பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா

This entry is part 20 of 42 in the series 29 ஜனவரி 2012

 

Cover Image Raja Ramanna

(1925-2004)


சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசு அரக்கர் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

 

Fig 1 Albert Einstein

 

 

 

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன!  அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக நாடாக முன்னேற வேண்டும் !”

ஜவஹர்லால் நேரு.

“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் !  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”

ஜவஹர்லால் நேரு.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)

“மெய்யாகச் சொன்னால் டாக்டர் ராமண்ணா  எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டவன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர்.”

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்.

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்



Fig 1A Two Great Architects of India

போதி சத்துவ புத்தரும், அகிம்சா நெறி வகுத்த மகாத்மா காந்தியும் அவதரித்த நாட்டிலே அணு ஆயுதம் உதிக்கும் என்று உலக மாந்தர் எவரும் எதிர்பார்க்க வில்லை ! அணு ஆயுதப் பந்தயத்தில் முன்னடி வைத்து வல்லரசுகளின் பின்னே செல்லும் பாரதத்தை இப்போது யாராலும் நிறுத்திக் கட்டுப்படுத்த முடியவில்லை ! விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதப் பெருக்கத்தை உலகில் நிறுத்த முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் இரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வருகிறார்கள் !

கட்டுரை ஆசிரியர்.


அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

Fig 1B Einstein & Nehru

 

இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

பாரதத்தில் அணுசக்தி ஆராய்ச்சியின் ஆரம்ப காலம்

1945 ஆகஸ்டு 6 & 9 தேதிகளில் ஜப்பானில் அணுகுண்டுகள் போடப் பட்டு ஏறக் குறைய ஓராண்டுக்குப் பின்பு, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்பு, 1946 ஜூன் 26 ஆம் தேதி மும்பைப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய நேரு, “இப்போது நிகழ்ந்தது போல் நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும்!  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும்!” என்று இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையை முதன் முதலில் வெளிப்படையாகப் பறை சாற்றினார்.

ஐரோப்பிய அமெரிக்க விஞ்ஞானிகள் இரண்டாம் உலகப் போர் நிகழும் போது, அமெரிக்காவில் அணு ஆயுத ஆய்வுகள் நடத்தி வரும் சமயத்தில், 1944 ஆம் ஆண்டு மார்ச் 12 இல் டாக்டர் ஹோமி பாபா இந்திய அணுவியல் ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளிக்குமாறு, ஸர் டொராப்ஜி டாடா பீடத்திற்கு [Sir Dorabji Tata Trust] எழுதினார்.  1945 இல் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் (Tata Institute of Fundamental Research, TIFR) பம்பாயில் டாடா தொழிற்துறைப் பேரரசால் (Tata Industrial Empire) நிறுவனம் ஆகி டாக்டர் பாபா அதன் முதல் ஆணையாளர் ஆனார்.  சுதந்திர இந்தியாவில் பண்டித நேரு 1948 இல் அணுசக்திச் சட்டத்தை (Atomic Energy Act) அமுலாக்கி, இந்திய அணுசக்திப் பேரவை (Atomic Energy Commission) நிர்மாணிக்கப் பட்டது.  டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் முதல் அதிபர் ஆக்கப் பட்டார்.

Fig 1C CIRUS Research Reactor

அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்வாரா ?

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் !  அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை !  1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பின்பு, டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!

1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்!  அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது !  அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது !  இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது!  அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஒப்புக்கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?

Fig 1D Bombs Dropped on Japan

இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா !  இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !

இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !

ராஜா ராமண்ணாவின் வாழ்க்கை வரலாறு

ராஜா ராமண்ணா 1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் (Tumkur) பிறந்தார்.  தந்தையார் பெயர் பி. ராமண்ணா. தாயார் ருக்மணியம்மா. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின், இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக் கழகத்தில் பௌதிக விஞ்ஞானத்தை எடுத்து, அணுக்கரு பௌதிகம் (Nuclear Physics), அணுஉலைப் பௌதிகம் (Reactor Physics), டிசைன், ஈரோப்பியன் இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார்.  இறுதியில் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்தையும் (Ph.D.), ராஜீய இசைப் பள்ளியின் L.R.S.M டிபோளாமாவையும் (Licentiate in Royal School of Music) பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.  அவரது மனைவியார் பெயர் மாலதி ராமண்ணா.  அவருக்கு ஒரு மகனும், இரு புதல்விகளும் உள்ளனர்.  ராஜா ராமண்ணாவுக்கு இசை, நாடகம், வேதாந்தம், இலக்கியம், அணுக்கரு & துகள் பௌதிகம் (சோதனை & கோட்பாடு) [Nuclear & Particle Physics (Experimental & Theoretical)] ஆகியவற்றில் வேட்கை மிகுதி.

Fig 2 Cerenkov Radiation

ராமண்ணா பாரத அணுசக்தித் துறையில் பல பெரும் பதவிகளில் பணியாற்றியவர்.  முக்கியமாக மொம்பை, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆணையாளராக (Director, Bhabha Atomic Research Centre, Mumbai) எட்டாண்டுகள் (1972-1978, 1981-1983) பணியாற்றினார். முதல் ஆறாண்டுகளை ராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம்!  அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட “புன்னகை புத்தர்” (Code Name, Smiling Buddha) என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது !  1974 மே மாதம் 18 ஆம் தேதி ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது.  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு 1983 இல் அதிபராக டாக்டர் ராஜா ராமண்ணா அணுசக்திப் பேரவைக்குத் [Chairman, Atomic Energy Commission] தேர்ந்தெடுக்கப் பட்டு நான்கு ஆண்டுகள் பணி யாற்றினார்.

பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் (Indian Institute of Science), ஆணைக் குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research), இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை (Indian Academy of Sciences 1977), மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் (Indian Institute of Technology, Mumbai 1972) ஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார். 1990 இல் பாரத அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறை மாநில மந்திரி (Minister of State for Defence) 1997 முதல் ராஜா ராமண்ணா அரசியல் மேல் சபையில் (Rajya Sabha) அங்கத்தினாராக நியமிக்கப் பட்டார்.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ராமண்ணாவின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகி யுள்ளன. அத்துடன் அவரது சுயசரிதையான, “யாத்திரை ஆண்டுகள்” (Years of Pilgrimage 1991), மேற்கிசை, ராகத்தின் இசை அமைப்பு (The Structure of Music in Raga & Western Systems 1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

Fig 3 Thorium Based Reactor

டாக்டர் ராஜா ராமண்ணா பல பரிசுகளும், கௌரவ மதிப்புகளும் பெற்றவர்.  பல பல்கலைக் கழகங்கள் ராமண்ணாவுக்கு D.Sc. (Doctor of Science) பட்டம் அளித்துள்ளன.  சாந்தி ஸ¤வரூப் பட்நாகர் நினைவுப் பரிசு (1963), பாரத அரசின் பத்ம விபூஷண் (1975), நேரு பொறியியல், பொறித்துறைப் பரிசு (Nehru Award for Engineering & Technology 1983),  விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் கௌரவ இலக்கிய டாக்டர் பட்டம் (1993) போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.  வியன்னாவில் அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையின் (International Atomic Energy Agency 1986) அதிபராகச் சில காலம் பணியாற்றி யுள்ளார்.  30 ஆவது அகில நாடுகளின் அணுசக்திப் பேரவைப் (IAEA) பொதுக் கூட்டத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்திய அணு ஆயுதப் பிதாவுமான டாக்டர் ராஜா ராமண்ணா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24, 2004) அதிகாலையில் மொம்பை நகர மருத்துவ மனையில் காலமானர்.  அவருக்கு வயது 79. உட்புறக் குடல் இரத்தக் கசிவில் உடல்நிலை மிகவும் சீர்கேடாகி மரணம் அடைந்ததாக, மருத்துவ மனையின் அதிபர் டாக்டர் பி.கே. கோயல் நிருபர்களிடம் அறிவித்தார். டாக்டர் ராமண்ணாவுக்கு கடந்த 15 ஆண்டுகளாகவே இருதயப் பிரச்சனைகள் இருந்து, ஒருமுறை ஆஞ்சியோ பிலாஸ்டி கடப்பு அறுவைச் சிகிட்சையும் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. பாம்பே வொர்லியில் வசிக்கும் மகனைக் காண வந்தவர், சென்ற திங்கட் கிழமை யன்று சற்று தலை சுற்றுவதாகவும், வேர்ப்பதாகவும் குறிப்பிடவே, மொம்பை நகர மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக, அவரது மருமகள் சீமா ராமண்ணா கூறினார். வியாழக் கிழமை மாலை 7:30 மணிக்கே அவரது முடிவு நெருங்கி விட்டாலும், மருத்துவ நியமப்படி உயிருடன் இருந்ததால் சுவாசப் பாதுகாப்புச் சாதனங்களுடன் அவர் கண்காணிக்கப் பட்டார். செய்தியை ஒளரங்காபாத்தில் கேள்விப்பட்டு ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் டாக்டர் ராமண்ணாவைக் காண மருத்துவ மனைக்கு வந்ததாக, டாக்டர் கோயல் அறிவித்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3:15 ராமண்ணாவின் ஆத்மா பிரிந்தது.

மொம்பை சிவாஜிப் பூங்கா மின்சார எரிப்பகத்தில் டாக்டர் ராமண்ணாவின் உடம்பு வெள்ளிக்கிழமை மாலை 3:45 மணிக்குத் தகனம் செய்யப்பட்டு, ஈமச் சடங்கள் நடத்தப் பட்டன. அதில் கலந்து கொண்டவர், முந்தைய அணுசக்திப் பேரவை அதிபதி ஹோமி சேத்னா, டாக்டர் பி.கே. ஐயங்கார், தற்போதைய அதிபதி டாக்டர் அனில் ககோட்கர், இந்திய அணுமின்சக்தி அதிபர், எஸ். கே. ஜெயின், கனநீர் ஆணைக்குழு அதிபர், எஸ். சி. ஹயர்மத் ஆகியோர். “டாக்டர் ராமண்ணா மெய்யாகச் சொன்னால் எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர்” என்று மருத்துவ மனையில் டாக்டர் கோயலிடம் கூறினார் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். ‘அணுக்கரு விஞ்ஞானத்தில் செய்முறைத் திறமிக்க நிபுணர் என்றும், இந்தியாவை உலக அணுக்கரு விஞ்ஞான அரங்கில் அமரச் செய்தவர் டாக்டர் ராமண்ணா’ என்றும் பெருமைப் படுத்தினார் பி.கே. ஐயங்கார்.

Fig 4 Dhruva Research Reactor

இந்திய அணு ஆயுதங்களின் அடித்தள வெடிப்பு ஆராய்ச்சி

1957 இல் அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வியன்னாவில் அகில நாட்டு அணுசக்திப் பேரவை (International Atomic Energy Agency, IAEA) அமைக்கப் பட்டு, உலக நாடுகளின் ஆராய்ச்சி அணு உலைகள், அணுசக்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் அணுப்பிளவு எருக்களின் (Fissile Material) பெருக்கத்தைக் கண்காணித்து வருகிறது !  1974 மே மாதம் 18 ஆம் தேதி பாரதத்தின் “புன்னகை புத்தர்” என்னும் குறிச்சொல் பெயரில் முதல் அணுப்பிளவுக் குண்டு (Fission Atomic Bomb) ராஜஸ்தான் பொக்ரான் பாலை நிலத்தின் அடித்தளத்தில் வெடிக்கப் பட்டது !

1998 புத்த மகான் பிறந்த நாளான மே 11 இல், ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் இந்தியா மூன்று அணு ஆயுத வெடிப்புகளை அடித்தளத்தில் உண்டாக்கி ஆராய்ச்சிகள் செய்தது ! இரண்டு நாட்கள் கழித்து மே 13 இல் மறுபடியும் இரண்டு அடித்தள அணுகுண்டு வெடிப்புகளை ஏற்படுத்தியது ! பிரதம மந்திரி அடல் பெஹாரி பாஜ்பாயி செய்திக் கூட்டத்தார் முன்பு, மூன்று வெடிப்பில் ஒன்று 12 கிலோ டன் பிளவுச் சாதனம் (Fission Device), ஒன்று 43 கிலோ டன் வெப்ப அணுக்கருச் சாதனம் (Thermonuclear Device), மூன்றாம் சாதனம் 1 கிலோ டன்னுக்கும் சிறியது! இரண்டாம் நாள் வெடித்த சாதனங்கள் ஒரு கிலோ டன்னுக்குச் சிறியவை! உலகின் பூவதிர்ச்சி உளவிகள் (Seismic Probes) பல இரண்டாம் நாள் வெடிப்புகளை நுகர முடிய வில்லை ! இந்தியா ஒரு சிறு ஹைடிரஜன் குண்டைச் சோதித்துள்ளது என்பதைப் பல நாடுகள் அப்போது நம்பவில்லை !  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியது, ‘ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம்! ‘

1998 மே மாதம் இரண்டாம் தடவை அடித்தள வெடிப்புச் செய்த போது பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: ‘இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! உலக மானிட ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமை ஆயுதங்கள் அவை! அணு ஆயுதங்கள் இந்தியச் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டும் பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்கு முதலில் பயன்படுத்தப்பட மாட்டா! ‘ அவ்விதம் அழுத்தமாகப் பேசி பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளைப் பயமுறுத்தப் பாரதம் அணு ஆயுதங்களைக் காட்சிக் கண்ணாடி மாளிகையில் வைத்திருக்கிறது!

Fig 5 Pokran First Test

இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?

ஐந்து காரணங்களைக் கூறலாம்!  முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டது!  இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது !  நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார்.  மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் உண்டானது !  அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது !  நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது !  ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !

ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் !  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது !  நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இதை அவ்வளவாக வரவேற்க வில்லை.  1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்!  அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார்.  சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை !  இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அதிபரானார்.  இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!

அணுகுண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது !  இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் !  வெளிவரும் வெப்ப சக்தி 1 watt.  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 mw & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 mw வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன !  துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது !  ஆய்வு அணு உலை 1 mwd (One Mega Watt in one Day] வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் சேரும் !  100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !

Fig 6 Pokran Test Site

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்

1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன !  அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன!  சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag).  முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !

இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி),  இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர்.  அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமையாக முடிக்கப் பட்டது.  பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”

1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்  குரிய ஆயுதங்கள்!  இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”

Indian Missile Launch

அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளன !

இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன!  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை!  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை!  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன!  இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது!

பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர்!  அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன!  நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது!”

Indian Rockets

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!


1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர்.  அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் !  இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம்!

1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர்.  ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் !  லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது!  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

Indian Missile Warhead

1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது!  அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது!  முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, பிறந்து அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது!”

அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ?  அழுத்தமான இந்த உபதேசம்தான் !  போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை!  போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை!  போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை !  உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயம் இனிமேல் தொடரக் கூடாது.

the-president.jpg

டாக்டர் அப்துல் கலாம்

++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 26, 2012 (R-4)

Series Navigationசுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *