ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 2 of 15 in the series 23 ஜூலை 2017

அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான்

அவன்
நடந்து போய்க்கொண்டிருக்கிறான்
தன்னுள் தன்னை
அதிகம் நிரப்பிக் கொண்டதில்
வழிந்து கொண்டிருக்கிறான்

வானத்தை வளைத்துப் போட்ட பின்
கடல்களையும்
சொந்தமாக்கிய மகிழ்ச்சி
அவன் நெஞ்சில்
கற்பனைக் கோட்டையின்
சுவர்கள் பளபளக்கின்றன

அவன் மனத்தில் இருந்த
கூரிய முட்காடு
முற்றிலும் எரிக்கப்பட்டதில்
அவ்விடம் கருமை பூத்துக் கிடக்கிறது

அவன் பின்னால்
வந்து விழுகிற பழிச்சொற்கள்
அவன் செவி புகுவதேயில்லை

யாரும் ஏற்றுக் கொள்ளாத
தனி ராஜ்ஜியத்தில்
அவன் மட்டும் இருக்கிறான்
ராஜாவாக …
குடிமகனாக …

விலகல்

அலகில் செத்த எலியுடன்
ஒரு காகம் தரை இறங்கியது

கொத்திக் குதறி
உண்ணத் தொடங்கியது

எச்சத்தின் மீது
மண் கொட்ட
மனத்தளவு
நான் தயாரானேன்

காகம்
என் மனத்தையும் கொத்தியது
மனித பிரம்மாண்டம்
சரிய
என்னிலிருந்து
விலகியது
ஏதோ ஒன்று !

Series Navigationபா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …இலக்கியச்சோலை அழைப்பு
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *