‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 12 in the series 27 டிசம்பர் 2020

  1. கவிதையின் சாவி

முக்காலத்தையும் ஒரு முடியாச்சமன்பாட்டுக்கணக்கிலான

விகிதாச்சாரத்தில் குழைத்தெடுத்து

காலரைக்கால் கணங்களையும் குமிழுணர்வுகளையும்

கற்களாகத் தலைக்குள் அடுக்கித்

தடுக்கிவிழுந்தெழுந்து தானே சுமந்து எடுத்துவந்து

பின்னப்பட்ட மனதின் துண்டுதுணுக்குகளையும்

மனதின் மிக நைந்து அறுந்து தொங்கும் நூற்பிரிகளையும்

சுவராக்கிக் தரையாக்கிக் கூரையாக்கிக் கட்டும்

கவிதைவீட்டுக்குக்

கதவிருப்பதே அபூர்வமாக,

கருத்தாய் சாவி கேட்கிறாய்

அருவ மேடுபள்ளங்கள் அறைகளாக

மூடியிருக்கும் உன் என் உள்ளங்கைகளில்

பலநூறு திறவுகோல்கள்

உருக்கொண்டவாறிருக்க

முறிந்த சிறகுவிரித்துப் பறந்து உள்ளே புகத்

தத்தளித்துக்கொண்டிருக்கும் கவியின்

வீட்டுக்குள் குவித்துவைத்திருப்பதெல்லாம்

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கனவுகளும்

கரையான் அரித்த நினைவுகளுமேயன்றி

கள்ளப்பணமல்லவே.

உள்ளபடியே

உள்ளம் விரும்பி உள்நுழையும் எவருமே

அழையா விருந்தாளியாகமாட்டார் என்பதைத்தான்

இதுவரை எழுதப்பட்ட கவிதைகளுக்கெல்லாம்

சுயமாய் நியமித்துக்கொண்ட சம்பளமில்லா முகவராய்

உறுதிகூறமுடியுமேயல்லாமல்

திறவுகோலை _

சரியாகச் சொல்வதென்றால் சிறுகாற்றிலும்

பெரும்புயலிலும்

இரண்டறக் கலந்திருக்கும் திறவுகோல்களைக்

கேட்பவருக்கு

என்ன தரமுடியும் என்னால்…..

  • காத்திருப்பு
  •  

அத்தனை ஆர்வமாய் சுழித்தோடும் அந்த ஜீவநதியில்

அதன் பெருவெள்ளத்தில்

அதற்குள் இரண்டறக் கலந்திருக்கும்

ஆயிரமாயிரம் மகா சமுத்திரங்களில்

அதிசயமாய் யாரேனும் நீந்தத்தெரிந்து

நீந்த முடிந்து

முங்கி முக்குளித்து முத்தெடுத்துவந்தால்

உடனே அதை சொத்தையென்று சாதிக்கும்

அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் _

அஞ்சலிக் கட்டுரைகள் எழுதவும்

அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தவும்

அங்கேயும் அந்த நீரோட்டத்தை

அதன் சுழலை விசையை

அதன் நன்னீர்ச்சுவையை

மதிப்பழித்து

அதைக் குட்டையெனவும்

கழிவுநீர்த்தொட்டியெனவும்

இட்டத்துக்குச் சுட்டிக் காட்டவும்

பட்டம் கட்டவும்.

வற்றாதநதி வறண்டுபோனால்

அது நதியாக வாழ்ந்த காலம்

இல்லையென்றாகிவிடுமா என்ன?

நதிவாழ்வின் நிரூபணம் நம் கையிலா?

வற்றியநதிப்படுகை வெறும் பாலைவனமா

புவியியலும் இலக்கியமும் ஒன்றுதானா

உடற்கூராய்வு நிபுணர்களுக்கு

இலக்கியவெளியில் பஞ்சமில்லை.

வேறு சில வியாபாரிகளுக்கு     

பொருள்களின் antique value

அத்துப்படி….

எத்தனையோ தடுப்புகளை மீறி

சிந்தாநதிதீரத்திற்கு வந்துசேர்ந்து

விழிகொள்ளாமல் வாசித்துக்கொண்டிருப்பவர்க்கு

நதிக்கடல்பெருகிக் கால்நனைய ஆன்மா குளிர_

கரைந்துருகும் மனதின் கரைகளெங்கும் சேர்ந்துகொண்டேயிருக்கின்றன

அழியாச்சொத்துக்களாய்

சொல்பொருள் நீர்மச்சலனங்கள்.

Series Navigationஇந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருதுஒரு துளி காற்று
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *