பூக்கொத்து

author
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 12 in the series 15 மே 2022

 

கடல்புத்திரன்

 


ஜீவாவிற்கு அம்மாவையும் , அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது . மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது . ஆனால் , கிராமத்தைப் போல வருமா ? . பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும் , செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது . சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள் . அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது . இங்கே இல்லை . என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ? , வடக்கு , கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்…..அரைவாசி பிரச்சனையே மாயமாகி மறைந்து விடுமே ! . இங்கேயும் மகிழ்ச்சியற்று வாழ வேண்டிய அவசியமும் இல்லையே . அங்கே , போரிற்குப் பின்னரான படை அமைப்புகளையே கலைத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் கிடக்கிறது . செய்வார்கள் எனப் படவில்லை . குற்றவாளிகளைக் கொண்டே ஆண்டுக் கொண்டு இருக்கப் போறார்கள் .
இன்று , பஞ்சம் , பசி என்றால் அனைவருக்குமே தெரிகிறது . மனிதர்களை மனிதர் நம்புறதால் , நம்பினால் தான் சிறந்த வாழ்வு கிடைக்கும் . அல்லா விட்டால் , வட்டிக்கு வாங்கிற கடன்களே ஏறிக் கொண்டே இருக்கப் போகிறது . பொலிஸ் , பயங்கரவாதி என்றே பார்க்கிற பார்வையால் ஒரு நிமிசம் கூட நிம்மதியாக வாழ முடியாத குழப்பம் நிலவினால் எப்படி தமிழரும் விவசாயம் செய்து அவர்களுக்கு உத முடியும் ?விவசாயத்தையும் , பொருளாதாரத்தையும் வளர விடாது ….படையினர் குதறிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் .

இங்கே மாமர நிழல் இல்லை ,கீச்சூ ,கீச்சு என்ற பறவைச் சத்தமில்லை , சுத்தமான நீர்,காற்று…சுகம் காண முடிகிறதா ? என்ன . ஒரு ஏலியன் குடியிருப்புக்குள் வந்து இருப்பது போல இருக்கப் போறார்கள் .நகரத்தின் புறப்பகுதியில் கொண்டா மாடிக்குடியிருப்பில் இருக்கிறான் . பெல்கணியை அடைக்கலாம் என்ற அனுமதி இருப்பதால் கண்ணாடியால் அடைத்து விட்டிருக்கிறான் . அதிலே திரைச்சீலையை இழுத்து விட்டு ஆசையுடன் இரவில் வானத்தையும் சாலையையும் பார்த்துக் பார்த்துக் கொண்டு நிற்பான் . விண்மீன்களைத் தான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை . அப்பாவிற்கு அதிலே சீலைக்கதிரையைப் போட்டு இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார் . ” அது என்னப்பா சீலைக் கதிரை ? ” என்று அவனுடைய வால் ஆறுமுகம் கேட்கிற போது ” அது ஈசிச்செயார் ” என்றான் . ஐஞ்சு வயசாகிற அவனுக்கு விளங்க மாட்டாதே …எனத் தோன்ற கையில் வைத்திருந்த அப்பிள் பலகையில் எடுத்துக் காட்டினான் . ” ஒரு பாடியோ கதிரை “. ஒன்லைனில் வாங்கலாம் தான் .உடைந்து விழுகிற அதற்கு விலை அதிகமாகவே போட்டிருந்தது . தமிழ்க்கடைகளில் குறைவாக இருக்கலாம் . கிராமத்தில் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறது .

பழைய அப்பாவை நினைத்துப் பார்த்தான் . பள்ளி ஆசிரியரான அவருக்கு அவனைக் கரிச்சுக் கொட்டுறதிலே பொழுது போய்க் கொண்டிருந்தது . அம்மாவும் பத்தாம் வகுப்பு தேறாதவர் . ” உன்னைப் போல அவனும் உருப்படியாக மாட்டான் ” என்பார் . அம்மாவிற்கு ‘சுள்’என கோவம் ஏறி விடும் . ” எடியே , இனப்பிரச்சனையில் அவன் படிக்கா விட்டால் ஆசிரியனாக கூட வர மாட்டானடி . பயமாக இருக்கிறதடி” என்பார் . அம்மாவிற்கும் யோசனை வந்து விடும் . அவனுக்கு பிறகு பபியும் , சுமியும் தேறத் தேற …சொந்ததிற்குள்ளே பேசி வர , கல்யாணம் நடக்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பறந்து போய் விட்டார்கள் . இவன் இயக்கத்திற்குப் போய் விட்டான் . கழுகு இயக்கம் அவன் இயக்கத்தின் மீதே முதலில் பாய்ந்தது . மண்ணிலே கடைசி வரையில் இருந்து போராடுவோம் . தமிழீழம் காணுவோம் ” என்ற கனவு உடைந்து போனது . இயக்கப் பெடியன் என்றால் வீடுகளில் மதிப்பில்லை . வேலையும் இல்லை என்றால் துப்பரவாக மதிக்க மாட்டார்கள் . அம்மா கவலைப்பட்டு அவருடைய உயிர்த் தோழியான அப்பாட தங்கை கற்பகத்திடம் ” என்ன செய்றது என்று தெரியல்லை ” என்று கரைந்து கொண்டிருந்தார் . அவருக்கு ரமேஸ், குகன் பெடியளும் ,சித்திரா…கடைசியும் . பெடியளில் மூத்தவன் கப்பலுக்கு போறது என்று போய் கனடாவில் இறங்கி , பிறகு குகனையும் எடுத்து விட்டிருந்தான் . அத்தை ” சித்திரா அவனுக்குத் தான்டி . கவலைப்படாதே ” என்று தேற்றினார் . ரமேஸ் ” இருவரையும் கொழும்புக்கு கூட்டி வாருங்கள். முகவர்களைப் பிடித்து எடுத்து விடுகிறேன் ” என்றான் . பதிவு அங்கே நடந்தது . இங்கே தான் கல்யாணம் நடந்தது . இவர்களும் வந்து விட்டார்கள் .

அவன் எளிதாக நினைத்து விட்டான் . தமிழ்க்கடை , ” விழுந்து போட்டால் ‘சூ’ பண்ணுவினம் என அதை யாருமே எடுக்கிறதில்லையே ” என்கிறது . பண்ணிப் போச்சுது . அவனுக்கு ஒன்லைனிலே வாங்க விருப்பமில்லை . பொறுத்துப் பார்ப்போம் . இல்லா விட்டால் ஒரு தச்சுக்காரனைப் பிடித்து மாதிரியை கீறிக் காட்டி சுயமாக செய்வது தான் ” தீர்மானம் எடுத்தான் . விடியிறதாவிருக்கவில்லை . என்ன செய்வம் என முளிக்கிற போதே கார் வானொலியில் ஒரு கடையிலே சீலைக்கதிரை இருப்பதாக விளம்பரம் போய்க் கொண்டிருந்தது .உடனே அலைபேசியில் அழைத்தான் . ” எங்கட ஊரிலே …இருக்கிறது தானே , இருக்கிறது ” என்று ஒரு பெண் பதிலளித்தாள் . விலையைக் கேட்டான் . அதே விலை தான் . நிச்சியம் விலைக்கேற்ற மாதிரி வித்தியாசமாகவே இது இருக்கும் எனப்பட்டது . அடுத்த நாள் வேலையால் வார போது போய் நேரிலே பார்த்தான் . இது சாய்வு கதிரையில் துணியைப் பொறுத்தி இருக்கிறார்கள் . மூன்று பேர் பிடித்தால் தான் …தூக்கவே முடியும் . எப்படியும் வாங்கத் தான் வேண்டும் . சித்திராவிடம் பேச வேண்டும் .அவள் கோப்பிக்கடை ஒன்றுக்கு பகுதி நேரமாக வேலைக்குப் போறவள் . கதைத்தான் . அவள் ரமேஸுக்கு கை பேசியில் அழைத்தாள் . அவன் ” சனிக்கிழமை நேரம் இருக்குமா ? ..கேட்டுச் சொல்” என்றான் . அரைநாள் வேலைக்குப் போறவன் விடுப்பு எடுக்க முடியும் . குகன் அவனுடனே நேரிலே கதைத்தான் . ” மச்சான் , ரமேஸ் ஒரு கறி கொண்டு வருவான் , நானும் ஒன்று , நீ பியரை வாங்கு …அப்படியே பார்ட்டியையும் கொண்டாடி விடுவோம் ” என்றான் உற்சாகமாக .

வெள்ளிக்கிழமை கடையிலே வாங்கிற பட்டியலை சித்திரா தந்தாள் . விஜய்ட கடைசியாய் வந்த படமும் இருந்தது . அந்த வீடீயோக் கொப்பியையும் வாங்கிக் கொண்டான். காலையிலே இருவரும் குடும்பங்களுடன் வந்து விட்டார்கள் .சிறுசுகள் கூட்டுச் சேர்ந்து விளையாடத் தொடங்கின . சித்திரா , ரமேஸிட கனிக்கும் , குகன்ர விஜிக்கும் குட்டிச் சட்டை தைத்து வைத்திருந்தாள் . பிறகென்ன . இவர்கள் கதிரை வாங்கச் ரமேஸிட வானிலேயேச் சென்றார்கள் .அலைபேசியில் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் சரி பார்த்து பெட்டியை தயாராக வைத்திருந்தார்கள் . இவன் தன் கடனட்டையை நீட்ட குகன் மறித்து விட்டு ,” சித்திரா சீட்டுக்காசை எடுத்து தருவதாகச் சொன்னாள்”என்று தன் கார்ட்டிலே வாங்கினான் . வழியில் பியரையும் வாங்கிக் கொண்டார்கள் . வானொலி ஒருபுறம் பாட கதைத்துக் கொண்டே வந்து சேர்ந்தார்கள் . பாரம் . எலிவேற்றரில் ஏற்றி ஒருவாறு கொண்டு வந்து சேர்த்தார்கள் .

பெல்கணியிலே வைத்து கையிலே ஒவ்வொரு போத்தலுடன் பொறுத்தத் தொடங்கினர் . கேள்விகள் கேட்டதுகளை உள்ளே துரத்தி விட்டு …எல்லாம் முடிந்த பிறகு ” ராஜாதி ராஜா மாமா வாருங்கள் .பராக் , பராக் ” என குகன் அழைத்து வந்தான் . அம்மா அப்ப தான் பார்க்கிறார் . ” இது என்ன மாட்டான் கதிரையாய் இருக்கிறதே ?” என்கிறார் . ரமேஸ் ” இது தான் பாதுகாப்பானது அத்தை” என்கிறான் . அப்பா ” இது பராவாயில்லை ” என்கிறார் .

அன்று , கிராமக்கதையை விட அவர்கள் வேற ஒன்றும் கதைத்திருக்க மாட்டார்கள் . அப்படி கதைத்தார்கள் , கதைத்தார்கள்…கதைத்துக் கொண்டே இருந்தார்கள் .

தூங்கி வழியும் சிறுவர்களை தூக்கிக் கொண்டு செல்ல , அப்பாவும் தூங்கப் போய் விட்டார் . அம்மாவிற்கும் நித்திரை முளிப்பது சரி வராது . அவரும் போய் விட்டார் . சீலைக்கதிரை அவனை ” வா , வா ” என அழைத்தது . அதிலே போய் சரிந்தான் . சித்திரா சமையல் அறையில் …கழுறதை கழுவி வைப்பதில் , ஒழுங்கு படுத்திறது , குளிர்ப்பெட்டிக்குள் அடையிறதை அடையிறது… என இருந்தாள் . நாளை , அவள் விடுப்பு எடுத்திருந்தாள் . வேலைக்குப் போகப் போறதில்லை . விடுப்பு பேசுறதில் …அர்த்தம் முழுதாய் மாறி விடுகிறதே . தமிழும் வளமான மொழி தான் . தமிழ்ச் சொற்களை அறிய வாசிப்பைக் கூட்ட வேண்டும் . சீலைக்கதிரை வந்து விட்டது . சனிக்கிழமையை சிவராத்திரியாக மாற்றலாம் . ஆனல் , புத்தகத்தைகையில் எடுத்து விட்டால் தூக்கமின்மை என்று அங்கலாயிக்கிறார்களே , அந்த தூக்கம் கண்ணைச் செருகிக் கொண்டு வந்து விடுகிறது . உடற்பியிற்சியைப் போல கண் எரிய , எரிய வாசிப்பு நடை பெற வேண்டும் தான் .

இலங்கையில் , “சிங்களம் ” படி என்ற தலைவலி . இங்கே ஆங்கிலம் . அகதியாய் போற இடமெல்லாம் ஒவ்வொரு மொழி . சந்தோசமாக வாழ மனிதனுக்கு ஒரு மொழியே போதும் . இவையெல்லாம் தேவையற்றத் திணிப்புக்கள் தாம் ” அவனுக்கு சலிப்பாக இருக்கிறது . போராட வேண்டி பல பொழுதுகள் இருக்கின்றன . அவற்றை எல்லாம் இதே எடுத்துக் கொண்டு போய் விடுகிறது . உலகமே கள்ளர் கூட்டமாக மாறி வருக்கிறது . எனவே தான் தப்பிப் பிழைக்க அவர்களுடைய மொழி தேவைப் படுகின்றன . குடித்த ஜேர்மன் பியர் இப்படியும் வேலை செய்கிறது . நம்ம கள்ளை அடித்தால் வேற சிந்தனைகள் வருமா ? . சிரிப்பும் வருகிற‌து .

எல்லாமே போராட்டம் தான் . விமர்சிகர் சிலர் , சில புத்தகங்களை வாசிக்க முடிவதில்லை என எழுதுகிறார்கள் . ஆனால் எல்லாப் புத்தகத்தையும் வாசிக்கவே முடியும் . பஞ்சாகத்தைப் போல ஒரு பக்கத்தை திறந்து வாசிக்கத் தொடங்கலாம் . ஒரு பேப்பரில் குறித்து வைக்க வேண்டும் . திரும்பவும் …திறப்பு வாசிப்பு . பிறகு விடுபட்டதை வாசிக்கிறது . சில மொழிகளில் கடைசிப் பேப்பரிலிருந்து வாசிக்கிற முறை இருக்கிறது . நாம் அதற்கெல்லாம் போக வேண்டாம் . கடைசி அத்தியாயத்திலிருந்து …பின்னாலிருந்து முன்னுக்கு வரலாம் . நீங்கள் பல புத்தகங்களை வாசித்து முடித்திருப்பீர்கள் . அவனுக்கு மிகவும் பிடித்த ரஸ்ய நாவல்கள் எல்லாம் …இப்படி வாசித்ததில் கிடைத்தவை தான் . அவன் இருபது வயதிலே , ” தாய் ” , ” புத்துயிர்ப்பு ” நாவல் எல்லாம் வாசித்து விட்டிருக்கிறான் . இயக்கம் , விடுதலை என … சும்மா போய் விடலாம் என்றா நினைக்கிறீர்கள் . அவற்றில் விருப்பு ஏற்பட வேண்டும் . புத்தகத்தில் இருக்கிற எழுத்துக் குவியலில் ஒரு செய்தி இருக்கவே செய்கிறது . அது என்ன என்று அறிய வேண்டும் . தேடல் . வீடியோ கேம் போல ஒரு விளையாட்டு தான் . ” தேடல் ஒன்று இல்லா விட்டால் , வாழ்வில் சுவாரசியம் இருக்காது . அதைத் தேடித் தேடி தொலைவதே சுகமானது…” என்ற வைரத்தின் கவிதை வரிகள் , கேட்டுப் பாருங்கள் ” இன்னிசைப் பாடி வரும் காற்றுக்கு உருவம் இல்லை …” என்ற பாடல் உங்களுக்கும் கூடப் பிடிக்கும் .

வேலையை முடித்து விட்டு சித்திரா பெல்கணிக்கு வந்தாள் . ” படுக்கலையா ? ” கேட்டாள் .” கொஞ்ச நேரம் இருந்து விட்டு வாரன் ” என்றான் . அவள் அவன் மடி மீது இருந்து வானத்தைப் பார்த்தாள் . காதல் என்றால் என்ன என்று நினைக்கிறீர் . அது கரைய வைக்கிற அன்பு . ” இந்த உக்ரேன் …” என்று தொடங்கினான் . ” ஈழம் போய் , இந்த தலைவலி வந்து விட்டது ” என்று அலுத்துக் கொண்டாள் . அவளுக்கும் இந்த நாட்டு சொக்கிலேட் பையன் ( தலைவர்) ,பூக்கொத்துக்களுடன் சென்று போரை நிறுத்தாது , ஆயுதத்தை கொண்டு போய் கொட்டுறது பிடிக்கவில்லை . ‘ அவருடைய அப்பரைப் போல வருவார் , பேசிய பெண் விடுதலை , மண் விடுதலை …எல்லாமே பிடித்தவையாய் இருந்தன . அவர் அணிப் பெண்கள் , இப்ப வெளிநடப்புகள் செய்து புத்தியைக் காட்டுகிறார்களா ? என்ற கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள் .

அவர் உக்ரேனோடு…என்று அலசியதில் …. ‘ பேசுவது ஒன்று ,செய்வது ஒன்று என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் ‘ ஒருத்தராகி மனப்பீடத்திலிருந்து சரிந்ததில் இருவருக்கும் வருத்தம் தான் . அவனும் அவருடைய தேர்த்தலைத் தான் விருப்பத்துடன் பார்த்தவன் . அவருடைய அப்பரின் தைரியம் , அதை வளர்த்தெடுத்திருக்கவே வேண்டும் . மகன் என்றதாலே சும்மா வந்து விடாது . எதிர்க்கட்சி உருக்கி விட்டவுடன் முதலில் பேசியது மாறி விடுகிறது . என்ன தான் எல்லைகளை உடைய தனி நாடு , இறைமை என்று பேசினாலும் சில நாடுகளிற்கு அதற்கு முதலே , ரஸ்யா மேலே வெறுப்பே இருந்திருக்கிறது . இப்ப அது வெறியாகி விட்டிருக்கிறது . அவனுடைய நண்பன் நாராயண‌ன் கூறினான் . முதலாம் போரில் ஜேர்மனியை நசித்ததாலே , இரண்டாம் போர் வந்தது . இப்ப அதை முடமாகவே வைத்திருக்கிறார்கள் . பாதி , பாதியாக இருந்ததை ஒருவாறு ஒட்டி விட்டது . அது முழு நாடாக சுதந்திரமடையவே விரும்புகிறது . அது தான் ஊதி …வெறியாக எரிய விட்டு ஏதோ அரசியல் செய்கிறது ” என்கிறான் . வரலாற்றில் பிரான்ஸ் ரஸ்யாவை அடித்தது . பிறகு , ஜேர்மனி அடித்தது . பிரிட்டன் ஒன்று தான் பாக்கி . அது இப்ப அடிக்க விரும்புகிறதோ . பிரிட்டன் என்றால் குட்டிப் பிரதேசமில்லை .கனடா ,அவுஸ்ரேலியாவையும் சேர்த்தே பார்க்க வேண்டும் . அதன் பேச்சில் அத்தனைக் குரோதம் அடிக்கிறது . எல்லா ஐயர்மார்களும் தாம் செய்கிற போது குற்றமில்லை . மற்றவர்கள் ( எதிரிகள் தரப்பு ) செய்தால் தான் குற்றம் . ஒன்றைக் கவனித்தால் …சத்தம் போடுறதெல்லாம் அதிதீவிர வலதுக்கட்சிகள் . உக்ரேனிலும் அதே கூட்டம் . இலங்கைப் பிரச்சனையில் ஒரு கூட்டு இருந்தது . இங்கேயும் கூட்டு இருக்கிறது ” .

ஒரு நாடும் ஒலிம்பிக் கலாச்சாரத்தை பின்பற்ற தயாராக இல்லை , பூக்கொத்தோடுச் செல்லவில்லை . “எந்தப் பிரச்சனையுமே சமாதான மேசைக்கே செல்ல வேண்டும் ” என்ற இந்தியாவின் குரலை கேட்கவில்லை . இங்கே மேசையையே காணவில்லை . அமங்களமாகத் தெரிகிறது . போர்க்குற்றம் பற்றி பேசுற நாடுகளைப் பார்த்தால் சிரிப்பே வருகிறது . ஒவ்வொன்றும் சுயத்திலே அண்டாக் கணக்கிலே செய்திருப்பவை . அங்கே இருந்து ஒருத்தர் கூட போர்க்குற்றமேடைக்கு ஏற்றப்பட்டிருக்கவில்லை . என்ன இது ! நான் டூயட் பாடுறதை விட்டு , அரசியலைப் பற்றியே சதா நினைக்கிறேனே . இந்த மாதிரிப்பிறவி வாழ்வில் எப்படி …சந்தோசத்தை துய்ப்பான் .

மக்கள் அனைவருமே இயல்பான வாழ்வை வாழ உரிமை உடையவர்கள் . சிலருக்கு சமூகமும் , அரசுகளும் ஏற்படுத்துற ஆக்கினைகளால் குறைபாடுடையவர்களாகி ….அவை கிடைக்காது போய் விடுகின்றன . அதனாலே , அவன் அதன் ஆணி வேர்களைத் தேடுகிறான் . சித்திரா ,கண்கள் சொருக ” நான் படுக்கிறேன் . கெதியிலே வந்து படும் ” என்று எழும்பினாள் . உள்ளே இருந்து போர்வையை எடுத்து வந்து ” குளிருரப்பா , போர்த்திக் கொண்டு இரும் ” என்று கொடுத்து விட்டுச் சென்றாள் . ஆசையின் அனுங்கல் சத்தம் கேட்கிறது . நம்ம ஆள் விடிய , விடிய முளித்திருக்கவில்லை . அப்படியே நித்திரையாகி விட்டிருந்தான் . ஏதோதோ நினைப்புக்கள் கனவில் நடக்கின்றனவா , நிஜத்தில் நடக்கின்றனவா ? என்று அவனுக்கே தெரியவில்லை . சீலைக்கதிரையில் ஏதும் பதுமை ஒளிந்திருக்கிறதோ ?

நித்திரை மயக்கத்தில் , காலையில் அம்மா ” எடியே குட்டி எழுப்படி ” என்று கூறுறது கேட்டது . அவன் சின்ன வயசில் பவிக்கும் , சுமிக்கும் அந்த மாதிரி குட்டி இருக்கிறான் . சகோதரர்களுக்கிடையில் தலையிடக் கூடாது என்று அம்மா ஒன்றும் கூறுவதில்லை . “ஏலாது அத்தை .எங்களுக்க சண்டை மூண்டு விடும் ” என்று சித்திரா பின்னடிக்கிறாள். ” நான் வாத்தியையே குட்டி எழுப்பி இருக்கிறேன் .நான் எழுப்பட்டா ? ” .அம்மா குட்டி விட்டு தான் மறுவேலை என தீர்மானமே எடுத்து விட்டார் . என்ன நடக்கிறது பார்ப்போம் என முளிக்காது அப்படியே கிடந்தான் . தயங்கி கிட்ட வந்த சித்திரா குட்டியே விட்டாள் . கள்ளி , மனசிற்கே இவ்வளவு கோபத்தை வைத்திருந்திருக்கிறாள் . அட இந்த கைக்கு கூட பலம் இருக்கிறதா ? ஆசை ” நானும் அப்பாவிற்கு.. ” என்க , அம்மா தூக்க , குட்டிக் கையால் அதே இடத்திலே நங் . அவன் முளிக்க அம்மாவிற்கு நல்ல நகைச்சுவை இருக்கிறது . ” மகனே இன்னம் பூலோகத்திலே தான் இருக்கிறாய் . இவளிடம் குட்டுகள் வாங்க … இருக்கையில் கொரோனாவால் உன்னை அசைக்கக் கூட முடியாதடா ” என்று சிரிக்கிறார் . சித்திரா பதறுகிறாள் . ” நானில்லை …அத்தை தான் ..” என்கிறாள் ” எடியே பயப்பிடாதடி . அவன் திருப்பி எல்லாம் குட்ட மாட்டான் ” என்று அம்மா . கன்னத்தில் முத்தமிட்டால் அவன் ஏன் குட்டப் போறான் ?

ஈசிச்செயாரில் அப்பா இருக்க‌ ஜீவா , ” இப்ப அறியிற செய்திகள் குழப்பமாக ,பதட்டமாக இருக்கிறதே ? ” என்று கேட்டான் . நாராயண மூர்த்தி புன்னகை புரிந்தார் . காலம் எப்படி ஓடுகிறது . கடைசி காலத்தில் அவர்களை …வெளியில் எடுப்பித்து …தோழனாக இருக்கிறான் . எல்லாத்திற்கும் மேலே கேள்வி கேட்கிறான் .

” டேய் , உன்னை அந்த கரிச்சல் கொட்டினேன் கோபம் ஏற்பட்டதில்லையா ? ” என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டார் . ” அப்பா , உங்களை எனக்குத் தெரியும் . கிராமத்திலே வீட்டுக்கு வீடு அடிக்கிறது தெரியுமே . நீங்க … எனக்கு அடித்திருக்கிறீர்களா ? . சிங்களப் பிரச்சனையால் .. அப்பா பயப்படுகிறார்’ என்று அம்மாவும் சொல்லுறதைக் கேட்கிற போது , எப்படியப்பா கோபம் வரும் ” என்றவன் ” அதை விடுங்கள் , இங்கே படிக்க வந்த இந்திய மாணவனைச் சுடுகிறார்களே …அரசியல் இருக்குமோ ? ” என்று கேட்டான் . ” . இங்கே இருப்பவர்களிடம் உள்ளே ஒரு சமயம் தண்ணீர் இருக்கும் . இன்னோர் சமயம் எரிமலைக் குழம்பிருக்கும் . தெரிந்து கொள்ள முடிவதில்லை . கொரானாவோட வாழ்றது போல எல்லா விசயங்களுடனும் …பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது . நீ என்ன நினைக்கிறாய் ? ” என்று திருப்பிக் கேட்டார் . ” தெரியல்ல ! , ஆனால் , சிபிஐயை இறக்கி விசாரணையை தொடக்கி விட வேண்டும் ” என்றான் . அது தான் நல்லது ” என்கிறார் . ஆனால் , சலிப்பாக‌ ” இங்கே , போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க விட மாட்டார்கள் . குற்றவாளிகள் பெருகி இருக்க அதுவே காரணம் . பழங்குடி மக்கள் பிரச்சனை நாறுது . மூன்று வயதிலிருந்து ( குழந்தைகளையும் என்றும் கூறப் படுகிறது ) சிறுவர்களை , கொஞ்ச நஞ்சமில்லை ஆயிரக்கணக்கில் கொலை செய்து புதைத்திருக்கிறார்கள் . பாரதூரமான குற்றம் . வெளியாரை விசாரிக்க அனுமதிக்கவே மாட்டார்கள் . இலங்கையைப் போல தாங்கள் தான் விசாரிப்பார்கள் . விசாரித்துக் கொண்டே இருப்பார்கள் . யாரும் தண்டனைப் பெற மாட்டார்கள் ” என்றான் .

மிசியாவில் மூன்று இந்திய மாணவர்கள் செத்த , ஒர் ( கார் ) விபத்து . ஒருவேளை அதுவும் குற்றமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது . உளவு அமைப்புகளின் சம்பந்தம் இருக்கலாம் . இம் மாதிரியான வேலைகளை செய்பவை . யாராலும் கண்டு பிடிக்க முடியாது . தனி மனிதனாகச் செய்கிற போது கண்டு பிடித்தால் வெளிப்படுத்துகிறார்கள் . ரஸ்ய எழுத்தாளர் கூறியது போல குற்றங்கள் கணங்களிலே வெளிப்படுகின்றன‌ . வெளிச்சத்திற்கு வருகிற விபத்து நடை பெறுகிற போது தப்பித்துக் கொள்கிற கூட்டமும் ஏற்பட்டு விடுகிறது . ஒரு வகை ஓட்டம் . சில‌ மனம் ஒப்பிச் செய்யப்படுவதில்லை . கத்திமுனைச் சூழல் செய்ய வைத்துவிடுகிறதும் உண்டு. காந்தி , ஒட்டு மொத்தமானவர்களையும் மன்னித்து விட‌ வேண்டும் ‘ என்கிறார் . எந்த ஆட்சிகளும் நேர்மையானவை கிடையாது பிறகு , எப்படி , திருந்தி வாழ்வான் ? . பைபிளிலே ஒரு வசனம் வருகிறது . நீ …அந்தப் பார்வை பார்த்தாலே கெட்டவன் தான் . எனவே , முதலில் ஆராயு . எந்தக்கூறு ..அப்படி சிந்திக்க வைக்கிறது ? . அதிலிருந்து வெளியில் வந்தாயானால் , உன்னை மற்றவர் நேசிக்கா விட்டாலும் , நீ , கடவுளின் குழந்தை தான் ! . வட இந்தியாவில் தீண்டாதவர்களாக …இருந்தவர்கள் யாரோ ‘சாதியினர்’ என்றே ஜீவா கனகாலமாக நினைத்திருந்தான் . ஆனால் , அப்பா ” காந்தி , ஹரியின் பிள்ளைகள் ; ” ஹரிஜனர்கள் ” என்றது ஆதித்திராவிட மக்களை , தமிழர்களை ” என்றதைச் சொல்கிற போது ஆச்சரியமாய் இருக்கிறது .

ஜீவகனுக்கு உக்ரேன் பிரச்சனையில் …நாடுகளின் நடத்தைகளும் , ஈழத்து சாதிப்பிரச்சனைகளை நினைவு படுத்துகின்றன . சாதிப்பெயர்கள் தமிழ்ச் சொற்கள் . அந்த சொற்களுக்கிடையில் பிரச்சனைகளை இறக்கி விட்டவர்கள் , இவர்களாத் ( மேற்கு நாடுகளாகத் ) தான் இருக்கலாம் என்று தோன்றுகிறது . பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் பிரித்தாளும் பொறிமுறையைச் சேர்த்தால்…. சிந்தித்துப் பாருங்கள் . ஒரு விசயம் தெரியுமா ? . எவரும் , வேற நாடுகளிற்குச் சென்று …எந்த வித்ததிலும் வர்த்தகம் செய்யலாம் . கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் . அங்கே பிரச்சனையில் கூட‌ சிக்கலாம் . கொள்ளை அடிக்கிறதும் ஏற்கப்படுறதாகப் படுகிறது . அப்பணத்தை …இங்கே தாராளமாக முதலிடலாம் . தவறான வழியில் சம்பாதிதது எல்லாம் பார்க்கப் படுவதில்லை . வரிப்பிரச்சனைக்காக அவரிடம் ‘ஃவைன்'( தண்டப்பணம் செலுத்த வேண்டும்) அறவிடப் படும் . இங்கே அவரிலே அங்கத்தைய குற்றம் பிரயோகிக்கப்பட மாட்டாது . நழுவியவராக …வாழலாம் . இதைக் கையாளுவதற்காக மற்றைய நாடுகளில் ஜனாதிபதி (ஆட்சி) முறை நிலவுறதையே விரும்புகிறார்கள் . அதிகாரம் உள்ள ஒரு முட்டாளையை இலகுவாக பணிய வைக்கலாம் . அதற்காக நாடாளமன்றம் அறிவு சார்ந்த முறை என்றில்லை . அதற்கு ஒரு நட்டஈடு அழவேண்டியும் வந்து விடலாம் . போபால் குற்றவாளிகள் …சுதந்திரமாக வாழ்ந்து சாகவில்லையா ? . தம் கூட்டு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசியையே ஒட்டுக் கேட்பதும் , ஹக் பண்ணுற‌தும் என கீழே இன்னொரு உலகத்தையும் இயங்க வைத்திருக்கிறார்கள் . சாதிப் பிரச்சனையில் இவையனைத்தும் இருக்கிறதில்லையா ?

அவனுக்கும் அப்பாவிற்கும் இந்த உக்ரேனை தலையில் சதா வைத்திருக்கிற பிரச்சனையாய் சுமையாய் அழுத்துகிறது . காரின் எரிபொருளின் விலை இறங்க மாட்டேன் என்று ஏறி சண்டித்தனம் பண்ணுகிறது . அதுவும் உக்ரேனை இவர்களோடு கட்டி வைத்திருக்கிறது . முதலில் அவற்றை எல்லாம் இறக்கி தொலைத்தாலே வாழ்வில் சந்தோசங்கள் இருக்கிறதைக் காணலாம், துய்க்கலாம் போலவும் இருக்கிறது . ஆனால் , நெடுக இப்படியே தான் இருக்கப் போகிறது . அகதிகளாக நாம் வந்து குடியேறுகிறவை எல்லாம் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவை என்று நம்பி விடாதீர்கள் . இன்றைக்கு உக்ரேன் . நாளை , பாதியாகக் கிடக்கிற ஐரிஸ்நாடு அமெரிக்காவோடு சேரப் போறேன் என்கும் . சேர்க்கும். வெடித்துச் சிதறும் . கியூபெக் பிரான்சோடு சேர்வேன் என்கும் . பிறகும் வெடிக்கும் . உங்களை நிம்மதியாய் வாழவே விட மாட்டார்கள் .

Series Navigation2019 ஆண்டில் எப்படி விஞ்ஞானிகள் முதன்முதலில் அசுரவடிவுக் கருந்துளையைப் படம் பிடித்தார் ?இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *