லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)

This entry is part 4 of 32 in the series 15 ஜூலை 2012

ஆங்கிலம் வழி தமிழில்: ராகவன் தம்பி

பெரும் பாதகமான படுகொலைகளுக்குப் பின் தங்கள் உடல்களிலிருந்து ரத்தக் கறைகளைக் கழுவிய பின் பிரிவினையால் கிழித்துப் போடப்பட்ட இதயங்களின் மீது கவனத்தைத் திருப்பினார்கள் மனிதர்கள்.
ஒவ்வொரு தெருவிலும் சிறிய சந்து பொந்துகளில் கூட மறுவாழ்வுக் கமிட்டியை அமைத்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் உற்சாகத்துடன் வேலைகள் நடந்தன. பணி வாய்ப்பு முகாம்கள் வழியாக அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அகதிகளை பண்ணை நிலங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். ஆனால் வன்மையுடன் அபகரிக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு பின்னர் தாய்நாட்டுக்கு மீட்டு வரப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி மட்டும் இன்னும் மீதமிருந்தது. இந்த விஷயத்தில் மட்டும் அவர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. மறுவாழ்வு கமிட்டியை சேர்ந்தவர்கள் “உங்கள் இதயங்களில் இந்தப் பெண்களை மீண்டும் குடியேற்றுங்கள்” என்ற கோஷத்தை எழுப்பினார்கள்.
ஆனால் நாராயண் பாவா ஆலய வளாகத்தின் அருகே வசித்து வந்தவர்களால் மட்டும் இந்தக் கோஷம் கடுமையாக எதிர்க்கப்பட்டது.
ஷக்கூர் மொஹல்லா (தெரு) வாசிகளால் இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டது. அவர்கள் “இதயங்களின் மறுவாழ்வு கமிட்டி’ யை துவங்கினார்கள். உள்ளுர் வழக்கறிஞர் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததான செயலர் பதவிக்கு குமாஸ்தா சுந்தர்லால் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவனை விட பதினொரு வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தான். பெட்டிஷன்கள் எழுதும் ஒரு கிழவன் மற்றும் அந்தப் பகுதியின் மரியாதைக்குரிய ஆட்கள் அனைவரின் ஒருமித்த கருத்து என்னவென்றால் இந்தப் பதவியில் சுந்தர் லால் தவிர வேறு யாராலும் அவ்வளவு முனைப்புடன் செயல்பட இயலாது.
ஏனென்றால், கலவரத்தின் போது கடத்தப்பட்டு, அதுவரை மீட்கப்படாத பல பெண்களில் ஒருத்தி சுந்தர் லால் மனைவி லாஜ்வந்தி.
இதயங்களின் மறுவாழ்வு கமிட்டியினர் ஒவ்வொரு விடிகாலையிலும் தெருக்களில் ஊர்வலம் போனார்கள். ஊர்வலத்தில் ரஸ்லுவும், நேகி ராமும், உரத்த குரல்களில் பாடிக்கொண்டே சென்றார்கள்.
மனித விரல்கள்
தீண்டினால்
வாடிப் போகும்
லாஜ்வந்தி இலைகள்…
என்ற வரிகளைப் பாடும்போது சுந்தர் லால் அமைதியாகிவிடுவான். பாடுவதை நிறுத்தி விடுவான். திக்பிரமை பிடித்தவன் போல நடக்கத் துவங்குவான். “”கடவுளே! இந்த லாஜ்வந்தி எங்குதான் போய்த் தொலைந்தாள்? என்னைப் பற்றி எப்போதாவது நினைத்துக் கொள்கிறாளா? எப்போதாவது மீண்டும் திரும்பி வருவாளா?… செங்கல் புதைக்கப்பட்ட அந்தச் சாலையின் சமமான தளத்தில் அவன் கால்கள் இலக்கின்றித் தடுமாறிச் செல்லும்.
லாஜ்வந்தியை மீண்டும் கண்டுபிடிக்கும் அல்லது என்றாவது பார்க்கப்போகும் நம்பிக்கையை முற்றாகத் துறந்திருந்தான் சுந்தர்லால். தன்னுடைய சொந்த இழப்பை பொது இழப்பின் ஒரு பகுதியாக மாற்றியிருந்தான். சொந்தச் சோகங்களை, பொதுச் சேவைகளில் ஆழ்ந்து மூழ்கடித்தான். இருந்தாலும் அந்த கோஷ்டி கானத்தில் சேருவதற்காகத் தன் குரலை உயர்த்தும் போதெல்லாம் “இந்த மனித மனம்தான் எத்தனை எளிதில் உடையக் கூடியதாக இருக்கிறது? விரலை அருகில் எடுத்துச் சென்றாலே சுருங்கிப்போகிறதே அந்த லாஜ்வந்தியைப் போல…” என்கிற நினைப்பை அவன் தவிர்க்க இயலாமல் தவித்தான்.
அவன் தன்னுடைய லாஜ்வந்தியிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருந்திருக்கிறான். அவள் செய்த எல்லாக் காரியங்களிலும் அவன் எரிச்சலடைந்திருக்கிறான். அவளது எல்லாக் காரியங்களிலும் எரிச்சல் அடைய தன்னை அவன் அனுமதித்திருந்தான். அவள் எழுவதிலும் உட்காருவதிலும் கூட. அவள் சமைப்பதில், தனக்குப் பரிமாறுவதில், இப்படி எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு காரணம் வைத்துக் குற்றம் கண்டுபிடித்து அவளை அடித்து வெளுத்திருக்கிறான்.
மிகவும் அப்பாவிப் பெண்ணான லஜ்ஜோ சவுக்கு மரத்தைப் போல ஒடிசலானவள். பெரும்பாலும் திறந்த வெளிகளில் சுதந்திரமாகத் திரிந்தவள். அந்தத் திறந்தவெளியின் காற்றும் சூரிய வெளிச்சமும் அவளுடைய தோலைப் பழுப்படைய வைத்து ஒரு மிருகத்தின் சருமத்தில் உள்ள மினுமினுப்பை அவளுக்குத் தந்திருந்தது. அவளுடைய கிராமத்தின் இடுக்குகளில் கிளைத்தி செடிகளின் இலைகளில் படிந்திருக்கும் பனித்துளிகளில் காணும் மினுமினுப்புடன் வளைந்து வளைந்து ஓடியிருக்கிறாள். கெச்சலான அவளுடைய தேகத்தில் வலுவும் உடல்கட்டும் ததும்பியிருந்தது. அவளை முதன்முதலாகக் காண நேர்ந்தபோது சுந்தர்லால் சற்று மிரண்டுதான் போனான். ஆனால் அவனுடைய கடுமையான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் அவள் மிகவும் சரளமாக எடுத்துக் கொண்டபோது அவளை அடிப்பதையும் உதைப்பதையும் இன்னும் சற்று அதிகரித்தான். மனித மனத்தின் சகிப்புத் தன்மையின் எல்லைக்கோட்டினை அறியாதவனாகவும் உணராதவனாகவும் அவன் இருந்தான். லாஜ்வந்தியின் லேசான எதிர்வினைகளுக்கு ஒன்றும் பயனில்லாமல் போயின. மிகவும் வன்மையாக அவன் அடித்து உதைத்தபின்னர் அவன் மெல்ல புன்னகைத்தால் போதும், அவள் பல்லை இளித்துக் கொண்டு, “இனிமேல் அடித்தால் நான் உங்களோடு எப்போதும் பேசமாட்டேன்” என்று செல்லமாக சிணுங்கிக் கொண்டே அந்தப் புறமாக நடந்து விடுவாள்.
அடித்து, உதைத்து ஓய்ந்ததுமே லஜ்ஜோ எல்லாவற்றையும் மறந்து விடுவாள். எல்லா ஆண்களும் தங்கள் மனைவிமார்களை அடிக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யாமல் இஷ்டத்துக்கு விட்டு விட்டால் இந்த பெண்களே சொல்வார்கள் “என்ன மனிதன் இவன்? இந்தக் கழிசடைப் பெண்ணை சமாளிக்க முடியாதவனாக இருக்கிறானே” என்று.
ஆண்கள் தங்கள் மனைவியரை அடிப்பதைப் பற்றி அவர்கள் பாடல்களை இட்டுக் கட்டினார்கள். லஜ்ஜோவே, ஏறக்குறைய இந்த அர்த்தம் வரும்படி பாடலை இட்டுக் கட்டினாள் –
நான் பட்டணத்துப் பையனைக்
கட்ட மாட்டேன் –
பட்டணத்துப் பையன்
பூட் அணிந்து கொள்வான்
எனக்கு இருப்பதோஇப்படி
சின்னதான ஒரு
பின்புறம்
இருந்தாலும் நகரத்திலிருந்து வந்த ஒரு பையனை முதன்முறையாகக் கண்டதுமே காதலில் விழுந்தாள் லாஜ்வந்தி. அவன்தான் சுந்தர்லால். லாஜ்வந்தியின் சகோதரி திருமணத்துக்கு மணப்பையனுடைய வீட்டாரோடு வந்திருந்தான். அவனுடைய பார்வை லாஜ்வந்தியின் மீது விழுந்தது. சுந்தர்லால், மணமகனின் காதில், “உன்னுடைய மைத்துனி அள்ளி அள்ளி விழுங்கும் கவளம் மாதிரி இருக்கிறாள். மணப்பெண்ணோ காய்ந்த ரொட்டி மாதிரி இருக்கிறாளே! என்று கிசுகிசுத்தான். அவனுடைய கிசுகிசுப்பு லாஜ்வந்தி காதிலும் விழுந்தது. அவனுடைய வார்த்தைகள் அவளுடைய மண்டைக்குள் நுழைந்து கொண்டது. அவனுடைய வார்த்தைள் மண்டைக்குள் நுழைந்த சுந்தர் லால் மிகப்பெரிய பூட்சு அணிந்திருப்பதை கவனிக்கத் தவறியிருந்தாள். தனக்கு மிகச் சிறிய பின்புறம் இருப்பதையும் அப்போது அவள் மறந்து போயிருந்தாள்.
இப்படியான எண்ணங்கள், ஊர்வலத்துடன் சேர்ந்து பாடிக் கொண்டு போன சுந்தர் லாலின் மனதில் ஊசலாடிக் கொண்டு வந்தன. அவன் தனக்குத் தானே உரக்கச் சொல்லிக் கொள்வான்
“இன்னும் ஒரு முறை – ஒரே ஒருமுறை மட்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், சத்தியமாக அவளை நான் என் இதயத்தில் மறுவாழ்வு அளித்துக் குடியேற்றி வைப்பேன். எல்லோருக்கும் ஒரு உதாரணமாக நான் திகழ்வேன். எல்லோரிடமும் உரக்க சொல்வேன், இந்தப் பேதைப் பெண்களைப் பழிக்காதீர்கள். அவர்கள் அந்த ஒழுக்கக்கேடான சண்டாளர்களால் பலிகடாவாக ஆக்கபட்டவர்கள். இந்தப் பேதைப் பெண்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் மீளவே வாய்ப்பில்லாது அழுகிப்போகும். அந்த சமூகத்தை பூண்டோடு அழித்தாலும் தவறில்லை” என்று. அபகரிக்கப்பட்டு மீட்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களுக்கு ஒரு மனைவி, தாய், மகள், சகோதரி என்னும் ஸ்தானத்தை அவர்களின் வீடுகளில் மீட்டுத்தர அவன் போரடினான். அவர்களுடைய அந்தக் கொடுமையான இறந்த காலம் பற்றி அவர்களுக்கு நினைவு படுத்தவோ சொல்லிக் காட்டவோ கூடாது. அவர்கள் என்றும் விரல் சுட்டினாலே சுருங்கிப்போகும் லாஜ்வந்தி செடியைப் போன்றவர்கள் என்றும் அந்த மீட்கப்பட்ட பெண்களின் வீடுகளில் மன்றாடினான்.
இதயங்களின் மறுவாழ்வு பற்றி பிரச்சாரம் செய்ய முல்லா ஷக்கூர் கமிட்டி விடிகாலை வேளையில் ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். விடியலின் முந்திய நேரம் ஆனந்தமயமாக, அமைதியாக, ஆட்களின் சந்தடிகள் இல்லாமலும், போக்குவரத்து சந்தடிகள் இல்லாமலும் இருந்தது. இரவெல்லாம் காவலுக்கு இருந்த தெருநாய்கள் கூட கதகதப்பான தந்தூரி அடுப்புகளின் அருகாமையில் தீவிர உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும். இந்த ஊர்வலத்தின் பாடலால் எழுப்பட்ட தெருவோரத்தில் படுத்திருப்பவர்கள் கூட ஒரு நொடி எழுந்து பார்த்து “”விடிகாலையில் எதற்கு இப்படி கூப்பாடு போடவேண்டும்?” என்று முணுமுணுத்து விட்டு தங்கள் கனவுகளில் மீண்டும் ஆழ்ந்து விடுவார்கள்.
சுந்தர்லாலின் சொற் பொழிவை சிலர், சில சமயம் பொறுமையுடன் கேட்பார்கள். சில சமயம் எரிச்சல் அடைந்து விடுவார்கள். பாகிஸ்தானில் இருந்து எந்த வகையிலும் சிரமப்படாது இங்கு வந்து சேர்ந்த சில பெண்கள், வளமாகவே இருந்தார்கள். அதிகமாக முற்றிய காலிஃபிளவர்களைப் போல செழிப்பாக இருந்தார்கள். அவர்கள் வீட்டு ஆண்கள் இவைபோன்ற பாடல்களை உதாசீனம் செய்பவர்களாகவும் சில சமயங்களில் இவற்றை எதிர்த்து முணுமுணுக்கவும் செய்தார்கள். அவர்களின் வீட்டுக் குழந்தைகள் இந்தப் பாடல்கள் தங்களை மீண்டும் விடிகாலையில் உறங்க வைக்கும் ஒரு தாலாட்டுப்போல பாவிக்கத் துவங்கியிருந்தார்கள்.
விடிகாலையில் ஒருவரின் காதில் சேரும் இந்தப் பாடல் அவருடைய தலைக்குள் சுற்றிச் சென்று உள்ளுக்குள் நயவஞ்சகமான ஒரு உள்நோக்கத்தை கற்பிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்தி யிருந்தது. இந்தப் பாடலின் பொருள் புரியாத ஒருவன் தன்னுடைய வேலைகளுக்கு நடுவே மற்ற பாடலை முணுமுணுப்பது போல இதையும் முணுமுணுப்பதைக் கேட்க முடிந்தது.
மிருதுளா சாராபாய், கடத்தப்பட்ட பெண்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பரிமாற்றம் செய்து கொள்வது குறித்து ஏற்பாடு செய்த போது ஷகூர் மொஹல்லாவை சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி தங்களுடைய சம்மதத்தை தெரிவித்தார்கள். அந்தப் பெண்களின் உறவினர்கள் அவர்களை அழைத்து வர கடைத் தெருவுக்குச் சென்றார்கள். சில நேரங்களில் கடத்தப் பட்ட பெண்களும் அவர்கள் வீட்டு ஆண்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்க்க நேர்ந்த போது மிகவும் தர்ம சங்கடமான அமைதியைக் கடைப் பிடித்தார்கள். தங்களுடைய வறட்டு கெüரவத்தைக் கைவிட்டு தங்கள் வீட்டுப் பெண்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களின் குடும்ப வாழ்வை மீண்டும் அமைத்துக் கொடுத்தார்கள். ராஸுலு, நேகி ராம் மற்றும் சுந்தர்லால் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து அப்படி பெண்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பவர்களை உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் வீடுகளுக்கு முன் சென்று “”மஹிந்தர்சிங் ஜிந்தாபாத், சோஹன்லால் ஜிந்தாபாத்” என்று தொண்டை கிழிய கோஷமிட்டு அவர்களை வாழ்த்தினார்கள். மீட்டுக் கொண்டு வந்த பெண்களின் வீட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ” இந்தப் பெண்கள் தாங்கள் அபகரிக்கப்பட்ட உடனே அதே இடத்தில் தங்களை அழித்துக் கொண்டிருக்க வேண்டாமோ? விஷம் குடித்தாவது தங்களுடைய மானத்தையும் கற்பையும் இவர்கள் ஏன் காப்பாற்றிக் கொண்டு இருக்கக் கூடாது? கிணற்றுக்குள் விழுந்து ஏன் தற்கொலை செய்து கொண்டு இருக்கக்கூடாது? இந்தப் பெண்கள் எல்லாம் கோழைகள். எது போனாலும் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள் என்று அந்தப் பெண்களைத் தூற்றினார்கள்.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள், தங்களை அப்படி மாய்த்துக் கொண்டார்கள். இப்படிப் பட்ட அவமானத்தை சகிப்பதற்குப் பதிலாக மரணத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இந்தக் கொடுமையான, இரக்கமே இல்லாத உலகத்தில், தங்களின் மனைவிமார்களை அடையாளம் காண மறுக்கும் கல்மனம் கொண்ட கணவர்கள் வாழும் இந்த உலகினை எதிர்கொள்வதற்கு எவ்வளவு தைரியமும் மன உறுதியும் வேண்டும் என்று தங்களை மாய்த்துக் கொண்ட பெண்களுக்கு என்ன தெரியும்? இந்தப் பெண்களில் சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள மங்களகரமான அர்த்தத்தை மிகவும் சோகமாக நினைத்துப் பார்ப்பார்கள்.
மிருதுளா சாராபாய், இந்தியர்களால் கடத்தப்பட்ட முஸ்லிம் பெண்களைப் பரிமாற்றம் செய்ய பாகிஸ்தானில் இருந்து ஒரு லாரி நிறைய ஹிந்துப் பெண்களை அழைத்து வந்திருந்தாள். அவர்களில் லாஜ்வந்தி இல்லை. அந்த லாரியிலிருந்து கடைசி ஹிந்துப் பெண் இறங்கும் வரை பொறுமையாகவும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்லால். பிறகு மிகவும் பொறுமையாக, கமிட்டியின் மற்ற செயல் பாடுகளில் தன்னை தீவிரத்துடன் மூழ்கடித்துக் கொண்டான். கமிட்டியின் வேலை இரட்டிப்பானது. அவர்கள் காலையிலும் மாலையிலும் ஊர்வலங்கள் ஏற்பாடு செய்து பாடிக் கொண்டு ஊருக்குள் சென்றார்கள். கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். கிழட்டு வக்கீல் கல்கா பிரசாத், இந்தக் கூட்டங்களில் தன்னுடைய கரகரத்த ஆஸ்துமாக் குரலில் மூச்சிறைக்கப் பேசினார். (ராஸôலு பக்கத்தில் கோழை துப்ப எச்சில் துப்பானை தயாராக வைத்திருந்தான்). கல்கா பிரசாத் மைக்கில் பேசும்போது ஒலி பெருக்கியில் பல விசித்திரமான சப்தங்கள் கிளம்பின.
நேகிராமும் சில வார்த்தைகள் பேசினான். ஆனால் அவன் புராணங்களில் இருந்தும் வேதசாஸ்திரங்களில் இருந்தும் காட்டிப் பேசிய மேற்கோள்கள் அவன் சொல்ல நினைத்த கருத்துக்களுக்கு எதிராகவே இருந்தது போல அமைந்தது. தங்கள் போராட்டத்துக்கு எதிராக ஏதேனும் அலை எழும்போது பாபு சுந்தர்லால் எழுந்து தன்னுடைய கருத்துக்களை வேரூன்ற முயற்சித்தான். அவனால் ஓரிரு வார்த்தைகளைக் கூட முழுதுமாக முடிக்க இயலவில்லை. அவனுடைய தொண்டை காய்ந்து போனது. கண்களிலிருந்து நீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது. அவனுடைய மனது வார்த்தைகளைத் தேடி அலைந்து எதுவும் முடியாமல் அமைதியாகத் தரையில் சரிந்து உட்கார்ந்தான். பார்வையாளர்கள் இடையே ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது. ஆனால் இரண்டே வார்த்தைகள் சொன்னாலும் அடிபட்ட மனதின் அடியாழத்தில் இருந்து வந்ததால் சுந்தர் லாலின் பேச்சு, எல்லாவிதமான புத்திசாலித்தனத்துடனும் வெளிவந்த வக்கீல் கல்கா பிரசாத் பேசியதை விட ஒரு ஆழமான பாதிப்பை உண்டாக்கியது. ஆண்கள் சில சொட்டுக் கண்ணீரை உதிர்த்து இதயங்களை லேசாக்கிக் கொண்டார்கள். தங்களுடைய காலியான மண்டைகளில் எவ்வித சிந்தனையும், யோசனையும் இன்றி அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
ஒரு நாள் மறுவாழ்வு கமிட்டி பிற்பகலில் கொஞ்சம் சீக்கிரமாகவே தங்கள் ஊர்வலத்தைத் துவங்கினார்கள். மிகவும் ஆச்சாரமான எதிர் வினைகளை உள்ளடக்கிய கோட்டை என்று சொல்லப்படும் கோவில் வளாகத்தின் அருகில் அவர்கள் அத்துமீறி கடந்து சென்றார்கள். அரசமரத்தின் கீழ் கட்டப்பட்ட சிமெண்ட் பெஞ்சில் சில ஆத்திகர்கள் உட்கார்ந்து ராமாயண பிரவசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத நிகழ்வாக அன்று நாராயண் பாவா விவரித்துக் கொண்டிருந்த இடம் ஒரு வண்ணான் தவறிழைத்த தன் மனைவியிடம் “இன்னொருவனுடன் பல வருடங்கள் கழித்த மனைவியை ஏற்றுக் கொள்ள நான் ஒன்றும் ஸ்ரீராமச்சந்திரன் இல்லை” என்று சொல்வதைக் கேட்க நேர்ந்த ராமச்சந்திரர் தன்னுடைய மனைவியை குழந்தையோடு அரண்மைனையை விட்டு வெளியேறச் சொன்னார்”
“ஒழுக்கத்தின் உச்சகட்டத்தை சுட்டிக் காட்ட இதை விடச் சிறந்த மேற்கோள் காட்ட முடியுமா?” என்று நாராயண் பாவா பார்வையாளர்களிடம் கேட்டார். ஒரு ஏழை வண்ணானின் வார்த்தைகளுக்குக் கூட மதிப்புத் தந்து சம உரிமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது. “இதுதான் இந்த மண்ணின் மீது கடவுளின் ஆட்சி என்பது – ராம ராஜ்ஜியம் என்பது”.
ஊர்வலம் கோயிலின் அருகில் சற்று நின்று பிரவசனத்தைக் கேட்கத் துவங்கியது. கடைசி வார்த்தையைக் கேட்டு சுந்தர்லால், “இது மாதிரியான ராமராஜ்ஜியம் நமக்குத் தேவையில்லை” என்று கத்தினான். “யாரது? சும்மா இருக்கணும். அமைதி…” என்று கூட்டத்தில் இருந்து குரல்கள் வந்தன.
சுந்தர்லால் கூட்டத்துக்கு நடுவில் பீறிட்டுக் கிளம்பி, “”நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது….” என்று கூச்சலிட ஆரம்பித்தான்.
மீண்டும் எதிர்ப்பு அலைகள் வலுத்தன. “அமைதி. நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேச விடமாட்டோம்”. யாரோ ஒரு மூலையில் இருந்து கூச்சலிட்டான். “கொன்று விடுவோம்”.
நாராயண் பாவா மிகவும் மென்மையான குரலில், “”சுந்தர் லால், வேதத்தின் புனிதமான மரபினை நீ புரிந்து கொள்ளவில்லை” என்றார்.
சுந்தர் லால் காட்டமான பதிலுடன் தயாராக இருந்தான். “ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. ராம ராஜ்ஜியத்தில் வண்ணான் சொன்னதைக் கூடக் கேட்டார்கள். ஆனால் அதே ராமராஜ்ஜியத்தின் ஆதரவாளர்களால் இந்த சுந்தர் லாலின் குரலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை”.
சுந்தர் லாலை அடிக்கிறேன் என்று மிரட்டியவர்களை இது தலை குனிய வைத்தது.
“அவன் பேசட்டும்”, ராஸôலுவும் நேகி ராமும் கத்தினார்கள். “அமைதி. அவன் பேசுவதையும் நாம் கேட்போம்”.
“சுந்தர் லால் பேசத் துவங்கினான். “ராமர் நம்முடைய நாயகன். ஒரு வண்ணானின் பேச்சைக் கேட்டான். ஆனால் அவனால் ஒரு மிகப் பெரிய மகாராணியான தன் மனைவி சொல்வதைக் கேட்க முடியவில்லை”.
“சீதை அவருடைய சொந்த மனைவி. சுந்தர் லால், உனக்கு இந்த மிக முக்கியமான விஷயத்தை கிரகிக்க முடியவில்லை” என்றார் நாராயண் பாவா.
“பாபாஜி, இந்த உலகில் என்னால் கிரகித்துக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆனால் உண்மையான ராஜ்யம் எதுவென்றால், அங்கு மனிதன் எந்தத் தவறும் செய்யாது இருப்பான் அல்லது தனக்கு யாரும் எந்தத் தீங்கும் இழைப்பது பொறுக்காது இருப்பான்”
சுந்தர் லாலின் வார்த்தைகள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தன. அவன் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தான். “”ராமர் சீதையை வீட்டை விட்டுத் துரத்தினார். ஏன் என்றால் அவள் தன்னை அபகரித்தவனுடன் இருக்க வேண்டி கட்டாயப் படுத்தப் பட்டாள். அவள் நம்முடைய சொந்தத் தாய்மார்கள், சகோதரிகளைப் போல சூழ்ச்சி மற்றும் வன்முறைக்கு இரையானவள் அல்லவா? இது சீதையின் நெறி தவறியதைக் காட்டுகிறதா அல்லது ராவணனின் தீமைச் செயலைக் காட்டுகிறதா? ராவணனுக்குப் பத்து தலைகள் இருந்தன. ஆனால் கழுதைக்கு மிகவும் பெரிதாக ஒரே ஒரு தலை. இன்று நம்முடைய அப்பாவி சீதைகள் தங்களுடைய வீடுகளை விட்டுத் துரத்தப் படுகிறார்கள். சீதா… லாஜ்வந்தி… சுந்தர் லால் உடைந்து மனம் வெதும்பி அழத் துவங்கினான்.
ராஸôலுவும் நேகி ராமும் தங்கள் கைகளில் இருந்த தட்டிகளை உயர்த்திப் பிடித்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். உரத்த குரலில், “சுந்தர் லால் பாபு வாழ்க!” என்று உரக்கக் கோஷமிட்டார்கள். கூட்டத்திலிருந்து யாரோ கூச்சலிட்டார்கள் – “கற்புக்கரசி சீதை வாழ்க”. வேறு யாரோ கத்தினார்கள் “ஸ்ரீ ராமச்சந்திரா”…
பல குரல்கள் அமைதி என்று கூச்சலிட்டன. பலர் பிரவசனத்தை விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் துவங்கினர். பல மாதங்களாக நடந்த நாராயண் பாவாவின் பிரச்சாரம் ஓரிரு கணங்களில் முறியடிக்கப் பட்டது. வக்கீல் கல்கா பிரசாத், மனு எழுதும் ஹூக்கும் சிங், போன்றவர்கள் தங்களுடைய கைத்தடிகளை மிகவேகமாகத் தட்டிக் கொண்டு ஊர்வலத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். சுந்தர் லால் கண்ணீரின் ஈரம் காயாது நடந்து கொண்டிருந்தான். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மிகுந்த சுவைநயத்துடன் பாடிக் கொண்டிருந்தார்கள்…
விரல் பட்டால் சுருங்கும்
லாஜ்வந்தியின் இலைகள்…
ஊர்வலத்தில் செல்பவர்களின் பாடல் ஷக்கூர் மொஹல்லா வாசிகளின் காதுகளை தீவிரமாகத் தாக்கியபோது கீழ்வானம் இன்னும் நரைக்க வில்லை. வீட்டு எண் 414ல் இருந்த விதவை ஒருத்தி தன்னுடைய கால்களை நீட்டி கனத்த ஒரு கனவில் மீண்டும் ஆழ்ந்தாள். சுந்தர் லாலின் கிராமத்தை சேர்ந்த லால் சந்த் மூச்சிறைக்க ஓடி வந்தான். தன்னுடைய சால்வையில் இருந்து கைகளை வெளியில் எடுத்து நீட்டி மூச்சிறைத்துக் கொண்டே, “பதாயி ஹோ (வாழ்த்துக்கள்) சுந்தர் லால்” என்று கத்தினான்.
தன்னுடைய சிலும்பில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை கிண்டிக் கொண்டே சுந்தர் லால் கேட்டான், “எதுக்கு லால் சந்த்?”
“நான் லஜ்ஜோ அண்ணியைப் பார்த்தேன்”
சிலும்பு சுந்தர் லால் கையில் இருந்து தவறியது. புகையிலை தரையெங்கும் சிதறியது. லால் சந்தின் தோளைப் பற்றியவாறு, “எங்கே?”
” எல்லையில்… வாகாவில்…”
சுந்தர் லால், பிடியைத் தளர்த்தி லால் சந்தைப் போக விட்டான். “அது வேறு யாரோ…” வேகமாகச் சொல்லிவிட்டு இடுப்பை ஊன்றித் தரையில் அமர்ந்தான்.
“இல்லை அண்ணா. அது லஜ்ஜோ அண்ணிதான்.” திரும்பத்திரும்ப உறுதியுடன் சொல்லிக் கொண்டிருந்தான் லால் சந்த். “”அதே லஜ்ஜோதான்”.
“உன்னால் அவளை அடையாளம் காண முடிந்ததா?” கையில் புகையிலையைத் தேய்த்துக் கொண்டே கேட்டான் சுந்தர் லால். ராஸôலுவின் சிலும்பைக் கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்தான் “சரி. அவளுடைய முக்கியமான அடையாளம் எல்லாம் சொல்லு”…
“விசித்திரமான ஆளாக இருக்கிறாயே. அவளை என்னால் அடையாளம் காணமுடியாதா? அவள் தன்னுடைய மோவாயில் பச்சை குத்திக் கொண்டிருந்தாள். பிறகு வலக் கன்னத்தில்.. அப்புறம்…
“ஆமாம்… ஆமாம்… அதே… அதேதான்… வெடித்த சுந்தர் லால் விவரிப்பை முடித்தான், “மூன்றாவது… நெற்றியில்…
மண்டியிட்டு அமர்ந்தான். எல்லா சந்தேகங்களையும் நீக்கிக் கொள்ள விரும்பினான். லாஜ்வந்தி குழந்தையாக இருந்த போது உடலில் குத்திக் கொண்ட பச்சைகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தான். அவை லாஜ்வந்தி இலைகளின் மீது குத்தப்பட்ட பச்சை போல இலை சுருங்கினால் மறைந்து போகும் புள்ளிகளாக இருந்தன. அவனுடைய லாஜ்வந்தி அதைப் போலவேதான் நடந்து கொண்டாள். அவன் அந்தப் பச்சைப் புள்ளிகளைச் சுட்டிக் காட்டியபோதெல்லாம் மிகுந்த சங்கடத்துடன் நத்தை கூட்டுக்குள் சுருக்கிக் கொள்வது போல, ஏறத்தாழ அவள் நிர்வாணத்தை யாரோ அம்பலப்படுத்தியது போல சுருங்கிப் போவாள். ஒரு விநோதமான ஆசையும் பயமும் சுந்தர் லாலை ஆட்டுவிக்க ஆரம்பித்தது. லால் சந்தின் கையை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டு கேட்டான், “”லஜ்ஜோ எப்படி எல்லைக்கு வந்தாள்?”
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபகரிக்கப்பட்ட பெண்களின் பரிமாற்றம் நடந்தது”
“என்ன நடந்தது?” சுந்தர் லால் திடீரென்று எழுந்து நின்று பொறுமையிழந்து திரும்பத் திரும்பக் கேட்டான். “”சொல்லு.
அப்புறம் என்ன நடந்தது?”
ராஸôலு கட்டிலில் இருந்து எழுந்து நின்று “லஜ்ஜோ அண்ணி நிஜமாகவே திரும்பி விட்டார்களா?” என்று நம்ப முடியாமல் கேட்டான். லால் சந்த் விஷயத்தைத் தொடர்ந்தான். “எல்லையில் பாகிஸ்தானியர்கள் நம்முடைய பெண்கள் பதினாறு பேரைத் திரும்பக் கொண்டு விட்டு அவர்களுடைய பெண்கள் பதினாறு பேரை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். நம்முடைய பயல்களில் ஒருவன் ஆரம்பித்தான். அவர்கள் திருப்பித் தரும் பெண்கள் எல்லோரும் வயதானவர்கள் அல்லது நடுத்தர வயதைக் கடந்தவர்கள் அல்லது எந்தப் பிரயோசனமும் இல்லாதவர்கள். பெரிய கூட்டமே அங்கு சேர்ந்தது. வாதம் வலுத்துக் கொண்டே வந்தது. சூடான வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு பாகிஸ்தானி திடீரென்று நம் லஜ்ஜோ அண்ணியை லாரி மீது ஏற்றி நிறுத்தி சடாரென்று அவள் துப்பட்டாவை உருவி வீசி எறிந்தான். இவளை நீங்கள் வயதானவள் என்று சொல்ல முடியுமா? நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு திருப்பிக் கொடுத்த பெண்களில் யாருக்காவது இப்படி ஒரு உடம்பு உண்டா? லஜ்ஜோ அண்ணி கூச்சத்தால் நெளிந்து தன் பச்சை குத்திய அடையாளங்களை மறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள். வாக்குவாதம் வலுத்தது. இருதரப்பிலும் கூச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது. இருவரும் தங்கள் “”சரக்குகளை” திரும்ப எடுத்துச் சென்றுவிடுவோம் என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். நான் உரக்கக் கூச்சலிட்டேன்… லஜ்ஜோ… லஜ்ஜோ அண்ணி….” அங்கு கூச்சலும் குழப்பமுமாக அமளி துவங்கியது. போலீஸ்காரர்கள் எங்களை மிகவும் ஆக்ரோஷமாகத் தாக்கத் துவங்கினார்கள்”
லால் சந்த் தன் முஷ்டியை உயர்த்தி போலீஸ் தடியடியால் வீங்கிப்போன சதைப் பகுதியைக் காண்பித்தான். ராஸôலுவும் நேகி ராமும் அமைதியாக இருந்தார்கள். சுந்தர் லால் வெற்றிடத்தை உற்று நோக்கியவாறு இருந்தான்.
லஜ்ஜோ திரும்பி வந்ததைக் கேட்டதும் வாகா எல்லைக்குக் கிளம்பத் தயாரானான் சுந்தர் லால். அவளை அங்கு சென்று சந்திப்பதா அல்லது வீட்டுக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாமா என்றும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எங்காவது ஓடிவிட வேண்டும் என்று தோன்றியது. அங்கு கிடந்த எல்லா பேனர்களையும் தட்டிகளையும் சுற்றிப் பரப்பி வைத்து விட்டு அவற்றின் நடுவில் அமர்ந்து “ஓ’ வென்று கதறி அழுதான். நெஞ்சம் கரையும் வண்ணம் அழுதான். ஆனால் மற்ற எல்லோரையும் போலவே, எதுவும் நடக்காதது போல காவல் நிலையம் நோக்கிப் போனான். திடீரென்று லஜ்ஜோ அவன் எதிரில் நிற்பதைப் பார்த்தான். அவள் மிகவும் பயந்திருந்தாள். சூறாவளிக் காற்றில் அல்லாடும் அரச இலையைப் போல அவள் சிதறிப் போயிருந்தாள்.
சுந்தர் லால் நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய லாஜ்வந்தி முஸ்லீம் பெண்கள் அணியும் துப்பட்டாவை அணிந்திருந்தாள். முஸ்லிம் பெண்ணைப் போல அந்த துப்பட்டாவை தலையைச் சுற்றி அணிந்திருந்தாள். அவள் முன்பிருந்ததை விட சற்று ஆரோக்கியமாக இருந்தது சுந்தர் லாலுக்கு சற்று ஏமாற்றம் அளித்தது. அவளுடைய நிறம் தெளிந்திருந்தது. எடை சற்றுக் கூடியது போல இருந்தது. அவளிடம் எதையும் பேசக்கூடாது என்று உறுதியளித்தது போல அவன் நின்றிருந்தான். ஆனால், அவள் அங்கு மகிழ்ச்சியாக இருந்த பட்சத்தில் இங்கு திரும்பி வந்தது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. அவளுடைய விருப்பத்துக்கு எதிராக அவளை பாகிஸ்தான் அரசு திருப்பி அனுப்பி விட்டதா?
காவல் நிலையத்தில் நிறைய ஆண்கள் இருந்தார்கள். சிலர் தங்கள் வீட்டுப் பெண்களை திரும்ப அழைத்துச் செல்ல மறுத்து விட்டார்கள். “”முஸ்லிம்களால் சப்பி எறியப்பட்ட இந்த எச்சில் பழங்களை நாங்கள் திரும்ப எடுத்துக் கொள்ள மாட்டோம்” என்று சொன்னார்கள். சுந்தர் லால் தன் அருவருப்பான உணர்வை ஒருவாறு சமாளித்துக் கொண்டான். தன் உடல் மற்றும் ஆன்மாவை அந்தக் கணத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டான். அங்கு அவனுடன் எப்போதும் கோஷமிட்டு ஊர்வலங்களில் கலந்து கொண்ட ராஸôலு, நேகி ராம், கிழ குமாஸ்தா, வக்கீல் போன்றோர் இப்போதும் தொண்டை கிழிய கோஷம் போட்டுக் கொண்டு வெளியே நிற்கிறார்கள். சொற்பொழிவுகளுக்கும் கோஷங்களுக்கும் இடையில் லஜ்ஜோவும் சுந்தர் லாலும் தங்கள் வீடு திரும்பினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த காட்சி மீண்டும் அங்கு அரங்கேறியது. தங்களின் நீண்ட வனவாசத்துக்குப்பின் ஸ்ரீராமச்சந்திர பிரபுவும் சீதா பிராட்டியாரும் அயோத்தியா திரும்பினார்கள். சில மக்கள் தீபம் ஏற்றி அவர்களின் வருகையைக் கொண்டாடிக் கொண்டிருந் தார்கள். அதே நேரத்தில் ஒரு அப்பாவி ஜோடிக்கு தாங்கள் இழைத்த பாவத்தினால் இப்படி ஒரு இக்கட்டு நேர்ந்ததே என்னும் குற்ற உணர்வில் வருந்திக் கொண்டிருந்தார்கள்.
சுந்தர் லால் அதே உற்சாகத்துடனும் முனைப்புடனும் இதயங்கள் மறுவாழ்வு கமிட்டியில் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் தான் எடுத்துக் கொண்ட சபதத்தின் ஒவ்வொரு எழுத்தையும் நிறைவேற்றினான். அவனை வெற்று சவடால் சித்தாந்தவாதி என்று தூற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட அவன் சித்தாந்தத்துக்குத் தங்களை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் நடந்து கொண்டிருந்த திருப்பங்களின் மேல் அதிருப்தி கொண்டிருந்தார்கள். லாஜ்வந்தியை ஒதுக்கி வைத்தவர்களில் வீட்டு எண் 414ல் வாழ்ந்து கொண்டிருந்த விதவை ஒருத்தி மட்டுமே அல்ல.
சுந்தர் லால் இந்த மனிதர்கள் மேல் அதிப்தி கொண்டிருந்தான். அவனுடைய இதயத்தின் அரசி இப்போது வீட்டுக்குத் திரும்பி விட்டாள். ஒரு காலத்தில் நிசப்தமாக இருந்த அவனுடைய கோயில் இப்போது சிரிப்பலைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவன் தன்னுடைய உள்ளத்தின் கர்ப்பக்கிரகத்தில் வாழும் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து விட்டு வாசலில் காவல் காத்தான். காவல்காரனாக வீட்டு வாசலில் தன்னை இருத்திக் கொண்டான். அவன் லஜ்ஜோவை பெயரிட்டு அழைக்கவில்லை. “”தேவி” என்று அழைத்தான். அவனுடைய பாசத்துக்கு அவள் எதிர்வினை ஆற்ற விரும்பினாள். எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். தான் எதிர்கொண்ட அனுபவங்கள் அனைத்தையும் அவனிடம் கொட்டித் தீத்து, தன்னுடைய கண்ணீரால் பாவங்களைக் கழுவ வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவள் அதைப் பற்றிப் பேச எத்தனிக்கும் போதெல்லாம் சுந்தர் லால் தவிர்த்தான். இரவு நேரங்களில் அவனுடைய முகத்தையே அவள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்படிச் செய்யும் போது அவனிடம் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கான விளக்கம் எதையும் தர முடியவில்லை அவளால். களைத்துப்போன சுந்தர் லால் மீண்டும் உறங்கி விடுவான்.
அவள் திரும்பி வந்த முதல் நாள் மட்டுமே சுந்தர் லால் லாஜ்வந்தியிடம் அவளுடைய அந்தக் “கருப்பு’ நாட்களைப் பற்றிக் கேட்டான். “யார் அவன்?” தன்னுடைய பார்வையைத் தாழ்த்திக் கொண்டு அவள் சொன்னாள் “ஜும்மா”. பிறகு அவள் சுந்தர் லால் முகத்தை முழுவதுமாகப் பார்த்து அவன் கண்களில் ஊடுருவி பின்னர் எதையோ சொல்ல வேண்டும் என்று எத்தனித்தாள். ஆனால் சுந்தர் லால் விநோதமான பார்வையை அவள் மீது வீசி விட்டு அவளுடைய கூந்தலை அளைய ஆரம்பித்தான். லஜ்ஜோ மீண்டும் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். சுந்தர் லால் அவளிடம் கேட்டான், “அவன் உன்னிடம் நன்றாக நடந்து கொண்டானா?”
“ஆமாம்”
“உன்னை அடிக்க வில்லையா?”
லாஜ்வந்தி பின்புறமாக சாய்ந்து தன் தலையை சுந்தர் லாலின் மார்பின் மீது இருத்திக் கொண்டாள். “”இல்லை… அவன் என்னை திட்டவில்லை. எப்போதும் அடிக்கவில்லை. ஆனால் அவனிடம் நான் பயந்து போயிருந்தேன். நீங்கள் என்னை அடித்தீர்கள். ஆனால் உங்களிடம் எப்போதும் எனக்கு பயம் இல்லை. நீங்கள் மீண்டும் என்னை அடிக்க மாட்டீர்கள் இல்லையா?”
சுந்தர் லாலின் கண்கள் கண்ணீரால் தளும்பின. வருத்தம் மற்றும் அவமானம் வழிந்த குரலில் அவன் தழுதழுத்தான், “இல்லை, தேவி… உன்னை இனி எப்போதும் அடிக்க மாட்டேன்…”
“கடவுளே…” லஜ்ஜோ ஒரு கணம் வார்த்தைகளுக்குத் தடுமாறி பின்னர் பலமாக அழத் துவங்கினாள். அவனுக்கு நடந்தவை எல்லாவற்றையும் சொல்ல விரும்பினாள். ஆனால் சுந்தர் லால் தடுத்து விட்டான். “நாம் நடந்ததை மறப்போம். நீ எந்தப் பாவமும் செய்யவில்லை. உன்னைப் போன்ற நற்குணமுடைய பெண்களுக்கு ஒரு கெளரவமான இடத்தைத் தராத இந்த சமூகம் தான் பாவம் செய்தது. இதனால் உனக்கொன்றும் தீங்கு நேராது. சமூகத்துக்குத்தான் கேடு வரும்”
லாஜ்வந்தியின் ரகசியம் அவளுடைய மார்பகங்களின் உள்ளேயே அழுத்தமாகப் புதைந்து போனது. பிரிவினை துவங்கியபின் தேவதையின் உடலாக மாறிய அவளுடைய உடலின் பளபளப்பை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அது இனி அவளுக்குச் சொந்தமில்லை. அவள் மிகவும் ஆனந்தமாக இருந்தாள். சந்தோஷமாக இருந்தாள். ஆனால் அவளுடைய அந்த சந்தோஷமானது அவநம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் சேர்ந்த கலவையாக இருந்தது.
பல நாட்கள் இப்படிக் கடந்தன. மகிழ்ச்சியின் இடத்தை சந்தேகம் பிடித்துக் கொண்டது. சுந்தர் லால் அவளை மீண்டும் கேவலமாக நடத்த ஆரம்பித்ததனால் அல்ல. ஆனால் அவளை நன்றாகவும் நடத்தியதனால். லஜ்ஜோ அவனை அன்பும் ஆதரவும் மிக்கவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். கேரட்டுக்காக சண்டை போட்டு முள்ளங்கி வாங்கி வந்து தன்னுடன் சண்டை போடும் அதே சுந்தர் லாலுக்காக அவள் ஏங்கினாள். இப்போது சண்டைக்கான வாய்ப்பே இல்லை. சுந்தர் லால், அவளை ஏதோ தொட்டால் உடைந்து நொறுங்கிவிடும் கண்ணாடியைக் கையாளுவது போல கையாண்டான். லஜ்ஜோ எப்போதும் தன்னை நிலைக் கண்ணாடியில் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். வறண்டதொரு நிழல் விழாப் பொட்டல் வெளியில் தனக்குத் தெரிந்த லஜ்ஜோவை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
அவளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டடிருக்கிறது.
அவள் ஆனால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.
அவளுடைய கண்ணீரைக் காணக் கண்களும், புலம்பல்களைக் கேட்கக் காதுகளும் சுந்தர் லாலுக்குத் தேவையில்லை.
.ஆனாலும் சுந்தர் லால் தினமும் காலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்டான். தன்னுடைய களைத்துப் போன உடலை சன்னலுக்கு அருகில் இழுத்துப்போகும் லஜ்ஜோ யாருக்கும் புரியாத வார்த்தைகளில் அமைந்த அந்தப் பாடலை தினமும் கேட்டுக் கொண்டிருப்பாள்…
மனித விரல்
தீண்டினால்
வாடிப் போகும்
லாஜ்வந்தி இலைகள்…
_________________________________________________________________________________________________
ரஜீந்தர் சிங் பேடி (1915-1984)
தன்னுடைய அற்புதமான, உள்ளத்தை நெகிழவைக்கும் படைப்புக்களால் உருது புனைவு இலக்கியத்தில் மிகவும் முக்கியமான இடத்தை வகித்தவர் சர்தார் ரஜீந்தர் சிங் பேடி. வடக்கில் ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவுக்கு அடுத்ததாக எப்போதும் பெருமையுடன் உச்சரிக்கப்படும் பெயர் இவருடையது. மண்ட்டோவைப் போலவே இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரங்களில் மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்களை வேதனையுடன் தன்னுடைய படைப்புக்களில் பதிவு செய்தார் பேடி.
பேடி சாஹிப், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் பிறந்து பின்னர் இந்தியாவில் குடியேறியவர். அஞ்சல் துறையில் குமாஸ்தாவாகத் தன்னுடைய வாழ்வைத் துவங்கி, பின்னர் அகில இந்திய வானொலில் பணிபுரிந்தார். பின்னாளில் எழுத்துத் துறையை முழுநேரப் பணியாக எடுத்துக் கொண்டார். இவருடைய 72 சிறுகதைகளும் மிகவும் பிரபலமானவை. இலக்கிய ஆர்வலர்களால் தேடித் தேடிப் படிக்கப்பட்டவை. எழுத்துத் துறையில் இருந்து திரைப்படங்களுக்கு வசனம் எழுதுதல், திரைப்படங்களை இயக்குதல் என இவருடைய கலைப்பயணம் தொடர்ந்தது. இவருடைய அதிகபட்சமான பங்களிப்பு திரைத்துறையில் இருந்தாலும் பிரிவினை தந்த துயரங்களை மிகவும் நேர்மையுடன் பதிவு செய்த இவருடைய சிறுகதைகள் அமரத்துவம் பெற்றவை. இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும்‘லாஜ்வந்தி’ சிறுகதை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. படிப்பவர்களை ஒருவகையில் உலுக்கி எடுத்துவிடும் தன்மை கொண்டது.
வடக்கில் ‘லாஜ்வந்தி’ என்பது ஏறத்தாழ நம்மூரின் தொட்டால் சுருங்கி செடியைப் போன்றது. ஒருவேளை அதுவாகவும் இருக்கலாம்.
ராகவன் தம்பி
kpenneswaran@gmail.com

Series Navigationஎனக்கு வந்த கடிதம்காத்திருப்பு
author

ராகவன் தம்பி

Similar Posts

12 Comments

  1. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் பென் சார்,

    அருமையான மொழிபெயர்ப்பு.. நெஞ்சம் நெகிழச் செய்தது.

    அன்புடன்
    பவள சங்கரி

  2. Avatar
    இளங்கோ says:

    நெஞ்சை நெகிழ வைக்கும் படைப்பு. பிரிவினையின் போது நடந்த இந்தப் பண்டப் பரிமாற்ற சோகங்கள் மிகக் கொடூரமானவையாகத் தெரிகின்றன. அதே நேரத்தில் மனித மனத்தில் ஒரு சில கணங்களில் தோன்றும் கலவையான உணர்வுகளை வார்த்தையால் வடிக்க முடியும் என்பது மிக ஆச்சர்யமான ஒன்று. மொழி பெயர்ப்பாளர் இதன் மூலத்தை படித்து,அந்த வேதனையை உள் வாங்கி, வலி தாங்காமல் இதை மொழி பெயர்த்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

    இந்தக் கதையைப் பிரசுரித்ததற்காக திண்ணைக்கு நன்றி சொன்னாலும், இன்னும் திருத்தமாகப் பிரசுரிக்க முயற்சிக்கலாமே என்ற ஆலோசனையை திண்ணைக்குழுவினருக்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை. நிறுத்தக் குறியீடுகள் இடுவதில்,பத்தி பிரித்தலில், பத்திகளுக்கிடையே இடைவெளியின்மையில் உள்ள சிறிய குறைபாடுகள் உணர்ந்து களையப் பட வேண்டியவை.

  3. Avatar
    Geetha Sambasivam says:

    //மனித மனத்தின் சகிப்புத் தன்மையின் எல்லைக்கோட்டினை அறியாதவனாகவும் உணராதவனாகவும் அவன் இருந்தான்.//

    ஆழமான அலசல்.

    //அதிகமாக முற்றிய காலிஃபிளவர்களைப் போல செழிப்பாக இருந்தார்கள்.//

    அந்தப் பெண்களின் அலக்ஷிய சுபாவத்தை இதை விட அழகாய்ச் சொல்ல முடியாது.

    //திடீரென்று லஜ்ஜோ அவன் எதிரில் நிற்பதைப் பார்த்தான். அவள் மிகவும் பயந்திருந்தாள். சூறாவளிக் காற்றில் அல்லாடும் அரச இலையைப் போல அவள் சிதறிப் போயிருந்தாள்.//

    படிக்கவே வேதனையாய் இருக்கையில் உண்மையில் இப்படி எல்லாம் நடந்திருக்கே, அந்தப் பெண்களுக்கு எப்படி இருக்கும்?

    //தான் எதிர்கொண்ட அனுபவங்கள் அனைத்தையும் அவனிடம் கொட்டித் தீத்து, தன்னுடைய கண்ணீரால் பாவங்களைக் கழுவ வேண்டும் என்று நினைத்தாள்.//

    பெண்மனம் விரும்புவதை சகஜமாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால்???????

    //அவளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டடிருக்கிறது.
    அவள் ஆனால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.//

    வேஷம் போடும் ஆண் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னதான் வாய் கிழியப் பேசினாலும், தனக்கு என்று வருகையில்……..

  4. Avatar
    ராமலக்ஷ்மி says:

    /அவளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டடிருக்கிறது.
    அவள் ஆனால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை./

    சரித்திரத்தின் கருப்புப் பக்கத்தை இவ்விரண்டு வரிகள் உணர்த்தி விடுகின்றன.

    அவசியமான பகிர்வு. நல்லதொரு மொழிபெயர்ப்பு.

  5. Avatar
    மலர்மன்னன் says:

    //பேடி சாஹிப், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் பிறந்து பின்னர் இந்தியாவில் குடியேறியவர்//
    ரஜீந்தர் பிறந்தபோது பாகிஸ்தான் என்பதாக ஒரு செயற்கை தேசம் தோன்றவிருக்கிறது என்பதற்கான முகாந்திரமே இருக்கவில்லையே! தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். அல்லது தேசப் பிரிவினைக்கு முந்தைய மேற்கு பஞ்சாப் பகுதியில் என்றாவது சொல்லியிருக்கலாம். இவ்வாறு வலியுறுத்தக் காரணம் புதிய தலைமுறையினருக்கு சம கால வரலாறுகூடச் சரியாகப் புகட்டப்படுவதில்லை. இப்படித்தான் தூர் தர்ஷனில் ரங்கோலி நிகழ்ச்சியை நடத்தும் இளம் பெண் ஸைகல் பாகிஸ்தானில் பிறந்தார் என்று சொன்னார். நான் இது குறித்துக் கண்டனம் தெரிவித்துக் கடிதம் எழுதினேன். இப்போது ’பட்டுவாரா’- பிரிவினைக்கு- முந்தைய என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!
    -மலர்மன்னன்

  6. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    மலர் மன்னன், நீங்களும் பேடி என்று எழுதுகிறீர்களே. அவர் பேதி அல்லவா? எப்படி எழுதினாலும் தமிழில் கண்றாவியாகத் தான் இருக்கிறது. ஆனால் பேதியை விட பேடி என்று அவர் பெயரைச் சொல்வது இன்னம் மோசம். அவர் வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் பேடி அல்லர். தமிழ் தரும் அர்த்தத்தில்.

    இப்படி எத்தனையோ பெயர்கள் தமிழ் பத்திரிகைகளில், தொலைக்காட்சியில் கொலை செய்யப்படுகின்றன. நான் ஒரு தடவை ஒரு பட்டியலே கொடுத்திருந்தேன். சிஃபி டாட் காமில் எழுதிவந்தபோது. ஒரு பயனும் இருக்கவில்லை.

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      ஆமாம். பெயரை அப்படியே எழுதியிருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பஞ்சாபிகள் உச்சரிப்பில் நெடில் விஷயங்களை நெருங்க விடுவது இல்லை. ‘பெத்தி’ என்றும் சொல்வார்கள். இனி பேடி என்று எழுதாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறேன். பெயர் உச்சரிப்பில் செலுத்துகிறேன்.

  7. Avatar
    ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் says:

    இந்தக் கதையை ரா வீழிநாதன் மொழிபெயர்ப்பில் முன்னரே நேஷனல் புக் ட்ரஸ்ட் பதிப்பில் படித்திருக்கிறேன்.

    ஆனாலும் உங்களுடைய மொழிபெயர்ப்பில் சில நுணுக்கங்கள் இன்னும் கதைச் சூழலை கனக்க வைக்கிறது.

    தொட்டாற்சுருங்கி – என்றுதான் வீழிநாதன் தலைப்பு கொடுத்திருந்தார். ஆனால் தமிழுக்கு ஏற்றாற்போல் சில ரௌண்டிங் ஆஃப் செய்திருப்பார் போல.

    உங்கள் மொழிபெயர்ப்பில் ஒரு கூடுதல் ஆழத்தைப் பார்க்க முடிகிறது.

    உண்மையிலேயே ஆணின் மனசாட்சியைக் கூண்டில் ஏற்றும் சிறுகதை இது.

    *
    இதுதான் எழுத்தாளனின் பேனா மனித வாழ்வின் ஆழமான நெளிவு சுளிவுகளினிடையே நேர்த்தியாக ஓடுகின்ற லாகவம்.

    சுந்தர்லாலின் நினைப்பு — அவள் கடத்தப்பட்டுச் சேர்ந்த இடத்தில் படாத கொடுமையெல்லாம் பட்டிருப்பாள்.

    ஆனால் நிஜம், எதிர்பாராவிதமாய் — நன்றாக நடத்தப்பட்டு வந்திருக்கிறாள்.

    சுந்தர்லால் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணிவிட்டுத் தன் வீடு என்று வந்ததும் கோபம், தாபம் என்று காட்டியிருந்தால் அப்பொழுது லாஜ்வந்திக்குச் சூழல் பழைய இயல்பில் அடங்கியிருக்கும்.

    ஆனால் நிஜம் –ஊருக்குச் சொன்னவன் தானும் அப்படியே நடந்துகொண்டான். அவளைக் கண்ணாடிப் பாண்டம் போல் ஜாக்கிரதையாகக் கையாண்டான். இன்சொல், மரியாதை தவிர எந்த மாற்றுச் செயலோ, சொல்லோ இல்லை. அவளுக்கு நடந்ததற்கெல்லாம் காரணம் சமுதாயமும், தானும் என்று குற்ற உணர்வில் குமைகிறான்.

    எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. நடந்திருக்கிறது. ஆனால் அங்குதான் ட்ராஜடி தன் விரிசல்களைக் காட்டுகிறது.

    இனி தான் என்றுமே பயப்படாத அந்தப் பழக்கமான கோபக்காரன், தனக்குப் பிடித்தவன் மறைந்தேவிட்டான். இப்பொழுது இருப்பவனோ தன்னைத் தேவி போல் தாங்கும் பக்தன் மட்டுமே.

    அவனைப் பொறுத்தவரையில் இவள் கொடுமையெல்லாம் அனுபவித்து வந்திருபபாள். தான் பழமையில் நடந்துகொண்ட காட்டுமிராண்டித்தனத்திற்கெல்லாம் சரிகட்டும் விதத்தில் ஓர் இலட்சிய புருஷனாக, ஆண்மகனாக அவளிடம் பாசம், மதிப்பு, மரியாதை மட்டுமே கொண்ட மாதிரிக் கணவனாக, அவ்ள் பட்ட கொடுமைகளை ஆற்றும் வண்ணம் அன்பே பொழியும் முகிலாக நடக்க வேண்டும் என்று எண்ணியதில் ஒரு பகுதி முதலிலேயே புஸ்வாணம். காரணம் அவள் போய்ச் சேர்ந்த இடத்தில் அவள் நன்றாகவே நடத்தப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ராத்திரியெல்லாம் திடீரென்று எழுந்து உட்கார்ந்து தூக்கிவாரிப் போட்டுத் தான் போய் அவளை அனபாலும், ஆறுதல் மொழிகளாலும் அமைதிப்படுத்த வேண்டிய தேவையே இல்லை. இருந்தாலும் மிஞ்சுவது தன் குற்ற உணர்வு மட்டுமே. என்ன?

    தான் மூர்க்கத்தனம் காட்டி அவளிடம் முன்னர் நடந்துகொண்டதெல்லாம் யாது காரணம் பற்றி? தான் ஓர் ஆண்மகன். உண்மையான ஓர் ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான திறமை, தன் மனைவி, தன் சுற்றம், தன் சொத்து என்றபடி அனைத்தையும் பிறர் கவராவண்ணம் காக்கும் திடம் திறமை. அது இல்லாமல் அந்த அபலைப் பெண்ணை அந்நியன் அபகரிக்கக் காவு கொடுத்துவிட்டு, தானும் சமுதாயமும் எந்த முகத்துடன் திரும்பிவந்த பெண்களைக் குற்றவிரல் நீட்டுவது? வெட்கம். உண்மையில் குற்றவாளிகள் தான் தான், சமுதாயம்தான். அவதிப்பட்டு மீண்டவர்கள் பாவம் அப்லைகள் நிரபராதிகள். குறைந்தபட்சம் அவர்களுக்கு மிஞ்சிய வாழ்நாளைத் தாங்கள் அவர்களின் மனம் கோணா வண்ணம் சேவை செய்வது ஒன்றுதான் தங்களின் பாவக் கழுவாய்.

    பேடிஜீ அமைத்திருக்கும் தர்ம சங்கடக் கட்டம் simply brilliant !!

    எங்கு போய் இது தாக்குகின்றது என்பதைப் பார்ப்போம் !

    சீதையை மீட்டுக் கொணர்ந்த கட்டம். ஊர்வாய் கொழுத்த கணம். அரசியலுக்கு அடிமைப்பட்டு ஸ்ரீராமன் எடுத்த முடிவு.

    சொல்லாமல் சொன்ன விமரிசனமாக இங்கு பாய்கின்றது எழுத்தாளனின் பேனா.

  8. Avatar
    மலர்மன்னன் says:

    //மலர் மன்னன், நீங்களும் பேடி என்று எழுதுகிறீர்களே. அவர் பேதி அல்லவா? – வெ.சா.//

    இல்லையே, சாமிநாதன், நான் அப்படி எழுதவே இல்லையே!
    பேட் என்கிற சமஸ்க்ருத வேர்ச்சொல்லில் இருந்து வந்ததுதான் பேடி என்கிற வினைச் சொல் என நினைக்கிறேன். பேட் என்பதற்குக் கோழைத்தனம் என்று ஒருவாறு பொருள் சொல்லலாம்.
    -மலர்மன்னன்

  9. Avatar
    மலர்மன்னன் says:

    குந்தன் லால் ஸைகல் உண்மையில் பிறந்தது ஜம்முவில், மறைந்தது ஜலந்தரில். இரண்டுமே ஹிந்துஸ்தானத்தில் உள்ளவைதான். ஆனால் லாஹூரிலிருந்து இசைத் துறைக்கும் சினிமாவுக்கும் வந்ததால் லாஹூர்காரர் என்று பெயர் எடுத்துவிட்டார். என்றாலும் அவர் பஞ்சாபிதான். இதையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.
    -மலர்மன்னன்

Leave a Reply to பவள சங்கரி. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *