பழமொழிகளில் கனவும் நினைத்தலும்

This entry is part 22 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

     மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ் ஆழ் மனதிலேயேஆசைகள், ஏக்கங்கள் உள்ளிட்டவைகள் பதிவுகளாகப் பதிகின்றன. இத்தகைய பதிவுகள் நாளடைவில் கனவுகளாக வெளிப்படுகின்றன.

கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் சாதனங்களாகவும் அமைகின்றன. இலக்கியங்களில் இடம்பெறும் கனவுகள் அனைத்தும் இலக்கிய உத்தியாக இலக்கிய ஆசிரியனால் கையாளப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகாரக் கனவு பின்னர் நடைபெறக் கூடியதை முன்னரே அறிவிக்கும் அறிவிப்பாக அறிகுறியாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரக் காப்பிய மாந்தர்களான கண்ணகி, கோப்பெருந்தேவி ஆகியோரின் கனவுகள் பின்னர் நிகழ விருக்கும் நிகழ்வுகளை முன்னரே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக உள்ளன.

இக்கனவுகளைப் பறறிய செய்திகள் பழமொழிகளில் இடம்பெற்றுள்ளன. இக்கனவுகளைப் போன்றே நினைத்தலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நினைத்தலை சிந்தனை என்பர். நமது மனதில் சிந்தனை என்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நடந்தாலும், இருந்தாலும், படித்தாலும் எந்தச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் உள்மனதில் சிந்தனை, நினைத்தல் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

மனிதனின் நினைத்தல்களுக்கும் கனவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனிதன் எவற்றைச் செய்ய நினைக்கின்றானோ அவைகள் ஆழ்மனப் பதிவுகளாகிக் கனவுகளாக உருவாகின்றன. நினைத்தலாகிய செயல் மனிதனைப் பல்வேறுவிதமான செயல்பாடுகினளைச் செய்யத் தூண்டுின்றன. நல்ல செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் இந்நினைத்தலே அடிப்படைக்காரணிகளாக அமைகின்றன.

சாலையில் வண்டியில் செல்வோர் ஒரே நினைப்புடன் செல்ல வேண்டும். பல்வேறுவிதமான நினைப்புகளுடன் செல்கின்றபோது பிற வாகனங்களுடன் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்பும் பல்வேறுவிதமான இழப்புகளும் நேர்கின்றன. சிலர் தவறான செயல்களைச் செய்துவிட்டு, ‘‘நான் ஏதோ ஒரு நினைப்பில் செய்துவிட்டேன்’’ என்று புலம்புவர். இத்தகைய நிகழ்வுகளை நாம் அன்றாட வாழ்வில் காணலாம். சிலர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ செய்வர். இந்நினைத்தல் குறித்த பழமொழிகள் மக்களின் வாழ்வியலைத் தெளிவுறுத்துவனவாக உள்ளன.

பகற் கனவு – அதிகாலைக் கனவு

கனவு வருவதைப் பொறுத்து அதனைப் பகற்கனவு, அதிகாலைக் கனவு என்று வகைப்படுத்திக் கூறுவர். பெரும்பாலும் அனைவரும் கனவு காண்பர். சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு கண்டு கொண்டிருப்பர். அவர்களைப் பகற் கனவு காண்பவர்கள் என்று குறிப்பிடலாம்.இவர்கள் எப்போதும் தங்களைப் பற்றியும் நடக்க முடியாத செயல்களைக் கறித்தும் கனவு கண்டு கொண்டே இருப்பர். இவர்கள் காணும் கனவுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பர்.

இவர்களைச் சோம்பேறிகள் என்றும் மணற்கோட்டை கட்டுபவர்கள் என்றும் கூறுவர். கனவினைக் கண்டுகொண்டே இப்பண்புடையவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதோடுமட்டுமல்லாது இவர்கள் எப்போதும் தாங்கள் கண்ட கனவினைத் தம் நண்பர்களிடம் கூறிப் பெருமையடித்துக் கொள்வர். நண்பர்கள்,

‘‘பகற்கனவு பலிக்காது’’ பார்த்துக்கொள்ளப்பா!

என்று இகழ்ச்சியாகக் கூறுவர். தேவையின்றி கனவு கண்டுகொண்டிருக்காது கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற வாழ்க்கை நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

அதேபோன்று அதிகாலையில் காணும்கனவு பலிக்கும் என்பர். கண்ணகியும், கோப்பெருந்தேவியும் அதிகாலையில் கனவு காண்டிதால் அக்கனவு பலித்தது. அது காப்பியக் கனவு ஆகும். மக்களின் வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வரும் இத்தகைய நம்பிக்கையை,

      ‘‘அதிகாலையில் காணும் கனவு பலிக்கும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இஃது மக்களின் நம்பிக்கை சார்ந்த பழமொழியாகும்.

ஊமையும் – கனவும்

வாய்பேச இயலாதவர்களை மூங்கையர், ஊமை என்று கூறுவர். இவர்களால் எதைக் கண்டாலும், கேட்டாலும் வாய்திறந்து மறுமொழி கூறமுடியாது. ஆனாலும் செய்கையில் கூறுவர். அதுபோன்று அவர்கள் கனவு கண்டாலும் அதனைப் பற்றிக் கூற முடியாது. இத்தகைய மாற்றுத்திறனாளியின் இயல்பினை,

‘‘ஊமை கனவு கண்டால் ஒருத்தருக்கிட்டேயும் செல்லாதாம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

வாய் பேச இயலாதவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையைக்கூட கூற இயலாத நிலையில் உள்ளனர். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு நாம் மதிப்பளித்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறிமுறையையும் இப்பழமொழைி நமக்கு எடுத்துரைக்கின்றது.

நினைத்தல்

நினைத்தலை நெனப்பு, நினைப்பு என்றும் வழக்கில் கூறுவர். ஒருவன் மனதில் எண்ணும் எண்ணங்களையே நினைத்தல் என்பர். ஒரு பொருள் மனிதன், அல்லது தன்னைப் பற்றி ஒருவன் நினைக்கலாம். இந்நினைப்பு அதிகரித்துத் தலைக்கனமாக மாறிவிடக் கூடாது. மேலும் இந்நினைத்தல் தவறானதாக அமைதல் கூடாது. அங்ஙனம் தவறாக அமைந்திடில் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டு துன்புற நேரிடும். நம்முடைய வேலையையே கெடுத்துவிடும் தன்மை உடையது. அதனால் தான் நமது முன்னோர்கள்,

‘‘நெனப்புப் பொழைப்பைக் கெடுத்துவிடும்’’

என்று கூறினர்.

தகுதிக்கேற்ப நினைத்தல் வேண்டும். தகுதிக்கு மீறி இருந்தால் அது வாழ்க்கையை அழித்துவிடும். பிறருக்குத் தீங்கு செய்வதைப்பற்றி நாம் நினைத்தால் அது பிறருக்குத் துன்பத்தைத் தரும். அதனால் நல்லனவற்றை நினைத்து நல்லனவற்றைச் செய்தல் வேண்டும். நற் சிந்தனையை மனதிற்குள் வளரவிட வேண்டும் என்ற வாழ்வியலறத்தை இப்பழமொழி நமக்கு வழங்குகிறது.

நற்கனவுகண்டு, நல்லனவற்றை மட்டும நினைத்து நாமும் பிறரும் வாழ்வில் உயர வேண்டும். நல்லெண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் உன்னதமான வாழ்வைத் தரும். பலிதமாகும் கனவினைக் கண்டு பயன்தரும் கருத்துக்களை நினைத்துப் பயனுறு வாழ்க்கை வாழ்வோம் வாழ்வில் வசந்தம் வரும்.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *