மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

Akkamahadevi_Udathadi

ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக

காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர்

கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ

பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.

 

 

அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன்,

அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே,

பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை,

ஜாதியும் இல்லை பேதமும் இல்லை.

எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர்

கற்பனைக்கெட்டாத அழகின் திருவுருவம் அவர்.,

இந்த உலகில் எல்லாமே அழிந்துவிடும் முடிவாக

வேண்டாம் இவர்கள் எவரும்.

என்றுமே இருக்கும் முடிவில்லாத என் நாயகன்

ஒரே ஒருவர் தான் – அவர்

என் மல்லிகார்ஜூனா

 

லிங்கமான சிவனே மணமகன்

நானே மணமகளானேன்

 

 

.

அக்கா மகாதேவி கன்னட இலக்கியத்தின் “வாச்சனா” வடிவத்தின்

முன்னோடி. ஒரு வகையில் பார்க்கப்போனால் இவர் தான்

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மீராவுக்கு ஒரு வகையில்

வழிகாட்டி..

” சென்னமல்லிகார்ஜூனா ” என்றால் மல்லிகைப்பூவைப் போல

அழகான என் தெய்வமே என் தலைவனே என்று இவர் எழுதியிருக்கும்

கவிதைகள் பக்தியும் காதலும் குழைந்து கொடுத்திருக்கும்

அற்புதமான கவிதைகள்.

 

என்னைத் தைத்த அம்பு

ஆழமாக எனக்குள்

அதன் இறகுகளும் தெரியாமல்

தைக்கட்டும்.

என் தலைவன் உடலை இறுக

கட்டி அணக்க வேண்டும்.

அவன் எலும்புகள் நொறுங்கும்படி

இறுக்கி அணைக்க வேண்டும் .

பார்வையிலிருந்து மறையும் வரை

அந்த –

தெய்வீகத்தை பிடித்து அணைக்க வேண்டும்.

 

 

இவர் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் முறையாக எழுதப்பட்டவை

நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்தவற்றிலிருந்து இவர்

வாழ்க்கையில் இவர் மெய்யியல் தேடலின் பயணத்திற்கான

காரணங்களை நாம் அறிய முடிகிறது.

 

 

கி.பி. 1146 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உடுதடி எனும் சிற்றூரில், சித்ராபௌர்ணமி நாளில் மகாதேவி பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. தாயார் சுமதி; தந்தை நிர்மலன். இருவரும் சிவபக்தர்கள் என்பதால், இளம் வயதிலேயே சிவன் வழியில் செல்ல மகாதேவிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசன் கௌசிகன் மகாதேவியை மணக்க விரும்பினான். பெற்றோரும் தங்கள் கடமையை முடிக்கவேண்டுமென அதனை ஆதரித்தனர்.

அக்கமகாதேவியோ சிறிதும் சஞ்சலமின்றி மூன்று நிபந்தனைகள் விதித்திருக்கிறார். அந்தக் காலத்தில் இந்த தீர்க்க சிந்தனை அவரின் மனதிடத்தை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது

 

. சிவபூஜை செய்வேன், சிவபக்தர் கூட்டத்தில் இருப்பேன், குரு சேவையில் இருப்பேன் என்ற நிபந்தனையோடு கௌசிகனை மணந்தாரென சொல்லப்படுகிறது.

 

கௌசிகன் நிபந்தனைகளில் தவறியதால் அக்கமகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறிச்சென்றார் எனசொல்லப்படுகிறது. அவருக்குத் திருMஅணம் ஆகவில்லை என்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

 

அவர் வாழ்ந்த சமூக பின்புலமும் அவரைக் கோபப்படுத்துகிற்து.தன் மீது மோகம் கொண்ட ஒர் மன்னன் தன்னை அழைத்து காம வார்த்தைகள் பேசி கவர நினைக்கிறான். அக்கா அசையாத பொழுது, அடையும் நோக்கத்தில் மன்னன் துணிந்து புடவையை இழுத்து மன்றாடுகிறான்.

 

நிர்வாணமான அக்கா கர்ஜிக்கிறார் ‘இந்த உடல் தானே நீ விரும்புவது, இதை சிவனுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்ன செய்ய முடியும் உன்னால்?’ என கேள்வி எழுப்பி நிர்வாணக் கோலத்திலேயே கடந்து செல்கிறாள். அதன் பின் அதே கோலத்தோடு ‘ஈசன்’ புகழ் பாடி சித்தர்கள் போல் அலைந்து திரிகிறாள். துகிலுரிய படும் பொழுது அவள் மேனி முழுதும் மயிர் முளைத்து ஈசன் தன் கருணையால் அவளை காத்தான் என்கிறது அக்காவின் வரலாறு.

 

நிர்வாண கோலத்தில் இருந்த காரணத்தால் சைவமடத்தில் இருந்த

பசவண்ணா, அல்லம்மா ஆகியோர் முதலி அக்காமகாதேவியை

ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.

 

வெட்கத்தால் உடலை மறைப்போரே!

நூலாடை சரிகையில்

ஆண் பெண் என வேற்றுமைகண்டு நாணுவோரே!

ப்ராணநாயகன் ஈசன்

உலகெங்கும் இடைவெளியின்றி சூழந்திருக்க

நாணத்திற்கிடமுண்டோ?

சென்ன மல்லிகார்ஜுனன் உலகெலாம்

கண்ணாய் பார்த்துக்கொண்டிருக்க

மூடிமறைகின்ற இடமெது சொல்லய்யா!

 

என்ற அக்காமகாதேவியின் பாடல் அவர்களுக்குப் பதிலாகிறது.

 

அக்கமகாதேவியின் வசனங்கள் உலகின் நிலையாமையையும் இறைவனின் பெருமையையும் விளக்குகின்றன.

அக்காமகாதேவிக்கு முன் மாயை என்பதைப் பெண்ணாக பார்த்தார்கள்.

பெண் உருவில் பார்த்தார்கள்.

இவரே முதல் முதலாக மாயையைப் பெண்ணாகப் பாராமல் ஆண் உருவில் பார்த்தவர். . முன்னூறுக்கும் மேற்பட்ட வசனங்கள் அளித்துள்ளார். மந்த்ர கோப்யா, யோகாங்க த்ரிவிதி எனும் மேலும் இரு படைப்புகள் அளித்துள்ளார்.

 

 

 

அக்காமகாதேவியின் முக்கியமான சிறப்பம்சமாக நாம் காணவேண்டியது

அவரின் உணர்வு மிக்க கவிதைகளுடன் சேர்ந்து அவர் எழுதியிருக்கும்

யோகாங்க திரிவிதி கள்.

 

 

எழுநாகத்தில் உறைந்த நியூரோ விஷம்

வறண்டிருந்த ஆன்ம விருத்தி

விஷத்துளியில் நனைந்த பாலை இதயம்

 

வழிந்தது போலும்

பொழிந்த ரேத மழையில்

பதுக்கிய அமிர்தம் தெளித்து புருவ

மையத்துளிர்ந்த சமித்துகள்

 

நாகப்புணர்ச்சியின் பரமானந்தம்

மிதக்கும் கால்கள் செய்யும் பிரபஞ்சப் பயணம்

 

ஜோதியொளி லிங்கம் சூடிய

வெண்பிறை மல்லிகே ஸ்வர

 

[விதூஷ்] – மொ.ஆ)

 

அக்காமகாதேவியின் இக்கவிதை வெளிப்படுத்தும் பொருள் ஞானயோகம்.

ஆண்டாளும் மீராவும் பக்தி யோகத்தின் மூலம் இறைவனுடன் கலந்தவர்கள்.

ஆனால் அக்காமகாதேவி மட்டும் ஆதிசங்கரர், ரமணமகரிஷி போன்றவர்கள்

சென்ற ஞானயோகத்திலும் பயணிக்கிறார். ஞான யோகம் என்பது அறிவின் துணைகொண்டு முக்தி நிலையை அடைந்து ஆனந்தப்பரவசமடைவது.

ENTERS SAMADHI WITH KNOWLEDGE AND COMES OUT WITH TEARS.

பக்தி யோகம் என்பது ஆனந்தப்பரவச நிலையில் முக்தியை அடைந்து

அறிவின் தெளிவைப் பெறுவது.

ENTERS SAMADHI WITH TEARS AND COMES PUT WITH KNOWLEDGE.

பக்தி யோகத்துடன் ஞானயோகமும் அக்காமகாதேவியிடம் இருந்தக் காரணத்தால் தான் அக்கா மகாதேவி தனிமனித ஆன்மவிடுதலையை

மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் ஆன்மவிடுதலைக்காகவும்

குரல் கொடுத்தார். அதற்கு எதிராக இருக்கும் ஜாதி பேதங்களை

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகளை ஒழிப்பதிலும்

கவனம் செலுத்தினார்.

அக்காமகாதேவி 100 வருடங்கள் வாழ்ந்தக் குகை இருக்கிறது. ஆனால்

வெளி உலகுக்குத் தெரிந்து அவர் 1150 முதல் 1175 வரை 25 வருடங்கள்தான்

வாழ்ந்திருக்கிறார்.

 

 

பனிபொழியும் காஷ்மீர் மண்ணில் வாழ்ந்த லல்லேஸ்வரி 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் . 1320 – 1392. காஷ்மீரி இலக்கியத்தில் இவர்

எழுதிய வாட்சுன் என்றழைக்கப்படும் உரைமொழி மிகவும் முக்கியமானது.

ஶ்ரீநகரிலிருந்து நாலரை மைல் தூரத்தில் பந்திரேதன் என்ற சிற்றூரில் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் திருமணமான லல்லாவுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை.

24 வயதில் திருமண வாழ்க்கையை உதறிவிட்டு சந்நியாசி ஆகி

வீட்டை விட்டு வெளியில் வருகிறார். லல்லாவும் தன் ஆடைகளைத்

துறந்து நிர்வாணமாகவே வெளியேறுகிறார்.

மக்களுடன் ஒன்றாக கலந்து உரைமொழி நிகழ்த்தும் போது

மாமனார் அவள் கோலம் கண்டு வெட்கி ஆடை அணியும்படி

வற்புறுத்தியதாகவும் அதற்கு அவள், இங்கே ஆண்மகன் யார்

இருக்கிறார்கள்? இருப்பவர்கள் அனைவரும் விலங்குகளே ” என்று

பதில் சொன்னதாகவும் தெரிகிறது. அப்போது கூட்டத்திலிருந்த

மனிதர்கள் அனைவரும் ஆடுகளாக மாமனாரின் கண்களுக்குத் தெரிந்தார்கள்

என்ற கதையும் வாய்மொழியாக சொல்லப்படுகிறது.

 

நீயே ஆகாயம் நீயே பூமி

நீயே காற்று நீயே பகலும் இரவும்

நீயே நாங்கள் படைக்கும் தானியம்

சந்தணம், தண்ணீர்

நீயே சகலமும்.

இறைவா.. எதைப் படைப்பேன் உனக்கு

எதைக் கொடுப்பேன் உனக்கு?

 

 

 

கடவுளை எனக்குள் கண்டடைந்தேன். என் ஆன்மாவுக்குள் கடவுள்

வாழ்கிறான்” என்ற கருத்தை முன்வைத்த லல்லேஸ்வரி

பக்தி இயக்கத்தின் பெண்கள் வரிசையில் இந்து -இசுலாம் என்ற

இரு மதங்களையும் இணைக்கும் சக்தியாகவும் செயல்பட்டிருக்கிறார்.

இசுலாமிய சூஃபி இயக்கத்தார் லல்லாவைக் கொண்டாடுகிறார்கள்.

என்பது தனிச்சிறப்பு. குர்நானக், கபீர், துக்காராம் என்று பிற்காலத்தில்

புகழ்பெற்ற அனைவருக்கும் இவள் தான் வழிகாட்டி. இறந்தகாலமும்

எதிர்காலமும் அறிந்த நிகழ்காலத்தின் அதிசயமாக வாழ்ந்தப் பெண்

லல்லா என்கிறார்கள். லால் டேட், லல்லா, லால் தீதி, லல்லீஶ்ரீ,

யோகேஸ்வரி என்று இந்துக்கள் இவரைக் கொண்டாட இசுலாமியர்களோ

இவரை லல்லா அரிஃபா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். .

 

 

Series Navigation
author

புதிய மாதவி

Similar Posts

6 Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    அருமையான கட்டுரை. இக்கட்டுரையைப் படித்ததும் எனக்கு காரைக்கால் அம்மையார் நினைவு எழுத்து. பேயாகி நின்றார் அவர். ஆடையின்றி ஆலவாய் அழகன் அன்பினையே ஆடையாக்கித் திரிந்தார் இவர். என்னே பெண்ணின் பெருமை. மயிர்க்கூச்சல் எடுக்கிறது. இதைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

  2. Avatar
    கரிக்குளம் says:

    கட்டுரையாசிரியை பெரிய சிந்தனையாளர் என்று கேள்விப்படுகிறேன். ஆனால் சிந்திக்கவே மறுக்கிறாரே!

    அவர் சிந்திக்க வேண்டியவை:

    ஏன் ஆணின் தெய்வ பக்தி அவன் இஷ்ட தெய்வத்திடம் என உடலை எடுத்துக்கொள் என கேட்கவில்லை?
    ஒருவேளை, அத்தெய்வம் ஆணாக இருந்தால் கேட்க முடியாதென நினத்தால், ஏன் பெண்தெய்வத்தை இஷ்ட தெவ்யமாகக் கொண்ட ஆண் பக்தர்கள் கேட்கவில்லை? ஏன் அபிராம்ப்பட்டர் நிர்வாணமாகி, தன் உடலை எடுத்து அனுபவிப்பாயாக எனக் கேட்கவில்லை?
    பெண்ணுக்கு உடல் புனிதமென்றால் ஆணுக்கென்ன கக்கூஸ் போக மட்டும்தானா?
    அக்கமாவை அரசன் நிர்வாணமாக ஆக்கியதால் அப்படிக் கேட்டாரென சொல்லவேண்டும்? ஆண்டாளை எவரும் நிர்வாணமாக்கவில்லை! ஆனால் அவர் தன்னுடலை வைத்தே பக்தி பாசுரங்கள் படைக்கிறார்?
    மானுடர்க்கெனில் வாழ்க்கைப்படேன் என்று சொல்லி இரங்கனுக்கு மட்டும்தான் என்னுடல் என்கிறாரே? அவர் சொன்னபிறகு இது காமமே பக்தியாக என நம்பச்செய்கிறவர்கள், ஏன் அவர் தன் மனத்தை வைத்துப் பேசவில்லை என்று விளக்கம் சொன்னார்களா?
    சரி, இது பக்தி என்றாலும் ஏன் ஆண் பக்தியும் பெண் பக்தியும் தனித்தனியாக இருக்கின்றன? ஒன்று உடலைச்சுற்றி, மற்றொன்று உடலுக்கு வெளியே.
    பெண் தன் உடலை ஏன் இவ்வளவு தூரம் போற்றுகிறாள்: ஒன்று அது ஆணுக்கு சமர்ப்பணம். இல்லாவிட்டால் இஷ்ட தேவனுக்கு? என்று. என்னவோ இறைவன் இவளின் உடல சதை சுகத்துக்கு அலைந்ததைப்போல. இறைவன் மனித சதைக்காகவா அலைகிறான்?
    ஏன் புருசன் என்னுடலைத் தீண்ட மறுக்கிறான்; எனவே நீ அனுபவி என்று சிவனைக்கேட்டதாக அல்லவா காரைக்கால், மற்றும் அக்கம்மா கதைகள் போகின்றன !
    ஏன் இப்படிப்பட்ட காம உணர்வு அவர்களுக்கு?
    அசிங்கமாகத் தெரியவில்லையா புதிய மாதவிக்கு?
    பெண்ணை உடலுக்குள்ளே சுறறிசுற்றிவர அவளை வளரவிடாமல் தடுத்தைதை ஆண்வர்க்கம் செய்தத்தாகக் புதிய மாதவிக்கு எந்த உணர்வும் எழவேயில்லையா? என்ன தாயீ இது?

  3. Avatar
    ஷாலி says:

    மெய்வழி பயணத்தில் பெண்ணுடலை தேடும் புதிய மாதவி என்ன சொல்ல வருகிறார்.? ஆணையும் பெண்ணையும் படைத்த இறைவன்,சில ஆண் வெறுப்படைந்த பெண்களை தடுத்தாட்கொண்டு ஐக்கியமாகிறான்.இவர்கள் தெய்வ நிலை அடைகிறார்கள் என்ற கதையை சொல்கிறார்.

    மனித இன வளர்ச்சிக்கு இயல்பான ஆண்,பெண் உறவை மறுதலித்து,மனிதப் பெண்ணுடலை அறிவுக்கு ஒப்பாதா ஆண்டவனுடன் சேர்ப்பதில் புதிய மாதவிக்கு என்ன சுகமோ?

    மெய்யியல் தேடலில் அறிவுக்கு பொருத்தமில்லாத ஆண்டவன் ஆட்கொண்ட பெண்ணுடலை அளவாவி மகிழ்வதில் அர்த்தமுண்டோ? இதுதான் இவரது மெய்யியல் தேடல் என்றால் இங்கு ஏராளமான புராண குப்பைகள் தாராளமாக உள்ளன.கிண்டி கிளறி பொய்யியலை பொருக்கட்டும்.

  4. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு கரிக்குளம் அவர்களே,

    பக்தியில் பலவகை உண்டு. சைவ சமய குருவர்கலான நாள்வரை எடுத்துக் கொள்வோம்.
    திருஞான சம்பந்தர் சிவபெருமானைத் தந்தை உறவில் அணுகினார். சுந்தரமூர்த்தி நாயனாரோ, ஆடலரசனைத் தோழனாக நடதிதிப் போற்றினார். வாக்கில் வல்ல திருநாவுக்கரசர், தன்னை ஒரு வேலைக்காரனாகவும், அம்பலவாணனைத் தன் எஜமானனாகவும் கொண்டார். அனைவர் மனத்தையும் உருக்கும் திருவாசகத்தை எழுதிய வாதவூராரான மணிவாசகர் தமைத் தறிகெட்டு அலைந்த கடையானாகவும், ஆலவாய் அண்ணல் தன்னைத் தடுத்தாட்கொண்ட பிரானாகவும் போற்றினார்.

    அமரகவி பாரதி “கண்ணன் என் காதலன்” என்று தன்னையே பெண்ணாக நினைத்துக் கவி புனைந்தார்.

    பக்தி பலவகைப்படும். இதில் விரசம் எதுவிமில்லை. உடலின்பத்தையும் தாண்டியது இறை உணர்வு.

    “நீ கொடுத்த உடல் உன்னுடையது. பிறர்க்கல்ல” என்று பணிவது இறைவனோடு இணையும் பேரின்பத்தையே சுட்டுவதல்லாது, மனித உடலுருவான சிற்றின்பத்தைச் சுட்டுவதல்ல.
    //ஏன் புருசன் என்னுடலைத் தீண்ட மறுக்கிறான்; எனவே நீ அனுபவி என்று சிவனைக்கேட்டதாக அல்லவா காரைக்கால், மற்றும் அக்கம்மா கதைகள் போகின்றன !//
    இது மிகவும் அவலமான குறிப்பீடு. காரைக்கால் அம்மையார் இறைவனைத் தந்தையாகவே கருதி பக்தி செய்தார். அவரின் பக்திப் பாடல்கள் சைவத் தமிழ் மறையில் ஒன்றான பதினொன்றாம் திருமுறையில் இடம் பெறுகின்றன. அவரது இறைவலிமையையைக் கண்டு அஞ்சி இளமையில் கணவனால் துறக்கப்பட்ட அவர் — இல்வாழ்க்கையை விரும்பாமல் முதுமையை விரும்பிப் பெற்ற ஔவையாரைப்போல — பேய் உருவத்தைப் பெற்ற பெண்ணிற் பெருந்தகையை — கால்களால் தீண்டினால் தீது என்று, கைகளாலேயே திருக்கயிலையை அடைந்த அவரை — அம்மையே என்று இறைவனாலேயே அழைக்கப்பட்ட அவரைப் பற்றித் தரக்குறைவாக எழுதவும் கை எப்படித் துணிகிறது?

    மாற்றுக் கருத்தைச் சொல்வது வேறு, தரக்குறைவாக எழுதுவது வேறு — உணர்ந்து செயல்படுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

    வணக்கம்!

  5. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // ஒன்று அது ஆணுக்கு சமர்ப்பணம். இல்லாவிட்டால் இஷ்ட தேவனுக்கு? என்று. என்னவோ இறைவன் இவளின் உடல சதை சுகத்துக்கு அலைந்ததைப்போல. இறைவன் மனித சதைக்காகவா அலைகிறான்? //

    இது இறைவனின் காம உணர்வு சம்பந்தப்பட்டதல்ல. ஒரு பெண் தன்னிடம் இருக்கும், தான் உயர்வானதாக நினைக்கும் ஒன்றை மனிதனுக்கல்ல, இறைவனுக்கே என்று அர்ப்பணம் செய்கிறாள். அதுதான் செய்தி. இங்கு இறைவன் உடல் சுகத்துக்கு அலைகிறார் என்று எவருமே சொல்லவில்லை.

    ஆண்டாள் சொன்னது, நான் இறைவனால் ஆட்கொள்ளப்படவேண்டிய தகுதி கொண்டவள், அப்படிப்பட்ட என்னை கேவலம் மானுடன் தீண்டக்கூடாது என்று அறைகூவியவள். அதனாலேதான் இறைவனுக்குரிய அவிர்பாகத்தை நாய் முகரக்கூடாது என்று கண்டிக்கிறாள். இங்கு ஆண்டாளின் இறைபக்தியும் தன்னையே இறைக்கு சமர்ப்பணம் செய்யும் தானற்றுப்போகும் தன்மையுமே முக்கியப்படுத்தப்படுகின்றன.

    இதே முறையில், ‘இறைவனுக்கு எதற்கு நைவேத்யம், இறைவன் என்ன சோற்றுக்கு அலைகிறானா’ என்றும் வினவலாம்.

    உங்களைப்போன்ற மாபெரும் சிந்தனையாளர்தான் கேட்டார், ’சரஸ்வதிதேவி உன் நாவில்தான் மலஜலம் கழிக்கிறாளா’ என்று.

  6. Avatar
    puthiyamaadhavi says:

    நமக்கு இப்பெண்க்ளைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை சுருக்கமாகச் சொல்லி இறுதியாக என் கருத்துகளை முன் வைக்கிறேன்.அதையும் வாசிப்பின் இக்கட்டுரை குறித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று தெரிவிக்க விரும்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *