பூனைகள்

This entry is part 27 of 45 in the series 2 அக்டோபர் 2011

அலுவலகம் செல்கின்றன.
தொழில் செய்கின்றன.
கடைகள் நடத்துகின்றன.
சில சமைக்கவும் செய்கின்றன.

முக்கால்வாசி நேரம்
மூலையில் முடங்கிக் கிடந்து
பெரும் வேலை செய்ததாய்
நெட்டி முறிக்கின்றன.

வீட்டுக்காரி அள்ளி வைக்கும்
மீனில் திருப்தியடையும் அவை
வளர்ப்புப் பிராணிகள்தாம்
காவல் காப்பவை அல்ல.

மடியில் அமர வாய்ப்புக்
கிடைக்கும்போது மடியிலும்
சிலசமயம் படியிலும்
ஜீவிதம் செய்கின்றன.

வனத்தின் மீட்சியாய்
பூச்சிகளைத் துரத்துவதும்
வேட்டையாடுவதாய்த் திரிவதும்
வம்சத்தின் மிச்சங்கள்

எல்லற்றையும் கூர்ந்திருப்பதாய்
காது விடைக்க கண் விரிய
கம்பீரமாய் அவை நோக்குவது
கவன ஈர்ப்புத் தீர்மானம்.

மியாவ் என்று கத்தும்போது
உறுமும் சிங்கமாகவும்
மீசையும் வரிகளும் இருப்பதால்
புலியாகவும் நினைத்துக்கொள்கின்றன.

அரைத்தூக்கம் மூடிய
தன் இருண்ட கண்களுக்குள்
மொத்த வீடும் முழுங்கி
இருப்பதாய் கனவில் மிதக்கின்றன.

பெண்களுக்குப் பிடித்தமானவை
வேறொரு விஷேஷமுமில்லை
என்பதை அறியாமலே வாழ்கின்றன
வீடுதோறும் பூனைகள்.

Series Navigationசிற்பம்சுத்த மோசம்.
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *