வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]

author
1 minute, 28 seconds Read
This entry is part 26 of 32 in the series 13 ஜனவரி 2013

 

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

Cover image

1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

    2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]

The Devils Disciple
Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது.  அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை  தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைசுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார்.  அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

 

Fig 1 Richard under Trial

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

Fig 4 Richard Under trial

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்க காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது.   இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கி புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் கொல்லப்பட்ட போர்க் காலம் அது .  பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்துவது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சிக் கதை இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில்  எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர்.   அத்தகைய துரோகிப் பாதிரியார் [அந்தோணி ஆண்டர்சன்] ஒருவரைச் சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவி ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாராகிறான்.  இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து  காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

**********************

நாடக  உறுப்பினர்

1.  ரிச்செர்டு டச்சியான்   [35 வயது]  (Richard Dudgeon)

2.  கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன்   (Christy  Dudgeon)

3.  கிறித்துவப் பாதிரி மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4.  ஜூலியா ஆண்டர்சன் பாதிரியார் மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5.  ஜெனெரல் பர்காயின்  [50 வயது]  (British General Burgoyne)

6.  மேஜர் சுவின்டன்  [55 வயது] (Major Swindon)

7.  ஸார்ஜன்ட்   (Sergeant)

8.  வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9.  மிஸிஸ். டிமதி டச்சியான் :  [வயது 60] [Mrs Timothy Dudgeon : Mother of Richard Dudgeon)

10.  சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11.  சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி  (Uncle William Dudgeon & Wife)

12.  சிற்றப்பா  டைட்டஸ்  டச்சியான் & மனைவி  (Uncle Titus Dudgeon & Wife)

13 இளம் மங்கை : எஸ்தர்  [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

************************

Fig 5 The Devils Disciple

 

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -1 பாகம் -1

மூன்று அங்க நாடகம்

[முதற் காட்சி]

இடம்:  அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர்.

[Websterbridge, New Hamshire, U.S.A..]

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது :  ஒரு நாள் இலையுதிர் காலத்து இருண்ட மாலை நேரம்.   ஆறு மணி இருக்கலாம்.

அரங்க அமைப்பு:   ஓர் எளிய குடியானவரின் பழைய வீடு.  வயதான மூதாட்டி மிஸிஸ் டச்சியான்  சமையல் அறையில் நாற்காலில் அமர்ந்து சாய்ந்துள்ளார்.   இரவு பூராவும் விழித்திருந்ததால் அவள் தளர்ச்சி அடைந்துள்ளது முகத்தில் தெரிகிறது.   பிரிஸ்பிட்டீரியன் கிறித்து ஆலயத்துக்கு ஞாயிறு தோறும் தவறாது செல்லும்  மத நேய அபிமானி அவள்.   சோபா, நாற்காலி, மேஜை யாவும் அழுக்கடைந்து உள்ளன.   அடுத்து அந்த அறையில் 16 அல்லது 17 வயதிருக்கும் ஓரிள மங்கை படுத்திருக்கிறாள்.  பயந்த சுபாவப் பெண்.  கருத்த கூந்தல், பழுப்பு நிறத்தவள்.   அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது.  மூன்றாவது தட்டலில் முதிய வயது மாது விழித்தெழுகிறாள்.

+++++++++++++++++

The Devil is put under the gallows

நாடக முதற்காட்சி

 

முதிய மாது:  [அதட்டலுடன் தூங்கும் மங்கையைப் பார்த்து]  எழுந்து கதவைத் திறடி, காது செவிடா உனக்கு ?   விழித்தெழுடி சிறுக்கி !   முதலில் கதவைத் திறடி !  யாரென்று பார் !   சொல்வது கேட்கிறதா செவுடி ?

அப்பாவி மங்கை:  [கண் விழித்தும் விழிக்காமல் மெதுவாய் எழுந்து கொண்டு]  என்ன செய்ய வேண்டும் ?

முதிய மாது:  மாலையில் என்ன தூக்கம் ?  வெட்க மாயில்லை !  பாபப் பிறவியே !  வீட்டு வேலையை மறந்து தூங்கிறாயே !   மூட ஜென்மமே !   உன் அப்பனும் இப்படித்தான் செத்துக் குளிர்ந்து போய் குழிக்குள்ளே தூங்குகிறான்.  நீ எல்லாம் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய் ?

மங்கை:  [எழுந்து நின்று கொட்டாவி விட்டு]  மன்னித்துக் கொள் மேடம்.  தெரியாமல்  கண் அயர்ந்து போனது, வேலைக் களைப்பில் !   இனிமேல் இப்படி தவறிழைக்க மாட்டேன்  மேடம் !

முதிய மாது:  [அவள் பேச்சை இடையே வெட்டி]  ஆமாம் ஏதாவது ஒரு காரணத்தை ஒப்புவிப்பாய்.   போதும் எதுவும் சொல்லாதே !   போய்க் கதவைத் திறடி !  உன் சித்தப்பவாக இருக்கலாம் !   ராத்திரி முழுவதும் நான் விழித்த களைப்பில் தலை சுத்துது எனக்கு.   போகும் போது அந்தக் கணப்பு அடுப்பைத் தூண்டி விட்டுப் போ !

[இளமங்கை கணப்பைத் தூண்டி விறகைத் திணிக்கிறாள்.  அதற்குள் முதிய மாது கதவைத் திறக்கிறாள்.  சட்டென சற்று குண்டான உடம்பும், வட்ட முகமும் கொண்ட மூட மனிதன், கிரிஸ்டி உள்ளே நுழைகிறான்.  வயது 22 இருக்கலாம்.  கவர்ச்சியான தலைச் சீவல்.  குளிரிலிருந்து உள்ளே நுழைந்தவன் நேராய்க் கணப்படுப்பு அருகில் சென்று, உடலுக்குச் சூடேற்றிக் கொள்கிறான். முதிய மாது கதவைச் சாத்தி மூடுகிறாள்.]

கிரிஸ்டி:  [கணப்படுப்பு அருகில் குளிர் காய்ந்து]  அப்பாடி ! குளிர் தாங்க முடிய வில்லை !  [இள மங்கையை வியப்புடன் பார்த்து]  யாரிந்த மங்கை ?  யார் நீ  சொல் ?

மங்கை:  [நடுங்கி நாணிக் கொண்டு ]  நான் .. நான் .. என் பெயர் .. எஸ்தர் !

முதிய மாது:  கேள் அவளை யாரென்று ?  [எஸ்தரிடம்] சின்னப் பெண்ணே !  போடி உன் அறைக்கு !  போய்ப் படுத்துக் கொள்.  விட்ட தூக்கத்தை தொடர்.  போடி போ !

எஸ்தர்:  எனக்கு இனிமேல் தூக்கம் வராது அம்மா !

 

Fig 3 Wake up stupid girl

முதிய மாது:  [கோபமாய்]  பதில் பேசாதே !  சொன்னபடிச் செய் !  உன் அறைக்கு போடி !   தூங்கும் முன்பு பிரார்த்தனை செய்ய மறக்காதே !   ஒன்றும் நடக்காதது போல்  நேற்று தூங்கச் சென்றவள்.

[அழுது கொண்டே எஸ்தர் தன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்துக் கொள்கிறாள்.]

கிரிஸ்டி:   அவளுக்கு என்ன தெரியும் , பாவம் ?  நமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சித்தப்பா பீட்டர்  டச்சியான் செத்ததைக் கூட அவளால் உணர்ந்து பார்க்க முடியாது !

முதிய மாது:  என்ன சொல்கிறாய் சின்ன மகனே !  எஸ்தர் பீட்டரின் மகள் அல்லவா ?  அவன் செய்த தவறுக்கும்,  வெட்கப்படும் செயலுக்கும் அவன் பெற்ற தண்டனை மரணம் !

கிரிஸ்டி : [மங்கையைப் பார்த்து]  என்ன சித்தப்பா மகளா இந்த எஸ்தர் ?

முதிய மாது:  வேறு எந்த காரணத்துக்காக அவள் இங்கு தங்க வேண்டும் ?  எனக்கு வேறு தொல்லைகள் இல்லையா ?  என் புதல்விகளை என்னிடம் வைத்து வளர்த்து வருவது போதாதா ?   உன்னையும் உன் உதாக்கரைச் சகோதரன் ரிச்செர்டையும்  வேறு நான் கண்காணித்து வருகிறேன்.   அதோடு எஸ்தர் போன்ற உன் சித்தப்பாவின் வேசி பிள்ளைகளையும் நான் தத்தெடுக்க வேண்டுமா ?

கிரிஸ்டி:  [காதில் முணுமுணுத்து]  மெதுவாய்ப் பேசு !  எஸ்தர் காதில் விழப் போவுது இந்த அபத்த வார்த்தை !  பாவம் சின்னப் பெண் !

முதிய மாது:  [குரலை உயர்த்தி]  அடே !  அவள் காதில் விழட்டும் !  விழுந்தால் என்ன ?  விழட்டும் என்றுதான் கத்திப் பேசினேன்.   கடவுளுக்கு அஞ்சாதவள் வேதாளம் புரியும் வினைத்துக்கு ஏற்ற பேரைத் தர பயப்படுவ தில்லை !   ஏனடா கணப்புக்கு முன்னே அடைபட்ட பன்றி போல் நிற்கிறாய் ?  எதற்கு இங்கு வந்தாய் ?  என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய் ?

கிரிஸ்டி:  சிறிது நேரத்தில் நமது பாதிரியார் வந்து உனக்கோர் அதிர்ச்சி சேதியை அறிவிப்பார்.   அவர் வரும் நேரம் இது !  அதைச் சொல்லத்தான் வந்தேன்.

முதிய மாது:  [ஆவலின்றி]  அப்படி என்ன  அதிர்ச்சி செய்தி ?

கிரிஸ்டி:  [மன வேதனையோடு, தயங்கித் தயங்கி]  அம்மா !  அம்மா ! நமது  அப்பாவும் செத்து விட்டார் !  …. ஆம் தூக்கு மரத்தில் தொங்கினார் !  பிரிட்டீஷ் அதிகார வெறிக்குப் பலியானார் எனது சித்தப்பாவைப் போல் !

முதிய மாது :  என்ன ?  என்ன ?  உன் தந்தையும் மரித்தாரா ?  [கண்ணீர் பொங்கி]  சின்ன மகனே ! நான் தனித்துப் போய் விட்டேனடா !  எனக்கு யார் உள்ளார் இப்போது ?

 

Fig 6 The Execution

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1.  Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2.  http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3.  http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple  [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple”  – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs  [You Tube : The Devil’s Disciple Drama]

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 12, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅக்னிப்பிரவேசம்-18இன்னொரு வால்டனைத் தேடி…..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *