This entry is part 10 of 11 in the series 8 பிப்ரவரி 2026

மழைபுராணம்
*************************
மழையில் நனையும் வயதுகள் – 18

சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போது
பக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்
பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்
பக்கத்து சீட் ஆளாய் .

கலகலத்து
பூமி மண் குளிர அடை மழையாய்ப்
பொழிகையில் சளி பிடிக்குமென்று
வாசல் தாண்ட முடியாமல் தடுக்கப் பட்டேன் பெற்றோரால்
குழந்தையாய் .

வீட்டுக் குரல்களின் மிரட்டும் ஆணையில் சிறு வயதில்
அன்றொரு நாள் ஊரே வியக்கும் படி
தார்ச்சாலையில்
பனிக்கட்டி சரம்போல்
அடடா! ஆலங்கட்டி மழையே பெய்கிறது
வெறுமனே
வேடிக்கைதான் பார்க்கிறேன்

நனைவதற்கும் மனசில்லாமல்
தடுப்பதற்கும் ஆளில்லாமல்
குடும்ப பாரத்தால்
மனம் மரத்துப் போனாலும்
அதோ!
என்னிலிருந்து ஒருவன் ஓடிச்சென்று
ஆலங்கட்டி மழைக்கல் ஏந்திக் குதிக்கிறான்.

  – பா.சத்தியமோகன்

Series Navigation ‘அரண்மனை மியூசியம்’  நாவல் வெளியிடப் பட்டதுஇடைவெளி….