நீங்காத நினைவுகள் – 5

This entry is part 12 of 21 in the series 2 ஜூன் 2013

 

    அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் தலைமை அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவர்.  ‘ யங் வுமன்’ஸ் ஹரிஜன் வெல்ஃபேர் அசோயேஷன்’ எனும் அமைப்பை மயிலாப்பூரில் அவர் நடத்தி வந்தார்.  பெயரில்தான் ‘ஹரிஜன்’ எனும் சொல் இடம் பெற்றிருந்ததே தவிர, அதில் பிற ஜாதியினரும் மதத்தினரும் கூட இடம் பெற்றிருந்தனர்.  அந்த அமைப்பின் தொடர்பாக அடிக்கடி அவர் புகழ் பெற்ற சமுதாய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் போன்றோரைச் சந்திக்கச் செல்லுவதுண்டு. அவ்வப்போது என்னையும் அவர் உடனழைத்துச் செல்லுவார்.

 

    அப்படி ஒரு முறை புரட்சிக் கவிஞர் அமரர் பாரதிதாசன் அவர்களைச் சந்திக்கச் சென்ற போது என்னையும் உடனழைத்துச் சென்றிருந்தார். அது 1960 களின் தொடக்கம். தமது ‘பாண்டியன் பரிசு’ எனும் கதையைத் திரைப்படமாய்த் தயாரிக்கும் உத்தேசத்தில் பாரதிதாசன் சென்னைக்கு வந்து சில நாள் தங்கியிருந்தார்.

 

(கவிஞர் பொன்னடியான் அவர்கள் அங்கு வந்து போவதுண்டு.)

 

    என் தோழி பாண்டிச் சேரியில் இருந்த போது ஏற்கெனவே பாரதிதாசனைச் சந்தித்திருந்தார். என் தோழி என்னைக் குழந்தை எழுத்தாளர் என்று அவருக்கு அறிமுகப் படுத்தி, என் பெயரையும் கூறினார். எங்களை வரவேற்று அமரச்சொன்ன பாரதிதாசன் பொதுவாய்ச் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பின், ‘இந்தப் பாப்பா  அய்யர் வீட்டுப் பொண்ணுதானே?’ என்று கேட்டார். என் தோழி ஆமாம் என்றார்.

 

    அடுத்து, என்னை நோக்கியவாறு பாரதிதாசன் கேட்ட கேள்வியால் சற்று அதிர்ந்துதான் போனேன்:

 

     “அய்யரா. அய்யங்காரா?”

 

     “அய்யர்தான். அய்யங்கார்ல கிரிஜான்னு  பேரு வைக்க மாட்டாங்களே! கிரிஜான்றது பரமசிவன் மனைவி பார்வதியோட இன்னொரு பேராச்சே?” என்றேன்.

 

    வாய்க்குள் சிரித்துக்கொண்ட பாரதிதாசன், “என்ன கோத்திரம்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டதும், ‘என்ன இது? பாரதியாரின் வாரிசு என்று கருதப்படும் கவிஞர் இப்படி யெல்லாம் கேட்கிறாரே? நம்ப முடியவில்லையே!’ எனும் எண்ணங்கள் என்னுள் கிளர்ந்த. சிறிது சினமும் கூட வந்தது.

 

     “என்னது நீங்க? பாரதிதாசனா யிருந்துக்கிட்டு கோத்திரமெல்லாம் கேக்கறீங்க?” என்று நான் சிறிது வெடுக்கென்று என்னையும் மீறி எதிர்க்கேள்வி கேட்டுவிட்டேன். என்னருகில் உட்கார்ந்திருந்த தோழியின் முகம் வெளிறிவிட்ட்து. ஒன்றும் பேச முடியாமல், ‘இத்தோடு நிறுத்திக்கொள்’ என்பது போல் என் விலாவில் கிள்ளி எச்சரித்தார்.

 

    நான் பாரதிதாசன் அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முகத்தில் உடனடியான மாற்றம் எதுவும் தென்படவில்லை.  ஆனால் சில நொடிகள் கழித்து என்னைப் பார்த்து அன்பாகச் சிரித்தார். அதன் பிறகுதான் என் மனம் சமாதானமடைந்தது. வந்த இடத்தில் மாபெரும் கவிஞரோடு இப்படி வாய்த்துடுக்காய்ப் பேசி விட்டோமே எனும் குற்ற உணர்ச்சி பெருமளவு குறைந்தது.

    “இப்படித்தான் இருக்கணும்!” என்றார்.  எனக்கு அப்பாடா என்று ஆனது.

 

    தமது பாண்டியன் பரிசு திரைப்படமாக வரப் போவது பற்றி, அதில் சிவாஜி கணேசன் நடிக்கப் போவது பற்றியெல்லாம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்.  அடிக்கடி ‘சோடா’ குடித்தவாறு இருந்தார்.

 

    மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.  அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்த தாயாரம்மா என்பவரை அழைத்து, “இந்தப் பொண்ணுங்க ரெண்டும் இன்னைக்கு நம்ம வீட்டுல சாப்பிடும். (என்னைச் சுட்டிக்காட்டி) இந்தப் பாப்பா அய்யர் வீட்டுப் பொண்ணு. அதனால மரக்கறி    சமையல் பண்ணுறதுக்குன்னு தனியாப் பாத்திரங்க இருக்குதில்லே, அதுல இதுக்கு சமையல் பண்ணிப் போட்டுடுங்க….    என்ன பாப்பா, சரிதானா?” என்றார்.

 

         “எனக்கு ப்ரெட் போதுங்க. எனக்குன்னு தனியால்லாம் சிரமப்பட்டுச் சமைக்க வேண்டாம்” என்று நான் சொன்னதை அவர் ஏற்கவில்லை.

 

     “அதெல்லம் செரமம் ஒண்ணுமில்லே. எங்களோட உக்காந்து சாப்பிட முடியாட்டி, தனி ரூம்ல இலை போடச் சொல்றேன்.”

 

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. உங்களோடவே உக்காந்து சாப்பிடுவேன்.”

       சின்ன வெங்காயம் போட்ட காரக் குழம்பு, உருளைக்கிழங்குக் கறி, தக்காளி ரசம் ஆகியவற்றைத் தாயாரம்மா எனக்காக அற்புதமாய்த் தயாரித்திருந்தார்.

    சாப்பாடு முடிந்த பின் மேலும் சிறிது நேரம் இருந்த பிறகு கிளம்பினோம்.

 

     அவரது கொள்கைக்கு மாறாக, ‘என்ன கோத்திரம்?’ என்று பாரதிதாசனார்  வினவியது எந்த நோக்கத்தில் என்பது இன்று வரையில் புரியவில்லை!

 

                            jothigirija@live.com

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

8 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வீட்டில் விருந்துண்ட இனிய நினைவு ஒன்று நீங்காமல் இருந்தாலும், கோத்திரம் கேட்ட அவரது குசும்புத்தனம் ஒரு முள்ளாய்க் குத்தத்தான் செய்யும்.

    நல்லதோர் பகிர்வு கிரிஜா.

    சி. ஜெயபாரதன்.

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    அது முள்ளன்று. அஃதொரு surgeon’s needle. An extra-ordinary effort from the progressive writer to test the mind of the younger generation to know whether the mind has been corrupted by the decadent social values.

    ஜெயபாரதன் கீழ்க்காணும் வரிகளைப் படிக்கவில்லை; படித்திருந்தாலும் அதன் இறைச்சியைப் புரிந்தாரா என்பது வியப்பே !

    //என்னருகில் உட்கார்ந்திருந்த தோழியின் முகம் வெளிறிவிட்டது. ஒன்றும் பேச முடியாமல், ‘இத்தோடு நிறுத்திக்கொள்’ என்பது போல் என் விலாவில் கிள்ளி எச்சரித்தார்.

    …நான் பாரதிதாசன் அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முகத்தில் உடனடியான மாற்றம் எதுவும் தென்படவில்லை. ஆனால் சில நொடிகள் கழித்து என்னைப் பார்த்து அன்பாகச் சிரித்தார். அதன் பிறகுதான் என் மனம் சமாதானமடைந்தது. வந்த இடத்தில் மாபெரும் கவிஞரோடு இப்படி வாய்த்துடுக்காய்ப் பேசி விட்டோமே எனும் குற்ற உணர்ச்சி பெருமளவு குறைந்தது.

    “இப்படித்தான் இருக்கணும்!” என்றார். எனக்கு அப்பாடா என்று ஆனது.//

    இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதுதான் முத்தாய்ப்பு. அல்லது ஒரு முற்போக்குவாதியின் எண்ணத்தின் சொல்வடிவம். வந்தவர் ஒரு இளம்பெண். பாப்பா என்றழைக்கும்படியான சிறுபெண். அவர் மனம் பழைய கருத்துக்களின் உள்ளூறிப்போயுள்ளதா என்றறிய வைத்ததுதான் the surgeon’s needle. அந்த ஊசிக்குக் கிடைத்த பலன் இவ்வரி; அழுத்தமான spontaneous reaction:

    // “என்னது நீங்க? பாரதிதாசனா யிருந்துக்கிட்டு கோத்திரமெல்லாம் கேக்கறீங்க?” //

    அட்டஹாசம். இளம்பெண் சுயசிந்தனையாளர். சரியாக வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பதன் பொருளாக வந்து விழுந்த சொற்கள்: //இப்படித்தான் இருக்கணும்// என்பவை.

    கிழவர்களும் கிழவிகளும் எக்கேடு கெட்டுப் போகட்டும். இளைய தலைமுறை பழைமையில் ஊறி ஊரை குடிசைகளைக்கொழுத்தும்போதும் சுவர்களைக்கட்டும்போதும் மனம் மிக வேதனைப்படுகிறது. அவ்வேதனை பாரதிதாசனுக்கு அந்த நாள் அந்த வீட்டில் கிடைக்காமல் செய்தார் அப்பெண். மிக்க மகிழ்ச்சி. இப்படித்தான் இருக்கவேண்டுமென்றுமட்டும் சொல்லாமல் சாப்பாடும் போட்டு அனுப்பியல்லவா வைத்தார்!

    பழைமையோ புதுமையோ தேர்ந்த பின்னரே எடுப்பதும் விடுப்பதும் இருக்கவேண்டும். இன்றைய மதக்கலவரங்களும் ஜாதிக்கலவரங்களும் இளைஞர் பட்டாளத்தால் அல்லது அவர்களைப்பயன்படுத்தி நடாத்தப்படுவதைப் பார்க்கும்போது, அவர்கள் பழைமையை அப்படியே விழுங்கியவர்கள் என்பது தெரிகிறதல்லவா?

    1. Avatar
      paandiyan says:

      வார்த்தை ஜாலம் மட்டும் இருந்தால் தமிழ் நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கும். பேசாமல் கலவரம் அது முக்குலத்தோர், வன்னியர் மற்றும் தலித் வகைகளை கூட இப்படி சொல்லலாம் ,வரலாறில் எழுதலாம் போல – ” மனம்/உடல் பழைய கருத்துக்களின் உள்ளூறிப்போயுள்ளதா என்றறிய வைத்ததுதான் the surgeon’s needle ” — அதற்க்கான ஒரு டெஸ்ட் என்று ???

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        பாரதியாரும் அவரின் சீடர் பாரதிதாசன் செய்த செயல்கள் இரண்டுமே ஒரே வகை. ஆனால் ஆசிரியர் செய்த முறை முரட்டுத்தனமானது – ;பார்ப்பானை ஐயரை என்ற காலமும் போச்சே!”என்றெழுதக்கூடாது. சீடர் தன் மென்மையான அணுகுமுறையைத்தான் கையாண்டிருக்கிறார்.

        நான் வாழ்க்கையில் பல பார்ப்பனர்களும் அவர்கள் சிறுவயதினராக இருந்தாலும் அவமானப்படுத்தப்பட்டதை நேரில் கண்டவன். அப்படிச்செய்தோர் பாரதியாரின் முறையைக் கையாண்டே செய்தார்கள்.

        இக்கட்டுரையின் படி –

        வந்தவர்கள் இரு இளம்பெண்கள். ஒருத்தி, ஹரிஜன சேவா சங்கம் நடாத்திக்கொண்டிருப்பவர். அவருடன் வந்தவரோ முன் பின் தெரியப்படாதவர். ‘குழந்தை எழுத்தாளர்” என்றறிமுகப்படுத்தப்பட்டவர். (Jyothirlatha Girija implies that she was introduced as a budding or upcoming writer. But she translates it into Children writer. A writer for children may or may not be a budding writer. Jyotirlatha Girija’s novels are addressed to adults.)

        ஆனால் பாரதிதாசன் பார்வையிலேயே தெரிகிறது உடன்வந்த பெண் எக்குல‌மென்று. இஃது எப்படியிருக்கிறதென்றால், உத்தபுரச்சுவரை எதிர்த்துபோராடிய ஒரு கட்சிக்காரர் ஒரு பா ம் க கட்சிக்காரரோடு இணைந்து ஹரிஜன நலத்துக்குப் போராடும் தலைவரைப்பார்க்க வந்ததைப் போல.

        தொடர்பில்லாப்பெண், அதுவும் இன்னொரு எக்ஸ்டிரீமைச்சேர்ந்தவளுக்கும் ஹரிசன நலத்தைப்பேணும் பெண்ணுக்கு என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

        இக்கேள்வி நீங்கள் அங்கே இருந்தால் உங்களுக்கும் எழுந்திருக்கும்.

        எனவேதான் அந்த சம்பாஷனை. சம்பாஷனை முடிவில் இரண்டாவது பெண்ணின் வாழ்க்கைக்கொள்கை வேறாக இருப்பதை அறிநது – அதாவது தான் எதிர்பார்த்ததற்கு வேறாக இருப்பதை அறிந்து – பாரதிதாசன் சொல்லவேண்டியதை கட்டுரையாளர் தான் நினைத்ததாகச் சொல்லிவிட்டார்.

        அஃது இது:

        //எனக்கு அப்பாடா என்று ஆனது.//

        எனக்கும் அப்பாடா என்றுதான் இருக்கிறது.

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பாரதிதாசன் ஒரு “தங்க ஊசி” என்று சொல்லாமல் சொல்கிறார் நண்பர் கணபதி ராமன்.
    தங்க ஊசி என்றாலும் அங்கத்தில் வலியின்றிப் போய்விடுமா ?

    அன்னியர் ஒருவரது ஜாதியைக் கேட்பது, குலம் கோத்திரம் கேட்பது, ஊதியம் கேட்பது விடுதலை நாட்டில் அநாகரீகச் செயல் !
    அதுவும் பாரதியார் தாசன் வந்த விருந்தாளியைக் கேட்பது, சோதிப்பது மிகவும் தரங் கெட்ட செயல் !
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      தங்க ஊசி வேறு; மருத்துவரின் ஊசி வேறு.

      தங்க ஊசி வலிக்கும். வலியைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது.

      மருத்துவரின் ஊசி வலிக்கும். பலனுண்டு. வலியில்லாமல் பலனில்லை இங்கே.

      சிலவேளைகளின் வலியின் மூலமே உண்மைகளைத்தெரிவிக்கவியலும்.

      It is a therapy. Here, social therapy.

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    ஒரு செயல் தரமா தரங்கெட்டதா என்பதை இடமும் காலமும் பேசுமாந்தருமே நிர்ணயிக்க முடியும்; நிர்ணயிக்கப்படவேண்டும். ஒரு கட்டுரையைப்படித்தவர் இங்கே நிர்ணயிக்க முடியாது. காரணம். ஒரே முடிவு என்பது கணிதத்தில், விஞ்ஞானத்தில்.

    வாழ்க்கையில் நிரந்தர முடிவு எக்காலத்திலும் எப்போதும் எனபது கிடையவே கிடையாது. இங்கு இப்போது சரியான முடிவு அங்கு அப்போது சரியாகாது என்பதுதான் வாழ்க்கை.

    நீங்காத நினைவுகள் வாழ்க்கைச்சித்திரங்களைப்பற்றி நம்மிடம் பேசுகிறது என்பதை தயவு செய்து நினைவுகொள்ள வேண்டும். ஜோதிர்லதா கிரிஜா என்னைப்பொறுத்தவரை ஒரு கதா மாந்தர்தாம் இத்தொடர் கட்டுரைகளில். நாம் பார்ப்பது பார்க்க வேண்டியது உள்ளுறை உண்மைகளும் வியப்புக்களுமே. எனவேதான் அவரைப் பெண் பெண் என்று குறிப்பிடுகிறேன்.

    பாரதிதாசனும் மற்றவர்களும் பாரதியாரை அய்யர் என்றுதான் சொல்வர். அய்யர் வந்தாச்சா? அய்யர் வந்தவுடன் கச்சேரி கலைகட்டும் என்பர். அப்படிச்சொன்னவர்கள் அனைவரும் பகுத்தறிவுப் பாசறை ஆசாமிகள் கிடையா. பாரதியாரின் வாழ்க்கையைப்படித்தோர் அறிவர். பாரதிதாசன் முதன்முதலில் பாரதியாரைப்பற்றி தெரிந்ததே அவர் ஒரு அய்யர் என்பதே. அவரின் முதல் சந்திப்பைப்பற்றி ஜெயபாரதன் கண்டிப்பாகப் படிக்கவேண்டும்.

    பாரதியார் இத்தனைக்கும் அய்யர் என்று தன் பெயர் பின்னாலிட்டவர் கிடையாதென்பது மட்டுமன்றி, தன்னை அப்படி விளிப்பதையும் கடுமையாக வெறுத்தவர். அய்யர் என்ற சொல் ஒரு போலி சமூக மரியாதையைப்பெற பயன்படுத்தப்படுகிறது என்பது அவர்தம் தவறான எண்ணம். எனவேதான், சுதந்திர இந்தியா அச்சொல் – அது போன்ற மற்றெந்தச்சொல்லையும் – தூக்கியெறியும் என்ற நம்பிக்கை கொண்டார் (நம்பிக்கை பலிக்கவில்லை!) – ஐயரென்ற காலமும் போச்சே ! என்று மக்கள் ஆனந்தப்பள்ளு பாடுவார்கள் என்றெழதினார்.

    இப்படிப்பட்டவரை எல்லாரும் ஐயரென்றுதான் குறிப்பிட்டார்கள். அவர் குடும்ப‌த்தினர் அவரை சுப்பையா என்றும் அவர் ஜாதிக்காரர்கள் அவரை பாரதி என்றும் பிறஜாதியினரின் அனேகம் பேர் (பாரதிதாசன் உட்பட) ஐயர் என்றும் குறிப்பிட்டார்கள். இதையெல்லாம் குசும்பு என்று குறிப்பிட முடியுமா?

    இதுமட்டுமன்று: இதே நம் கட்டுரையாளர் படடது பாரதியாருக்கும் பலமுறை நேர்ந்ததுண்டு. திருவனந்தபுரத்தில் பல பிள்ளைகள் வீடுகளுக்குச்செல்லும்போது அவர்கள் கேட்பது” ‘நீங்கள் எங்களைத் தப்பாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஏதேனும் சாப்பிடத்தரட்டுமா? என்பார்கள். எப்படி தூத்துக்குடியில் வ உ சியைப் ‘பிள்ளைவாள்’ என்றழைத்தார்களோ, அப்படித்தான் பாரதியாரை ‘ஐயர்வாள்” என்றழைத்தார்கள் அதே ஊரில். மாலைவேளைகளில் எட்டயபுரத்திலிருந்து தூத்துக்குடி வந்து பிள்ளைவாளின் சிவன் கோயில் தெரு மாடிவீட்டுத்திண்ணையிலதான் இருப்பார் (அவ்வீடு இன்றும் அப்படியே இருக்கிறது!) . மாமா என்று அவரை இவரரழைப்பதும் மாப்பிளே என்றவர் இவரை அழைப்பதையும் ஜெயபாரதன் கண்டிபபாகத்தெரிந்து கொள்ளவேண்டும். அய்யர் என்றழைக்கவில்லை அவர். பிள்ளையென்றிவ‌ரழைக்கலாம், அய்யர் என்று மற்றவழைத்தால் embarrassment என்பது double talk as far as Bhrathiyaar was concerned.

    பிறர் வீடுகளில் மட்டுமன்றி, தன் வீட்டிலேயே பிரச்சினை! அடிக்கடி அ-பார்ப்பன விருந்தாளிகளுக்குச் சமைத்துப்போடுவதே செல்லம்மா செய்ய வேண்டியதாயிற்று: கண்ட கண்டவங்களை வீட்டுக்குக் கூட்டிவந்து சாப்பாடு போடுறான் சுப்பையா! என்பது அவர் இருந்த பார்ப்பனக்குடி (அக்ரஹாரம்) விமர்சனம் என்பதை ‘பாரதியும் நண்பர்களும்” என்ற நூலில் படித்தறியலாம்.

    குலம், கோத்திரம்?

    பாரதிதாசன் கேட்ட அதே கேள்வியை நம் கட்டுரையாளரிடம் அவர் குலப்பெரியவர்கள் கேட்டால், அல்லது அவரின் பெற்றோரிடம் கேட்டால் (மணசமபந்ததில் போது கட்டாயம் கேட்கப்படவேண்டும்) அவருக்கு embarrassment வரவே வராது.

    எனவேதான் சொன்னேன் embarrassment என்பது ஒரு கட்டமைப்பு. பாரதிதாசன் கேள்வி அவருக்கு அதைக்கொடுத்ததென்றால் அது பாரதிதாசனின் மேன்மையைத்தான் நமக்கு வெளிக்காட்டுகிறதே தவிர எந்தக்குசும்பையும் காட்டவில்லை.

    Jeyabharathan may raise this auto question: How did she develop the embarrassment at all?

    விடை: பாரதிதாசன் போன்றேரே. வாழ்க அவர்கள்! ஓங்குக அவர்கள் புகழ் !!

    (இன்னும் வரும்)

  5. Avatar
    needhidevan says:

    I IN THE 60S STUDIED IN A DON BOSCO SALATIAN INSTITUTION, high school. there was never castiest feelings except middle class and village boys, a kind of invisible glass barier.But later there was distinct hostility to dalits getting quotas and when there was no dalits present, people deridingly speak ill of that community and also of muslims. so also i heard christians speaking ill of bramins for all the ills and muslims speaking ill of hindu beliefs and rituals among themselves. it is human nature.

Leave a Reply to IIM Ganapathi Raman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *