ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்

This entry is part 30 of 40 in the series 8 ஜனவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உனக்குப் பகை நீதான் !

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 144 ஈரேழு வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஏரேழு வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டன.

ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழு வரிப்பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின் நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சியான நண்பனைத் திருமணம் செய்ய வேண்டி தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் ஷேக்ஸ்பியருக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறார். நண்பன் அந்தக் கவிஞரின் ஆசை நாயகி தன்னை மோகித்து மயக்குவதாகவும் கூறுகிறான். ஆனால் இந்த ஆசை நாயகி பளிங்கு மனம் கொண்டவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் 137 ஆம் ஈரேழு வரிப்பாவில் “மனிதர் எல்லாம் சவாரி செய்யும் வளைகுடா (The Bay where all men ride) ” – என்று கூறி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழு வரிப்பா மூலம் அந்தக் காதலர் தமது ஐக்கியத்தில் பாலுறவில்லை என்பது தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்றமும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழு வரிப்பாக்கள் ஒரு நண்பனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாகம் முக்கோண உறவுக் காதலர் பற்றி என்பதை 144 ஆவது பாவில் எடுத்துச் சொல்லப் படுகிறது. ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்களில் சிறப்பானவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள் என்று கருதப் படுகின்றன.

ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பையும், ஓட்டத்தையும் அவை பின்பற்ற வில்லை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூடப் பொதுவாகத்தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழு வரிப் பாக்கள். இவற்றில் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது செல்வீக நண்பனை திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்துகிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழு வரிப்பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Snnets) என்று கூறப் படுகின்றன.

****************

உனக்குப் பகை நீதான் !

(ஈரேழு வரிப்பா – 1)

நளினப் பிறவிகளிட மிருந்து நாம்
விழைவது எழில்வழி இனப் பெருக்கம் !
தோன்றிய அழகு என்றும் அழியாது
காலப் போக்கில் பெற்றவர் மரிப்பினும் !
வாலிப வாரிசு காட்ட வேண்டும்
எழில் தந்த அந்த நினைவுகளை !
நீ கட்டுப்பாடு செய் ஆயினும்
நின் கண்ணொளிக் காட்சிக்கு !
உன் தீபத் தீயிக்கு எரி எண்ணை
நீயே சுயமாய் நிரப்புகிறாய் !
ஏற்படும் அதனால் பஞ்சம்
பேரளவு செழிப் புள்ள போதும் !
நீயே உனக்குப் பகைவன் !

இனிய தன்னலம் மிகக் கொடியது !
புத்தம் புதிய உலக ஆபரணம்
இப்போது நீ !
ஒற்றைத் தூதான உன்
வசந்த வனப்பு மங்கிப் போவது !
உனது மொட்டுக்குள் புதையும்
மன நிறைவு எல்லாம்.
பரிதாபப் படு புவி மீது
இன விருத்தியைத் தொடர் !
இல்லை யேல்
இந்தப் பெருந்தீனி மனிதன்
விழுங்கு வான் இடுகுழிக் கருகில்
உலகுக் குரியவை எல்லாம் !

***********************

(Shakespeare’s Sonnets : 1)

From fairest creatures we desire increase,
That thereby beauty’s rose might never die,
But as the riper should by time decease,
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed’st thy light’st flame with self-substantial fuel,
Making a famine where abundance lies,
Thyself thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world’s fresh ornament
And only herald to the gaudy spring,
Within thine own bud buriest thy content
And, tender churl, makest waste in niggarding.
Pity the world, or else this glutton be,
To eat the world’s due, by the grave and thee.

************************

தகவல் :
1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)

2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)

3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 5, 2012)

Series Navigationஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)சிலை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *