தமிழ்

0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 10 in the series 11 மார்ச் 2018

தமிழின் தலைமையில்
தமிழ்மொழி விழா

‘என் புகழ் காக்க
என்னென்ன செய்தீர்’

கேட்டது தமிழ்

‘வானவில்லை நிமிர்த்தி
நட்சத்திரம் பறிப்போம்
கடல் சேர்ந்த நதிகளை
மலைகளுக்கு ஓட்டுவோம்’
சொன்னார் மாணவர்

‘நான் தாய்மை பாடினால்
இரத்தம் பாலாகும்’
சொன்னார் கவிஞர்

‘செயலியாய்
ஒரு சாவி செய்தேன்
எந்த மொழியையும்
அது தமிழில் திறக்கும்’
சொன்னார் கணியர்

‘நான் அன்னம்
தமிழ்ப் பாலில் கலந்துவிட்ட
அந்நிய நீரைப் பிரிப்பேன்’
சொன்னார் சொல்வேந்தர்

‘நான் ஆயுத எழுத்து
என் மூன்று புள்ளிகள்
முத்தமிழைக் காக்கும்’
சொன்னார் சொல்லின்செல்வர்

‘நான் பேசினால்
பூ காயாகி கனியாகி
மீண்டும் பூவாகும்’
சொன்னார்
சொற்பொழிவாளர்

‘பூக்களை வாட்களாக்கிப்
போரிடுவோம்
பூமாலை செய்வோம்’
பேசினார் பட்டிமன்றப்
பேச்சாளர்

குத்துவிளக்காய்
ஒரு பெரியவர்
தீபம் மட்டுமே
தலை அசைத்தது
அருகில் வந்தது தமிழ்

‘உங்களின் சாதனையாய்
ஒன்றைச் சொல்லுங்கள் ஐயா’

பெரியவர் சொன்னார்

‘எங்கள் வீட்டில்
எல்லாரும் பேசுவது
தமிழ் மட்டுமே’

தன் தலைக் கிரீடத்தைப்
பெரியவருக்குச் சூட்டி
“எனக்கே தலைவன்
இவர்தான்’
என்றது தமிழ்

அமீதாம்மாள்

Series Navigationநீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *