7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்

This entry is part 25 of 41 in the series 23 செப்டம்பர் 2012

 

ஆகஸ்டு 30லிருந்து பதினோரு நாட்கள் மதுரை தமுக்கம் வளாகத்தில் நடைபெற்ற 7வது மதுரைப் புத்தகத்திருவிழா கடந்த 9ம்தேதி முடிவுற்றது.

’திரு’ என்ற தமிழ்ச்சொல் தன்மதிப்பை இழந்து வருகிறது. ஒரு புத்தக விற்பனையைக்கூட திருவிழாவென்றா அழைக்கவேண்டும்? புத்தக விழாவென்றால் என்ன குறை? பணத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோமோ அப்படி தமிழ்ச்சொற்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும்.

மதுரை, தன்னை ”மாநகரம்” என்றழைத்துக் கொண்டாலும் மக்கட்தொகை நெருக்கமில்லாவூர். எனினும் புத்தகத்திருவிழாவில் நல்ல கூட்டம். விற்பனையும் கூட.

11  நாட்களும் பிரபலமான மேடைப் பேச்சாளர்களும் அரசியல்வாதிகளும் மாலையில் கலையரங்கில் பேசினார்கள். இரு நாட்கள் அவ்விழாவிற்குச் சென்றேன்.  ஓர் நாள் காலை மாணாக்கருக்குப் பேச்சுப்போட்டி நடைபெற்றது; மாலையில் மதுரைப் பேராசிரியரும் திரைப்பட நடிகரும் ஜெயா தொலைக்காட்சிப் புகழ் முனைவர் கு. ஞான சம்பந்தன் பேசினார். இன்னொரு நாள் ஆரோவொருவர் பேசினார். அவ்விழா காவல்கோட்டம் ஆசிரியருக்குப் பாராட்டு விழா.  அவருக்கு  எங்கெங்கும் பாராட்டு மழைதான். அன்று ஒரு வாசகர் சாமியே ஆடிவிட்டார்.  அந்நாவல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருவதை அவர் அறிவாரென நம்புகிறேன். எனினும் விழா நடாத்துவோர் மாற்றுக் கருத்துடையோர் வாராவண்ணம் முன்னெச்செரிக்கைக் கொண்டோராகவேயிருக்கின்றனர்.  ஊரெல்லாம் புகழும்போது, நாமும் கூட்டத்தோடு சேர்வதுதான் நன்று என்று பொதுமக்கள் நினைக்கட்டும். இலக்கியத்திறனாய்வாளர்களுமா?

முனைவர் கு. ஞான சம்பந்தனின் பேச்சின் தலைப்பு ‘பயணம்’.  கூட்டம் நகைச்சுவையை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது; நின்றது; சலனப்பட்டது. ஒரு பெட்டி நிறைய துணுக்குச் செய்திகளும், நகைச்சுவை சம்பவங்களும் வைத்திருப்பார் போலும்! எல்லா மேடைகளிலும் அவையே.  ஓரிடத்தில் கேட்டவர் இன்னொரு இடத்திலும் கேட்டால் என்ன நகைச்சுவை அவருக்கு வரும் என்று நினைத்ததில் எனக்கும் நகைச்சுவை உண்மையிலேயே வந்தது!  நான் இதற்கு முன் இவரைக் கேட்டிருக்கிறேன்.  தொலைக்காட்சி பட்டிமண்டபங்களிலும் சில நிகழ்ச்சிகளிலும். அந்த துணுக்குச்செய்திகளையும்தான் !

அதிலொன்று:  சென்னையில் ஒரு மதுரைக்காரர் பேருந்தில் பயணம் செய்தார். நடத்துனரிடம் நூறு உருபாத்தாளை நீட்டி பயணச்சீட்டுக் கேட்க நடத்துனர் சீட்டைக் கொடுத்தபின், மீதிப்பணத்துக்கு சில்லரையில்லை கொஞசம் பொறுங்கள் என்றார். மதுரைக்காரர், ‘பையக் கொடுங்கள்’ என்றாராம். நடத்துனர் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றவுடன் இவர் பையக் கொடுத்தால் போதும் என்ற மீண்டும் சொல்ல நடத்துனர் ”என் பையை ஏன் இவன் கேட்கிறான்?” என்று கலவரப்பட்டாராம். அப்போது இன்னொரு மதுரைக்காரப்பயணி, ‘பைய’ என்றால், மெதுவாக என்று மதுரையில் பொருள் என்று விளக்கினாராம்.

‘பையபைய பறந்துவா!’ பாலும்சோறும் தின்ன வா! என்று தாய் தன் குழந்தைக்கு அமுதூட்டும் பாட்டாக சிறார் தமிழ்ப்பாடநூலில் வரும் இப்பாடலைச் சிறுவயதிலேயே கற்று விட்டுத்தான் எல்லாரும் வாழ்க்கையில் நுழைகிறார்கள். அந்த நடத்துனர் ஓன்றாவது வகுப்புக் கல்லாமல் வேலைக்கு வந்திருப்பாரா?  ஆனால் முனைவர் கு. ஞான சம்பந்தன்  மதுரைக்காரர்களுக்குத்தான் தெரியும் என்று நம்புகிறார். அடுத்து அவர் பேசியதுதான் என்னை வருத்தத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது. மதுரையில் ஞான சம்பந்தர் நிறுவிய மடத்தைப்பற்றிச் சொல்லும்போது ‘சமணர்கள் தீவச்சுப்புட்டானுக!’ என்றார்.

இவர் ஒரு மதுரைக்கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியர் என்ற அறிகிறேன். ஒரு தமிழாசிரியர் வாயிலிருந்த வரும் சொற்கள் எப்படியிருக்க வேண்டும்? அதுவும் பொது மேடையில்? அதுவும் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்தோரைப்பற்றிப் பேசும்போது!?  சமணர்களில்லாவிட்டால் தமிழன்னையில் கழுத்து மூலியாகத்தான் இருக்குமென்பது தமிழுலகம் ஒத்துக் கொண்ட உண்மை. அப் புத்தகவிழாவில் நான் வாங்கிய நூல்களுள் தெ. பொ.மீயின் ‘சமணர்களும், சம்பந்தரும்’ ஒன்று. அதில் மாபெரும் தமிழறிஞரும் உ வே சாவின் ஆசிரியருமான தெ பொ மீ முன்னுரையில் சொல்வதைக்கேளுங்கள்.

”சம்பந்தர் பாடல்களை ஆராய்வதோடு அவர் வரலாற்றைப் பின்வந்தார் எவ்வாறு பாடியுள்ளார் என்றும் ஆராயவேண்டுவது ஆயிற்று.  கதை கூறுவாரின் போக்கோடு ஒட்டி முதலிற் கதையை ஆராய்வதே பொருத்தமாதலின், அவ்வாறு விளக்கி உள்ளேன்.  ஆதலின், அங்குக் கூறுவன எல்லாம் என்னுடைய கருத்தென்று கொள்ளுதலாகாது என மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.  யான் சமணன் அல்லனாதலால் சில போது நடுநிலை தவறினேன் என்று எண்ணிவிட வேண்டா. ”

இவரன்றோ தமிழாசிரியர்! தமிழென்றால் கண்ணியம் என்று இவரைப் படித்தாலோ கேட்டால் புரிய வரும். பலர் ‘ஏதோ வட்டாரத் தமிழைப் பேசிவிட்டால் பெரும் தமிழ்த்தொண்டு ஆற்றிவிட்டதாக நினைத்து மேடையிலே நல்ல தமிழைக் கைகழுவி விட்டு வட்டாரத் தமிழைப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பேரா சாலமன் பாப்பையா, முனைவர் கு. ஞான சம்பந்தன் போன்றோர் எப்போதுமே மேடைகளில் மதுரைத் தமிழை (அதாவது கொச்சைத்தமிழ் சொற்களும் உச்சரிப்பும்கூடி எ.கா…அவர்கள் என்ற சொல் ’அவியிங்க” என்றாகும். இஃதொரு பெருமையா!?) மட்டுமே பேசுகிறார்கள். பேராசிரியர்களான. இவர்களின் தமிழைக்கேட்டு இன்புறத்தான் வருகிறோம். இவர்களே கொச்சைகளை மேடையில் அவிழ்த்துவிட்டால் எப்படி? நல்ல தமிழில் பேச முடியாதா? சங்கப்பாடல்களுக்கு விளக்கங்கள் எழுதும் முனைவர் கு. ஞான சம்பந்தனுக்கும், தொலைக்காட்சிகளில் திருக்குறளுக்கு  பொழிப்புரை வழங்கும் பேரா சாலமன் பாப்பையாவுக்கும் நல்ல தமிழ் நன்றாகவே வரும். தமிழாசிரியர்கள் மாணாக்கரும் பிறரும் நல்ல தமிழை அறிய என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் அவர்களும் செய்து பிறரையும் செய்யத் தூண்டவேண்டும்.. இல்லையென்றால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். தமிழை மேடையில் அழித்தோர் தமிழாசிரியர்களே! என்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் வைக்கப்படும்.

முற்றிற்று.

Series Navigationசுபாவம்கவிதை
author

காவ்யா

Similar Posts

15 Comments

  1. Avatar
    வில்லவன்கோதை says:

    பாப்பையாவுக்கும் ஞானசம்பந்தனுக்கும் நல்ல தமிழ் வருமென்றாலும் வட்டார வழக்கும் துணுக்கு மூட்டையும் வாரி வழங்குவதுபோல் நல்ல தமிழ் வாரி வழங்காது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
    உங்கள் கருத்து எனக்கும் உண்டு.
    வில்லவன்கோதை

  2. Avatar
    R Venkatachalam says:

    அன்புள்ள காவ்யா அவர்களுக்கு, சென்ற இதழில் மிக காராசாரமாக எல்லாரும் எழுதி இருந்தார்கள் மலர் மண்ணன் எழுதியதைத்தொடர்ந்து. அடியேன் கடைசியில் ராஜாஜியைப்பற்றி எழுதப்பட்டிருந்த கருத்தை மறுத்து எழுதியது தங்கள் பார்வையில் அகப்படவில்லை என நினைக்கிறேன். அல்லது இந்த ஆள் திருந்தாத கேஸ் என பதில் கூறுவதைத் தவிர்த்து விட்டீர்களோ என்னவோ தெரியவில்லை.

    மதுரை புத்தகக்கண்காட்சியைப்பற்றி எழுதி உள்ளீர்கள். நான் பெங்களூரில் வசிப்பவன். ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஏக்கப்பெருமூச்சு ஏனென்றால் நான் எழுதி வெளி இட்டுள்ள திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை புத்தகத்தின் பிரதிகள் என் வீட்டிலேயே தூங்கிக்கொண்டு உள்ளன. பல நாளிதழ்கள் வார இதழ்கள் ஆகியவற்றிற்கு விமர்சனம் செய்வதற்கு அனுப்பிவைத்தேன். தினத்தந்தி ஒன்றைத்தவர ஒருவரும் விமர்சனம் வெளியிடவில்லை. தினத்தந்தி விமர்சனம் மிகச்சுருக்கமாக இவ்வாறு இருந்தது:
    திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் வெளி வந்துள்ளன. சில குறள்களுக்கு தமிழறிஞர்கள் மாறுபட்ட உரைகளை எழுதியுள்ளனர்.

    இதுபற்றி ஆய்வு செய்த பேராசிரியர் அர.வெங்கடாசலம் 584 குறட்பாக்களைக் கண்டறிந்து, அவற்றை திருவள்ளுவர் எத்தகைய பொருளில் எழுதியிருப்பார் என்பதை விளக்கமாக கூறுகிறார், “திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல்பார்வை’ என்ற இந்த நூலில். திருக்குறள் பற்றி ஆய்வு செய்வோர் படிக்க வேண்டிய புத்தகம்”

    இவ்விமர்சனத்தைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று பேர் வாங்கினார்கள். ஆனால் அவர்களில் எவரும் ஆய்வாளர்களல்லர். விமர்சனம் ஒரு தகவலாக மட்டுமே அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. இவ்விமர்சனத்தைப்பற்றி என்னுடைய ஆதங்கம் என்னவெனில் உளவியல் பேராசிரியனாகிய நான் திருக்குறளைப்பற்றி எழுத நேர்ந்ததன் காரணமே இப்போது உள்ள புரிதலில் திருக்குறள் வாழ்க்கைக்கு பெரிதும் பயன்படவில்லை என்று நான் கருதியதால்தான். அது தமிழில் எழுதப்பட்டதால் ஒரு தமிழ் இலக்கியமென கொள்ளப்பட்டுவிட்டது. உண்மையில் அது ஒரு உளவியல் நூல். அதிலும் ஆன்மிகமும் உளவியலும் கலந்த நூல். இப்படி ஒரு நூல் உளவியலில் இல்லை என்பது நானறிந்தவரை உண்மை. வாழ்க்கையே வழிபாடு என்பதுதான் அதன் மையக் கருத்து. ஆகவே எல்லா தமிழர்களும் படித்து தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய நூல் இந்தக்காரணத்திற்காகத்தான் நன் அதனை எழுதினேன். இந்த செய்தி தமிழர்களைச்சென்று அடையவேண்டும். இது தொடர்பாக எனக்குத் தாங்கள் ஒரு உதவி செய்ய இயலுமா?
    என்னுடைய புத்தகத்தைப்படித்து அதனைப்பற்றி நாலு வரிகள் திண்ணையில் எழுத இயலுமா? தங்களுக்குச் சம்மதமெனில் தங்களுடைய முகவரியை என்னுடைய மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள். நான் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். என்னுடைய மின் அஞ்சல் prof_venkat1947@yahoo.co.in ph: 09886406695
    அர.வெங்கடாசலம்

    1. Avatar
      K A V Y A says:

      Embarrassing !

      I am not what you think I am, Sir. I am just an amateur, dabbling in some history, some Tamil literature, some sociology I mean, Tamil centric, some religion, taking undue advantage of the generosity of Thinnai readers. I should not be taken seriously by professionals like you.

      However, I would like to read your book; but I will pay for it. I have bought nearly 40 books in Madurai Fair much to the dismay of my better half. I defended my lavishness by pointing out that Life is short Art is long.

      One of the books is by Pappa, who will soon grace the pages of Thinnai. I mean I am preparing an essay on her – a marvelous woman with all social and personal graces ! Every Tamil ought to know her.

      Who is your publisher? If they are at Chennai or anywhere in TN, or in New Delhi, I can go to them and buy your book directly. I hope your polishers will be present in the next Book Fair at Chennai usually held during Pongal season. I have many reasons to travel frequently to Chennai and will visit the Book Fair next year. I will write about the effects, either positive or negative, you book made upon me. Thank you.

      1. Avatar
        R Venkatachalam says:

        Dear Kavya madam,
        I am interested only in “I will write about the effects, either positive or negative, you book made upon me.” I will send the book to you. Since my book was on a often repeated topic and I have not written any book in Tamil I could not get a publisher.Therefore I have published it myself. The book is available only with me. I will send a copy of the book to you. Please give me your address.
        With regards,
        R.Venkatachalam

  3. Avatar
    punaipeyaril says:

    தமிழை மேடையில் அழித்தோர் தமிழாசிரியர்களே! என்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் வைக்கப்படும்.– நிகழ்காலத்திலேயே அப்படித்தான்.. இவக சொல்றாக.. அவங்கே கேட்குறாகளா… என்பது தான் தமிழ் என்று ஆகி விட்டது. பேசினா சிரிக்கனும்… அது தான் இவங்களுக்கு தெரிஞ்சது… கருமாந்திரங்கள்…

  4. Avatar
    லெட்சுமணன் says:

    28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்

    பாடல் எண் : 704

    வெய்ய தீங்கிது வேந்தன்மேற்
    றெனும்விதி முறையால்
    செய்ய னேதிரு வாலவாய்
    எனுந்திருப் பதிகம்
    சைவர் வாழ்மடத் தமணர்கள்
    இட்டதீத் தழல்போய்ப்
    “பைய வே”சென்று பாண்டியற்
    காகெனப் பணித்தார்.

    எனவே `வெம்மையான இத்தீங்கு வேந்தன் மேல் ஆகும்’ என்ற விதிமுறையால், `செய்யனே! திருஆலவாய்’ எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் `சிவனடியார் வாழும் மடத்தில் சமணர் வைத்த தீ மெல்லச் சென்று பாண்டியனுக்கு ஆகுக’ என்றுபாடி ஆணையிட்டருளினார்.

  5. Avatar
    K A V Y A says:

    லெட்சுமணனின் பிரச்சினை ஒரு கட்டுரையைத் தவறாகப்படிப்பதிலேயே வருகிறது. கட்டுரைப்பொருள் தமிழ். வரலாறன்று. தமிழ்மொழியே.

    சமணர்கள் தீவைத்தனர் என்று சொல்லியிருக்கலாம். தீ வச்சுப்புட்டானுக என்று சொல்லல் ஒரு தமிழாசிரியருக்கு அழகன்று.

    மேலும், வரலாற்றையேப்பார்த்தாலும், அவரின் வழி தவறானதாகும். ஒரு ‘தீவிர ஹிந்து’ சம்பந்தர் சொன்னாரென்று சமணர்களை கொடியவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். அவரின் சஹ ஹிந்துக்கள் கைதட்டி மகிழவார்கள். ஏனென்றால், எந்தவொருவன் தன் மதத்தின் தீவிரவாதியாக இருக்கின்றானோ, அவன் பிறமதங்களை இழிவு படுத்தியே தன் மதத்தை வளர்க்கப் பார்ப்பான். அதுதான் இங்கும். நாமெவரும் அன்று என்ன நடந்தது என்று சொல்லவியலாது. நாம் பார்க்கவில்லை. சம்பந்தர் எழுதிவைத்தார். சமணர்கள் எழுதி வைத்தனரா? எழுதிவைத்திருந்தால், இவர் சொல்வது பொய்யா? அவர்கள் சொல்வது பொய்யா என்ற கேள்வியெழும். கண்டிப்பாக சம்பந்தர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள்.

    வழக்கில் இருவர்; ஒருவர்தான் ஆஜராகிரார். மற்றவர்கள் என்ன காரணத்தினாலோ ஆஜராகவில்லை. நீதிபதி ஆஜரானவர் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கினால் அத்தீர்ப்பு சரியாக இருக்குமா?

    சமணர்கள் அழிக்கப்பட்டனர். அல்லது விரட்டப்பட்டனர். அந்நிகழ்ச்சியை வரலாறாக எழுதக்கூட செய்யவிடாமல் விரட்டப்பட்டனர். இப்படியிருக்க சம்பந்தர் சொன்னதை மட்டுமே இழுத்துப்போட்டு வரலாற்றை ஜோடித்தால் எல்லாரும் ஒருவேளை தீவிர ஹிந்துக்களாகிவிடுவர் என்று நினைப்பு போலும் !

    ஒரு ஆசிரியர் மாணாக்கருக்கு வரலாற்றுப்பாடம் சொல்லித்தரும்போது எந்த பக்கமும் சாராமல் மாணாக்கரைத் தாமே ஒரு முடிவுக்கு வரச்செய்ய உதவும்படி எல்லாக்கருத்துக்களையும் அவர்களுக்கு விளக்க வேண்டும். அவ்வளவுதான். மாறாக அவரே ஒரு பக்கம் நின்று மற்றொரு பக்கத்தைத் தூடனை செய்தால், அவர் மாணாக்கரை உருவாக்க மாட்டார். தீவிரவாதிகளைத்தான் உருவாக்குவார்.

    சமணர்களை இழித்துரைக்கும் இவரின் மாணாக்கர்களை நினைத்தால் மனம் பதறுகிறது.

  6. Avatar
    knvijayan says:

    உ.வெ.சாவின் குருநாதர் திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.தமிழறிஞர் தெ.பொ.மீ அவர்களோ உ.வெ.சாவின் காலத்திற்கு பிற்பட்டவர்.காவ்யா அவர்களுக்கு இந்த குழப்பம் அடிக்கடி வந்துவிடுகிறது.

    1. Avatar
      Kavya says:

      குழப்பம் என்பதைவிட அறியாமை என்பதே சரி.

      நன்றி உண்மையாக இருக்கும் பட்சத்தில்.

  7. Avatar
    லெட்சுமணன் says:

    *//லெட்சுமணனின் பிரச்சினை ஒரு கட்டுரையைத் தவறாகப்படிப்பதிலேயே வருகிறது. கட்டுரைப்பொருள் தமிழ். வரலாறன்று. தமிழ்மொழியே.//*

    அட கடவுளே!. நான் உங்கள் கருத்துக்கு ஆதரவா தமிழ் மொழி குறித்தே அந்த பாடலை குறிப்பிட்டேன். நானும் வரலாற்றுக்குள் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. பொதுவாக போட்டால் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து விளக்கம் எதுவும் போடாமல் அடைப்பில் ““பைய வே” என்று குறிப்பிட்டேன். வழக்கம் போல ஆரம்பிச்சுட்டீங்க.

    நான் சொல்ல வந்தது ““பைய” என்ற சொல் சம்பந்தர் காலம் தொட்டே புழக்கத்தில் உள்ளது எனவும், அச்சொல் மதுரை தவிர பிற வட்டாரங்களில் (சென்னை உட்பட) பயன்படாவிட்டாலும் புரிந்து கொள்ளப்படும் என்றே கூற விரும்பினேன்.

    *//வழக்கில் இருவர்; ஒருவர்தான் ஆஜராகிரார். மற்றவர்கள் என்ன காரணத்தினாலோ ஆஜராகவில்லை. நீதிபதி ஆஜரானவர் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கினால் அத்தீர்ப்பு சரியாக இருக்குமா?*//

    This situation arised when defendant willfully absented from proceedings or not attending court inspite of servfice of summons of the court ,on date fixed then the court can proceed exparte against the defendant and fix other date for exparte hearing and if the defendant further absenting from the proceeding the court shall pass a decree/or pass judgement against the defendant on that date .The defendant can also entitled to file application for setting aside exparte judgement/decree on showing sufficient cause of non appearance before the court.

    “Ex-Party” தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு.

    1. Avatar
      Kavya says:

      நான் எழுதியது மறுபடியும் புரிய வில்லை; அல்லது தவறாகப் புரியப்பட்டிருக்கிறது.

      வாதியிடம் வாதமிருக்கிறது. பிரதிவாதியிடமும் உண்டு. ஆனால் வாதியின் கட்சி மட்டுமே கேட்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டால் அத்தீர்ப்பு தீர்ப்பன்று. அது சதி என்பதே நான் சொன்னது.

      இருவருக்கும் நோட்டீசு அனுப்பி, பின்னர் ஒருவர் மட்டுமே வந்து வாதிட, இன்னொருவர் நோட்டிசையை வாங்கியும் வராமலிருக்க, அல்லது நோட்டிசை ஏற்க மறுத்து வராமலிருந்தால் மட்டுமே நீதிபதிக்கு ex parte (ex party is wrong spelling) தீர்ப்பு வழங்க அதிகாரம். . ஆனால் சூழ்ச்சி செய்து அன்னோட்டீசை ஒருவருக்கு மட்டுமே அனுப்பி இன்னொருவர் பெறவிடாமல் தடுக்கப்பட்டு. பின்னர் அது நீதிபதிக்குத் தெரியவந்தால், அவர் மறு தீர்ப்பு வழங்கலாம்.

      சம்பந்தர் எழுதியது மட்டுமே இருக்கிறது. சமணர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் விரட்டியடிக்கப்பட்டது மட்டுமில்லாமல், அவர்கள் எழுதிய நூல்களையும் எரித்தார்கள்; எறிந்தார்கள் இந்த தமிழ்த்துரோஹிகள்.

      அவர்கள் எழுதிய எஞ்சிய நூல்களே நாலடியார்; சிறுபஞ்சமூலம்; நாண்மணிக்கடிகை; திருகடுகம் போன்றவை. அனைத்தும் நீதி நூல்கள்.
      சமணர்களுக்கு எதிராக நல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டு அழிக்கப்பட்டார்கள். இச்சதிக்கு காவியுடை அணிந்த முற்றும் துறந்த முனிவர் சம்பந்தர் தலைமை தாங்க, சதியை நடாத்திவர்கள் பாண்டியனின் துணைவி மங்கையர்க்கரசியார், மற்றும் பரஞ்சோதி.

      சம்பந்தர் தமிழுக்கு எதிராகவும் நின்றார் எனலாம். அவர் சமணர்களைக் கீழ்த்தரமான தமிழிலும் திட்டியவர்.

      தமிழக வரலாறு வெற்றியடைந்தோராரால் எழுதப்பட்டது அவர்களுக்கு வசதியாக. அதைத்தான் நாம் படிக்கிறோம். அல்லது படித்துத்தொலைக்கவேண்டும் !

  8. Avatar
    SOMASUNDARAM says:

    Thiru.Kavya,have you seen any Thamizh professor or teacher in the book fair? I know, most of them never read any book after thier appointment.

  9. Avatar
    சான்றோன் says:

    காவ்யா அவர்களே…..

    சமணர்கள்தான் தமிழில் பாடினார்கள்…….ஞானசம்பந்தர் சைவப்பாடல்களை சமஸ்கிருதத்திலா பாடினார்? அவரும் தமிழில்தானே பாடினார்? உங்கள் துவேஷம் எல்லை மீறுகிறது…….வடிவேலு பாஷையில் சொன்னால் கொடுத்த காசுக்கு மேல கூவுறது என்பது இதுதான்…….

    1. Avatar
      Kavya says:

      அவரெழுதிய சைவப்பாடல்கள் இங்கு விவாதத்தில் இல்லை. அவரெழுதிய சமணர்களை இழித்துரைக்கும் தமிழ்ச்சொற்களே விவாதத்தில் உள.

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *