This entry is part 34 of 34 in the series 6 ஜனவரி 2013

சணல் எடமருக்கு/ ஜான் வொயிட்

நியூ சயண்டிஸ்ட் இதழுக்காக ஜான் வொயிட் பேட்டி

சனல் எடமருக்கு

சனல் எடமருக்கு

சமீபத்தில் மும்பையில் நீங்கள் ஆராய்ச்சி செய்த ”அற்புதம்” என்ன?
மும்பையில் இருக்கும் அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி சர்ச்சை சார்ந்த மதகுருக்களும், கத்தோலிக்க மதத்தை சார்ந்த மக்களும், இயேசுவின் காலடியிலிருந்து வழியும் தண்ணீர் கடவுளின் ஒரு அற்புதம் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் இந்த ஒழுகும் தண்ணீரை சேமித்து அதனை குடித்தார்கள். இந்த தண்ணீர் தங்களது எல்லா நோய்களையும் தீர்க்கும் என்று நம்பினார்கள்.

நீங்கள் அங்கே செல்ல தூண்டியது எது?
டிவி9 என்ற தொலைக்காட்சியின் டெல்லி ஸ்டூடியோ என்னை அழைத்து இதனை பற்றி கருத்து கேட்டார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, இது ஒரு அற்புதம் என்பதை நான் நிராகரித்தேன். ஆனால், இதனை சரியாக ஆராயாமல், இதனை பற்றி அறிவியற்பூர்வமாக கருத்து கூற முடியாது என்றேன். ஆகவே, இந்த தொலைக்காட்சி என்னை மும்பைக்கு வர அழைத்தது. அதற்கு சர்ச் அதிகாரிகளும் ஒப்புகொண்டனர்.

நீங்கள் என்ன கண்டறிந்தீர்கள்?
ஒழுகும் அந்த சிலைக்கு அருகே இருந்த கழிப்பறையை ஆராய்ந்தேன். அதிலிருந்து செல்லும் குழாய்கள் அந்த சிலுவையின் காங்க்ரீட் தளத்துக்கு கீழ் சென்றுகொண்டிருந்தன. நான் சில கழிப்பறையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வழியில் உள்ள கற்களை எடுத்துவிட்டு, அந்த சிலுவைக்கு கீழும் அந்த கழிப்பறைக்கு கீழும் இருந்த குழாய்களை படமெடுத்துகொண்டேன். அது மிகவும் எளிதான விஷயம். கழிப்பறையிலிருந்து செல்லும் தண்ணீர், குழாய்களில் அடைப்பு இருப்பதால் வழிந்து அதன் பக்கத்தில் இருக்கும் சுவர்களில் காப்பிலரி செயல்பாட்டில் capillary action செல்கிறது. இந்த தண்ணீர் அந்த சிலுவைக்கு கீழ் உள்ள தளத்திலும் அதன் மர சிலுவையிலும் ஏறுகிறது. அந்த தண்ணீர் அதன் ஆணி ஓட்டையிலிருந்து வெளியாகி, அந்த சிலையின் காலடியில் ஓடுகிறது.

நீங்கள் கைது செய்யப்பட இருக்கிறீர்கள். ஏன்?
இரண்டு கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்கள் அமைப்பு என் மீது அவதூறுகளை கூறி என்னை இந்திய பீனல் கோடு செக்‌ஷன், 295Aஇன் கீழ் கைது செய்ய புகார் அளித்திருக்கிறது. நான்,” வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்துவதற்காகவும், மக்களில் ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை காயப்படுத்துவதற்காகவும்” கைது செய்யப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். நான் அது போல எதுவும் செய்யவில்லை. அது அபத்தம்.

உங்களுக்கு என்ன ஆகும் என்று அஞ்சுகிறீர்கள்?
கோர்ட் வழக்கு என்று வந்தால் எனக்கு அஞ்ச ஒன்றும் இல்லை. இந்தியாவில் கத்தோலிக்க சர்ச் எந்த மாதிரியான பாத்திரத்தை வகிக்கிறது என்பதை பற்றி விளக்க எனக்கு ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால், என்னை கைது செய்வது எனக்கு அச்சுருத்தலாகத்தான் இருக்கிறது.

இதில் இடையீடு செய்ததற்காக வருந்துகிறீர்களா?
சாக்கடை தண்ணீரை ஏமாந்த மக்களுக்கு ஒரு சிலர் கொடுக்கும்போது ஒருவர் இடையீடு செய்ததற்காக எதற்கு வருந்த வேண்டும்? ஆனால் எனது காரணம் இன்னும் பரந்தது. இவ்வாறு மூட நம்பிக்கையையும், அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கையையும் பரப்புவது என்பது மக்களது மனங்களை மழுங்கடித்து உண்மையை பற்றிய உணர்வு அற்று தவறான சிந்தனைகளை ஊக்குவிக்கும். இப்படிப்பட்ட முயற்சிகள் எதிர்க்கப்பட்டாக வேண்டும்.

ஏன் மக்கள் உடனே இப்படிப்பட்ட ”அற்புதங்களை” நம்புகிறார்கள்?
வாழ்க்கையின் நிதர்சனமான கஷ்டங்களிலிருந்து விடுபட ”அற்புதங்கள்” மீதான இப்படிப்பட்ட நம்பிக்கைகள் உதவுகின்றன. இப்படிப்பட்ட ஒரு பகுத்தறிவற்ற சிந்தனையில் மாட்டிகொண்டால் அதிலிருந்து விடுபடுவது மிகக்கடினம். இது ஒரு போதை போல. இவர்கள், ஜோசியக்காரர்கள், சாமியார்கள், போலி மனதத்துவவியலாளர்கள், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் போன்றவற்றில் சிக்கி, பகுத்தறிவுக்கு எதிரான ஒரு மெகா தொழிற்சாலையில் அங்கமாகிவிடுகிறார்கள்.

 

மூலம்

 

Series Navigationகாரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு