மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்

This entry is part 5 of 13 in the series 4 பெப்ருவரி 2018
           நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இடுப்பின் பின்புறம் அமைந்துள்ளது.சிறுநீர் உற்பத்தி செய்வது இதன் முக்கிய வேலையாகும். அதோடு இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது இவற்றின் முக்கிய செயலாகும்.இந்த சிறுநீரகம் கெட்டுப்போனால் இந்த இரண்டு முக்கிய வேலைகள் தடை படும், அல்லது நின்று விடும் . அப்படி ஆகிவிட்டால் சிறுநீர் உற்பத்தி குறைவதோடு கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மையை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைத்துவிடும். இதனால்தான் நமது சிறுநீரகங்கள் உடலின் மிகவும் முக்கிய மான உறுப்புகளாகக் கருதப்படுகின்றன. துரதிஷ்டவசமாக இனிப்பு நீர் வியாதி இந்த சிறுநீரகங்களைதான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. இவ்வாறு சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உண்டானபின்பு அதை சிகிச்சை  மூலம் சரி செய்ய முடியாது. அதனால்தான் அதன் வேலையை செயற்கையான முறையில் இரத்த சுத்திகரிப்பு ( டையலிசிஸ் ) செய்துகொள்ள வேண்டியுள்ளது. அதனால்தான்   சிறுநீரகங்களை பாதுகாக்க இனிப்பின் அளவை நாம் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

இனி இனிப்பு நீர் வியாதியால் சிறுநீரகங்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதைப் பார்ப்போம்.

நீரிவு வியாதி உள்ளவர்களில் 20 முதல் 40 சதவிகிதத்தினருக்கு சிறுநீரக பாதிப்பு உண்டாகிறது. இதை நெப்ரோபதி ( Nephropathy ) என்று அழைப்பதுண்டு.நீரிழிவு நோயால்தான் அதிகமானோருக்கு சிறுநீரக செயலிழப்பும் ( Kidney Failure ) உண்டாகிறது.

சிறுநீரக செயலிழப்பு படிப்படியாக உண்டாகிறது. அவை வருமாறு

:
முதலாவதாக சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள அதிகமான இனிப்பை வெளியேற்றும் பணியை மிகவும் துரிதமாக செய்கின்றன. இது சல்லடை போட்டு வடிகட்டுவது  போன்றது.இப்படி செய்யும்போது அதில் ஈடுபடும் குளமோருலஸ் என்ற பகுதியில் வீக்கம் உண்டாகி அழுத்தம் ஏற்பட்டு சிறுநீரகத்தின் செயல்முறையைக் குறைக்கிறது. அதனால் அதன் பணி சிரமமாகிறது.

*  இரண்டாவது கட்டமாக ஒரு வருடத்திற்குப்  பிறகு கழிவுப் பொருட்களை வெளியேற்றும் பணியும், சத்து மிக்க பொருட்களை வெளியேற்றாமல் மீட்டுக்கொள்ளும் பணியும் பாதிக்கப் படுகிறது.சிறு அளவில் அல்புமின் எனும் புரோதச் சத்து சிறுநீரில் வெளியாகிறது.

* மூன்றாவதாக, இவ்வாறு சிறுநீரகங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாவதால் அதிகமான அளவில் அல்புமின் வெளியேறுகிறது. இந்த அல்புமின்தான் இரத்தத்தில் நீரை தங்க வைக்கிறது. இது குறைந்துபோனால் நீர் உடலின் திசுக்களில் தேக்கமுறும்.இதனால்தான் முகம், கைகள், கால்கள் வீக்கமுறுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இரத்தத்தில் அல்புமின் குறைந்து போவதால் அதை ஈடு செய்ய கல்லீரல் அதிகமான கொலஸ்ட்ராலையும் இதர கொழுப்புகளையும் வெளியேற்றுகிறது. இவை அல்புமின் உற்பத்திக்கு உதவுகின்றன. ஆனால் இவை இருதயத்துக்கு ஆபத்தை உண்டுபண்ணுகின்றன.

* இறுதியாக, சிறுநீரக செயலிழப்பு உண்டாகிறது. இதில் கழிவுப் பொருட்கள்  வெளியேற்றப்பட முடியாமல் இரத்தத்திலேயே தேக்கமுறுகின்றன. இதையே இறுதிக்கட்ட சிறுநீரக செயலிழப்பு ( End – stage renal  failure ) என்கிறோம். இது உண்டானபின்பு எவ்வளவுதான் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்தினாலும் பிரயோஜனம் இல்லை. இதற்கு டையலிசிஸ் அல்லது மாற்று சிறுநீர் பொருத்தும் அறுவைச் சிகிச்சையைத் தவிர உயிரைக் காக்க வேறு வழிகள் இல்லை.

                  நீரிழிவு நோயுள்ளவர்கள் தங்களுடைய சிறுநீரகங்களைக் காத்துக்கொள்வது எப்படி?

* இரத்தத்தில் இனிப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தலையாய கடமையாகும்.இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.இருப்பினும் பல சமயங்களில் என்னதான் மருந்து உட்கொண்டாலும் அல்லது இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டாலும் இனிப்பின் அளவை கட்டுப்படுத்த முடிவதில்லை.இதற்கு உணவக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும்  இல்லாத காரணம் எனலாம். இனிப்பு வியாதியால் சிறுநீரக செயலிழப்பு உண்டானால் அதன் அறிகுறிகளான கை கால்கள் வீக்கம், களைப்பு, இடுப்பு வலி போன்றவை தோன்றும்போது சிறுநீரகங்கள் 80 சதவிகிதம் கேட்டுப்போயிருக்கும்! அதுவரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. துவக்கத்திலேயே சிறுநீரில் மைக்ரொஅல்புமின் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதை வருடத்தில் ஒரு முறையேனும் செய்துகொள்ளவேண்டும். தசைகளின் கழிவுப் பொருளான கிரியேட்டினின் என்பதை சிறுநீரகங்கள் வெளியேற்றும். சிறுநீரக செயலிழப்பில் இரத்தத்தில் இதன் அளவு உயர்ந்து காணப்படும்.இதை இரத்தப் பரிசோதனையில் கண்டறியலாம். இவை இரண்டும் தெரிந்துகொண்டால் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு ஆவன செய்யலாம்.

* இரத்தக் கொதிப்பைக் குறைத்தல் – இரத்தக் கொதிப்பில் சிறுநீரகத்தினுள் உள்ள நுண்ணிய இரத்தக்குழாய்களின் சுவர்கள் இறுக்கமாகிப் போவதால் அதை தளர்த்தும் மருந்துகளால் இரத்தக் கொதிப்பு குறைகிறது.இல்லையேல் சிறுநீரகப் பணியும் கெடுகிறது.இத்தகைய மருந்துகளின் பெயர் ACE தடுப்பு மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அதோடு புகைப்பதை நிறுந்துவது கூட இரத்தக் கொதிப்பைக் குறைத்து சிறுநீரகங்களைக் காக்கிறது.

* புரோதச் சத்தைக் குறைத்தல் – உணவில் உள்ள கலோரிகளில் 10 சதவிகிதத்திற்குக் குறைவான புரோதச் சத்து இருந்தால்  போதுமானது.அதற்கு  அதிகமானால் அளவுக்கு அதிகமானதை வெளியேற்றும் பணியால் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.இனிப்பின் அளவும், இரத்தக் கொதிப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், புரோதத்தின் அளவைக் குறைப்பது சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பைத் தருகின்றன.

* கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பு – இனிப்பு நீர் உள்ளவர்களுக்கு எளிதில் சிறுநீர் குழாய்களில் கிருமித் தொற்று ஏற்படலாம். அதோடு நரம்புகளும்  பாதிப்புக்கு உள்ளாவதால் சிறுநீர்ப்பை ( Urinary Bladder ) சரிவர வேலை செய்யாமல் சிறுநீர் அதில் தேக்கமுறலாம். அதில் கிருமிகள் வளர வகை செய்துவிடுகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கலங்கலான அல்லது இரத்தம் கலந்த சிறுநீர் போன்றவை கிருமித் தொற்றின் சில அறிகுறிகள். சிறுநீர் பரிசோதனையின் மூலம் இதை கண்டு பிடிக்கலாம். இதை உடனடியாக எண்ட்டிபையாட்டிக் மருந்து மூலம் குணப்படுத்தாவிடில் சிறுநீரகம் எளிதில் பாதிக்கப்படும்.

* மருந் துகள் பற்றிய எச்சரிக்கை –  நாம் பல வேளைகளில் தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்கிறோம். மருத்துவரைப் பார்க்காமலேயே பார்மசியில் மருந்து வாங்கி சாப்பிடுகிறோம்.இவற்றில் அதிகமாக வலி நிவாரணிகள் அடங்கும். இவற்றில் பல மருந்துகள், குறிப்பாக வலி குறைக்கும் மருந்துகள், வீக்கம் குறைக்கும் மருந்துகள், சில எண்டிபையாட்டிக் மருந்துகள் சிறுநீரகங்களைப் பாதிக்கக் கூடியவை.ஆதலால் நீரிழிவு நோயாளிகளும், அந்த நோய் இல்லாதவர்கள்கூட மருத்துவரின் மேற்பார்வையின்றி மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.

( முடிந்தது )

Series Navigationநெருப்பென்ன நின்ற நெடுமாலே!வெளிநாட்டு ஊழியர்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *