ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘

This entry is part 31 of 42 in the series 25 மார்ச் 2012

சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு, சமுத்திரக்கனியும் சசிகுமாரும் ‘ நாடோடிகள் ‘ படம் எடுக்க முனைந்த போது, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு கொடுத்தவர் மைக்கேல் ராயப்பன். அதே நம்பிக்கையுடன், ஷண்முகராஜை படமெடுக்க அழைத்திருக்கிறார். 174 நாட்கள் நடிப்புப் பயிற்சி, 71 புதுமுகங்கள், முகமே இல்லாத பாட்டு என்று ஏகத்துக்கு விளம்பரம். முத்தங்கள் என்ற தலைப்பு இருப்பதால், கமல் பாராட்டியதாக, படமெடுத்து போஸ்டரில் போட்டுவிட்டார்கள். எல்லாமே உதடு ஒட்டாத, பறக்கும் முத்தங்கள் ஆகும் என்று ராயப்பன், கனவு கூட கண்டிருக்க மாட்டார். ஒரு காதல் கதையை சொதப்புவது எப்படி என்று ஷண்முகராஜ் குறும்படம் எடுக்கலாம். நெட்டில் பிச்சுக்கும்.

அறிமுக படத்தில் ஓரளவு பேசப்பட்ட இசையமைப்பாளர் தாஜ்நூர், இதில் சரியான காட்சிகள் இல்லாததால், ஒருதலைராகம் போல, ஓரமாக வாசித்துவிட்டு போயிருக்கிறார். அவருடைய எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிட்டது. மொத்தமாக படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரின் எதிர்காலத்தையும் போட்டுடைத்த ஷண்முகராஜுக்கு ‘ ஆயிரம் சம்மட்டிகளுடன் ஷண்முகராஜ் ‘ என்று பட்டம் கொடுக்கலாம்.

தேன்மொழியும் ( அக்ஷரா ) ரமேஷ¤ம் ( வெங்கடேஷ் ) கிரிவல கோஷ்டி செல்லும் பேருந்தில், காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். கிரிவலப்பாதை போல், வளைந்து வளைந்து, மூச்சு வாங்கி, படமெல்லாம் முத்தமிட்டு, டாக்டர் ஷாலினி டெஸ்டட்ரோன், நீயூட்ரான், ப்ரோட்டான் என்று ஏதேதோ சொல்லிக் குழப்ப, லிவ் இன் என்று ஒரு மாதம் இருந்து, ஒத்து வராது என்று புரிந்து கொண்டு, வேறு கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். இதில் ரமேஷ், தேன்மொழி, அவள் தோழி, அவளது அண்ணன் என்று ஒவ்வொருவரின் நினைவலைகளில், கதை நகர்கிறது. தேன்மொழியின் அப்பன் சாவில், இருவரும் தத்தம் மனைவி, மற்றும் கணவரோடு சந்திப்பது முடிவு. இதில் காதல் ஜெயிக்க ரமேஷ், தேன் மொழியின் அண்ணனுக்கு ‘சரக்கும், செட் அப்பும் ‘ லஞ்சமாகத் தருவதாக அபத்தக் காட்சிகள் வேறு.

காதலிப்பவர்கள் அமெரிக்கா போல், கொஞ்ச நாள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்து பார்த்து,. எல்லாம் ஒத்துப் போனால், திருமணம் செய்து கொள்வது நல்லது. இல்லையேல், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமே நல்லது என்று கொஞ்ச மெசேஜ் சொல்ல வந்தது லேசாகப் புரிகிறது. தற்கால யுவன் யுவதிகளுக்கு டைரடக்கர் சொல்கிறார்: ‘ முத்தம் கொடுக்கலாம், உறவு கொள்ளலாம். ஆனால் முழுப் புரிதல் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது. ‘ தேன்மொழியைப் பிரிந்த ரமேஷ், அவள் படத்தை, மாலை போட்டு, தீச்சட்டி எடுத்து, குழி தோண்டிப் புதைக்கிறான். டைரக்டர் டச்.. அஞ்சு விரலும் பதியறா மாதிரி!

மொட்டை மாடியிலும், ரோட்டோரமும் எடுக்கப்பட்ட படத்திற்கு கலை இயக்குனர் வேறு. ஒரு சண்டைகூட இல்லை. ஆனால் ஸ்டண்ட் இயக்குனர்கள் ரெண்டு பேர். ராயப்பன் செட்டு பக்கமே போகவில்லை போலிருக்கிறது. படம் பார்த்த இளைஞர் ஒருவர் அடித்த காமெண்ட் முத்தாய்ப்பாக இருக்கும்.

‘ இந்தப் படம் பார்த்தேன்னு யார்கிட்டேயும் சொல்லிட கூடாது மச்சான்! ‘

#

கொசுறு

விருகம்பாக்கம் சக்தி கருமாரி, இரண்டாவது மாடி. அதற்கு ஏற இருட்டுப் படிகள். இளவயதுக்காரர்களே தடுமாறுகிறார்கள். டிக்கெட் கிழிப்பவர் சொன்னார்: ‘ காதல் பிசாசே ‘ சரியில்ல சார். ‘ கந்தா ‘ பொட்டியே வரல.. இது பரவாயில்ல.. காமெடியாப் போவுது ‘. அவர் ரசனை அவ்வளவுதான்!

காஞ்சிபுரம் சமீபமுள்ள ஊரின் பூர்வீகர் ஒருவர், தென்கலை நாமத்துடன், ஸ்ரீ யதுகிரி பவன் என்று ஒரு டிபன் கடை ஆரம்பித்திருக்கிறார், விருகம்பாக்கம் மார்க்கெட் ரோடில். இருபது ரூபாய்க்கு செட் தோசை சாப்பிட்டால், வயிறு அடைத்துப் போகிறது. ஏற்கனவே அண்ணா நகர் மூன்றாவது மெயின் ரோடில், ஹோட்டல் வைத்து அனுபவமாம். வாடகை ( ஒரு நாளைக்கு ரூ 1500 ) கட்டுபடியாகாமல், விலகி, விருகம்பாக்கம் வந்து விட்டார். இதில் ஆச்சர்யமூட்டும் விசயம், தமிழ்நாட்டு பாரம்பரிய சைவ சிற்றுண்டியையும், சாப்பாட்டையும் செய்பவர்கள், மத்திய பிரதேசம், கான்பூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள். நம்ம ஆளுங்களை ரொட்டி தட்டச் சொல்லுங்க பாப்போம். கையெல்லாம் ஈஷிப்பாங்க!

#

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்ரஸ்கோல்நிக்கோவ்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    கேபிள் சங்கரின் பாதிப்பு இருக்கிறது, பிரசண்டேஷனில்…

Leave a Reply to punai peyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *