நீ நீயாக இல்லை …

This entry is part 4 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

கவிதை

 

நீ
உன்னில் பெரும் பகுதியை
இழந்துவிட்டாய்
உன் குரல் மட்டும்
உன்னை
அடையாளம் காட்டுகிறது
உன் திசை ஒரே புள்ளியில்
நின்று கொண்டிருக்கிறது
ஏழையின் தோள் அழுத்தும்
கடனெனக்
கனக்கின்றன நாட்கள்
முதுமையிலிருந்து
உன் மனம்
குழந்தைமை கொண்டுவிட்டது
நீ அறிந்தவை பல
இன்று
உருத்தெரியாமல்
சிதறிக் கிடக்கின்றன

உணவு நீர்
ஊட்ட வேண்டியிருக்கிறது
நீ
நடப்பதற்கு
ஒருவர் துணை தேவைப்படுகிறது
கோலங்கள் உனக்குக்
புள்ளிகளாய்த் தெரிகின்றன
முகம் சோகத்தை
அப்பிக்கொண்டு திகைக்கிறது
வந்து பார்க்கும் தோழிகளிடம்
பாரா முகம் காட்டுகிறாய்

நீ திரிந்துபோய் இருக்கிறாய்
மறதிநோய் உன்னை
உன்னிலிருந்து
எடுத்துப் போய்விட்டது
நாங்கள் எல்லோரும்
உடைந்துபோய்க் கிடக்கிறோம்
—–

Series Navigationஇந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்றுகலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *