களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

This entry is part 15 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

kalandhai peer mohammed

ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது.

 

சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே வருமான அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள், உள்ளீடற்ற வெறுமை ஆகியவை மற்ற மதத்தவரிடமிருந்து எந்த விதத்திலும் வேறானதல்ல என்ற ஜன்னலே இந்தக் கதையில் திறக்கிறது.

 

இஸ்லாமியர் அனைவரும் பிற கலாச்சாரங்களை வெறுப்பவர் போன்ற ஒரு பிம்பத்தைப் பல வலது அமைப்புக்கள் கட்டமைக்க முயல்வதை நாம் காண்கிறோம். இதன் நம்பகத்தன்மையை ஆய்ந்து அறியும் தேடலுடன் அனேகமாக யாருமே போவதில்லை.  இஸ்லாத்தில் நண்பர்கள் இருப்பவருக்கு மட்டுமே தெரியும் அவை கட்டுக்கதைகள் என்பது. இந்தக் கதையில் பல இடங்களில் நாம் சர்வசாதாரணமாக பிற கலாச்சார பேச்சு வழக்குப் புகுந்து விடுவதைப் பார்க்கிறோம். இந்த சம்பாஷணை ஒரு உதாரணம்:

 

—————–

“இல்லப்பா . பழைய பள்ளி புதுப்பள்ளின்னுல்லாம் எங்கிட்டே சொல்லாதப்பா. நான் அங்கேயே போறேன்” என்றபடி மீரான் தந்த ரூபாயையும் அத்தர் பாட்டிலையும் எடுத்து அவனிடம் நீட்டினான் காதர்.

 

 

 

“இல்லேயில்ல காக்கா. நீங்க அதை ஏன் தாரீங்கோ. நல்ல நேரமா அதுவும் வாங்கின சீதேவிய அப்படித் திருப்பிக் கொடுக்காதீங்கோ. நான் உங்கள வற்புறுத்தல. சும்மா சொன்னேன்” என்று பதறியவனாக காதரின் கையை அப்படியே மடக்கி அவன் சட்டைப்பையில் பணம் விழும்படிச் செய்தான்.

 

——————

கதை ஒரு எடுபிடியாகக் கடையில் வேலை செய்யும் காதர் தன் அம்மா மீது வைத்திருக்கும் அபரிமிதமான பாசம். சற்றே அதிகப்படியாகத் தோன்றுமளவு ஒரு குழந்தைத்தனாமான வயதுக்குப் பொருந்தாத பிடிப்பு. கதையின் முடிவில் அம்மாவின் ‘நற்றாளை’ அவன் பணியக் குனியும் போது அப்படியே சரிந்து விடுகிறான். தாயின் காலில் மட்டுமல்ல யார் காலிலும் யாரும் விழுவது இஸ்லாமிய வழிமுறைக்கு முற்றிலும் முரணானது. தடை செய்யப் பட்டது. ஆனால் சுற்றியுள்ள கலாச்சாரத்தின் தாக்கத்தால் மட்டுமே காதர் இப்படி செய்திருக்க வேண்டும்.

 

வெளிநாட்டுவாசிகள் அமெரிக்காவின் அய்யரோ அல்லது கத்தாரின் மீரானோ உறவுகளுக்குத் தருவதெல்லாம் வெறும் சாக்லேட்டுகள் மட்டுமே. ஆனால் கட்டாயம் கொண்டு வந்து திணிப்பார்கள். இப்படி வருமான வர்க்க அடிப்படையிலான சமூக அடுக்குகளை இஸ்லாமியப் பின்னணியில் சித்தரிக்கும் கதை இது.

 

இலக்கியம் நமது பன்முகமான பண்பாட்டு அடையாளங்களைக் காட்டி நம் மனத்தை விரியச் செய்வது. களந்தையின் கதை அந்த அடிப்படையில் என்னைக் கவர்ந்தது.

 

Series Navigationகாப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்அறிவோம் ஐங்குறு நூறு
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    BSV says:

    நான் எப்போtதெல்லாம் சிறந்த சிறுகதைகள் என்ற தொகுப்பை – எவர் போட்டாலும் – எடுத்துப் பார்க்கும்போது அங்கு கண்டிப்பாக களந்தை பீர்முகமதுவின் சிறுகதையொன்று இடம் பெற்றிருக்கும். இங்கே விமர்சிக்கப்படும் சிறுகதையை நான் படிக்கவில்லை. நான் படித்தவரைக்கும், இங்கே களந்தை பீர்முகமதுவைபப்ற்றி சொல்லப்படுவது சரியான புரிதலில்லை.

    எழுத்தாளர்கள் தங்கள்தங்கல் நிலைக்களன்களாக‌ எடுத்துக்கொள்வது தாங்கள் பிறந்த வளர்ந்து வாழும் சமூகச்சூழ்நிலைகளே. தலித்து எழுத்தாளர்கள் தலித்து சமூகத்தைப்பற்றித்தானே எழுதுகிறார்கள். ஜோதிர்லதா கிரிஜாவின் கதாபாத்திரங்கள் அவர் ஜாதிக்குடும்பங்களின்படிதானே வருகிறார்கள்? (as far as I have read!)

    இப்படி இவர்கள் செய்வதற்கு ஆங்கிலத்தில் sincerityஎன்ப. சின்சியரிட்டி எழுத்துக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கி வாசகர்களை கதை என்றவொன்றை வாசிக்கிறோம் என்ற நினைப்பை ஒழித்து கதையோடு ஒன்றிவிடச்செய்யும் தன்மையைத் தரும். அதே வேளையில், கற்பனைச் சூழ்நிலையை எடுத்தெழுபவருண்டு. மலேசிய எழுத்தாளர் முத்துலிங்கம் ஆப்கானிஸ்தான் கதையைப்படித்துப்பாருங்கள்.தாலிபானால் பொதுவிடத்தில் சாட்டையாலடிக்கப்பட்டு தூக்கிலிடப்படும் காதலரைப்பற்றியும் அக்கூட்டத்தில் அவரின் காதலியும் நின்று எவருக்கும் தெரியாமல் தனக்குள்ளேயே விம்முவதும் (அவர்தான் காதலி என்று எவருக்கும் தெரியாது) காட்சிகள் கொண்ட சிறுகதை

    எனவே களந்தை பீர்முகமது இசுலாமியக்குடும்பங்களையே தன் நிலைக்களனாகக் கொண்டது ஏதோ இசுலாமியர்களுக்கோ இசுலாத்துக்கோ வக்காலத்து வாங்குகிறார் என்ற நினைப்பை ச்தயானந்தன் தருவது ஏற்புடைத்தன்று !

    களந்தை பீர்முகம‌துக்கு அது ஒரு குடும்பம் மட்டுமே. அதன் பாத்திரங்கள் எக்குடுமப்த்திலும் இருக்கும் எனப்துவே உண்மை. மேலும், அவர் காட்டும் இசுலாமியக்குடும்பம் தமிழ்க்குடும்பம். தங்களையறியாமலே அவர்கள் தங்களைச் சுற்றி வாழும் மக்களின் வாழ்க்கை கலாச்சாரக்கூறுகளைக்கொண்டிருப்பர் எனபது இவரின் கதைகளின் வெளிப்படும். நாமும் காணலாம்.

    இவர் மட்டுமன்று; பொதுவாக எவரின் சிறுகதைகளின் காட்டப்படும் குடும்பங்கள் பொதுக்குடும்பங்களே. ஏதோ ஒரு identity இல்லாமல் ஒரு குடுமபம் இருக்காது: ஜாதி, மதம், இனம் என்று. எனவே எங்கு பிறந்து வளர்ந்தார்களோ அதை இவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். Don’t read too much into their choice. ஓர் இசுலாமியக்குழந்தைக்கு பசியெடுத்தால் அழும். வேறு குழந்தைக்குப் பசியெடுத்தாலும் அழும். என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை :-(

    களந்தை பீர்முகமது ஒரு universal writer. There is deep rooted universality in all his short stories. தயை செய்து இவரை இசுலாமிய எழுத்தாளர் என்று சொல்லி விலக்காதீர்கள்.

    இவரின் கதைகளைப்படிப்பதற்கு உஙக்ளுக்கு வேண்டியது திடமனது. இல்லாவிட்டால் அழ அழ வைத்துவிடுவார். கதை அரைமணித்துளியில் வாசிக்கிறீர்கள் என்றால், அவ்வரைமணித்துளியில் உங்களை பீர்முகமதுவுக்கு கடன் கொடுத்துவிடுகிறீர்கள். அவர் உங்கள் மனத்திலேறி அடி அடி என்று அடித்து அழவைப்பார். அப்படியானது அவரின் கதையின் போக்கு. இது கற்பனையே இல்லை என்று அடித்துச் சொல்வீர்கள். பீர்முகமதுவின் எழுத்துத்திறமைக்கு அப்படிப்பட்ட power. What is his age? His understanding of human mind will beat even a veteran psychologist hollow! Surprises unlimited for me when reading him.

    தற்கால தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு வாராது வந்த மாமணி இவர். An extraordinary writer of talent. கண்டிப்பாகத் தேடிப்பிடித்து படியுங்கள்.

    இசுலாமாம், சிறுபான்மையினராம் – இச்சொல் அலங்காரங்கள் நமக்கு வேண்டாம் நண்பர்களே !

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *