குரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு

This entry is part 8 of 37 in the series 2 செப்டம்பர் 2012

ஹெச்.ஜி.ரசூல்

 

இமாம் ஷாபி தரும் விளக்கமொன்று இவ்வாறு விரிகிறது. முசுக்கட்டை மரத்தின் இலை, அதன் சுவை ஒன்றுதான். ஆனால் அதை பட்டுப்புழு தின்றுவிட்டு பட்டுநூலைத் தருகிறது. தேனீ தின்றுவிட்டு தேனைத் தருகிறது. இவ்வார்த்தைகளை நாம் இச்சூழலில் பொருத்திப் பார்க்கலாம்.

 

குர்ஆன் ஒன்று. எனினும் காலந்தோறும் அதன் விளக்கவுரை நுட்பமாக விரிவாக பல்வித அர்த்தப் பரிமாணங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. காலம், அறிவுச்சூழல், பிரதேசம், பண்பாட்டின் இறுக்கம் சார்ந்து அதன் அர்த்தங்கள் அகலமும் கனமும் பெறுகின்றன. ஒற்றை முறையியல் ஆய்வு வெளியைத் தாண்டி இன்று வளர்ந்துள்ள பன்முகத்தன்மை மிக்க வரலாற்றியல், நிலவியல், சூழலியல், மானிடவியல், சமூகவியல், பல்துறை அறிவு சார்ந்த அணுகுமுறைகள் திறனாய்வுத்துறையில் முன் வைக்கப்படுகின்றன.

 

அரபு மூலங்களிலும், உலகின் ஏனைய மொழிகளிலும் இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாம் அல்லாத பிற அறிஞர்கள் இவற்றை அறிமுகம் செய்துள்ளனர். முசுக்கட்டை மரத்தின் இலை பட்டு நூலாக, தேனாக,  கஸ்தூரியாக உருமாறுவது இத்தகைய சார்பு நிலை கொண்டுதான் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

 

வரலாற்றின் மத்திய காலப்பகுதியில்  ஏறத்தாழ 630 ஆண்டுகளுக்கு முன்பதாகவும், திருக்குர்ஆன் முழுமை பெற்று கிட்டத்தட்ட 740 ஆண்டுகளுக்கு பின்பதாகவும் உருவான குர்ஆனின் விளக்கவுரை தப்சீர் இப்னுகஸீர் ஆகும். இதன் மூல ஆசிரியர் இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின்கஸீர் அத்தி மஷ்கீ. இவரது பிறப்பு இன்றைய சிரியாவிலும் வாழ்க்கை குடியேற்றம் டமாஸ்கஸிலும் நிகழ்ந்துள்ளது. கி.பி. 1300 க்கும் 1372 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இவரது நான்கு பாகம் கொண்ட குர்ஆன் அரபுமொழி விரிவுரையை மெக்காவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேரறிஞர் முஹம்மத் அலீ அஸ்ஸானி மூன்று பாகமாக சுருக்கி வெளியிட்டுள்ளார். இந்த அரபுமொழிப் பிரதியின் தமிழ் மொழிபெயர்ப்பே ரஹ்மத்  அறக்கட்டளை நிறுவனத்தார் வெளியிட்டிருக்கும் தப்சீர் இப்னுகஸீர் முதல்பாகமாகும்.

 

இப்னுகஸீரின் விரிவுரை முறையியல்  திருக்குர்ஆனின் வசனங்களுக்கு அதே குர்ஆனின் பிற வசனங்களைக் கொண்டும், ஸஹீஹ÷ல்புகாரி, ஷமாயில் திர்மிதி, ஜாமிவுத் திர்மதி, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹமத், ஸஹிஹ்முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ்களின் வழி நின்றும், உமர், அப்பாஸ்,  மஸ்ஊத், அபுஹுரைரா நபித்தோழர்கள்,  இப்னு ஜரீர் அத்தப்ரீ, இப்னு இஸ்ஹாக், இமாம் குர்துபி உள்ளிட்ட குர்ஆன் விரிவுரை அரபுமொழிப் பேரறிஞர்கள், மற்றும் அரபு மொழிக் கவிஞர்களின் கவிதைகளின் ஊடாகவும் விரிவுரை செய்யப்பட்டுள்ளது.

 

சொல்லாராய்ச்சி, மொழியியல் திறனாய்வு விளக்கம் என்பதான திசை வழிகளை இது சொல்லித் தருகிறது. வாசகனுக்கு சில அடிப்படையான புரிதல்தளங்களை தாராளமாக உருவாக்கித் தரும் தப்சீரின் அடிக்குறிப்புகள், சொல் விளக்கத் தொகுப்பு குர்ஆன் வசனங்களுக்கான சமகால விளக்கங்கள், ஐயப்பாடுகளை தீர்க்க முனையும் குறிப்புகள், விவிலியம் பழைய ஏற்பாடு, பைபிளில் இடம்பெறும் வரிகள் மற்றும் யூத வரலாற்று நிகழ்வுகளும் இவற்றோடு இணைக்கப் பெற்றுள்ளன.

 

சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருவதிலிருந்து துவங்குகிறது. இறைப்புகழ்ச்சி அளவற்ற அருளாளன் (அர்ரகுமான்) நிகரற்ற அன்புடையோன் (அர்ரஹீம்) பிரதிபலன் அளிக்கும் நாளின் அதிபதி (மாலிகியெüமித்தீன்) என வெளிப்பட்டு உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம் (இய்யாக்க நக்புது வ இயக்காக்க நஸ்தகீன்) என பிராத்தனை செய்கிறது. தொடர்ந்து எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக (இஹ்தின சிறாத்தில் முஸ்தகீன்) என வேண்டுகிறது. நீயாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் செலுத்துவாயாக, அவர்கள் உனது சினத்திற்கு ஆளானவர்கள் அல்லர், வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (சிறாத்தில் அதீன அன்ஹம்த அலைகும் கைறில் மக்ழூபி அலைகிம் வலள்ளாலீன்) இவ்வாறாக இறுதிவசனங்களில் தென்படுகிற நேர்வழி  தவறான வழி இருமை நிலைகளையும், சினத்திற்கு ஆளானவர்கள், வழி தவறிச் சென்றவர்கள் யார் யார் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அரேபிய சூழல் சார்ந்த வாழ்வுப் பின்னணியில் இறைவனின் கோபத்துக்கு ஆளானவர்களாக யூதர்களும், வழி தவறியவர்களாக கிறிஸ்தவர்களும் குறிக்கப் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அல்பகரா அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் இறை நம்பிக்கையாளர் பண்புகள் பற்றியும், அடுத்து வரும் 15 வசனங்கள் இறை மறுப்பாளர் நய வஞ்சகர்களின் பண்புகள் பற்றியும் விவரிக்கிறது. இறை நம்பிக்கையாளர் பண்புகளில் மிக முக்கியமாக ஈமான்  தொழுகை  தர்மம் என்கின்ற மூன்றுபண்புகளமுதன்மைப்படுத்தப்படுகிறது.

 

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையைக் கடைபிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (பிறருக்கு) செலவு செய்வார்கள் (2:3)

இங்கே தொழுகை உடல்சார்ந்த வழிபாடாகவும், தர்மம் பொருள் சார்ந்த வழிபாடாகவும் இணைவாக்கம் பெற்றுள்ளது.

 

அல்பகரா அத்தியாயத்தின் சிறிதும் பெரிதுமான 286 வசனங்களும் ஏறக்குறைய இஸ்லாமியர்களின், சமூக, குடும்ப, தனிமனித வாழ்வு சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி உரையாடுகின்றன. குறிப்பாக இறைவழிபாடு, பிறருக்கு உதவுதல், நேர்வழி பின்பற்றாதவர் மீதான கண்டனம், ஷைத்தான், நரகம், சொர்க்கம் பற்றிய கருத்தியல்கள், ஆதம்நபி, மூசா நபி, இப்ராஹீம் நபி, கஃபத்துல்லா வரலாறு, நோன்பு, ஹஜ், உம்ரா கடமைகள், திருமணம், இஸ்லாமியப்பெண் இணை வைக்கும் பெண், அடிமைப் பெண் குறித்த விவரிப்புகள், பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சனை, தாம்பத்ய உறவு, மணவிடுதலை பெற ஆண் சொல்லும் தலாக் (விவாகரத்து) பெண் சொல்லும் குலாஅ, இத்தா காலம், மணவிலக்கு பெற்ற பெண்ணுக்கான பாதுகாப்பு, வணிகம், வட்டி உள்ளிட்ட பொருளியல் சிந்தனை என பன்முகக்கூறுகளின் பிரதிபலிப்புகளை யதார்த்த நிலையிலும், கதையாடல் வடிவத்திலும் முன்வைக்கப்படுகின்றன.

 

அரபுமொழிச் சொற்களின் தமிழ் அர்த்தங்களை நடைமுறைப் பயன்பாடு சார்ந்து எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. அபூ(தந்தை) உம்மு(தாய்) இப்னு(புதல்வர்) இப்னத்/பின்த்(புதல்வி) என்பதான நிலைகளில் அபூஅப்துல்லாஹ் (அப்துல்லாவின் தந்தை) உம்முசல்மா (சல்மாவின் தாய்) இப்னுஉமர் (உமரின் புதல்வர்) என இதன் விளக்க நீட்சி செல்கிறது.

 

ஒரு சொல் சூழல் சார்ந்து பல விளக்கம் பெறுதல் என்பதான மொழியியல் கூறுகளும் விரிவுரைகளில் பின்னிப் படர்ந்து கிடக்கின்றன. இது ஒரு சொல்லின் நேரடிப் பொருள்  சூழ்பொருள்   என்பதான எல்லைகளையும், மேற் தள அர்த்தம், ஆழ்தள அர்த்தம் சார்ந்த வெளிப்பாடுகளையும் கொண்டு இயங்குகிறது. அல்பாத்திஹா அத்தியாயம் உம்முல்கிதாப் உம்முரல்ஸ்  தலையின் அன்னை (மூளையைச் சுற்றியுள்ள சவ்வு) என்றும் பிறிதொரு இடத்தில் உம்மு  படைவீரர்களை ஓரணியில் சேர்க்கும் இராணுவக் கொடியாகவும் அர்த்தம் பெறுவதைக் குறிப்பிடலாம்.

 

இதுபோன்ற குர்ஆனின் இடம்பெறும் சில பொருட்கள் புதுவித அர்த்தங்களை சுமந்து பெறும் சிந்தனை விளக்கம் வாசிப்பிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. நரகம் பற்றிய அச்சமூட்டும் வர்ணனையை குர்ஆனின் அல்பகரா வசனம் சுட்டிக்காட்டுகிறது.

 

மனிதர்களும் கற்களும் எரிபொருளாக உள்ள நரக நெருப்புக்கு நீங்கள் அஞ்சுங்கள். இறை மறுப்பாளர் களுக்காகவே அது தயார் செய்யப் பட்டுள்ளது. 2:24)

 

இதில் இடம்பெறும் எரியும் கற்கள் எதைக் குறிக்கின்றன என்பதற்கு பிணத்தை விட துர்வாடை வீசுகிற இறுகிய கரிய நிறமுடைய கந்தகக்கற்கள் தான் எரிக்கப்படும்போது கடுமையான வெப்பத்தை கக்குகின்றன என்பதான யதார்த்த விளக்கம் தரப்படுகிறது.

 

அல்பகராவின் 2:57 வசனம் இஸ்ரவேலர்கள் தொடர்பான சுட்டுப் பொசுக்கும் தீஹ்பாலைவனப் பிரதேசத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வை பேசுகிறது.

 

நாம் உங்கள்மீது மேகங்களை நிழலிடச்செய்தோம். உங்களுக்கு மன்னு மற்றும் சல்வாவை இறக்கி வைத்தோம். (அத்தோடு) நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய்óமையானவற்றிலிருந்து உண்ணுங்கள். (என்றோம்)

 

இவ்வசனத்தில் இடம்பெறும் மன்னு சல்வா குறித்த விளக்கங்கள் அரபு புவியியல் பரப்பு, சுற்றுச்சூழல், உணவுப்பழக்கம் சார்ந்து வெளிப்படுவதை கவனிக்கலாம். மன்னு. உணவுப்பொருள் மன்னா என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறப்பெடுத்துள்ளது. இஞ்சிச் செடியில் பனிப்பொழிவைப்போல் இறங்கிக் கொண்டிருந்த உணவுப் பொருள், அது தேன்வகை திரவ உணவு, பாலைவிட அதிக வெண்மையாகவும், தேனை விட இனிப்பாகவும் உள்ள உணவு, மன்னுவகையைச் சேர்ந்ததுதான் சமையல்காளான், அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமளிக்கும் என்பதாக இந்த அர்த்தப்படுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. இதிலிருந்து மன்னு ஒரு தாவர வகை உணவு என்பதை புரிந்து கொள்ளலாம். சல்வாவைப் பொறுத்தமட்டில் தென்திசைக்காற்று கொண்டு சேர்க்கும் சிவப்பு நிறச் சாயலுள்ள பறவைகளில் ஒன்று, காடையைவிட அளவில் பெரிதான அதைப் போன்ற ஒருவகைப் பறவை என்பதான விளக்கம் தரப்படுகிறது. இப்படியாக குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல்துறை அறிவின் விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

 

குர்ஆனில் இடம்பெறும் குறியீட்டு மொழியினை எவ்வாறு அர்த்தப்படுத்திப் பார்ப்பது என்ற பிரச்சினையும் இத்தோடு எழுகிறது. ரமலான் மாதத்தின் நோன்புக் கால விதிமுறைகள் குறித்து அல்பகராவின் வசனம் சில வழிகாட்டல்களைச் சொல்கிறது.

 

… இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும் கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை உண்ணுங்கள் … பருகுங்கள் … (2:187)

 

இவ்வசனத்தை நேரடி அர்த்தமாக புரிந்து கொண்ட அதீ பின்ஹாத்திம் நபித்தோழர் ஒரு கறுப்பு கயிற்றையும், வெள்ளைக் கயிற்றையும் தலையணைக்கடியில் வைத்துக் கொண்டு இரவில் அவற்றை அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து மறுநாள் நபிமுகமது(ஸல்)விடம்  தெரிவித்தபோது கறுப்புக்கயிறும், வெள்ளைக்கயிறும் நேரடியாக கயிறைக் குறிப்பதல்ல, கறுப்புக் கயிறு இரவின் கருமையையும், வெள்ளைக் கயிறு அதிகாலை வெளிச்சத்தையும் குறிப்பதாகும் என்பதாக நபிமுகமது விளக்குகிறார். இதிலிருந்து நோன்பு காலத்தில் சஹர் நேர உணவு உண்ணுதல் அதிகாலை உதயமாகும்வரை அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

 

பசுமாடு என்னும் பொருள்கொண்ட அல்பகரா என இந்த அத்தியாயத்திற்கு பெயர் வந்தமைக்கு காரணம்குறிப்பிடப்படுகிறது. பனுஇஸ்ராயீல் காலத்தில் ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில்  ஒரு பசுமாட்டை அறுத்து அதன் உறுப்புகளில் ஒன்றை எடுத்து இறந்தவர் சடலத்தின் மீது அடித்தால் அவரே எழுந்து கொலையாளி யார் என்று சொல்லிவிடுவார் என்ற மூசா நபி வாழ்வு நிகழ்வின் அடிப்படையில் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனினும் இத்தகைய பெயரிடுதலை நிகழ்த்தியது யாரென்பது பற்றிய தகவல் அடிக்குறிப்பிலும் இல்லை. அல்லாஹ்வால் நபிகள் நாயகத்திற்கு வஹி மூலம் கி.பி.632 முடிய 22 ஆண்டு காலத்தில் இறக்கப்பட்ட குர்ஆனின்  வசனங்கள் நபிகளாரின் மறைவுக்குப் பிறகு ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப்பின் ஹஸரத் உதுமான் காலத்தில்தான் இத்தகு வடிவம் பெறுகிறது. எனவே  குர்ஆன் அத்தியாயங்களுக்கான   பெயரிடுதல்கள்  குறித்த ஆதார பூர்வமான வரலாற்று பதிவுகள் குறித்தும் தேடல் நிகழ்த்த வேண்டியுள்ளது.

 

ஆதம் நபி தொடர்பான அல்பகரா அத்தியாயத்தின் 36 வது வசன துவக்கம்

ஷைத்தான் அ(ம்மரத்)தை வைத்து

அவ்விருவரையும் வழிதவறச் செய்தான்”

என இடம்பெறுகிறது. ஆதம் நபி, ஹவ்வாவிற்கு சொர்க்கத்தில் விலக்கப்பட்ட கனியும், சபிக்கப்பட்ட மரமும் எதுவாக இருந்திருக்கும் என்பது குறித்த மார்க்க அறிஞர்களின் கருத்து நிலையில் அது திராட்சைக்கொடி, கோதுமைப்பயிர், தானியக்கதிர், பேரீச்ச மரம், அத்திமரம், ஆலிவ் மரம் என பல்வேறு நிலையில் அடையாளப் படுத்தப்படுகின்றன.  இத்தகு முடிவுறா அர்த்தங்களைக் கொண்ட வசனங்களும் தப்சீரில் உள்ளன. இந்நிலையில் ஆதம் நபி பற்றிய சமகால விவாதங்களில் ஆதம்மலை, ஆதமின் பாதச்சுவடு என ஆதம் நபியை தென் தமிழக வரலாற்றோடு இணைத்துப் பார்க்கின்ற  அணுகுமுறையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நபிமார்களும் தங்களது மொழியை ஒரு அடையாளமாக கொண்டிருக்கின்றனர். மூசா நபிக்கு தெளராத்வேதம், இப்ரானி மொழியிலும், தாவூத் நபிக்கு சபூர்வேதம் யூனானி மொமழியிலும், ஈசா நபிக்கு இஞ்சீல் வேதம் அரபு மொழியிலும் அருளப் பெற்றுள்ள நிலையில் ஆதம் நபிக்கு வழங்கப்பட்ட பத்து ஸுஹ்புகளும் எந்த மொழியில் இறக்கப்பட்டன இறைவனிடம் எந்த மொழியில் ஆதம்நபி ஆலிவ் மரத்தடியிலிருந்து பாவமன்னிப்பு கோரியிருக்ககூடும் என்பது குறித்தும் தேடல்கள் உருவாகின்றன.

 

அரபு சமூக வரலாற்றில் மூசா நபி காலத்தில் காளைக்கன்றை தெய்வமாக வழிபட்ட இஸ்ரவேலர்கள் தமக்குத்தாமே கொலை செய்ய பணிக்கப்பட்ட நிலையையும் சில விநாடி இருளின் மூடல் விலகியபோது எழுபதினாயிரம் பேர் வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ரத்தத்தை உறைய வைக்குமளவுக்கு தப்சீரில் உக்கிரமாக இடம்பெற்றுள்ளது. மக்காவின் குரைஷிகள், பதூயின்கள் உள்ளிட்ட பழங்குடி மக்கள் மதிநாவின் யூதர்கள் (இஸ்ரவேலர்கள்) கிறிஸ்தவர்கள் என பல் இன மத குழுக்களுக்கிடையே இஸ்லாம் பரவத் துவங்கியபோது ஒரிறை கொள்கை வழியை நபிமுகமது(ஸல்) நடைமுறைப் படுத்திக் காட்டினார். அல்பகராவில் யூதக்கொள்கையை பின்பற்றுவோர்களை இஸ்லாத்தின்பால் ஈடுபட அழைக்கும் வார்த்தைகள் இடம் பெறுகிறது.

 

தொழுகையைக் கடைபிடியுங்கள். ஸகாத் (எனும் கட்டாயக்            கொடையை) வழங்குங்கள். குனி(ந்து தொழு)கின்றவர்களுடன் சேர்ந்து நீங்களும் குனி(ந்து தொழு)ங்கள் (2:43)

 

தக்வா எனும் இறையச்சத்தை வெளிப்படுத்தவே தொழுகை என்றாலுங்கூட பண நிற இன மொழி பேதமற்று அனைவரும் இறைவனின் முன் சமம் என்னும் சமூக சத்துவத்தை தொழுகை முன்னிறுத்துகிறது. தமிழ் சூழலில் சூபியாக்களின் அர்த்தப் பரிமாணங்களில் ஒன்றாக  தொழுகையின் பல நிலைகளை விளக்கப்படுகின்றன தக்பீர் கட்டும் நிலை (தாவரங்கள்) ருகூவு (விலங்கினம்) ஸ÷ஜ÷து (ஊர்வன) அத்தஹியாத் இருப்பு(மலைகள் என்பதாக உயிரின பரிணாமக் கோட்பாட்டின் அர்த்தப் பரிமாணமாக சொல்லிக் காட்டுவதை கவனிக்கலாம்.

 

இந்திய தமிழக யோக மரபின் அடிப்படையில் தொழுகை நிலைகள் ஒவ்வொன்றும் சமஸ்திதி நிலை, கர்ண சக்தி விகாஸ நிலை, ஸமன் சக்தி விகாஸகாநிலை, சக்ரவாகாசனம், அர்த்த சிரசாசனம், வஜ்ராசனம், அர்த்த மத்ஸயேந்திராசனம் என்கிற தியான ஆசனமுறைகளோடு நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக கூறப்படும் கருத்தையும் கவனத்திற் கொள்ளலாம்.

 

குர்ஆனிய வசனங்களுக்கு நபிகள் நாயகத்தின் காலகட்டத்தை ஒட்டி வரலாற்று இஸ்லாம் கால விளக்கங்கள் ஒருபுறமும், 19 ம் நூற்றாண்டின் ஐரோப்பிய மறுமலர்ச்சி விஞ்ஞான யுக சிந்தனையின் வெளிப்பாடாக நவீன இஸ்லாம் சார் விளக்கங்கள் மறுபுறமும் உருவாகியுள்ளன. சர்சையத் அகமத்கான், அல்லாமா முகமது இக்பால், யூசுப்அலி, மெüதூதி, குலாம் அகமது பர்வேண், ரஷாத்கலீபா, உள்ளிட்ட சிந்தனையாளர்களை குறிப்பிடலாம். இன்றைய பின் நவீன கால சிந்தனையும் உள்வாங்கி  எழுதிவரும்  அல்ஜீரிய சிந்தனையாளர் முகமது அர்கோன், அனெüவர் மஜீத், தாரிக்அலி, ஜியாவுதீர்சர்தார், அக்பர் எஸ்.அகமது, அமீனாவதூத், பாத்திமா மெர்னிசி அஸ்கர் அலி இஞ்சினியர், ஏ.ஜி.நுரானி,  இம்தியாஸ் அகமது, யோகிந்தர் சிக்கந்த எனத்தொடரும் அறிஞர்களின் குர்ஆனிய இஸ்லாமிய அர்த்தப்படுத்தல்கள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுவதை கவனிக்க முடிகிறது. இது நவீனத்துவம் சார்ந்த வாசிப்பு பெண்ணிய வாசிப்பு, அடித்தள மக்கள்சார் வாசிப்பு என்பதான பல்வித நிலைகளை முன்வைத்துப்பேசுகிறது.

 

காலந்தோறும் வளர்ந்துவரும் ஆய்வுமுறையியல், சமூக அரசியல் பண்பாடு சார்ந்த கண்ணோட்டம் ஒரு வசனத்தை வாசித்து அர்த்தப்படுத்துவதிலேயே வெவ்வேறு கருத்து நிலைகள் உருவாகியிருக்கும் சூழலில் இப்னுகஸீரின் தப்சீரை முன்வைத்து குர்ஆன் எனும் புனிதநூல் சொல்லும்  விளிம்புநிலை மற்றும் விடுதலை சார்ந்த இஸ்லாமிய மாற்று அரசியலுக்கான தேடலை நாம் உருவாக்கி கொள்ளலாம்.

Series Navigationநேர்மையின்குரல்சிவாஜி ஒரு சகாப்தம்
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

9 Comments

  1. Avatar
    செந்தில்குமார் says:

    குரான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் இறைவனால் சொல்லப்பட்டது என்றால், ஏன் இஸ்ரவேலர்களின் புராணக்கதைகள் மட்டும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது? ஏன் உலகில் பிற பகுதிகளின் புராணக்கதைகள் (அதாவது இறைவன் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அற்புதங்கள்) அதில் குறிப்பிடப்படவில்லை?

    இதிலிருந்தே முகமது என்ற மனிதர் தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லி யூதர்களோடு போட்டி போட்டு தன்னிடம் God சொல்லியதாக ஏமாற்றிய ஒரு ஏடுதான் குரான் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்புதானே?

    இது குறித்து கட்டுரையாசிரியரின் கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  2. Avatar
    செந்தில்குமார் says:

    //இந்திய தமிழக யோக மரபின் அடிப்படையில் தொழுகை நிலைகள் ஒவ்வொன்றும் சமஸ்திதி நிலை, கர்ண சக்தி விகாஸ நிலை, ஸமன் சக்தி விகாஸகாநிலை, சக்ரவாகாசனம், அர்த்த சிரசாசனம், வஜ்ராசனம், அர்த்த மத்ஸயேந்திராசனம் என்கிற தியான ஆசனமுறைகளோடு நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக கூறப்படும் கருத்தையும் கவனத்திற் கொள்ளலாம்.//

    இதெல்லாம் திடீரென்று ஒரு நாள் ஒரு மனிதர் கடவுள் தம்மிடம் சொல்லியதாக சொல்லி உருவாக்கியவை அல்ல. பல நூற்றாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக மானுடம் கண்டுபிடித்தவை.

    இவையும் கடவுளிடமிருந்தே வருவதான கருத்து நம்மிடையேயும் உண்டு என்றாலும், இங்கே கடவுள் என்று குறிப்பிடப்படுவது நம் எல்லாரிடத்தும் புதைந்து கிடக்கும் பேருணர்வு. முகமது தன்னிடம் பேசிய கடவுள் என்று குறிப்பிடுவது, முகமதின் alter ego வான, மனிதத்தன்மை பொருந்திய (ஆண்) கடவுள்.

    இந்தியாவில் இருப்பதைப் போன்றே யோக முறைகள், தெளிவில்லாமல் சிற்சில அம்சங்களுடன் அரேபியாவில் இருந்திருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதில் எதையாவது ஒன்றை முகமது எடுத்து தனது மதத்தில் நுழைத்து, அதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களை தம்மை முன்னிலைப் படுத்திக்கொள்வதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கவேண்டும் (நமது நி…..யானந்தாக்கள் பழைய இந்துமத யோக, தியான அம்சங்களை பயன்படுத்தி பிரபலமடைந்தது போல).

  3. Avatar
    செந்தில்குமார் says:

    //அல்லாஹ்வால் நபிகள் நாயகத்திற்கு வஹி மூலம் கி.பி.632 முடிய 22 ஆண்டு காலத்தில் இறக்கப்பட்ட குர்ஆனின் வசனங்கள் நபிகளாரின் மறைவுக்குப் பிறகு ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப்பின் ஹஸரத் உதுமான் காலத்தில்தான் இத்தகு வடிவம் பெறுகிறது. எனவே குர்ஆன் அத்தியாயங்களுக்கான பெயரிடுதல்கள் குறித்த ஆதார பூர்வமான வரலாற்று பதிவுகள் குறித்தும் தேடல் நிகழ்த்த வேண்டியுள்ளது.//

    இது அடுத்த பெரிய கேள்விக்குறி. கடவுள் நமக்கு கொடுத்த கட்டளைகள் தான் குரான் என்றால், குரான் முகமது காலத்தில் ஏன் உருவாக்கப்படவில்லை? கடவுள் கட்டளைகள் என்று முகமது நிஜமாக நம்பியிருந்தால், அவரே அப்போதே இதை நூலாக கொண்டு வந்து அனைவரிடமும் கொடுத்திருப்பார் அல்லவா?

    தொடர்ந்து எழுதுங்கள், அப்போதுதான் எங்களுக்கு தெளிவுபிறக்கும். எங்களுக்கு தெளிவு பிறந்தால் தான் உங்களுக்கும் தெளிவு பிறக்கும். அப்போதுதான் உலகிற்கு விடிவு கிடைக்கும்.

  4. Avatar
    செந்தில்குமார் says:

    //இவ்வசனத்தில் இடம்பெறும் மன்னு சல்வா குறித்த விளக்கங்கள் அரபு புவியியல் பரப்பு, சுற்றுச்சூழல், உணவுப்பழக்கம் சார்ந்து வெளிப்படுவதை கவனிக்கலாம். மன்னு. உணவுப்பொருள் மன்னா என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறப்பெடுத்துள்ளது. இஞ்சிச் செடியில் பனிப்பொழிவைப்போல் இறங்கிக் கொண்டிருந்த உணவுப் பொருள், அது தேன்வகை திரவ உணவு, பாலைவிட அதிக வெண்மையாகவும், தேனை விட இனிப்பாகவும் உள்ள உணவு, மன்னுவகையைச் சேர்ந்ததுதான் சமையல்காளான், அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமளிக்கும் என்பதாக இந்த அர்த்தப்படுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. இதிலிருந்து மன்னு ஒரு தாவர வகை உணவு என்பதை புரிந்து கொள்ளலாம். சல்வாவைப் பொறுத்தமட்டில் தென்திசைக்காற்று கொண்டு சேர்க்கும் சிவப்பு நிறச் சாயலுள்ள பறவைகளில் ஒன்று, காடையைவிட அளவில் பெரிதான அதைப் போன்ற ஒருவகைப் பறவை என்பதான விளக்கம் தரப்படுகிறது. இப்படியாக குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல்துறை அறிவின் விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.//

    சொல்லிய இறைவனுக்கு சொல்வதை தெளிவாக சொல்லத் தெரியவில்லையா?

  5. Avatar
    suvanappiriyan says:

    திரு செந்தில் குமார்!

    //குரான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் இறைவனால் சொல்லப்பட்டது என்றால், ஏன் இஸ்ரவேலர்களின் புராணக்கதைகள் மட்டும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது? ஏன் உலகில் பிற பகுதிகளின் புராணக்கதைகள் (அதாவது இறைவன் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அற்புதங்கள்) அதில் குறிப்பிடப்படவில்லை?
    இதிலிருந்தே முகமது என்ற மனிதர் தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லி யூதர்களோடு போட்டி போட்டு தன்னிடம் God சொல்லியதாக ஏமாற்றிய ஒரு ஏடுதான் குரான் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்புதானே?//

    ‘இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸமவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்: அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்: அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்:’ என்று கூறுங்கள்.
    -குர்ஆன் 2:136

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’
    -குர்ஆன் 14:4

    இந்த இரண்டு குர்ஆனின் வசனங்களும் அனைத்து மொழிகளிலும் வேதத்தை இறைவன் கொடுத்ததாக கூறுகிறது. அந்த வகையில் நமது தமிழ் மொழிக்கும் வேதங்கள் வந்திருக்கின்றன. அது திருக்குறளாகக் கூட இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி குர்ஆனில் அறிவிப்பு இல்லை. முன்னர் அளித்த வேதங்களை மனிதர்கள் திருத்தி தங்களின் கருத்துக்களை புகுத்தியதால்தான் புதிய வேதத்தை அருள அவசியமேற்படுகிறது. எனவே அந்த திருத்தப்படட பழைய வேதங்களை அதன் கருத்துக்களையும் சொல்வதால் யாருக்கு என்ன நன்மை வந்து விடப் போகிறது? குர்ஆன் இறங்கிய காலத்திற்கு சமீபமாக இறக்கப்பட்ட இன்ஜீல் (பைபிள்) வேதத்தைப் பற்றியும் அதனை மககள் எவ்வாறு திருத்தினர் என்பதைப் பற்றியும் இறைவன் பல இடங்களில் கோடிட்டுக் காட்டுகிறான். அதற்கு முந்தய பழைய வேதங்கள் பல அழிந்தே விட்டன. அத்தனையையும் சொல்வதாக இருந்தால் பல வால்யூம்கள் தேவைப் படுமே!.

  6. Avatar
    MURALI says:

    Good answer and explanation suvanapiriyan…According to QURAN….Islam is for middle eastern people….and Prophet Musa(jesus)want to revive judaism but jews didn’t accept his reforms, it’s very unfortunate his greek disciple JOHN founded a new religion in his name.
    Why ISLAM and Christianity spread out of middle east…India is birth place of many religions…anyone know what is the reason and why ISLAM and CHRISTIANITY spreading now…..

  7. Avatar
    suvanappiriyan says:

    திரு முரளி!

    //Good answer and explanation suvanapiriyan…According to QURAN….Islam is for middle eastern people….//

    பாராட்டுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே! பின் வரும் வசனத்தை பாருங்கள்:

    ‘இந்த குர்ஆன் ரம்ஜான் மாதத்தில்தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.’
    -குர்ஆன் 2:185

    ‘படிப்பினை பெறுவதற்காக இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.’
    -குர்ஆன் 2:221

    ‘இந்த குர்ஆன் மனிதர்களுக்கு விளக்கமும் நேர் வழியும் இறைவனை அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்’
    குர்ஆன் 3:138

    இவ்வாறு குர்ஆன் சட்டங்களை சொல்லும் இடத்து ‘முஸ்லிம்களே!’ என்றோ அல்லது ‘அரபு மக்களே’ என்றோ சொல்லவில்லை. அனைத்து இடங்களிலும் ‘மனிதர்களே!’ என்றுதான் விளிக்கிறது. இதில் நீங்களும், நானும், செந்தில் குமாரும், மலர் மன்னனும் இன்னும் உலகில் உள்ள அனைத்து மக்களும் அடங்குவர்.

    //Prophet Musa(jesus)want to revive judaism but jews didn’t accept his reforms, it’s very unfortunate his greek disciple JOHN founded a new religion in his name.//

    ‘இஸ்ரவேலர்கள் உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்’
    -குர்ஆன் 2:75

    ‘அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். ‘இது இறைவனிடமிருந்து வந்தது’ எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர்.’
    -குர்ஆன் 3:78

    உங்களின் வாதங்களை இந்த வேத வசனங்கள் உண்மைப் படுத்துகின்றன.

    //anyone know what is the reason and why ISLAM and CHRISTIANITY spreading now…..//

    இஸ்லாமும் கிறித்தவமும் முன்பு இந்தியாவில் பரவியதற்கு முக்கிய காரணம் இந்து மதத்தின் வர்ணாசிரம கொடுமைகள். இன்று உலகில் இஸ்லாம் வேகமாக பரவ காரணம் பல மொழிகளிலும் குர்ஆன் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மக்களின் கைகளிலும் இலகுவாக கிடைப்பதும் ஒரு காரணம் என்பேன். மற்ற காரணங்களை நீங்கள் தான் சொல்ல வேண்டும்..

  8. Avatar
    செந்தில்குமார் says:

    // அதற்கு முந்தய பழைய வேதங்கள் பல அழிந்தே விட்டன. அத்தனையையும் சொல்வதாக இருந்தால் பல வால்யூம்கள் தேவைப் படுமே!.//

    யூதர்களின் மத விஷயங்கள் பற்றியும், அவர்களின் புராணக்கதைகள் பற்றியும், அரேபியா பற்றியும், எகிப்து பற்றியும் விலாவாரியாக சொல்லும் குரான், மனிதகுலத்தில் நான்கில் ஒரு பங்காக அப்போதிருந்த இந்துமத புராணங்கள் பற்றி கோடிட்டும் காட்டாதது ஏன். அரேபியரைவிட மக்கள் தொகை அதிகமாக இருந்த தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாதது ஏன்?

    காரணம் ஒன்றுதான் – குரான் முஹமதுவின் மொழி. அவருக்கு தெரிந்த விஷயங்களை அவ்வப்போது கடவுள் சொல்வதாக ஓதி தன்னை பெரிய ஆளாக கூட இருந்தவர்களுக்கு காட்டிக்கொண்டார். நி….யானந்தாக்களுக்கு பணம், கூட்டம், புகழ், பெண்கள் கிடைத்தது போல அவருக்கும் இதனால் பல பலாபலன்கள் கிடைத்தன.

    முஹமது செத்துப்போன பின்பு அவருடன் இருந்த கும்பலுக்கு இதெல்லாம் தேவைப்பட்டது. அந்தக்கும்பல் முஹமது சொன்னதையெல்லாம், சொல்லாத சிலதையும் சேர்த்து குரான் என்று ஒரு நூலை உருவாக்கி தனது அதிகாரத்தையும், செல்வத்தையும், அக்கிரமங்கள் செய்யும் வசதியையும் தக்கவைத்துக்கொண்டது.

    சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், முஹமதுவுக்கு தெரிந்த விஷயங்கள் மட்டுமே குரானில் இடம்பெற்றுள்ளன என்பதே குரான் கடவுளின் பேரில் உருவாக்கப்பட்ட பொய்யான மதநூல் என்பதை நிரூபிக்கிறது.

  9. Avatar
    செந்தில்குமார் says:

    //இஸ்லாமும் கிறித்தவமும் முன்பு இந்தியாவில் பரவியதற்கு முக்கிய காரணம் இந்து மதத்தின் வர்ணாசிரம கொடுமைகள். இன்று உலகில் இஸ்லாம் வேகமாக பரவ காரணம் பல மொழிகளிலும் குர்ஆன் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மக்களின் கைகளிலும் இலகுவாக கிடைப்பதும் ஒரு காரணம் என்பேன். மற்ற காரணங்களை நீங்கள் தான் சொல்ல வேண்டும்..//

    இஸ்லாம் இந்தியாவில் எப்போது அதிகம் பரவியது தெரியுமா? மதவெறியனான அவுரங்கசீப் மன்னன் காலத்தில் தான். இன்றைய இந்தியா-பாகிஸ்தான் – வங்கதேச முஸ்லீம்களிம் மூன்றில் ஒரு பங்கினர் இஸ்லாத்தைத் தழுவியது அவுரங்கசீப் விதித்த ஜிஸ்யா, செய்த கொடுமைகள் (சீக்கியர்களை துடிதுடிக்க அறுத்துக் கொன்றது உட்பட) மற்றும் மதமாறினால் கிடைத்த சலுகைகள் காரணமாகத்தான்.

    நிர்ப்பந்தம் இல்லாதவிடங்களில் இஸ்லாம் பரவுவது மிகச் சொற்பமான அளவில் தான். எட்டுகோடி தமிழர்களில் எத்தனை பேர் இஸ்லாமியர்கள்? 4% சதவிகிதம் இருக்குமா? அதிலும் பெரும்பாலானவர்கள் அரேபிய வர்த்தகர்களின் வம்சாவளியினர்.

    தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஒவ்வொருவருடமும் இஸ்லாத்தில் இணைகின்றார்கள்? 0.001 சதவிகிதம் கூட கிடையாது. மீனாட்சிபுரம் மட்டுமே விதிவிலக்கு. அங்கேயும், பலர் திரும்ப இந்துமதத்திற்கு மீண்டுவிட்டார்கள்.

    அதே சமயம் நிர்ப்பந்தம், வன்முறை இல்லாவிட்டால் 80% இஸ்லாமியர்கள், 99% இஸ்லாமியப் பெண்கள் இஸ்லாத்தை விட்டு உடனடியாக வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் தான் சல்மான் ருஷ்டியைக் கண்டும், தஸ்லிமாவைக் கண்டும் இஸ்லாமிய மதவெறியர்கள் பயம் கொள்கிறார்கள். அதனால் தான் அயான் ஹிர்ஸி அலியை கொல்லத்துடிக்கின்றார்கள், அதனால் தான் ரசூல் அய்யாவை ஊர்விலக்கம் செய்கிறார்கள்.

    நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கிறது இந்துமதம். நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் பத்துவருடங்களுக்குள் உலகின் மிகச்சிறிய மைனாரிட்டியாக மாறிவிடும் இஸ்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *