ஊரடங்குப் பூங்கா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 19 in the series 3 அக்டோபர் 2021

 

ரோகிணிகனகராஜ்

 

————————————- 
ஒட்டுக்கேட்கக் கதைகள்
இல்லாமல் ஓய்வெடுத்துக்
கொண்டிருந்த மரத்தடி
சிமிண்ட்பெஞ்சுகள்…
 
யார்   வந்தாலென்ன
வராவிட்டாலென்ன என்று
விரித்தக்குடையை மடக்க
முடியாமல் விதியே
என்றிருந்த மரங்கள்…
 
வீசியக்காற்றில் கீழேவிழுந்து
ஆளரவமற்ற தைரியத்தில்
ஒன்றையொன்று
உரசியபடி  முத்தமிட்டுக்
கொண்டஇலைகள்…
 
மரங்களை 
மைதானங்களாக்கி
ஓடியாடும்  அணில்கள்..
சின்னச்சிணுங்களோடு
கொஞ்சி மகிழும்
சிட்டுக்குருவிகள்…
 
அணில்களோடு போட்டியிட்டு
பெஞ்சு பெஞ்சாக அமர்ந்து
பார்க்கும் காக்கைகள்…
கடல் பூங்காவில் துள்ளி
விளையாடும்
அலைக்குழந்தைகளை
போல மகிழும்இவைகளுக்கு
ஊரடங்கு முடிந்து உள்ளே
வரும் மக்களிடம்காண்பிக்க
கண்களின் ஓரத்தில்
கரைகட்டி  நிற்கிறது
சின்னதான ஒரு கோபம்….
——————————————
Series Navigationஇனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடுசீதைகளைக் காதலியுங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *