ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 13 in the series 24 ஏப்ரல் 2022

 

 

 

1.இடமுணர்த்தல்

 

ஒவ்வொன்றின் இடமும் அளவும்

ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது

உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம்

அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர்

என்பதை உணர்த்துகிறது.

அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்

எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க

பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த

மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி

வீட்டிலிருந்த பாட்டிக்கானது.

சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய

அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே

வைக்கப்பட்டிருந்த நாற்காலி

சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன

உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது.

பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும்

மகளுக்கானது

முதுகு சாயுமிடத்தில் நிறம் மங்கியிருந்த நாற்காலி

மூச்சு வாங்க நடந்துவரும் பெருத்த உடலுக்கானது

பெரிய நாற்காலியும் அடுத்திருக்கும் சிறிய நாற்காலியும்

விவாகரத்தான முப்பத்தியிரண்டு வயதுத் தந்தைக்கும்

அவருடைய ஆறு வயதுப் பிள்ளைக்குமானது.

உணவுமேசையைச் சுற்றியிருந்த இருக்கைகளில்

இரண்டு மட்டும்

ஒன்றையொன்று தொட்டபடியிருந்ததை இருந்ததைக்

கவனித்தபடியே அவள்

விழுங்கத் தயாராய் எடுத்துவந்திருந்த

வைட்டமின் E மாத்திரை Evion 400இன் நெகிழ்வை

உள்ளங்கையில் உணர்ந்தபடி

தனக்கான இருக்கையை நோக்கிச் சென்றாள்.

 

2.அவரவர் அந்தரங்கம்

காதல் எப்படி நிகழும்

காதலில் என்ன நிகழுமென்று

காதலிப்பவர்களுக்கும் தெரியும்

காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்

இருந்தும்

குறுகுறுவென்று பார்த்தாரா

குறும்புப்பேச்சுகள் பேசினாரா

கட்டியணைத்தாரா

கன்னத்தில் முத்தமிட்டாரா

கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா

என்று கேட்டுக்கொண்டே போன தோழியை

குறுக்கிட்டுத் தடுத்தவள்

”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.

காலங்கடந் தொரு நாள்

தன் காதலன்

குறுகுறுவென்று பார்த்ததை

குறும்புப்பேச்சுகள் பேசியதை

கட்டியணைத்தை

கன்னத்தில் முத்தமிட்டதை

கட்டுக்கட்டான கடிதங்களில்

கலவிசெய்ததை

கட்டுரைகளாக

நினைவுக்குறிப்புகளாக

Autofictionகளாக

கிடைத்தவெளிகளிலெல்லாம்

அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து

அப்படியானால் இப்போது என் புனிதம் கெட்டுப்போய்விட்டதாவென

அப்பிராணியாய்க் கேட்கிறது

அந்தரங்கம்.

 

Series Navigationயார் சரி?கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
author

ரிஷி

Similar Posts

Comments

  1. Avatar
    RAJANBABU says:

    அவரவர் அந்தரங்கம், உண்மை. அருமையான கவிதை. வாழ்த்துகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *