திரைதுறையும், அரசியலும்

This entry is part 29 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

திரையுலகில் அரசியல் புகுந்ததும், அரசியலில் திரையுலகம் புகுந்ததும் இரண்டு துறைகளுக்கும் கெடுதலாக முடிந்துவிட்டது. இரண்டுதுறைகளும் விவாகரத்து செய்துகொள்வது அரசியலுக்கும், கலைக்கும் நல்லது. அப்படி ஒரு விவாகரத்து ஏன் அவசியம் என்பதையும், அத்தகைய விவாகரத்து நடைபெறவேண்டிய முறையையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

திரைப்படங்களின் வலிமையை உணர்ந்த முதல் இந்திய அரசு என காலனிய ப்ரிட்டிஷ் அரசை சொல்லலாம். தம் அரசுக்கு எதிராக திரைப்படங்கள் கருத்து கூறுவதை தடுக்க தணிக்கை முறையை அறிமுகபடுத்தினார்கள். இத்தணிக்கை முறை நடிகர்களை அரசியல்வாதிகள், முதல்வர்கள் ஆகியோரை சார்ந்திருக்க தூண்டியது. இரண்டாவது உலக யுத்த சமயத்தில் இந்தியர்களின் கடும் எதிர்ப்பை மீறி இந்தியாவை உலகபோரில் ப்ரிட்டிஷ் அரசு ஈடுபடுத்தியது. அந்த சூழலில் அன்றைய தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் அன்றைய சென்னை கவர்னரின் உத்தரவுக்கிணங்க உலகயுத்தத்திற்காக பாடல், நாடக நிகழ்ச்சிகள் நிகழ்த்தி நிதி திரட்டி கொடுத்தார்.

இதனால் மனம் மகிழ்ந்த கவர்னர் பாகவதருக்கு திவான் பகதூர் பட்டத்தை அளிக்க முன்வந்தார். ஆனால் பாகவதர் அதை மறுத்துவிட்டார். ஆக பாகவதர் இதை மனமொப்பி தான் செய்தார் என கருத இடமில்லை. ஆள்வோரை பகைத்துகொள்ள கூடாது எனும் நோக்கு அவரை இச்செயலுக்கு தூண்டியது. இதை இன்றைய திரையுலகம் இன்றைய, அன்றைய முதல்வர்களுக்கு எடுக்கும் பாராட்டு விழாக்கள், சூடும் புகழ்மாலைகள் மூலம் இன்றும் தொடர்கிறது.

திரைப்படதுறையை கட்டுக்குள் வைக்கும் இத்தகைய சென்சார் எனும் அங்குசத்தை அரசியல்வாதிகள் சுதந்திரத்துக்கு பின்னும் கைவிட விரும்பவில்லை. விளைவு யுடியூப் உலகில் அரசு கமிட்டி ஒன்று திரைப்படங்களை தணிக்கை செய்யும் கோமாளித்தனம் நம் நாட்டில் இன்னும் நடைபெற காணலாம். முதிர்ந்த ஜனநாயக நாடுகள் பலவற்றிலும் (உதா: கனடா, அமெரிக்கா, ப்ரிட்டன்) தணிக்கை முறை கிடையாது. 100 கோடி மக்கள் எவ்வகை காட்சிகளை காணலாம், எவற்றை காணகூடாது என ஐந்து பேர் கொண்ட அரசு கமிட்டிகள் முடிவு செய்வது இல்லை.

திரைப்படதுறை மூலம் ஆட்சியை எப்படி பிடிக்கலாம் என்பதை இந்தியாவில் முதல்முறையாக திராவிட இயக்கம் செய்து காட்டியது. கருணாநிதி, அண்ணாதுரை, எம்ஜிஆர், எஸ்,எஸ் ராஜேந்திரன், போன்ற திராவிட இயக்க பிரமுகர்கள் திரைப்படங்களில் செய்த வலுவான பிரச்சாரம் ஆட்சிமாற்றத்துக்கு மட்டும் வழிகோலவில்லை. மக்களிடையே திராவிட சித்தாந்தத்தையும் விதைத்தது. அதன் விளைவாக இன்று மாறி, மாறி இரு திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வர முடிகிறது.

அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்களை ஓட்டுக்கும், பிரச்சாரத்துக்கும் மட்டுமே பயன்படுத்தி கொள்ள விரும்புவார்கள். நடிகர்கள் தலைமைக்கும், பதவிக்கும் ஆசைபட்டால் என்ன ஆகும் என்பதை 1970களில் திராவிட இயக்கத்தில் நிகழ்ந்த பிளவு காட்டியது. உலகம் சுற்றும் வாலிபன் பட ரிலீசுக்கு தடைகள் வந்தன. ஆனால் அன்று எம்ஜிஆர் மக்கள் மனதில் மிக வலுவான இடத்தை பிடித்திருந்தார். இன்று இருப்பது போல் அன்று டிவி, யுடியூப், இணையம் எதுவும் இல்லை. சினிமா ஒன்றே பொழுதுபோக்கு. அதன் அசைக்கமுடியாத சக்தி எம்ஜிஆர். இன்று ரஜினியின் பாபா ரிலிசை பாட்டாளி மக்கள் கட்சி எனும் ஆட்சியில் இல்லாத கட்சியால் தடுத்து நிறுத்த முடிகிறது. கமலின் விருமாண்டியை ஒற்றை எம்.எல்.ஏ இல்லாத மருத்துவர் கிருஷ்ணசாமியின் கட்சியால் தடுத்து நிறுத்த முடிகிறது. ஆனால் அன்றைய திரைப்படதுறையின் சக்திக்கு முன் ஆளும்கட்சியாலேயே எதுவும் செய்ய முடியவில்லை என்பதை உலகம் அன்று கண்டது.

எம்ஜிஆர் ஆட்சியில் ரஜினியும், கமலும் ஆட்சிக்கு வரும் விருப்பத்திலும் இல்லை, அத்தனை சக்தியும் அன்று அவர்களுக்கு இல்லை. ஆக திரைப்படதுறை 80களில் ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தது. இந்த காலகட்டத்தில் விருதுகள், மானியங்கள், வரிசலுகைகள் மூலம் திரைப்படதுறையை அரசு மகிழ்ச்சியாக வைத்து இருந்தது.இந்த சூழலில் 60களில் செய்தது போல இன்னொரு மிகப்பெரும் சக்தியை கையில் எடுத்து மீண்டும் 1996ல் ஆட்சிக்கு வந்தது திமுக. அதன் பெயர் டிவி. அன்று புதிதாக உருவான கேபிள் தொலைகாட்சி துறையில் சன் டிவி செலுத்திய ஆதிக்கம் திமுகவுக்கு மிகபெரும் பிரச்சார பலத்தை அளித்தது.

அன்றைய அரசியல் உலகில் சக்தியாக உருவெடுத்து வந்த வைகோ தலைஎடுக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அன்று அவரிடம் டிவி இல்லாததும், மற்ற கட்சிகளின் டிவியில் அவர் காட்டபடாததுமே. டிவியில் செய்யும் விமர்சனங்கள் சினிமாக்களின் வெற்றி தோல்வியை பாதிக்கும் எனும் நிலை வந்ததும் சினிமா துறை அரசியலிடம் முழுக்க சரணடைந்தது. 80களில் அரசியல் மாற்றத்துக்கு காரணமாக இருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ். போபர்ஸ் விவகாரத்தில் காங்கிரசை அத்தனை கடுமையாக எதிர்த்தது எக்ஸ்பிரஸ். அதேபோல் அன்று எம்ஜிஆரை எதிர்த்து ஒரு கார்ட்டூன் விவகாரத்துக்கு சிறை சென்றார் விகடன் ஆசிரியர்.

இப்படி சுதந்திரமாக இயங்கிய இந்த ஊடகங்களை அன்றைய அரசியல்வாதிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் பின்னாட்களில் குங்குமம், சன்டிவி, ஜெயாடிவி, தினகரன் என அரசியல்வாதிகளின் ஊடகங்கள் பழைய ஊடகங்களை தூக்கி விழுங்கும் புதிய ஊடகங்களாக மாறின. மக்களின் மனபான்மையும் சேர்ந்து மாறியது. 80களில் அரசின் அடக்குமுறையை கண்டித்து ஆவேசமாக மக்கள் போரிடுவது போல படங்கள் வரும். திரைப்படங்களில் வரும் போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் தவறு செய்யும் முதல்வர்களை பிடித்து ஜெயிலில் போடுவார்கள், மந்திரிகளின் அராஜகங்களை எதிர்த்து போராடுவார்கள். இன்று லஞ்சம் வாங்குவது குற்றம் அல்ல எனும் மனபான்மைக்கு மக்களும் வந்துவிட்டார்கள். திரைப்படங்களும் முதல்வர்களை பிடித்து ஜெயிலில் போடும் வகையில் காட்சிகளை அமைப்பதில்லை.

புதியவகை ஊடகங்களின் ஆதிக்கத்தால் திரைப்ப்டதுறையின் வலு மிக குறைந்துவிட்டது. திரையரங்க உரிமையாளர்களும் டி.டி.எஸ், டிஜிட்டல் என மிக செலவு செய்து அரங்கங்களை அமைத்திருப்பதால் சின்ன அளவில் வன்முறை செய்வதாக பயமுறுத்தும் கட்சிகளுக்கு அஞ்சியே சர்ச்சைகுரிய திரைப்படங்களை திரையிட மறுத்துவிடுகிறார்கள். திரைப்ப்டங்களின் டிவி ரைட்ஸ் பல கோடிகள் விலை போவதால் ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டையும் எந்த நடிகரும் பகைத்துகொள்ள முடியாத நிலை. ரிடையர் ஆன நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளில் காண்டிராக்ட் அடிப்படையில் தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செய்து வருமானம் சம்பாதித்துகொள்வது தான் வழக்கம் என ஆகிவிட்டது. எம்ஜிஆரும், எஸ்.எஸ்.ஆரும் கொள்கை அடிப்படையில் கட்சிபணி செய்தது போல் இன்று யாரும் செய்ய காணோம். திரைப்படதுறையின் சரிந்த செல்வாக்கை உணராத விஜயகாந்த், சரத்குமார், ராஜேந்தர் கட்சிகள் தள்ளாடி, தடுமாறி நிற்கின்றன.

ஆக இப்படி திரைப்ப்டதுறையை முழுமையாக கட்டுபாட்டில் கொன்டுவரும் முயற்சிகளில் அரசியல்வாதிகள் முழு வெற்றி அடைந்துவிட்டார்கள். ப்ரிட்டிஷாருக்கு இந்த அளவு சாமர்த்தியம் இருந்திருந்தால் அவர்கள் பாகவதரையும், சின்னப்பாவையும் வைத்து காங்கிரஸ் எதிர்ப்பு படங்கள் எடுத்து இன்னமும் ஆட்சியில் தொடர்ந்திருக்க முடியும்.

Series Navigationபேசாமொழி 20வது இதழ்வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”
author

செல்வன்

Similar Posts

13 Comments

  1. Avatar
    smitha says:

    Though the censor board has come in for much criticism, we cannot do away with it altogether.

    Then there will be a free flow of violence & vulgarity on screen.

  2. Avatar
    ஷாலி says:

    //திரைப்படதுறையை கட்டுக்குள் வைக்கும் இத்தகைய சென்சார் எனும் அங்குசத்தை அரசியல்வாதிகள் சுதந்திரத்துக்கு பின்னும் கைவிட விரும்பவில்லை. விளைவு யுடியூப் உலகில் அரசு கமிட்டி ஒன்று திரைப்படங்களை தணிக்கை செய்யும் கோமாளித்தனம் நம் நாட்டில் இன்னும் நடைபெற காணலாம்.//

    உண்மைதான்! அதே சமயம் ஆயிரக்கணக்கான சின்ன தொ(ல்)லைக்காட்சி சானல்கள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஊடுருவி ராஜ்ஜியம் செய்யும் நிலையம் இங்குதானே உள்ளது.இதற்க்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாததால்தானே, வாலிப வயோதிக ஆண்மையில்லா ஆண்மகன்கள் தமிழ் நாட்டில் அதிகரித்துவிட்டதால் சித்த மருந்து விளம்பர சானல்கள் தினந்தோறும் ஆண்மையை அள்ளிக் கொடுத்து கொள்ளை அடிக்கிறார்கள்.

    அதிர்ஷ்ட கல்லும்,குபேர யந்திரமும் தமிழனை கோடிஸ்வரனாக்க துடிக்கின்றன.சென்ஸார் இல்லா தொலைகாட்சி, திறந்த வீட்டில் நாய் நுழைவதற்குச் சமம். நாயை நடு வீட்டில் வைத்து குளிப்பாட்டி சேவிக்க தமிழர்களும் தயார்.

    குக்கலை பிடித்து நாவி கூண்டினுள் அடைத்துவைத்து…மிக்கதோர் மஞ்சள் பூசி….

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இதோ சன் குழுமத்தின் சிண்டை தனது பிடிக்குள் கொண்டுவர மத்திய அரசு முயல்வது தெரிகிறது. சுமங்கலி கேபிள் விஷனின் உரிமம் ரத்தாமே ! நாட்டுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

  4. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // முதிர்ந்த ஜனநாயக நாடுகள் பலவற்றிலும் (உதா: கனடா, அமெரிக்கா, ப்ரிட்டன்) தணிக்கை முறை கிடையாது. 100 கோடி மக்கள் எவ்வகை காட்சிகளை காணலாம், எவற்றை காணகூடாது என ஐந்து பேர் கொண்ட அரசு கமிட்டிகள் முடிவு செய்வது இல்லை. //

    இல்லை. ஆனால் இங்கு திரைப்படங்கள் தரப்படுத்தப்பட்டு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதற்குரிய தரக்குறியீடுகள் கொடுக்கப்படுகின்றன. அதன்படி, ‘அனைத்து பார்வையாளர்களுக்கும்’ (G) , ‘பெற்றோர் வழிகாட்டல் அவசியம்’ (PG), ‘பெற்றோர் எச்சரிக்கை’ (PG-13 – பதின்வயதினருக்கல்லாத காட்சிகள் – காம, வன்முறை சார்ந்த – கொண்டவை), ‘வயது வந்தோருக்கு மட்டும்’ (R or NC-17 – Restricted Audience or No Children under 17), என்பன போன்ற குறியீடுகளை Motion Pictures of America என்ற அரசு சாரா தன்னார்வ நிறுவனம் வழங்குகிறது. பெற்றோர்கள் இக்குறியீட்டை வைத்து தமது விடலைப்பிள்ளைகள் சம்பந்தப்பட்ட திரைப்படத்தை பார்க்கலாமா இல்லையா என்று தீர்மானிக்கிறார்கள். தொலைக்காட்சியில் இன்னமும் கட்டுப்பாட்டுக்கான வசதிகளெல்லாம் உண்டு. என்ன, அவை பொதுமக்களின் உபயோகத்திற்கே விடப்பட்டுள்ளது.

    எனவே ’மேற்கில் கட்டுப்பாடே இல்லை’ என்பதுபோல எழுதவேண்டாம். இங்குள்ள கட்டுப்பாடு வேறுவிதம், அவ்வளவே. நம்மூர் ஜனநாயகம் இன்னும் அந்தளவுக்கு வயதுக்கு வரவில்லை. இன்னமும் பல விஷயங்களில் கோலுக்காடும் குரங்கென, சவுக்கெடுத்தால்தான் நாம் சொற்பேச்சு கேட்கிறோம். எனவே இன்றைய சூழலில் அரசு தணிக்கைத்துறை நமக்கு இன்றியமையாததே. இதை கோமாளித்தனம் என்பது குறைபட்ட புரிதல்.

  5. Avatar
    செல்வன் says:

    அமெரிக்காவில் திரைபப்டத்துக்கு ரேட்டிங் பெறுவது கட்டாயம் இல்லை. அத்தகைய ரேட்டிங் கொடுக்கபடுவது அரசால் அல்ல, திரைப்பட துறை சார்ந்த அமைப்பாலேயே. அந்த அமைப்பின் ரேட்டிங் பெற்றே ஆகவேன்டும் என எந்த கட்டாயமும் இல்லை.

    யுடியூபில் வேண்டும் ஆபாசத்தை பார்க்கலாம், அனைவர் கையிலும் செல்போன் அதில் யுடியூப் என்ற நிலை வந்தபின் சென்சார் எனும் காமடி எதற்கு? நான் அதற்காக போர்னோகிராபி அனுமதிக்கவேண்டும் என கூறவில்லை. சென்சாரை மட்டுமே எடுக்கவேண்டும் என கூறுகிறேன். போர்னோவை தடை செய்துவிட்டு சென்சாரை எடுத்துவிடுங்கள். சென்சார் இல்லாத அமெரிக்காவில், லன்டனில் திரையரங்குகளில் போர்னோகிராபி படங்கள் வருவது கிடையாதே? சென்சாரை அகற்றினாலும் பெண்கள், குழந்தைகள் தியரையரங்குக்கு வரவேண்டுமெனில் ஒழுங்காக தான் படம் எடுக்கவேண்டும் என்பதை திரையுலகினர் அறிந்தே வைத்திருப்பார்கள். போர்னோகிராபி வந்தால் படம் ரிலிசானபின் கைது செய்யலாம். அதற்குமுன் சென்சார் செய்யவேண்டியது கிடையாது

    1. Avatar
      ஷாலி says:

      //யுடியூபில் வேண்டும் ஆபாசத்தை பார்க்கலாம், அனைவர் கையிலும் செல்போன் அதில் யுடியூப் என்ற நிலை வந்தபின் சென்சார் எனும் காமடி எதற்கு?//

      தனி மனிதர்கள் தனிமையில் ஆபாசத்தை பார்க்கும் நிலைமை அன்று தொட்டு (சரோஜாதேவி புஸ்தகம்) இன்று வரை (செல் போன்- யுட்யூப்) தொடரத்தான் செய்கிறது.
      இவைகளை பகிரங்கமாக பொது அரங்குகளில் அனுமதிக்கக்கூடாது என்பதற்குத்தான் சென்சார்.

      //போர்னோகிராபி வந்தால் படம் ரிலிசானபின் கைது செய்யலாம். அதற்குமுன் சென்சார் செய்யவேண்டியது கிடையாது.//

      உண்மைதான்! குதிரை வெளியே ஓடியபின் லாயத்தை பூட்டி விடலாம்.!!

  6. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // யுடியூபில் வேண்டும் ஆபாசத்தை பார்க்கலாம், அனைவர் கையிலும் செல்போன் அதில் யுடியூப் என்ற நிலை வந்தபின் சென்சார் எனும் காமடி எதற்கு? //

    நீங்கள்தான் காமெடி செய்கிறீர்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. வீடுகளில் யூ-ட்யூபிலோ, செல்பேசியிலோ ஆபாசத்தை கட்டுப்படுத்த எவ்வளவோ வழி உண்டு. ஆனால் திரைப்படம் சென்சாரால் கட்டுப்படுத்தப்பட்டால்தான் உண்டு. சென்சாரால் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நமது திரைப்படங்களில்தான் காமரூப உடலுலுக்கும் நடனங்கள் இன்னமும்கூட ”ஐட்டம் சாங்” என்ற பெயரில் பிரபலமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஆட்டத்தில் புகழ்பெற்ற சில்க் ஸ்மிதா கிட்டத்தட்ட தமிழ் திரையுலகை ஒரு காலகட்டத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை நினைத்துப்பார்க்கும்போது சென்சாரின் தேவை என்ன என்பது புரியும்.

    // சென்சாரை அகற்றினாலும் பெண்கள், குழந்தைகள் தியரையரங்குக்கு வரவேண்டுமெனில் ஒழுங்காக தான் படம் எடுக்கவேண்டும் என்பதை திரையுலகினர் அறிந்தே வைத்திருப்பார்கள். //

    இந்த காமெடிக்கு எப்படி சிரிப்பது என்றுதான் தெரியவில்லை. என்னவோ சென்சார் இருக்கும் இப்போது மட்டும் ஒழுங்காக படமெடுக்கவேண்டும் என்று அறியாமல் இருப்பது போலல்லவா இருக்கிறது உங்களது எதிர்வினை. பெண்களெல்லாம் இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கிவிட்ட இக்காலகட்டத்தில் தற்போதைய திரைப்படங்கள் இளைஞர்களை குறிவைத்தே எடுக்கப்பட்டு வருகிறது. சென்சார் மட்டும் இல்லையென்றால் இளைஞர்கள் மனதை இன்னமும் வக்கிரமாக்க என்னவும் செய்வார்கள் நமது திரையுலகினர்.

  7. Avatar
    paandiyan says:

    //அன்றைய அரசியல் உலகில் சக்தியாக உருவெடுத்து வந்த வைகோ தலைஎடுக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அன்று அவரிடம் டிவி இல்லாததும், மற்ற கட்சிகளின் டிவியில் அவர் காட்டபடாததுமே.//

    இருந்து இருந்தாலும் அப்படியே தக தக ன்னு மின்னி இருப்பாரு ? comedey??

  8. Avatar
    paandiyan says:

    //அமெரிக்காவில் திரைபப்டத்துக்கு ரேட்டிங் பெறுவது கட்டாயம் இல்லை//

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் இருக்கு. இங்கும் இருந்தா ஏன்னா? அங்க எக்கெடு கெட்ட என்ன? இங்கு எதற்க்கு அதன் காபீ?

  9. Avatar
    செல்வன் says:

    செல்போனில் பார்ப்பதைவிட பலமடங்கு ஆபாசம் குறைந்த குத்தாட்டங்களை 18 வயதுக்கு மேலானவர்கள் அரங்கில் பார்ப்பதில் என்ன கெடுதல் வந்துவிடும்? யுடியூபிலும் மற்ற தளங்களிலும் வருவதை எல்லாம் ஒப்பிட்டால் சிலுக்கு, ஷகிலா எல்லாம் ஒன்றுமே கிடையாது. ஆபாசத்தை போர்னோகிராபி சட்டம் மூலம் தடுங்கள். போர்ன் படங்களில் நடிப்பவர்களை விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் தாராளமக கைது செய்யலாம். ஆனால் சென்சார் இருக்க கூடாது. ஜனநாயக நாட்டில் இரண்டையும் செய்ய முடியும்

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      திரும்பத்திரும்ப நீங்கள் சொல்வதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். வீடுகளில் இணையதளங்களில் வரும் ஆபாசங்களை ஒரு மென்பொருள் மூலமாக தணிக்கை செய்ய முடியும். அதன்மூலம் சிறார்கள் ஆபாச தளங்களை பார்க்க இயலாமல் தணிக்கை செய்யலாம். புரிகிறதா ? இணைய தளங்களையோ செல்பேசிகளையோ தணிக்கை செய்யும் முறை ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது. பயன்படுத்துவதும் படுத்தாததும் அவரவர் தேர்வு. ஆனால் திரைப்படங்களுக்கு நம்மிடம் தணிக்கை இல்லை. எனவே தணிக்கைத்துறை என ஒன்று இருப்பது அவசியமே. எந்த திரையரங்கும் உள்ளே வரும் ஒவ்வொருவரையும் 18 வயதுக்குட்பட்டவரா என்று சோதித்துக்கொண்டிருக்கப்போவதில்லை.

  10. Avatar
    Dr.G.Johnson says:

    திரை துறையும் அரசியலும் என்பது ஒரு அருமையான பொருளாகும்( interesting subject ). இது தமிழகத்தைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. இன்று தமிழ் மக்களின் அரசியல் என்பது திரைப்படத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையன்று. கட்டுரையாளர் கூறியுள்ளதுபோல் இந்தியாவிலேயே,( ஏன் உலகிலேயே ) திரைப்படங்களின் வாயிலாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பி, இன உணர்வை வளர்த்து தமிழக மக்களிடயே ஒரு பெரும் புரட்சியை உண்டுபண்ணி ஆட்சியையும் பிடித்த பெருமை அண்ணாவையும் கலைஞரையும் சேரும். இவர்கள் இருவரும் திரைக்கதை வசனம் எழுதினர். நாடகங்களிலும் நடித்தனர். இவர்களுக்கு உறுதுணையாக் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்., இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்., நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி, கலைவாணர் என். எஸ்.கே . ஆகிய பிரபலமானவர்கள் நடிப்பின் மூலமாக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தனர். அதன்பின்பு அண்ணாவுக்குப் பின் கலைஞர் தலைமையில் அந்த கொள்கைப் பரப்பு திரைப்படங்கள் மூலம் தொடர்ந்தாலும் ஒரு முக்கியமான நேரத்தில் எம்.ஜி. ஆர். கழகத்தை விட்டு வெளியேறியபின் கட்சி இரண்டாக உடைந்து பலவீனம் ( ஓரளவு ) ஆனது. இருப்பினும் இன்று வரை தமிழக மக்கள் இந்த இரண்டு கட்சிகளையே தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். இன்று ஒரு நடிகை முதல்வராக தமிழகத்தில் இருக்க முடியும் என்பதைப் பார்த்த இதர கதாநாயகர்கள் ( டி. ராஜேந்தர் , விஜயகாந்த், சரத்குமார் ) தங்களையும் எம்.ஜி. ஆர். போன்று எண்ணிக்கொண்டு அரசியல் கட்சிகளை உருவாக்கியுள்ளனர் . இவர்களில் விஜயகாந்த் அடுத்த முதல்வர் ஆகலாம் என்று கனவு காண்கிறார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழக முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ ,க .முயல்வதாகவும் செய்திகள் உள்ளன.

    அவர் ஒரு புதிய கட்சி உருவாக்கினால் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பு உண்டாகும். காரணம் தமிழக மக்களின் அரசியல் வாழ்வே இந்த திரைப்பட நடிகர்களைச் சூழ்ந்துள்ளதாக மாறி வருகிறது. தமிழக மக்களின் இன்றைய் நிலை திரைப்படக் கலாச்சாரத்துடன் பின்னிப் பினந்துள்ளதைக் காணமுடிகிறது. இதை உணர்ந்திருந்த பிரதம வேட்பாளரான மோடி தமிழகம் வந்தபோது ரஜினியை அவருடைய இல்லம் தேடிச் சென்றுள்ளார். இந்தக் கட்டுரை தணிக்கைத் துறை பற்றி இருந்தாலும், திரைதுறையும் அரசியலும் என்று தலைப்பிட்டுள்ளதால் இதை நான் பதிவு செய்துள்ளேன் ..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to செல்வன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *