பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி

This entry is part 4 of 10 in the series 20 ஜனவரி 2019

 

 

பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை படித்து மட்டுமே பொருள் கொள்வது என்கிற பேச்சுக்கு இங்கே இடமில்லை.கதையின் கரு நம்மோடு ஒட்டிகொண்டு விடுகின்றது. ஒரு வாசகன் கண்கள் பனிக்காமல் அவர் எழுத்துக்களை படித்துவிடமுடியாது.
பாவண்ணனின் அந்தப் படைப்பு மனம் அது தானாக எழுதிக்கொண்டு போவதை வாசகன் படிக்கும்போது உண்ரமுடியும்.பாசாங்குத்தனம் அறியா எழுத்துக்கள் அவை. சாதாரண ஒரு எளிய மனிதனின் உள்ள நெகிழ்வை பாவண்ணனால் மிகச்சரியாக அவதானிக்க முடிகிறது. ஏதோ ஒரு சத்தியத்தின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அவர் எழுத்துக்கள் சொல்லிச்செல்கின்றன.
வாழ்க்கை பற்றிய படைப்பாளியின் அணுகுமுறை, அனுபவம்,படைப்பாற்றல், வாசகனுக்குத் தான்தெரிவிக்க விழையும் ஒரு செய்தி இவை அனைத்திற்குமான விடை அவரது படைப்புக்களில் பெற முடியும். பிரிக்கவேமுடியாத உறவு அவரின் பிறந்த மண்ணோடு இருப்பதை அவரின் எல்லாப்படைப்புக்களிலும் தரிசிக்கவும் வாய்க்கும். 
கால்களில் மிதிபடும் புல்லின் ஒரு இதழில் பிரபஞ்சத்தின் ரகசியம் ஒளிந்திருப்பதை நோக்குவது ஒப்ப, ஒரு எளிய மனிதன் பேசும் வார்த்தைகளில் மாகாவியங்கள் உணர்த்தப்போராடும் கனவிஷயத்தைச்சொல்லிவிட பாவண்ணனால் சாத்தியப்படுகிறது.

பச்சைக்கிளிகள்:
சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘பச்சைக்கிளிகள்’ என்னும் தொகுப்புக்குள் நாம் இப்போது நுழைகிறோம்.13 கதைகளைக்கொண்ட ஒரு தொகுதி இந்த பச்சைக்கிளிகள்.
தீரா நதி,ஆனந்தவிகடன்,உயிர் எழுத்து,உயிர்மை,காவ்யா,அந்திமழை, அம்ருதா என இலக்கிய பிரக்ஞை கூடிய இதழ்களில் வெளிவந்தவை.இந்தப்பட்டியலில் இலக்கியப்பிரக்ஞை கூடியன என்பதில் முரண் இருக்கலாம்.ஆனால் பாவண்ணனின் படைப்பு வெளிருவதில் கொஞ்சம் கூடுதல் அக்கறையுள்ள இதழ்கள் என்கிறபோது இயல்பாக இவைகட்கு இலக்கிய மாற்றுக்கூடிப்போவதை ஏற்கத்தான் வேண்டும்.
வெளிச்சத்தைக்கொண்டு வருபவன்-என்கிற கதையிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம்.ரங்கநாதன் சார் என்னும் கிராமத்து ஆசிரியரின் கதை.ஆசிரியன் என்னும் ஒரு இலக்கணத்துக்கு பொறுத்தமான ஒரு பெரிய மனதுக்காரனின் கதை.
அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த வயிற்றுப்பிழைப்பு. கிர்ரமப்புறங்களில் அதுவே பெரிய பாடு என்று வாழ்க்கை அனுபவ மாகின்றபோது ஒரு ஏழைக் குடும்பத்து மாணவன் எப்படிப் பள்ளியில் சேர்ந்து படிப்பது. பசி வந்திட பத்தும் பறந்து போம் என்கிறார்களே பின் அதுதான் என்னவாம்.
செங்கல் சூளை வேலைக்குச்செல்லும் பள்ளிச்சிறார்கள். அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை..உழைத்தால் குடும்பம் பசி ஆற்றிக்கொள்ளும்.இல்லாவிட்டால் பட்டினி கிடந்து மடிவதைத்தவிற வேறு வழி என்ன என்பதுவே யதார்த்த நிலை. தன் பிள்ளையை செங்கல் சூளை வேலைக்கு அனுப்பும் தாய் ரங்கநாதன் சாரிடம் இப்படிப் பேசுகிறாள்.
‘இங்க பாரு சார்.வீணா புடிவாதம் புடிக்காத.மத்த சார்மாருங்களாட்டம் நீயும் இருந்துட்டு போ சார்.எங்க ஊட்டுல ஒல கொதிக்கணும்னா அவனுங்களும் வேலை செஞ்சாதான் முடியும்.என் புள்ள மேல எர நூறு ரூபா அட்வான்ஸ் குடுத்திருக்காரு மொதலாளி.அதோ அந்த மாயாண்டி,காத்தமுத்து, குள்ளன்,வெளுத்தான்,கோணக்காதன்,அந்தத்தடியன்,மொட்ட, எல்லார் மேலயும் எர நூறு முந்நூறுன்னு இருக்குது சார்.வேல செய்யுறதனாலதான் நம்பிக்கையா கடன் குடுக்க்றாங்க சார்.செய்யலைன்னா யார் குடுப்பா? படி படின்னு சொல்றியே படிப்பு வந்து குடுக்குமா?’ இப்படி இருக்கிறது ரங்கநாதன் சார் முன்பாக பிரத்யட்சமாக நிற்கும் கிராமம்.இந்த இருண்ட சூழலில் கல்வி என்னும் அறிவு வெளிச்சத்தை எப்படி ஒரு ஆசிரியர் கொண்டு வருகிறார் என்பதைச்சொல்லும் கதை இது.
பாவண்ணனுக்கு நேர் எதிரே அனுபவமான ஒரு விஷயமாக இருக்கவும் கூடும்
அமரர்.வே.சபாநாயகம் ஒரு நாவல் எழுதியிருப்பார்.’ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’ திண்ணைப்பள்ளிக்கூடத்தை தத்ரூபமாக வாசகனுக்கு அறிமுகப்படுத்திய ஒரே படைப்பு அது. ..திருமணமே செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி வாத்தியார் தன் இறுதிமூச்சுவரை எழுத்தாளர் சபாநாயகம் வாழ்ந்த அதே தெற்கு வடக்கு புத்தூர் கிராமத்தில் திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியராக பணி செய்து, அந்த மக்களுக்கு எண்ணும் எழுத்தும் அறிவித்து த் தன் வாழ்க்கையை முடித்துக்கொண் டுவிடுவார்.அந்த புதினத்தை வாசகனுக்கு நினைவுக்குக்கொண்டு வருகிறது பாவண்ணனின் இந்தச்சிறுகதை. ஆக அவ்வையார் சொன்னதை நாமும் ஆமோதிப்போம். எழுத்தறிவிப்பவன் இறைவன் என்பதே சரி.
பாவண்ணன் சொல்கிறார்.’பக்கத்துக்காட்டில் ஆடு மாடு மேய்த்தவர்கள்,பன்றி மேய்த்தவர்கள்,கரும்பு வெட்டுக்குப்போனவர்கள்,சாணமெடுக்கச்சென்றவர்கள் என பிள்ளைகள் கூட்டம் ஒவ்வொரு திசையிலிருந்தும் தினமும் வந்து சேர்ந்தபடி இருந்தார்கள்’.அறிவுக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்பதில் அத்தனை ஆழ்ந்த பிடிப்பும் கவலையும் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியரைக்காண்பதில் வாசகனுக்கு எத்தனை நிறைவு.அந்த ரங்கநாதன் ஆசிரியரின் நிழற்படத்துக்குப்போடப்பட்டிருந்த கண்ணாடிச் சட்டம் ஒரு நாள் உடைந்துபோய்விடுகிறது. அதனைச்சீர் செய்ய செல்லும் அவரின் ஒரு மாணவன் வாசகனுக்குச்சொல்லும் ஆழமான ஒரு செய்தியாக படைப்பு அமைகிறது இந்தச்சிறுகதை, படிக்கும்.ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் சந்தித்த ஒரு நல்- ஆசிரியரின் நினைவை நிழலாகக்கொண்டுவரும். அவரோடு என்றோ ஒரு நாள் உரையாடிப்போனதை மீண்டும் மனத்திரையில் அனுபவிக்க வாய்க்கும்.
ஆங்கிலக்கவிதாயினி எமிலி டிக்கின்சன் எழுதியிருப்பார்.தான் இறந்து தன் சவ ஊர்வலம் தான் படித்த அதேபள்ளிக்கூட வீதி வழி செல்கிறது. அதுபோது அந்தப்பள்ளிப்பிள்ளைகள் அச்சத்தில் மூழ்குகிறார்கள். ஆக ஒரு படைப்பாளிக்குத் தான் படித்த பள்ளி என்பது மறக்கவே முடியாத பெரு விஷயமாகும்.
வெயில் -என்கிற தலைப்பு.அடுத்து வரும் சிறுகதை.மனிதன் நோயற்ற நல்வாழ்வில் வாழவே எப்போதும் விரும்புகிறான்.ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியப்படுகிறதா என்ன? நோயிலும் மன நோய் என்கிற விஷயம் மிக மிக மோசமானது.தன்னையே மறந்து தடம் இறங்கிப்போய், பார்க்கும் எல்லோரும் பரிதாபப்படும் ஒரு ஜீவனாக மாறிப்போகிற அந்த வாழ்க்கை கொடுமையானது.மூன்றாம் பிறை திரைப்படத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு கதா நாயகியை வெள்ளித்திரையில் பார்த்து இருப்போம்.அந்த க்கதா நாயகிப்பெண்ணுக்கு குழம்பிய மனம் மீண்டும் ஆரோக்கியமாகும்.ஆனால் உயிருக்கு உயிராய் காதலித்தவனை மட்டும் அவள் மறந்து போய் நிற்பாள்.சோகம் கனத்துப்போவதை பார்வையாளன் இங்கு உணரமுடியும். 
அனபைகொட்டிக்கொட்டி நேசித்த அந்தப்பெண்ணை வெளி நாடு சென்று தாயகம் திரும்பும் கதை சொல்லி தேடிவருகிறான்.எங்கே போனாள் அவள். அவனுக்கு அவன் குடியிருந்த வீட்டுச்சொந்தக்காரர் சொல்லிய செய்தி இது.அவள் குடும்பத்தில் எல்லோரும் ஒரு சாலைவிபத்தில் சிக்கி இறக்க அவளுக்கு த்தலையில் அடி. மூளை அனேகமாய் செயலிழுந்துபோயிற்று..பைத்தியம் பிடித்தவள் போல் காணப்பட்ட அவளை, தன்னை உயிருக்கு உயிராய் நேசித்த அந்த அவளை ,அவளின் உறவினர்கள் மன நல சிகிச்சைக்காக மா நகர மருத்துவமனை ஒன்றில் உட்புற நோயாளியாக சேர்த்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.கதை சொல்லி அவளைக்கண்ணால் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசையில் மன நல மருத்துவ மனைக்குச் சென்று தேடுகிறான். கடைசியாக பார்த்தும் விடுகிறான்.
‘அவள் பார்வை.எங்கோ தொலைவில் வானத்தில் பதிந்து கிடந்தது.அந்தக்கண்கள்.அந்த உதடு.அக்கணமே புரிந்துவிட்டது.காவேரியேதான்.உயிரின் ஆற்றலை எல்லாம் அவை சுமந்திருந்தன.ஆனால் தோற்றம்தான் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.மொட்டை அடிக்கப்பட்ட தலையில் கொஞ்சம்போல முளைத்திருந்த முடி.ஒடுங்கிப்போன நெற்றி,குச்சியாகிவிட்ட கழுத்து,சுருங்கிப்போன தேகம்.நாலடி தோலைவில் நிற்பவள் நாலாயிரம் அடி தொலைவில் நிற்பவளைபோலத்தோன்றினாள்.என் உடலில் ஒரு தடுமாற்றமும் சோர்வும் படிவதை உணர்ந்தேன்.அவளை அழைக்க நினைத்த குரல் எழாமலேயே குரல்வளைக்குக்கீழே அடங்கி ஒடுங்கியது.’பாவண்ணன் இப்படிச்சொல்லி முடிக்கிறார்.
கதைசொல்லி அந்தப்பெண்ணைக்கண்டும் காணாதவன் என்கிறபடி மன நல மருத்துவமனை விட்டு மனம் கனத்து வெளியே வருகிறான்.வெயில் ஈட்டியாய் காய்கிறது.அவனை அவளால் நினைவில் கொண்டுவரமுடியவில்லை.அவனாலும் எதுவும் செய்யமுடியாத நிலை..அவனுக்கும் அவளுக்கும் இருந்த அன்பென்னும் சங்கிலி அறுபட்டுப்போய் அவள் வாழ்நலம் நொறுங்கிப்போய் ஒரு மன நோயாளியாய் கிடக்கிறாள்.இந்தப்பெண்ணின் அவலம் கொடுமையானது.பாவண்ணன் இதை ஒரு ஓவியமாகத்தீட்டி வாசகனுக்கு’பாரப்பா இப்படியும் ஒரு சோகத்தை’ எனக்காட்டியிருக்கிறார்.சிறிய கதைதான்.பாவண்ணன் இப்படிச்சாதாரணமாக சிறிய சிறுகதை எழுதுவது வழக்கமில்லை. நெடியகதை என்பது தான் எப்போதும் அவர் சிறுகதைப்பாணி.
சாதாரணமாக ஆட்டோ ஓட்டிகள் எல்லோரும் க்விதை மாதிரிக்கு இரண்டு வரிகளை முதுகுப்புறம் எழுதிக்கொண்ட ஆட்டோக்களை ஓட்டுகிறார்கள்.சில வாசகங்கள் கனமான சிந்தனைக்கு இடம் அளிக்கவே செய்கின்றன.தமிழ் நாட்டில்தான் இப்படி.வேறு மாநிலங்களில் இது மாதிரிக்குப் பார்க்கமுடியவில்லை.மக்கள் போராட்டங்களில் தொழிற்சங்க இயக்கங்களில் இது போல் கவிஞர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுதி ஓங்கி ஓங்கி முழக்குகிறார்கள்.கவிஞர் பழமலய் ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டங்களில் பயிலப்பட்ட அனேக கோரிக்கை முழக்கங்களை, நாடகக்கூறுகளை,கதைப்பாடல் ஒத்த செவிக்கு உவந்த வரிகளைஅவற்றின் இலக்கிய ஈர்ப்புகண்டு ‘நாங்கள் பாடினோம்’ என்னும் ஒரு நூலாக வெளிக்கொண்டுவந்தார்.இந்த வகையில் போஸ்டர் எழுதி அவைகளை பிரதான வீதிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கும் ஒரு சாதாரண தொழிலாளியின் சமூகப்பிரக்ஞையை வெளிக்கொணரும் சிறுகதையாக ‘சுவரொட்டி’ யை பாவண்ணன் எழுதியிருக்கிறார்.ஆனந்தவிகடனில் வெளிவந்த சிறந்த சிறுகதை இது.சிறுகதைகளூடே கூர்மையான விமரிசனங்களைச்செறுகி எழுதும் சமூகப்பொறுப்பும் பாவண்ணனிடம் இருப்பதை அனேக இடங்களில் காணமுடியும்.
‘இந்த நாட்டுல கெட்ட வார்த்தங்க பேசுறதுல ஒரு போட்டி வச்சா,போலீஸ்காரங்களுக்குதான் மொத மெடல் கெடைக்கும்’ என்று சவமாகக்கிடக்கும் அந்த பெரியப்பா என்னும் ஒரு சுவரொட்டி தயாரிக்கும் தொழிலாளி சொன்னதுவாகக்குறிப்பிடுகிறார்.
‘மருந்து’ என்கிற தலைப்பில் எழு தப்பட்டுள்ளது அடுத்து ஒரு கதை இந்தக்கதை, எளிய மனிதர்கள் படும் இன்னல்கள் அவைகளுக்கு இடையேயும் அவர்களின் ஒளிரும் மானுட நேர்மையை அழகாகப்படம் பிடிக்கிறது.பாவண்ணனுக்கு இயல்பாகவே அந்த மனிதர்களோடெல்லாம் நிறைந்த அனுபவங்கள் இருப்பதை அவர்தம் படைப்புக்களில் காணமுடிகிறது.பக்கத்திருப்பவர் துன்பம் அதைப்பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியாத எத்தனையோ மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களின் இருப்பை கதைகள்வழி கொண்டு நிறுவும் இந்த படைப்பாளி மனித நம்பிக்கையை வளர்த்தெடுக்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொள்கிறார் ஒரு .மனிதர் சக மனிதர் கொள்ளும் அந்த நம்பிக்கை புனிதமான ஒன்று.
இந்தக்கதையில் வரும் தாத்தா ஒரு நாட்டு மருத்துவர்.அவர் ஒரு சமுதாய மருத்துவரும் கூட.’இவன மொதல்ல மனுஷனாக்கனும்.அதுக்கப்புறம்தான் மருந்து தரணும்’ என்கிற அவரின் வார்த்தைகளின் பாவண்ணனின் அடிமன வார்த்தைகள்தான். ஒருவரின் வியாதியை வைத்து பணம் எவ்வளவு ஈட்டுவது என்கிற ஈன வணிகக்கலை(?) பித்தாய்ப்பிடித்து ஆட்டுகிற அந்த மருத்துவத்தொழில் அல்ல இது.
மருத்துவர் தாத்தாவின் அணுகுமுறையில் எப்போதும் ஒரு விசித்திரம் இருக்கும்.’இந்த வேலிய தாண்டி உள்ள வந்துட்டா அது யாரா இருந்தாலும் அவுங்க நோயாளிங்க.அவுங்க நோய்க்கு மருந்து குடுக்கறது நம்ம கடமை,புரிஞ்சிதா?’என்கிற கம்பீரம் வாசகனைச்சிந்திக்க வைக்கும் அழகுச்சொல்லோவியம் பாவண்ணனின் இந்த மருந்து.. 
ஏதோ ஒரு மருந்து வாங்க மாணிக்கத்திடம் க்கொடுத்தனுப்பிய பணத்தை அது தேவைப்படாததுவாய்போய்விடவே அதனை நாணயமாக ஆனால் சற்று தமதமாக திரும்பவும் ஒப்படைக்கிறான். அதற்குள்ளாகவே அந்த மாணிக்கம் ஊர் திரும்பும் காலம் கூடிப்போனது. அது எப்படி எப்படி எல்லாமோ எளிய மனிதர்களை ப்பற்றித் தப்புதப்பாகக்கணக்குப்போடவைக்கிறது.
குடிப்பழக்கம் என்கிற நோயிலிருந்த மீட்ட மருத்துவர் தாத்தா மட்டும் அந்த மாணிக்கத்தின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்.நம்பிக்கை வீண் போகவில்லை. மீள்பயணத்தின் போது நிகழும் சில சமூகப்பிரச்சனைகள் அதுவே அவன் காலதாமத ஊர் திரும்புவதற்குக் காரணம் என்பதை அழகாகச்சொல்கிறது அந்த மருந்து என்னும் கதை.பாவண்ணனுக்கு நாட்டு வைத்திய சிகிச்சை முறைகளிலும் ஆழமான விஷயங்கள் அத்துப்படி என்கிற புதிய செய்தியையும் நமக்குச்சொல்கிறது..
படைப்பாளி என்பவனுக்கு பறவைகள் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு.அவை மனிதர்க்குச்சுதந்திரத்தை அறிவிப்பதாக அவன் உணருகிறான்.நினைத்த மாதிரிக்கு எல்லாம் அவை தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிடுவதாக என்ணுகிறான்.அவை தமக்கு பிடிபடாத எதனையோ சொல்லி நிற்பதாக அனுபவப்படுகிறான்.
வால்மீகி ஒரு பார்த்துவிட்ட குயில். அது அவனை மாகாவியம் எழுத வைத்தது.மயிலும் குயிலும் ஞானிகளின் தத்துவ அலசல்களில் தப்பாமல் இடம் பெறுகின்றன.அருணகிரியாருக்கும் கிளிக்கும் ஒருதொடர்பு. சுகப்பிரம்மத்தின் கிளிஉரு என அடுக்கிக்கொண்டே போகமுடியும். இலங்கை அரசன் ராவணன் சீதையைத்தூக்கிச்சென்றபோது சண்டையிட்ட சடாயு அறச்சீற்றம் எத்தனைப்பெரிய விஷயம்.
ஆங்கிலக்கவி ஷெல்லிக்கு அந்த வானம்பாடி,தமிழ்பாரதிக்கு ஒரு குயில் இன்னும் இந்த ரகத்தில் எத்தனையோ.தி.ஜானகிராமன் தன் நாவல் செம்பருத்தியில் எத்தனையோ பறவைகளின் விவரத்தை வாசகனுக்கு அள்ளி அள்ளி போடுவார். சொக்கிப்போவான் வாசகன்
.பாவண்ணனை கிளி அசைத்துப்பர்க்கிறது.பாவண்ணன் தன் கவிதைகளில் பறவையை மரத்தை நீர் நிலையை தொடாமல் அதனை முடித்துவிடமாட்டார். அப்படி ஒரு ஈர்ப்பு.இயற்கை த்தாயின் சித்திரங்கள் ஒரு படைப்பாளியை கிறங்கவே வைக்கின்றன.இந்தக்கதைத்தொகுப்புக்குத்தலைப்பாக வந்த கதை ‘பச்சக்கிளிகள்’.கதையில் வரும் முத்துசாமி என்பானுக்கும் கிளிகள் கூட்டத்துக்கும் அத்தனை நெருக்கம்.அவனை கிளிகள் சுற்றி சுற்றி வருகின்றன.கொஞ்சுகின்றன.அந்தக்காட்சி பார்ப்போர் அனைவருக்கும் விந்தையாக அரிய விருந்தாக மாறி நிற்கிறது.பாவண்ணனின் வருணனை அக்காட்சியை அப்படியே கண் முன்னே கொண்டு வருகின்றது.
‘என் இதயம் என்றுமில்லாதபடி வேக வேகமாகத்துடித்தது.பறப்பத்போல கையும் காலும் பரபரத்தன.மரத்தின் மீது தாவி,வானத்தை நோக்கித்தாவியப்படியே மேக மண்டலத்தின் மீது தாவிப்பறப்பது போல உல்லாச நினைவுகள் பொங்கி பொங்கி எழுந்தன.எந்த நிமிடத்திலாவது கண்ணுக்குத்தெரியாமல் அவை பறந்துவிடுமோ என்ற பதற்றத்தில் கிளிகள் மீது வைத்த பார்வையை எடுக்க யாருக்குமே மனம் வரவில்லை.முத்துசாமி அண்ணன் அந்தக்கிளிகளைத்தொட்டுத்தூக்கினார்.அவற்றின் சிறகுகளை வருடிக்கொடுத்தார்.கொஞ்சினார்.பறக்கவிட்டுப்பிடித்தார்.கன்னத்தோடு ஒட்டவைத்துக்கொண்டு முத்தமிட்டார்.’ இவை அத்தனையும் கதாசிரியன் தனது அனுபவமாக இருக்க விழைவதையே வாசகன் அனுமானிக்க நேர்கிறது.
பறவைகளில் அந்த பச்சைக் கிளி. அதன் நாவை அன்றோ கலைவாணி இருப்பிடமாய்க் கொண்டாள். மாகவி பாரதியார் தனது வெள்ளைத்தாமரை பூவினில் இருப்பாள் பாடலில் இப்படிச் சொல்லிச்செல்வார்.வைணவ இறைமகள் ஆண்டாளுக்கும்,இறைவி மீனாட்சித்தாயுக்கும் பச்சைகிளியோடு எத்தனையோ பந்தம்.நாம் அறிந்த்வைதாம்.
‘கண்காணிப்புக்கோபுரம்’ என்னும் அடுத்த ஒரு சிறுகதைத்த்குப்புக்கு வருவோம்..பதாகை.காம் குறிப்பிட்டுள்ள பாவண்ணன் குறித்த ஒரு விவரணையை இந்த க்கதைதொகுப்பின் பின் அட்டை தாங்கி நிற்கிறது.அற்புதமான ஒரு இலக்கிய அளவுகோலின் துல்லிய கணிப்பு. அந்தப் பதாகையாருக்கு நன்றி சொல்லியாகவேண்டும். 
‘உருமாறும் ஊரின் ஒவ்வொரு முகங்களையும் தொடர்ந்து கவனித்து பதிவு செய்வதுதான் அவர் பாணி’என்று குறிப்பிடும் பதாகை.காம் அவருக்குப்பெருமை கூட்டி நிற்கிறது.மறைந்த அன்பர் கு.அழகிரிசாமிக்கு இந்தத்தொகுப்பை பாவண்ணன் சமர்ப்பணம் செய்துள்ளார்.சிறுகதைஉலகில் அழகிரிசாமியின் மரியாதைக்குரிய பணியை நாம் எங்கே மறப்பது.எளிய மனித மனங்கள் அழகிரிசாமிக்கு எழுத்துக்களம்.பாவண்ணனுக்கும் அப்படித்தான்.எளிய மனிதர்களின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டிக்கொள்ளாத சொற்கட்டுக்களில் கோர்த்து க்கோர்த்து த்தமிழ் ச்சிறுகதைக்கு வளம் கூட்டியவர் பாவண்ணன்.
கண்காணிப்புக்கோபுரம்:
இந்தத்தொகுப்பில் முதல் கதை’கண்காணிப்புக்கோபுரம்’.அதுவே தொகுப்பின் பெயராக வந்துள்ளது. கண்காணிப்புக்கோபுரத்தின் பணியாள் அஜய்சிங்கா.அவனைப்பற்றிய சிறுகதை இது.அவன் ராணுவத்தில் சிப்பாய்.அங்கே நிகழும் அடக்குமுறைகள் குறித்து விவரமாய்ப்பேசுகிறது கதை.’மானம்,மரியாதை,கோபம்,ரோஷம் எல்லாத்தையும் காத்துல பறக்கவுட்டாதான் ராணுவத்துல சிப்பாய வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது.’கசப்பான அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம் ராணுவத்தில். பொதுவாக ஒரு ராணுவத்தின் செல்நெறி அப்படி.
‘ஒரு நாளு துணிய உதறி கொடியில காயபோடும்போது அந்த ஈரம் தோட்டத்துப்பக்கமா மேஞ்சிட்டிருந்த அவுங்க வீட்டு நாய் மேல பட்டுட்து.உடனே மேடம் கீழே கெடந்த கம்பிய எடுத்தாந்து என் தோள்பட்டையிலயும் முதுவுலயும் அடியடின்னு அடிச்சிட்டா.அப்ப வாங்குன அடியில முதுகுத்தோல் கிழிஞ்சிட்டுது.ஆஸ்பத்திரியில போட்ட தையலோட தழும்புதான் அது’. என்றுசொல்லும் சிங்கா இந்திய ராணுவம் பற்றி நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறான்.
‘சிலிகுரி ராணுவ முகாமில் வேலை செய்துகொண்டிருந்தவனை அவன் மேல் அதிகாரி தன்னுடைய காலணியைத்துடைக்கச்சொன்ன வேலையைச்செய்ய மறுத்த ஒரே காரணத்துக்காக கீழ்படிய மறுத்தவன் என குற்றம் சுமத்தி இந்த குன்றிலிருந்த முகாமுக்கு மறு நாளே மாற்றிவிட்டதாகச்சொன்னான்.கசப்பான எத்தனையோ விஷயங்கள் ராணுவம் என்னும் குடையின் கீழ் தம்மை மறைத்துக்கொண்டு இருக்கவே செய்கின்றன.அந்த அப்பாவி ராணுவ சிப்பந்திக்கு மூன்று பெண் குழந்தைகள்.’பெரிய பொண்ணு டாக்டராவணும்.நடு பொண்ணு வக்கீலாவணும்.சின்ன பொண்ணு டீச்சராவணும்.நடக்குமா தோஸ்த்?’ என்கிற அவன் மன விருப்பத்தைக் கதாசிரியனோடு பகிர்ந்துகொள்கிறான்.இப்படி எளிமையை எதார்த்தத்தை மனவலியை மானுட ப்பிரியத்தை வாசகனுக்கு தெரிவித்து ஒரு நிறைவு பெறுதல் பாவண்ணனுக்கு இயல்பாக அமைந்த எழுத்தாளுமை.
‘அன்னபூரணி மெஸ்’ என்னும் அடுத்த சிறுகதை. பாவண்ணனின் எழுத்து இங்கே மலராய் விரிகிறது.கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்ட அந்த ஒரு மெஸ் முதலாளி. அவரோ உழைதுப் பாடு படுவோருக்கு காசு கணக்குப்பார்க்காமல் உணவளித்து மெஸ் நடத்துகிறார்.அங்கே வேலை செய்யும் ராஜாராமன் என்னும் நல்ல ஊழியனும், காசு மட்டுமே பிரதானமாய் தீய தொழில்கள் பல செய்யும் பாலகுருவும் சந்திக்கிறார்கள்.தங்குவதற்கு அறை கேட்டு த்தேடிவந்த பாலகுருவுக்கு நல்லது சொல்லி திருத்த முயலும் அவன் தானே கெட்டு சீரழியத்தொடங்கி அறையைவிட்டு சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போகிறான்.நிர்கதியாக அந்த அறையில் விடப்பட்ட கெட்டவன் பாலகுரு ராஜாராமன் வேலை பார்த்த அந்த அதே அன்னபூரணி மெஸ்சில் வேறுவழியே இல்லாமல் வேலைக்குச்செல்லுகிறான்.
‘பணத்தால சம்பாதிக்கிற மரியாதை பணமில்லாம போனதும் படுத்துடும்.தண்ணியில்லாத செடி மாதிரி.ஆனா நம்ப பண்பால சம்பாதிக்கிற மரியாத எப்பவும் பன மரம் மாதிரி நெலச்சி நிக்கும்’ இப்படிப்பேசிய ராஜாராமன் காலியாகக்கிடக்கும் பாலகுரு அருந்திய அந்த மது பாட்டிலை எடுத்து தன் நாவில் சொட்டவிட்டு ருசி பார்க்கிறான்.பாலகுருவின் உடுப்புகளில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு அவன் கைப்பேசியையும் பர்சையும் திருடிக்கொண்டு அந்த பாலகுருவின் கைப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பிவிடுகிறான்.தீயவை தீய பயக்கவே எப்போதும் காத்திருக்கும். தீமைகள் எப்போதும் சுறுசுறுப்பு கூடியவை. விதி வசமாகிய ராஜாராமன் தடம் இறங்கிப்போகிறான்.
ரூம் தேடி வந்த பாலகுருவோ சூழ் நிலைக்கைதியாகி அதே அன்ன பூரணி மெஸ்ஸில் வேலைக்கு சேர்கிறான்.மெஸ்சில் வியாபாரம் இப்போது ஓகோ என்று ஆகிவிட அவன் கை ராசிக்காரன் என்ற பெயர் வாங்குகிறான்.மெஸ் முதலாளியின் பாராட்டுச் சொற்கள் அவனை ஒரு ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வேலையில் சேர்ந்த ஒருவாரமாக’ பணம் பணம் ‘என்று முன்பு சதா நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பழைய பாழ் மனம் இப்போது எங்கோ போய்விட்டது.
மனித மனங்கள் படும் பாட்டை எழுத்துச்சித்திரமாய்க்கொண்டு வாசகனைக் கிறங்கவைக்கிறார் பாவண்ணன்.ஆனந்த விகடனில் பிரசுரமான அழகுக்கதை இது. மனிதர்கள் உயரிய பண்போடு வாழ்தலையும் பண்பைத்தொலைத்துவிட்டு அதன் மதிப்பு தெரியாமலேயே வாழ்க்கையில் உழன்று உலா வருவதையும் சிக்கலே இல்லாமல் எடுத்து வைக்கிறார்.
அடுத்துவரும் சிறுகதை’வைகுண்ட ஏகாத்சி’.வைகுண்ட ஏகாதசி அன்று உயிர்விடும் ஒரு பெண். அந்த இறப்பு வீட்டு அமர்க்களங்கள் அவலங்கள் அனுசரிப்புக்கள் தெருவில் சாதாரணமாக ஒரிடம் சென்று வருவதற்கும் இடையூறாக அமைந்துவிடுகிறது.மனித மனம் தன் சக உயிர் ஒன்றின் இறப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.அதுவோ தனக்கும் நேர க்காத்திருக்கும் ஒன்று. மனித அறிவுக்குப்புரியாத விஷயம் புலப்படாத புதிர் அது.எப்படி இங்கு வந்தோம் எங்கு ஒரு நாள் போவோம் என்பது தெரியக்கூடிய எளிய விஷயமா என்ன?.
பாவண்ணன் அதனை எல்லாம் அசைபோட்டுக்கொண்டேதான் கதையை எழுதிக்கொண்டு போகிறார்.தான் சிறுவனாக இருந்த போது ஒரு சுடுகாட்டு வெட்டியான் ஒருவனின் தொடர்பும் தோழமையும் எப்படி இருந்தது என்பதனை ச்சொல்ல இந்தக்கதையைக்களமாக்குகிறார்.
அந்த குப்பாண்டி தாத்தா சுடுகாட்டுல பொணம் சுடுறவர் என்கிறார் கதைசொல்லி.
ஒரு பிணம் எரிக்க ரூபாய் நூறு தனக்குக்கூலியாக வேண்டும் என்பதில் கவனமாக கறாராக இருந்த குப்பாண்டி சுடுகாட்டுக்குப்பக்கத்திலிருக்கும் சினிமாக்கொட்டகை தீப்பிடித்து எரிந்து நூற்றுக்கணக்கில் அரைகுறையாக எரிந்து நாறிய பிணங்கள் தான் பணி ஆற்றும் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது நெஞ்சம் குமுறுகிறார். மெய்யான குப்பாண்டியை வாசகன் சந்திக்கிறான்.ஊர் கணக்குப்பிள்ளை பத்தாயிரம் ரூபாய் வசூல் செய்து ஒரு மேற்துண்டில் அதனை மூட்டையாய்க்கட்டி எடுத்து வருகிறார்.குப்பாண்டியைப்பார்க்கிறார்.’கொறவோ நெறவோ மனசு நோவாம நீ வாங்கிக்கனாதான் எங்களுக்கு நிம்மதின்னு சொன்னாரு கணக்கு புள்ள.என்கிறார் கதை சொல்லி.
குப்பாண்டி கணக்குப்பிள்ளையிடம் இப்படிப்பேசுகிறார்.’என்னிய என்ன கூலிக்கு வேல செய்ற ஆளுன்னு மட்டும் நெனச்சிட்டியா? நான் என்ன மனசாட்சி இல்லாத ஆளா, செத்தவங்கள்ளாம் ஒனக்கு அம்மா,அப்பா,அப்பா,அக்கா,தங்கச்சி,பேரன் பேத்தி மொறன்னா எனக்கும் அந்த மொறைதான் சாமி.இன்னும் என் ரத்தத்துடிப்பு அடங்கல.செத்தவங்களுக்கு செய்ய கடமைப்பட்டவன் நான்.எங்கிட்ட எதுவும் பேசாத ,போயிடுசாமி.போயிடு.காசி பணம்லாம் ஒண்ணும் வேணாம் ,போயிடுன்னு அழுதுகினே சத்தம் போட்டாரு.கணக்குப்புள்ளயால ஒரு வார்த்த கூட பேசமுடியவிலை அப்படியே செலயாட்டம் நின்னுட்டாரு.யாரோ ஒருத்தவங்க அவருக்கு பதிலா பேச போனாரு.கணக்குப்புள்ள அவரு கைய புடிச்சி தடுத்துட்டு வாங்க போவலாம்னு திரும்பி எல்லாரயும் கூப்ட்டுக்னு போயிடாரு.’
கார்கில் யுத்தத்தில் இறந்துபோன ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கி காசு சம்பாரித்த கோட்டும் சூட்டும் போட்ட நெட்டை மனிதர்கள் குப்பாண்டி முன் சுருங்கித்தான் போவார்கள். இங்கே நம் எதிரில் சுடுகாட்டுக்கொட்டகைக்குக் கூரை வாங்கியதில் சுருட்டிக்கொண்ட பெரிய மனிதர்களும் குப்பாண்டி முன்னே தப்பமுடியாது. ‘உண்மையிலேயே பெரிய மனுஷந்தான் அந்த தாத்தா’. பாவண்ணனின் குப்பாண்டி நம் நெஞ்சத்தை க்கொள்ளை கொண்டு விடுகிறார்.எழுத்து நிலை பெற்று நிற்கிறது.
‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ இந்த த்தொகுப்பில் சிறப்பாக க்காணப்படும் கதை.தினகரன் தீபாவளி மலர் 2015ல் இக்கதை வெளிவந்து இருப்பதை அறிய முடிகிறது.செத்துவிட்ட பழனி அண்ணனைப்பற்றிப்பேசும் கதை.பழனி அண்ணன் சோகமாய் இறந்து போகிறார். கதைசொல்லியின் மனம் இதை ஒப்ப மறுக்கிறது.ஏரிக்கரையின் பக்கம் போகும்போதெல்லாம் கதைசொல்லியை’அமைதியான நதியினிலே ஓடம்’ பாட்டு பாடச்சொல்வார் இறந்துபோன பழனி அண்ணன். அந்த பழனி அண்ணன் தன் கண்களை மூடிக்கொண்டு இந்தப்பாட்டைக்கேட்பார்.அவர் முகம் அப்போது கனிந்திருக்கும்.தன் தந்தைக்கும் பிடித்த பாட்டு இது என்பார் பழனி அண்ணன். பழனி அண்ணனின் அந்தத் தந்தையும் கூட அருகில் எங்கோ அமர்ந்து இருந்து இந்தப்பாட்டை கேட்டுக்கொண்டு இருப்பாரோ என்றும் தோன்றும் என்கிறார் பாவண்ணன். 
மரமும் செடியும் ஏரியும் ஆறும் பாவண்ணனுக்கு மிகப்பிடித்த இடங்கள்.தன்னுடைய பிறந்த ஊர் தொடும் தென்பெண்ணையாக இருந்தாலும் சரி, பிழைப்புக்கு வந்த கர்நாடகாவில் பாய்ந்து ஓடும் துங்கபத்திரையானுலும் சரி பாவண்ணனுக்கு அவை உயிர் ஓட்டமுள்ள நதிகள்.அவை அவரோடு உறவாடுபவை.சம்பாஷிப்பவை.
‘மரத்த பாக்கறன்,செடிய பாக்கறன்னு இட்ட வேலய மறந்துடாதடா.மொதல்ல ஒட்டட கோல எடுத்துகினு தென்னந்தோப்பு ஊட்டுக்கு போயி ஒட்ட்ட அடிக்கற வேலயபாரு.சுண்ணாம்பு அடிக்கற ஆளு பத்துமணிக்குலாம் வந்துருவாங்கன்னு ஒங்கப்பா சொன்னத மறந்துட்டியா?’ அம்மாவின் சொற்கள் வழியாக அப்பாவே பேசுவதுபோல இருந்தது.நாக்கைக் கடித்தபடி அம்மாவைப்பார்த்து தலையசைத்துக்கொண்டே ஒட்டடைக்கோலுடன் வீட்டைவிட்டு வெளியே நடந்தேன் என்கிறார் கதை சொல்லி.
.பழனி அண்ணன் நட்டுவிட்டுப்போன முருங்கைக்கொம்பு முளைவிட்டு நிற்பதைக்கண்டு ப்பரவசமடையும் அந்தக்கதை சொல்லி,முருங்கையின் தளிர்கள்’ கூட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் குருவி குஞ்சுகளின் அலகுகள்போல அவை குவிந்திருந்தன’ என்று சொல்கிறார்.என்னே அற்புதமான உவமை.
பழனி அண்ணன் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு பாதி உடல் சிதைந்து கிடப்பதை நோக்கி’வெட்டிச்சாய்த்த வாழை மரமெனக்கிடந்தார்’ என்று எழுதுகிறார் பாவண்ணன்.’கையில கேள்வித்தாளை வாங்கனதுமே அடுப்புல ரசம் கொதிக்கற மாதிரி மூள கொதிக்க ஆரம்பிச்சுடும்’ என்று தொடங்கி ‘கண்ணா மூச்சி ஆட்டத்துல புள்ளங்கள்ளாம் ஓடி ஒளிஞ்சிக்கும் தெரியுமா அந்த மாதிரி ஒவ்வொரு பதிலும் மனசுக்குள்ளயே ஓடி ஒளிஞ்சிக்கும்’என்று சொல்லிக்கொண்டே போகிறார்.அந்த ப்பழனி அண்ணன் ஒரு மரத்தில் சாய்ந்தபடி நிற்பார்.எதிரே புல் தரை.அதன் பச்சை பசுமை.அதன் மீது ஒரு மைனாக்குருவி தன்னந்தனியா நடந்து செல்கிறது. அப்போது அதனை நோக்கும் பழனி அண்ணன் மௌனத்தில் மூழ்கிவிடுவார்.காட்சிகளைக் கண்முன்னே நிறுத்தி பழனி அண்ணனை நம்முடன் பரிச்சயப்படுத்தும் பாவண்ணன் வென்று விடுகிறார்.
ஒரு வழியாக இப்படித் தீர்மானிக்கலாம்.
‘வயசுல மனசு காக்கா மாரி நாலு பக்கமும் அலைபாயத்தான் செய்யும்,இல்லைன்னு சொல்லல.ஆனா நாமதான் கட்டுப்படுத்திக்கணும்.கட்டுப்படுத்தலன்னா நமக்கும் மிருகத்துக்கும் என்னாங்க வித்தியாசம் இருக்குது? கடவுள் அமைத்து வைத்த மேடைச்சிறுகதையில்இப்படிப்பேசும் எழுத்துக்கு எத்தனை எளிமை,எத்தனை உறுதி,எத்தனை பரிவு. எத்தனை ஆழம். பாவண்ணனின் எழுத்துக்களில் நேர்ப்படப்பேசும் அறம் தப்பாமல் ஓங்கி நிற்கும்
.பாசாங்குத்தனம் பயின்று -அறியா எழுத்துக்கள் அவை. அன்பின் மிகுதியால் வாசகனின் மனத்தோடு பேசுபவை.சமூக அக்கறை தொனிக்கும் இந்தக் குரல் பாவண்ணனின் எந்த படைப்பிலும் அடி நாதமாய் வெளிப்படும். அடக்கமாய் சொல்லவேண்டியதை அது வாசகனுக்குச் சொல்லி த்தன் கடமை முடிக்கும்.
————————————-

 

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 9தனிமொழியின் உரையாடல்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    valava duraiyan says:

    எஸ்ஸார்சி மிகச்சிறப்பான ஆய்வு எழுதியிருக்கிறார். சபாநாயகம், எமிலி, பழமலை, தி.ஜா போன்ற பெரிய ஆளுமைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி இருப்பது நன்றாக உள்ளது. அவர் காட்டிய கதைகள் எல்லாமே பாவண்ணனின் மனிதநேயத்தை உணர்த்துகின்றன. கட்டுரையைப் பத்தி பிரிக்காதது படிக்கக் களைப்பூட்டுகிறது

Leave a Reply to valava duraiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *