நரகம் பக்கத்தில் – 1

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014
 
ஜெயஸ்ரீ ஷங்கர் , ஹைதராபாத்

“கல்யாண மாலை” க்கு வலைவீசித் தேடித் தேடி  உள்ளூரில் மருமகள் வேண்டும் என்ற ஆசையை மட்டும் கனவாக வைத்து, திவ்யாவை கண்டுபிடித்தனர் ராஜேஷின் பெற்றோர். ராஜேஷ்  ஒரு தனியார் கம்பெனியில் முக்கிய பதவியில் இருப்பவன்.”மனதைப் படிக்கும் கலை அறிந்தவன்”. கோபமும், குணமும் சேர்ந்து குடிகொண்டிருக்கும் நல்லவன்.

ஆரம்பத்தில், தனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்த ராஜேஷ், திவ்யாவின் புகைப்படத்தைப் பார்த்ததும் கோயில் புறாவாக மாறி அமைதிச் சிறகை அடித்து சமாதானப் புறாவாக மாறினான்.

குடும்பத்தில் ஒரே பெண்ணான திவ்யாவை  , தங்களின் ஒரே மகன்  ராஜேஷுக்குப் பேசிமுடித்துக்  கல்யாணம் வரை இழுத்துச் சென்று
‘ஹனிமூனுக்கு’ ஊட்டிக்கு அனுப்பி வைத்து, இன்று அவர்களின் வரவுக்காக ஆரத்தி கரைத்து வைத்துக் காத்திருந்தனர் ராஜேஷின் பெற்றோர்.

‘ஹனிமூன்’ முடித்த கையோடு மனைவி திவ்யாவுடன் நேராக அவளது பிறந்த வீட்டுக்குச் சென்று இறங்கினான்  ராஜேஷ்.   சிறிது நேரத்தில் பால்கனியிலிருந்த தொங்கு ஊஞ்சலில் அமர்ந்து லேசாக ஆடியபடியே திவ்யா கொடுத்து விட்டுப் போன  ஆவி பறக்கும்  நரசுஸ் காப்பியை  ரசித்து உறிஞ்சிக் குடித்துக் கொண்டே   கைபேசியில் அப்பாவை அழைத்து , ‘ப்பா …..நாங்க நேரா இவாத்துக்கு அதான்….அண்ணா நகருக்கு  வந்தாச்சு…..திவ்யா அவ அம்மாவைப் பார்த்துட்டு அப்பறமா நம்மாத்துக்கு போலாம்னு சொன்னாளா, அதான்..சரின்னு கோயம்பேடு   பஸ் ஸ்டாண்டுலேர்ந்து நேரா கால் டாக்ஸி பிடிச்சு  இந்தாத்துக்கு வந்துட்டோம்.

“…………”

ஹலோ….அப்பா….என்னப்பா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறேள்…..?

நாங்க இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தில அங்கே  வந்துடுவோம். சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கடமை முடிந்த எண்ணத்தில் கைபேசியை மூடி ஷர்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு  தொங்கு ஊஞ்சலிலிருந்து  எழுந்தவன், பெருமூச்சு விட்டபடி  பால்கனி பக்கம் நின்று  வேடிக்கை பார்த்துக் கொண்டே கையிலிருந்த  காப்பியை கடைசி சொட்டு வரை உறிஞ்சிக் குடித்துவிட்டு , தம்ளரை தரையில் வைத்த கையோடு சிகரெட்டுக்கு உயிர் கொடுத்தான்.  ராஜேஷோடு  கூடவே சிகரெட் பாக்கெட்டும், லைட்டரும் நிழல் போல பயணம் செய்யும். அதை அப்பப்போ தொட்டுப் பார்த்து நிம்மதி அடைந்து கொள்ளும் ஜாதி அவன்.

முதல் இழுப்பில் மனசும் உடம்பும் அப்படியே இன்பமயமாய் மிதப்பது போலிருந்தது. வாய் வழியாக விட்ட வளையத்தில் தானே மாட்டிக் கொண்டு விழிப்பது போலிருந்தது ராஜேஷுக்கு. அத்தனை நேரம் அந்த இடத்தில் பரவிய நரசுஸ் காப்பியின் மணம் அவன் விட்ட புகைக்குள் கலந்து சுயமிழந்தது.

யாரோ… வரும் சந்தடி கேட்டதும், சற்றுத் தயங்கியவனாக கையை பின்னால் கட்டிக் கொண்டு ஓரக் கண்ணால் பக்கவாட்டில் திரும்பி வந்தது யாரெனப் பார்க்கிறான். அவனது திவ்யா தான் வந்து நின்றிருந்தாள். கண்களில் லேசான அன்பு கலந்த கண்டிப்போடு அவனைப் பொய் கோபத்தோடு முறைத்துப் பார்த்தவள்,

என்ன ராஜ்…..இது…இங்க வந்து  ‘சிகர்  ஸ்மெல்” …..? பத்த வெச்சியா…? இந்தக் கொமட்டு கொமட்றது…..எங்கம்மாக்கு இதெல்லாம் அலர்ஜி…தெரியாதோ ? அப்பா வேற இருக்கார்..நான் போனாப் போறதுன்னு சகிச்சுக்கறேன். இங்க வேண்டாமே…ப்ளீஸ்…..முகவாயை
த் தொட்டுக் கொஞ்சிய திவ்யாவைப் பார்த்ததும் பின்புறம் கைகளில் சுடர் விட்டுக் கொண்டிருந்த உயிர்த் துண்டு  லேசாக அழுது கொண்டே காலடிச் செருப்பில் அழுந்தி அழுந்தி உயிர் விட்டது.

கால் செருப்பு அழுத்தித் தேய்ப்பதைத் தெரிந்து கொண்டவள்……சமத்துக் கண்ணன்…சொன்னபடில்லாம் கேப்பானாம்….கன்னத்தில் உதட்டைப் பதித்து உசுப்பேத்தி விட்டவள் ” ஹேய்….நில்லேன்..”  என்று இவன் மென்மையாக அழைத்ததும்,

என்னவாம்…..? கொஞ்சும் குரலில் குழைந்தாள்.

ம்ம்ம்ம்ம்…இப்போ சொல்லு..? உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே? என்று அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டே  கேட்ட ராஜேஷ் திவ்யாவின் கைகளைப் அழுத்தமாய் பிடித்துக் கொள்கிறான்.

அய்யோடா……இத்தோட ஒரு ஆயிரம் தடவை கேட்டிருப்பியா? நானும் அதையே தான் சொல்றேன்….நான் கேட்க வேண்டிய கேள்வியை நீயே கேட்டுண்டு இருக்கே….! என்றவள்…சரி..சரி…இப்பக் கையை விடு…! என்று குழைந்தவள், தன்னை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்டு , திரும்பி நடக்கையில்…”ஐயய்யோ… ஐயய்யோ …பிடிச்சிருக்கு….எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு….என்னமோ..என்

னமோ..பிடிச்சிருக்கு…ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்ற பாடலை முணுமுணுத்தபடியே அவள் சுற்றியிருந்த  தலைத் துண்டை விருட்டென்று அவிழ்த்து விட்டுத் திரும்பி அவனைப் பார்த்து ஒரு மின்சார ஈட்டியை வீசிவிட்டு  பால்கனியை விட்டு மின்னலென மறைந்தாள்  திவ்யா.

இந்த திவ்யா……எப்பவும் இப்படித் தான்…கொஞ்சினா மிஞ்சுவா…..! மனசுக்குள் நினைத்துக் கொண்டவனாக, இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைக்க எண்ணி செயலில் இறங்கினான். இருந்தாலும் என்னால அவளைக் கொஞ்சாமல் இருக்க முடியாதோ….?
அவள் மிஞ்சுவதும் ஒரு அழகு தான்…திவ்யா…திவ்யா….என்று மனத்தொடு பேசிக் கொள்கிறான்.

அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பாளோ, அவள் வந்து போனபின்பும், சந்தன சோப்பின் மணமும் , ‘லாவெண்டர்’ பவுடரின் கம கமவும் ராஜேஷை  திணறடித்தது. அவள் அப்படித் திரும்பியதால் நுனி முடியிலிருந்து தெறித்துச் சிதறிய நீர்த் துளிகள் இவன் முகத்தில் பன்னீர் துளியாக பட்டுச் சிலிர்க்க, கண்களை மூடிக் கொண்டவன்.’இதெல்லாம் கூட சுகம் தான்’ என்று நினைத்துக் கொள்கிறான்.

சட்டைப் பையிலிருந்த கைபேசி அழைத்தது.
‘அம்மாயென்றழைக்காத உயிரில்லையே….
அம்மாவை வணங்காது உயர்வில்லையே” என்று  பாடி அழைத்தது..

கைபேசியை எடுத்தவன்,ஹலோ……ம்மா..சொல்லும்மா….!

ஏண்டா……நேரா அங்க போயிட்டியாக்கும்? நல்லாருக்குடா…நீ பண்றது இப்பவே தராசு தட்டு அந்தப் பக்கமா சாஞ்சுடுத்தா?

என்னம்மா….ஏன் இப்படில்லாம் பேசறே? திவ்யா அவ அம்மாவைப்  பார்த்துட்டு போகலாம்னு சொன்னாளேன்னு இங்க வந்தோம். ஆச்சு டிபன் சாப்ட்டுட்டு நேரா அங்க தானே வருவோம். அதுக்குள்ள நீ….அதான்…அப்பவே அப்பாட்ட இங்க வந்த விஷயத்தைச் சொன்னேனே, அவர் சொல்லலையா?

ம்…எல்லாம் சொன்னார்…! சுரத்தேயில்லாமல் வந்து சேர்ந்தது அம்மாவின் பதில் வார்த்தைகள்.பையனுக்கு கல்யாணம் பண்ணினோம்னு தானே நீ நினைச்சிட்டு இருக்கே…..தப்பு கோகிலா….பையனைத் தத்து கொடுத்துட்டோம்னு நினைச்சுக்கோன்னு சொன்னார். அதான்டா ராஜூ  நேக்கு  மனசே கேட்கலை. நீங்க ரெண்டு பேரும்  சீக்கிரமா வந்துடுங்கோடா..அம்மாவின் கெஞ்சும் குரல்.அவனைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது..

ம்ம்ம்…வரோம்மா……என்று அழுத்தமாய்ச் சொன்னவன். ச்சே…என்ன அம்மா, இப்படில்லாம் பேசிண்டு….நானா எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யின்னு கேட்டேன். நான் தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேனே , நீங்க ரெண்டு பேரும் தான்  நான் என்னைக் கம்பெல் பண்ணி…..என்று அவன் பேச்சை முடிக்கும் முன்னே எதிர் முனையில், “சரிடா….தப்பு…தப்பு…..நீ வரும்போது வா…போதும், நான் வெச்சுடறேன் என்று இணைப்பைத் துண்டித்தாள் கோகிலா.

அதுக்குள்ளே அவங்களுக்கு அடுத்த கவலை வந்தாச்சு என்று நினைத்த ராஜேஷ்,, நாம தான் தப்பு பண்ணிட்டோமோ…என்று நினைத்தவன்…கூடவே…இதுல என்ன இருக்கு…? இவ்ளோ கவலைப் படறதுக்கு என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவனாக, ‘திவ்யா…..திவ்யா…’என்று மெதுவாக அழைத்தபடியே ஹாலுக்குள் நுழைகிறான்.

“முத்தமிட்ட மூச்சுக் காற்றில்
பட்டு பட்டு கெட்டுப் போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் என்னை நீ
சிதைத்தாய் போதும்….
ஏதோ ..
எண்ணம் திரளுது கனவில்……”

சோபாவில் ஹாயாக சாய்ந்து படுத்தபடியே டிவியில் ‘கோ’ படப்பாடல் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டே  தானும் அதோடு கூடவே ஹம் செய்தவளாக. அங்கு வந்த  ராஜேஷைப்   பார்த்ததும், லேசாக நகர்ந்து எழுந்து கொண்டு ‘ம்ம்…உட்காரு…ராஜ்…..என்று சிறிது இடத்தை விட்டுத் தரவும்,

இல்லே நாம கெளம்பணும்….அங்க…அம்மா…கூப்பிட ஆரம்பிச்சாச்சு….என்று தயங்கினான்.

எல்லாம் போலாம்…இங்க இன்னும் டிபனே  ரெடி ஆகலை. அம்மா இப்பத் தான் செய்ய ஆரம்பிச்சுருக்கா. சாப்டுட்டு சித்த நேரம் இருந்துட்டு போலாமே. இப்பவே என்ன அவசரம்? அங்க போயாச்சுன்னா…அப்பறம் நான் கேட்டாலும் உன்னால உடனே கொண்டு வந்து விட முடியாது. ஆபீஸ்…ஆபீஸ்னு பறந்துண்டு இருப்பே. எனக்கு இங்கே என்னொட திங்க்ஸ் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கணம். ரிமோட்டை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே சொன்னாள் திவ்யா.

திவ்யா….நீ எப்டி போஸ் கொடுத்தாலும் அழகு தாண்டி…..மனசு மேலும் மேலும் அவளது அழகில் மானசிகமாகச் சரண் அடைந்தது.

அம்மா….டிபன் ஆயாச்சா? ராஜ்  சீக்கிரமாப் போகணுங்கறான். என்று கணவனிடம் தான் ஏற்படுத்திக் கொண்ட ஏகப்பட்ட உரிமையைப் பறைசாற்றும் விதமாக சந்தோஷமாக  கிட்சனைப்  பார்த்து குரல் கொடுகிறாள் திவ்யா.

இதோ….ஆயிண்டே இருக்கு…..! அம்மாவின்  குரல் மட்டும் வெளியில் வர, ,

அடுத்த அறையில் இருந்து திவ்யாவின் அப்பா தூக்க முடியாத கனத்தில் பெரிய பெரிய சைஸில் இரண்டு கல்யாண ஆல்பங்களைக் கொண்டு வந்தவர்…..”மாப்ளே…..இதையும் ஜாக்ரதையா எடுத்துண்டு போங்கோ….வீடியோக் காரன் இதைக் கொண்டு வந்து கொடுத்து ரெண்டு நாளாச்சு. நீங்க வந்ததும் தந்துடலாம்னு வெச்சிருந்தோம். ஃபோட்டோல்லாம் பிரமாதமா வந்திருக்கு. எங்க கண்ணே பட்டுடும் போலிருக்கு …கொள்ளை அழகு….! என்று பிரமிப்புடன் சொல்லிவிட்டு, எங்களுக்கு ரொம்ப திருப்தி மாப்ளே.எல்லாம் ‘அவன்’ செயல்.என்று கண்களை மூடித் திறக்கிறார் திவ்யாவின் அப்பா.

கனத்தைக் கையில் வாங்கியவனாக, வாவ்…என்ற ராஜேஷ் ஆவலோடு திறந்து பார்க்கையில் ,  திவ்யாவின் விரித்து வைத்திருந்த  கரங்களில் உள்ளங்கை இரண்டிலும் அழகாக சிவக்கச் சிவக்க மருதாணி மயில்தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது.

எங்கே…திவ்வு…..உன் கையைக் காமியேன்…இன்னும் இருக்கா பார்க்கறேன்….எங்கே…இன்னும் அப்படியே இருக்கா? என்ற ஆவல் ததும்பும் குரலில் கேட்க,

அதென்ன பெயிண்டா அப்படியே ஒட்டிண்டு இருக்க…? மருதாணிப்பா …..ரெண்டு குளியல்ல காணாப்போச்சு…!.அட…போச்சுடா…இப்ப நீ இதைத் திறந்துட்டியா…..? எப்டியும் இன்னும் ரெண்டு மணிநேரமாவது ஆகும்…..பாரு…பாரு…அதுவரை எனக்கு ஜாலிதான்  என்றதும், பட்டென்று ஆல்பத்தை மூடியவன், நோ…நோ…..அந்தாத்துக்குப் போய் அப்பா அம்மாவோட சேர்ந்துண்டு  பார்த்துக்கலாம். என்றதும்,

ரெண்டு பேரும் வாங்கோ சாப்பிட…..டிபன் ரெடி என்ற திவ்யாவின் அம்மா வேக வேகமாக  டைனிங் டேபிளைத் துடைத்ததும் ,

என்னம்மா ஸ்பெஷல்…..? கேட்டுக் கொண்டே சோபாவிலிருந்து எழுந்த திவ்யாவைப் பார்த்து ராஜேஷ் சிரித்தபடி.

ஏன்…..திவ்யா? நீ அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா? சாப்பாட்டு ராமி….வாசனை அடிச்சதும் வந்து உட்கார்ந்துட்டா பாரேன்…என்று ராஜேஷ் கிண்டல் செய்ய ஆரம்பித்ததும்,

அங்கே ஒரே சிரிப்பலை. அதைத் தொடர்ந்து,  நீ மட்டும் என்னவாம்…? அங்கேர்ந்து பறந்து வரலையா? என்று கையசைத்து  சைகை காண்பித்த திவ்யா, அம்மா…..ராஜேஷுக்கு என்னை கேலி பண்ணாட்டாப்  பொழுதே போகாது..என்று வெட்கம் கலந்த புன்னகையோடு சொல்லிவிட்டுத் தலையைக்  குனிந்து அவனை ஓரப் பார்வை பார்க்கிறாள்.

அட….ஆச்சரியமா இருக்கே…….மேடம்…நீங்க நல்லா வெட்கப் படறீங்களே? .என்ற  ராஜேஷைப் பார்த்து அவனது அருகில் அமர்ந்திருந்த திவ்யா….”இரு…இரு…..எனக்கும் ஒரு நேரம் வரும்….அதுவும்….இன்னிக்கே வரும்….அப்போ கவனிச்சுக்கறேன் சாரை…” என்று சிணுங்கும் குரலில்  காதோடு சொல்கிறாள்.

சாப்பாட்டு மேஜை முழுதும் சுடச்சுட வெண் பொங்கல், ரவா கேசரி, மெது வடை, பில்டர் காப்பி..என்று நிரம்பி வழிந்தது, கூடவே திவ்யாவின் அப்பா அம்மாவின் அன்பான உபசாரங்கள்.

அளவுக்கு மீறி சாப்பிட்டது போலிருந்தது ராஜேஷுக்கு. அவனையும் மீறிக் கொண்டு ஏப்பம் வந்து அவனுக்கு.

சாப்பாடு ராமன்…என்று சிரிக்கிறாள் திவ்யா.

மாமி….பில் எவ்ளோ..? என்று வேடிக்கையாகக் கேட்டுவிட்டு திவ்யாவைப் பார்க்கிறான் ராஜேஷ்.

உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ…ஆனால் நாங்க ‘வெறும் ‘டாலர்’ தான் அக்செப்ட் பண்ணுவோம்…..நோ….இன்டியன் ருபீ…இல்லியாம்மா… என்று திவ்யா சொல்லிச் சிரிக்கிறாள்.

ஆஹா….கொடுத்துட்டாப் போச்சு…என் கிட்டே ரெடியா ரெண்டு திருப்பதி டாலர் இருக்கே….டு வைட் ஒன் ரெட்..என்று ராஜேஷும் சளைக்காமல் பதில் சொல்ல,

திவ்யா….கிர்ர் ர் ர் ர் ர் ……என்று குரல் கொடுக்கிறாள்.

இவர்களது சந்தோஷத்தில் அந்த வீடே கலகல வென்றாகிறது.

மாமி…..ஜோக்ஸ் அபார்ட்…நிஜம்மா……ஸ்டார் ஹோட்டல் தோத்தது போங்கோ….கை மணம்னு  இதைத் தான் சொல்வாளோ. சூப்பர்ப் …என்றவன், எங்கம்மா கூட இப்படித் தான் ரொம்ப நன்னா சமைப்பா.

அப்டியா…? திவ்யா தான் இனிமேல் அவர்ட்டேர்ந்து எல்லாம் கத்துக்கணம் என்று அவளது அம்மா சொன்னதும்,

திவ்யாவின் மனம் ஒரு நிமிடத்தில் சுருங்கியது. முகத்தை சிரித்தபடி வைக்க முயற்சி செய்து தோற்றவளாக, உங்க அம்மாட்ட சொல்லி இனிமேல் எனக்கு சமையல் கத்துத் தரச் சொல்லேன் ராஜேஷ்…குரலில் சற்று கண்டிப்பை வரவழைத்துக் கொள்கிறாள் திவ்யா,

நான் இன்னும் கொஞ்ச வருஷம் உயிரோட இருக்கேனே….நீ உப்பள்ளிப் போட்டா எனக்கு  பிரஷர் வந்துடும், நீ சக்கரை அள்ளிப் போட்டால் எனக்கு சுகர் வந்துடும்…நீ காரமள்ளிப் போட்டா…..எனக்குப் ப்ளீஸ்….வந்துடும்….!

இதைக் கேட்டதும் கொல்லென்று சிரித்தவள்…..உன்னை……ஏய்.….என்று….! சமயத்துல நல்லாவே கடிக்கிறே நீ…!

சரி சரி …கிளம்பு…கிளம்பு அங்க அம்மா எதிர்பார்த்துண்டு இருப்பா. அப்பவே ஃபோன் பண்ணியாச்சு… ஆமா திவ்யா, நீ ஊர்லேர்ந்து வாங்கின புது டிரெஸ்ஸை உன் அம்மாகிட்ட காமிச்சயா?

இப்பத்தானே திவ்யா கல்யாணத்துக்கு நிறைய புது டிரெஸ் வாங்கினே….? ஊர்லயும் போய் வாங்கினியா? என்ற திவ்யாவின் அம்மா….இவ சரியான டிரெஸ் பைத்தியம்…..வாங்கிண்டே இருக்கணும்….இவளுக்கு….! அப்பாடா…..உன்னை ஒரு வழியா இவர் தலையில ஏத்தி விட்டாச்சு…..இனி….நீயாச்சு….அவராச்சு…! என்று வேடிக்கையாக சொன்ன அம்மாவைப் பார்த்து.

அம்மா….என்று சத்தமாகக் கத்தியவள்..உங்க திட்டம் புரிஞ்சு போச்சு…! நான் உங்களுக்கு பாரம்…! அப்டித்தானே…..? நான் பாட்டுக்கு வேலைக்குப் போயிண்டிருந்தேன்…..உங்களைக் கல்யாணம் பண்ணி வைங்கோன்னு கேட்டேனா? நீங்களாத் தானே…என்று ஆரம்பிக்கவும்.

அதனால் என்ன மாமி….நாங்க ஊட்டி போன ஞாபகார்த்தமா ஒரு புது டிரஸ். திவ்யா ஆசைப் பட்டாள். எனக்கும் பிடிச்சிருந்தது. அதான் வாங்கினோம், ராஜேஷின் சமாதானக் குரல் அந்த சூழ்நிலையை சுமுகப் படுத்தியது.

அதுக்கில்லை….மாப்ளே…! நாங்களும் அவளுக்குச் சொல்லி சொல்லி தான் வளர்த்திருக்கோம். இப்ப ட்ரெண்டே மாறிப் போச்சு. திவ்யாவுக்கு புதுசு என்ன வந்தாலும் அதை முதல்ல வாங்கியாகணும். ஒரே பொண்ணுங்கற செல்லம் வேற….ஷேரிங்கற பேச்சுக்கே இடமில்லை, அதனால…….தொடர்ந்து சொல்ல முடியாமல் எதுவோ தடுக்க திவ்யாவைப் பார்க்கிறாள் அவளது அப்பா.

அதனால என்னப்பா….? கம் அவுட்…..!

அதுக்கில்லை….சரிம்மா…விடு.…பை காட்ஸ் க்ரேஸ்….நீங்க ரெண்டு பெரும் மேட் ஃபார் ஈச் அதர்….! யூ ஆர் லக்கி டு ஹேவ் ராஜேஷ்…!

அப்போ….ராஜேஷ்….? என்று புருவத்தைத் தூக்கிய திவ்யாவைப் பார்த்து சிரித்த ராஜேஷ்…”மீ….டூ…….ஈக்வலி லக்கிடி…போதுமா ?..” என்றதும் தான் திவ்யாவின் பட்டு முகத்தில் புன்னகை சிட்டாக வந்து உட்கார்ந்தது.

சரியான தொட்டாச் சிணுங்கி…..அனிச்ச மலர் மாதிரி….எங்க டாட்டர்…திவ்யா…! இனிமேல் தான் நீ உன்னோட ஆட்டிட்ட்யூட கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கணும்.

அம்மா…..! நான் நானாக இருக்கும்போது தான் அது ‘ நான்’….! நான் ஏன்…என்னை யாருக்காக மாத்திக்கணும்? எனக்காக வேற யார் அவாளை மாத்திக்கப் போறா..? ஐம் ஆல்வேஸ் ரிமெயின்ஸ் தி சேம்….!

அம்மா…..ஊட்டில….ஒரு ஷாப்…அங்க ரொம்ப அழகான இயர் ரிங் பார்த்தேன்….வாங்கிருப்பேன்..…ஐயா… பாவம்…! போனாப் போறதுன்னு விட்டுட்டேன்..இல்லாட்டா….அங்கே  ஒரு இருபதாயிரம்…ஊதிருப்பேன்…! எமெரால்ட் ஸ்டோன் வெச்சது…அப்படியே கண்ணுல நிக்குது..!

அதுக்கென்ன, நெக்ஸ்ட் டைம் வாங்கினாப் போச்சு…நான் ஒண்ணும் இதுக்கெல்லாம் அசர்ர ஆளில்லை மேடம்….! என்கிறான் ராஜேஷ்.

அடுத்த தடவை ஹனிமூன் போனாவா?

போச்சுடா…இப்ப நீ பதிலுக்குக் கடிக்கிறியா? ஒரு தடவை ஹனிமூன் போயிட்டு வந்தே….இங்க நான் பாதி தேஞ்சி போயாச்சு.

நல்லாத்தானே இருக்கே கண்ணா….இன்னும் கொஞ்சம் பூசினாப்பல…

அதைச் சொன்னேனா……என்னோட கார்டு தேய்ஞ்சு தேய்ஞ்சு …..! ம்….அதெல்லாம் உனக்குப் புரியாது. நான் சொன்னது அடுத்த தடவை எமெரால்ட் ஸ்டோன் தோடு வாங்கிக்கலாம்னு சொன்னேன்…சரி….கிளம்பும்மா..போலாம்.

அம்மா…அம்மா…மறந்தே போயிட்டேன். அந்த மெரூன் “சாட்டின் சுடிதார்” புதுசா தைச்சதா சொன்னியே அதை… எடுத்து வெச்சுட்டியா?

இப்பத்தான் எனக்குப் புரிஞ்சுது…திவ்யா அந்த சாட்டின் சுடிதாருக்காகத் தான்..முதல்ல இங்க வரணும்னு சொல்லிருப்பா….ராஜேஷின் மனசுக்குள் ஒரு குரல் ஒலித்தது.

ம்ம்….நீ கேட்ட என்னோட ரூபி நெக்லஸ் செட்டைக்  கூட எடுத்து வெச்சுட்டேன்..இதோ இந்தப் பையில தான் இருக்கு. மறக்காமே பத்திரமா எடுத்து வை. ஜாக்கிரதை.

மனசு நிறைஞ்ச சந்தோஷத்துடன் ஒருவழியாக வீட்டை விட்டு கிளம்பினார்கள் இருவரும்.

கார் ஒவ்வொரு சிக்னலுக்கும் கட்டுப்பட்டு நின்றது. திவ்யா அவளது தோழிகளுக்கு போன் செய்து அவளது அனுபவத்தை ஆங்கிலத்தில் அளந்துகட்டிக்  கொண்டிருந்தாள்.. கூடவே கல கலவென்ற சிரிப்பும் கலந்து கொண்டது. ராஜேஷ்….இது என்னோட பெஸ்ட் பிரெண்ட்
பிரியங்கா….டி.சி.எஸ். ல இருக்கா. என்றவள்….ராஜேஷ் பேசறியா? என்றவள்..அவன் ஆவலுடன் கையை நீட்டியதும்,…..ஓகே….நெக்ஸ்ட் டைம்….என்றவளாக….ஸீ யூ டி….என்று இணைப்பைத் துண்டித்து விட்டு அவள் சரியான இது….ரொம்பக் கடிப்பா…! என்று சொல்லி ராஜேஷின் தோளில் சாய்ந்து கொள்கிறாள்.

இட்ஸ்…..ஓகே….! என்ற ராஜேஷ்….நாளைக்கு ஆபீஸ் போகணும்….வேலை பின்னி எடுத்துரும்,என்று சொல்லிக் கொள்கிறான்.

நான் எவ்ளோ கஷ்டப் பட்டு….எத்தனை ரவுண்ட் க்ரூப் டிஸ்கஷன்ஸ் முடிச்சு இந்த வேலை எனக்கு கிடைச்சது தெரியுமா? உங்க அம்மா தான் என்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னாளாம். நான் ஒண்ணும் வேலையை ரிஸைன் பண்ணலை…தெரியுமா? .சும்மா லாங் லீவ் தான் எழுதிக் கொடுத்திருக்கேன். எனக்கு இந்த ஐடியாவைக்  கொடுத்ததே பிரியங்கா தான்…என்றவள்,.அச்சச்சோ…..சீக்ரெட்ட லீக் பண்ணிட்டேனே….என்று நாக்கைக் கடித்தவள், இந்த விஷயம் என் பேரெண்ட்ஸ்கு கூடத் தெரியாது.. நான் சொல்லவேயில்லை. என்றவள்….நீயும் மனசுல வெச்சுக்கோ…ஒகே…என்றவள் ஜன்னல் வழியாக வெளியே பார்வையைத் திருப்பினாள் .

அநேகமா இன்னைக்கு நாம என் ஃபிரெண்டு அரவிந்த் வீட்டுக்கு ஈவினிங் போயிட்டு வரலாம்.டின்னருக்கு கூப்பிட்டான். உனக்கு முடியுமா? என்று அக்கறையோடு கேட்கும் ராஜேஷைப் பார்த்தவள்,

இன்னிக்கா….? வேண்டாம் ராஜ் …நெக்ஸ்ட் வீக் பார்த்துக்கலாம்…நீ அவங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடு..இன்னிக்கி வேண்டாம்னு நான் ரொம்ப டையர்ட்….நீயும் தானே?

ம்ம்ம்…ஓ கே…டன்….! என்றவன், கைபேசியைத் தேடினான் ராஜேஷ்.

நீ ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்……ஐ லவ் யூ சோ மச்…..! என்று அதிரடியாகச் சொன்னவளை, மின்னலோடு பார்க்கிறான் ராஜேஷ்.

அதற்குள் வீடு வந்துவிட, காரின் தலையைக் கண்டதும், ஆரத்தித் தட்டோடு ஆவலாக வந்து நின்ற ராஜேஷின் அம்மாவும், அப்பாவும்….”வாங்கோ…வாங்கோ...என்று மகிழ மிகிழ அழைத்து ஆரத்தி சுற்றிக் கொட்டி..வலது கால் எடுத்து வெச்சு வாம்மா திவ்யா…பிரயாணம் நன்னா இருந்ததா? அங்க உங்க அப்பா, அம்மா சௌக்கியமா? என்று சௌஜன்யமாகக் கேட்டுவிட்டு….திவ்யாவை மென்மையாகக் கட்டிக் கொண்டு கேட்கவும்.

ம்ம்ம்…..எல்லாரும் சௌக்கியம் என்றவள்..நீங்கள்லாம் சௌக்கியமா? இருங்கோ…இப்ப வந்துடறேன் என்றவள் ..ராஜ்…..ஆல்பத்தை அம்மாட்ட கொடுத்துடு….என்றவளாக நேராக  அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொள்கிறாள்.

என்னடா….ராஜு….?  எதுவும் பிரச்சினையா ? திவ்யா சாதாரணமாத் தானே இருக்கா? என்று தயங்கிக் கேட்ட கோகிலா…எங்கே ஆல்பத்தைத் தா,,,பார்க்கலாம்…நீங்க ரெண்டு பேரும் இல்லாத வீடு வீடாவே இல்லை….ரொம்ப வெறிச்சோடி இருந்தது..எப்படா வருவேள்னு பார்த்துண்டு இருந்தோம்….சொல்லிக் கொண்டே ஆல்பத்தைப் புரட்டுகிறாள்.

என்ன அழகா படம் பிடிச்சிருக்கான் பாரேன்….! நீங்க ரெண்டு பேரும் நல்ல பொருத்தம்…!

அதான் அவளோட அப்பாவும் சொன்னார்…என்ற ராஜேஷ்…அப்பா….இந்தாங்கோ…இந்த ஆல்பம்…! என்று கையில் கொடுக்கவும்.

அவர் சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டு மென்மையாகச் சிரித்தார். அதில் வருத்தமோ கோபமோ இல்லை என்பதறிந்து நிம்மதி அடைந்தான் ராஜேஷ்.

அறைக்குள்ளிருந்து வெளி வந்த திவ்யா, மெரூன் கலரில் புது சாட்டின் சுடிதாரும், கழுத்தில் ரூபி நெக்லெஸுமாக வந்து நின்று , அம்மா…..இது இப்போ எங்கம்மா வாங்கித் தந்தது….நன்னாருக்கா?என்று கேட்டுக் கொண்டே ராஜேஷின் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறாள்.

ம்ம்ம்ம்….அழகோ அழகு..!ரொம்பப் பொருத்தமா இருக்கே….! என்ற ராஜேஷின் அம்மா, வேறு எதுவோ சொல்ல வாயெடுத்தவள், இப்போது வேண்டாமே…என்று மனம் தடுக்கவும், இருங்கோ காபி கலந்துண்டு வரேன் என்று சொல்லி விட்டு .அடுக்களைக்குள் செல்கிறாள்.

காப்பி குடிக்கும் போதே..திவ்யாவின் அறைக்குள்ளிலிருந்து கைபேசி அவளை அழைத்ததும், எழுந்து ஓடுகிறாள். அதன் பின்பு அரை  மணி நேரமாகியும் வெளியே வராமல் இருந்தது கண்டு ராஜேஷ் எழுந்து உள்ளே போகிறான். அங்கே….

திவ்யா, படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து…பாவம்…கார்ல வரும்போதே….சொன்னாளே ரொம்ப டயர்டா இருக்கேன்..இன்னிக்கு டின்னருக்குக் கூட அரவிந்த் வீட்டுக்கு வர முடியாதுன்னு..நான் தான் மறந்துட்டேன்…என்று நினைத்தவன்..
அம்மா…திவ்யா ரொம்ப டயர்ட்டா தூங்கறா. தப்பா நினைச்சுக்காதே.

என்னடா…நீ இனிமேல் அவள் நம்மாத்துப் பொண்ணுடா…..அவ இஷ்டப் படி இருக்கட்டும். நாங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டோம்…சொல்லிவிட்டு கல்யாண பட்சணம் எடுத்துண்டு வரேன்….நீயாவது சாப்பிடு..என்று ஒரு தட்டை முன்னே வைத்து விட்டு மகனின் முகத்தைப் பார்க்கிறாள் கோகிலா. அதில் அவனாவது ஏதேனும் பேச மாட்டானா என்ற ஏக்கம் ரொம்பி வழிந்தது.

அம்மா…நாளைக்கு எனக்கு வழக்கம் போல வேலைக்குப் போகணும்…அவாத்துலயே ரொம்ப நாழியாயிடுத்து…இப்போ கொஞ்சம் மெயில் பார்க்கணும்..என்று தட்டை எடுத்துக் கொண்டு நகர்கிறான் ராஜேஷ்..

இரவு எட்டு மணியாகியும், திவ்யா இன்னும் அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததைக் கண்ட கோகிலா…ராஜேஷ்…அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன? ஜுரமா பாரேன்….! இன்னும் எழுந்திருக்கலையே என்று கவலை தோய்ந்த முகத்தோடு சொல்ல,

நான் வேணா நம்ம கிருஷ் டாக்டரை அழைச்சுண்டு வரட்டுமாப்பா….என்று அப்பா அவர் பங்குக்கு பாசத்தைப் பங்கு வைக்கிறார்.

இல்லப்பா….அலைச்சலா இருக்கும். தூங்கினா சரியாயிடும்..என்றவன்…அம்மா...எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு….குட் நைட்…என்று சொல்லிவிட்டு மறக்காமல் ஃ பிரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவன்….திரும்பிப் பார்க்கிறான்.

சரிடா……போய் படுத்துக்கோ…மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்….என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த அன்றைய செய்தித் தாளை எடுத்து மீண்டும் புரட்டிப் படிக்கிறார் அவர்.

என்னன்னா…..அவன் முகமே சரியில்லை….நானும் வந்ததுலேர்ந்து பார்க்கிறேன்…ஒரே வாட்டமா இருக்கான். திவ்யாவும் என்னமோ போல இருக்காளே….? இவன் ஏதாவது ஏடாக்கூடமா அவங்க வீட்டுல நடந்து கிட்டு இருந்திருப்பானோ….நான் வேற போனில் ஒரு மாதிரி பேசித் தொலைச்சிட்டேன்…அவனுக்கு நம்ம மேலே கோபமோ என்னவோ..?

அதெல்லாம் ஒண்ணும் இருக்காது….நீயும் போய்த் தூங்கு..சின்னஞ்சிறுசுகள்…நீ தான் இல்லாததுக்கெல்லாம் கண்ணு மூக்கு காது வெச்சுப் பார்ப்பியே……..என்று மனைவியின் எண்ணத்தை அடக்கி விட்டு…வாசல் கதவைப் பூட்டுவதற்காக வெளியில் போகிறார் அவர்.

வாசல் கேட்டைப் பூட்டிவிட்டு உள்ளே நுழையும் போது , ராஜேஷின் அறையிலிருந்து வந்த திவ்யாவின் கணீரென்ற குரலைக் கேட்டதும், புரிந்தும் புரியாமலும் எதையோ  இனம்கண்டு தனக்குள் சிரித்துக் கொள்கிறார் அவர்.

(அடுத்த வாரத்தில் முடியும் )

Series Navigation
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *