‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 9 in the series 1 மே 2022

 

 

  1. அடிவானப்பறவை


    தினமொரு சிறகிழையை மட்டுமாவது
    எனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்று
    பறவையைக் கேட்பது
    பைத்தியக்காரத்தனம்…..

    உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவை
    யெலாம் தனதாய்க் கருதி
    ஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவென
    சதா அண்ணாந்து பார்த்திருந்து
    கழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்
    தடவிக்கொண்ட இடத்தில்
    சுளீரென எரிவதில்
    இரட்டிப்பாகும் இழப்புணர்வு.

    இறங்கிவாராப் பறவையின் காலில்
    அதற்கேயானதொரு மடலைக்
    கட்டியனுப்பவும் இயலாது.

    பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழி
    யெது?

    மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்
    வழிமொழியுமோ பறவை?

    பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடு
    அது எனக்கேயெனக்காய் பேசுமோ என்ற
    எதிர்பார்ப்பும் சேர _

    சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்
    ஆகாயமோ
    விரிந்துகொண்டே போகிறது.

    ஒருபோது சற்றே யப் பறவை தாழப்பறந்துவர
    பேரதிர்வில் மனம் பிளக்க
    ’பச்’சென்று எச்சமிட்டுச் சென்றது பறவை
    உச்சிமண்டையில்.

    பச் எச் உச் மட்டுமே நிச்சயமான
    மிச்சமாக….

    அலகில் குச்சிபொறுக்கிச்செல்லக்கூடக்
    கீழிறங்கிவராப் பறவையின் இறக்கைகளை
    உடைமைகொள்ளும் வழி தெரியாமல்
    அழப்பழகும் மனதிற்கு

    சிறகிலாப் பறவையை ஒருநாளும்
    பார்க்கப் பிடிப்பதில்லை.
  2. பறவையாதல்

பறக்கக் கற்றுத்தரும் தாய்ப்பறவை

அறிவதில்லை

தன் பாப்பா எப்பொழுது

எத்தனை தொலைவாகப்

பறந்துவிடுமென்று.

பாப்பாக்களில் அதற்கு தனிப்பிரியம்

எதன் மீதாவது இருக்குமா

தந்தைப்பறவை சொல்லித்தந்ததே

யில்லையோ – தெரியவில்லை

பறவைகளில் தந்தை-தாயைக்

கண்டுபிடிப்பது

சுலபமா கடினமா

குட்டிப்பறவை தன்னால் பறக்கமுடியும்

என்று அறியுமக் கணம்

ராஜாளியாக உணருமோ

சிட்டுக்குருவியும் ஃபீனிக்ஸ் பறவைதானே

என்றாலதுவுமொரு விதத்தில் சரிதானே

கவிதையெழுதாவிட்டாலும் காயம்பட்டால்

பறவைக்கும் வலிக்குமில்லையா

வல்லூறுக்கு வானம்பாடியின் கானம்

என்னவாகும் யாருக்குத் தெரியும்

பறவை முதுகிலேறிப் பயணம்

செய்ய விழைதல்

பேதமையா பெருங்கனவா

நாமே பறவையென பாவித்தல்

பரவசமா பிறழ்மன அவசமா

உறவொரு பறவை

சிறகுகளடர்ந்து இறந்த புழுக்களைக்

கொத்தித் தின்றவாறிருக்கும்

நினைவொரு பறவை

படைத்த கவிதையுமொரு பறவை

படிக்கக் கிடைத்து

விடையறிய முடிந்த கவிதையுமொரு

பறவையாக……

 

3.அவரவர் அந்தரங்கம்

காதல் எப்படி நிகழும்

காதலில் என்ன நிகழுமென்று

காதலிப்பவர்களுக்கும் தெரியும்

காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்

இருந்தும்

குறுகுறுவென்று பார்த்தாரா

குறும்புப்பேச்சுகள் பேசினாரா

கட்டியணைத்தாரா

கன்னத்தில் முத்தமிட்டாரா

கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா

என்று கேட்டுக்கொண்டே போன தோழியை

குறுக்கிட்டுத் தடுத்தவள்

”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.

காலங்கடந் தொரு நாள்

தன் காதலன்

குறுகுறுவென்று பார்த்ததை

குறும்புப்பேச்சுகள் பேசியதை

கட்டியணைத்தை

கன்னத்தில் முத்தமிட்டதை

கட்டுக்கட்டான கடிதங்களில்

கலவிசெய்ததை

கட்டுரைகளாக

நினைவுக்குறிப்புகளாக

Autofictionகளாக

கிடைத்தவெளிகளிலெல்லாம்

அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து

அப்படியானால் இப்போது என் புனிதம் கெட்டுப்போய்விட்டதாவென

அப்பிராணியாய்க் கேட்கிறது

அந்தரங்கம்.

 

Series Navigationஇந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *