ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 10 of 19 in the series 20 நவம்பர் 2016

1. ஒரு பறவையின் கோரிக்கை

பூங்காவின் மேற்கு மூலை
நூலகத்தின் அருகிலுள்ள
மரக்கிளையில் அமர்ந்து
அந்தச் செம்போத்து
சிலநொடிகள்
இடைவெளியில் கத்துகிறது !

அந்த ஒற்றைப் பறவையின்
கோரிக்கைதான் என்ன?
அதன் தவிப்பில்
மூடிக்கிடக்கின்றன அர்த்தங்கள்
என் யூகங்கள் தொடர்கின்றன

பிரிவின் சோகத்தை
அல்லது
இணை தேடும்
மனப்பூர்வமான அழைப்பை
அல்லது
குஞ்சுகளின் எதிர்பாரா
மரணத்தையென
எதை முன் வைக்கிறது
அந்தக் கோரிக்கை ?

அப்பறவையின்
புரியா மொழியின் கனம்
எதையோ யூகத்தில் ஆழ்த்திப்
புரிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறது !

2. இதற்காகவா ?

உன் குதலை மொழி
மழலை மொழியாய் மாற
ஒவ்வொரு சொல்லாய்ச்
சொல்லிச் சொல்லித்
தமிழ் ஊட்டினேன் !

பின்னர் மழலை திருத்திச்
செம்மைப்படுத்தினேன்
மகனே !
உன் பேச்சைத் தேனாய்ச்
செவிவழி
உள்வாங்கினேன் அன்று !

படிக்கும் காலத்தில்
தமிழில் அதிக மதிப்பெண்கள்
வாங்கி மகிழ்வித்தாய் !
ஆனால் இன்றோ…
என் முதுமையை
என் இருத்தலின் அர்த்தமின்மையை
” சாக வேண்டியதுதானே …” என
மூன்றே சொற்களால்
முடிவுரை தந்துவிட்டாய் !
உன் சொற்கள் என்னை
முட்படுக்கையில் கிடத்திவிட்டது !
இருக்கிறேன்… இன்னும்…
இதுபோன்ற சொல் கேட்கத்தானா?…
—————

முகவரி : ஸி. சௌரிராஜன்
12 – பி , சரஸ்வதி தோட்டம்
3 – ஆம் பகுதி ,
ராகவேந்திரபுரம் ,
ஸ்ரீரங்கம் 620 006
செல் : 95852 43921.

Series Navigationதாத்தா வீடுஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *