மொழியின் அளவுகோல்

26
1 minute, 45 seconds Read
This entry is part 2 of 29 in the series 23 ஜூன் 2013

 

தேமொழி

 

ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது?

 

உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்),

  • 10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன

  • 22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன

  • 35% மொழிகள் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றன ஆனால் அவற்றின் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது

  • 21% மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப்படுகிறது

  • 13% மொழிகள் அழியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன, இதனை பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் இம்மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.

 

இந்த 7105 உலக வாழும் மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்கா நாடுகளில் 2146, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஆஸ்திரேலிய/பசிஃபிக் நாடுகளில் 1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. வாழும் மொழிகள் அதிக எண்ணிக்கையில் ஆசியாவிலும், எண்ணிக்கையில் குறைவாக ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன.  அத்துடன் அதிக மொழிகள் அழியக்கூடிய ஆபத்தில் இருப்பது அமெரிக்க நாடுகளில். வாழும் மொழிகளில் பல நல்ல பயன்பாட்டில் இருப்பது ஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஆஸ்திரலிய/பசிஃபிக் பகுதியில் உள்ள நாடுகளில்.  ஐரோப்பிய நாடுகளில் மொழிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பல மொழிகள் நல்ல மேன்மையான நிலையில் பயன்பாட்டில் உள்ளன.

 

இது போன்ற மொழிகளைப் பற்றிய புள்ளி விபரங்களைத் தருவது ‘எத்னலாக்’ (Ethnologue – http://www.ethnologue.com/). எத்னலாக் என்பது ஒரு விரிவான மொழி அட்டவணை (comprehensive language catalogue). உலகளவில் மொழியியல் வல்லுனர்களுக்கும், மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஒரு இன்றியமையாதப் பட்டியல்.  பொதுவாக மதத்தினை பரப்பும் பொருட்டு தங்கள் மறை நூல்களை/விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்கு பெரும் பொருளைச்  செலவு செய்ய எண்ணும் மதநிர்வாகத்தினர் இந்தப் பட்டியலின் துணையுடன் ஒரு குறிப்பிட்ட மொழியின் தற்கால நிலையை அறிந்து அதற்கேற்ப  பொருட் செலவு செய்வதைப் பற்றி முடிவெடுப்பார்கள். இது போன்ற மற்றும் பல மொழி சார்ந்த திட்டங்களுக்கும் இப்படியல் தரும் புள்ளி விபரங்கள் உதவும்.

 

இந்தப் பட்டியல் 1951 ஆண்டு முதற்கொண்டு ‘தி சம்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லிங்க்விஸ்டிக்ஸ்’ (The Summer Institute of Linguistics – SIL) என்ற மொழியியல் நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. பல மொழியியல் வல்லுனர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் தொகுக்கப் பட்டது  இந்த விரிவான மொழி அட்டவணை. இப்பட்டியல் உலகில் உள்ள அனைத்து புழக்கத்தில் உள்ள மொழிகளையும், 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு மறைந்த மொழிகளையும் பற்றிய செய்திகளைத் தரும் ஒரு தகவல் களஞ்சியம். இப்படியல் தரும் புள்ளி விபரங்களில் ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிவின் மக்கட்தொகை, அவர்கள் கல்வியறிவின் நிலை, உலகின் எப்பகுதிகளில் அம்மொழி பேசப்படுகிறது, அதன் தற்கால வளர்ச்சி நிலை போன்ற தகவல்கள் அடங்கும். ஏறத்தாழ ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய  மேம்படுத்தப்பட்ட ‘எத்னலாக்’ பதிப்பு வெளியிடப்படுகிறது. தற்பொழுது வெளிவந்துள்ள இப்புதிய பதிப்பின்படி 1950 ஆம் ஆண்டு வழக்கில் இருந்த மொழிகளில் 375 மொழிகள்  மறைந்துவிட்டது தெரிய வருகிறது.

 

இந்த அண்டு மார்ச் மாதம் (மார்ச் 2013) வெளிவந்துள்ள ‘எத்னலாக்’கின் புதிய 17 ஆம் பதிப்பு இணையத்தின் வழியாக மொழியியல் துறை வல்லுனர்கள் மட்டுமின்றி, மொழியைப் பற்றிய ஆர்வலர்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நூல் வடிவம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுளள்ளது.  இப்புதிய பதிப்பில் ஒவ்வொரு மொழிக்கும் மூன்றெழுத்திலான ஒரு குறியீடு (ISO-codes, three-letter language identifier codes) அளிக்கப்பட்டுள்ளது. இக்குறியீடுகள் சர்வதேச தரநிர்ணய அமைப்பின் (International Organization for Standardization, ISO 639-3) முறையினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்றெழுத்துக் குறியீடுகள் ஆகும். இதில் தமிழுக்காக ஒதுக்கப்பட்ட குறியீடு  tam (http://www.ethnologue.com/language/tam). பொதுவாக ஒரு மொழியை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நிலை இருக்கும்பொழுது இந்த சீரான குறியீட்டு முறை குழப்பத்தைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, சமஸ்கிரதம் என்பது சான்ஸ்க்ரீட்  என்றும் வடமொழி என்றும் அறியப்படும் பொழுது ‘san’ என்னும் அதன் குறியீடு குழப்பத்தைத் தவிர்க்கிறது (http://www.ethnologue.com/language/san). கவனத்தைக் கவரும் பக்க குறிப்பு ஒன்று: இந்த அட்டவணை தரும் தகவலின்படி சமஸ்கிரதம் ஒரு  செம்மொழி (Classical language) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

 

இப்பட்டியல் தமிழ் மொழியைப் பற்றி அளிக்கும் தகவல்: தமிழ் உலகளவில் 68 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அதில் 60 மில்லியன் தமிழர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். இது தமிழகப்பகுதியில் பெரும்பாலும் பேசப்படுகிறது.  அத்துடன் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அன்றி இரண்டாம் நிலையில் ஒரு மாநிலத்தின் மொழியாக உள்ளது (Language Status – 2 /Provincial). இளநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகிறது.  1727 ஆம் ஆண்டு முதல்  தமிழ் விவிலியத்தின் முழுமையான பதிப்பு வழக்கில் உள்ளது.  அத்துடன் உலகில் மற்ற எந்தெந்த  நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது  என்றும், எத்தனை வட்டார வழக்குகள் உள்ளன என்றும் குறிபிடப்பட்டுள்ளது. மலேஷியா, சிங்கப்பூர், மரைட்டஸ், ஸ்ரீலங்கா நாடுகளில் தமிழின் நிலை பற்றிய மேலதிகத் தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது.  அவற்றில் ஸ்ரீலங்காவில் மட்டும் தமிழ் ஆட்சி மொழியின் நிலையிலும் (நிலை 1), மற்ற பிற நாடுகளில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் நிலையிலும் (நிலை 4) இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

மொழிவாரியாகவும், உலகின் பகுதிவாரியாகவும், நாடுகள் வாரியாகவும் தகவல்கள்கள் வழங்கப் பட்டுள்ளன (http://www.ethnologue.com/statistics). குறிப்பாக இந்தியாவில் மொழிகளின் நிலையைப் பற்றி அறிய விரும்பினால், இத்தளம் வழங்கும், இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் பகுதிகளை விளக்கும் வரைபடங்கள் (http://www.ethnologue.com/country/IN/maps), மற்றும் இந்திய மொழிகளின் நிலையைப் பற்றிய தகவல்கள் (http://www.ethnologue.com/country/IN) ஆகியவற்றின் துணை கொண்டு அறிந்து கொள்ளலாம்.  இந்திய மொழிகள் எனப் பட்டியலிடப் பட்ட 461 மொழிகளில் 447 மொழிகள் மட்டுமே தற்பொழுது புழக்கத்தில் உள்ளன,14 மொழிகள் முற்றும் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. அவ்வாறு இருக்கும் 447 மொழிகளிலும் 55 மொழிகள் ஆபத்தான நிலையிலும், 12 அழிவுப் பாதையிலும் சென்று கொண்டுள்ளன, 380 மொழிகள் மட்டுமே நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளன.

 

மொழியின் அளவுகோல்:

இவ்வாறு பற்பல தகவல்களை திரட்டித் தரும் இந்த அட்டவணை, மொழிகளின் வளர்ச்சி நிலையை எவ்வாறு அளக்கிறது என்பதையும் அறிந்து கொள்வது நம் மொழியின் வளர்ச்சியை நாம் கண்காணிக்க உதவும். இப்புதிய பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ‘மொழிமேகம்’ (Language Cloud) என்ற விளக்கப் படம் ஒரு ‘மொழிவளர்ச்சி அளவுகோல்’ ஆகும். ஒரு மொழியின் தற்கால வளர்ச்சி நிலையை உலகில் உள்ள  மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வண்ணம் வரைபடமாகவும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த அளவீடுகள் மிகவும் பயனுள்ளது. மொழியின் உபயோக நிலையை பல்வேறு வர்ணங்களால் குறியிட்டு விளக்கப்படுவதால் இம்முறை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

 

இந்த அளவிடும் முறை EGIDS (Expanded Graded Intergenerational Disruption Scale) என்று குறிப்பிடப்படுகிறது.  ‘ஜாஷுவா ஃபிஷ்மேன்’ (Joshua Fishman) என்னும் மொழியியல் வல்லுநர் (linguist) 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘ரிவர்சிங் லாங்குவேஜ் ஷிஃபிட்’ (Reversing Language Shift) என்னும் நூலில் அவர் உருவாக்கியிருந்த GIDS (Graded Intergenerational Disruption Scale) என்ற முறையினை அடிப்படையாகக் கொண்டு, அதனை மேலும் விரிவுபடுத்தியதாக இம்முறை விளங்குகிறது. 0 முதல் 10 வரை உள்ள அளவுகளில் குறிக்கப்படும் இந்த அளவுகோளின்படி, 0 என்னும் நிலை ஆங்கிலம் போன்ற ஒரு பன்னாட்டு மொழியையும், 10 என்பது மறைந்துவிட்ட மொழியையும் குறிக்கும். மேலும் இந்த 0 – 10 வரை உள்ள மொழியின் வளர்ச்சி நிலையை மேலும் தெளிவாக வகைப்படுத்த, மொழிகளைப் பலப் பிரிவுகளாகப் பிரித்து அப்பிரிவுகளுக்கு ஒரு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது.

 

ஊதா = (EGIDS 0-4) —  நிலைபடுத்தப்பட்டுவிட்ட மொழி – மொழி நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளது

நீலம் = (EGIDS 5) — வளரும் மொழி – மொழி பயன்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கிறது

பச்சை = (EGIDS 6a) — உயிரோட்டமுள்ள மொழி – மொழி நல்ல பயன்பாட்டில் இருக்கிறது ஆனால் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது, ஆனால் பரவலான பயன்பாட்டில் இல்லை

மஞ்சள் = (EGIDS 6b-7) — சோதனையைச் சந்தித்துள்ள மொழி – மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கிறது, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப் படுவது மட்டுமே மொழியின் நிலை மாறக்கூடும் என்று நம்பிக்கையைத் தரும் வகையில் உள்ளது

சிவப்பு = (EGIDS 8a-9) — அழியும் நிலையில் உள்ள மொழி – மொழி அழியும் ஆபத்தான நிலையில் இருக்கிறது, இதனை பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் மொழியின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.

கருப்பு = (EGIDS 10) — அழிந்துவிட்ட மொழி – யாருமே பயன்படுத்தாத நிலையை அடைந்து, யாரும் தங்கள் கலாச்சாரப் பின்னணியாகவும் அந்த மொழியை அடையாளம் காட்டாத நிலை (கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மேற்கூறப்பட்ட இந்த அளவீடை அடிப்படையாகக் கொண்டது).

 

இந்த அளவிடும் முறைப்படி மொழியின் தற்கால நிலையென (0 விலிருந்து 10 வரையான எண்)  கணக்கிடப்பட்ட EGIDS அளவு உலகில் அம்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டு, பிறகு இம்மொழியையும் அதனது பயன்பாட்டு நிலையைக் குறிக்கும் வண்ணத்தில் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் ஒரு புள்ளியாகக் குறிப்பதால், ஒரே பார்வையில் அந்த மொழியின் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம்.  உலகத்தில் உள்ள 7105 மொழிகளும் இந்த வரைபடத்தில் அதன் வளர்ச்சிக்கேற்ப ஒரு புள்ளியாகக் குறிப்பிடப்படுகிறது. நேர் அச்சில்(y axis) மொழியினைப் பேசும் மக்கட்தொகை ‘மடக்கை அளவிலும்’ (in logarithmic scale, 100 = 1; 102 = 100; 104 = 10,000; 106 = 1,000,000; 108 = 100,000,000), கிடை அச்சில் (x axis) EGIDS அளவீடான மொழியின் வளர்ச்சியின் அளவும் குறிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து மொழியின் புள்ளிகளையும் ஒருங்கே பார்க்கும் பொழுது இப்படம் ஒரு மேகம் போலத் தோற்றமளிப்பதால் ‘மொழிமேகம்’ என்று இந்த வரைபடம் குறிப்பிடப்படுகிறது.  அதிகமாகப் பேசப்படும், நன்கு வளர்ச்சியடைந்த மொழி படத்தில் இடது மேற்புறம் ஊதா வண்ணத்திலும் அழிந்துவிட்ட மொழி படத்தில் வலது கீழ்புறத்தில் கருப்பு வண்ணத்திலும்  இடம் பெறும்.

 

ஒவ்வொரு மொழிக்காகவும் ஒரு குறியீடு கொடுக்கப்பட்டிருப்பது போலவே, ஒவ்வொரு மொழிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அதன் தனிப் பக்கத்தில் மொழிமேகத்தில் அந்த மொழியின் வரச்சியைக் குறிக்கும் வரைபடமும் கொடுக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில், படம் – 1 இல் ‘மொழியின் அளவுகோல்’; படம் -2 இல் மொழியின் அளவுகோலைக் கொண்டு உருவாக்கப் பட்ட மாதிரி ‘மொழிமேகம்’ விளக்கப்படம்’; படம் – 3 இல் ‘தமிழின் வளர்ச்சி நிலை’ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ் மொழியின் நிலை தற்கால நிலை:

இந்த மொழியின் அளவுகோலின்படி, ஒரு மொழி பயிற்றுமொழியாக இருப்பது ஒரு முக்கிய அடிப்படைத் தகுதியாகவும், அளவுக்குறியாகவும் இருக்கிறது.  ஒருவருக்கு அவரது தாய்மொழியில் படிப்பதுதான் எளிது என்ற ஆராய்ச்சி முடிவுகளைக் கருத்தில் கொண்டு, உலக ஐக்கிய நாடுகள் சபை (UNESCO) தாய்மொழிக் கல்வியினை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழி நாளாகக் குறிப்பிட்டு, விழா எடுத்து தாய்மொழியின் முக்கியத்தை உணர்த்தப் பாடுபட்டு வருகிறது. மொழிகளைப் பாதுகாக்க உலகம் தழுவிய முறையில் எடுக்கப்படும் உன்னதமான நடவடிக்கையாக இச்செயல் விளங்குகிறது.

 

இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும் அது ஒரு மாநில மொழி மட்டுமே, இந்தியாவில் தமிழ் ஓர் ஆட்சி மொழியல்ல. தமிழர்களும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கெளவரமாகவும், ஆங்கில நூல்களைப் படித்து விவாதிப்பதைப் பெருமையாகவும் பல தலைமுறைகளாகக் கருதி வருகின்றனர். மேலும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அறிவும் குறைவு என்ற ஆணித்திரமான மனப்பான்மையும் உள்ளவர்கள் பெரும்பாலான தமிழர்கள்.

 

இவ்வாறாக மொழியின் அளவுகோலின்படி மொழியின் மாட்சியான நிலையெனக் குறிக்கும் ஒவ்வொரு அளவீடுகளிளும் தமிழின் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழின் நிலை இவ்வாறிருக்க, சமீபத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளும், பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி என்ற நிலைப்பாடும் மொழியின் வளர்ச்சி அளவுகோலின் பயிற்றுமொழி என்ற தகுதியிலிருந்தும்  தமிழை விலக்கிச் செல்லும் முதல் நடவடிக்கையாக இருக்கிறது.  இந்த முடிவு சரிதானா என்பதை மொழியின் ஆர்வலர்கள் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகிறது.

References:

[1] Ethnologue’s newest edition reports vitality of sign languages worldwide. (http://www.sil.org/about/news/ethnologue%E2%80%99s-newest-edition-reports-vitality-sign-languages-worldwide)

 

[2] Assessing endangerment: Expanding Fishman’s GIDS. Revue Roumaine de Linguistique, Paul M. Lewis & Gary F. Simons. 2010. 55.2: 103–20. (http://www-01.sil.org/~simonsg/preprint/EGIDS.pdf)

 

[3] Language development versus language endangerment: Assessing the situation worldwide, Gary F. Simons, SIL International. IAS and GILLBT conference on Language and Culture in National Development, University of Ghana, Legon, 12–13 April 2012. (http://www-01.sil.org/~simonsg/presentation/Ghana%202012.pdf)

 

[4] Expanded Graded Intergenerational Disruption Scale.(http://surveywiki.info/index.php/EGIDS)

 

[4] International Mother Language Day (IMLD). (http://www.un.org/en/events/motherlanguageday/)

 

[5] UNESCO Atlas of the World’s Languages in Danger.(http://www.unesco.org/culture/languages-atlas/index.php)

 

[6] Analyzing the role of instructional language in Enhancing scientific cognition of elementary level Students belonging to marginalized communities; Sindh – Pakistan, Dr. Tayyaba Zarif and Dr. Aijaz Ahmed. ISSN: 2186-8492, ISSN: 2186-8484 Print Vol. 2. No. 1. February 2013. (http://www.ajssh.leena-luna.co.jp/AJSSHPDFs/Vol.2(1)/AJSSH2013(2.1-29).pdf)

 

[7] Karuna opposes English in govt schools as medium of instructions, Chennai, May 14, 2013. (http://indiatoday.intoday.in/story/karuna-opposes-english-in-govt-schools-as-medium-of-instructions/1/271024.html)

Series Navigationபடைப்புதனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
author

தேமொழி

Similar Posts

26 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    முதலில் “தேமொழி” என்று பெயரிட்ட அவரது முத்தமிழ்த் தாய் தந்தையருக்கு என் பணிவான நன்றிகள், பாராட்டுகள்.
    கருத்து மிக்க நீண்ட கட்டுரையைப் படிக்க சிறிது நேரம் தேவை தேமொழி.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      தேமொழி says:

      கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஜெயபாரதன் ஐயா. என் தந்தையிடம் உங்கள் பாராட்டினைச் சேர்ப்பித்து விடுகிறேன்.

      அன்புடன்
      ….. தேமொழி

  2. Avatar
    R.Karthigesu says:

    நீங்கள் அம்புக்குறி போட்ட இடத்தில் தமிழ் இருந்தால் அது மிகவும் நிலையாக, உறுதியாக இருப்பதுபோலத்தானே தோன்றுகிறது? அப்புறம் ஏன் உங்கள் interpretation மட்டும் முரணாக அமைகிறது? //(EGIDS 0-4) — நிலைபடுத்தப்பட்டுவிட்ட மொழி – மொழி நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளது// என்றால் உங்கள் படத்தில் EGID 1இல் இருக்கும் தமிழ் //மொழியின் மாட்சியான நிலையெனக் குறிக்கும் ஒவ்வொரு அளவீடுகளிளும் (sic) தமிழின் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது// என ஏன் முடிவு செய்கிறீர்கள்?

    1. Avatar
      தேமொழி says:

      கட்டுரையைப் படித்து தங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கார்த்திகேசு.

      தமிழின் எதிர்கால வளர்ச்சி நிலையைப் பற்றி கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள படம் 1 இல் குறிப்பிட்டப்பட்டுள்ள அளவீட்டுக் குறியீடுகளுடன் ஒப்பிட்டு எழுதிய கருத்து அது.

      ஆங்கிலம் போல தமிழ் பன்னாட்டு மக்கள் தங்களுக்குள் உரையாட பயன்படுத்தப்படும் நிலை இருந்தால் மேன்மையானதுதான்.

      கீழே ஒவ்வொரு மொழியின் வளர்ச்சி அளவீட்டுக் குறியுடனும் ஒரு ஒப்பீடு…

      அளவீடு 0: உலகமொழி – தமிழின் நிலை இதுவல்ல

      அளவீடு 1: தேசியமொழி – தமிழின் நிலை இதுவல்ல

      அளவீடு 2: மாநிலமொழி – மாநில மொழியாக இருந்தாலும் நீதிமன்ற அறிக்கைகளில், நடவடிக்கைகளில் தமிழ் பயன்படுத்தப்படுவதாக நான் அறிந்திருக்கவில்லை. கடைகளின் பெயர்ப் பலகைகள் என இன்னமும் பல குறிப்பிடலாம். குழந்தைளுக்கு வைக்கப்படும் பெயர்களும், திரைப்பட பெயர்களும் தமிழில் இருக்கட்டுமே என ஊக்கப் படுத்த வேண்டிய நிலை உள்ளது இக்காலத்தில்.

      அளவீடு 3: பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழி – இதைப் பற்றிக் குறிப்பிடுவதே தேவையற்றதுதான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் போல இந்தியாவில் வசிக்கும் தமிழர்கள் தாய்மொழியில் ஆர்வமற்றவர்கள் என்பதை நாம் அறிவோம். உரையாடல்களிலும், எழுதுவதிலும் பற்பல பிறமொழிச் சொற்கள் தேவையின்றி நுழைகிறது. அது முதலில் மம்மி, டாடியில் தொடங்குகிறது.

      அளவீடு 4: பயிற்றுமொழி – இது வரை அரசு நடவடிக்கை எடுக்காமலே பலர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி பயிலுவதற்கு முன்னுரிமை அளித்து வந்திருக்கின்றனர். இப்பொழுது இதற்கு அரசும் ஆதரவு அளிப்பது போல அரசு பள்ளிகளில் பயிற்று மொழி என அறிவிப்பு வந்திருக்கிறது.

      இதனால்தான் ஒவ்வொரு அளவீட்டிலும் தமிழின் நிலை தடுமாற்றத்துடன் இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தேன்.

      நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை:
      (1) பிற மாநிலப் பள்ளிகளில் பயிற்றுமொழிக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. எந்த வகுப்பில் ஆங்கிலம் அறிமுகப் படுத்தப் படுகிறது என்பதுடன் தமிழக நிலையை ஒப்பிடுதல் பயனளிக்கும்.

      (2) 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பள்ளிகளில் பயிற்றுமொழியாகத் தமிழ்தானே இருந்தது. Silver tongue Srinivasa Sastri என்று பெருமைப்படுத்தப் படுபவரும், சர்.சி.வி. ராமன் எனப் பலரும் தமிழில் படித்து உலக அளவில் சாதித்ததை நாம் அறிவோம். நம்மில் பலருமே தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு பள்ளியில் படித்தவர்கள்தான். ஆங்கிலம் அறிமுகப் படுத்தப் பட்டது 3 ஆம் வகுப்பில்தான். அதனால் நாம் திறமை அற்றவர்களாக இருக்கிறோமா?

      பொதுவாக பலமொழிகளைக் கற்பது சிறுவயதில் எளிது. அதனால் சிறுவயதினர் எளிதில் கற்றுக்கொள்வர். தமிழுடன் மற்றொரு மொழி படிப்பது பெரிய காரியமல்ல. என் தோழியர்களில் பலர் பள்ளியில் தெலுகு, மலையாளம் என்பதைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர்கள் உண்டு. வீட்டில் அவர்கள் மொழியில் பேசினாலும் அவர்களுக்கு தமிழும் ஆங்கிலமும் படிப்பது பள்ளி நாட்களில் சிரமமாக இருந்ததில்லை. சிறுவயது மூளை எதனையும் கிரகிக்கும்.

      ஆனால் பயிற்றுமொழியாகத் தமிழைப் புறக்கணிக்கத் துவங்கும் வகையில் எடுக்கப்படும் முடிவுகள் சரிதானா என்பதை நாம் சித்திக்க வேண்டும். மொழி வளர்ச்சிக்கு ஒரு அளவுக் குறியீடாக ஆராய்ச்சியாளர்களால் ‘பயிற்றுமொழி’ என்னும் நிலை குறிக்கப்பட்டுள்ளது.

      பயிற்றுமொழி நிலையைத் தவிர்ப்பது நாளடைவில் அம்மொழியின் பேசுவபர்கள், படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவதைத் துரிதப்படுத்தும்.

      அம்மொழியில் தோன்றும் இலக்கியங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும், அதனால் மொழியின் வளர்ச்சியும் தேக்கமுறும் நிலை ஏற்படும் அல்லவா? இதுவரை கொண்டிருக்கும் மொழியின் வளர்ச்சி நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி எடுப்பது அவசியமல்லவா?

      அன்புடன்
      ….. தேமொழி

      1. Avatar
        R.Karthigesu says:

        அதாவது “இந்த எத்னாலாக் அளவீடு குறிப்பிடுவது போல தமிழ் உறுதியாக இல்லை; இந்த அளவீடு தவறு” என்றே சொல்கிறீர்கள். என் பார்வையில் இந்த அளவீட்டின்படி தமிழ் இருக்கும் நிலைகண்டு நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்.

  3. Avatar
    Dr.G.Johnson says:

    தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றி கவலை கொள்ளும் தமிழ் ஆர்வலர்களுக்கு பயனுள்ள தகவல்கள் தரும் இக் கட்டுரையை அருமையாக, எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் படைத்துள்ள தேமொழிக்கு பாராட்டுகள்.

    அளவீடுகள் 0, 1, 2 நிலையில் தமிழ் மொழி இல்லை என்பது உறுத்தலையே உண்டுபண்ணுகிறது.இந்திய நாட்டில் தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படும் நிலை வருமா என்பது தெரியவில்லை. ஆனால் சிறிய நாடான சிங்கப்பூரில் தமிழ் ஒரு தேசிய மொழியாக நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து செயல்பட்டு வருகின்றது. சிங்கப்பூர் டாலர் நோட்டிலும் , நாணயத்திலும் தமிழ் பொறிக்கப்பட்டுள்ளது பெருமையானது.அதோடு அரசு அலுவகங்கள் , அரசு அறிக்கைகள் அனைத்திலும் தமிழ் மொழி உள்ளது.

    சிங்கப்பூரில் பள்ளிகளில் தாய்மொழி கட்டாயப் பாடமாகப் போதிக்கப் படுவதால் இளைய தலைமுறையினர் தமிழைத் தொடர்ந்து கற்கவும் பயன்படுத்தவும் எதுவாகவும் உள்ளது.

    மலேசியாவில் இந்த நிலை இல்லை. இங்கு தமிழ்ப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு வரை உள்ளன.ஆனால் ஒரு தமிழ் உயர்நிலைப் பள்ளிகூட இல்லை ! இதனால் மலாய் உயர்நிலைப் பள்ளி செல்லும் தமிழ் மாணவ மாணவிகள் தமிழைத் தொடர்ந்து முறையாக கற்க முடியாமல் தடுமாறுகின்றனர். தமிழை ஒரு பாடமாக சிலர் பயின்று இறுதித் தேர்வு எழுதினாலும், அதன்பின் தமிழைத் தொடர்ந்து கற்கும் நிலை தடைபடுகின்றது. அவர்களில் ஒரு சிலரே பல்கலைக்கழகம் சென்று தமிழில் பயின்று பட்டம் பெறுகின்றனர்.

    சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழில் பேசுவதும், படிப்பதும் படிப்படியாகக் குறைந்து வருவது வருந்தத் தக்கது.தமிழ்ப் பிள்ளைகள் வீட்டில் தமிழ் பேசினாலும், தமிழ் படிக்கத் தெரியாமல் வளர்ந்து வருவது பெரிய அவலமாகும். இவர்கள் தமிழ்த் திரைப் படங்கள் , தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் தமிழுடன் வாழ்கின்றனர்.ஒரு இனம் தாய்மொழியைப் படிக்கத் தெரியாமலேயே வளர்ந்துவருகின்றது! இது பெரும் வெட்கக்கேடு!

    தமிழ் நாட்டில் பள்ளிகளில் தமிழைப் புறக்கணிக்கும் வகையில் அரசு ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிர்ச்சியானது! வேடிக்கையானது! தமிழை அழிக்க அரசு எடுத்துள்ள முதல் படி இது! அதோடு கிராமப்புறத்து மாணவ மாணவிகள் பெரிதும் பதிக்கப் படுவார்கள்.வீட்டில் ஆங்கிலம் பேசும் நகர்ப்புறப் பிள்ளைகளுக்கு இது வரப்பிரசாதம்!

    தமிழ் நாட்டுத் தமிழர்கள் தமிழ் மொழி மீது அக்கறை இல்லாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதும்,ஆங்கிலத்தில் பேசினால்தான் பெருமை என்று எண்ணுவது பெருகி வருவது

    வேதன்சைக்குரியது .நகர்ப் புறங்களில் ஆங்கில மோகம் அதிகரித்து வருகிறது.வானொலி ,தொலைகாட்சி போன்ற பொது ஊடகங்களின் படைப்பாளர்கள் இந்த ஆங்கிலம் கலந்த தமிழைப் பேசி இந்த கலப்புக் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இன்றைய எழுத்தாளர்களும் இதையே செய்து வருகின்றனர் – யதார்த்தம் என்று கூறிக்கொண்டு.

    சங்க காலம் தொட்டு தமிழ்ப் புலவர்கள் உயிரென மதித்து தமிழை காத்து பேணி வளர்த்துள்ளனர்.இந்த நூற்றாண்டு தமிழர்கள் மொழிப் பற்று சிறிதுமின்றி தமிழைப் புறக்கணித்தும் அழித்தும் வருவது ஏற்புடையதன்று.

    இதுபோன்ற சோகமானச் சூழலில் தமிழ் மீது பற்று கொண்டு தமிழில் இலக்கியங்கள் தொடர்ந்து படைத்து வரும் தமிழ் எழுத்தாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்கள்தான் தமிழின் வளர்ச்சிக்கு இன்னும் உயிர் கொடுத்து வ்ருகின்றனர்.

    தமிழின் எதிர்காலம் பற்றி சிந்திக்கச் செய்த தேமொழிக்கு மீண்டும் வாழ்த்துகள் .தொடரட்டும் உங்களின் பயன்மிக்க இலக்கியப் பணி !…டாக்டர் ஜி.ஜான்சன்.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    மொழியின் அளவுகோல் எனும் அருமையான கட்டுரையைப் படைத்துள்ள தேமொழிக்கு வாழ்த்துகள்.

    தமிழ் மொழி அளவீடு 0,1.2 நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளது உண்மை..ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழ் உலக மொழியாக வாய்ப்பில்லை.இந்தியாவின் தேசிய மொழியாக வருமா என்பதும் கேள்விக்குறியே.தமிழகத்தில் மாநில மொழியாக் இருந்தாலும் அதில் முழுமை இல்லை .முன்பே தமிழ் ஆபத்தான் நிலையில்தான் உள்ளது.ஆங்கிலம் கலந்த தமிழ்தான் வழக்கில் உள்ளது. வானொலி, தொலைக்காட்சியில் அறிவிப்பாளர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில்தான் பேசுகின்றனர். எழுத்தாளர்களும் அவ்வாறே எழுதுகின்றனர். தற்போது பாமர மக்களும் அவ்வாறுதான் பேசுகின்றனர்.

    தற்போது தமிழக அரசு பள்ளிகளில் தமிழைவிட ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த செயல் கிராமத்து பிள்ளைகளுக்கு சிரமத்தையே உண்டுபண்ணும்.நகரில் வாழும் பிள்ளைகளுக்கு இது வரப் பிரசாதம்.காரணம் இவர்கள் வீட்டில் பேசுவது ஆங்கிலம். ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என்று பல தமிழர்கள் எண்ணுகின்றனர்.ஆங்கிலக் கல்வி கற்றபின் தமிழ் புறக்கணிக்கப்பட்டு தேவையற்றதாகி விடுகின்றது. தமிழ் படிக்கத் தெரியாது என்றுகூட பெருமையாக இவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

    சிங்கப்பூர் ஒரு சிறிய நாடுதான். அங்கு தமிழ் ஒரு ஆட்சி மொழியாக சிறப்பு பெற்றுள்ளது. சிங்கப்பூரின் நாணயத்திலும் டாலரிலும் தமிழ் பொறிக்கப்பட்டுள்ளது.அரசாங்க அலுவலங்கள், அறிக்கைகள் ஆகியவற்றில் தமிழ் உள்ளது. அங்கு தமிழ்ப் பள்ளிகள் இல்லாவிடினும், தமிழ் ஒரு கட்டாயப் படமாக உள்ளது.பள்ளி படிப்பை முடித்தாலும் அவர்களால் தமிழில் பேசவும் எழுதவும் முடிகின்றது.ஆனால் சிலர் வீட்டில் ஆங்கிலம் பேசுவது வளமையாகி வருகிறது.

    மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. அங்கு ஆறாம் வகுப்புவரை பயில்கின்றனர்.ஆனால் அதன்பின் தமிழைத் தொடர உயர்நிலைப் பள்ளி ஒன்றுகூட இல்லை! இவர்கள் மலாய் தேசிய பள்ளியில் சேர்ந்தபின் தமிழ் ஒரு படமாக போதிக்கப்படுகிறது. அதன் பின்பு இவர்கள் தமிழ் மீது அக்கறை இல்லாமல் போகின்றனர்.தேசியப் பள்ளிகளில் துவக்கக் கல்வியை மலாய் மொழியில் கற்ற பிள்ளைகள் தமிழ் படிக்கத் தெரியாமலேயே வளரும் அவலம் உள்ளது.

    நம் மக்களிடையே தமிழிப் பேசவும் படிக்கவும் தெரியாத நிலை உருவாக்கி உள்ளது. தமிழ்த் திரைப்படங்களும் , திரைப்படப் பாடல்களும்தான் தமிழை வாழ வைக்கிறது.

    இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தாய்மொழியில் பேசவும் எழுதவும் தெரியாத ஒரு சந்ததி உருவாகிவிடும் ஆபத்து உள்ளது.

    இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழைப் பேணி வளர்த்துள்ளனர் நம்முடைய தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும். இந்த நூற்றாண்டில் நாம் தமிழ் மீது பற்றுதல் இல்லாமல் போனால் எப்படி?

    எல்லா நட்டு தமிழ் எழுத்தாளர்கள் தமிழில் எழுதி தமிழுக்கு உயிரூட்டி வருவது பாராட்டுதற்குரியது. இவர்கள் யதார்த்தம் என்று கூறி கலப்படத் தமிழ் எழுதாமல் தூய தமிழில் எழுதுவது இன்றியமையாதது.

    நம் தாய் மொழியான தமிழ் பற்றி சிந்திக்கத் தூண்டிய இந்த அருமையான கட்டுரையைப் படைத்துள்ள தேமொழிக்கு பாராட்டுகள்…டாக்டர் ஜி.ஜான்சன்.

    1. Avatar
      தேமொழி says:

      ///ஆங்கிலக் கல்வி கற்றபின் தமிழ் புறக்கணிக்கப்பட்டு தேவையற்றதாகி விடுகின்றது. தமிழ் படிக்கத் தெரியாது என்றுகூட பெருமையாக இவர்கள் கூறிக்கொள்கின்றனர்.///

      உண்மை டாக்டர். ஜான்சன், இதுபோன்ற தற்பெருமை உரைகளை நானும் கேட்டு வியந்திருக்கிறேன்.

      என் பிள்ளை கணிதத்தில் நூற்றுக்கு நூறு (அதாவது அவ்வளவு அறிவுக்கூர்மையாம்!!!) மற்றும் அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும் தமிழில் தோல்வி அடைந்ததால் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை என்று பேசிய பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். எதில்தான் பெருமை அடைவது என்று வரைமுறை இல்லாமல் போய் விட்டது.

      உங்களது சிந்தனையின் கோணமும் கட்டுரையின் கருத்துக்களைச் சார்ந்திருப்பது உற்சாகமூட்டியது. படித்து கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      அன்புடன்
      ….. தேமொழி

  5. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    அன்புள்ள தேமொழி அவர்களே

    உங்கள் மொழியியல் ஆராய்ச்சிக்கட்டுரை மொழியின் வழங்கு தன்மை அதன் பிறப்பியல் கலப்பியல் மற்றும் அதன் நுட்பமான வரலாற்றுப்படிவங்களை முன் வைக்கிறது.தமிழின் இடம் நமக்குப் புரிகிறது.முதலிடத்தில் இருக்கும் ஆங்கிலத்தின் வேர்கள் (கிரேக்கம் லத்தீன் மற்றும் பழமை மிக்க மொழிகள்)நம் கண்ணுக்கு தெரிவதில்லை.மேலே தெரியும் மரமோ அந்த வேர்களின் பிரம்மாண்டத்தைப்போல் வானம் நிறைந்து ஓங்கி நிற்கிறது.அது போல் உலக மொழித்தொன்மையியலில் தமிழ் முதன்மை வகிப்பதும் இந்த வரலாற்று ஆராய்ச்சியின் அடிமண்ணில் புதையுண்டு கிடக்கலாம்.அதற்கும் இது போன்ற நுட்ப ஆய்வுகள் தேவை.
    தொடரட்டும் உங்கள் அரும்பணி.
    வாழ்த்துக்களுடன் ருத்ரா.

    1. Avatar
      தேமொழி says:

      கட்டுரையைப் படித்து உங்களது மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கவிஞர் ருத்ரா அவர்களே.

      அன்புடன்
      ….. தேமொழி

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புள்ள தேமொழி,

    தமிழின் தற்போதைய இருப்பிட நிலை உயரத்தை அளக்க முயற்சி செய்கிறது உங்கள் ஒப்பற்ற ஆய்வுக் கட்டுரை. அதை நான் வரவேற்கிறேன். அதற்கு என் பாராட்டுகள்.

    தமிழ் மொழிச் செழிப்பில் பல நிறைபாடுகள் இருப்பினும், சில குறைபாடுகளும் உள்ளன. கலப்புத் தமிழை துவைத்து, வெளுக்க வைத்து, பிற மொழிகளை வடிகட்டித் தூய தமிழாக்கி மக்களிடையே பழக்க விடலாம் என்று சில தனித்தமிழர் பகற்கனவு காண்கிறார். நல்ல தமிழ், நடப்புத் தமிழ் “தூய தமிழ்” வடிவம் பெற்றால் 0, 1, 2, 3 நிலையை ஒருபோதும் அடையாது என்பது என் கருத்து. அந்த முயற்சி தமிழை இன்னும் பின்னோக்கித் தள்ளுமே தவிர முன்னோக்கி ஏற்றாது !
    21 ஆம் நூற்றாண்டு வரை நீடித்து நிலவி வரும் கலப்புத் தமிழுடன் நாம் என்ன உன்னத படைப்புகளைப் படைக்கிறோம் என்பதை நம் குறிக்கோளாகக் கடைப் பிடிப்பது, மொழியை விருத்தி செய்து உலகளாவிய முறையில் நிரந்தரமாய் நிலை பெறச் செய்யும்.

    http://jayabarathan.wordpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/ [விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி]

    கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை. அதே சமயம் ஐரோப்பாவில் விஞ்ஞானத் துறைகள் செழித்தோங்கி, தொழிற் புரட்சி ஏற்பட்டு, ஐரோப்பிய மொழிகளும் அவற்றை நூல்களில் வடித்து எதிரொலித்தன. வானியல், கணிதத்தில் முன்னோடி யான இந்தியா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகள் மொகாலாயர் கைவசப்பட்டு, அடுத்து பிரிட்டன் பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைத் தேசமாக அகப்பட்டுக் கொண்டதால், தமிழ்மொழி உள்பட மற்ற அனைத்து இந்திய மொழிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளை நூல் வடிவில் காட்ட முடியாமல் போயின. ஆங்கில மொழியைப் பிரிட்டன் முதன்மை மொழியாக்கி, முறையான கல்வித்துறை நிறுவகங்களை நாடெங்கும் நிறுவினாலும், தேசம் விடுதலை அடைந்த பிறகுதான் இந்தியாவில் மூலாதார விஞ்ஞானத் துறைகள் பெருகவும், விஞ்ஞான நூல்கள் தோன்றவும் வாசற் கதவுகள் திறக்கப்பட்டன.

    கலப்பற்ற தூயமொழிகள் உலகில் எங்கே உள்ளன ?

    கலப்பற்ற ‘தூயமொழி ‘ என்று பலர் பேசும் ஒரு வழக்கியல் மொழி, எங்காவது உலகில் தற்போது இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதில் கிடைப்பது சிரமம்! வடதுருவத்துக்கு அருகில் எங்காவது நாகரீகக் காற்றுப் படாமல் வாழும் எஸ்கிமோ இனத்தவர், அல்லது நீலகிரி மலை உச்சியில் தனித்து வாழும் காட்டினத்தவர் பேசும் எழுத்தற்ற சில மொழிகள் கலப்பற்றுச் சுத்தமாக இருக்கலாம்! அவர்களில் பலரது மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லாமல் இருப்பதால், கலப்பதற்கு மூல வடிவங்களே இல்லாத அந்த வாய் மொழிகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட வில்லை! எழுத்து வடிவங்கள் கொண்டு பல்லாண்டு காலம் பெரும்பான்மை இனத்தவர் பயன்படுத்தும், மொழிகளின் கலப்பற்ற தூய்மையைப் பற்றியே என் வினா எழுகிறது.

    மனித இனங்கள் உலகெங்கும் தோன்றிய போதே அவற்றின் பேச்சு மொழிகளும் வளர்ச்சி யடைந்து, சிறுகச் சிறுக எழுத்து வடிவங்கள் பெற்றிருக்க வேண்டும். சமூகங்கள் நல்லாட்சி நிழலில் வளர்ந்து, நாகரீகம் அடைந்து, தொழில் வாணிபங்களால் செல்வம் பெருகிய பொற்காலத்தில், மொழிகள் ‘இலக்கணக் கட்டுப்பாடுகள்’ விதிக்கப்பட்டு இலக்கியங்களும், காவியங்களும் பிறந்திருக்க வேண்டும். தனித்தனி இனங்களின் இடப்பெயர்ச்சியாலும், அன்னிய இனத்தவர் படையெடுப்பாலும், வேறின மக்கள் கலந்து பிணைந்த போது, நாட்டு மொழிகளிலும் கலப்புச் சொற்கள் நாளடைவில் சேர்ந்தன! இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வேதியர்கள் கையாண்ட சமஸ்கிருதத்தின் பிணைப்புத் தமிழ்மொழியில் சேர்ந்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு, அச்சொற்களையும் தமிழில் பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவுடமையாகும்.

    கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம். ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில் ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!
    விஞ்ஞானத் தமிழ் எழுத்தாளர்களின் கடமைப்பணி

    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மின்கணணி யுகம் தோன்றி, தனியார் மின்கணணிகள் [Personal Computers] ஒவ்வொரு வீட்டிலும் கைக் கருவியாகவும், பன்னாட்டுப் பிணைப்புக் கருவியாகவும் பயன்பட்டு வருகின்றன. அகிலவலை தோன்றி அனைத்து நாடுகளும் இணைந்து, உலகம் சுருங்கி மக்கள் தொடர்பு கொள்வது மிக எளிதாகப் போனதால், இப்போது தமிழ்மொழிக்குப் புத்துயிரும், சக்தியும் மிகுந்து புதிய இலக்கியங்கள், காவியங்கள், கட்டுரைகள் [அரசியல், சமூகம், விஞ்ஞானம்] நூற்றுக் கணக்கில் தமிழ் அகிலவலைகளில் படைக்கப் படுகின்றன. திண்ணையில் குறிப்பாகத் தரமுள்ள விஞ்ஞானக் கட்டுரைகளை தேமொழி, வே. வெங்கட ரமணன், ராகவன், டாக்டர். சரஸ்வதி, கோ. ஜோதி, டாக்டர் ஊர்மிளா பாபு (சிங்கப்பூர்), மா. பரமேஸ்வரன், சி. குமாரபாரதி, வ.ந. கிரிதரன், இ. பரமசிவம், டாக்டர் இரா. விஜயராகவன், அரவிந்தன் நீலகண்டன், சி. ஜெயபாரதன் ஆகியோர் எழுதி வருவது வரவேற்கத் தக்கதே.

    ரஷ்யாவில் பொதுடமை ஆதிக்கம் வலுத்திருந்த காலங்களில் (1950-1990), மாஸ்கோவின் மாபெரும் நூலகம் ஒன்றில், மகத்தான விஞ்ஞானப் பணி ஒன்று அரசாங்க ஆதரவில் சிறப்பாக, ஒழுங்காக நடந்து கொண்டு வந்தது! ஆங்கிலத்தில் வெளியான புது நூல்களை ரஷ்ய மொழிபெயர்ப்புச் செய்வது. அதுபோல் ரஷ்ய விஞ்ஞானப் படைப்புகளை ஆங்கிலம், மற்றும் ஏனைய ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் பெயர்ப்பது. விஞ்ஞான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கும் அவ்வரிய விஞ்ஞானப் பணி தமிழ் நாட்டிலும், தமிழரசின் கண்காணிப்பில் ஒரு கடமை நெறியாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசு நிதி ஒதுக்கி, விஞ்ஞானத் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, வல்லுநர்களை உறுப்பினராக்கி விஞ்ஞான நூல்களை வடிக்க வழி வகுக்க வேண்டும்.

    விஞ்ஞானத் துறையின் பிரிவுகளான உயிரியல் [Biology], உடலுறுப்பியல் [Physiology], இரசாயனம் [Chemistry], பெளதிகம் [Physics], மருத்துவம் [Medical Sciences], பொறியியல் [Engineering Sciences], உலோகவியல் [Metallurgy] போன்றவை வெகு விரைவாக உலகில் முன்னேறி வருகின்றன. அவை முன்னேறும் வேகத்திற்கு ஒப்பாக விஞ்ஞானத் தமிழ் நூல்களையும் எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஒரு கடமைப் பணியாக இருக்க வேண்டும் என்பதே இப்பின்னோட்டத்தின் அடிப்படை நோக்கம்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்து.

      // ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில் ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. //

      இந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் மாறுபடுகிறேன். முடிந்த வரையில் தமிழிலும் விஞ்ஞானச் சொற்களை இயற்ற முயலுதல் அவசியம். உச்சரிப்பு செயற்கையாக இல்லாமல் கம்ப்யூட்டர் கணினி என்று ஆனது போல ; செல் போன் செல் பேசி என்றானது போல ; சாப்ட்வேர் மென்பொருள் ஆனது போல.

      ஒரேயடியாக தூயத்தமிழில் செயற்கையாக இல்லாமல் தனித்தமிழிலேயே கூடுமானவரை அறிவியல் சொற்களை இயற்றலாம். முடியாத பட்சத்தில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.

      அன்புடன்
      பொன்.முத்துக்குமார்.

    2. Avatar
      தேமொழி says:

      அன்பு ஜெயபாரதன் ஐயா உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
      உங்கள் கட்டுரையின் சுட்டிக்கும் நன்றி.

      தமிழின் வளர்ச்சிக்கு நீங்கள் அறிவுறுத்தும் வழிகள் இன்றி அமையாதவை. அறிவியல் தொழில் நுட்பத்துறையில் ஏற்படும் வளர்ச்சி அனைத்தும் தமிழில் மொழியில் மொழிபெயர்க்கப் படுத்தலில் நீங்கள் அறிவுறுத்தும் முறைகளில் நாம் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
      அவ்வாறு செய்த பிற நாடுகளின் அரசாங்கங்கள் எவ்வாறு முயற்சி எடுத்தது என்பதையும் நீங்கள் காட்டாகக் கொடுத்துள்ளீர்கள். இது போன்ற மிகப் பெரிய திட்டங்களை அரசோ, அரசின் மானியமோ, அதற்கு ஆதரவான சூழ்நிலையோ இன்றி நிகழ்த்துவது இயலாது.

      ஆனால் நம் நாட்டின் அரசாங்கம் பயணிக்கும் பாதை நீங்கள் குறிப்பிடும் ரஷிய நாட்டின் முயற்சி போன்றவற்றிற்கு எதிர் திசையில் செல்கிறது.
      பிறமொழிகளில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை நம் மொழிக்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியாக இந்த நடவடிக்கைகள் இல்லாததுடன், பயிற்று மொழியாக தமிழைத் தவிர்க்கும் நோக்கமும் துவங்கியுள்ளது.

      இத்திசையில் துவங்கும் பயணத்தில், அப்படியே நீங்கள் கூறுவது போல அறிவியல் நூல்களை தமிழில் மொழி பெயர்த்தால் கூட, எதிர்காலத்தில் அதைப் பயிற்றுவிக்க பள்ளிகளில் தமிழ் ஒரு பயிற்று மொழியாக இருக்கப் போவதில்லை என்பதுதான் நிலைமையாக இருக்கப் போகிறது.

      அன்புடன்
      ….. தேமொழி

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        அன்புள்ள தேமொழி,

        இன்றும், எதிர்காலத்திலும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள், கல்லூரிகளில் தமிழ் மொழியில் சமூகக் கலை, விஞ்ஞானப் பாடங்கள் பயிற்றுவிக்கப் பட்டாலும், ஆங்கிலத்தின் முதன்மையிடம் நீக்கப் படாது. நவீன இணையக் கூட்டுறவு உலகில் வணிகம், கணிதம், விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், சட்டம் ஆகிய வற்றைப் பயிற்று விக்கும் மொழி ஆங்கில மாய் இருக்கப் போவதை எவரும் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது. தமிழுக்கு அந்த இடம் ஒருபோதும் கிடைக்கப் போவ தில்லை. நாமதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
        சி. ஜெயபாரதன்

  7. Avatar
    R.Karthigesu says:

    தேமொழி, தமிழின் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் கணிப்பதில் நாம் வழக்கமாக முற்சார்பு (prejudice) உடையவர்களாகவே இருக்கிறோம். தமிழின்மேல் உள்ள பாசத்தால் அது அழிந்துவிடுமோ என்ற பயத்துடன்தான் அதன் இருப்பைக் கணிக்கிறோம். ஆனால் இதற்கு அப்பாற்பட்டு தமிழின் இருப்பைக் கணித்துள்ள எத்னாலாக் அளவீடு அறிவியல்
    செயல்முறைகளைக் கொண்டு objective ஆக அதனைக் கணித்து, “யாம் அறிந்த மொழிகளில்” உறுதியாக இருக்கும் மொழிகளில் தமிழ் இருக்கிறது எனச் சொல்கிறது. இருந்தும் நாம் நமது முற்சார்புக்கே மீண்டும் போகிறோம். தமிழ் சாகும் என்றாலும் நமக்குக் கவலைதான்; தமிழ் வாழ்கிறது என்றாலும் நமக்குக் கவலைதான். என்ன செய்யலாம்?

    1. Avatar
      தேமொழி says:

      ///தமிழின் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் கணிப்பதில் நாம் வழக்கமாக முற்சார்பு (prejudice) உடையவர்களாகவே இருக்கிறோம். தமிழின்மேல் உள்ள பாசத்தால் அது அழிந்துவிடுமோ என்ற பயத்துடன்தான் அதன் இருப்பைக் கணிக்கிறோம்.///

      இல்லை திரு. கார்த்திகேசு, நான் என் கட்டுரையில் எந்த சார்பு நிலையினையும் (bias) கடைபிடித்ததாகக் கருதவில்லை.

      கட்டுரையை அமைத்த முறையினைக் கொண்டே நீங்கள் அதை அறிந்து கொள்ளலாம்.

      [1] மொழிகளின் நிலை ஆராய்ச்சியாளர்களால் எவ்வாறு கணிக்கப் படுகிறது, அவர்கள் உலக மொழிகளை ஒப்பிட்டுக் கூறும் கருத்துக்கள் என்ன?

      [2] எவ்வாறு ஒரு மொழியில் நிலை மதிப்பிடப்படுகிறது? அதன் அளவுகோல், அளவுக் குறியீடுகளாக மொழியியல் வல்லுனர்கள் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு அமைத்த அளவீடுகள் யாவை?

      [3] அந்த அளவீடுகளின்படி மொழியியல் வல்லுனர்கள் தமிழின் இன்றைய நிலையாகக் கூறுவது என்ன என்பதை அறியத் தந்திருக்கிறேன். தமிழ் 0-4 நிலையில் இருக்கும் தற்கால நிலையை நான் மறுக்கவில்லை.

      [4] இறுதியாக மொழியின் நிலையை அளக்கும் அளவுகோலில் ஒரு முக்கிய அளவீட்டுக் குறியான “பயிற்று மொழி” என்ற அளவீட்டில் தற்கால தமிழக அரசு மேற்கொள்ளும் கொள்கை, இதுவரை தமிழ் அடைந்த வளர்ந்திருக்கும் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வழி வகுக்குமா? என்ற கேள்வியினை எழுப்பிஇருக்கிறேன்.
      முக்கிய அளவீட்டுக் குறியீட்டில் எடுக்கும் தவறான முடிவுகள் மொழியின் வளர்ச்சியில் தேக்கத்தைக் கொண்டுவரும் என்பதை தமிழ் ஆர்வலர்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். இதுதான் இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

      கீழே உள்ள காணொளி காட்சியாகக் காட்டுவதும் இதைத்தான்.
      “தமிழ் இனி” (http://www.youtube.com/watch?v=ufvA_VNj–M) என்ற குறும்படம் பார்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதில் அயல்நாட்டில் பள்ளியிலும், வீட்டிலும் தமிழைத் தவிர்தால் எதிர்காலத் தலைமுறையினருக்கு தமிழே தங்கள் தாய்மொழி என்ற நிலை என்பது தெரியாமல் போய்விடும் என்பதை விளக்கிக் காட்டியிருப்பர்கள்.
      இதுதான் மொழியின் அளவுகோலில் வரும் கடைசி நிலை. தமிழை தங்களது கலாச்சார அடையாளமாகவும் அறிந்திராத நிலை.

      இதுவாவது பிழைக்கச் சென்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழும் நிர்பந்தத்தில் அக்குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிலை. தமிழ் தோன்றிய மண்ணில் அங்கு வாழும் மக்களும் அதனைத் தேவையின்றி தவறானக் கண்ணோட்டத்துடன் புறக்கணிக்கத் துவங்குவதால் ஏற்படப்போகும் நிலை என்ன? அந்த மொழியில் எழுதவோ படிக்கவோ தேவையில்லை என்ற நிலையில் தொடங்கி, வளர்ச்சியில் தேக்கநிலை அடைந்து, பிறகு அந்த மொழிக்கு என்ன தேவை நிலையில் கொண்டுவிட்டுவிடும்.

      உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

      அன்புடன்
      ….. தேமொழி

      1. Avatar
        paandiyan says:

        “தமிழ் இனி” யை பற்றி நான் ஏற்கணவ இங்கு ஒரு பின்னூட்டம் போட்டேன். இதை எல்லாம் ஒரு ஆராட்சியாக வருவது நகைப்புதான். தொலைகாட்சியில் வெற்றி பெற ஒரு கூத்து அது . அதை பார்த்து கருத்து சொன்னவர் அன்று தூய தமிழில் பேசினாரா ?? அவர் இங்குதான இருகின்றார்!. ஆராய்ட்சி சிங்கபூர் , பிரான்ஸ் என்று செல்லாமல் ஒரு கூத்தாடி நாடகத்தில் முடிவது பெரிய ஜோக்

        1. Avatar
          தேமொழி says:

          உங்கள் கருத்துக்கு நன்றி பாண்டியன்,

          காட்சியாகக் காண்பது இக்கட்டுரை சொல்ல வரும் கருத்தை எளிதில் விளக்கும் என்ற எண்ணத்தில் கொடுத்த குறும்பட காணொளி சுட்டி அது.

          நீங்கள் எழுப்பும் கருத்திலும் பொருள் இருக்கிறது. நீங்கள் கூறுவது போல மற்ற நாடுகளின் மொழிகளுடன் ஒப்பிடுவதை விட நம் நாட்டில் உள்ள, நமக்குத் தெரிந்த சில மொழிகளின் நிலையை ஒப்பிடலாம் என்று தோன்றியது.

          அதனால் கட்டுரையில் ஆதாரமாக் கொடுக்கப்பட்ட எத்னலாக் – சுட்டியினைத் தொடர்ந்து சென்று நம் நாட்டில் அறிமுகப்பட்ட சில மொழிகளின் நிலையைக் கண்டெடுத்து கீழே கொடுத்துள்ளேன். அவற்றின் ‘நிலை எண்ணாக’ எத்னலாக் கொடுத்த அளவீட்டையும் அருகே கொடுத்துள்ளேன்.

          http://www.ethnologue.com/country/IN – [Languages Tab]
          Marwari >>> http://www.ethnologue.com/language/rwr >>> 5
          Saurashtra >>> http://www.ethnologue.com/language/saz >>> 5
          Tulu >>> http://www.ethnologue.com/language/tcy >>> 5
          Pali >>> http://www.ethnologue.com/language/pli >>> 9

          5 என்று குறிபிடப்பட்டவை எல்லாம் அளவீட்டின் இரண்டாம் அடுக்கான ‘நீல வண்ண’ குறியீட்டுக்கு சென்றுவிட்ட மொழிகள்.

          அவ்வாறென்றால் அது ஒரு மாநில மொழியாகவும் இல்லை, பயிற்று மொழியாகவும் இல்லை என்ற நிலையில், உரையாடலுக்குப் பயன்படுத்தும் மொழி என்ற அளவில் இருக்கிறது.

          மேலும் இந்த விளக்கத்தைப் பலப்படுத்த, மற்றொரு ஆதாரமாகக் கொடுக்கப்பட்ட ‘உலக ஐக்கிய நாடுகளின்’ கருத்தை ஒப்பிட எண்ணி அந்தத் தளத்தில் ‘துளு’ மொழியின் நிலையை அந்த நிறுவனம் எப்படி மதிப்பிடுகிறது என்று நோக்கியதில், அது துளுவின் நிலையை ‘vulnerable’ என்று வெள்ளை வண்ணக் குறியயுடன் விளக்குகிறது.
          [இதனைக் காண கீழ் வரும் சுட்டி வழி சென்று, நாடுகளில் இந்தியாவைத் தேர்ந்தெடுத்து, மொழிகளைக் காட்டு என்பதை சொடுக்கினால் பார்க்கலாம். துளு, கர்நாடகா அருகில் தனித்து வெள்ளைக் குறியாக இருக்கும்
          [5] UNESCO Atlas of the World’s Languages in Danger.(http://www.unesco.org/culture/languages-atlas/index.php)
          இந்த சுட்டியும் கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ள ஆதாரங்களில் ஒன்றுதான்]

          தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம் என எந்த மொழியானாலும் எத்னலாக்கில் 2 ஆம் நிலையைப் பிடித்திருக்கும் ஒரே காரணம் அவை மாநில மொழி என்பதனால் மட்டுமே. இதில் பெருமை கொள்ள எதுவும் இல்லை.

          இந்த நிலை காலப்போக்கில் பரவலாகப் பேசும் மொழி, வெறும் பயிற்று மொழி மட்டும், என்று அடுத்த நிலைகளுக்குப் படிப் படியாகக் குறையலாம்.

          பிறகு பயிற்று மொழி என்பதையும் கை விட்டு விட்டால் மார்வாரி, சொராஷ்டிரா போன்ற மொழிகளின் நிலையை இன்னமும் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் தற்பொழுது மாநில அளவில் 2 ஆம் நிலையில் இருக்கும் எந்த மொழியும் சுலபமாக அடைந்துவிடும்.

          உயர் நிலைக்கல்விகளில் ஆங்கில வழிப்பாடம் என்பது இதுவரை அகில அளவில் அறிவு வளர்ச்சிக்கும், பள்ளிகளில் தாய்வழிப் பாடம் என்பது, ஆய்வுகள் குறிப்பது போல சிறுவயதினர் எளிதில் கற்கவும் வழி வகுத்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

          உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

          அன்புடன்
          ….. தேமொழி

  8. Avatar
    Dr.G.Johnson says:

    இன்று பெரும்பாலான தமிழர்களின் இல்லங்களில் தமிழ் பேசுவதில்லை. குழந்தைகளிடம்கூட ஆங்கிலத்தில் பேசும் நிலை உருவாகி வருகிறது. இரண்டு வயது குழந்தையும் இப்போது ஆங்கிலம் பேசுகிறது. தமிழ் பேசுவதில்லை. குழந்தைகள் மட்டுமல்ல! தமிழ் இல்லங்களில் வளரும் செல்ல நாய்களும் கூட ஆங்கிலம் அறிந்துள்ளன! ” Come here Brownie ” என்றால் உடன் வருகிறது.இதுதான் நம் மொழியின் இன்றைய நிலை!

    தாய் மொழி தமிழ் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாத தமிழர்கள் பெருகி வருகின்றனர். தமிழ் இலக்கியங்கள் பற்றியோ தமிழின் தொன்மை பற்றியோ அறியாத மக்களே அதிகம் உள்ளனர்.

    ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று பெரும்பாலான தமிழர்கள் எண்ணுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை ஊட்டி வளர்க்கின்றனர்.

    இலக்கிய ஆர்வம் இல்லாதோர் கதை கட்டுரை கவிதை எழுதுவதெல்லாம் வெட்டி வேலை என்று கூறுகின்றனர். இவர்கள் எழுதி என்ன சம்பாதிக்க முடியும் என்று கேள்வி கேட்கின்றனர்.அப்படி நூல் எழுதி அதை வெளியீடு செய்வதெல்லாம் பிரமுகர்களிடம் பிச்சை எடுப்பதாகக் கூறுகின்றனர்.

    மலைசியா சிங்கப்பூரில் வாழும் தமிழ் இஸ்லாமியர் வீட்டில் மலாய் பேசுவதும், பிள்ளைகள் மலாய் மொழியில் பேசுவதும் , தமிழ் தெரியாத நிலையம் உருவாகி வருகிறது.

    இது போன்று கிறிஸ்துவர்களின் வீடுகளில் ஆங்கிலமே தாய் மொழியாகி வருகிறது.

    இந்த இரு பிரிவினரும் தமிழை மறந்துபோகும் நிலை தொலைவில் இல்லை!

    எதிர் காலத்தில் தமிழ் சிறந்து வாழ வேண்டுமெனில் நம் பிள்ளைகளுக்கு ( நாம் எந்த நாட்டில் இருந்தாலும் ) தமிழ் படிக்கவும், பேசவும், எழுதவும் நாம் கற்றுத் தர வேண்டும். இது தவிர வேறு வழி இல்லை!…..டாக்டர் ஜி.ஜான்சன்.

    1. Avatar
      தேமொழி says:

      ///குழந்தைகள் மட்டுமல்ல! தமிழ் இல்லங்களில் வளரும் செல்ல நாய்களும் கூட ஆங்கிலம் அறிந்துள்ளன! ” Come here Brownie ” என்றால் உடன் வருகிறது.இதுதான் நம் மொழியின் இன்றைய நிலை!///

      டாக்டர் ஜான்சன், இவ்வாறு நீங்கள் குறிப்பிட்டது முதலில் சிரிப்பை வரவழைத்தாலும், தமிழ்க் குடும்பங்களின் நிலையை எத்தனைக் கூர்மையாகக் கவனித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் வீட்டு நாய்க்கும் ஆங்கிலத்தில் பேசினால்தான் புரிகிறது என்பது வேதனை தரும் அதிர்ச்சி

      அன்புடன்
      ….. தேமொழி

  9. Avatar
    R.Karthigesu says:

    “இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும்” என்பதில் தொடங்கி உங்கள் முடிவுகள் கொண்ட இரண்டு பாராக்களும் அதற்கு மேற்குறிப்பிடப்பட்ட எத்னாலொக் தரவுகளுக்கு முரணானதாகத்தான் இருக்கின்றன. ‘எத்னாலோக் சொல்வது தவறு’ எனக் காட்டுவதற்காகத்தான் இந்தக் கட்டுரை எழுதினீர்கள் என்றால் ஏற்கிறேன். ஆனால் உங்கள் முடிபுகளுக்கும் எத்னாலாக் போன்ற அறிவியல் அளவீடுகள் இருக்கின்றன என்றால் அவற்றைக் காட்ட வேண்டும். வெறும் உணர்ச்சியினால் சொல்வது எத்னாலாகின் முடிவுகளுக்கு மறுப்பாகமுடியாது.

    1. Avatar
      தேமொழி says:

      உங்கள் கருத்திற்கு நன்றி திரு. கார்த்திகேசு. உங்கள் கருத்திற்கு வரிக்கு வரி பதில் அளிக்க முயல்கிறேன்.

      ///“இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும்” என்பதில் தொடங்கி உங்கள் முடிவுகள் கொண்ட இரண்டு பாராக்களும் அதற்கு மேற்குறிப்பிடப்பட்ட எத்னாலொக் தரவுகளுக்கு முரணானதாகத்தான் இருக்கின்றன. ///

      கட்டுரையில் சுருக்கமாகக் குறிப்பட்டதை, http://puthu.thinnai.com/?p=21379#comment-18455 இந்த பதில் அளிக்கும் பொழுது ஏற்கனவே விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

      ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது உண்டா?/ இல்லையா? என்ற இருவகை பதில்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் விதத்தில் அமைக்கப்பட்ட ஆராய்சிக் கேள்விகள் இவை.
      0,1,2,3,4 என்ற முதல் அடுக்கு(ஊதா வண்ணக் குறியீட்டு நிலை) கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் அளிக்கும்பொழுது, தமிழ் மாநில மொழி என்ற அடிப்படையில் அந்த 2 ஆம் நிலையில் இருக்கிறது.

      அடுத்து பரவலாக பயன்படுத்துவதிலும் (நிலை 3), பயிற்று மொழியிலும்(நிலை 4) இருக்கும் தடுமாற்றத்தை இக்காலத் தமிழ் மக்கள் யாவரும் அறிவர். ஒவ்வொரு நிலையும் இவ்வாறு வலுவிழக்கத் தொடங்கினால் என்ன ஆகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக 4 ஆம் நிலை ஆட்டம் கண்டால், காலப்போக்கில் 3 ஆம் நிலையையும் இழக்க நேரும் என்பதை விளக்கத் தேவையில்லை.

      இதனை மறையும் ஆபத்தில் இருக்கும் பிறமொழிகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

      ///‘எத்னாலோக் சொல்வது தவறு’ எனக் காட்டுவதற்காகத்தான் இந்தக் கட்டுரை எழுதினீர்கள் என்றால் ஏற்கிறேன். ///

      உங்களின் கவனத்திற்கு…
      ///இவ்வாறு பற்பல தகவல்களை திரட்டித் தரும் இந்த அட்டவணை, மொழிகளின் வளர்ச்சி நிலையை எவ்வாறு அளக்கிறது என்பதையும் அறிந்து கொள்வது நம் மொழியின் வளர்ச்சியை நாம் கண்காணிக்க உதவும். ///
      என்பது நோக்கமெனக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

      ‘எத்னாலோக் சொல்வது தவறு’ <<>> http://puthu.thinnai.com/?p=21379#comment-18544 அந்த விளக்கம், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். துளு மொழிக்கு ஏற்பட்டது போன்ற அழியும் ஆபத்தான நிலைக்குக் காரணம் என்ன என்பது எளிதில் விளங்கக்கூடியதுதான். மார்வாரி மொழியோ, அல்லது செளவ்ரஷ்ட்ரா மொழியோ எதனால் ‘நிலை 5’ என்று குறிப்பிடப்பட்டு இரண்டாம் அடுக்கில் இருக்கிறது என்பதும் புரியக்கூடியதுதான்.

      இது போல ஒவ்வொரு நிலைக்கும் காரணம் என்ன என்பதை ஆராய்ந்துதான், அந்த நிலையில் உள்ள மொழிகளின் பண்புகளை அடிப்படையாக வைத்துதான் இந்த அளவுகோலையே உருவாக்கி இருக்கிறார்கள்.

      நன்றி.

      அன்புடன்
      ….. தேமொழி

  10. Avatar
    தேமொழி says:

    நீளமான பதில் துண்டுபட்டு பதிவேறியதால் 3 தனித்தனி பகுதிகளாக மீண்டும் அளிக்கிறேன்.
    ……..
    உங்கள் கருத்திற்கு நன்றி திரு. கார்த்திகேசு. உங்கள் கருத்திற்கு வரிக்கு வரி பதில் அளிக்க முயல்கிறேன்.

    ///“இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும்” என்பதில் தொடங்கி உங்கள் முடிவுகள் கொண்ட இரண்டு பாராக்களும் அதற்கு மேற்குறிப்பிடப்பட்ட எத்னாலொக் தரவுகளுக்கு முரணானதாகத்தான் இருக்கின்றன. ///

    கட்டுரையில் சுருக்கமாகக் குறிப்பட்டதை, பிறகு http://puthu.thinnai.com/?p=21379#comment-18455 இந்த பதில் அளிக்கும் பொழுது ஏற்கனவே விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

    ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது உண்டா?/ இல்லையா? என்ற இருவகை பதில்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் விதத்தில் அமைக்கப்பட்ட ஆராய்சிக் கேள்விகள் இவை.
    0,1,2,3,4 என்ற முதல் அடுக்கு(ஊதா வண்ணக் குறியீட்டு நிலை) கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் அளிக்கும்பொழுது, தமிழ் ஒரு மாநில மொழி என்ற அடிப்படையில் அந்த 2 ஆம் நிலையில் இருக்கிறது.

    அடுத்து பரவலாக பயன்படுத்துவதிலும் (நிலை 3), பயிற்று மொழியிலும்(நிலை 4) இருக்கும் தடுமாற்றத்தை இக்காலத் தமிழ் மக்கள் யாவரும் அறிவர். ஒவ்வொரு நிலையும் இவ்வாறு வலுவிழக்கத் தொடங்கினால் என்ன ஆகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக 4 ஆம் நிலை ஆட்டம் கண்டால், காலப்போக்கில் 3 ஆம் நிலையையும் இழக்க நேரும் என்பதை விளக்கத் தேவையில்லை.

    இதனை மறையும் ஆபத்தில் இருக்கும் பிறமொழிகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    தொடரும் ….

    1. Avatar
      தேமொழி says:

      தொடர்ச்சி….2 வது இறுதிப் பகுதி, திரு. கார்த்திகேசுவிற்கு அளிக்கும் பதில்

      ///‘எத்னாலோக் சொல்வது தவறு’ எனக் காட்டுவதற்காகத்தான் இந்தக் கட்டுரை எழுதினீர்கள் என்றால் ஏற்கிறேன். ///

      உங்களின் கவனத்திற்கு…
      ///இவ்வாறு பற்பல தகவல்களை திரட்டித் தரும் இந்த அட்டவணை, மொழிகளின் வளர்ச்சி நிலையை எவ்வாறு அளக்கிறது என்பதையும் அறிந்து கொள்வது நம் மொழியின் வளர்ச்சியை நாம் கண்காணிக்க உதவும். ///
      என்பது நோக்கமெனக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

      ‘எத்னாலோக் சொல்வது தவறு’ ….இவ்வாறு நான் எங்கும் (கட்டுரையிலும், பதில்களிலும்) சொல்லவில்லை.

      ………………….

      ///ஆனால் உங்கள் முடிபுகளுக்கும் எத்னாலாக் போன்ற அறிவியல் அளவீடுகள் இருக்கின்றன என்றால் அவற்றைக் காட்ட வேண்டும். வெறும் உணர்ச்சியினால் சொல்வது எத்னாலாகின் முடிவுகளுக்கு மறுப்பாகமுடியாது.///

      என் முடிவு என நீங்கள் புரிந்து கொள்வது எது எனத் தெரியவில்லை, நான் கட்டுரையில் சுட்ட விரும்பியது ‘பயிற்று மொழி’ என்பதை தவிர்க்கும் நிலையில் உள்ள மொழி மறையத் தொடங்கும் என்பதை.

      அத்துடன் பயிற்று மொழி நிலையை மொழியியல் வல்லுனர்கள் மொழியின் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு “முக்கிய அளவீடாகக்” கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டுவது கட்டுரையின் நோக்கம்.

      அதற்கு சான்றாக எத்னாலாக்கில் உள்ள பிற ஆபத்தான, அழியும் நிலையில் உள்ள மொழிகளுடன் ஒப்பிட்டால் புரியும். அதற்கான சுட்டிகளும், ஆதாரங்களும் கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ளன. ஐந்தாவது ஆதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உலக ஐக்கிய நாடுகள் சபையின் தளமும் இதனை விளக்கும்.

      தேவையானால் அவ்வாறு பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டது இந்த சுட்டியில் இருக்கிறது
      http://puthu.thinnai.com/?p=21379#comment-18544
      அந்த விளக்கம், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். துளு மொழிக்கு ஏற்பட்டது போன்ற அழியும், ஆபத்தான நிலைக்குக் காரணம் என்ன என்பது எளிதில் விளங்கக்கூடியதுதான். மார்வாரி மொழியோ, அல்லது செளவ்ரஷ்ட்ரா மொழியோ எதனால் ‘நிலை 5′ என்று குறிப்பிடப்பட்டு இரண்டாம் அடுக்கில் இருக்கிறது என்பதும் புரியக்கூடியதுதான்.

      இது போல ஒவ்வொரு நிலைக்கும் காரணம் என்ன என்பதை ஆராய்ந்துதான், அந்த நிலையில் உள்ள மொழிகளின் பண்புகளை அடிப்படையாக வைத்துதான் இந்த அளவுகோலையே உருவாக்கி இருக்கிறார்கள்.

      நன்றி.

      அன்புடன்
      ….. தேமொழி

  11. Avatar
    Nakkeeran says:

    தமிழ்மொழி வரலாறு தெரியாதவர்களே தூய தமிழுக்கு எதிராக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழையும் வடமொழியையும் சமமாகக் கலந்து எழுதும் பழக்கம் இருந்தது. அதனை மணிப்பிரவாள நடை எனக் குறிப்பிட்டனர். தமிழ்க் கடல் மறைமலை அடிகள், பரிதிமாக்கலைஞர் (சூரியநாராயண சாத்திரி) பாரதிதாசன், பாவலேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள்தான் ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்ப் பயிரோடு முளைத்த வடமொழிப் புல்லைக் களையெடுத்தனர். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. இன்று அக்கிராசனர் அகன்று தலைவர் வந்துவிட்டார், காரியதரிசி களையப்பட்டு செயலாளர் வந்துவிட்டார், பொக்கிஷாரர் புறம்தள்ளப்பட்டு பொருளாளர் வந்து விட்டார்.
    நான் தமிழ்ப் பள்ளியில் படிக்கும் போது ‘நமஸ்காரம்” வாத்தியாரே என்றுதான் சொல்வோம். இப்போது வணக்கம் வழக்கமாகிவிட்டது. அதேபோல் ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, ஸ்ரீமஸ்து, சுபமஸ்து திரு, திருத்திரு ஆக மாற்றப்பட்டுவிட்டன. மேலும் ‘ஸஷ்டியப்த பூர்த்தி’ மணிவிழா என்றும், ‘ருதுமங்கள ஸ்நானம்’ பூப்பு நீராட்டு விழா என்றும் ‘கிருஹப்பிரவேசம்’ புதுமனை புகுவிழா என்றும் தூய தமிழாக மாற்றப்பட்டு விட்டன.
    இன்று ஒரு அய்ம்பது ஆண்டுகளுக்கு முந்தி அச்சிட்ட கல்யாண விஞ்ஞாபனத்துக்கும் இன்று அச்சிடப்படும் திருமணை அழைப்பிதழையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். தனித்தமிழ் இயக்கத்தின் சாதனை தெரியும். திருமண அழைப்பிதழ் இன்று கொஞ்சு தமிழில் எழுதப்படுகின்றன. கல்யாணம் – திருமணம். வருஷம் – ஆண்டு. சிரேஷ்ட புத்திரன் – தலைமகன். சிரேஷ்ட புத்திரி – தலைமகள். கனிஷ்ட புத்திரன் – இளையமகன். கனிஷ்ட புத்திரி – இளையமகள். சிரஞ்சீவி – திருநிறைச்செல்வன். சௌபாக்கியவதி – திருநிறைச்செல்வி இஷ்டமித்திர பந்துமித்திரர் – சுற்றமும் நட்பும். தம்பதியினரை ஆசீர்வதித்து – மணமக்களை வாழ்த்தியருளி. தூய்மை தேவையில்லை என்று சொல்லும் ஜெயபாரதன் போன்றோர் இன்னொரு மலையாளி மொழி தமிழில் தோன்ற வழி சமைக்கிறார்கள்!

  12. Avatar
    ரங்கன் says:

    தமிழுக்கு ஆபத்து இப்போது இரண்டு வடவ்ங்களில் உள்ளது:

    1. எல்லா தொலைக் காட்சிகளிலும் ( மக்கள் TV – ஓரளவு DD தவிர ) “ஹலோ வியுவர்ஸ் ….” என்று ஆரம்பித்து தமிழைத் தொலைக்கும் நிலை வந்து விட்டது.

    2. தமழ் உச்சரிப்பு – ல, ள , ந, ண இவைகளை மாற்றி உச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Reply to Nakkeeran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *