நான் அவன் தான்

This entry is part 16 of 23 in the series 14 ஜூன் 2015

சத்யானந்தன்

பொறுமையின்றி
அழுத்தும் ஒலிப்பானின்
பேரொலியில்
ஒரு ஓட்டுனர்
சுத்தியலாகிறார்

நச்சரிக்கும்
மேலதிகாரி
துளையிடும்
கூராணி

அண்டை அயலின்
அன்புத் தொல்லைகள்
அங்குசங்கள்

உறவுகளின்
சொல்லாடல்கள்
பின்னகரும்
கடிகார முட்கள்

ஒரு நாளின்
ஆரோகண
அவரோகணங்கள்
அனேகமாய்
அபசுரங்கள்

ஒரு கேலிச்சித்திரம்
வரைந்தால்
நானும்
இவற்றுள் ஒன்றாய்…

பசுமையும் நிழலுமான
ஒரு தருவே
மனிதர்களின் தேடல்

பறவைகளுக்கு
மட்டுமே அதன்
நிரந்தர
அரவணைப்பு

Series Navigationவிழிப்புயானையின் மீது சவாரி செய்யும் தேசம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *