பறக்காத பறவைகள்- சிறுகதை

This entry is part 2 of 28 in the series 27 ஜனவரி 2013

 

அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் ஐந்து பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றான் சேகர். மனைவியைப் படுக்கையில் காணவில்லை. குசினிக்குள் சத்தம் கேட்கின்றது.

மறு படுக்கையில் பெண்குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில். ‘அப்பா! பறக்காத பறவைகள் என்று இந்த உலகத்தில் ஏதாவது இருக்கின்றதா?’ நேற்றிரவு மகள் அவனைக் கேட்டிருந்தாள். நாலாம் வகுப்புப் படிக்கின்றாள். படிப்பிலே படு சுட்டி. ‘இன்ரநெற்’றில் பார்த்துச் சொல்வதாக சொல்லியிருந்தான். ஆனால் மறந்து போய் விட்டான்.

மனைவி தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே இழுவையாக இழுத்துக் கொள்கின்றான்.

“சரி போட்டு வாறன்.”

கதவைப் பூட்டி விட்டு, ஒரு கள்ளனைப் போல, படிகளிலிருந்து இறங்கி இருளிற்குள் நடக்கின்றான். மெதுவாக நடக்காவிடில் நாய்கள் விடியலை ஆரவாரப் படுத்திவிடும்.

எதிரே பனிப்புகாரினுள், குடிமனைகளிற்கு புதினப்பத்திரிகைகளைப் போட்டுவிட்டு வரும் ராமச்சந்திரன். அநேகமான நாட்களில் சேகர் வேலைக்குப் புறப்படும்போது ராமச்சந்திரன் வேலை முடித்து வீடு வருவான். மாலையில் இவன் வேலை முடிந்து வரும்போது, அவன் மீளவும் ‘பிஷா’ டிலிவரிக்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பான்.

“சேகர்! ஒரு விஷயம். வாற கிழமை குடும்பமாக நாங்கள் ஒஸ்ரேலியா போக இருக்கின்றோம்.”

“நல்லது. எத்தனை கிழமைகள் அங்கு நிற்கின்றீர்கள்?”

“நிரந்தரமாக அங்கு இருப்பதற்குப் போகின்றோம்.”

திடீரென்று கேட்ட செய்தியால் சேகர் திகைப்படைந்தான். நியூசிலாந்து இவர்களுக்கு வாழ இடம் கொடுத்து உரிமையும் கொடுத்த நாடு. வாழ்வதற்கான பணம், படிக்க வசதி, இலவச மருத்துவம் போன்ற – பிறந்த மண்ணிலே கூட கிட்டாத வாய்ப்புகள். உலகத்தின் மிக அழகான நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.. வேலை வாய்ப்புகள் இல்லாமல், வசதியாக வாழ முடியவில்லையே என்பதால் பிரஜா உரிமை பெற்றுக் கொண்ட சிலர் இன்னொரு நாட்டிற்கு போக எத்தனிக்கின்றார்கள்.

சேகர் ஏழு மணிக்குள் ‘செர்ரி கலர்’ வேலைக்குப் போய் விடவேண்டும். ‘செர்ரி கலர்’ என்பது ‘ஸ்கிரீன் பிரிண்டிங்’ தொழிற்சாலை. கிழமைக்கு ‘செர்ரிக் கலரில்’ கிடைக்கும் வருமானம் 460 டொலர்கள். இதில் சரிக்குச் சரி அரைவாசி வீட்டு வாடகைக்குப் போய் விடும். நியூசிலாந்தில் வீட்டு வாடகைப் பணம் மிக அதிகம். மிகுதிப் பணம் எண்ணுக்கணக்கில் நாட்களை நகர்த்துவதற்கு மாத்திரம் போதுமானது. இதற்கிடையில் ஊரிலிருந்து அம்மாவின் கடிதம்; அக்காவின் கடிதம்; நண்பர்களின் தொலைபேசி அழைப்புக்கள்.

இந்த ‘செர்ரிக் கலரில்’ வேலைக்கு வந்தது தற்செயல்தான். அப்போது ஆக்லாந்து தொழில் நுட்பக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர் படிப்பதற்கு வருவதில்லை. வேலை தேடி வருகின்றார்கள். ஒரு சில பாடங்களைப் போட்டு தங்களின் பெயரை முதலில் பதிவு செய்து கொள்கின்றார்கள். பின்னர் மாணவர்களுக்கான வேலை தேடும் இடத்தில் (Student Job Search) வேலை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். மீண்டும் அவர்களைக் கண்டு கொள்ள முடியாது. அங்கே அப்படி சேகர் எடுத்த வேலைகள் பல. வாழ்க்கையில் விரக்தியையும் சலிப்பையும் ஏற்படுத்திய காலங்கள் அவை. மகள் பிறந்திருந்த நேரம். மகிழ்ச்சியாகக் குடும்பத்துடன் இருப்பதை விட்டு, ‘பிச்சைக்கார’ வேலையை வழங்கும் அமைப்பான ‘ஸ்டூடன்ற் ஜொப் சேர்ச்’ச்சில் அலைந்து கொண்டு திரிந்தான்.

நேரத்திற்கு வேலை செய்யுமிடம் போய் விட்டான். வாசலில் மனேஜரான ‘அன்டி தொம்ச’னும் தொழிற்சாலை மனேஜர் ‘போலு’ம் சிகரட் பிடித்தபடி பனிப்புகாரினுள் நிற்கின்றார்கள். இரவு பெய்த கடும்பனி – சூரிய ஒளி பட்டுக் கரைந்து கட்டடத்தின் கூரை மீதிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது. சிகரெட்டைக் கீழே போட்டு காலால் நசுக்கிவிட்டு, காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த சேகரை நோக்கி விரைந்து வந்தான் அன்டி. செய்ய வேண்டிய வேலைகளை ஒப்புவித்துவிட்டு மீண்டும் தனது காரிலேறிப் போனான். இனிப் பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போய் விட்டு வர பத்து மணியாகும். அன்டி தொம்சன் வெள்ளை இனத்தவன். மிகவும் நல்லவன். அவனது நெடிய தோற்றமும் வசீகரப் புன்னகையும் எளிதில் எவரையும் கவர்ந்து விடும்.

இந்த ‘செர்ரிக் கலர்’ வேலை கிடைத்த போது பல எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் சேகருக்கு வந்தன.

“என்னடாப்பா வேலை எடுத்திட்டியாமே! என்ன வேலை?” – “ஒரு பிறிண்டிங் இண்டஸ்றியிலை.”

“அங்கை என்ன வேலை?” – “கொம்பியூட்டரிலையப்பா!”

“கொம்பியூட்டரும் பரவாயில்லைத்தான். கொம்பியூட்டரிலை சொவ்ற்வயரா? ஹாட்வயரா?”

“மனிசருக்கு இருக்கிற பிரச்சினையளுக்கை கேள்விகளைப் பாருங்கள்! தாங்கள் வாழ் நாள் பூராவும் ‘பிசின்’ பூசி ஒட்டினாப் போல ‘இன்கம் சப்போற்றிலை’ இருப்பினம். ஆராவது கொஞ்சம் முயற்சி செய்து வேலைக்குப் போனால் அதுக்கு வியாக்கியானங்கள்.”

வாழ வழியற்றவர்களுக்கு உதவும் அரச அமைப்பு ‘இன்கம் சப்போற்’. நாட்டிற்கு வந்த ஆரம்ப நாட்களில் சேகரும் உதவி பெற்றான். வாழ்க்கையும் மிக இனிமையாகக் கழிந்தது. ஆனால் எத்தனை நாட்கள்தான் அதில் தங்கி இருப்பது? அவர்கள் தரும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. நாட்டிலே நடைபெறும் இன அழிப்புகளுக்கு மத்தியில் தொடரும் உறவுகள் – நண்பர்கள். அவர்களுக்கும் பணம் அனுப்ப வேண்டுமென்றால் உழைத்துத்தான் ஆகவேண்டும்.

ஒரு அறை கொண்ட சிறிய ‘யுனிற்’. அதில் ஒரு கட்டில். அதன் அருகே ஒரு தொட்டில். திரும்பமுடியாத ரொயிலற் – பாத்றூம். சிறிய ஓடை போன்ற ஹோல். சமைத்தால் நாள் முழுக்க வீட்டிற்குள் சுகந்தம் தரும் குசினி.

‘இன்கம் சப்போற்’ பக்கம் போகக்கூடாது என்று மனம் பிடிவாதம் பிடித்தது. ‘இவர்களுக்கு வேலை செய்வதற்கு படித்த முட்டாள்கள் வேண்டும். அதுக்குத்தான் எங்களைப் போன்றவர்களுக்கு நாட்டிற்குள் வர முன்னுரிமை கொடுக்கின்றார்கள்’ சேகர் தனக்குள் எண்ணிக் கொள்வான். ‘படித்த படிப்புக்குத்தான் வேலை செய்வது’ என்று அடம் பிடித்தால் எப்பொழுதுதான் வேலை செய்வது? தனது துறையில் வேலை தேடிக் கிடைக்காததால் இந்தத் தொழிலுக்கு வந்தான் சேகர். உடம்பு உருக்குலைந்தது. ‘அன்டி தொம்சனுக்கு’ ஒரு படித்த முட்டாள் கிடைத்துக் கொண்டான். வாழ்க்கை  முன்னேற்றம் இல்லாமல் அமைதியாகக் கழிந்து கொண்டிருக்கிறது. நண்பர்களில் பலர் இன்னமும் ‘இன்கம் சப்போற்’றில் இருக்கின்றார்கள். ‘ரக்ஸ்’ இல்லாத வேலைகள் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

‘குளொக்’கில் ‘கார்ட்டை’ அடித்துவிட்டு ரொயிலற் பக்கம் போனான். ரொயிலற்றின் இரண்டு கதவுகளும் மூடப்பட்டிருந்தன. சகிக்க முடியாத துர்நாற்றம் கிழம்பிக் கொண்டிருந்தது. இரண்டு மனிதர்கள் ‘சளோம் பிளோம்’ என்று ரொயிலற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

சமீபகாலமாக தொழிற்சாலையில் ஏதோ மர்மமான முறையில் சம்பவங்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. பல வருடங்கள் பழமை வாய்ந்த தொழிற்சாலையில் மூன்று வருடங்கள் சேகர் வேலை செய்து விட்டான். கடந்த மாதம் தொழிற்சாலையில் நீண்ட காலமாக வேலை செய்து வந்த மூன்று பேர் – ஒரு இரண்டாந்தர மனேஜர் உட்பட – தமது சுய விருப்பின் பேரில் விலகியிருந்தார்கள். அவர்களில் ‘குங்’ என்னும் சீன தேசத்தவன் சேகருடன் அன்பாகப் பழகுவான். சுறுசுறுப்பானவன். நகைச்சுவைப் பேர்வழி. அவனிடம் ஏன் விலகுகின்றாய் என்று சேகர் தூண்டில் போண்டான். அதற்கு அவன் சம்பளம் போதாது என்றும், ‘பணிஸ், ம·பின், பேகர்’ செய்து விற்கப் போவதாகவும் கூறினான். அவனது பதில் சேகரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

குங்கை என்றுமே மறப்பதற்கில்லை. சேகருக்கு தொழிலைக் கற்றுத் கொடுத்தவன். ‘லேபல்’களைத் தரம் பிரிப்பது, மெஷினில் மட்டைகள் வெட்டுவது, பொதிகளைக் கட்டுவது, ‘குளூ கண்ணால்’ (Glue Gun) ஒட்டுவது போன்றவை. வேலைக்குச் சேர்ந்த முதல்நாள், ‘குளூ கண்ணால்’ ஒட்டும்போது வந்த எஞ்சிய பசையைத் திரட்டி உருண்டையாக்கி சேகரின் உள்ளங் கைகளில் வைத்தான். ‘என்ன?’ என்றான் சேகர். சிரித்துக் கொண்டே தனது மூக்கைக் காட்டிவிட்டுப் போனான்.

மூன்று பேருக்கும் நிர்வாகம் பிரியாவிடை வைத்தது. குங் மாத்திரமே சமூகமளித்திருந்தான். மனேஜர் அவனுக்கு புகழாரம் சூட்டுகையில், “முப்பது வருஷங்களுக்கு முன்னர் குங்கை நான் ஒரு தெருவீதியில் கண்டு பிடித்து இங்கு வேலைக்கு கொண்டு வந்து சேர்த்தேன்” என்றார். குங் கையைக் கட்டியபடியே குனிந்து நின்றான். அவனது உதடுகளும் கைகளும் நடுங்கின. முடிவில் அவனது முப்பது வருட சேவையைப் பாராட்டி, மரத்தாலான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அகப்பை ஒன்றை பரிசாகக் கொடுத்தார். முப்பது வருஷங்களுக்கு – ஒரு அகப்பை. குங் அழுதான். அவனது நகைச்சுவை உணர்வு அகப்பைக்குள் அடங்கிப் போயிற்று.

அவர்கள் மூவரும் விலகிப் போன மறுவாரம் தொழிற்சாலைக்கு ஒரு இயந்திரம் வந்து சேர்ந்தது. சற்றே பழசாகிப் போன பெரிய இயந்திரம். தடித்த ‘கார்ட் போட்’ போன்ற மட்டைகளை விரும்பிய டிசைன்களில் வெட்டுவதற்குரிய இயந்திரம் அது. கூடவே ஆறு புதியவர்களும். பெரிய மல்லர்களைப் போன்றிருந்த அவர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். மெளரி இனத்தவர். சேகரைப் போலவே அவர்களும் வேலை எடுத்து வந்திருந்தார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேர் நித்திரையால் எழும்பியதும் வீட்டிலிருந்து நேரே இங்கு வந்துவிடுவார்கள். காலைக்கடன்கள் தொட்டு கன்ரீனில் தேநீர் அருந்துவது வரை எல்லாமே இங்குதான். கழிப்பறையின் உள்ளே இருப்பவர்கள் அவர்கள்தான்.

சேகர் இங்கே ஒரு கடின உழைப்பாளி. “இரவு ஏழு மணி மட்டும் ‘ஓவர் டைம்’ செய்ய முடியுமா?” – “மாதக் கடைசி. நிறைய வேலைகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கு. காலை விடிய நாலு மணிக்கு வர முடியுமா?” – “சனிக்கிழமை? ஞாயிற்றுக்கிழமை?” – எல்லாவற்றிற்கும் ‘ஓம்’ தான். குளிர் காலம் என்றால் வெப்பத்தைக் கொடுக்கும் ஒரு ‘கீற்றரை’ தன்னுடன் வைத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் முடித்துவிடுவான் சேகர்.

“நரகத்தில் இரண்டு மணித்தியாலம் ஓவர் டைம் இருக்கு. வேலை செய்ய முடியுமா என்று கேட்டாலும் வேலை செய்வான் சேகர்” – “சேகருக்கு இஞ்சையே சவப்பெட்டி செய்து வைக்க வேணும்!” – அங்கு வேலை செய்யும் சக தொழிலாளர்கள் சேகரைப் பற்றி இப்படிச் சொல்லுவார்கள். ‘பணப்பிசாசு’ என்பது அவனின் பட்டப் பெயர்.

சேகர் ‘·போக் லிவ்ற்’றின் உதவியுடன் பேப்பர் உருளைகளை நகர்த்திவிட்டு, நாற்பது கிலோ இருக்கக் கூடிய பேப்பர் உருளையைத் தூக்கி மெஷினில் பொருத்தினான். தொழில் ரீதியாக இருபத்தைந்து கிலோவிற்கு மேல் தூக்கக் கூடாது என்று சட்டத்தை எல்லாம் இங்கே யார் பார்க்கின்றார்கள். எதுவுமே கதைத்துவிட முடியாது. கதைத்தால் ஆளை மாத்தி விடுவார்கள். ‘முட்டாள்’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றும் ஒருநாளைக்கு நாலைந்து தடவைகள் இப்படித் தூக்கி வைப்பதற்காக இன்னொருவனைத் தேடி அலைவதும் புத்திசாலித்தனமற்றது.

‘கற்றவனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு.’ படிக்கும் காலத்தில் சேகரின் தமிழ் வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். நாட்டுப் பிரச்சனைகளுக்குள் அலைந்து, நாலு வருஷப் படிப்பை நாலிரண்டு வருஷங்களிற்குள் – நாடாறு மாதம்; காடாறு மாதம் என முடித்தது பெரிய சாதனை. எத்தனை சூத்திரங்கள், தேற்றங்கள், அசைன்மன்ற், பிறக்ரிக்கல்ஸ், கோர்ஸ் வேக். அனைத்துமே வீணாகிப் போய் விட்டன அவனது வாழ்க்கையில்.

வெளிநாட்டிற்குப் புறப்படும்போது  சேகர் தனது தமிழ் வாத்தியாரைச் சந்தித்தான். அவரில் அவனுக்கு அப்படியொரு பிடிப்பு.

“தம்பி வெளிநாடு போகிறீர்கள். நல்லது. எங்கையெண்டாலும் போங்கோ. ஆனாப் போற இடங்களிலை காசு உழைக்கிறதோடை மட்டும் நிண்டிடாதையுங்கோ. இஞ்சை கஸ்டப்படுகிற மக்களுக்கும் உதவி செய்யுங்கோ. எங்கடை பிரச்சினையளைப் பற்றியும் உங்கை உள்ளவைக்கு கொஞ்சம் சொல்லுங்கோ” தமிழ் வாத்தியாரின் உபதேசம் அப்படி இருந்தது.

பேப்பர் உருளையை எக்கித் தெக்கி தூக்கி வைத்ததில் மூச்சு வாங்கியது. உடலை ஆசுவாசப்படுத்தி நிமிர்கையில் ‘சேல்ஸ் மனேஜர்’ ஒரு துண்டுப் பேப்பருடன் அங்கு வந்து சேர்ந்தார். பேப்பரில் ஒரு புது வேலை முளைத்திருந்தது. அதை முதலில் செய்யும்படி சொன்னார். அவரும் நல்ல மனிதர்தான். ‘மனேஜர்’ என்ற அடைமொழி இருந்தால் ‘சேல்ஸ் மனேஜர்’ என்ன ‘வேஸ்ற் மனேஜருக்கும்’ மதிப்புக் கொடுக்க வேண்டியதுதான். எல்லாரும் தருகின்ற வேலையை மகிழ்ச்சியுடன் ‘ஆம்’ என்று சொல்லி, மறு பேச்சுப் பேசாமல் கச்சிதமாகச் செய்வதால் சேகரும் ‘நல்லவன்’ என்று பேர் எடுக்கின்றான். சிம்மாசனத்தில் ஏறிய பேப்பர் உருளை இறங்கி, இன்னொரு உருளை ஏறியது. மூச்சும்.

இந்தப் பேப்பர் உருளைகளுடன் தினமும் உறவாடியதில் சேகருக்கு இடது புற வயிற்றில் வலி கண்டது. குடும்ப வைத்தியர் ‘டொக்ரர் ஹவ் லோங்’கை (Dr. How Long) அடிக்கடி சந்திக்கலானான். வாசலில் பிரசன்னமானவுடன் ‘எத்தனை நாட்கள் மெடிக்கல் லீவு வேணும்?’ என்பார் டொக்ரர் ஹவ் லோங். அதனால் அவருக்கு அந்தப் பெயர். அவரும் பொறுமையாக அவனைப் படுக்க வைத்து, வயிற்றை அமர்த்திப் பார்த்துவிட்டு ‘ஒன்றுமில்லை’ என்பார். ஒரு முடிவு காணும் வரை அவரைச் சந்தித்துக் கொள்வதென்று சங்கற்பம் செய்து கொண்டான் சேகர். பொறுமை இழந்த டாக்டர், ‘கவர்மெண்ட் ஹொஸ்பிட்டல் போக வேண்டும். அங்கே ஒரு நுண்ணிய உபகரணத்தை வாயின் முலமாகவோ அல்லது குதத்தின் மூலமாகவோ உள்ளே செலுத்தி பரிசோதிப்பார்கள்’ என்றார்.  ‘எது வரைக்கும் செலுத்துவார்கள்?’ என்ற அவனது சந்தேகத்திற்கு ‘வேறு எதுவரைக்கும்? வலி கண்டுள்ள இடம் வரைக்கும்தான்’ என்றார் டாக்டர். அவ்வளவுந்தான். அன்றுடன் வலி பறந்து போனது. அனேகமாக அந்த வலி அவர் சொன்ன அந்த இரண்டு பாதைகளில் ஒன்றினூடாகத்தான் தப்பிப் பிழைத்திருக்க வேண்டும்.

சேல்ஸ் மனேஜரின் வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, அன்டி பதறிக் கொண்டு ஓடி வந்தார்.

“ஆர் உதைச் செய்யச் சொன்னது?” – “சேல்ஸ் மனேஜர்!”

“நான் தந்த வேலை மதியம் பன்னிரண்டு மணிக்குள் குடுத்தாக வேண்டும்” காலை எட்டி வைத்து கோபத்துடன் ‘ஒபிஸ் றூமிற்’குள் போனார். இருவரும் கொஞ்ச நேரம் வாக்கு வாதப்பட்டார்கள். போன வேகத்தில் திரும்பி வந்தார் அன்டி.

“பரவாயில்லை. சேல்ஸ் மனேஜருடைய வேலையை முதலில் முடியுங்கள். அவருக்கு இண்டைக்குத்தான் கடைசி நாள்” சொல்லிவிட்டு மீண்டும் ஒபீஸ் றூமை நோக்கிப் போனார். ‘அவருக்கு இண்டைக்குத்தான் கடைசி நாள்!’ சேகருக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கே என்னதான் நடக்கின்றது? அன்டியை கலைத்துக் கொண்டு பின்னாலே ஓடினான்.

“சேர்! நான் உங்களோடை ஒன்று கதைக்க வேண்டும்”

“சேகர் பயப்படாதீர்கள். லஞ்சிற்குப் பிறகு ஆறுதலாகக் கதைப்போமே!”

மதியம் கழிய  சேகரை தனது அறைக்கு வரும்படி கூப்பிட்டார் அன்டி. முன்னால் உள்ள கதிரையில் அமரும்படி சொன்னார். மேசையின் மீது ஒரு பேப்பரை விரித்து வைத்தார்.

“Due to the tough trading conditions and the liquidation of a major client,  …” இன்னும் பத்து நாட்களில் தொழிற்சாலையை மூட இருக்கின்றார்கள் என்ற பயங்கரம் அதில் இருந்தது. சேகரின் தலை சுழன்றது. மேசையை இறுகப் பற்றிக் கொண்டான். முப்பது வருடங்கள் ஆட்டம் காணாத தொழிற்சாலையை நம்பி அவன் படிப்பைக் கை விட்டான். இடையில் வேறு எந்தவொரு தொழிலுக்கும் முயற்சி செய்யவுமில்லை. இப்போது எதை வைத்துக் கொண்டு வேலை தேடுவது? படித்த படிப்பெல்லாம் வருஷம் ஒவ்வொன்றாக பின்பக்கமாகக் கழன்று, பட்டமும் அறுந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. கடைசியில் இந்தத் தொழில்தான் மிச்சமாக இருந்தது.

அதன் பின்பு அவனிற்கு வேலை ஓடவில்லை. மனைவிக்கு ரெலிபோன் செய்து விஷயத்தைச் சொன்னான். அந்த அதிர்ச்சியில் அவள் பயந்து போனாள்.

அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புக்கள் அதிகம். பெரிய நாடு, ஒருபோதும் பொருளாதாரத்தில் தாழ்ந்து விடாது என்று நினைத்துக் கொண்டே வீடு சென்றான் சேகர். ராமச்சந்திரன் எடுத்த முடிவையே அவனும் எடுக்க விரும்பினான்.

“எல்லாரும் ஒஸ்ரேலியா போகினம். நாங்களும் போவம். எவ்வளவு காலமா இஞ்சை இருந்தோம். என்னத்தை மிச்சம் பிடிச்சோம். இப்ப என்ன இருக்கிறது எங்களிட்டை?” அவன் நினைத்ததையே மனைவியும் சொன்னாள்.

“குண்டுச் சத்தங்களற்ற நிம்மதியான ஒரு உலகத்திலை வாழ்ந்தோம். காசுக்காக இன்னொரு நாட்டுக்குப் போறதைப் பற்றித்தான் இப்ப யோசிக்கிறன்”

“அங்கையும் எங்கடை ஆக்கள் இருக்கினம்தானே. அவையளும் எங்கட கலாச்சாரம் பண்பாடுகளுக்கு மதிப்புக் கொடுத்துக் கொண்டுதான் வாழுகினம்.”

மாறி மாறி இருவரும் அபிப்பிராயங்களைக் கொட்டினார்கள்.

“இந்த நாட்டை விட்டிட்டுப் போறது உனக்குக் கவலையாக இல்லையா?” சேகர் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

“சொந்த நாட்டை விட்டிட்டு வந்திட்டோம். அப்ப இருந்த சோகத்தை விடவா? இனி எங்கை போனால்தான் என்ன! போகக்கூடிய இடத்துக்குப் போக வேண்டியதுதான். வேகமும் விவேகமும்தான் இப்ப எங்களுக்கு தேவை. பணம்தான் முக்கியம்” மனைவி தெளிவாக இருந்தாள்.

விதியின் திருப்புமுனையில் ‘அவுஸ்திரேலியா’ என்ற எதிர்காலம் சேகரின் கண் முன்னே விரிகிறது. ‘அவுஸ்திரேலியாவில் இருக்கும் நண்பனுடன் கதைக்க வேண்டும்’.  ரெலிபோனைக் கையில் பிடித்தபடி, முகவரிகள் எழுதப்பட்டிருந்த ‘டைரி’யை ஒவ்வொரு பக்கமாகத் தட்டிக் கொண்டிருந்தான். பள்ளிக்கூட உடுப்பில் பளிச்சென்றிருந்த மகள் எட்டிப் பார்த்துவிட்டு ஒளிந்து கொண்டாள். ‘ஓ! நேற்றிரவு ஏதோ பறவையைப் பற்றிக் கேட்டவள். மறந்தே போய் விட்டேன்.’

“சுருதி இஞ்சை வாங்கோ. இரண்டு பேருமா சேர்ந்து இன்ரநெட்டிலிலை அந்தப் பறவையைப் பற்றி இப்ப தேடுவம்.”

“அப்பா… இண்டைக்கு ரீச்சர் அதைப்பற்றிச் சொல்லித் தந்திட்டா. எமு (Emu) என்பது பறவையின் பெயர். உயிர் வாழும் பறவையளிலை தீக்கோழிக்கு அடுத்த பெரிய பறவையாம். சாம்பல் நிற உடல் கொண்ட அது தாவரங்களையும் பூச்சிகளையும் சாப்பிடுமாம். 2 மீட்டர் உயரமும், 50 கிலோகிராம் எடையும் கொண்ட அது 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுமாம். அவுஸ்திரேலியாவிலை இருக்கிற பறக்காத பறவை அது” ரீச்சர் சொல்லிக் கொடுத்தது போல கடுகதி வேகத்தில் மகள் சொன்னாள்.

“பறக்காத பறவை. இரண்டு மீற்றர் உயரம். ஐம்பது கிலோகிராம் எடை. அது நிச்சயமா நாங்கள்தான்” மகளைக் கட்டிப் பிடித்து செல்லமழை பொழிந்தான் சேகர்.

“அப்பாவுக்கு விசர்” சொல்லியபடி துள்ளிக் கொண்டு மறைந்தாள் சுருதி.
———————-

Series Navigationமணலும் (வாலிகையும்) நுரையும் – (9)சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Comments

  1. Avatar
    தேமொழி says:

    உங்கள் எழுத்து நடை அருமை. பல வரிகள் மனதில் வலியுடன் இறங்கியது…குறிப்பாக ….

    …“சொந்த நாட்டை விட்டிட்டு வந்திட்டோம். அப்ப இருந்த சோகத்தை விடவா? இனி எங்கை போனால்தான் என்ன! போகக்கூடிய இடத்துக்குப் போக வேண்டியதுதான். ….

    …..பறக்காத பறவை. இரண்டு மீற்றர் உயரம். ஐம்பது கிலோகிராம் எடை. அது நிச்சயமா நாங்கள்தான்…..

    …நாலு வருஷப் படிப்பை நாலிரண்டு வருஷங்களிற்குள் – நாடாறு மாதம்; காடாறு மாதம் என முடித்தது பெரிய சாதனை. எத்தனை சூத்திரங்கள், தேற்றங்கள், அசைன்மன்ற், பிறக்ரிக்கல்ஸ், கோர்ஸ் வேக். அனைத்துமே வீணாகிப் போய் விட்டன …..

    பறக்காத பறவைகளின் நிச்சயமற்ற வாழ்க்கையின் சோக வரிகள்.

Leave a Reply to தேமொழி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *