பாசாங்குப் பசி

This entry is part 23 of 40 in the series 8 ஜனவரி 2012

மண்டப முகப்பில்

கும்பிடுகளை உதிர்த்து

மணமேடை நிழற்பட

பதிவு வரிசையைத் தவிர்த்து

பசியாத வயிற்றுக்கு

பந்தியில் இடம் பிடித்தேன்

சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட

இடது பக்கயிருக்கைக் கிழவியின்

இலை இளைத்துக்கிடந்தது

அவர் தேகம் போலவே

வலதுகையால் பிட்டதை

பாசாங்காய் வாய் கொறிக்க

எவரும் அறியா சூட்சுமத்துடன்

இடது கை இழுத்து

புதைத்துக்கொண்டிருந்தது மடியில்

பசிக்காத வயிற்றுக்கு

பாசாங்காய் புசித்துண்ணும் எனக்கு

பரிமாறியவர் பாட்டியின்

இளைத்துக்கிடந்த இலையையும்

இட்டு நிரப்பிப்போனார்

முதுமை முடக்கிய கணவனோ

புத்திசுவாதீனமில்லா மகனோ

தீரா நோயில் விழுந்த மகளோ!

பெற்றவரை இழந்த பேரன் பேத்தியோ!

உள்ளம்பேதலித்த உடன்பிறப்போ

உயிர்வாடும் நெருங்கிய உறவோவென

எவரின் பசியாற்றப்போகிறதோ

இந்த மடியின் கனம்

அந்தப் பாழும் கிழவின்

சுருங்கிய வயிற்றையோ,

பசியோசை வழியும்

அந்தவீட்டின்

இன்னொரு வயிற்றையோ

இந்தப் பாசாங்கு

பசி தீர்க்கட்டுமே

தற்காலிகமாகவேணும்!

Series Navigation………..மீண்டும் …………..ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5
author

ஈரோடு கதிர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *