மஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..

This entry is part 17 of 25 in the series 3 மே 2015

 

 

மதுரைக்காரரான மஞ்சுளாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 50 கவிதைகள் உள்ளன. ” அவள் என் தாய் ” ஒரு

வித்தியாசமான கருப்பொருள் கொண்ட கவிதை. கருவில் உள்ள ஒரு குழந்தையின் எண்ணங்களின் பதிவாகக் கவிதை தொடங்குகிறது.

மிக எளிய நடையில் கவிதை வளர்கிறது.

அசைந்து… அசைந்து

அவளுள் உரசிக்கொண்டே

அவளிடம் பேசுகிறேன்

அவள் என் அசையை

ரசித்தபடி பொறுத்திருக்கிறாள்

 

குழந்தை பிறந்துவிடுகிறது, தாய் தூக்கத்தில் இருக்கிறாள்.

அவள் என்னைப் பார்க்கவில்லை

நான் அவளைப் பார்க்கவில்லை

நான் அழும்போது

காற்று வந்து கையசைத்துப் போகிறது

தொட்டில் ஆடுகிறது

எனக் கவிதை முடிகிறது. காற்று கையசைப்பதன் பின் குழந்தையின் வாழ்க்கை அந்த எழுதப்படாத பக்கங்களில் நிரம்பியுள்ளது. கடைசி

இரண்டு வரிகள் , தாயின் கவனம் பெறாத தனிமையைச் சுட்டுகிறது. இக் கவிதையின் போக்கு ஒரு நேர் கோடு கிழித்ததுபோல்

அமைந்துள்ளது. வித்தியாசமான கருப்பொருள் என்பது மட்டுமே இக் கவிதையின் சிறப்பாகிறது.

 

” காலை நேரக் குறிப்புகள் ” என்ற கவிதையில்….

 

காலை நேரக் குறிப்புகளைக்

கையில் எடுத்துக்கொண்டு

நேர்முகத் தேர்வு காண

எனை நோக்கி வருகிறவனின் சுவடுகள்

எப்போதும் போலவே

அதிகாலைக் கனவொன்றுடன்

மிகுந்த தூக்கத்தை

அவசரமாகப் பிடுங்கி எறிந்தபோது

நடுங்கிய இமைகளுக்குள்

நீரலம்பித் திரும்பிய பின்னும்

களைத்தே காணப்படும் கண்கள்

 

” நேர்முகம் காண “என்றால் பொருள் வேறு. இண்டர்வியூ…. ” நேர்முகத் தேர்வு காண ” என்றால் ” வைவா ” என்று பொருள் .. அதென்ன ,

காலை நேரக் குறிப்புகள் ? பொருள் தெளிவாக இல்லை. நீண்ட வாக்கியம் முடிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் முடியவில்லை.

 

தேநீருக்குள் எனது சுவாசங்களை

இழுத்து உயிரேற்றும் வேளையில்

கடந்து போகும் பறவையின்

சிறகுகளைவிடப் படபடத்து

கொதிக்கும் உலையுடன் பொங்கிச் சமைகின்றன

அதிகாரமற்ற என் எண்ணங்கள்

ஒரு பெண் தூக்கத்தில் கனவு காண்கிறாள். அப்போது விழிக்கிறாள். தேநீர் குடிக்கிறாள். மனம் கொதிக்கிறதும். பதற்றம் அடைகிறாள். இதைத்

தான் சொல்கின்றன மேற்கண்ட கவிதைப் பகுதிகள். தகவல்களின் வரிசையில் கனக்கிறது கவிதை. உரைநடையாகவே தொடர்கிறது மொழி

நடை ! கவிதை மேலும் தொடர்கிறது.

 

பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசம்

எனை இழுத்து வந்து

தான் பூத்த கதைகளைச் சொல்லிவிடத்

தலைகளை ஆட்டி எத்தனிக்கையில்

எனது கால்களை இழுத்தபடியே

பாடிக் கொண்டிருக்கும் கதவுகளின் பின்புறம்

அவசியங்கள் அவசரங்கள்

இவைகளுக்கு அப்பால் எதுவுமின்றி

தனித்து விடப்பட்டிருக்கும்

எனக்கான அறைகளுக்குள் மாறியபடியே

மாற்றமின்றி இருக்கும் நான்

 

கவிதையைப் படித்த பின் சொற்கள் காணாமல் போகின்றன. நடையில் ஒரு சிக் – சாக் ஓட்டம் காணப்படுகிறது. கருத்துகளைக் கோவைப்

படுத்த முடியாமல் போகிறது.

 

” தொட்டுப் பேசும் வாசனைகள் ” இக்காதல் கவிதையின் தலைப்பிலேயே கவித்துவம் உள்ளது.

உருகி விழும் நெருப்புக் கோளமென

நான் தகித்திருந்த நாட்களில்

நீ வரவில்லை

மேகப் பஞ்சுகளாய்

நினைவுகள் மெல்லக் கரைய

இன்று

ஒளி மட்டும் நிரம்பிய

கண்ணாடிக் கோப்பைகளை உறிஞ்சி

என் கவிதைகளுக்கு மதுவூட்டிக் கொண்டிருக்கிறேன்

 

குறியீடு சார்ந்த படிமம் பளிச்சிடுகிறது. ‘ கவிதைகளுக்கு மதுவூட்டுதல் ‘ என்பது புதிய வெளியீடு ஆகும். ‘ உள் ஒட்டிய வலிகள் பெயர்ந்து

விழுகின்றன. தன்னம்பிக்கை தெம்பூட்டுகிறது. ‘ என்ற கருத்தைத்தான் கண்ணாடிக் கோப்பை என்ற குறியீட்டைப் பயன்படுத்தி விளக்குகிறார்

கவிஞர்.

 

‘ தூரத்துப் பச்சை ‘ என்ற கவிதையும் காதலைப் பேசுகிறது.

 

எனக்குள் நகரும் ஒளிகள்

களைத்துத் திரும்பிகின்றன

 

என்ற வரிகள் ரசிக்கும்படி உள்ளன. கருத்து , செறிவாக அமைந்ததால் கவிதையில் கனம் எளிதில் சாத்தியமாகிறது.

 

மஞ்சுளாவின் கவிதைகள் சில நம்பிக்கை தருகின்றன. சில வெளியீட்டு முறையால் முழுமை பெறாமல் போகின்றன. கவிதை ரசனை

சார்ந்த உள்வாங்குதல் இன்னும் கவனம் பெற வேண்டும். இது பற்றிக் கவிஞர் சிந்திக்க வேண்டும்.

 

 

Series Navigationபோன்சாய்இந்த கிளிக்கு கூண்டில்லை
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *