலைஞ்சு வீடு பாத்துத் தர வரைக்கும் தான் நூறு தடவை ஃபோனைப் போட்டுக் கூப்பிடுவாங்க. வீட்டுக்குள்ளாற நொளஞ்சதும்..இவன் யாருன்னு பாப்பாய்ங்க பன்னாடைங்க …! .கொஞ்சம் கூட நன்றி கெட்ட சனங்க, ஏமாத்தற சனங்க, இதுங்களுக்குச் செஞ்சு இனியும் கூலி கெடைக்கும்னு நிச்சயமில்லை..தனக்குத் தானேப் புலம்பிய சின்ராசு…..இந்த புரோக்கர் பொளப்ப தூரக் கெடாசிட்டு இனிமேட்டு……!

என்னா செய்யப்போறே…? பெரிய கேள்வி தலையில் குட்டியது..

காலில் சொம்புத் தண்ணீரை மொண்டு விட்டுக்கொண்டிருந்த சின்ராசு…பாயில் சுருண்டு கெடந்த தன் ஆத்தா பாக்கியலட்சுமியைப் பார்க்கிறான்.

என்னடா…பேச்சு மூச்சைக் காணோம்…..அப்பிடியே போய் சேருன்னு சொல்லுதியா? போறேண்டா…போறேன்…நான் போனாத்தான் தெரியும்…உனக்கும் நாதி இருக்காது. அப்போப் புரியும் இந்த ஆத்தாளின் அருமை..

ஆத்தா …உன்னத்தான்…நானே…நொந்து போயி வந்துருக்கேன்…நீ வேற வெந்த புண்ணுல தீக்குச்சியை எரியவுட்டுக் காமிச்சா எப்புடி? துட்டிருந்துச்சுன்னா….மருந்த வாங்கியாற மாட்டேனாக்கும்…நீயெல்லாம் தேளாப் பொறந்திருக்க வேண்டியவ…..கொட்டியே கொன்னுப்புடுவியே…! பேரு தான் பாக்கிய லட்சுமி….ஒரு பாக்கியத்தையும் காணோம்….எனக்கும் வெச்சுருக்க பாரு….சின்ராசுன்னு ….இப்படி தெருத் தெருவா அலைஞ்சு அலைஞ்சே….நான் சீக்காளிராசாயிருவேன். சொத்து பத்தில்லாம நீங்களே  சோத்துக்கு லாட்டரி அடிக்கிற போது   உங்களுக்கெல்லாம்   புள்ள குட்டி எதுக்குங்கறேன்..? அதுக்குத்தேன் தெருவுல ஏகப்பட்ட நாயிங்க அலையுதே….இதுல நான் வேற…..ராசா…. மந்திரின்னு அலையிறேன்.           உன் புடுங்கல் வேற…மருந்து எங்கே..?, விருந்து எங்கே? ன்னு..கேட்டுக்கிட்டு,  ஒருநாளாச்சும் என்னிய நிம்மதியா ஊட்டுக்குள்ளார நொளயவிடுறியா..?. …எரிச்சலுடன் பெத்தவளைப் பார்த்து எட்டுக்கட்டையில் குரலை உசத்தி கத்துகிறான் சின்ராசு..
எலேய்… .செத்த பாம்ப அடிக்கிற பார்த்தியா..நீ…! நா .இப்போ என்னா கேட்டுப்புட்டேன்…உன்கிட்ட ..மருந்து எங்கடான்னு கேட்டா….மொகரையக் காமிக்கிறே….நீயெல்லாம் என் பாவத்துக்குப் பொறந்த பயடா. அதான் இப்ப வந்து என் உசுர வாங்க காலடில நிக்கிற .

அழுக்குப் பாயில் படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து விட்டாள்….மகனைத் திட்டி திட்டியே உயிரை வளர்த்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டவளாச்சே.

சின்ன வயசுலேர்ந்து தலையா அடிச்சுக்கிட்டேன்….கூலி வேலை செய்யுற பொம்பள வவுத்துல வந்து பொறந்துபுட்டே…பள்ளியோடம் போயி படி…நீ படிச்சாத்தேன் நாளிக்கு கஞ்சிக்கு யாரு கையையும் பார்க்க வேணாம்னு…கேட்டியா… ? படிக்கிறதத் தவுத்து தெருவுல மேயுற கூத்தாடிக்கெல்லாம் கொடி கட்டி பறக்க விட்டே….இப்பென்னாச்சு…?..அவிங்க ஓங்…கோவணத்தையே பறக்க உட்டுப் போயிட்டைங்க. இப்பவாச்சும் புரியுதா…கூத்தாடிங்க பின்னாடி திரிஞ்சா நிலைமை என்னாவுமமுன்னு . ஒரு கல்யாணம் காட்சி கூட நடக்காது…..வெத்துப் பயல எவ கட்டுவா? பன மரமாட்டமா நின்னாப் போதுமா? சம்பாரிக்கனும்டா…வேலக்கிப் போயி…சம்பாரிக்கோணம்…தருதலை….தருதலை..! என்று தலையில்  அடித்துக்  கொள்கிறாள்.

……..அமைதியாக கோபத்துடன் சின்ராசு தன்  ஆத்தாவையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்…இன்னம் என்னவெல்லாம் சொள்ளபோவுதுன்னு நானும்  பார்க்கிறேன்…!
காலங்கடக்க .பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தக் கூட நாதியில்லாம நிக்கிறே…வவுறு பத்திக்கிட்டு எரியுதுடா..! நாளிக்கி ஒனக்கு எவ கஞ்சி ஊத்துவா…நீயும் கெடக்க வேண்டியது தான்.! காசில்லையாம்…காசு..!     எல்லாம்    பொய் சாக்கு..டாஸ்மாக்கு பக்கம் போகாமலா வந்திருப்ப..? அதுக்கு மட்டும் தெனம் எங்கிட்டிருந்து காசு கெடைக்குது..உனக்கு..? அதுவா ஓடியாந்து ஒட்டிக்கிச்சா…? கேள்வி கேட்டு சின்ராசை உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருந்தாள்.
…………இதையும் கேட்டுக் கொண்டு வீம்பாக நின்று கொண்டிருந்தான் அவன்.
எலேய்…என்னக் காப்பாத்திக் கொடுல்லே…நீயும் நல்லாருப்பே..நான் நடமாடி நாலு ஊட்டுப் பாத்திர பண்டம் களுவி உன் வவுத்தை நிறைச்சுப்புடுவேன்…! உனக்கு ஒரு கலியாணம் கூட கட்டி வெப்பெண்டா …என்னிய  நம்பு. அவள் குரலில் கெஞ்சல்  இருந்தது.

ஆத்தா…நானா…நீ வேணாம்னு நினைக்குதேன்..அதான் அந்தாளு….ஓம் புருசன்…ஓங் கூட வாளப் பிடிக்காமதேன் கரித்துண்டுல கிறிக்கிப்புட்டு வேறொரு சிறுக்கிய இளுத்துக்கினு ஓடிப் போச்சே…அப்பவே நானும் களண்டிருக்கணும் செஞ்சனா….நீயே சொல்லு செஞ்சனா…பெத்த கடைமையின்னு, ஆத்தாளாச்சேன்ன்னு இன்ன வரிக்கும் உம் மவனா நிக்கல..! எகிறிக் கொண்டு வந்தான் சின்ராசு. நீ ஒரு வாட்டியாச்சும் நான் நல்லா இருக்கணுமுன்னு.நெனச்சாத்தேன்.நானும் நல்லாயிருப்பேன்….நீ எங்க நெனப்ப….எப்பப் பாரு….என்ன அவிச்சு எடுத்தாத்தேன் உனக்கு சீரணமாகும்..நா இப்பல்லாம் குடிக்கிறதே இல்ல அதுவாச்சும் தெரியுமா…உனக்கு.? நீதான் என்னிய திருந்தவே உடாம வறுத்துக் கொட்டுவியே..அந்தாள மாதிரி ஓடிப் போயிருக்கோணும்…அப்பத் தெரியும் என் அருமை உனக்கு.! சின்ராசின் குரல் அதிருகிறது.

ம்க்கும்…..அதேன் …..அது என் கழுத்துச் சத்துரு……அத்துகிட்டு எவளையோ பாத்து ஓடிச்சு…நீ என் வவுத்துச் சத்துரு…..இருந்து களுத்த சுருக்குற….எனக்கு ஒண்ணும் பெரிய வித்தியாசம் காணலை….இப்ப என்னாத்துக்கு பளைய கதய பேசுறே…நீ…?

ஹக்….ஹக்….ஹக்….ஹக்….சொல்லிவிட்டு தொடர்ந்து இருமுகிறாள்.

செருமலோட…”உன் உதாருக்கேல்லாம் வேற ஆளப் பாரு…என்கிட்டே எகிறாதல…நான் நெனக்காமதேன் இம்புட்டு வளந்து நிக்குறியாக்கும்”..வெட்டிப் பய உனக்கே வாயி பொடனி வரிக்கும் நீளுதே….! உன்ன வளத்து ஆளாக்கின எனக்கு எம்புட்டு இருக்கும் ?

தோபாரு..ஆத்தா .இன்னொரு வாட்டி இப்பிடில்லாம் சொன்னீன்னா, பொறவு இந்த வீட்டுப் பக்கமே தலையைக் காட்ட மாட்டேன் ஆமா….சொல்லிட்டேன்..

அடப் போடா….சீமான்…கை நிறையக் கொண்டுட்டு வந்து கொட்டுற …வைக்க எடம் இல்லாம நான் தவிக்கிறேன் பாரு…..நீ வரலையின்னு நான் மூக்கைச் சீந்தவா? எக்கேடோ… கெட்டுத்  தொலை..மருந்த வாங்கியாந்தியாடான்னு கேட்டா…அதுக்கு இம்புட்டு வியாக்கியானமா? வெளங்காத பய….நீ வரதும் ஒண்ணுதேன்…தொலையிறதும் ஒண்ணுதேன்..! அனாதப் பொணத்துக்க்கும் நாலு பேருதேன்..போ..!

முனகியபடியே பாயில் படுத்துக் கொள்கிறாள்..படுத்தும் சும்மா இருக்காமல்….”நான் புள்ளேன்னு….நெனச்சு…இவனுக்குப் தொட்டில் கட்டிய நாளுக்கு ஒரு அம்மிக்கல்லை கொத்தி இருந்தா….கூஊகும்……..என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க….!

த்தா….நிறுத்து உன் பிலாக்கணத்த….இப்ப இன்னா இங்கன எளவா விழுந்து கெடக்கு.?..நானும் நாயா அலைஞ்சு தான வீடு பார்த்து, பிடிச்சுக் கொடுத்து பிரோக்கர் கமிஷன் வாங்கியாறேன்.இப்போ ஆடி மாசம் என் பிசினெஸ் கொஞ்சம் டல்லு…அதும் போன மாசம் வீடு பிடிச்சிக் கொடுத்த கமிசன் பணம் முள்ளங்கிப் பத்தையா பத்தாயிரம் தரோணும்…இதோ தரேன்..இப்பப் தாரேன் ன்னு சொல்லி சொல்லியே என் செருப்பைத் தேச்சுப்புட்டான்..நானும் நெதம் நாயா அலைஞ்சு தான் கேக்குறேன்….! இன்னும் ஒத்தப் பைசா தரல. அது கண்டிப்பா கெடைக்கும். அம்புட்டையும் கொண்டாந்து ஒன்கிட்ட தாரேன்..போதுமா?

அம்புட்டுப் பெரிய ஊடு…நான் சொல்லும்போது வாயெல்லாம் பல்லா வந்து நின்னாங்க…அந்த ஐயிரும்,மாமியும்.!..பேசி முடிச்சி கொடுத்து குடி வந்து மூணு மாசம் ஆவப் போவுது….பிறவு தாரேன் கொஞ்சம் பொறுன்னு சொல்லிப்புட்டு,…. இப்போ கேட்டா…நீ என்னா….எனக்குக் கடனாக் கொடுத்தியா ?ன்னு வாய் கூசாமே அந்த மாமி கேட்குறா…கேவலம்…ஒரு நூறு ரூபாத் தாள் கூட கையில கொடுக்காமே ஏமாத்திருச்சுங்க,.இவிங்கல்லாம் பெரிய மனுசனுங்க. இத்தனைக்கும் பெரிய பணக்காரங்கன்னு பேரு,

நா என்ன அதுங்க கிட்ட என் மானத்தை உட்டு பிச்சையாக் கேக்க முடியும்..உதார் உட்டா…ஆனதைப் பாருங்குது, பெருசு..!.

வெளில ஒலகம் இப்படி இருக்கேல, பாயில கெடக்குற ஒனக்கு என்னாத் தெரியும் என் பாடு..? எதுக்கும் சாயந்தரம் கடீசியா..இன்னொரு தரம் அங்க  போயி கேக்குறேன். தரத வாங்கி மருந்து வாங்கியாறேன். அப்படி இல்லேன்னு வையி…இந்தூட்டுப் பக்கமே வராமே எங்கனா போறேன்…சரி தான.

…………………..

என்னாங்கரே, இப்போ நீ? நான் இம்புட்டு சொல்லுறேன்…நீ வாயத் தெறந்து பதில் சொல்லு….!

இம்புட்டுப் பெரிய உலகத்துல ஒனக்குன்னு ஒரு சின்ன வேலை கூடவா கெடைக்க மாட்டேங்குது..சின்ராசு…? புரோக்கராம்…புரோக்கர்….! உழைச்சு பாருடா….காசு கனக்கும்..கையில .தங்கும்..! சொல்லிக் கொண்டே குவளைத் தண்ணீரை எடுத்து மடக் மடக் கென்று குடித்தவள் மறுபடியும் பாயில் சுருண்டு கொண்டாள்.

இதைப் பார்த்ததும் ….ஏனோ சின்ராசுக்கு நம்ம அம்மாவின் இந்த நிலைக்கு தானே தான் காரணம்..முதலில் ஒரு வேலையைத் தேடு என்று மனசாட்சி நெஞ்சில் அறைந்து சொன்னது போலிருந்தது.அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து அவனை உசுப்பியது.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் சின்ராசு சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

இந்தப் படிக்காத பரதேசிக்கு என்னா வேலை கெடைக்கும்….? ஆத்தா சொல்லுறது எல்லாம் சரிதானோ ..? மனசாட்சி முதல் முறையாக அவனையே வெறுத்தது…!

கால்கள் தானாக ,அந்த ஊரின் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு சென்று நின்றது. .அங்கே “காலணிகளை இங்கே வைக்கவும்..” அந்தப் பலகை அவனைத் தட்டி எழுப்பியது. “கேளுடா சின்ராசு ” என்றது.

பக்கத்துக் கடைக்கு சென்று “அண்ணே…நானும் இங்கே ஒரு செருப்ப பாத்துக்கற கவுன்டர் போடலாம்னு இருக்கேன்…கொஞ்சம் உதவி செய் நண்பா..அங்கிருந்த தன் பழைய நண்பனைப் பார்த்து கேட்கிறான் சின்ராசு..! இதுக்கு யாரப் பாத்து பேசணும்னு சொன்னா புண்ணியமாப் போகும்…சின்ராசுவின் குரலில் குழைவு இருந்தது.
.நீயாடா…சின்ராசு ?.நல்லதாப் போச்சு…நீ இன்னாத்துக்கு புதுசா கவுன்டர் போடணும்…இதோ…இத்த எடுத்துக்கோ…நான் பக்கத்துல அர்ச்சனைத் தட்டு கடை குத்தகைக்கு எடுத்திருக்கேன்…நீ இத்த எடுத்து பண்ணு தல..!.நானும் பத்து நாளா இத்த மாத்திவுட ஆள் தேடிக்கிட்டே இருக்கேன்….என்று பெரிய மனசு பண்ணி கடைக்கார நண்பன்  சொல்வதை கேட்ட சின்ராசுவின்  முகம் பிரகாசமாகிறது.

ஏதோ லாட்டரி அடித்தது போல் உணர்ந்தான் சின்ராசு…முதல் முறையாக அந்தக் கோவிலின் கோபுரத்தைத் கையெடுத்து கும்பிட்டு…தொளிலக் கத்துக் குடுண்ணே….பிறகு பாரு.. பாட்டா ஷோரூம் ஒண்ணு வெச்சிபுடலாம் …என்று சந்தோஷமாக…சொல்கிறான். ஒரு விதத்தில் ஆசை தான் ஆளை உயர்த்தும்.

அண்ணே…!அதுக்கும் மொதல்ல .இத்த… என் ஆத்தா கையில சொல்லிப்புட்டு வந்திர்றேன்..சந்தோசப்படும்.அதுவரைக்கும் வேற யாருக்கும் இந்த வேலையத் தந்திடாதீங்க…என்று உத்திரவாதத்தோடு…அங்கிருந்து பெரிய வேலை ஒன்று கிடைத்து விட்ட நிம்மதியில் கிளம்பினான் சின்ராசு.
ஆண்டவன் கண்ணத் தொறந்துப்புட்டான்..இப்போவே ஐயர் ஊட்டுல கமிஷன் கேட்டா அவரும் தந்துச்சுன்னா   ஆத்தாக்கு மருந்துக்கும் ஆச்சு….கைசெலவுக்கும் ஆச்சு…கணக்குப் போட்டபடியே…ஐயாயிரம் தந்தாலும் போதும்…மனசுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டே நடராஜன் ஐயர் வீட்டை நோக்கி விறு விறுவென்று நடந்தான்.மனசுக்குள் ஒரு நம்பிக்கை. நம்ம காசு நமக்கு கெடச்சுடும். உளச்சது …அலஞ்சு அலஞ்சு பார்த்த வீடு இது…ம்ம்ம்..!
நடராசன் ஐயர் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்துகிறான்.

“ஓம் பூர் புவஸ்ஸுவஹ..தத் ஸ விதுர்வரேண்யம்….பர்கோ…” அழைப்புமணியின் இசை வீடெங்கும் இசைக்க….

ஏன்னா….. சித்த யாருன்னு பாருங்கோ….கோகிலா பூஜை அறையிலிருந்து குரல் கொடுக்க..

கதவைத் திறந்த நடராஜன்…”வாப்பா…சின்ராசு...நீயா….மாமி சொன்னா…அடிக்கடிக்கு சின்ராசு வந்துட்டுப் போறான்னுட்டு..என்ன விஷயம்…? என்று ஒன்றுமே தெரியாதவர் மாதிரி கேட்கிறார் அவர்.

ம்ம்…ஆமாங்கய்யா…..வீடு நல்லா இருக்கா….எந்தப் பிரச்சனையும் இல்லல….தண்ணி நல்லா வருதா?…அதோட எனக்குத் தர வேண்டிய கமிஷன் பணம் இன்னும் வரலை….அத்தக் கொடுத்தீங்கன்னா…..சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து வாங்கோணம்..பவ்யமாகக் கேட்கிறான் சின்ராசு.

ஒ…அந்தக் கமிஷனா? இரு வரேன் என்பதற்குள்…!

ஏன்னா…தோ ….பாருங்கோ……உங்களுக்கு போன் வந்துருக்கு…ஆஃபீஸ்காரா யாரோ…உங்ககிட்டப் பேசணுமாம்…முக்கியமா….என்று கோகிலா கைபேசியைத் தூக்கி காண்பித்து, அழைக்கிறாள்.

தோ..இருப்பா…என்னன்னு பேசிட்டு வரேன்….என்று வேஷ்டியை..காலால் லேசாக மேலே உந்தித் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டே உள்ளே போகிறார் நடராஜன்.

ஐந்து நிமிஷத்தில் திரும்ப வந்து…ம்ம்..இந்தா..அம்மாவுக்கு மருந்து வாங்கணும்னு சொன்னே….வெச்சுக்கோ என்று சொல்லி ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை கையில் திணித்து விட்டு….அப்போப் ..பார்க்கலாம்…என்று தலை அசைக்க….”போயிட்டு வாடா..” என்பது போலிருந்தது….சின்ராசுக்கு.

என்னங்க இது..வெறும் அஞ்சு நூறு தாரீங்க …, ஐயா..இது ..ரொம்ப அநியாயம்….இதெல்லாம் பேசித் தானே…என்று இழுக்க.

இதுவே ரொம்ப ஜாஸ்தி.ன்னு மாமி சொல்றா…ஏதோ நானும் கேட்டேன். நீயும் சொன்னே. மேற்கொண்டு என்ன…? அட்வான்ஸ் தான் குறைச்சலா? இல்லை வாடகை தான் கம்மியா? நீ வீட்டுக் காரன்ட்ட போயி என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ…இனிமேல் என்னைத் தொல்லை பண்ணாதே. மாமி கோவிலுக்குப் போகணுங்கறா…நேரமாறது எங்களுக்கு..சொல்லிக் கொண்டே போற போக்கில் கதவை லேசாக சார்த்தித் தள்ளிவிட்டபடியே.திரும்பி நடக்கிறார்

தூரத்தில் மாமி..தன் பட்டுப் புடவையால் மூக்குத்தியின் வைரத்தை துடைத்துக் கொண்டு…அப்படியே காதில் டாலடிக்கும்வைரக் கம்மலையும் துடைக்கும் பணியில் இறங்க…அவளின் கண்கள் சின்ராசு போயிட்டானா…?.என்பது போல் எட்டிப் பார்க்கிறது..

நிலைப்படியில் நின்றிருந்த சின்ராசு, அய்யா கொடுத்திருப்பாங்க…அந்தம்மா தான்…ஈறு வந்திருக்கு…பேனு வந்திருக்குன்னு போனைக் காட்டி சும்மானாச்சுக்கும் கூப்பிட்டு…கெடுத்துச்சு .ஏமாத்தறதுக்கு இப்படி எல்லாம் கூட வளி கண்டு பிடிச்சு வெச்சுருக்கு…பாரு..! மாமி சாமர்த்தியமான மாமி..எத்தனை ஏழைங்க வவுத்துல அடிச்சுதோ….இப்போ என் வவுறு எரியுது..இந்த எரிச்சலுக்கு பதில் சொல்லித் தான ஆவோணம்…இனி இங்கன நின்னு ஒரு பிரயோசனமும் இல்லை என்று வாசற்படி இறங்கி…மருந்துக் கடையை நோக்கி போகிறான்.

போகும்போது…டாக்டர் சீட்டு இருக்கா என்று சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள, சீட்டு   வியர்வை பட்டு நைந்து நாலாக  மடிந்து பத்திரமாக அவனது பாக்கெட்டில் இருந்தது., ஐயர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டையும் சேர்த்து உள்ளே செருகிக் கொண்டு..பரவால்ல.இப்ப ஆத்தாளோட .மருந்து பிரச்சன தீந்துச்சு…! என்று நெஞ்சைத் தட்டிக் கொள்கிறான்.

நடக்கிறான்……நடக்கிறான்…...வழியில்….ஒரு குரல்.

“அண்ணே……சின்ராசண்ணே…நம்ப இளைய தளபதி தீபாவளி புது ரிலீசு “துப்பாக்கி” க்கு புதுசா ஒரு ….கட் அவுட் நிக்க வெக்கிறோம் அதுக்கு ஆயிரத்தி எட்டு துப்பாக்கி வெச்சு மாலை ஒண்ணு கட்டிப் போடப் போறோம்….அதுக்கு கட்ட ஆள் கை குறையுது…கை குடுக்கிறதில்லையா?….வாண்ணே....நீனும் ஒரு கை குடுண்ணே ..என்று கோவிந்தின் குரல்…தான் அது.

இதே…மற்ற நேரமா இருந்திருந்தால் கை வேலையை அப்படியே போட்டபடி……அட..அப்பிடியாடா கோவிந்து .நம்ம இளைய தளபதிக்கா …நூறு துப்பாக்கியால மாலையா ? என்று வாயப் பிளந்தபடிக்கி …ஓட்டமா…. ஓடியிருப்பான்…மாலை கட்ட.

ஆனால்…இப்போ!…”போடா…டேய்.…பொளப்பத்த பொறம்போக்கு..போயி ஒஞ்…சொந்த பொளப்பப் பாப்பியா…? கட் அவுட் வைக்கணும்….கட்டவுத்து விடணும்னு கூப்பிட்டுட்டு….வேற எவனாவது இளிச்ச வாயனாப் பாரு போ…என்று .எகத்தாளமாக சொல்லிப்புட்டு நகருகிறான் சின்ராசு.

மனசுக்குள் ஒரு பெருமிதம்…நீ இனிமேட்டு பிளச்சுக்குவே…என்றது.

காதருகில் ஆத்தாவின் குரல் “இப்பத் தாண்டா நீ என் மவன்..சபாசு சின்ராசு .” அசரீரியாகக் கேட்டது.

திடுக்கிட்டு ஓட்டமும் நடையுமாக மருந்துக் கடையில் மருந்தை வாங்கிக் கொண்டு அப்படியே கிருஷ்ணபவனில் இட்டிலி பொட்டலமும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறான் சின்ராசு….எங்கிருந்தோ ஒரு பாசம் வந்து அவனைக் கவ்விக் கொண்டது.

வீட்டை நெருங்கியதும்….ஆத்தாவுக்கு சரியாகணும்….என்று முருகனிடம் வேண்டிக் கொண்டது மனது.

ஆத்தா…ஆத்தா ..இந்தா, எந்திரி…உனக்கு மருந்து வாங்கியாந்துட்டேன்….இந்தா இந்த இட்டிலிய தின்னுப்புட்டு மாத்திரைய சாப்பிடு..சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைகிறான்.

அட…சின்ராசு….என் மவனே…வந்தியாடா என் ராசா…நீ எப்பிடியும் வருவேன்னு நல்லாத் தெரியும்….என்று சொல்லிக்கொண்டே எழுந்தவள்….நான் பேசினத எத்தியும் மனசுல வெச்சுக்காதே என் கண்ணு….என்று கண்கலங்கிப் போகிறாள்….தாய் மனம்…அங்கே தள்ளாடி தடுமாறி…பேச்சு சிக்குது.

ஏன் ஆத்தா….நீ ஒண்ணு…நீ கடுமையா சொன்னதாலத் தான்…எனக்கு..புத்தி வந்துச்சு,,, அத்த விடுத்தா…இன்னிலேர்ந்து கோயில் வாசல்ல செருப்பப் பார்த்துக்கற உத்தியோகம்…..போகட்டா….? உன்கிட்ட சொல்லிப்புட்டு இன்னிலேர்ந்து வேலக்கிப் போறேன். அனேகமா சொந்தமாத்தேன்….இது..! சொல்லும்போதே அவனுக்குள் ஒரு பெருமை.

மவராசனா போயிட்டு வா சின்ராசு…அதுங்கூடப் புண்ணியந்தேன்..! நெதம் கோயில் வாசல்ல கெடக்க புண்ணியம் பண்ணியிருக்கோணம். உனக்கு இனிமேட்டு நல்ல காலம்தேன்…என்று மனசார அவனை  வாழ்த்துகிறாள் அவள்.

சின்ராசு அவனது ஆத்தாளின் போக்கு மாறியிருப்பதைப் பார்த்து வியந்தபடி….அடப் பார்ரா ..சினிமாவுல தான் இப்படி காமிப்பாய்ங்க, நம்மூட்லயும் நடக்குதே..எல்லாம் என் நல்ல நேரம் தான்.

சந்தோஷமா….குளிச்சு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி கோயில்  வாசலில் போய் கவுன்டர் பக்கத்தில் டோக்கனை எண்ணிக் கொண்டு நிற்கிறான்.

யார் யாரோ வருகிறார்கள்…..குனித்து நிமிர்ந்து செருப்பை எடுத்து வைத்து டோக்கன் கொடுத்து மும்முரமாக இருந்தவனை….என்னப்பா…சின்ராசு…இந்தத் தொழிலுக்கு எப்போ வந்தே..? என்ற குரல்….நிமிர்ந்து பார்க்க வைத்தது.

நடராசன் ஐயரும்…மாமியும்….மனதில் நிறைந்த அருவெறுப்பு முகத்தில் மின்னலென ஓட….!

ஆமாஞ்சாமி…..யாரும் ஏமாத்த முடியாதுல்ல…என்று வார்த்தை சாட்டையை வீசி விட்டு..அங்க பாருங்க..என்று சைகை காமிக்கிறான்.

“செய்யும் தொழிலே தெய்வம்…” என்ற ஒரு அட்டையும்….அதன் கீழே…
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
என்றும் எழுதி இருந்தது.

பதிலே சொல்லாமல் செருப்பைக் கழட்டி போட்டுவிட்டு “எல்லாம் நேரம்..” என்றபடி சென்றவர்களின் செருப்பை எடுத்து ஸ்டாண்டில் வைத்தவனின் மனசு…நினைத்தது. “இறைவன் ஒரு வாசலை மூடினால் ஒரு ஜன்னலைத் திறக்கிறான்” இவர் பத்தாயிரத்தை ஏமாற்றினால் என்ன…கடவுள் நிரந்தரமா ஒரு வருமானத்தை என் உழைப்புக்கு அள்ளிக் கொடுத்திருக்கானே….எண்ணியபடியே..தன் வேலையில் கவனமாக இருந்தான் சின்ராசு.

கோவிலுக்குள் கூட்டம் சேர சேர…இவனது கடை முழுதும் செருப்புக்களால் அடைந்து கிடந்தது.
நேரம் செல்லச் செல்ல…செருப்புகள் குறைந்து கொண்டே வந்தது…கடைசியாக நடராஜன், மாமி இருவரின் செருப்பும் கூட இறங்கியது…குனிந்து சரி செய்து கொண்ட மாமி….அவனுக்கு பத்து ரூபா கொடுங்கோ பாவம்… என்று பெரிய மனது பண்ணி சொன்னாள்  மாமி.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…..வெறும் ரெண்டு ரூபா கொடுங்க போதும்.,..என்றதும்…!

இரண்டு ரூபாயை எண்ணி கொடுத்து விட்டு சென்றவர்கள் பேசியது சின்ராசுவின் காதில் விழுந்தது.

இந்தத் திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…இது மாமி.

ஆம்மாமாம்…. இது அவர்.

இருவரும் ஏதோ சொல்லி முனகிக் கொண்டே விறுவிறென்று நடந்து சென்று வண்டியில் ஏறி மறைந்தனர் ஜாடிகேத்த மூடியாய்.

கடைக்கு வெளியே வந்து நின்ற சின்ராசுவின் காலில் ஏதோ நெருட, கீழே பார்த்தவனுக்கு பகீரென்றது.!..பள பள வென்று வைரங்கள் மின்னி டாலடித்துக் கொண்டிருந்தது.. அது ஒரு .ஒத்தைக் கம்மல்….!

அதைக் கையில் எடுத்ததும் புரிந்து போனது…..”அடடா…இது அந்த மாமியோட வைரக் கம்மல் போல் இருக்குதே..” கீழே கழண்டு விழுந்துடுச்சா? அடப் பாவமே…..இது தங்கமா…? வைரமா? கண்ணப் பறிக்குதே ….!அவங்கதா..இல்லை வேற யாருதாச்சுமா…? யோசனையோடு கடையைக் கட்டிவிட்டு ஒரு சிறிய துண்டுக் காகிதத்தில் கம்மலை மடித்து சட்டை பையில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டான்.

காலீலத் தான் அண்ணன்கிட்டக் கேட்டேன்…அண்ணே…ஏதோ எழுதி போட்டுருக்கே..அது என்னாதுன்னு..?
செருப்பு தானேன்னு அசால்டா இருக்கக் கூடாதுடா…..அது பக்தர்களோட சொத்து…அவிங்க வரும்போது பத்திரமா பாதுக்காகிற தொழில் தான நாம செய்யுறோம்….அதனால தான் செய்யும் தொழிலே தெய்வம்…ன்னு எழுதி போட்டு இருக்கேன். சூதானமா இருக்கொணும்டா..சும்மா செருப்பு தானேன்னு அசால்ட்ட இருக்காதே….செய்யும் தொழில தெய்வமா நினைச்சாத்தேன் வாழ்க்கையிலும் முன்னேறலாம் .என்றார் அவர். காலம் கடந்த பாடம்…கற்றது போலிருந்தது….எத்தனைக் காலம் வீணாப் போச்சு.
அப்ப…இது இன்னாது…? இன்னொரு அட்டை…?
அதுவாடா….இது திருவள்ளுவர் சொன்னதுடா. திருக்குறளு..! நமக்கு ஒருத்தன் கெட்டது செஞ்சாலும்..அவனே வெக்கப்படுற அளவுக்கு அவிங்களுக்கு நாம நல்லது செய்யோணம்…முடியுமாடா உன்னால..? அண்ணன் கேட்டது இப்போது நினைவுக்கு வந்தது.
முடியும்…! என்று தீர்மானமாகச் சொல்லிக் கொண்டான்.
அவன் மனசுக்குள் “நன்னயம் செய்து விடல்…” என்ற வாக்கியம் வந்து போனது.
கோவிலுக்குச் சென்று நேரே வீட்டுக்கு வந்த கோகிலா…தன அறைக்குள் சென்று புடவை மாத்தும் நேரம்..எதோ மெல்லியதாய்…தோள்பட்டையிலிருந்து நழுவிய உணர்வு தோன்ற…சுதாரித்துக் கொண்டு தேடவும்….அய்யய்யோ..இதென்ன கம்மலோடத் திருகாணின்னா .”அப்போ வைரத்தோடு..கை தானாகக் காதைத் தொட்டுப் பார்த்து தூக்கி வாரிப் போட .” நெஞ்சம் பகீரென்றது…..கண்ணாடி முன்னால் பார்த்ததும் தெரிந்தது…ஒத்தைக் காது மூளியாக இருந்தது….”இது எப்படி , எப்போ கழண்டிருக்கும்…?..” பதறியவள், கைக்கு கிடைத்த புடவையை எடுத்து சுத்திக் கொண்டு…” என்னன்னா….ஏன்னா….என்னோட ஒரு தோட்டைக் காணோம்….” எங்கே விழுந்ததுன்னே தெரியலை..இப்போத்தான் திருகு கிடைச்சுது…என்று அலறிக் கொண்டே அறையை விட்டு வெளியே வருகிறாள்.
என்னடி கோகிலா சொல்றே…..? வைரத் தோடு தொலைஞ்சு போச்சா….! அடிப் பாவி….தோட்டைத் தொலைச்சாச்சா…?
அது வேற ஒண்ணுமில்லடீ…ஒரு ஏழையின் உழைப்பில் கமிஷன் தராமல் ரொம்ப புத்திசாலி மாதிரி ஐடியா சொல்லி அவன் வயித்தில் அடிச்சோமில்லையா…? அதான் இப்போ கைமேல் பலன்…..! கலி காலமடி…! எதுக்கும் காத்துண்ட்ருக்க வேண்டாம்.கார்த்தால பண்ணினா சாயந்தரமே….பலன் .கெடச்சுடும்..! கணவரின் பதில் .

போதும்…போதும்.நிறுத்துங்கோ ….நேரங்காலம் தெரியாமல் எதுக்கும்…. எதுக்கும் முடிச்சுப் போடறேள்…? நான் இங்க தவிக்கிறேன்….உங்களுக்கு நக்கலும் நையாண்டியும் எங்கேர்ந்து தான் வருமோ? கொஞ்சமாவது வருத்தம் இருக்கா..? தொலஞ்சது என்னோட தோடு தானே..? எப்படி வரும்…வருத்தம்…!

இந்த ரோட்டில் எங்கே போயி தேடுவேன்…அது எங்க விழுந்துதோ….இன்னத்த விலைக்கு..அம்பதாயிரம் ரூபாய் விலை இருக்கும்….நெஞ்சு பட படங்கறதே நேக்கு….! பகவானே…உன்னைப் பார்க்க வந்த எங்களுக்கு இந்த சோதனையா…..? என்று அலைபாய..!
இவர் சொல்றா மாதிரி, கார்த்தால அவனுக்கு பத்தாயிரம் தராத பண்ணினேனே…அதுக்கான அஞ்சு மடங்கு தண்டனையா இது? முருகா…தோடு மட்டும் கெடைகட்டும்….சின்ராசை நானே பார்த்து அவனோட கமிஷனைக் கொடுத்துடறேன்…சத்தியமாக் கொடுத்துடறேன்….! என் தோடு கெடைக்கணும்….பகவானே…!அந்தத் தோடு அவளைப் பாவமன்னிப்பு கேட்க வைத்தது.

“ஓம் பூர் புவஸ்ஸுவஹ..தத் ஸ விதுர்வரேண்யம்….பர்கோ…” அழைப்பு மணியின் இசை வீடெங்கும் இசைக்க…இந்த நேரத்தில் யாராயிருக்கும்…?.இருவரும் ஓடிவந்து கதவைத் திறக்கிறார்கள்….!

வாசலில் சின்ராசு. அவன் பார்வை நேராக மாமியின் காதைப் பார்த்தது. அங்கே அவளது இருண்ட மனம் தெரிந்தது.

“நன்னயம் செய்து விட்ட நிம்மதியில்”….சின்ராசு தனது சட்டைப் பையிலிருந்து அந்த ஒத்தைக் கம்மலை மடித்து வைத்திருந்த காகிதப் பொட்டலத்தை வெளியே எடுக்கிறான்.
——

 

Series Navigationகுன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்நம்பிக்கை ஒளி! (7)
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

12 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    அன்பின் தேமொழி,,

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ

  2. Avatar
    இளங்கோ says:

    என்னமோ தெரியல.. இப்பல்லாம் எதைப் படிச்சாலும், முன்னமே படிச்ச மாதிரு இருக்கு.. டாக்டரைப் பாக்கணும்..

  3. Avatar
    sivagami says:

    டாக்டரைப் பார்த்தாலும், அவர் சொல்வதும் ஏற்கனவே கேட்டதைப் போலவேதான் இருக்கும்

  4. Avatar
    harini says:

    அபத்தமான இடுகை டாக்டர் ஜெயபரதன். பருவகாலங்கள் திரும்ப வருவது, இயற்கை தன் படைப்பைத் தானே மீண்டும் எழுதிக்கொள்வது. ஏற்கனவே வந்த கதைகளைத் தன் மொழியில் மாற்றி எழுதுவதோடு அதை ஒப்பீடு செய்யக்கூடாது. உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரையை கொஞ்ச காலம் சென்று யாராவது மொழியில் லேசான மாற்றம் செய்து எழுதிக் கொடுத்தால் அதை உங்களின் பார்வையில் என்னவென்று சொல்வீர்கள்? அதைத்தான் இளங்கோ நாசுக்காகச் சொல்லியிருக்கிறார்.

    1. Avatar
      Jayashree Shankar says:

      அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்..

      வணக்கங்கள்.
      நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் .
      ஹரிணி நீங்கள் சொல்வதைப் போல இன்னொருவரின் கதையை மாற்றம் செய்து எழுதி அனுப்பியிருந்தால்…அதைக் கதைத் திருட்டு என்று தான் நானும் சொல்வேன். இதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை.
      இளங்கோ அவர்கள் நாசூக்காகக் சொல்லியதைப் படித்ததும்…
      தோன்றியது…”இவரிடம் ஆதாரம் கேட்டால் இவரால் கொடுக்க இயலாது….” அப்படி இருக்கையில் எதை வைத்து இப்படி எழுதி இருக்கிறார் என்று.
      அதற்கும் ஒரு படி மேலே சென்று நீங்கள் எழுதியதைப் படித்ததும் பதில் எழுதத் தோன்றியது.
      இந்தக் கதை முழுக்க முழுக்க எனது சொந்தக் கற்பனையில் எழுதியது தான். இதற்க்கு முன்பு வைர நெஞ்சம் என்ற பெயரில் வல்லமைக்கு கதை போட்டிக்கு சில மாதங்கள் முன்பு எழுதி அனுப்பியிருந்தேன். திரு.இளங்கோ அவர்கள் வல்லமையில் ஒரு சப் எடிட்டர் . அதனால் படித்திருக்க வாய்ப்பு உண்டு மேலும் அந்தக் கதை போட்டியில் தேர்ந்தெடுக்கப் படவில்லை . மேலும் சில திருத்தங்கள் செய்து எழுதி தலைப்பை மாற்றி நன்னயம் என்று வைத்து திண்ணைக்கு அனுப்பினேன்.
      எனது கதையை நானே மாற்றி., திருத்தி, சேர்த்து, கோர்த்து, தலைப்பை மாற்றி வைக்கும் சுதந்திரம் எனக்கு உண்டு.
      இது எனக்கும் என் எழுத்துக்குமான உறவு. மனதுக்கு நிறைவு வரும் வரை எழுதலாம் .
      இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. நிரூபிக்க முடியுமா?
      யாரோ எழுதிய கதையிலிருந்து காலைக் கையாய் மாற்றி எழுதும் ……………………. என்னிடம் இல்லை.

      எழுதுவது என்பது ஒரு ஆத்மார்த்தமான விஷயம்.
      அது தானாக கற்பனையில் உருவாகி கருவாகி கதையாகி வருவது.

      எத்தனையோ இடையூறுகளின் நடுவில் எழுதும்
      சொந்தப் படைப்புக்கு வரும் இது போன்ற பின்னூட்டங்களைப் படிக்கும் போது தான் மனிதர்களைப் புரிகிறது.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

  5. Avatar
    இளங்கோ says:

    நன்றி ஜெயஸ்ரீ, நீண்ட நெடிய விளக்கத்துக்கு,

    தங்கள் கதை வல்லமை மின்னிதழில் வெளிவந்ததை யார் வேண்டுமானாலும் படித்திருக்கலாம், இன்றும் படிக்கலாம். அதுவும் இரு இணையப் பத்திரிக்கை என்பதால் இன்றும் பொது வெளியில்தான் உள்ளது. நான் வல்லமையில் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கும் அதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

    தாங்கள் பிறர் படைப்பை உங்கள் படைப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியொரு புரிதலை என் பின்னூட்டம் ஏற்படுத்தியிருந்தால் அதைக் களையவே, இந்த விளக்கம்.

    வல்லமையில் இந்தக் கதை வெளிவந்த தகவலையும், ஏற்கனவே வெளிவந்த சுட்டியையும் கொடுத்து விட்டால், வாசகர் உலகம் இன்னும் பலன் பெறுமல்லவா?

    இளங்கோ

  6. Avatar
    harini says:

    Respected Jayashree Madam,
    I intended to record my comments only on the views of Dr. Jayabarathan. I did not try to post my views on your story. Dr. Jayabarathan has stated in his comments on the views of Mr.Ilango that ” all the stories have appeared and repeated in some form or other.And he has likened this to the changing seasons which reappear again. That only prompted me to differentiate the two objects he has taken for comparison. I did not have any intention whatsoever to denigrate your originality in writing stories. I am sure that your contributions regularly appearing in Thinnai will speak volumes of your ability. So I would like to clarify that whatever I have posted is not to cast aspersions on anybody. Thank You for your gentle rebuttal. — Harini

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Harini,

    Thanks for awarding me the title Doctor. But I am not a Ph.D. Doctor.

    I do not understand what you did mean upon my examples. All my science writings are not originals. I have given my sources. Any one can add or remove mine or other scientific facts, as and when they change.

    S. Jayabarathan

  8. Avatar
    punaipeyaril says:

    இந்த கீட்ஸ், கம்பன், பாரதி, கல்கி, செக்ஸ்பியர், தாகூர், கண்ணதாசன், தாஸ்கோவஸ்கி, லியோ டால்ஸ்டாய் – இவர்கள் எல்லாம் இணைய உலகில் இணைய பத்திரிக்கையில் எழுதியிருந்தால்…. சும்மா கிழி கிழின்னு கிழிக்கப்பட்டிருபானுக….

Leave a Reply to தேமொழி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *