அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 42 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஸ்ருதி ரமணி

ஏ, பாரதி…!
பாட்டுத் திறத்தாலே
இவ்வையத்தைப்
பாலித்திட முயன்றவனே
நீ விட்டுச் சென்ற
அக்கினிக் குஞ்சை
நாங்கள் இன்று
தேடிக் கொண்டிருக்கின்றோம்
வீரத்தைப் பறைசாற்றிய அது
இன்று எங்களின் அவசியத் தேவை
கொன்றழிக்கும் கவலையெனும்
குழியில் வீழ்ந்து நாங்கள்
குமைந்து கொண்டிக்கிறோம்
இன்று புதிதாய்ப் பிறந்தோமென
உன் மக்கள் எண்ண வேண்டுமெனின்
திரும்பி ராமல் இங்கே
தீமைகள் அழிய வேண்டும்
நீ உரைத்தது போல்
மடமை, சிறுமை, துன்பம், பொய்
வருத்தம் நோவு இவை யாவும்
இன்னும் இங்கே
தொலைந்து படவில்லை!
கடமை செய்து களிப்புற
எங்கள் கண்கள் இன்னும்
திறக்கப்படவில்லை
ஊருக்கு நல்லது சொன்ன உன்னிடம்
நாங்கள் கேட்பது இதுதான்
எங்கே உனது அக்கினிக் குஞ்சு…?
காணி நிலம் கேட்டவனே!
போகிற போக்கைப் பார்த்தால்
ஆறடி மண்ணே எங்களுக்கு
அநிநியமாகிவிடும்
போலிருக்கிறதே…!
பாஞ்சாலி சபதத்தில்
பாரதம் சொன்னவனே…
உனது சொந்த பாரதத்தின்
சோக நிலை இதுதான்
இந்த சோக பாரதம்
புழுதியில் எறியப்பட்ட வீணையாய்
புதுமை ராகத்திற்குத்
தவித்து நிற்கிறது
ஞான ரதத்தை
நடத்திக் காட்டியவனே
எங்களின் கால ரதம் இங்கே
கண்மண் தெரியாமல்
கடப்பதை நீ அறியமாட்டாய்
இங்கே
தெளிந்த நல்லறிவிருந்தும்
திண்ணய நெஞ்சமில்லை பலருக்கு
எனவேதான் யாரும்
நல்லதே நினைப்பதில்லை
எழுதியதையெல்லாம் கூடவே
எடுத்துச் சென்றவனே
திரும்பவும் அவற்றை நீ
தருவதெப்போது?
நாங்கள் கோருகிறோம்
நீ மீண்டும் புறப்பட்டுவா
இல்லையெனில் உனது
அக்கினிக்குஞ்சை எங்களுக்கு
அடையாளம் காட்டு…!

——————————————————

Series Navigationஅரவம்குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *