புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி

This entry is part 20 of 25 in the series 15 மார்ச் 2015

புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
=================================================ருத்ரா

மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று
தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த “பல குரல்” மங்கையோ அவனை படுத்தியபாடு இருக்கிறதே! அம்மம்ம!
இதோ படியுங்கள்.

புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
==================================================ருத்ரா

கொடு சினை வேங்கை நுண்தாது தூஉய்
மடிஅவிழ் கல்முனை கதிர் கொடு விழிப்ப‌
இரவின் நெடுங்குறி ஒல்லென மாய‌
அடுமனைப் பாகர் ஆங்கு அவிர் செத்தென‌
பொறி இணர்ப் பொன்பூ அடர்மணிக்குன்றன்
அளியன் ஆகி நோதல் என்னோ?
பொறிப்புள் அன்ன மென்குரல் சீர்க்கும்
வரிப்புள் அன்ன நீள்குரல் காட்டும்
குருகு முரல அதிர்சிறை ஆர்ப்ப‌
உருகு கனைகுரல் உரூஉம் என்றிமிழ‌
சில் ஓதை புல்லென இழிய‌
வெள்ளிடை கீறிய மணிநீர் அருவி
பாசடை மூசும் பளிக்கின் இழையில்
பண்ணிய யாழ ஒரு குரல் கேட்கும்.
மாந்தளிர் அன்ன நடு நா நடுங்க
மறைப்புள் குரலோ! மயங்கினன் மன்னே.
புள் சிமிழ்த்த வேட்டுவன் அம்பு ஆகினளே
புண் உமிழ் நெஞ்சின் குருதி குமிழ‌
கண் பிழி துஞ்சல் காணா மையிருள்
கலங்கினன் ஆங்கு கதிர் பிலிற்றுக் குன்றன்
புள்மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
கள்ளிய குரலின் பொய்த்த குறியால்.

===================================================

புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
==================================================ருத்ரா
(பொழிப்புரை)

கொடு சினை வேங்கை நுண்தாது தூஉய்
மடிஅவிழ் கல்முனை கதிர் கொடு விழிப்ப‌
இரவின் நெடுங்குறி ஒல்லென மாய‌
அடுமனைப் பாகர் ஆங்கு அவிர் செத்தென‌
பொறி இணர்ப் பொன்பூ அடர்மணிக்குன்றன்
அளியன் ஆகி நோதல் என்னோ?

வளைந்த வேங்கை மரத்துக்கிளையின் நுண்ணிய பூந்துகள்கள்
தூவிப்பரவ மலைமுகடு தூக்கம் விழித்தாற்போல் வெளிச்சக்கதிர்
வீச இரவெல்லாம் தலைவி அங்கே இரவுக்குறி காட்டிய இடத்து
வருவாள் என்று காத்திருந்த தலைவனோ அவள் குறி ஏதும் காட்டாது கண்டு
நோதல் உற்றான்.அடுமனையில் சோறு கொதிப்பது போல் உள்ள ஒரு
வெம்மைத்துன்பதில் வெந்தது போல் ஆனான்.அந்த இரக்கத்துக்குரியவன்
எப்படிப்பட்டவன் தெரியுமா? பொன் போன்ற மற்றும் புள்ளிகளோடு
எழில் குலுங்க விளங்கும் பூங்கொத்துகள் அடர்ந்த மலைநாட்டுத் தலைவன்.
அவன் இப்படி துன்பம் கொள்ளல் தகுமோ?

பொறிப்புள் அன்ன மென்குரல் சீர்க்கும்
வரிப்புள் அன்ன நீள்குரல் காட்டும்
குருகு முரல அதிர்சிறை ஆர்ப்ப‌
உருகு கனைகுரல் உரூஉம் என்றிமிழ‌
சில் ஓதை புல்லென இழிய‌
வெள்ளிடை கீறிய மணிநீர் அருவி
பாசடை மூசும் பளிக்கின் இழையில்
பண்ணிய யாழ ஒரு குரல் கேட்கும்.

ஆனால் அந்த அடர்ந்த காட்டிலிருந்து புள்ளிகள் நிறைந்த பறவைக‌ளின்
குரல் போன்ற ஒரு மென்குரல் அங்கு நிலைநின்று கேட்கும்.வரிகள் உள்ள
பறவைகளின் குரல் போன்ற நீள் ஒலிகள் கேட்கும்.நாரையின் குரல் முனகலும்
அதன் சிறகடிப்புகளும் கூட‌ கேட்கும்.எங்கோ ஒரு பாழ் இடையில் பிளந்து கொண்டு
மணித்திரள் ஒலிக்க விழும் அருவியும் ஓசை தரும்.இலைகள் போர்த்திய அவ்விடத்தில்
அந்த கண்ணாடிபிழம்பு இழையாகியது போல் நெளிந்து ஓடும் அருவி
ஒரு இனிய பண்ணை யாழிசைத்தது போலும் கூட ஒரு குரல் கேட்கும்.

மாந்தளிர் அன்ன நடு நா நடுங்க
மறைப்புள் குரலோ! மயங்கினன் மன்னே.
புள் சிமிழ்த்த வேட்டுவன் அம்பு ஆகினளே
புண் உமிழ் நெஞ்சின் குருதி குமிழ‌
கண் பிழி துஞ்சல் காணா மையிருள்
கலங்கினன் ஆங்கு கதிர் பிலிற்றுக் குன்றன்
புள்மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
கள்ளிய குரலின் பொய்த்த குறியால்.

மாவிலைகள் மறைவில் குயில் ஒன்று மாந்தளிர் போன்ற அதன்
தொண்டையின் நடுவிலிருந்து நீட்டும் நாவு நடுங்க நடுங்க இசைக்கும் குரலோ அது!
தலைவன் மயங்கிக்கலங்கினான்.தலைவி தலைவனை சந்திக்க நாணம் கொண்டு
மறைந்திருந்து பலப்பல புள்ளின் பல்குரல் ஒலித்து ஒரு வேடனைப்போல்
பறவைஒலி காட்டி (புள் சிமிழ்த்து..மிகிக்ரி செய்து) மாயம் செய்கிறாள்.
அந்த வேடனின் கள்ள அம்பு போல் (அக்குரல்கள் போல்) ஆகினாள் தலைவி.
அதனால் அம்பு பட்டு தைத்து புண் ஆகி குமிழியிட்டு குருதி வடியும் நிலைபோல்
துயருற்றான் தலைவன்.விடிய விடிய தூக்கம் வராத நிலையில் கண்ணை கசக்கி கசக்கி
அந்த நள்ளிரவில்கலங்கினான். கதிரவன் தன் ஒளியால் மலையில் “வெளிச்சச்சிதறலை”
படர்வித்தான்.அந்த மலையின் மன்னனோ ஒளி பொருந்திய நெற்றிய உடைய தலைவியின்
“பறவை மொழி” ஒத்த ஓசைவிளையாட்டுகளால் மற்றும் பொய்யான குறி காட்டுதலால்
இரவு முழுதும் பிரிவுத்துன்பத்தில் நைந்தான்.

Series Navigationஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடாஎழுத்தாள இரட்டையர்கள்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *