வேர் மறந்த தளிர்கள் – 23-24-25

This entry is part 27 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

23 மறுவாழ்வு

           பிரிட்டிஷார் 31ஆகஸ்டு1957 இல் மலாயாவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.  அவர்கள்   இந்நாட்டைவிட்டு    வெளியேறிய      போது,
அவர்களால் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் உரிய அரசியல் பொருளாதார,சமூக,கல்வி,
சமய,மற்றும் இதர உரிமைகளைப் புதிய மலாயா அரசியலமைப்புச் சாசனத்தில் முழுமையாக உறுதிப்படுத்தாமல் சென்றுவிட்டதால் இந்தியர்கள் இன்று பல துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.
             நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைத் தந்த இந்தியர்கள் இந்நாட்டின் சிறப்புச் சலுகைகள் பெறும் பிரஜையாக ஆக்காமல் தமிழர்களைச் ‘சப்பி எறியப்பட்ட மாங்கொட்டையாக’ ஆக்கிவிட்டு பொறுப்பற்ற முறையில் பிரிட்டிஷார் தங்கள் தாயகம் புறப்பட்டுவிட்டார்கள்.
          இதன் விளைவு, பல தலைமுறைகளைக் கடந்தும்,தமிழர்கள் அடிப்படைப் பிரச்னையானப் பிராஜாஉரிமைப் பிரச்னை,சிவப்புப் பாஸ்போட்,பிரச்னைத் தொடங்கி,தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தும்,நமது பிள்ளைகள் அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப் பட்டு,அரசாங்கத்திடம் கையேந்தியும் கல்வி கற்க வாய்ப்புகள் கிடைக்காமல் நமது குழந்தைகளின் எதிர்காலம் இன்று கண்ணீர் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது!
          இந்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கொண்டு,இந்நாட்டு அரசாங்கம், முறையாகக் கொடுக்க வேண்டிய வாய்ப்புகளை வழங்காமல், இந்தியர்களைத் திட்டமிட்டே, அரசியல்,பொருளாதாரம்,கல்வி,சமய மற்றும் பல துறைகளில் ஒடுக்கி வந்திருக்கிறது.
             2007 நவம்பர் 25 ஆம் நாள் பதினெட்டுக் கோரிக்கைகளை முன்வைத்து இந்நாட்டு இந்தியர்களின் உரிமைக்காகப் போராட துணிவுடன் தெருவில் இறங்கிய ‘ஹிண்ட்ராஃப்’ இயக்கத்தினர் இலட்சக்கணக்கில் திரண்டு கோலாலம்பூர்,அம்பாங்கிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு ஊர்வலமாகச் சென்ற போது, உரிமைக்காகத் திரண்ட பேரணியை அரசாங்கம் திட்டமிட்டுக் காவல் துறையினரைக் கொண்டு வன்முறையின் மூலம் தடுத்தனர்!
          காவல் துறையினரின் கண்மூடித்தனமானத் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் பலர் தங்கள்  உயிரைக்காக்கப் போராடவேண்டியிருந்தது! பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ‘பஞ்சபாண்டவர்கள்’ ஐவர்
‘ஐ எஸ் ஏ’ கைதிகளாகப் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்!
          ஓர் இனத்தின் போராட்டத்திற்காகச் சிறைச்சென்ற இளைஞர்களில் ஒருவனாகத் தன் மகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால்கூட நிச்சயமாக அம்பிகை மகிழ்ந்திருப்பார்.
           ஆனால்,போதைப் பொருள் கடத்தும் கும்பலின் நயவஞ்சக வலையில் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாது தன் உயிரையும் இழக்கும் நிலைக்கு அறிவு மலுங்கிப் போன மகனின் செய்யலுக்குப் பெருமையடைய முடியுமா?
            மகனின் சிறைவாசம் ஒருபுறம்,குடும்ப மானத்தை காற்றில் பறக்க விட்ட மகனை நினைத்து அம்பிகை  கண்ணீர் விடாத நாள்தான் உண்டா? பிள்ளையப் பெற்ற அன்னைக் கண்ணீர்தான் மிஞ்சுமோ?
            அம்பிகை ஒரு நடைப்பிணமாகவே இப்போது மாறிவிட்டிருந்தார். மகனின் நினைவாகவே இருக்கிறார். நன்றாகச் சாப்பிட்டு உறங்கியப் பல நாட்கள் ஆகின்றன! மகன் வீடு திரும்பும்  நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்  கனத்த மனதுடன் காலத்தை ஓட்டுகிறார்!
            கணவர் மட்டும் அனுசரணையாக நடந்து கொள்ளாமலிருந்தால் நிச்சயமாக அம்பிகை இந்நேரம் மனநலம் குன்றிய ஒரு மருத்துவமனையில்தான் சேர்க்கப் பட்டிருப்பார்!
         தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படும் இந்திய இளைஞர்கள் பற்றி வெளியிடப்படும் செய்திகள் வேறு அம்பிகைக்கு வீணாக மனக்கலக்கத்தை
உண்டு பண்ணியது! சந்தேகத்தின் பேரில்,காவல் துறைக்குக் கொண்டு செல்லப்படும் இந்திய இளைஞர்கள் பலர், சிறிதும் மனிதாபிமானம் அற்ற முறையில் காவல் துறையினர் விசாரணை என்ற பேரில் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்துவதும்,சித்திரவதையைத் தாங்க முடியாமல் உயிரை விடுவதும் வாடிக்கையாகிப் போகிறது!
             தங்களின் அன்புச் செல்வங்களை அநியாயமாகப் பறிகொடுத்துக் கதறியழுவும் பெற்றோர்கள், யாரும் கேட்க நாதியற்ற சமூகமாக,இந்த அநீதியைத் தட்டிக் கேட்க வழி தெரியாமல் தவிக்கும் பெற்றோர்களுக்கு உதவும் பொருட்டு, எதிர்க்கட்சியிலுள்ள சில தமிழ் எம்பிகள்,பொது இயக்கத் தலைவர்கள்   காவல்துறை மீது வழக்குத் தொடர உதவும் காட்சிகளைப் பத்திரிக்கைகளில் படிக்கும் அம்பிகை மேலும் திகிலடைகிறார்.
            “காவல் துறையினர் திட்டமிட்டே இந்திய இளைஞர்களைக் கொன்று குவிக்கும் படலத்தில் இறங்கிவிட்டனரா?” மிகுந்த அதர்ச்சியோடு கேள்வி கேட்கும் அம்பிகைக்கு நம்பிக்கைதான் நம்மை வாழவைக்கும் என்று  கணவர் தரும் விளக்கத்தில் துளிகூட திருப்தி அடைய மாட்டார்! தன் மகன் உயிருடன் வீடு திரும்புவானா…? என்ற சந்தேகம் அம்பிகையின் மனதில் பெரும் அச்சத்தையும்,அதர்ச்சியையும் ஏற்படுத்தின!
                             24 உறவு
            நொந்து போயிருக்கும் மனைவிக்கு ஆறுதலாக இருக்கட்டுமே,என்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை  வீட்டுக்கருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு மனைவியைத் தவறாமல் அழைத்துச் செல்வதை,வழக்கப் படுத்திக் கொள்கிறார் தினகரன். கணவன் மனைவி இருவரும் இறைவன் சந்நிதியில் மகனின் விடுதலைக்காக  நெஞ்சுருகிப் பிராத்தனைச் செய்வர்.
            மகன் நல்லபடியாக விடுதலை அடைந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டால்,பத்துமலைத் திருமுருகனுக்குக் குடும்பத்துடன் பால்குடம் எடுப்பதாகத் தினகரன் வேண்டிக் கொள்வார்.
           வழிபாடு நடத்தப்படும் நாள் அன்று,அம்பிகை மனம் சாந்தி அடைந்தவராகக் காணப்படுவார்.மகனைப் பற்றிய சஞ்சலம் ஏதுமின்றி அமைதியுடன் இரவில் தூங்குவார். தினகரனுக்கும் மனைவியின் அமைதியான உறக்கம் கண்டு சற்று ஆறுதல் கொள்வார்.முருகா….! மனைவிக்கு நீதான் அமைதியைக் கொடுக்க வேண்டும்.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதியேது….? மனமுருகி மனதில் வேண்டிக் கொள்வார்!
           வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தத்தம் பணிகளுக்குக் காலையில்  சென்று மாலையில் வீடு திரும்பினாலும் பழைய சுறுசுறுப்பும் உற்சாகமும்  இல்லாமல் மனம் சோர்ந்து காணப்படுவர்!
            பார்த்திபன் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் இரண்டு முறைகள் அவனைச் சென்று கண்டு வந்தார்கள்.அவனைக் கண்டு வந்த பிறகு அம்பிகை மேலும் கவலை அடைந்தார்.இதனால் அவனைச் சென்று காண்பதை தினகரன் தவிர்த்து வந்தார்.
             இதற்கிடையில் பார்த்திபன் விடுதலையாகும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது! காத்திருந்த  அந்த  இனிய நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சிறைச் சாலையிலிருந்து இனியச் செய்தி தொலைபேசி வழி வருகிறது! விடுதலை ஆகும் நாளுக்கு ஆறு மாதத்திற்கு முன்னாடியே பார்த்திபனின்  நன்னடத்தையினால் விடுதலைச் செய்யப்படுவதாக  அதிகாரி தினகரனிடம் அறிவிக்கிறார்!
            இந்த இனிய செய்தியை அம்பிகையிடம் சொன்ன போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை! கடும் வெப்பத்திற்குப் பிறகு வீசிய தென்றலின் இதத்தை உணர்கிறார் அம்பிகை. இறைவன் தன் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து விட்டதாகக் கணவரிடம் கூறி மகிழ்ந்து போகிறார்.
           மகனை வரவேற்க வீட்டைச் சுத்தம் செய்கிறார்.புதிய திரைச்சீலைகள் மாற்றுகிறார்.சோபாக்களுக்குப் புது உறைகள் மாற்றுகிறார். மகனின் அறையை முழுவதுமாகச் சுத்தம் செய்கிறார்.படுக்கைக்குப் புதிய பெட்ஷீட் போடுகிறார். பழைய திரைச்சீலைகளுக்குப் பதிலாகப் புதிய திரைச்சீலைகளை மாற்றுகிறார்.கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மகனின் அறையைச் சுத்தம் செய்வதில்  அவர் சிரத்தை எடுத்துக்கொள்ளாமல்  இருந்தார்.
            பார்த்திபன் விடுதலையாகும் முதல் நாள் இரவு மகனின்  பற்றிய நினைவலைகளில் மூழ்கிப்போயிருந்த அம்பிகை இரவெல்லா தூங்காமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.
           மறுநாள் அதிகாலையிலேயே அம்பிகை எழுந்து வீட்டில்   இறைவழிப் பாட்டை நெஞ்சுருகச் செய்கிறார்.மனைவியின் இறை வழிப்பாட்டில் கணவரும் கலந்து  மெய்மறந்து போகிறார். கடவுளின் கருணையை எண்ணி அவரது கண்களும் பனித்தன!
            காலை ஒன்பது மணிக்கெல்லாம்  மகனை  எதிர் கொண்டழைக்க சிறைக்கூட வாசலில் அம்பிகை பதற்றமுடன் காணப்படுகிறார்.அவரின் கண்கள் சிவந்து காணப்படுகின்றன.கருத்திருக்கும் வானம் எந்த நேரத்திலும்  மழை பெய்வதற்காகக் காத்திருப்பதைப் போல மகனைக் காண்பதற்கு ஆவலுடன் கணவர் மற்றும் சில நண்பர்களுடன் பார்த்திபனை  வரவேற்கக்  காத்துக் கொண்டிருக்கின்றனர்!
           சரியாகக் காலைப் பத்து மணிக்குப் பார்த்திபன் சிறையை விட்டு வெளியே  வருகிறான்! மெலிந்த உடலும், கண்களில் உருண்டோடும் கண்ணீருமாக அவன் அம்மாவின்  கால்களில்   விழுந்து  வணங்குகிறான்!  “அம்மா….என்னை மன்னிச்சிடுங்கம்மா….! இனி உங்கப் பேச்சைத் தட்டமாட்டேன்மா….!” சிறு குழந்தையைப் போலக் குலுங்கி குலுங்கி  கண்ணீர் விட்டுஅழுகிறான்!
           அப்பா  தினகரன்  மிகுந்த   வருத்தமுடன்  பேசாமல்  தாய்ப்  பிள்ளைகளுக்கு  மிடையே  நிலவியப் பாசப்  பரிமாற்றத்தை  அமைதியுடன்  பார்த்துக்  கொண்டிருக்கிறார்!
            “அப்பா….!என்னை மன்னிச்சிடுங்கப்பா….! உங்களை  நான் தலைக்குனியச்  செஞ்சிட்டேன்!”  கண்ணீர்  சிந்தியபடி  அப்பாவின்   கால்களில் விழப்போனவனைத்  தடுத்து  நிறுத்தி   மார்புடன்  அணைத்துக் கொள்கிறார்.
                          25 அனுபவங்கள்
மகனை  அணைத்து  மகிழ்ந்து  பல  ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. சிறு குழந்தை  போல்,  மகன் தேம்பித் தேம்பிஅழுகிறான்,நிதானமாகத் தினகரன்தோளைத்தட்டிக் கொடுக்கிறார்.
            “சிறையில்….பல  அனுபவங்களைப்  பெற்றுவிட்டேன்!  வாழ்வில்  இனி   தவறே  செய்யமாட்டேன்   அப்பா!”  மகனின்  கண்களில்  மடை திறந்த   வெள்ளமாகிப்  போன  கண்ணீரைத்  துடைக்கிறார்.
            தயாராக   இருந்த காரில்   ஏறி  வீட்டிற்குப்  பயணமாகின்றனர் !  காரில்   தாயார்  மகனின் கையைப் பிடித்துக்கொண்டு, பல  நாட்கள்   பேச  வேண்டிய  விசயங்களை ஒரே நாளில் பேசிமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக்  கொண்டே  வருகிறார். பார்த்திபன்  அம்மாவுக்கு  அடங்கிய பிள்ளையாக  அமைதியாகப் பதில்  கூறிக் கொண்டே  வருகிறான் .
           ஒரு மணி  பயணத்திற்குப் பின் வீட்டை  அடைகின்றனர்.புதிய  வீட்டிற்கு வருவது போல், பல  மாதங்களுக்குப் பிறகு பார்த்திபன் வீட்டினுள் காலடி எடுத்து  வைக்கிறான்.   வாசலில்   அவனது கால்கள்  பல  மாதங்கள் படாமல்   இருந்தன! கார் சுத்தமாகவும்   பாலிஸ்  செய்யப்படிருந்தது. அவன் காரை  ஓட்டுவதற்குத் தகுதி  இழந்து போனதை  எண்ணி  வருந்துகிறான்.கார் ஓட்டும் உரிமம் போக்கு வரத்துத் துறையால் பரிமுதல் செய்யப்பட்டிருந்தது!
          ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்கிறார்கள்.அம்மா சமைத்த உணவை உருசித்து உண்கிறான் பார்த்திபன். அற்றுபோன குடும்ப உறவு மீண்டும் தொடங்கியதில் தினகரன் மிகுந்த மகிழச்சியடைகிறார்.இந்த இனிய சூழலை  தொடரவைப்பதில் தினகரன்  கவனம் செல்கிறது.
              தன் ஒரே மகனின் எதிர்காலம் மீண்டும் ஒரு சுனாமியில் சிக்குண்டு சிதைந்து போவதை விரும்பாத தினகரன் முதலில் பார்த்திபனுக்கு ஒரு வேலைத் தேட வேண்டும். காலாகாலத்திலே அவனுக்கு ஓரு கால் கட்டைப் போட்டுவிட்டால் மீண்டும் பழைய சூழலுக்குச் செல்ல மாட்டான்.  வீட்டுக்கு  அடங்கிய  பிள்ளையாக   இருப்பான் என்ற   எண்ணத்தை மனைவியிடம் கலந்தாலோசிக்கிறார்.
            “பார்த்திபன்,வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆயிடுச்சு.சிறையில்தான் ஒன்றரையாண்டு சிறைப்பட்டுக் கிடந்தான்.சொந்த வீட்டிலுமா அவன் சிறைப்பட்டு இருக்கனும்,சொல்லு அம்பிகை…?”
“ஆமாங்க…..வெளியில் எங்கும் போகாமல் எந்த நண்பர்களையும் பார்க்காமல் வீட்டுக் காவலில் இருப்பதுபோல வீட்டிலேயே அடைந்து கிடக்கிறான்.பார்க்கச் சங்கடமா இருக்குங்க! முதல்ல அவனுக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்யுங்க!” மகனின் நிலையைப் பச்சாதாபத்தோடு எண்ணிப்பார்க்கிறார் அம்பிகை.
            “பார்த்திபன் வேலை செய்த முதலாளி எனக்கு வேண்டப்பட்டவர். மகன் வேலைப் பற்றி நேற்று அவரிடம் பேசினேன்.திறமையான வேலைக்காரன் என்பதால் மகனுக்கு மீண்டும் வேலைக் கொடுப்பதில் ஆட்சேபம் இல்லை என்று சொன்னார்.விரும்பினால் மகன் நாளையே வேலையில் சேரலாமுனும் சொன்னார்!”
“அப்படியா….சொன்னார்?  பார்த்திங்கலா….நம்ம பையன் மீது மற்றவங்க வைச்சிருக்கிற நல்ல மதிப்ப நினைக்கும் போது பெருமையா இருக்குங்க!” ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ வள்ளுவரின் குறள் அம்பிகை நினைவுக்கு வருகிறது; அவரது  கண்களில் ஆனந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமாகிறது.
           பார்த்திபன் மீண்டும் தனது பழைய வேலையில் சேர்கிறான். எல்லாரிடமும் கலகலப்புடன் பழகும் சுபாவம் கொண்ட அவனை மீண்டும் சந்தித்ததில் அங்குப் பணிபுரியும் அனைவரும்  அன்புடன் வரவேற்று மகிழ்கின்றனர்.ஓர் இடைவெளிக்குப் பின் மீண்டும் தன்னுடன் வேலை செய்த நண்பர்களைச் சந்தித்ததில் புத்துணர்வு கொள்கிறான்.பழைய சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குகிறான்.
              வழக்க நிலைக்குத் திரும்பிவிட்ட மகனின் முகத்தில் மகிழ்ச்சியையும் புதுப்பொலிவையும் கண்ட பெற்றோர்கள் சந்தோசமடைகிறார்கள்.காலை வேளையில்  அம்மா எழுப்பும் வரைக் காத்திராமல் அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடனுக்குப்பிறகு இறைவனை வணங்குவதில் முனைப்புடன் செயல் படுவதைக் கண்டு அம்பிகை மனம் மகிழ்ந்து போகிறார்.
         பார்த்திபனுக்குப் பெண் பார்க்கும்  படலத்தில் பெற்றோர் தீவிரம்  காட்டத்  தொடங்கினர்.சொந்தத்தில்   பல  பெண்களைப்பற்றி  ஆய்வு  மேற்கொண்ட  பின், மிகவும் நம்பிக்கையான  உறவுக்காரப்  பெண்னைக்  கேட்கத்தீர்மானிக்கின்றனர்.
         பார்த்திபனிடம்விசியத்தைக்கூறியபோது,அவன் மறுப்பு ஏதும் கூறவில்லை!  மகனின்  சம்மதம்  கிடைத்ததால் பெற்றோர்    மகழ்ச்சியடைகின்றனர்.விரைவாக மகனுக்குத் திருமணம்  செய்து வைப்பதில் அவர்கள்    முழுமூச்சுடன் செயலில் இறங்கிவிடுகின்றனர்
Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! மிகப் பெரும் புதிய வால்மீன் உற்பத்தி வளையத் தட்டு ஏற்பாடு கண்டுபிடிப்பு
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    பார்த்திபனின் கதை சுவையாக உள்ளது. இனி தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது.

    ஆங்கிலேயர்கள் அரசாண்ட நாடுகளில் அனைத்துமே இதுபோன்று சில இன மக்களுக்கு அநீதிதான் செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.அவை தீராத பிரச்சனைகளாகவே இன்றுவரை நீடிக்கின்றன. ஸ்ரீ லங்கா தமிழர்கள் பிரச்னை நல்ல உதாரணம்.காஷ்மீர் , பாலஸ்தீனம் , பல ஆப்பிரிக்க நாடுகள் , பர்மா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் நல்ல உதாரணங்கள்.

    மலேசியாவைப் பொறுத்த வரையில் உரிமைக்காகப் போராடும் இந்தியர்களை வழி நடத்திச் செல்ல துடிப்பும்

    தைரியமும் மிக்க தலைவர்கள் இல்லை. இந்தியர்களிடம் ஒற்றுமை இல்லை. இந்தியர்கள் அனைவரையும் பிரதிநிதிக்கும் ஒரே பலம் வாய்ந்த அரசியல் கட்சி இல்லை.இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி ஏதுமில்லை. இங்கு வாழும் பஞ்சாபி, குஜராத்தி இனத்தவர் தமிழர்களுடன் ஒப்புரவாகும் நிலையில் இல்லை. தென்னிந்தியர்கள் கூட ஒன்றித்து இன்னும் முற்றிலும் இணையவில்லை. மலையாளிகளும், தெலுங்கர்களும் ,கன்னடர்களும் தனித் தனியே சங்கம் வைத்தே. செயல்படுகின்றனர்.தமிழர்களுக்குள்ளும் இன்னும் சாதி , தனித் தனி சங்கங்களும் , தனித் தனி சாமிகளுக்கு கோவில்களும் பெருகி வருகின்றன.எண்ணிலடங்கா சங்கங்களும், இயக்கங்களும் செயல்பட்டபோதிலும் அனைத்தையும் இணைக்கும் பாலமாக ஒரு தாய்க் கழகமோ தலைமையகமோ செயல்படவில்லை.இதுவே இன்றைய மிகப் பரிதாபமான நிலை! தொடருங்கள் உங்கள் எழுத்தோவியத்தை திரு வே .ம. அருச்சுணன் அவர்களே! வாழ்த்துகள்!..டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    வே.ம.அருச்சுணன் says:

    அன்புள்ள டாக்டர் ஜி அவர்களுக்கு,வணக்கமும் வாழ்த்துகளும். எனது நாவலை மிகவும் உண்ணிப்பாக வாசித்து,எனது கருத்துக்கு வாழ்த்து கூறும் தங்களின் உள்ளத்தைப் பாராட்டுகிறேன்.தமிழர்களிடையே ஜாதி என்ற பிணி இருக்கும் வரை,முன்னேற்றம் என்பது எட்டாதக் கனியாகும்.தாங்கள் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை வழங்கி வருவதைக் கண்டு பிரமிப்பு அடைகிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.அன்புடன், வே.ம.அருச்சுணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *