மும்பைக்கு ஓட்டம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

ஆங்கில மூலம் -சலில் சதுர் வேதி -தமிழில் -எஸ்ஸார்சி

ராஜு பையன் தான் அந்த மாநகரம் மும்பையுக்கு ஓடிவிடலாம் எனத்திட்டம் போட்டான்.மும்பை எங்கிருக்கிறது அது எத்தனை தூரம் என்பதெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லை.அவன் தெரிந்து கொண்டிருப்பது எல்லாம் இதுதான்.ஒருவன் தலை எழுத்து மாற்றப்பட வேண்டுமென்றால் அவன் மும்பையிக்குப்போய்விடவேண்டும் என்பது மட்டுமே.
ஜைபூர் வழியாகத்தான் மும்பையிக்குப் போகவேண்டும் என்பது தெரியும். அவன் நண்பன் அவனிடம் சொன்னதுதானே.
அவன் சகோதரிகள் நான்கு வயது குடியாவும் ஒன்பது வயது கோகியும் அவனுடன் மும்பையிக்கு வருவேன் என்றார்கள். மூவரும் பேசிப்பேசி ஒரு வழியாக அன்று மாலை மும்பை புறப்படலாம் என ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்களின் பாட்டி மாலை நேரத்தில் தூக்கத்தின் உச்சத்தில் இருப்பாள்.தந்தை எப்போதும் பலபல என விடியும்போதே ஆட்டோரிக்ஷாவை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார். நடு நிசிக்குத்தான் வீடு திரும்புவார். அவர் அடிக்கடி சாராயம் குடித்துவிட்டு வீடு திரும்புவதும் உண்டுதான்.
அம்மாவோ அதிகாலையிலேயே எழுந்து பணக்காரர்கள் வசிக்கும் சொகுசுக் காலனிக்கு வீட்டு வேலை செய்யப்போய்விடுவாள். இரவு உணவு சமைக்கமட்டுமே வீடு திரும்புவாள். பாட்டிதான் வீட்டில் தங்கி இந்தக்குழந்தைகளைப்பார்த்துக்கெ

ாள்கிறாள்.
பாட்டியின் குறட்டை ஒலி கேட்டது. திட்டம் இட்டபடி மும்பைக்கு ச்செல்லவேண்டுமே, மூவரும் சைக்கிளில் அமர்ந்து கொண்டார்கள்.குடியா எங்கே அமர்ந்தாள் சைக்கிள் சீட்டைப்பிடித்துக்கொண்டு தொங்கினாள் என்பதே சரி.ராஜு சைக்கிள் பெடலை அழுத்தி அழுத்தி மிதித்தான். வீசும் காற்றுக்கு எதிராக.முனைந்து முனைந்து மிதித்தான். அந்த கோகி பின் சக்கரத்தின் மீதுள்ள காரியரில் அமர்ந்து குடியாவை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.
கிளம்பி சில நிமிடங்கள்தான் ஆனது குடியா அண்ணனிடம் ‘ராஜு அண்ணா மும்பையை நெருங்கி விட்டோமா?’.என்றாள்.
‘என்ன என்ன நாம் இப்போதுதானே புறப்பட்டோம் அதற்குள்ளாகவே இப்படியா’ ராஜு ஆரம்பித்தான்.’மும்பை இங்கிருந்து எவ்வளவோ தூரம் இருக்கிறது.நீங்கள் வரவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்.புலம்பாதீர்கள் முட்டாள்தனமாய் கேள்வியும்கேட்காதீர்கள் தெரிகிறதா?’ ராஜு கத்தி முடித்தான்
‘மும்பை அது ஒரு சிறப்பான நகரம்.இங்கிருந்து எவ்வளவோ தொலைவு செல்லவேண்டும்.எத்தனை நாட்கள் ஆகுமோ?’ என்று சொல்லிய ராஜுவிடம்
‘,எத்தனை நாட்கள் ஆகும்” என்று கேள்வி வைத்தார்கள்.
‘நான் முதலிலேயே சொன்னேன் முட்டாள்தனமாக எல்லாம் கேள்வி கேட்காதீர்களென்று.இந்தப் பெண்குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போவது என்பதை நான் விரும்புவதேய்ல்லை’.ராஜு கத்தினான்.
‘இதோ பாருங்கள் இங்கேதான் இந்தக்குடிசையில் தான் தங்கி இருப்பேன் என்றால் என் விருந்தினராக நீங்கள் இங்கேயே இருந்து விடுங்கள். இன்னும் ஒரு நாள் கூட இந்த ஓட்டைகுடிசையில் இந்த அழுக்குகள் மத்தியில் நான் தங்க மாட்டேன்.நீங்கள் என்னுடன் வருவது உறுதிதான் என்றால் தேவையற்ற கேள்விகள் மட்டும் வேண்டாம். இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை’
சொல்லிய ராஜு சைக்கிள் மணியை சிறிது நேரம் தொடர்ந்து அடித்து தன் அதிகாரத்தைக்காட்டினான்.

‘ஏன் இவ்வளவு அலட்டல் உனக்கு’ என்றாள் கோகி.’ உன்னால்தான் ஆகின்ற கதையா இது.உனக்கு சோறு சமைக்கத்தான் தெரியுமா. சோறு போடப்படும் சமயம் நீதான் அம்மா அம்மா என்று கத்துவாய்’ கோகி இப்படி சொல்வதும் சரிதான்.அவனுக்கு சமைக்கவும் தெரியாது. அம்மாவின் செல்லப்பிள்ளை அவன்.பதினோறு வயதுப்பையன் தப்பொன்றுமில்லை. ரொம்பவும் கூச்சம் வேறு அவனுக்கு.
சைக்கிளை வேக வேக மாக மிதித்தான்.எப்படியும் கோகியை விட்டுவிடமுடியாது பிறகு திட்டுவதை வைத்துக்கொள்வோம் என தீர்மானித்து புத்தம் புது சைக்கிளின் பெடல் போட்டுக்கொண்டிருந்தான்.
இந்த சைக்கிளை வாங்க அம்மா அப்பாவுக்கு இடையே எத்தனையோ சண்டை. அப்பா வாரம் மூன்று தினங் களாவது சாராயம் குடித்துவிட்டுத்தான் வீடு வருவார்.அம்மாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும் ஏசுவாள் கத்துவாள்.ஏன் அப்பாவை அறைந்தும் கூட இருக்கிறாள் குழந்தைகளைவிட உனக்கு ச்சாராயம்தானே பெரியது என்று.அம்மா எத்தனையோ முறை சத்தம் போட்டாள். காசு கொஞ்சம் சேமித்து ஒரு சைக்கிள் வாங்கினால் இப்போது இரண்டு வீட்டில் செய்வதற்கு பதிலாக ஒரு நாலு வீட்டில் வேலை செய்யலாம் கூட காசும் வரும் .காசு கூட கிடைத்தால் நாற்றமெடுத்த நாட்டுச்சாராயம் குடிப்பதை விட்டு விட்டு அப்பா கடைச்சரக்காக நல்ல சாராயம் குடிக்கலாம் என்றும் அம்மா சொன்னதுதான்.
ஒரு நாள் அழகான ப்பெண் ஒருத்தி தானே ஓட்டி வந்த பி -146 என்ற இலக்கம் போட்ட சிவப்பு காரில் வந்திறங்கி சைக்கிள் வாங்க அம்மாவுக்குகடன் கொடுத்தாள்.பெண்கள் ஓட்டும் சைக்கிள்தான் வாங்கப்பட்டது. ராஜு சிரமமில்லாமல் ஏறி பெடல் செய்ய முடிகிறதே. அவன் சிறிது நேரம் பெடல் செய்வான். பிறகு சைக்கிள் சீட்டில் அமர்ந்து ஓய்வு எடுப்பான். மூச்சு வாங்கிய பின் திரும்பவும் பெட்ல் போடுவான்.

‘யோசித்துப்பாருங்கள் நம் வசிப்பிடம் தாண்டி அதுவும் , ஜாலியாக, ஒரு பெரிய நகரம் எத்தனை பெரிய கார்கள் எத்தனை வேகத்தில் நம்மைச்சுற்றி அப்போது’; அவன் சகோதரிகளிடம் சொன்னான்.
; இங்கேயும் பெரிய பெரிய கார்கள்’ கோகி சொன்னாள்.
‘ரொம்ப கெட்டிக்காரிதான்ீ கடல் எங்கே இருக்கிறது தெரியுமா உனக்கு ,கடற்கரை மணலில்தான் கார் ஓட்டுவாயா, அந்தக் கடல்தான் பெரு நகரை பிரமாதமாக்குகிறது, இந்த் குப்பை கூளத்தில் சினிமா நடிகர்கள்தான் இருப்பார்களா. எல்லா நடிகர்களும் அந்த மும்பையில்தான் வசிக்கிறார்கள்.அப்பேற்பட்ட பெருநகரம் அது தெரிஞ்சிக்கோ’ பாலிவுட் நடிகர் கணக்காக ராஜு பேசினான்.
‘போலிசுக்காரர்கள் அங்கேயும் உண்டா’ குடியா கேட்டாள்.
‘ முட்டாளே,போலிசுக்காரர்கள் எங்கேயும் இருப்பார்கள். மக்களை எவ்வளவு தொந்தரவு செய்கிறார்களோ அவ்வளவுக்கும் அவர்களுக்குக் காசு உண்டு. சும்மா உட்கார்ந்துகொண்டு நீ அந்த இயற்கையை வேடிக்கை மட்டும் பார்கிறாயா’
‘இயற்கைக்காட்சிகள் எப்படியிருக்கு’ குடியா கேட்டாள்.கோகி வளைந்து நெளிந்துகொண்டு குடியாவின் முகம் பார்த்தாள். அந்த குடியா கண்களை இறுக்கி மூடி மட்டும் தானே வைத்திருந்தாள்.கோகிக்கு சிரிப்பாகக்கூட வந்தது.

‘முட்டாளே பயந்தாங்கொள்ளியே’ ராஜு திட்டினான்.
கோகி தன் தங்கைக்கு அவள் என்ன என்ன பார்க்கிறாள் என்பது குறித்து விளக்கமளித்தாள்.’உம் இப்போது ஒரு ஆற்றின் மீதுள்ள பாலம் நாம் அதன்மீது செல்கிறோம்.சின்ன ஆறுதான் ஆழம் அப்பப்பா அத்தனை ஆழம்.தண்ணீர் நீல நிறத்தில்,ஆற்று நீர் பாய்ந்தோடி பள்ளத்தில் செல்கிறது. வெள்ளை பாய் விரித்த்படி வீசும் காற்றுக்குக் கட்டிய ஓடங்களைப்பார்.ஓடத்தில் மனிதர்கள் எல்லோருமே மீன் பிடி வலை வைத்து அங்கே வீசிக்கொண்டிருக்கிறார்கள் சில குழந்தைகள் விளையாடுகின்றனர்.எவ்வளவோ ஜாலியாய் இருக்கிறது. புகை வண்டி கூட செல்கிறதே பார் பார்’.
‘நான் அந்த ரயில் வண்டியைவிடவும் வேகமாய்ப்போகிறேன் பார்’ ராஜு கத்தினான்.பெடலை ஓங்கி ஓங்கி மிதித்தான்.’சுக் சுக் சுக்,சுக் சுக் சுக்,சுக் சுக் சுக்’ என்று கூச்சலிட்டான்.
‘எதிரே டிரக் வருகிறது ஜாக்கிறதை ராஜு அண்ணா’குடியா எச்சரிக்கை செய்தாள்.
‘நாம் கண்களைத்திறந்து வைத்துக்கொண்டுதானே ஓட்டுகிறோம்’ ராஜு பதில் சொன்னான்.சைக்கிள் சீட்டில் உட்கார்ந்தான்.வண்டி தன் பாட்டில் சென்றுகொண்டிருந்தது.’ நான் என் இரண்டு கைகளை எடுத்து விட்டேன் சைக்கிள் அது தன் பாட்டில் போவதைப்பார்’ என்றான்.
‘ பயமாக இருக்கிறது அப்படிச்செய்யாதே’ குடியா அலறினாள்.
‘ இந்த ராஜுவின் தங்கைக்கு பயமா’ சொல்லிய ராஜு ஓங்கி ஓங்கிப் பெடலை அழுத்தினான். அனுமான் சலேசா சுலோகத்திலிருந்து சில வரிகளை அவன்வாய் முணுமுணுத்தது.அவனுக்கு ப்போலியோ நோயினால் ஊனமான கால்தான் என்றாலும் அவன் தன்னை கடவுள் ஹனுமானாக அல்லவா எண்ணிக்கொண்டான்.
‘ரொம்ப களைப்பாக இருக்கிறது கொஞ்சம் ஓய்வெடுத்தால் தேவலை’ சொன்ன ராஜுவுக்கு வியர்வை கழுத்தில் வழிந்தபடியிருந்தது.
‘இப்போது நான் ஓட்டுகிறேன்’ சொன்ன கோகி காரியரிலிருந்து ராஜுவின்
‘இடம் மாறினாள்.
‘ஓவ் இந்த மலைப்பகுதிக்கு வந்துவிட்டோமா நாம்’, காரியரில் சவுகரியமாய் அமர்ந்த ராஜு சொன்னான்.
‘எங்கே?எங்கே?’ என்றாள் குடியா.

‘அங்கே வலது பக்கம் மரங்கள் தெரிகிறதா அதற்கப்பறம் பாரேன் வரிசையாய் சிறிய சிறிய வெள்ளை வீடுகள் நாம் அங்குள்ளதை பார்ப்பதுபோல் அவர்களும் நம்மை பார்க்கலாம்’
‘அண்ணா நீ சொல்லேன் அனாரோ மற்றும் கன்ஜு.வை நாம் நம்முடன் கொண்டு செல்வோமா’ குடியா கேட்டாள்.
‘இது என்ன முட்டாள்தனமாய் உளறுகிராய்’
‘ வேண்டாம் வேண்டாம் இருக்கும் இடத்திலேயே அவை மகிழ்ச்சியாக இருக்கும்’ கோகி அவளைச் சமாதானம் செய்தாள்.
அனாரோ மற்றும் கன்ஜு குடியாவின் பிரிய மரங்கள்.அனாரோ அவர்கள் குடிசை முன்பாக உள்ள மாதுளம் செடி. கன்ஜு பெர்சியனாட்டிலிருந்து இங்கு குடிபெயர்ந்து வந்துள்ள கருஞ் சிவப்பு நிற பூ பூக்கும் செடி. அதுவோ அந்த தெருப்பொதுக்குழாயின் முன்பாக இருக்கிறது. கன்ஜு செடிக்கு ஒரு வயதிருக்கலாம். அது மழைக்காலத்தில் மட்டும் இலைகளை உதிர்த்து மொட்டையாகி விடுகிறது.
‘மும்பைக்குச்சென்றபின் தண்ணீருக்கு வரிசையில் நிற்கவேண்டாம் அதனை முதலில் சொல்லிவிட வேண்டும்’ என்றாள் கோகி.
‘நீ ஒன்றும் கவலைப்படாதே. மும்பையில் எல்லாருக்கும் தண்ணீர் இருக்கிறது. நிறைய நிறையவேதான் மும்பையில் உள்ள அந்தத் தண்ணீர் வசதி.. டெலிவிஷனில் நாம் பார்க்கவில்லையா என்ன? அப்பப்பா எத்தனை கார்கள் அங்கு சாலையில் ஓடுகின்றன. நான் ஒரு நாள் அந்த நகரிலிருந்து ஒரு பெரிய காரில் வீடு திரும்புவேன். இரண்டு கார்களில் கூட திரும்பலாம், நீ ஒன்றை ஓட்டிக்கொண்டுவாயேன். அப்படி வரும் போது இந்த முக்கு இருக்கிறானே அவன் முகத்தைப்பார்க்க வேண்டும்’
முக்குப்பையன் இருக்கிறானே அவன் தான் ராஜுவுக்கு வாழக்கையில் பெரிய தலைவலி.முக்கு தான் இந்த குடிசைவாசிகளில் வயதில் மூத்தவன். அவன் ராஜுவின் மூக்கில் குப்பையை இல்லை எதையோப்போட்டுவிட்டு க்கேலியும் செய்கிறான்.;’ராஜுவுக்கு போலியோ பார்’ என்பான் ,ராஜு ஒரு நொண்டி’ என்பான்.
ராஜுவோ முக்கு கிளறிய கோபத்துக்கு இப்படித்தான் பதில் சொல்லுவான், ‘ மூக்கு அயோக்கியனே உன்னை மூட்டையாய் கட்டி சாறாய்ப்பிழிந்து என் சோள ரொட்டிக்கு தொட்டு தொட்டுசாப்பிடுவேன் பார்’. என்பான்.
முக்கு துறத்துவான்.ராஜு எளிதில் பிடிபட்டு விடுவான். முக்கு அவனை ஒரு சாத்து சாத்துவான்.ராஜுவும் பதிலுக்கு அவனை அடிப்பான், ஒரு சிறாய்ப்போ வீங்கிய கண்ணோ இல்லாமல் அவர்களின் சண்டை எப்பவும் ஓயவே ஓயாது.
‘ வீட்டை விட்டு இவ்வளவு தூரம் எங்கே நாம் வந்திருக்கிறோம்’ சொல்லிய கோகி மெதுவாகவே பெடல் செய்தாள். அவளால் முடியவுமில்லை.
‘நான் மும்பையில் பள்ளிக்கூடம் செல்லமுடியும் என்று நினைக்கிறாயா ‘. குடிசைகளின் மத்தியில் சில அம்மாக்கள்தான் ஒரு மரத்தின் நிழலில் பள்ளிக்கூடம் நடத்தினர்.அப்போது கோகி அந்தப்பள்ளி சென்றுவந்தாள்.அந்த பள்ளிக்கூடம் தற்காலிகமானதுதான். அப்புறம் எங்கே போனாள் அவ்வளவுதான்.
ஒருவாரம் சென்று இருப்பாளோ என்னவோ.அவள் அம்மா உடல் நிலை சரியில்லாமல் போகவே கோகிதான் அம்மாவுக்குப்பதிலாக அந்த வீட்டு வேலைக்குச்செல்ல வேண்டியதாயிற்று.
‘முட்டாளே உனக்கு புத்திகெட்டுவிட்டதா இத்தனைதூரம் ஊர்விட்டு செல்வது போயும் போயும் ஒரு பள்ளிக்கூடம் செல்லத்தானா’ கடுப்படித்தான் ராஜு.
‘பள்ளிக்கூடம் போனால் பெரிய பெரிய வேலை கிடைக்கும். படித்துவிட்டால் அம்மா மாதிரி ஒருத்தர் வீட்டில் போய் நாம் சுத்தம் செய்யும் அந்த வேலையை எல்லாம் செய்யவேண்டியதில்லை என்று அம்மாவே சொன்னாள் அதை நீ கேட்கவில்லையா’
‘நான் பள்ளிக்கூடம் போவேன் தான்’ குடியா, கோகியிடம் ரகசியமாய்ச்சொன்னாள்.
”அது ரொம்ப சரி, பின் உன் போல் முட்டாள் பெண் குழந்தைகள் வேறு என்ன சொல்வார்கள்.முட்டாள்களுக்குத்தான் அந்த பள்ளி கிள்ளி எல்லாம்’ராஜு தீர்மானமாக சொன்னான்.
‘நீதான் ஒரு முட்டாள்.நாங்கள் மும்பை சென்று பள்ளிக்கூடம் செல்வோம் பார்’ கோகி அழுத்தாமாகச்சொன்னாள்.
‘என்ன தைர்யம் உங்களுக்கு ஒருவருடம் பெரிய என்னிடமே எதிர்த்துப்பேச்சா’
‘ஒரு வருடம் என்பது பெரிய விஷய்மே இல்லை’
‘பிச்சிபுடுவேன் பிச்சி எண்ணிக்கோ விழும் அடியை. நீ பேசுறது சரியே இல்லே. நான் தான் இங்க இருக்கிறதுல ஆம்பளை, மூத்தவன் பள்ளிக்கூடம் பத்தி பேசுறது முட்டாள்தனம் நிறுத்திகோங்க தெரிகிறதா’
‘எதடா நிறுத்தறது.முட்டாப்பயலே கேடுகெட்ட ராசுகோல்,ராஜுவின் காதைப்பிடித்து திருகிக்கொண்டே அவனை சைக்கிளை விட்டு அகற்றினார்கள்.ராஜு சத்தம் போட்டான். அடிகள் வாங்கினான்
.’ அம்மாவோட புது சைக்கிள தொடாதேன்னு எத்தனி தரம் உங்கிட்ட சொல்றது. பொறுக்கிப்பயலே ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லேடா நீ’ ஒரு கிள்ளு கிள்ளி விட்டு சொல்லி நிறுத்தினாள் பாட்டி.
கோகி குடியாவை க்கட்டி அணைத்துக்கொண்டு தெருவுக்கு ஓடிப்போனாள்.
பெடல் ஓயாமல் சுற்றிக்கொண்டேதான் இருந்தது. சைக்கிளின் பின் வீலும் இப்போது எத்தனை வேகமாய் சுழல்கிறது. ஸ்டாண்ட் போட்டபடியேதான் அந்த சைக்கிள் வண்டி இன்னும் அங்கே நிற்கிறது. அது மும்பைக்குச் செல்கிறதே.
———————————————————————————-. நன்றி-இந்தியன் லிட்றேசர் 278.

Series Navigation
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    vaLava. duraiyan says:

    கதை நன்கு சரளமாகச் செல்கிறது. சிறு பிள்ளகள் விளையாட்டு என்பது முடிவில் தெரியும் போது நம் மனம் வலிக்கிறது. ஆனால் பல பெரிய விஷயங்களைப் பேசுகிறார்கள். அவர்கள் உலகமே தனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *