வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -5 மூன்று அங்க நாடகம்

This entry is part 16 of 31 in the series 10 பெப்ருவரி 2013

 

வேதாளத்தின் மாணாக்கன்

(The Devil’s Disciple)
அங்கம் -1 பாகம் -5

மூன்று அங்க நாடகம்

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

Cover image

1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் போன ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார். அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத் துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத் தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

Fig 1 Julia is coming here

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple), சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra), காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம். இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது. இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது . பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது. அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது. அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது. அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில் எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது. அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர். அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள் உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக் [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார். தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்புக்காரன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான். இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுகிறார். அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

**********************

Fig 2 Why Julia is troubling me

நாடக உறுப்பினர்

1. ரிச்செர்டு டச்சியான் [35 வயது] (Richard Dudgeon)

2. கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன் (Christy Dudgeon)

3. கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன் [வயது 50]

(Rev. Anthony Anderson)

4. ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி [30 வயது] (Wife : Julia Anderson)

5. ஜெனெரல் பர்காயின் [50 வயது] (British General Burgoyne)

6. மேஜர் சுவின்டன் [55 வயது] (Major Swindon)

7. ஸார்ஜன்ட் (Sergeant)

8. வழக்கறிஞர் ஹாக்கின்ஸ் (Lawyer Hawkins)

9. மிஸிஸ். டிமதி டச்சியான் : [வயது 60] [Mrs Timothy Dudgeon : Mother of Richard Dudgeon)

10. சாப்பிளின் புரூட்நெல் (Chaplin Mr Brudenell)

11. சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா டைட்டஸ் டச்சியான் & மனைவி (Uncle Titus Dudgeon & Wife)

13 இளம் மங்கை : எஸ்தர் [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -1 பாகம் -5
மூன்று அங்க நாடகம்

Fig 3 Can I help you

இடம்: அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர். [Websterbridge, New Hamshire, U.S.A..]

நடந்த ஆண்டு : 1777 (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது : ஒரு நாள் இலையுதிர் காலத்து இருண்ட மாலை நேரம். ஆறு மணி இருக்கலாம்.

அரங்க அமைப்பு: ஓர் எளிய குடியானவரின் பழைய வீடு. வயதான மூதாட்டி மிஸிஸ் டச்சியான் சமையல் அறையில் நாற்காலில் அமர்ந்து சாய்ந்துள்ளார். இரவு பூராவும் விழித்திருந்ததால் அவள் தளர்ச்சி அடைந்துள்ளது முகத்தில் தெரிகிறது. பிரிஸ்பிட்டீரியன் கிறித்து ஆலயத்துக்கு ஞாயிறு தோறும் தவறாது செல்லும் மத நேய அபிமானி அவள். சோபா, நாற்காலி, மேஜை யாவும் அழுக்கடைந்து உள்ளன. அடுத்து அந்த அறையில் 16 அல்லது 17 வயதிருக்கும் ஓரிள மங்கை படுத்திருக்கிறாள். பயந்த சுபாவப் பெண். கருத்த கூந்தல், பழுப்பு நிறத்தவள். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. மூன்றாவது தட்டலில் முதிய வயது மாது விழித்தெழுகிறாள். கதவைத் திறந்ததும் முதிய மாதின் சின்ன மகன் கிரிஸ்டி நுழைந்து தன் தந்தை நோயில் மரித்ததை அறிவிக்கிறான். அந்த அதிர்ச்சியை மிகையாக்க அவனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் கிறித்துவப் பாதிரி அந்தோனி ஆண்டர்சன் வருகிறார். நோயில் செத்த கணவன் டிமதி டச்சியான் சாகுவதற்கு முன்பு புதிய உயில் ஒன்றை எழுதியதாக ஆண்டர்சன் முதிய மாதிடம் அறிவிப்பது கோபத்தை உண்டாக்குகிறது. உயிலை வாசிக்க வழக்கறிஞரும், டிமதியின் உறவினரும் வரப் போவதாய் பாதிரியார் அறிவிக்கிறார். முதலில் வருவது பாதிரியாரின் மனைவி ஜூலியா ஆ?ண்டர்சன்.

+++++++++++++++++

Fig 4 Wash yourself first

நாடக முதல் அங்கம்

கிரிஸ்டி டச்சியான்: [தயக்கமுடன்] இப்போது நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது ?

மிஸிஸ் டச்சியான்: வெளிச்சம் வீட்டுக்குள் வரட்டும். பொழுது விடிந்த பிறகு ஜன்னல் திரைகளை எல்லாம் திறந்து விடு. நெடு நேரம் நின்று கொண்டு என்னால் கனத்த வேலைகளைச் செய்ய முடியவில்லை. உன்னைப் போன்ற வாலிபன், ஊர் சுற்றியாய்த் திரிந்து வருகிறான் !

[அப்போது கதவைத் திறந்து கொண்டு யாரோ வரும் அரவம் கேட்கிறது]

கிரிஸ்டி: [ஜன்னலில் எட்டி நோக்கி] இதோ பாதிரி ஆண்டர்சனின் இளம் மனைவி வருகிறாள்.

மிஸிஸ் டச்சியான்: [வெறுப்போடு] என்ன ? ஆண்டர்சனின் அழகு மனைவி ஏனிங்கு வருகிறாள் ? எனக்குத் தொல்லை கொடுக்க இந்த நேரத்தில் வர வேண்டுமா ? விருந்தினரை வரவேற்கத் தயாராய் நான் இன்னும் உடை கூட மாற்ற வில்லையே !

கிரிஸ்டி: இதோ வந்து விட்டாள், நீயே கேட்டுத் தெரிந்து கொள் !

மிஸிஸ் டச்சியான்: கிரிஸ்டி ! உன் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள். யாரையும் இகழ்ந்து பேசாதே. அந்த இளங்குமரி எஸ்தர் காலை உணவு உண்ட பிறகு என்னிடம் வரச் சொல். நல்ல உடை அணிந்து நாலு பேர் மதிக்கும்படி வரச் சொல் ! [கிரிஸ்டி உள்ளே போகிறான். ஜூலியா ஆண்டர்சன் உள்ளே வருகிறாள். ஜூலியா 30 வயது அழகி. கவர்ச்சியான உடையில் காணப் படுகிறாள்.] ஓ நீயா வா, மிஸிஸ் ஆண்டர்சன் !

Fig 5 He is a bad man

ஜூலியா ஆண்டர்சன்: [கனிவாக, பணிவாக, மிஸிஸ் டச்சியானை அருகி] நான் ஏதாவது உதவி செய்யலாமா, மிஸிஸ் டச்சியான் ? உயிலை வாசிக்க வழக்கறிஞர் இங்கு வருவதாய் நான் அறிந்தேன். இடத்தைச் சுத்தமாக்கி நான் தயார் செய்யவா ?

மிஸிஸ் டச்சியான் : [சற்று கடுமையாக] மிக்க நன்றி ஜூலியா ! என் இல்லம் எப்போதும் தயாராய் இருக்கும் விருந்தினரை வரவேற்க. நான் உள்ளே போய் ஆடை மாற்றிக் கொண்டு வருகிறேன். வருவோரை நீ வரவேற்கிறாயா ?

ஜூலியா: கவலைப் படாதீர், போய் உடை மாற்றி வாருங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் மிஸிஸ் டச்சியான் ! மெதுவாய் வாருங்கள்.

[இளங்குமரி எஸ்தர் வருகிறாள்]

மிஸிஸ் டச்சியான்: எஸ்தர் அருகில் வா ! உன் ஆடையைப் பார்க்கிறேன். தலையைச் சரியாக வாரிக் கொள்ள வேண்டாமா ? உன்னை பார்த்தால் ஏழ்மை உன் உடம்பிலே தெரியுது ! உன் பிறப்பு வளர்ப்பு புரியுது. நான் சொல்வது போல் செய். அதோ அந்த மூலை நாற்காலியில் உட்கார். இங்கு விருந்தினர் வந்தால் யாரோடும் பேசாதே ! உன் தந்தையின் உறவினர் உன்னைப் பார்க்கட்டும். உன் பசியைப் போக்க அவருக்கும் உரிமை உள்ளது. அவரும் உனக்கு உதவி செய்யலாம். அவர் இல்லத்துக்கு உன்னை அழைத்துச் செல்லலாம். சாமர்த்தியமாக நடந்து கொள் ! நான் சொல்வது புரிகிறதா ?

எஸ்தர்: புரியுது மிஸிஸ் டச்சியான்.

மிஸிஸ் டச்சியான்: சரி நீ போய் அந்த மூலையில் உட்கார். [ஜூலியாவைப் பார்த்து] எஸ்தரைப் பற்றி நீ கவனிக்க வேண்டாம். அவள் யாரென்று உனக்குத் தெரியும். அவள் உன்னைத் தொந்தரவு செய்தால் எனக்குச் சொல். நான் அவளைத் தட்டி வைக்கிறேன்.

[மிஸிஸ் டச்சியான் உள்ளே போகிறாள்)

Fig 6 He has no love

ஜூலியா: [எஸ்தரைப் பரிவுடன் பார்த்து] உன் சித்தியைப் பார்த்து நீ பயப்பட வேண்டாம். அவள் நல்லவள். கடுமையாய்ப் பேசினாலும் உள்ளத்தில் கனிவு மிக்கவள். உனக்கு நல்லதைத்தான் செய்வாள்.

எஸ்தர்: ஆம் எனக்குத் தெரியும் அவர் வெள்ளை உள்ளம்.

ஜூலியா: எஸ்தர் ! இங்கு வரப் போகும் உன் தந்தையின் உறவினரைத் தெரியுமா ?

எஸ்தர்: தெரியாது. அவரெல்லாம் மதச் சடங்குகளில் பங்கு கொள்பவர். என்னைப் பற்றி அவருக்குத் தெரியாது. தந்தை ரிச்செர்டு டச்சியனைப் பற்றி மட்டும் பேசுவார். நான் ரிச்செர்டைப் பார்த்த தில்லை.

ஜூலியா: [அதிர்ச்சியோடு] என்ன ? ரிச்செர்டு டச்சியனா ? எஸ்தர் ! உனக்கும் மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டுமானால், அந்த ரிச்செர்டைப் பற்றி எதுவும் பேசாதே ! அவனைப் பற்றி நினைக்காதே ! அவன் ஒரு கயவன் ! கலகக்காரன் ! காட்டுமிராண்டி ! நாடோடி !

எஸ்தர்: அப்படியா ? அவர் என்ன கலகம் செய்தார் ?

ஜூலியா: அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வயது உனக்கில்லை. அதனால் எந்தக் கேள்வியும் கேட்காதே ! அவன் ஒரு கொள்ளைக்காரன் ! நாடோடி மக்களோடு வாழ்பவன் ! நாகரீகம் அறியாதவன் ! தன் தாயை மதிக்காதவன் ! ஒரு குடும்ப வாழ்வை அவமதிப்பவன் ! ஞாயிறு தோறும் ஆலயத்துக்குப் போகாமல் சூதாடுபவன் ! அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல் ! அந்த மாதிரி ஆடவன் கூட நீ பழகாதே ! உன் பெயர் இகழப் படும்.

எஸ்தர்: அப்படியா ! நான் தங்கமானர் ரிச்செர்டு என்று நினைத்தேன் [அழுது கொண்டே] என் தந்தை பீட்டர் டச்சியானும் வழிக் கொள்ளை அடிப்பவர்தான். தேசத் துரோகியாய்க் குற்றம் சாட்டப் பட்டு தூக்கில் இடப்பட்டார் !

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1. Penguin Plays : The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2. http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3. http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple” – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs [You Tube : The Devil’s Disciple Drama]

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 9, 2013)

Series Navigationபிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழாவாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (11)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *