ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்

author
53
0 minutes, 31 seconds Read
This entry is part 26 of 29 in the series 20 மே 2012

ராகவன் தம்பி
ஒரு பணிவான (அதே நேரத்தில் கொஞ்சம் நீளமான) குறிப்பு
இங்கு முகநூல் என்று தூய தமிழில் குறிப்பிடாமல் ஃபேஸ்புக் என்று எழுதியிருப்பதை வை
த்து சுத்தத் தமிழ்ப் பற்றாளர்கள் தயவு செய்து கோபம் கொள்ளக் கூடாது.

அதே போல, டிப்பணி என்கிற சொல்லும் துய தமிழ்ச் சொல் அல்ல. சொல்லப் போனால் தமிழ்ச் சொல்லே அல்ல. குறிப்புரை எழுதுவதை டிப்பணி எழுதுவது என்று ஒருகாலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் என்ன, இப்போதும் அதேதான். எனவே, ஃபேஸ்புக் போலவே, டிப்பணி என்பதும் தூய தமிழ் வார்த்தை இல்லை என்றாலும் கேட்பதற்கு ஒலி நன்றாக இருப்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரயோகத்தில் இருந்த ஒரு சொல்லை புளிபோட்டுத் தேய்த்து மெருகேற்றி அது எதிரிகளின் பாஷை என்றாலும்,மிலேச்சர்களின் பாஷை என்றாலும், நீசர்களின் பாஷை என்றாலும் ஓசைநயத்துக்காக டிப்பணி என்கிற சொல்லை எடுத்தாளலாம் என்று இந்த டிப்பணியாளன் துணிகிறான்.

மீண்டும் முகநூல் விஷயத்துக்கு வருவோம். ஒருமுறை நண்பரின் மகளிடம் இந்தத் தலைப்பை “முகநூல் உரையாடல்” என்று ஒரு சிறுகதை எழுதப்போகிறேன் என்று யதேச்சையாக சொன்னபோது “அங்கிள், நீங்க ஒரு பைத்தியம். Brand Name ஐ யாராவது தமிழ்ப் படுத்துவாங்களா? ராஜஸ்தான், ஹரியானா, உத்ரான்ஞ்சல்லே எல்லாம் Brand Name ஐ யாரும் தன்னோட பாஷைலே இப்படி கண்றாவியா மாத்தறது இல்லை. Rebok னா ஹிந்திலே Rebok னுதான் எழுதறாங்க. Face Book ன்றது ஒரு Brand Name. உங்களை மாதிரி லூசுங்கதான் வேறே வேலை இல்லாமே அதை தமிழ்லே மாத்தி எழுதுவாங்க” என்று அநாயாசமாக சொல்லிவிட்டுப் போய் விட்டாள். சின்னப் பெண் என்றாலும் அதிக விபரமாக இருக்கிறாளே என்ற பொறாமை கலந்த ஆச்சரியத்துடன் இந்த சிறுகதையின் தலைப்பை மேலே கண்டது போல மாற்றிவைக்கத் துணிந்தான் இந்த டிப்பணியாளன்.
அதனால்தான் ஈண்டு செம்மொலியான தமில் மொலியின் தூய்மையைக் குலைக்காமல் கொஞ்சம் உல்டா பண்ணித் தீர்மானித்தது நீங்கள் மேலே காணும் தலைப்பு.

இந்த டிப்பணியாளனுக்கு தமிழ் சரியாக எழுதத் தெரியவில்லை என்றோ, இந்தத் தலைப்பை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வேறு எங்காவது அல்லது வேறு ஏதாவது வகையில் யாராவது ஆப்பு வைக்கத் துணிந்தார்கள் என்றால் அது அவனுடைய ஜென்மராசி அல்லது இறையருளின் பெருங்கருணையன்றி வேறில்லை என்று அந்த டிப்பணியாளன் எடுத்துக் கொள்வான்.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஃபேஸ்புக் உரையாடல் என்றவுடனே வேறு எதையோ தவறாக நினைத்து நீங்கள் உங்களை ஆயத்தம் செய்து கொள்வது இந்த டிப்பணியாளனின் கற்பனைத் திறனுக்கும் ஊகத்திறனுக்கும் அடிப்படையாக அமைந்த புலனாய்வுத் திறனுக்கும் வெள்ளிடை மலையெனப் புலனாகின்றது. ஃபேஸ்புக் உரையாடல் என்றால் கோக்குமாக்காகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை நம்முடைய புலவர்கள் யாத்துச் சென்றிருந்தாலும் சில நேரங்களில் பல சுவாரசியமான உரையாடல்களும், பக்தி ரசம் ததும்பும் உரையாடல்களும், பாசம் பொங்கி வழியும் உரையாடல்களும், குரோதங்கள் நிரம்பி வழியும் உரையாடல்களும், இலக்கிய நயம் பொங்கும் உரையாடல்களும், மப்பில் மிதக்கும் உரையாடல்களும் ஃபேஸ்புக் வெளியெங்கும் மிகச் சாதாரமாகக் காணக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு,

பெண்யானை – வணக்கம் சார். முகநூலில் உங்களை சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

(உரையாடல் எதுவாக இருந்தாலும் நாம் கண்டதை கண்டபடி தரவேண்டும் என்னும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் தருமத்தின் அடிப்படையிலும் இங்கே முகநூல் என்னும் சொல் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்று காண்க.)

பாட்டுக்காரன்- வணக்கம். நலமா? இந்த நேரத்தில் நீங்கள் எப்படி?

பெண்யானை- கணவரும் பிள்ளைகளும் ஊரில் இல்லை. எனவே கொஞ்ச நேரம் இணையத்தில் மேயலாம் என்று வந்தேன்.

பாட்டுக்காரன் – பார்த்து மேடம். மேய்கிறேன் என்கிறீர்கள். காளைமாடு ஏதாவது வந்து கசமுசா ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெண்யானை- கிண்டல் எல்லாம் இருக்கட்டும். மேடம் எல்லாம் எதற்கு. பெயர் சொல்லியே என்னைக் கூப்பிடலாமே?

பாட்டுக்காரன்- பெண்யானை என்ற பெயர் அத்தனை அழகான பெயராக இல்லையே என்று பார்க்கிறேன்.

பெண்யானை- சரியான கில்லாடி சார் நீங்க. மெதுவாக சீண்டி என் பெயரை வாங்கி விடலாம் என்று முயற்சிக்கிறீர்கள்.

பாட்டுக்காரன்- சத்தியமாக அப்படி எல்லாம் கிடையாது. நம்மை விட வயதில் மூத்தவர்களை மேடம் என்று அழைப்பதுதானே மரியாதை.

பெண்யானை- எனக்கு வயதெல்லாம் ஒன்றும் அதிகம் இல்லை. உங்கள் புகைப்படத்தை ஒரு வலைப்பூவில் பார்த்தேன். உங்களை விட நான் வயதில் சிறியவள்தான்.

பாட்டுக்காரன்- அதனால் உங்களை வா, போ என்று அழைத்துவிட முடியுமா?

(குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும். இங்கு சில நாகரிகம், கட்டுப்பாடு மற்றும் தமிழ்ப் பண்பாடு கருதி அவசியம் குறுக்கிட வேண்டியிருக்கிறது. இருதரப்பிலும் முயற்சிகள் எப்படி நடக்கின்றன என்று கற்றறிந்த ஆன்றோர்கள் இங்கு கவனிக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ளது போல ஃபேஸ்புக்கில் எப்போதும் ஒரேவகையான உரையாடல்கள் நடப்பது இல்லை. சில நேரங்களில் இப்படியும் உரையாடல்கள் அமைகின்றன).

நூலோன்- அய்யா வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

பிரணவன்-நான் நலம். நீங்களும் பிள்ளைகளும் நலமா?

நூலோன்- சமீபத்தில் நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தில் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதற்கு உங்களுடைய எதிரி எழுத்தாளர் அவருடைய தளத்தில் வாந்தி எடுத்ததையும் படித்தேன்.

பிரணவன்- அதுதான் வாந்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். பிறகு அந்த அசிங்கத்தைப் பற்றி எல்லாம் எதற்குப் பேசவேண்டும்? நமக்கு இடையில் இசை மற்றும் இலக்கியம் மட்டும் தவழ வேண்டும். இப்போது ருமேனிய மொழியில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் மொழிபெயர்க்க சரியான ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். வேறு எதைப்பற்றியும் என்னுடைய மனத்தளத்தில் இப்போதைக்கு இடமில்லை. என்னுடைய நேயர்களும் என்னைப் போலவே இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில் என்ன தவறு என்று நீங்களே சொல்லுங்கள்…

நூலோன்- ஒரு நிமிஷம் இருங்கள் ஐயா. எனக்கு அழுகையாகப் பொங்கி வருகிறது.

பிரணவன்- அழுகை வந்தால் அழுது தீர்த்து விடுங்கள். காயப்பட்ட மனதை கண்ணீர் மட்டுமே தூய்மையாக்க முடியும். கண்ணீர் தூய இதயத்தில் சுரக்கும் நல்லூற்று. அழுகை நஞ்சையும் அமுதமாக்கும் பெருமருந்து. என்னுடைய வாசகர்களும் குழுமத்தின் உறுப்பினர்களும் கோழையாக இருக்கலாம். ஆனால் வஞ்சகர்களாக இருக்கக்கூடாது. வஞ்சகர்கள் ஒருபோதும் இறைவனின் பிள்ளைகளாக மாற முடியாது.

நூலோன்- இப்போது என்னுடைய அழுகை இன்னும் அதிகமாகிறது. நீங்கள் மட்டும் சன்னியாசம் பெற்றிருந்தால் அல்லது காஷாயம் தரித்திருந்தால் அல்லது காஷாயம் தரித்தும் பெருமுடி வைத்திருந்தால் பல சாமியார்கள் முகவரி தெரியாமல் மறைந்திருப்பார்கள். உங்களின் நட்பு எனக்கு இறைவன் அளித்த பெருவரம். இந்தப் பிறவியில் உங்களைக் கண்டதும் பேராசானாக அடைந்ததும் என் பெரும்பேறு. கன்னாபின்னாவென்று அழத்தோன்றுகிறது. என்னால் முடியவில்லை.

இங்கு மீண்டும் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவேண்டும். மன்னிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. லேசாகக் கோபம் வந்தாலும் பழுதில்லை. ஆனால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டால் ஒரு டிப்பணி எழுதுகிறவன் தன்னுடைய கடமையை சரியாக செய்யாதவன் என்ற பாவத்துக்கு ஆளாக நேரிடும். எனவே இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லியாக வேண்டும். ஃபேஸ்புக் உரையாடல் என்பது நீங்கள் வழக்கமாக நினைப்பது போல, காமுகர்களுக்கும் காமுகிகளுக்கும் அல்லது காமுகர்களுக்கும் ஏமாந்த வாசகியருக்கும் இடையில் மட்டுமே பொதுவாக நடக்கும் விஷயம் அல்ல. பரம முட்டாள்களுக்கும் வேஷக்காரர்களுக்கும் இடையிலும் பரவசத்துடன் விரிந்து படரும் உரையாடலும் இந்த ஃபேஸ்புக்கின் பக்கங்களில் மலரும் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதற்காகத்தான் மேற்கண்ட உரையாடலின் முக்கியமான பகுதியை மேற்கண்டவாறு வெட்டி ஒட்டியிருந்தோம்.

இப்போது ஃபேஸ்புக் உரையாடலின் இன்னொரு முகத்தை தரிசனம் செய்வோம். ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வேளை கெட்ட வேளைகளில் பிரவேசிக்கும் நங்கையர் யாராக இருந்தாலும் பொதுவாக மற்றவர்களை விட அதிகம் அல்லலுறுவர் என்பது ஐதீகம்.

அல்லி அரசாணி-அண்ணா நல்லாயிருக்கீங்களா?

மதனகாமராஜன்-நல்லாயிருக்கேம்மா. மாப்பிள்ளை எப்படி இருக்கார். பொண்ணுங்க எப்படி இருக்காங்க?

அல்லி அரசாணி-எல்லோரும் சௌக்கியம்ணா. அண்ணி எப்படி இருக்காங்கண்ணா

மதனகாமராஜன்-என்ன சொல்றது?

அல்லி அரசாணி-என்ன ஆச்சிண்ணா?

மதனகாமராஜன்-பரவாயில்லை விடும்மா. நம்ம தகுதிக்கு ஒத்துக்காத விஷயங்களை இப்போ பேசவேணாம்.

அல்லி அரசாணி-என்னண்ணா இப்படி தலையிலே இடியை எறக்கறே? என்ன ஆச்சு? அண்ணி கோபிச்சிக்கிட்டு எங்காவது போயிட்டாங்களா?

மதனகாமராஜன்-அவளுக்கு என்ன கோபம் வேண்டியிருக்கு?

அல்லி அரசாணி- என்னை தப்பா நினைக்காதேண்ணா. நீ தலைகால் புரியாத மப்பில் ஆட்டம் போட்டு இருப்பே. நம்ம ஜாதிக்கு இது ஆகுமா? ஒரு பொம்பளை எத்தனைநாள் தான் தாங்குவா நீயே சொல்லு? என்னை நீ தப்பா நினைச்சிக்கிட்டாலும் சரி.

மதனகாமராஜன்-நீங்க எல்லோரும்தான் என்னை தப்பா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க. நான் இத்தனை குடிக்கறதுக்கு யார் காரணம்னு நீயே சொல்லு.

அல்லி அரசாணி-அண்ணா, எல்லா குடிகாரன்களுக்கும் தான் குடிச்சு சீரழியறதுக்கு யாரையாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கணும். அதைத்தான் நீயும் பண்றே.

மதனகாமராஜன்-கொஞ்சம் இரு. ஒரே நிமிஷத்தில் வந்துடறேன்.

இந்த அமைதியைப் பயன்படுத்தி ஒரு சிறு குறுக்கிடல். தமிழ் திரைப்படங்களிலும் சிறுகதைகளிலும், நாவல்களிலும் பொதுவாக அண்ணன் தங்கை பாசம் என்பது எப்போதும் காண்பவரை நெக்குருகச் செய்யும் . கண்களில் தாரைதாரையாக நீரைப் பொழிய வைக்கும். பெரும் பாறாங்கல்லை நெஞ்சில் ஏற்றி வைத்துவிடும். ஆனால் ஈண்டு காணும் உரையாடல் வேறு ரகத்தில் பயணிக்கும். இதோ மதனகாமராஜன் வந்து விட்டார். டிப்பணியாளன் அபீட்.

மதனகாமராஜன்-சொல்லும்மா. என்ன சொல்லிக்கிட்டு இருந்தே…

அல்லி அரசாணி- ……..

மதனகாமராஜன்- தங்கச்சி…என்னாச்சி…

அல்லி அரசாணி- …..

மதனகாமராஜன்- சொல்லும்மா… என் கண்ணு… என்ன ஆச்சு ராசாத்தி… எனக்கு உங்களை விட்டா யாருடா இருக்கா? என் உயிரில்லையா நீ…

அல்லி அரசாணி- அண்ணா… உண்மையை சொல்லு. குடிச்சிட்டு வந்திருக்கியா?

மதனகாமராஜன்-என்ன பேசறே நீ?

அல்லி அரசாணி- என்ன பேசறது? உன்னைத் திருத்த முடியாது. இப்போ நேரம் என்னா? இந்த நேரத்துலே குடிக்கிறயே. அண்ணி உன்னை விட்டுப் போகாம என்ன பண்ணுவா?

மதனகாமராஜன்- ஏய்… யாரு குடிச்சிருக்கா? ஏன் இப்படிப் பழி சுமத்துறே. நீ என்ன நேருலே பார்த்தியா?

அல்லி அரசாணி- இதெல்லாம் நேருலே வேறே பார்க்கணுமா? அடிக்கிற கூத்துதான் ஊரே சொல்லுதே..

மதனகாமராஜன்- ஏய்… ஏய்.. இதோ பாரு. மரியாதையா பேசு. என்னடீ நெனச்சிக்கிட்டு இருக்கே..

அல்லி அரசாணி- மரியாதை குறையுது பாரு. நீ எப்படி வேணும்னா நாசமா போயிக்கோ. நீயெல்லாம் ஒரு மனுசன்.

மதனகாமராஜன்- ஏய்… போகாதே. ஒரு நிமிஷம். என்னை என்ன உன்னோட வக்கில்லாத புருஷன் மாதிரின்னு நினைச்சிக்கிட்டியா? ஆம்பிளை சிங்கம்டீ… உன்னை மாதிரி…. என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே… நீயெல்லாம் கூடப் பொறந்தவளாடீ? சத்ருடீ.

அல்லி அரசாணி— (Has left the conversation)

மதனகாமராஜன்- ?????? ?????? ?????? ??????

(Mathanakamarajan has left the conversation)

உரையாடல் சுமுகமாக முடிந்துவிட்டதால் தைரியமான இந்தக் குறுக்கிடல். மேற்காணும் உரையாடலின் இறுதியில் ஒழுக்கசீலர்களின் வசதிக்காகவும் பொதுநாகரீகம் கருதியும் மதனகாமராஜன் அவர்கள் தன் தங்கையிடம் மப்பில் பேசிய ஆபாசமான வார்த்தைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. பொதுவாக மதனகாமராஜன் போன்ற பாமரர்கள் மட்டுமல்ல. படித்தவர்களும் பண்பாளர்களும் இலக்கியவாதிகளும், நவீனத்துவ இலக்கியவாதிகளும், பின்நவீனத்துவ இலக்கியவாதிகளும் பொதுவாக மப்பேறி விட்டால் தங்களுடைய புலமையையும் பண்பாட்டையும் தெள்ளத் தெளிவாகப் புலனாக்குவது இது போன்ற ஃபேஸ்புக் உரையாடல்களில் மட்டுமே. இரவு நேரம் இந்தக் குடிமகன்கள் இடுகாட்டில் மரக்கிளைகளில் காத்திருக்கும் வல்லூறுகள் போல வலைவிரித்துக் காத்திருப்பார்கள். இவர்களுக்கு மப்பு படிப்படியாக ஏறும்பொழுது இடையில் உடன்பிறந்தவர்களே வந்தாலும் அவர்களுடைய கதி அல்லி அரசாணிக்கு நடந்தது போலத்தான். சிலர் மப்படித்து விட்டு வலைப்பூவில் எழுதுவார்கள். சிலர் ஃபேஸ்புக்கில் தங்கள் புலமையைக் காட்டுவார்கள். அங்கு பலியாவது அடிப்படை நாகரிகம் மட்டுமே. “பைத்தியக்கார முண்டை கல்யாணத்தில் முதலில் சாப்பிடுகிறவன் அறிவாளி” என்று கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது பைத்தியம் எப்போது வேண்டுமானாலும் கல் விட்டு எறியும். எனவே அதற்கு ஏதாவது முற்றிப்போவதற்குள் சாப்பிட்டு விட்டு இடத்தைக் காலி செய்பவன் அறிவாளி என்று இதற்கு ஒரு கிளை டிப்பணி. அதாவது நள்ளிரவில் இணையத்துக்கு வந்தோம் என்றால், குறிப்பாக ஃபேஸ்புக் தளத்தில் பிரவேசித்தோம் என்றால் நிறைய மப்பாளர்கள் அங்கங்கே காத்திருப்பார்கள். அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப மப்பர்கள் நம் விதியின் குறுக்கில் வருவார்கள். நள்ளிரவில் ஃபேஸ்புக்கில் வழிதெரியாமல் வருபவர்கள் நங்கையர் என்றால் மப்பர்களுக்கு அடித்தது மஹா அதிருஷ்டம் என்று கொள்க. எனவே நங்கையர்களும் நல்லோர்களும் ஃபேஸ்புக் தளத்தில் நள்ளிரவில் பிரவேசிக்காமல் இருப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் சாலச்சிறந்தது மட்டுமின்றி மனநல ரீதியாக பாதுகாப்பான விஷயமும் கூட என்பது இந்த டிப்பணியாளனின் கொசுறு உபதேசம்.
உண்மையான காதலில் ஈடுபடுபவர்கள், அவர்கள் ஏற்கனவே தனித்தனி இடங்களில் கல்யாணமாகித் தனித்தனியே குடும்பங்களைப் பேணிக் கொண்டிருந்தாலும் காதல் அல்லது காமம் என்னும் மாயம் எந்த வயதிலும் கரையை உடைத்துக் கொண்டு வரும் பெருவெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பது சில நள்ளிரவு ஃபேஸ்புக் உரையாடல்களில் தெளிவாகும்.

பாட்ஷா-Hi..

மொழிமகள்-Hi..

பாட்ஷா- இருக்கியா…

மொழிமகள்-ம்…

பாட்ஷா-ம் னா என்ன அர்த்தம்?

மொழிமகள்- ம் னு அர்த்தம்

பாட்ஷா- அப்புறம்…

மொழிமகள்- அந்தப்புறம்..

பாட்ஷா- ஐயோ..

மொழிமகள்- என்ன ஐயோ…

பாட்ஷா- என்ன இப்படி ஓப்பனா போட்டு அடிக்கிறியே. எனக்கு வெட்கமா இருக்கு…

மொழிமகள்- நேத்து போன்லே வழிஞ்சப்போ இந்த வெட்கம் எல்லாம் மாயமா போச்சாக்கும்.

பாட்ஷா- அப்புறம் சொல்லு

மொழிமகள்- என்ன சொல்ல…

பாட்ஷா- எதையாவது சொல்லு. உடம்பு முறுக்கேறுது..

மொழிமகள்- இங்கேயும் அதே…

பாட்ஷா- அப்புறம் எதையாவது சொல்ல வேண்டியதுதானே..

மொழிமகள்- நீங்க சொல்லுங்க..

பாட்ஷா- நான் என்ன சொல்லட்டும்… நீ…

மொழிமகள்- ஒரு நிமிஷம். என் மாமியார் எழுந்துட்டாங்க போலிருக்கு. டாய்லெட் போவாங்க. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் திரும்ப வர்றேன்…

இதுபோன்ற இடைவெளிகள்தான் டிப்பணியாளன்கள் நுழைய ஹேதுவான இடம். அந்தப் பெண்மணி தன்னுடைய மாமியாரை கழிவறைக்கு அழைத்து விட்டு வருவதற்குள் நம்ம ஆள் இன்னொரு காதலி ஆன்லைனில் இருக்கிறாளா என்று தேடப் போயிருப்பார். மொழிமகளும் மாமியாரை கழிவறைக்குக் கொண்டு போய்விடும் இடைவேளையில் வேறு எந்த நண்பராவது ஆன்லைனில் வந்து காத்திருக்கக் கூடாதே என்ற பதட்டமும் இருக்கும். இந்தப் பிரச்னை எல்லாம் எதுவும் தெரியாமல் சர்க்கரை வியாதி உள்ள மாமியார் டாய்லெட்டில் சற்று அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு காதல் வியாதியில் உள்ளவர்களை பதட்டத்தில் தள்ளிய பாவத்தில் திளைத்துக் கொண்டிருப்பார். மொழிமகள் மீண்டும் திரும்பி வந்தார் என்ன செய்தார் என்பதையும், பாட்ஷா இவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாரா அல்லது வேறு யாராவது தோழி அல்லது தோழனுடன் உரையாடப்போய் விட்டாரா அல்லது, மொழிமகள் திரும்பி வந்து நீரிழிவு நோயுள்ள மாமியாருக்கு மீண்டும் கழிவவறைக்கு செல்லும் உந்துதல் வரும் வரை வேறு யாருடனாவது நெருக்கமான சம்பாஷணையைத் தொடர்ந்தாரா என்பதையும் வாசகர்களின் ஊகத்துக்கு விடப்படுகிறது.

இப்படி இன்னும் வகைவகையாக எத்தனையோ இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திக் கொண்டால்தான் மரியாதை என்பது இந்த டிப்பணியாளனுக்குத் தெரியாத ஒன்றல்ல. ஃபேஸ்புக்கில் இப்போதெல்லாம் மிக அதிகமாக ஜோஸியர்கள் வலம் வருகிறார்கள். கணிணிப் புரட்சியின் பிறகு அவர்களில் பெரும்பாலோர் மரத்தடியைக் காலி செய்து விட்டு வேற்றுத் திணையான இணையத்தில் வலம் வருகிறார்கள். தங்களுக்கான வலைப்பூ, இணையதளம், ஃபேஸ்புக் என்று இன்றைய ஜோசிய திலகங்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் ஃபேஸ்புக் பக்கங்களில் இறைதேடும் புலிகளைப் போல கரையோரம் ஒதுங்கியிருப்பார்கள். ஈண்டு யாம் எடுத்தாள்வது அப்படிப்பட்ட கம்ப்யூட்டர் ஜோசியர் ஒருவரின் ஃபேஸ்புக் உரையாடல்.

காலகண்டன்- வணக்கம் முனுசாமி அவர்களே.

முனுசாமி-ஐயா வணக்கம். நலமா?

காலகண்டன்-நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

முனுசாமி-ஏதோ இருக்கிறோம் ஐயா.

காலகண்டன்- என்ன இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்? ஏதேனும் பிரச்னையா உங்களுக்கு?

முனுசாமி-பிரச்னை யாருக்கு இல்லை ஐயா? அதுவும் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்துக்கு
பிரச்னைக்கு என்ன குறை. பல குறைகள்.

காலகண்டன்- பிரச்னை எல்லோருக்கும்தான் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல யாருக்கு இல்லை சொல்லுங்கள். நம்முடைய கிரக நிலைகளை சரியாகப் பார்த்து வைத்து தகுந்த நேரத்தில் பரிகாரங்கள்
செய்து விட்டால் எந்த நேரமும் யாரையும் ஒன்றும் செய்யாது.

முனுசாமி- அது என்னமோ வாஸ்தவம் ஐயா.

காலகண்டன்- நீங்கள் பிறந்த தேதி, ஊர், சரியான நேரம் மட்டும் சொல்லுங்கள் முனுசாமி.

முனுசாமி- வேண்டாம் விடுங்கள் ஐயா. நடப்பது நடக்கட்டும். எனக்கு எல்லாம் இப்போது பழகிவிட்டது.

காலகண்டன்- இருந்தாலும் சொல்லுங்கள். உங்களை நான் என்ன பணமா கேட்கப்போகிறேன்.

முனுசாமி- ஐயா, காசு தராமல் வைத்தியமும் ஜோசியமும் பார்த்துக் கொண்டால் எதுவும் பலிக்காது என்று என்னுடைய தாத்தா சொல்லுவார்.

காலகண்டன்-பணமெல்லாம் நேரில் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு உங்கள் பிறந்த நேரம், ஊர், தேதி மட்டும் சொல்லுங்கள்.

முனுசாமி- பரணி நட்சத்திரம், மேஷ ராசி ஐயா.

காலகண்டன்- இது மட்டும் சொன்னால் போதாது. நான் கேட்ட விபரங்களும் வேண்டும்.

முனுசாமி-7 ஆகஸ்டு 1958.

காலகண்டன்-பிறந்த ஊர், சரியான நேரம் சொல்லுங்கள். ஏன் இப்படித் தயங்குகிறீர்கள்.

முனுசாமி- கிருஷ்ணகிரி. சர்க்கார் ஆஸ்பத்திரி.

காலகண்டன்-நேரம்?

முனுசாமி- காலை 10.15

காலகண்டன்-கொஞ்ச நேரம் இருக்கிறீர்களா? குத்துமதிப்பாக கணித்துச் சொல்லி விடுகிறேன்.

முனுசாமி- சரி ஐயா. காத்திருக்கிறேன்.

உரையாடலில் இருப்பவர்கள் இப்படிக் காத்திருக்கும் நேரம்தான் டிப்பணியாளன் உள்ளே வந்து தன் காரியத்தை முடித்துவிட்டுப் போக வசதியான சந்தர்ப்பம். இப்போது நமது ஜோசிய திலகம் ஓரிரு தொலைபேசிகள் பேசிவிட்டு வீட்டுக்கு உள்ளே போய் ஒரு காபி குடித்து விட்டு மீண்டும் தன் மடிக்கணிணியில் உட்காருவார். முனுசாமி காத்திருந்தால் அன்று காலகண்டனாருக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். காலகண்டனாருக்காக நம்முடைய முனுசாமி காத்திருக்க மாட்டார் என்னும் வாய்ப்பு மிகக் குறைவுதான். உதாரணத்துக்கு என்னுடைய தீராப் பிரச்னைக்கு லட்டு போல ஒரு தீர்வை நீங்கள் எனக்குக் கொண்டுவந்தால் நான் வேண்டாம் என்று ஓடிவிடுவேனா? எனவே முனுசாமி கண்டிப்பாக காத்திருப்பார். இல்லை என்றாலும் வேறு ஒரு ராமசாமி ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருப்பார். அவரை ஒரு தட்டுத் தட்டலாம்.

இப்படி சொல்லிக் கொண்டே போனால் இதற்கு ஒரு முடிவு கண்டிப்பாக இருக்காது. ஃபேஸ்புக் என்பது நவீன மனிதனின் வாழ்வில் ஒரு அடவி போல ஒன்று கலந்து விட்டது. அடவியில் எல்லாம் இருக்கும். இங்கும் எல்லாம் உண்டு. அடவியில் ஆபத்தும் உண்டு உல்லாசமும் உண்டு. நன்றும் உண்டு. தீதும் உண்டு. எல்லாவகையான மிருகங்களும் அடவியில் எல்லா நேரங்களிலும் உலவிக் கொண்டிருக்கும். எந்த மிருகம் உங்களைக் குறுக்கிடும் என்பதோ நாமே ஏதாவது ஒரு மிருகமாக மாறி யாருக்கு எதிராக செல்வோமோ எல்லாம் அவரவருடைய அன்றன்றைய வினைப்பயன் அடிப்படையில் வாய்க்கும்.

இந்த டிப்பணியை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவதற்கு முன்பு இதனை நண்பர் ஒருவரிடம் படிக்கக் கொடுத்தேன். என்னுடைய குரோதத்துக்கும் விரோதத்துக்கும் பயந்து இது என்ன சிறுகதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் இப்படி உருவற்று இருக்கிறதே என்று தயக்கத்துடன் திருப்பிக் கொடுத்தார். இதனை நீங்கள் முன்-பின் நவீனத்துவ சிறுகதையாக வகைப்படுத்தலாம் என்று அவருடைய கண்களைத் தவிர்த்தவாறே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவசரமாக நகர்ந்து விட்டேன். யாருக்கு நேரம் இருக்கிறது? எமக்கு இன்னும் பல நவீன தொடர்பு சாதனங்களின் மீதான டிப்பணியை உடனடியாக எழுதியாக வேண்டும்.

ராகவன்தம்பி

Series Navigationவரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.
author

Similar Posts

53 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    சுவாரசியமான உரையாடல்கள்(!) நிறைந்த அடுத்த அத்தியாயம் எப்போது?

  2. Avatar
    Kavya says:

    டிப்பணி என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. பிராண்ட் பெயர்களை மொழியாக்கம் செய்யக்கூடாதென்பது சரியென எனக்குத் தோன்றவில்லை. மொழி ஆருக்கு? அம்மொழியைப் பேசுவோருக்குத்தானே? அவர் உச்சரிக்கத் தோதாகவுள்ளவாறுதானே சொற்கள் இருக்கவேண்டும்? அது பிராண்டு பேரானாலென்ன அ-பிராண்டு பேரானாலென்ன? பிராண்டு பேரை நம் வாயில் நுழையும்படி மாற்றக்கூடாதென்று எவரேனும் சட்டம்போட்டிருக்கிறார்களா ராகவன்? திருவனந்தபுரத்தை ஏன் வெள்ளைக்காரன் ட்ரிவாண்ட்ரம் என்று மாற்றிக்கொண்டான்? அவன் வாயில் திருவனந்தபுரம் நுழையாதெனவே, இல்லையா? அவன் இப்படி ஒரு சின்னக்குழந்தையிடம் போய்க்கேட்டா செய்தான் ராகவன்?

    அதே விதிதான் நமக்கும். ட்ரான்ஸ்லிட்டரேசன் வேறு பொழிபெயர்ப்பு வேறு. ஃபேஸ் புக் என்பதை முகநூல் என்று மாற்றினால், அது மொழிபெயர்ப்பு. பேசுபுக்கு என்றால் ட்ரான்ஸ்லிட்ட்ரேசன். பேசுபுக்கு என்றால் சிரிப்பீர்கள். ஆனால் ஃபேஸ் புக் என்று நிலவ விட்டால் தன்னாலேயே கொஞ்சநாளில் பேசுபுக்கு என்றுதான் ஆகும். அப்போது சிரிக்கமுடியாது. எல்லாரும் அப்படியே சொல்லும்போது சிரித்தால் பைத்தியம் என்று சொல்வார்கள்.

    மொழிபெயர்ப்பு சொல்லுக்குச்சொல்லாக வராது. அப்படிச்செய்பவர்கள் பள்ளிக்குழந்தைகள் மட்டுமே. ‘முக நூல்’? நன்றாகத்தான் இருக்கிறது. அப்படியே இருக்கட்டும் !

  3. Avatar
    Kavya says:

    முக நூல் என்பது ஒரு திறந்த வெளி. அங்கு வேலிகள் இல்லை. இணையம் அவ்வாய்ப்பை மக்களுக்கு அளிக்கிறது. எனவே எவருக்கு எப்படி பிடித்தமோ அப்படி உரையாட அல்லது அரட்டையடிக்க அசத்தலான வாய்ப்பை தாராளமாக வழங்குகிறது. பேசவருவோர் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது அறியாமை. இருக்கவேண்டும் எனபது அதிகப்பிரசிங்கித்தனம். அவரவருக்குப்பிடித்தவண்ணம் உரையாடுவதை அங்கதமாகத் திரித்து இன்புறுவது ஒரு குறுகியமனப்பான்மையே.

    அதே சமயம், இப்படிப்பட்ட திறந்த வெளியில் மலங்கழிப்போருமுண்டல்ல்வா? அதைப்போல முகநூலிலும் அசிங்கமான உரையாடல்கள் இடம்பெறலாம். அது திறந்த வெளியானபடியாலேதான் நடக்கிறது என்று தெரியவும். நடாத்துபவர்கள் விரும்பினால் வேலிகள் போட்டு அவ்வுரையாடல்களத் தவிர்க்கலாம். ஆனால் வெள்ளைக்காரன் செய்யமாட்டான். முக நூல் அவனிடம்தான் இருக்கிறது. மாறாக இந்தியர்களிடன் இருந்தால் ராகவன் செய்வதைப்போல கிண்டலடித்தே நோகடிப்பார்கள். அல்லது, இந்திய அரசு கேலிச்ச்சித்திரங்களைத்தடைசெய்ததுபோல தடை செய்வார்கள். நல்லவேளை முகநூல் தப்பிவிட்டது.

    நாம்தான் வளரவேண்டும். அனைவருக்கும் அவரவருக்கெ வேண்டியபடி சுதந்திரம் வழங்கப்படவேண்டும். இங்கு அவரவருக்குப்பிடித்தோரிடம்தான் உரையாடல். மற்றவர்கள் ஏன் மூக்கைச்சிந்த வேண்டுமெனபது எனக்குப் புரியாப்புதிராக இருக்கிறது. தொலைக்காட்சிகள் குத்துப்பாட்டுகளும், இரவில் பிகின் டிஸ்டினேசனும் தான். பிடித்தால் பாரும். இல்லாவிட்டால், அணைத்து விடவும். அதையே முகநூலிலும் செய்யவும். The article entire is based on the arrogant feeling that I AM OK. YOU ARE NOT OK.

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      என்னுடைய கதையில் ஃபேஸ்புக் என்று இருக்கட்டும் என்று சொன்னேன். இந்தக் கதை தமிழ் மொழியில் பெரிய மாற்றத்தையா உண்டாக்கப் போகிறது? ஏன் பயப்படுகிறீர்கள். முகநூல் என்றே இருக்கட்டும். நான் யார் அதைத் தீர்மானிப்பதற்கு. ஏதோ ஒரு கதை எழுதிய பாவத்துக்காக என்னை பெரிய சர்வாதிகாரி போல சித்தரித்து விட்டீர்களே. இது கட்டுரை அல்ல. சிறுகதையாக முயற்சித்தது. சில உரையாடல்களை சுட்டிக்காட்டி அங்கதம் செய்யப்பட்ட கதை. ஒரு ஃபேஸ்புக் உரையாடலை சிறுகதை வடிவில் மாற்ற முடியுமா என்று யோசித்தது. அங்கதம் செய்வது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்று இன்று தெரிந்து கொண்டேன். தொலைக்காட்சிக்கு நீங்கள் சொன்னதுதான் இந்தக் கதைக்கும் பொருந்தும் இல்லையா? பரவாயில்லை. அவசரப்பட்டு கோபப்பட்டிருக்கிறீர்கள். இதைப் போன்ற உரையாடலை வைத்து இன்னொரு சிறுகதையை முயற்சித்தால் இன்னும் சுவாரசிமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

  4. Avatar
    Geetha Sambasivam says:

    ஃபேஸ் புக்கில் யாரோ ஒரு சிநேகிதி அழைப்பில் நுழைந்தது தான். மற்றபடி அங்கு போனதே ரொம்பக் குறைவு. கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வருத்தமாயும் இருக்கிறது. இது கலாசார முன்னேற்றமா? பின்னேற்றமா? :((((( எதையுமே சரியானபடிக் கையாண்டால் முன்னேற்றமாய்க் கொள்ளலாம்.

    1. Avatar
      Kavya says:

      என்ன சிந்தனை தாயி?

      கலாச்சாரமெங்கே வந்தது இங்கே ? முகநூல் உலகளாவிய இணையதள உரையாடல் மேடை. அங்கே பொதுப்படையாகவோ தனிநபர்களுக்கிடையோ பேசுக்கொள்ளலாம். அஃது உலகளாவிய என்றிருப்பதால், எந்த கலாச்சாரத்தில் கொண்டுபோய் சேர்ப்பீர்கள்? இந்தியாவில் முகநூலில் உரையாடினால் இந்திய கலாச்சாரம் கெட்டுப்போய் விட்டதென்கிறீர்களோ?

      இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் லீட் கட்டுரையைப்படிக்கவும். அதைப்படித்தவுடன் ராகவன் கட்டுரைதான் (சாரி, கதை! அப்படித்தான் அவர் சொல்கிறார்!!)எனக்கு நினைவுக்கு வந்தது.

      Pl read this: http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/Of-sex-goddesses-and-godmen/articleshow/13362572.cms

      Written by Prof Sanja Srivasatva of Instt of Eco Growth.

      It is for Cultural czars and czarinas to read.

  5. Avatar
    charusthri says:

    According to me FACEBOOK is a mere waste of time.Unnecessary communication to unknown people is always dangerous.Those who are addicted to FACEBOOKwaste their time in meaningless conversation as RAGHAVAN THAMBI says.Anyway very good and sensible article.In THINNAI since many more months same writers are writing and it has been monopolised.

  6. Avatar
    Kavya says:

    Facebook is a social networking site. Absolute freedom should be given to the users.

    No avuncular advice like எதையுமே சரியானபடிக் கையாண்டால் முன்னேற்றமாய்க் கொள்ளலாம் is inapplicable here.

    How to handle it shd b best left to the users only. If one is cheating some gullible there, the site cant be held responsible for that.

    The users r forewarned. Despite it, if u come to grief, u alone r responsbile.

    An e.g suffices. Two days ago, a youth by name Chakravarthy of Panruti has been arrested by Madurai police. His offence? He conned nearly 15 women on the false promise of marriage and extracted from them money and jewellery. The list of his victims – hold ur breath! – include college teachers, software engineers, doctors and nurses. All thro Facebook?

    U want to blame the Facebook or these ‘educated’ ladies?

  7. Avatar
    Kavya says:

    It is through Facebook that the revolution in Egypt, Tsunami warnings, and so many galavanisation and canvaasing of public opinion for public causes are being accelerated. The dictators, the tyricannical regimes r running for cover. The Egypt revoltuion was the first of this kind.

    Many public authorities/Organisations have entered FB and the ppl interact with them. The pulse of the public is felt easily and quickly by the authorites who r concerned and respond. Such a forum where we, the unknown and obscure, can enter and express our opinions is godsend.

    Ppl do make abuse of anything: polisaamiyaars, poli doctors, poli police, poli teachers et al. We dont say the samiyaars should not exist, doctors should change their profession, poilice should be inactive, teachers should sell vegetables, do v?

    Advantages r many. To kill FB by talking against it is to to throw the baby with bathwater !

    Charu, write more. But dont cavil at others writing.

  8. Avatar
    மலர்மன்னன் says:

    எழுதிக் கொண்டிருக்கையில் சோர்வு தட்டி ஒரு மாற்றத்திற்காக இப்போதுதான் இதைப் பார்த்துப் படித்தேன். ராகவன் தம்பி தமிழுக்குக் கிடைத்திருக்கிற சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர். அவருடைய சனி மூலை ஒரு நல்ல பதிவு. அவருடைய வடக்கு வாசல் நின்று போனது ஓர் இழப்பு. இங்கு வெளியாகியிருப்பது நல்ல சிறுகதை. நகைச் சுவை உணர்வு உள்ளவர்கள் நன்கு ரசிக்கக் கூடிய சிறுகதை. தமிழில் தரமான நகைச் சுவை எழுதுகிறவர்கள் குறைவு. அசட்டுத்தனங்கள்தான் அதிகம். ராகவன் தம்பி நிறைய எழுத வேண்டும். அவர் எழுதுவதற்கு ஏற்ற இதழ்கள் குறைவுதான். என்ன செய்ய, இது தமிழுக்கு நேர்ந்துள்ள துரதிருஷ்டம். காலச்சுவடு, கணையாழி ஆகியவை ராகவன் தம்பியைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டும் என நினைக்கிறேன்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      மிக்க நன்றி திரு.மலர்மன்னன். ஒரு சிலருக்கு பரமபத பாக்கியம் கிட்டுவதற்கு முன்பே இரங்கல் பாக்கியம் கிட்டும். வடக்கு வாசல் இதழுக்கு அது நடந்திருக்கிறது. இன்னும் வடக்கு வாசல் நிற்கவில்லை. தடுமாறிக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நிற்கலாம் என்னும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்கான கடுமையான முயற்சிகளை டெல்லியில் பல தமிழுணர்வு உள்ளவர்களும் கலாச்சார பீடத்தை அலங்கரிக்கிறவர்களும் முயற்சித்து வருகிறார்கள்.

      உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

      ராகவன் தம்பி

  9. Avatar
    மலர்மன்னன் says:

    வடக்கு வாசல் பற்றி விசாரித்தபொழுது தவறான தகவல் தரப்பட்டது. மன்னிக்கவும். பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருந்தால் இதழ் பற்றிய விவரங்கள் -வரவு செலவு- தாருங்கள். இங்கும் ஆரவம் உள்ளோரை அணுகிப் பார்ப்போம்.
    -மலர்மன்னன்

  10. Avatar
    punai peyaril says:

    பேஸ்புக் பற்றிய மேலோட்டமான புரிதலே கட்டுரையாளருக்கு இருக்கிறது. இதன் அடித்தளம் என்று சொல்லப்படும் ஹார்ட்வேர் கனெக்டிற்கு வேண்டுமானால் இந்த தள நிலை இருந்திருக்கலாம். மை பேஃஸ் , ஆர்குட் இந்த கட்டுரையாளர் சொல்லும் வகையறா அடங்கும். பேஃஸ்புக் இதெல்லாம் தாண்டி உலக சமூகத்தில் எவ்வித வேலியுமின்றி உங்களின் பன்முகங்கள் பற்றி உலகறிய வந்த தளமே இது. அதனால் தான், மார்கிற்கு பேஸ்ஃபுக் என பெயர் வைக்க தோன்றியுள்ளது. அதில் பேஜ்ஸஸ் என்பதில் , உங்களுக்கான (உ.ம்) அரசியல், சினிமா, விஞ்ஞானம், மேல்படிப்பு, என் ஹாபி என பல பக்கங்கள் கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் வேறு வேறோ இல்லை கலந்தோ சப்ஸ்கிரைபர்கள் இருக்கலாம். வெட்டி அரட்டை அடிக்கவோ, சோ கால்டு கெட்டுப் போகவோ பேஸ்புக் தேவையில்லை…. பல பல இருக்கிறது. பேஸ்புக் கொண்டு உங்கள் தொழில் உங்க்ள் திறமை உங்க்ள் அறிவுத்திறன் ஒத்த உரையாடல் காணலாம். புரட்சியே உலகில் இந்த இணையத்தளத்தால் வந்த பின்பும்… வெட்டி அரட்டைக் களம் இது என்பது போல் எழுதுவதே அறியாமை.. என்ன செய்ய நம் முகபக்கம் அவ்வளவே….

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      உண்மையாகவே ஃபேஸ்புக் பற்றி எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. அதன் இன்னொரு பக்கமான சில உரையாடல்களை வைத்து ஒரு சிறுகதையாக முயற்சிக்கலாம் என்றுதான் துணிந்தேன். இந்த மாதிரி அரைகுறைக் கதைகளின் அடிப்படையிலா ஃபேஸ்புக்கை தடைசெய்து விடுவார்கள்? சும்மா இருக்காமல் எதையோ எழுதி வைத்த என்னைப் பார்த்து ஏதோ விஞ்ஞானப் புரட்சிக்கும் அளவற்ற சுதந்திரத்துக்கும் எதிரானவன் போல சித்தரித்து இருப்பது தமாஷாக இருக்கிறது. என்னை என்னவோ என்று நினைத்திருந்தேன். ஃபேஸ்புக்கை வெட்டி அரட்டைக் களம் என்று எங்கும் எழுதவில்லையே. அங்கு இப்படியும் அரட்டை அடிக்கப்படுகிறது என்பதைத்தான் காட்டியிருந்தேன். ஒருசில சுவாரசியமான அரட்டைகளை ஒட்டியிருந்தேன். இன்னொரு விஷயம், நான் தேர்ந்த முடிவாக எதையும் சொல்லவில்லை. புனைபெயரில் எழுதியிருப்பது போல என்னுடைய முகபக்கம் அவ்வளவுதான். நான் என்ன செய்ய முடியும்? இந்தக் கருத்துப் பெட்டிக்குக் கீழே வழக்கமாகக் கொடுக்கப்படும் மிகக் கடினமான கணிதம் போன்றது அல்ல நான் சொல்லியிருப்பது. அதை விடக் கொஞ்சம் எளிமையானது இல்லையா? அந்தக் கணக்கைப் போட நான் படும் கஷ்டத்தை விட என் கதையை வைத்து நீங்கள் கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

      1. Avatar
        punai peyaril says:

        காமெடி…? முதல்லெயே சொல்லிருந்தா சிரிக்க முயற்சித்திருப்போமே…. உங்கள் முயற்சி சிரிக்க வால்த்துக்கல்…

  11. Avatar
    Kavya says:

    //ஒரு பணிவான (அதே நேரத்தில் கொஞ்சம் நீளமான) குறிப்பு
    இங்கு முகநூல் என்று தூய தமிழில் குறிப்பிடாமல் ஃபேஸ்புக் என்று எழுதியிருப்பதை வை
    த்து சுத்தத் தமிழ்ப் பற்றாளர்கள் தயவு செய்து கோபம் கொள்ளக் கூடாது. //

    ராகவன் இப்படித்தான் தொடங்குகிறீர்கள் நீங்கள் சொல்லும் ‘சிறுகதையை’. இஃதெல்லாம் தேவையா? மொழி ஆராய்ச்சி சிறுகதையில் எப்படிவரும்?

    “சுத்தத் தமிழ்ப்பற்றாளர்கள்” என்று எவரை பகடி பண்ணுகிறீர்கள்? அவர்கள் ஆர்? ஏன் ஒருவருக்கு அப்பற்று இருக்கக்கூடாதா? இருந்தால் அவரைக் கேலி செய்யலாமா? உங்கள் தொடக்கம் இப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளையே எழுப்புகிறது.

    “முகநூலில் நான் பார்த்த நல்லவை கெட்டவை” என்று ஒரு கட்டுரையே போடலாம். அல்லது அவ்வுரையாடல‌களை வைத்து அங்கதச்சுவை நிறைந்த ஒரு சிறுகதை வரையலாம். இரண்டுமே செய்யாமல் ‘சிறுகதை’யென்று அழைத்துக்கொள்கிறீர்கள். எப்படி?

    இரு தோணிகளில் காலைவைத்தால் தொபுக்கடீர் என்று கடலுக்குள் விழவேண்டியதுதான் என்பார்கள் எங்கள் பக்கம். அதுவே என் நினைவுக்கு வருகிறது.

    எழுத்துத்திறமையுள்ளவர் என அறிகிறேன். நல்ல சிறுகதைகளைத் திண்ணையில் போடுங்கள்.

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      //ராகவன் இப்படித்தான் தொடங்குகிறீர்கள் நீங்கள் சொல்லும் ‘சிறுகதையை’. இஃதெல்லாம் தேவையா? மொழி ஆராய்ச்சி சிறுகதையில் எப்படிவரும்?//

      அப்படி எல்லாம் இலக்கணங்களோ சட்டங்களோ இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. எத்தனையோ விஷயங்கள் நமக்குத் தெரிந்திருப்பதில்லை. எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை இல்லையா?

      “//சுத்தத் தமிழ்ப்பற்றாளர்கள்” என்று எவரை பகடி பண்ணுகிறீர்கள்? அவர்கள் ஆர்? ஏன் ஒருவருக்கு அப்பற்று இருக்கக்கூடாதா? இருந்தால் அவரைக் கேலி செய்யலாமா? உங்கள் தொடக்கம் இப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளையே எழுப்புகிறது.//

      என்னைத் தவறாக நினைக்காதீர்கள் என்று வேண்டுவது பகடியாகுமா? கேலியாகுமா என்று தெரியவில்லை. சுத்தத் தமிழ்ப் பற்றாளர்கள் என்பதை குறையாகச் சொன்னது போலக் காட்சியளிக்கிறதா?

      “முகநூலில் நான் பார்த்த நல்லவை கெட்டவை” என்று ஒரு கட்டுரையே போடலாம். அல்லது அவ்வுரையாடல‌களை வைத்து அங்கதச்சுவை நிறைந்த ஒரு சிறுகதை வரையலாம். இரண்டுமே செய்யாமல் ‘சிறுகதை’யென்று அழைத்துக்கொள்கிறீர்கள். எப்படி?

      இனி எதையாவது எழுதுவதற்கு முன்பு உங்களிடம் கண்டிப்பாக அனுமதி வேண்டிவிட்டு எழுத உட்காருகிறேன். நன்றாக இல்லாத ஒன்று சிறுகதையாக இருந்தால் என்ன கட்டுரையாக இருந்தால் என்ன? ஏதாவது ஒரு சிமிழுக்குள் கண்டிப்பாக அடைத்தே தீரவேண்டுமா?

      //எழுத்துத்திறமையுள்ளவர் என அறிகிறேன். நல்ல சிறுகதைகளைத் திண்ணையில் போடுங்கள்.//

      எழுத்துத் திறமை இருந்திருந்தால் இப்படி உங்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருப்பேனா? நீங்கள் என்னை கண்டித்தாலும் அனுமதி மறுத்தாலும் திண்ணை ஆசிரியர் அனுமதிக்கும் வரை எப்போதாவது இதுபோன்ற ரெண்டுங்கெட்டான் கதைகளை நேரம் கிடைக்கும்போது அனுப்பிக் கொண்டிருப்பேன். கவலையே படவேண்டாம்.

      Punai Peyaril சொல்வது போல லைக் பட்டன் இருந்திருக்கலாம். அன்லைக் பட்டனும் இருந்திருக்கலாம். பாவம் அவர் மெனக்கெட்டு இந்தக் கதையல்லாத கதையைப் பற்றி மெனக்கெட்டு இத்தனை எழுதியிருக்க வேண்டாம் இல்லையா?

      ராகவன் தம்பி

  12. Avatar
    லெட்சுமணன் says:

    காவ்யா அவர்களே, இந்த செய்திகளையும் படிக்கிறீர்கள் என்று தான் நினைக்கிறேன்.

    தேவைக்கு அழைக்கலாம் என்று ஆசிரியைகள் போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்ட +2 மாணவன்

    பேஸ்புக் நண்பர் பாராட்டியதை தாயார் கண்டித்ததால் 1148 மார்க் எடுத்த மாணவி தற்கொலைக்கு முயற்சி

    ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று ‘ஸ்டேட்டஸ்’ வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி

  13. Avatar
    Kavya says:

    நாணயத்துக்கு இருபக்கங்கள் லெட்சுமணன்.

    போகட்டும். இன்றைய முகநூல் கெடுதியே என்று தூக்கியெறிந்தவுடன், விஷமிகள் சும்மாயிருப்பார்களா? இல்லை. வேறு வழியைத் தேடுவர். மனமுதிர்ச்சி அல்லது மனப்பக்குவத்தை வளர்க்க மறந்த கல்வியும், ஆசிரியர்களும், பெற்றொர்களும் அப்போதும் இருப்பர். அவர்களின் குழந்தைகள் விஷமிகள் வலையில் விழுந்துகொண்டேயிருப்பர். டெலிஃபோன் செக்ஸ் இருக்கிறது; போர்ன் வீடியோ இருக்கிறது. இரவுத்தொலைக்காட்சியில் பிக்கினி டெஸிட்னேஷன் இருக்கிறது. பகலில் குத்துப்பாட்டுகள் இருக்கின்றன. முகநூல மட்டுமன்று வில்லன்.

    காலங்கள் மாறும். கருவிகளும் மாறும். ஆனால் காட்சிகள் மாறா! அக்காட்சிகளில் கெட்ட காட்சிகளிலிருந்து உங்கள் பெண்டு பிள்ளைகளை எப்படி காப்பாற்றுக்கொள்வது என்று பாருங்கள். அவர்களுக்கும் பயிற்சியளியுங்கள். அதே நேரத்தில் அக்காட்சிகளும் நல்லவையும் இருக்குமல்லவா? அவற்றை நுகர்ந்து பயன்பெறுவோர் இருப்பரல்லவா? அவ‌ர்க‌ளுக்காக‌ முக‌நூல் இருக்க‌ட்டும்.

    குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுக்கிறார்கள் இப்போது பெண்பிள்ளைகளுக்கு. ஏன் தெரியுமா? பாலியல் வக்கிரம் செய்வோர் வேறு ஆருமில்லை. பெண்பிள்ளைகளுக்குத் தெரிந்த அங்கிள்களே. அவர்கள் முதலில் டச்சில் ஆரம்பிப்பார்கள். அந்த அக்கிள்கள் பள்ளியில் ஆசிரியர்களாகவும் உள்ளார்கள். 1000 ஆண்டுகளுக்குமுன், தமிழ்நாட்டில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று எழுதியவரிடம் இப்படி லெட்சுமணன் போல ஒருவர் வந்து ஏதாவது கேட்டிருப்பாரோ!

    எவ்ளோ அறிவு அன்த‌ கணிய‌ன் பூங்குன்ற‌னாருக்கு !

    1. Avatar
      punai peyaril says:

      லைக் பட்ட்ன் இருந்திருந்தால் எழுதாமல், காவ்யாவின் இந்த கமென்டிற்கு லைக் பட்டனை தட்டியிருப்பேன்…

  14. Avatar
    Kavya says:

    ஒரு +2 பெண் நல்ல மதிப்பெண் எடுத்தும் முகநூல் உரையாடலால் தற்கொலைக்கும் முயற்சி செயதாள் இல்லையா? அஃது முக‌நூலின் த‌வ‌றா? இல்லை அவ‌ளின் பெற்றோரின் முட்டாள்த‌னமா? ஒரு பைய‌னிட‌ம் ஒரு பெண் பேசினால் த‌வ‌றென்று க‌ருதும் த‌மிழ‌க‌த்தில் இப்ப‌டித்தானே வ‌ரும்?

    நண்பர்களே, சின்னாள்களுக்கு முன் – இந்த வாரம்தான் – ஐ ஐ டி தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில் இந்தியாவில் முதல் மாணவனாக வந்தவன் நோய்டாவைச்சேர்ந்த பையன். அவனின் பேட்டியைப்படியுங்கள். என்னாளும் தான் முகநூலில் செல்லாமலில்லையென்றும் பரீட்சைநாளிலும் கூட சென்றேனென்றும் முகநூலில் தான் தேர்வுக்கு ஆயுத்தம் செய்யும் வண்ணம் தன் நண்பர்கள் ஆசிர்யர்களிடம் உரையாடி பயன்பெற்றதாகவும் சொன்னான்.

    இங்கே இப்படி. அங்கே அப்படி. த‌வ‌றெங்கே ? எங்கேயுமில்லை. உங்க‌ளிட‌ம்தான்.

  15. Avatar
    ராகவன் தம்பி says:

    இந்த உரையாடல்களைக் கூட கொஞ்சம் தட்டிக் கொட்டி ஒரு சிறுகதையாக மாற்றலாம் என்று ஆசை. ஆனால் நிறையபேர் கோபித்துக் கொள்வார்களே என்று பயமாக இருக்கிறது.

    ராகவன் தம்பி

  16. Avatar
    மலர்மன்னன் says:

    ராகவன் தம்பி, அரையுங் குறையுமாக மேய்ந்துவிட்டு எல்லாம் தெரிந்துவிட்டது போன்று சொல்லாடும் அதிகப் பிரசங்கிகள் மலிந்துவிட்ட வாசகர் தளமாகத்தான் இன்றைய தமிழுலகம் உள்ளது. “உங்களுக்கு அசாத்திய பொறுமை உள்ளது” என்று வெ.சா. என்னிடம் கூறுகிறார். என்ன செய்வது, எதுவானாலும் அயர்ந்துவிடாமல் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போகக் கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு போங்கள். உங்களை ரசிப்பதற்கு ஒரு சிறிய வட்டமாவது இருக்கும். அது விரிவடையும் என்று நம்புவோம். அறுபதுகளின் தொடக்கத்திலும் எழுபதுகளிலும் இப்படித்தானே அரும்பாடுபட்டு வாசிப்பு ரசனையைக் கட்டமைத்தோம். ஆனால் அது இன்னும் போதுமானதாக இல்லை. என்ன செய்வது, தமிழ்ச் சூழலில் மலினங்களின் தாக்கங்கள் அதிகமாக இருக்கின்றன! இன்றைக்குத் தமிழில் வரும் எல்லா இதழ்களிலுமே கூடுதலான இடம் எதற்கு ஒதுக்கப்படுகிறது? பொழுதுபோக்கு வணிக இதழ்களில் கதைகளும் தொடர்கதைகளும் எழுதுபவர்கள்தானே இன்று அதிக பட்ச வாசகர்களுக்கு அறிமுகமானவர்களாக இருக்கிறார்கள்? அங்கு போணியாகாததால்தான் இணைய இதழ்களூக்கு வந்துவிட்டதாக இணைய இதழ்களையும் அதில் எழுதுவோரையும் எள்ளி நகையாடுபவர்களும் இருக்கிறார் கள்தான்! எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போக வேண்டியதுதான்! தெருவில் இறங்கி நடக்காமலா இருக்கிறோம்?
    -மலர்மன்னன்

    1. Avatar
      punai peyaril says:

      மம, இங்கு எல்லோரும் ஒன்றும் அரையும் குறையுமாக மேய்ந்து விட்டு அலையும் கூட்டமில்லை. அந்த காலத்தில் ஒன்றோ இரண்டோ தான் பத்திரிக்கைகள் இருக்கும்… பத்திரிக்கை ஆசிரியருக்கு அல்லக்கையாக இருப்பவர்களும், பேட்டி எடுக்கப் போகும் நபரின் வாசலில் அய்யா சாமி என்பது போல் கை கட்டி தயங்கி தயங்கி கேள்வி கேட்கும் கூட்டமும் தான் பத்திரிக்கை உலகில். இணைய உலகில், அந்தந்த விஷயம் தெரிந்தவர்கள் எழுத முடிகிற சூழல். பத்திரிக்கை நடத்துபவரையோ இல்லை பத்திரிக்கை பிரசுரம் பண்கிறவரையோ தெரியும் என்ற தகுதி மட்டும் கொண்டு எழுத்தாளர் பத்திரிக்கையாளர் என்று இருந்த கூட்டத்திற்கு பி.பி இதனால் கூடும். ஏதோ வாசிப்பு ரசனையை கட்டமைத்தீர்கள் என்று சொல்கிறீர்களே அது என்ன என்று அறிந்து கொள்ளலாமா…? தலையின் கனம் கூடி பாதத்தின் பணிவு குறைந்தால் தலை குனியும் நிலை இருக்கும்… இங்கு யாரும் போணியாகாமல் இணையத்திற்கு வரவில்லை.. ஓப்பன் சோர்ஸ் கான்சப்ட் ,,, இந்த் இணையத்திற்கு முரண்டு பிடித்து பின் அனைத்துப் பத்திரிக்கையும் வந்து விட்டன… தினமலர், விகடன் பின்னூட்டங்களும் இது மாதிரி தான்… .. ராகவன் தம்பி வயதானவர் என்று எனக்கு தெரியாது… இப்போது நீங்கள் சொல்லியே தெரியும். முன்பே தெரிந்திருந்தால் பின்னூட்டம் இட்டிருக்க மாட்டேன்… ஊரே மாற்ற இங்கு இந்துஸ்தானிலேயே இருந்தோம் என்று மார்தட்டிய நீங்கள் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தெருவில் நடக்கவில்லையா என்று எழுதுவது இலட்சியவாத சிந்தனை பற்றி கேள்விக்குறியாக்குகிறது….

      1. Avatar
        ராகவன் தம்பி says:

        //ராகவன் தம்பி வயதானவர் என்று எனக்கு தெரியாது… இப்போது நீங்கள் சொல்லியே தெரியும். முன்பே தெரிந்திருந்தால் பின்னூட்டம் இட்டிருக்க மாட்டேன்…//

        பின்னூஙட்டங்களுக்கு இந்த மாதிரி சலுகைகள் எல்லாம் உண்டு என்றால் முதலிலேயே என் பிறப்புச் சான்றிதழ் எல்லாம் அனுப்பி இருப்பேனே. நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன். பரவாயில்லை. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்.

  17. Avatar
    punai peyaril says:

    கண்டிப்பாக சிறு கதையா என்ன பெருங்கதையா கூட மாத்துங்க… என்ன முன்னாடி மாதிரி இருந்தா பேப்பர கழுதையாவது தின்னும்… இப்ப.. இணையத்தில் எந்த கழுதைக்கும் பிரசுரம் ஆகும் பத்திரிக்கைகளால் பிரயோஜனமில்லை…. துக்ளக் இணையத்தில் ஆரம்பித்தால், பாவம் கழுதைகள் அட்டைப்படத்தில் வர முடியாதது மாதிரி தான்….

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      பிரிண்ட் எடுத்து தாளில் எடுத்துக் கொள்ளும் வசதியை உங்களுக்கு யாரும் மறுக்க வில்லையே புனை பெயரில்? நான் எழுதுவதை தாராளமாக தாளில் அச்செடுத்து நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பிரச்னை ஒன்றும் இல்லை. இதற்கெல்லாம் போய்க் கவலைப்படுவார்களா என்ன?

      ராகவன் தம்பி

  18. Avatar
    லெட்சுமணன் says:

    காவ்யா அவர்களே,

    ===================================
    An e.g suffices. Two days ago, a youth by name Chakravarthy of Panruti has been arrested by Madurai police. His offence? He conned nearly 15 women on the false promise of marriage and extracted from them money and jewellery. The list of his victims – hold ur breath! – include college teachers, software engineers, doctors and nurses. All thro Facebook?
    ====================================

    காவ்யாவின் இந்த உதாரணத்துக்கு மறுமொழியாக முகநூலிலும் இது போன்று நடைபெறுகிறது என்று சொல்ல மட்டுமே நான் நினைத்தேன். முகநூலே தவறு என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நீங்களாகவே எதையாவது யோசித்து கோபப்பட்டு ஒரு வாங்கு வாங்கி விடுகிறீர்கள்.

    “எந்த ஒரு டெக்னாலாஜியும் பழசை புதுப்பிக்கிறது” என்பது உண்மை தான்.

    இவை தரும் தனிமை(Privacy) மற்றும் சுதந்திரம் (Freedom) தவறுகளை அதிகப்படுத்துகிறது என்பதும் உண்மை.

  19. Avatar
    லெட்சுமணன் says:

    சமீபத்தில் சென்னையின் ஒரு பிரபலமான பள்ளியின் தலைமை ஆசிரியை சொன்னதை அப்படியே தருகிறேன்.

    =======================================
    என்னிடம் நேற்று எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் தந்தை ஒரு சக வகுப்பு மாணவனை T.C கொடுத்து உடனே பள்ளியை விட்டு அனுப்ப வேண்டும் என்றார்.

    எதற்கு என்றேன்.

    என் பெண்ணின் ஃபேஸ்புக் அக்கௌண்டில் அவன் போட்டோவை பார்த்தேன். உடனே டிஸ்மிஸ் பண்ணுங்க என்றார்.

    நான் கேட்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணை ஃபேஸ்புக் போவதற்கு நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்? இது யார் தப்பு? அந்த பையனை எப்படி டிஸ்மிஸ் பண்ண சொல்கிறீர்கள் என்றேன்?

    நீங்கள் உங்கள் பெண்ணை இணையத்தில் அவள் இஸ்டத்துக்கு போக விட்டு விட்டு இப்படி குறை கூறினாள் என்ன அர்த்தம்? என்று கேட்டேன்.

    ========================================

    இதுதான் எதார்த்தம். இதையும் எல்லாரும் “டிப் பண்ணிக்கோங்க”.

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      இந்த சுவாரசியமான பின்னூட்டங்களை வைத்து நான் கட்டுரை மாதிரித் தோற்றமளிக்கும் சிறுகதை ஒன்றை எழுதும் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்தக் கழுதை தின்றாலும் தின்னவில்லை என்றாலும் பரவாயில்லை எழுதி விடலாம் என்று பார்க்கிறேன்.

      1. Avatar
        Kavya says:

        இலக்கிய எழுத்தாளனுக்கு படைப்புக்கள் சொந்தமல்லை. ராயல்டியை வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவுதான். எழுதிய வாசகர்களிடம் வைக்கப்பட்ட நிமிடம் முதல் எழுத்தாளன் மரணித்து விடுகிறான் அப்படைப்பைப் பொறுத்தவரையில். வாசகர்கள் கைகளில்தான் அப்படைப்பின் வாழ்வினி. எனவே உங்களுக்குச் சொல்லிவிட்டு எழுதுகிறேன் என்பதெல்லாம் வராது ராகவன். திண்ணையில் போட்டுவிட்டீர்கள். போய்விடுங்கள். நிற்காதிர்கள் அஃதொரு இலக்கியப்படைப்பாக இல்லாத பட்சத்தில் உங்களுக்கு ஜோலியே இல்லை.

        வாசகர்களுக்குத்தான் எழுதுகிறார்கள். ஆளில்லாத கடையில் டீ ஆற்றி என்ன இலாபம்? ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று விசனித்தவர், தான் இலக்கியபடைப்பாளி என்று எழுதவில்லை. மக்களுக்குப் போய்ச் சேரட்டுமென்றுதான் எழுதினார் பகதிப்பனுவலகளை. அதற்கே அப்படி (இராமலிங்க அடிகள்) அங்காலாய்த்தார். இலக்கியவாதியாயிருந்தால்? கழுதை தின்னாவிட்டால் போகட்டும் என்று ஒரு இலக்கியவாதி சொன்னால், அவன் வியாபாரம் செய்யப்போகலாம். ஏன்? கழுதைக்கும் குதிரைக்கும் சேர்த்துத்தான் இலக்கியபடைப்புக்கள். பண்டிதருக்கும் பாமரருக்கும் சேர்த்துதான் நம் மாபெரும் இலக்கியவாதிகள் எழுதினார்கள். சிலவேளைகளில் அது பாமரரால் முடியாது. ஆனால் இருவரும் சேர்ந்து நுகர்ந்து இன்புறும்போது, அந்த படைப்பு பெரும்சிறப்பை அடையும். ‘காட்டுவழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால்? எங்கள் வீட்டுக்குலதெய்வம் வீரம்மை காக்குமடா!’ ‘நிறுத்துவண்டியென்றே கள்ளர் நெருங்கிக்கேட்கையிலே? எங்கள் கருத்தமாரியின் பெயர் சொன்னால் காலனும் அஞ்சுமடா!” இதுதான் பாமரருக்கு எழுதப்பட்டது. இதே புலவன், குயில் பாட்டும் எழுதினான். உங்களுக்கு இல்லையா? கருத்தமாரியை துதிப்போர் கழுதைகள் என்று அவர் கருதியிருந்தால் இக்கவிதை (வண்டிக்காரன் பாட்டு) வந்திருக்குமா ராகவன்?

        ஒரு எழுத்தாளனின் ஈகோ மிகவும் உதவிசெய்யும் அவனை ஒரு தேர்ந்த படைப்பாளியாக்க. அதே வேளையில் அப்படைப்புக்களின் தரங்களைத் தாழ்த்தவும் செய்யும் அதை கட்டுப்பாட்டன்றி ஓடவிட்டால். Ego is a good servant, but a bad master. குதிரைக்குத்தான் எழுதுவேன். கழுதைக்கன்று என்றால் கட்டுப்பாடற்ற ஈகோ. எங்களைப்போன்ற கழுதைகளுக்கு உங்களைப்போல மாபெரும் எழுத்தாளர்கள் இல்லையென்றால், நாங்கள் எங்கே போவது? சொல்லுங்கள்.

  20. Avatar
    மலர்மன்னன் says:

    அன்புள்ள புனைப் பெயரில், நீங்கள் சொன்ன அவ்வளவுமாக தமிழ்ப் பத்திரிகை உலகம் இருந்தபோது, ஒரு புறம் திராவிட அரசியல்வாதிகளின் வெறும் அர்த்தமற்ற இரைச்சலாகச் சொற் குவியல்களான படைப்புகளும் மறுபுறம் சமூகப் பிரக்ஞையின்றி கலை இலக்கியப் போக்குகளை இதழ்கள் எப்படி ஒழுங்கு செய்து, மலையாளம், வங்காளி போன்ற மொழிகளின் வாசக தளங்களைப் போல தமிழ் வாசக தளத்தையும் மாற்ற வேண்டும் என்கிற பொறுப்புமின்றி வணிகப் பத்திரிகைகள் நடந்து வருகையில், குமுதம் என்கிற பத்திரிகை சிங்கப்பூர் மலேயா தமிர்களுக்கு மட்டும் பின் அப் புகைப்படங்கள் வைத்து அனுப்பி விற்பனை பெருக்கிய கால கட்டத்தில் மனம் குமைந்து, நிதி வசதி இன்றி ஆர்வம் மட்டுமே பக்க பலமாகக் கொண்டு பல சிறு பத்திரிகைகள் பல்வேறு திக்குகளிருந்தும் சீறி வந்தன. அவற்றின் ஒரே நோக்கம் வெறும் பொழுது போக்கு வாசக ரசனையின் தரத்தை மாற்றி மேலான நிலைக்கு உயர்த்துவதுதான். வாசகனை சமூகப் பிரச்சினைகளிலும், நமது மண்ணுக்குரிய அடையாளங்களைக் கண்டறியச் செய்வதிலும் ஈடுபடுத்தி, தீவிர கலை இலக்கிய நாட்டங்களை உருவாக்குவதும்தான். இந்த முயற்சியில் பலரும் இறங்கிப் பொருளை இழந்தோம். நான் வெறுத்துப் போய் பொழுது போக்கு இதழ்களில் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். திண்ணை கோபால் ரஜாராம் உள்ளிட்ட பலரும் நான் எனது அனுபவங்களை இணைய இதழ்களில் எழுத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தபோது இணைய இதழில் எழுத வந்தேன். நான் பிரபல பத்திரிகைகளில் போணி யாகாததால் இங்கு எழுத வந்துவிட்டேன் என்று என்னைத்தான் சொன்னார்கள். என்னைப் பற்றிச் சொன்னதைத்தான் எழுதினேன். மற்றவர்கள் மனம் புண்படுமாறு எழுதிப் பழக்கமில்லை. அதனால்தான் என்னை இனிக்கும் நஞ்சு என்றெல்லாம் எழுதுவார்கள். ஹிந்துஸ்தானத்துத் தெருக்களில் மட்டுமல்ல எல்லா நாடுகளீன் தெருக்களிலும் என்னவெல்லாமோ நடக்கின்றன. அதைக் குறிப்பிட்டே எடுத்துக் காட்டுக்காக எழுதினேன். மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை. அடிப்படை எதுவும் தெரியாமலே எந்த விஷயத்தைப் பற்றியும் எதிர்வினை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. சரியாகப் படிக்காமலே ஆட்சேபம் தெரிவிக்கும் இயல்பும் காணப்படுகிறது. உதாரணமாக சமீபத்தில் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி நான் தெரிவித்த கருத்துகளுக்கு வந்த எதிர்வினைகள் நான் எழுதியதை முழுமையாகவும் சரியாகவும் படிக்காமலே வந்தன. பெற்றோரே பெண்ணுக்கு வயதுக்கு வருமுன் திருமணம் செய்தாக வேண்டும் என்று முதிர்ந்த ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் போக்கு இருந்தது. அதை ஈ.வே.ரா. அவர்கள் வன்மையாகக் கண்டித்து எழுதி வந்தது உண்மைதான். அதற்காக விவரம் அறிந்த வயதினரான மணியம்மையை அவர் சம்மதத்துடன் திருமணம் செய்தது எப்படித் தவறாகும்? அது அவ்விருவரின் சொந்த விஷயம். ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணமும் மற்ரவர்க்கு சீர்திருத்தத் ஹ்டிருமணம் நடத்திவிட்டுத் தனக்கு மாத்திரம் பதிவுத் திருமணமாக அதைச் செய்துகொண்டதும்தான் கண்டிக்கப்பட்டன. ஆனால் இதுபற்றி எதிர்வினையாடாமல் நான் எழுதியதையே தமது வாதங்களாக எதிர்வினைகள் வரக் கண்டோம். இவை குறித்தே என் எண்ணங்களை வெளியிட்டேன். ஈ.வே.ரா. அவர்கள் மீது எனக்கு மிகக் கடுமையான விமர்சனம் உண்டு. அதற்காக அவர் தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் வேர் பிடிக்க அரும்பாடு பட்டு உழைத்ததையும் பிற நல்ல பணிகளையும் என்னால் மறக்க இயலாது. என் கருத்துப்படி அவரால் விளைந்த தீமைகள் அதிகம்தான். அதற்காக அவரால் விளைந்த நன்மைகளும் உண்டு என்பதை எப்போதும் மறுத்ததில்லை. இதே கண்ணோட்டப்படிதான் எதையும் எழுதுகிறேன். இப்படி எழுதுவது என்னை அறியாமல் எவர் மனதையேனும் புண்படுத்தும்படியாக அமைந்துவிட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      எவ்வளவு அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள். என்ன ஒரு பெருந்தன்மை. நெகிழ வைக்கிறீர்கள் ஐயா. உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்.

    2. Avatar
      Kavya says:

      //மற்றவர்கள் மனம் புண்படுமாறு எழுதிப் பழக்கமில்லை//

      சரிதான். மற்றவர்கள் மணம் புண்படுமாறு எழுதுவது ஒரு சிலரே. பலர் செய்வதில்லைதான். எனினும், இங்கு நான் அண்மையில் மேலே எழுதிய பின்னூட்டத்தில் குறிப்பிட்டபடி, எழுத்துக்களின் தாக்கம் பலரை பலவிதமாக எடுத்துக்கொள்ளவைக்கின்றன. அஃதை எழுத்தாளனால் தடுக்க முடியாது. இடக்காக எடுத்துக்கொள்கிறார்கள் என்று வெட்டவெளிச்சமான எழுத்துக்களுக்கே சொல்லமுடியும் எல்லாவற்றுக்குமன்று.

      மலர்மன்னனின் திண்ணையெழுத்துகளில் வருத்தப்பட்டு ஒரு இசுலாமியர் எழுதியிருக்கிறார். பல கிருத்துவர்கள் அவரோடு மோதியிருக்கின்றனர். தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையைச்சரியாகப் புரிந்துகொள்ளாமல் மனம்போன போக்கில் எழுதித்தள்ளுகிறார். தன் ஜாதி எழுத்தாளர்களின் தரத்தை எப்படியாகினும் தூக்கிவிடவேண்டுமென்று எழுதுகிறார். உதாரணம் சுந்தர ராமசாமியின் பாரியாளின் சுய சரிதை. அதில் அவர் தமக்கு உறவினர் என்றும் சொல்கிறார். Can any one write a critical review of a book authored by his own relative ? If he does, it would be a propaganda for the relative, wouldn’t be? He praises anyone and for that, the only criterion he seeks is that that person should be his acquaintance or espousing the same causes he does. Thus, his support and reviews are biased. Perhaps he fears to offend them as he has to confront them later in his close circles of friends and relations.

      Similarly, most of his writings is one sided. Which side all of you are well aware.

      மனம் புண்படுவது தன்னையறியாமலும் நடக்கக்கூடும். He does not intend to hurt, but he does! என்பார்கள் ஆங்கிலத்தில் !
      சிந்திய நெல்மணிகளைப்பொறுக்கலாம். சிந்திய சொற்களைப்பொறுக்கமுடியுமா?. சிந்தியது, சிந்தியதுதான். சிந்தியபின் நான் அப்படி நினைத்துச் செய்யவில்லையென்று சொல்லி என்ன இலாபம்?

      வெகுஜனப்பத்திரிக்கைகளை முழுக்க குறை சொல்லமுடியாது. சமூகம் பலதரப்பட்ட மக்களால் ஆனது. இஃதை அறியாதவன் ஒரு அடிமுட்டாள். அவர்களெல்லாரும் வடக்கு வாசலையோ தீராநதியையோ வாங்கி இலக்கிய உரையாடல்களைப் படிக்க வருவார்களா? ஒரு சிலரால் மட்டுமே முடியும். காலையில் சென்று இரவில் வீடு திரும்பும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு அப்பத்திரிக்கைகளில் என்னவிருக்கிறது? அல்லது சாதாரண மக்களுக்கு? தீராநதியாவது பராவாயில்லை. அம்மக்களின் வாழ்க்கையோடு இணைந்து அதன் பிரச்சினைகளை எழுத்தில் கொண்டுவரும் கட்டுரைகள் அவ்வப்போது தோன்றியதைப்பார்த்திருக்கிறேன். வடக்கு வாசல் சில இதழ்களைப்படியுங்கள். புரியும். அது மேல்மட்டத்திலே தன் மூச்சைத்தேடுகிறது. கீழ்மட்டங்கள் இல்லாமல் சமூகமா? வடக்கு வாசலும் தீராநதியும் சமூகத்தில் இலக்கியம் வாசித்துப் பொழுதுபோக்குபவர்களுக்கு மட்டுமே. ஜெயமோஹன் கருத்தென்ன? சாருவின் எதிர்கருத்தென்ன? ஜேஜே ஒரு குறிப்புகள் மகத்தான இலக்கியா? என்ற கேள்விகள் பாமரனுக்கு என்ன தரும்? இலக்கியத்தை கீழ்த்தட்டு மக்களுக்கும் நலக முடியும். அதை இவர்களால் செய்ய முடியாது. இருதட்டுக்களுக்கும் போய்ச்சேரவேண்டியது இலக்கியமும் அதன் இரசனையும்.

      வெகுஜன பத்திரிக்கைகள் ஒரு காலியிடத்தை நிரப்புகின்றன. அதை சிறுபத்திரிக்கைகளில் இலக்கிய வாசனை நிரப்பவே முடியாது.

  21. Avatar
    Kavya says:

    வடக்கு வாசல் சில இதழ்களைப்புரட்டினேன். தில்லியிலிருந்து வெளியாகிறது. தில்லிததமிழ்ச்சங்கம் வெளியிடும் பத்திரிக்கை போலும். அச்சங்கத்தில் ஒருவர் வந்து பேசினால், அவரைப்பேட்டிகண்டு நாலுபக்கக்கட்டுரைகள். அவர் அதற்கு உரித்தவர்தானா என்ற கூரியபார்வையில்லை. அப்படியே உரித்தவராயினும் ஒரே புகழாரந்தானா? ராகவன் தம்பியின் கட்டுரைகள். “நெகிழ்ந்தேன். பிரமித்தேன்”. என்று வெசா பாணி விமர்சனங்களும் எழுத்துக்களும். வடக்குவாசல் பார்வையில் எல்லாருமே மாபெரும் எழுத்தாளர்கள்; எல்லாரும் நல்லவரே. An idyllic world of salubrious breezes ! Life is convenient, very convenient !!

    I think it is because the editor wants to please all. He seems to forget: HE, WHO PLEASES EVERYBODY, PLEASES NOBODY !

    1. Avatar
      ராகவன் தம்பி says:

      எழுத்தாளனுக்கு எழுதிய பின் வேலை ஒன்றும் இல்லை என்ற ஃபத்வா வை காவ்யா என்கிற பெயரிலி வெளியிட்டிருப்பதால் ஒரு தகவலுடன விலகிக் கொள்கிறேன்.

      வடக்கு வாசல் தமிழ்ச் சங்கம் வெளியிடும் இதழ் அல்ல. தமிழ்ச் சங்கத்தில் வந்து பேசிய யாரையும் நாங்கள் பேட்டி கண்டது கிடையாது.

      //I think it is because the editor wants to please all. He seems to forget: HE, WHO PLEASES EVERYBODY, PLEASES NOBODY !//

      நான் டெல்லியில் என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று விஷயம் தெரிந்தவர்களை கேட்டுக் கொள்ளலாம்.

      வடக்கு வாசல் பற்றிய தகவல்களில் இருந்து அதில் வந்திருக்கிற விஷயம் பற்றி காவ்யா பேசியிருப்பது எதையும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர்களைப் புண்படுத்தும் வீரமும் எதையும் அரைகுறையாகப் புரிந்து கெர்ள்ளும் தெளிவும் அவருக்கு இருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

      ராகவன் தம்பி

  22. Avatar
    ஆர். சத்தியபாமா says:

    எதையும் சரியாகப் படிக்காமலும் படித்தததைப் புரிந்துகொள்ளாமாலும் சொல்லாததையெல்லாம் சொன்னதுபோல் எழுதுவதும் இங்கு சிலருக்கு வழக்கமாக உள்ளது என்பதை நிரூபிப்பதில் இந்த காவ்யா என்னும் நபர் முன்னணியில் நிற்கிறார். மலர்மன்னன் எப்போது தனக்கு சுந்தர ராமசாமியின் மனைவி உறவினர் என்று சொன்னார்? இவரால் மலர்மன்னன் எழுதிய அந்த வரியை எடுத்துக் காட்டி நிரூபிக்க முடியுமா? மலர்மன்னன் அவர்கள் எங்கெல்லாம் களப்பணி ஆற்றியிருக்கிறார் என்று இந்த நபருக்கு ஏதாவது தெரியுமா? அவர் செய்துள்ள ஆய்வுகளைப் பற்றி இவருக்கு ஒரு துளியாவது தெரியுமா? தென் மாவட்ட மக்களைப் பற்றி அவர் என்ன எழுதி இந்த அதிகப் பிரசங்கி குற்றம் கண்டுபிடித்துவிட்டார்? இந்த அதிகப் பிரசங்கி அந்த 75 வயதுக்கு மேலான முதியவர் பிறந்தது முதலே கூட இருந்து பார்த்ததுபோல் அவர் அந்த தர்காவுக்கு ஏன் போகவில்லை இந்த தர்காவுக்கு ஏன் போகவில்லை என்று கேட்கிறார்! மகா புத்திசாலிதான்! உண்மையான சூபிக்களின் தர்காவுக்கெல்லாம் போய் வந்தவர்தான் மலர்மன்னன்! ஆனால் நம் நாட்டில் அப்ஸல்கான் போன்ற சதிகாரர்களுக்கும் கொடியவர்களுக்கும் கட்டப்பட்ட சமாதிகள்கூட தர்காவைப்போல் வழிபடப் படுகின்றன! அங்கெல்லாம் மலர்மன்னன் போக மாட்டார்! அரை குறைகளுக்கெல்லாம் பதில் எழுதி அவர் தன் பொழுதை வீணாக்கிக் கொண்டிருக்க மாட்டார். உடனே அவரால் தனக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று தனக்குத் தானே பாராட்டிக் கொள்வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை! மலர் மன்னனிடம் கிறிஸ்தவர்கள் மோதினார்களாம், இவர்தான் கணக்கெடுத்திருக்கிறார்! ஒரு இஸ்லாமியர் இந்த நபரிடம் மலர்மன்னனைப் பற்றி வருத்தப்பட்டாராம்! இன்று மலர்மன்னனுக்கு உலகம் பூராவும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இந்த போலிப் பெயரில் மறைந்து வாழும் நபருக்குத் துணிவு இருந்தால் தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்ளட்டும். மலர்மன்னன் அவர்களை குறைந்த பட்ச நாகரிகமும் இன்றி மரியாதைக் குறைவாக இந்தக் கிழவனை விட்டு வைக்கலாமா என்று தனக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் இந்த காவ்யா என்கிற நபர் முன்பு எழுதியபோதே பலர் குமுறி இந்த ஒளிந்து வாழும் நபர் யார் எனக் கண்டுபிடிக்கத் துடித்தார்கள். மலர்மன்னன் தான் அவர்களையெல்லாம் அமைதிப் படுத்தினார்.இது தெரியாமல் இந்த அதிகப் பிரசங்கி தலையை நிமிர்த்திக்கொண்டு இங்கு திரிந்துகொண்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது!
    ஆர். சத்தியபாமா

  23. Avatar
    ஆர். சத்தியபாமா says:

    இணைய தளத்தில் தலைமறைவாகத் திரியலாம் என்னும் துணிச்சலில் காவ்யா என்கிற நபர் மலர்மன்னன் மீது அவதூறுகளைப் பரப்பி வருகிறார் என்பதற்கு இங்கு அவர் தமிழிலும் அரை குறை ஆங்கிலத்திலுமாக எழுதியுள்ள வாக்கியங்களே சான்று. விவரமுள்ள கிறிஸ்தவர்களூம் முகமதியர்களும் அவரிடம் எவ்வளவு நட்புறவோடும் மரியாதையோடும் பழகுகிறார்கள் என்பது நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள். பெண்ணியப் பார்வையில் விவிலியக் கருத்து பற்றி ஜயசீலி என்கிற கிறிஸ்தவப் பெண்மணி எழுதிய நூலை காலச்சுவடு பதிப்பகத்திற்குப் பரிந்துரைத்த் வெளியிடச் செய்தவர் மலர்மன்னன். ஜயசீலி மலர்மன்னன் அவர்களை அப்பா என்றுதான் பாசத்தோடு அழைப்பார். அவரை அப்பா என்று அழைக்கும் பெண்களூம் ஆண்களூம் ஏராளமாக இருக்கிறோம். மலர்மன்னன் அவர்கள் எழுத்தை சரியாகப் படித்து நாகரிகமான முறையில் விமர்சிப்பதைவிட்டு உள்நோக்கம் கற்பித்தும் அவதூறாகவும் எழுதுவதை காவ்யா என்னும் நபர் உடனடியாக நிறுத்த வேண்டும். சாவி, போன்ற பல பிராமண எழுத்தாளர்களின் எழுத்தையெல்லாம் கடுமையாக விமர்சித்து எழுதியவர் மலர்மன்னன். கல்கியையும் இலக்கியப் படைப்பாளியல்ல என்று எழுதியவர். ராஜாஜி, கி.வா.ஜ. போன்றவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டதைக் கண்டித்தவர். மலர் மன்னன் என்ன ஜாதி என்று அவர் முதுகைத் தடவிப் பார்த்தவர்போல இந்த காவ்யா கண்டுபிடித்து பிராமணர் என்பதற்காக ஒரு எழுத்தாளரைப் அவர் பாராட்டுவதாக எழுதுகிறார். இந்த அவதூறுக்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பலர் காத்க்திருக்கிறார்கள். காவ்யாவுக்கு தைரியம் இருந்தால் தன்னை அவர் வெளிப்படுத்திக் கொள்ளட்டும்.
    -ஆர். சத்திய பாமா

  24. Avatar
    ஆர். சத்தியபாமா says:

    இன்று கனடாவில் ஓர் ஊடகத்தில் பணியாற்றி வரும் அஸ்மா சலீம் என்ற பெண்மணி மலர்மன்னன் அவர்களிடம் தெளிவு பெற்று ஹிந்துவாக வாழத் தொடங்கி தன் குடும்பத்தாரையும் முகமதியரான நண்பர்களையும் ஹிந்துக்களாக வாழச் செய்தவர். இதை இங்கு வெளியிடக் காரணம் மலர்மன்னன் ஒரு செயல் படுபவரும்கூட என்பதைத் தெரிவிக்கவே. அவர் எவரையும் தெளிவான விளக்கங்கள் அளித்து தாய் மதம் திரும்பச் செய்பவரே யன்றி ஆசை வார்த்தைகள் கூறி அப்பா விகளை மத மாற்றம் செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல. மேலும் தனக்கென எதையும் எதிர்பார்க்காமல் ஓசையின்றிக் கடமை ஆற்றுபவர் அவர். அதனால்தான் ஹிந்து முன்னணி திரு ராம கோபாலன் அவர்கள் மலர்மன்னன் அவர்களை ஒன் மேன் ஆர்மி என்று அழைப்பார்! ஏனெனில் எந்தவொரு அமைப்பையும் சாராது தமது வழியில் பணியாற்றி வருபவர் மலர்மன்னன்! அவரை நன்கு அறிந்தவர்கள் அவரைப் பலவாறு போற்றுவதற்குக் காரணமே அவரது சிறப்பு இயல்புகள்தான். அவர் எழுதிய விட்டோபா, வந்தே மாதரம் முதலான புத்தகங்களில் அவரைப் பற்றிய சிறு குறிப்பில் நெருப்பை நிகர்த்த நேர்மையாளர் என்று முத்தாய்ப்பாய் எழுதியிருப்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை அவர் அருகில் இருந்து பார்த்தவர்களே அறிவார்கள்!
    -ஆர். சத்தியபாமா.

  25. Avatar
    Kavya says:

    மலர் மன்னன் திருமதி சுந்தர ராமசாமியின் சுயசரிதையை விமர்சனமாக எழுதிய கட்டுரை திண்ணையில்தான். வெகு காலத்திற்கு முன்னன்று. ஒரு சில வாரங்களுக்கு முன்புதான். அக்கட்டுரையில் திருமதி ராமசாமி தன் உறவினர் என்று அவர் எழுத நான் அங்கேயே பின்னூட்டம் எழுதியிருக்கிறேன். விமர்சகன் ஒரு நீதிபதையைப்போல. நீதிபதி ஒரு வழக்கில் குற்றஞ்ச்சாட்டப்பட்டவர் தனக்கு எவ்வழியிலாவது தொடர்புடைய்வர் என்றால், அவர் அவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டு விலகிவிடுவார். அதைப்போலத்தான் நூலாசிரியர் தனக்கு உறவென்றால், விமர்சனம் பண்ணக்கூடாது. சத்யபாமா அக்கட்டுரையைத்தேடி படிக்கவும்.

    மண்டைக்காடு கலவரம், அதன் போது மீனவர்கள் பட்ட துயர வாழ்க்கை இணையதளத்திலேயே இருக்கின்றன. சிரில் அலெக்ஸ் தன் கிராமமான முட்டம் அக்கிராமம் எப்படி நடுங்கியது என்றெழுதியிருக்கிறார்.

    இதே திண்ணையில்தான் மலர்மன்னன் எம்ஜிஆரின் போலீசு தன்னைக்குமரி மாவட்டத்துக்குள் நுழையத் தடை விதித்தது என்றும் எப்படி தான் இரகசியமாக உள்ளே நுழைந்தேனென்றும் எழுதியிருக்கிறார். மண்டைக்காடு கலவரங்களின் போது தன் பங்கு என்ன என்று அவர் எழுதியிருக்கிறார். இக்கட்டுரை வந்து ஆண்டுகளாகின்றன. ஆர்க்கைவ்ஸில் இருக்கும் தேடிப்பாருங்கள். சோ இராமசாமி இவரின் கட்டுரையைப்போட மறுத்துவிட்டாரென்றும், ஜெயகாந்தன் இவரைப்பார்க்க மறுத்துவிட்டாரென்றும் இவரே எழுதியிருக்கிறார். பிறமத மக்களை எதிர்க்கத் தூண்டும்படி பச்சையாக இருந்ததாம்.

    தமிழக மீனவர்களைக்குழந்தைகள் என்று இவர் சொல்லும் காரணம் அவர்களை மிசுநோரிகள் இலகுவாக கைக்குள் போட்டுக்கொண்டார்கள் என்ற கருத்தைத் திணிப்பதற்காக‌. என் எதிர்கேள்வி அங்கேயே போடப்பட்டது. அவர்களைக்குழந்தைகள் என்று சொல்லும் இவர் சார்ந்த பிராமணீயம் அவர்களை ஏற்றுக்கொண்டதா? ஏற்க முடியுமா? எந்த பிராமணனாவது மீனவர் சேரியில் கோயில் கட்டி பூசனைகள் செய்வாரா? எத்தனை மீனவகிராமங்களில் வைதீக்கோயில்கள இருக்கின்றன? எத்தனை கிராமங்களில் இந்துமடங்கள் சேவை செய்கின்றன? அப்படியே சேவை செய்தாலும் அவர்கள் ஜாதியில் உயர்ந்தோரை வைத்துச்செய்ய மாட்டார்கள்.

  26. Avatar
    ஆர். சத்தியபாமா says:

    மலர்மன்னன் அவர்களின் எழுத்து பற்றி அரைகுறை அதிகப் பிரசங்கி காவ்யா எழுதியிருப்பது அவ்வளவும் பொய். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இவ்வாறு காவ்யா என்கிற நபர் துவேஷத்துடன் எழுதியுள்ளார்.
    !. காவ்யா குறிப்பிடும் சுந்தர ராமசாமி மனைவி எழுதிய நூல் பற்றிய மலர்மன்னன் மதிப்புரையில் திருமதி கமலா ராமசாமியின் உறவினர் நாராயணன் தன்னுடன் பணியாற்றிய பரந்தாமன் எனப் பதிவு செய்துள்ளார். அதைத்தான் இந்த அரை குறை மலர்மன்னன் சுந்தர ராமசாமியின் மனைவி தன் உறவினர் என்று திருத்தி எழுதுகிறார்! இவ்வாறு ஒருவரின் பதிவைத் திரித்து உள்நோக்கம் கற்பிப்பது சட்டப்படி நடவடிக்கைக் குரிய குற்றம். ஒளீந்து வாழும் காவ்யா உண்மையில் துணிவுள்ளவர் என்றால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
    2. ஜயகாந்தன் தன்னைச் சந்திக்க மறுத்ததாக மலர்மன்னன் எங்குமே எழுதியதில்லை. இதுவும் மலர்மன்னன் எழுத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதாகும். தேவையின்றி மலர் மன்னன்-ஜயகாந்தன் இடையே பிரச்சினை எழுப்பும் உள்நோக்கம். மலர்மன்னனுக்கு ஜயகாந்தனுடன் எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை. ஒரே ஒரு முறை டெக்கன் ஹெரால்டு நாளிதழ் தாக்கப்பட்டது தொடர்பாக சந்தித்துப் பேசினார். ஒரு சிறுகதை வெளியானதன் பிரச்சினை அது. ஜயகாந்தன் தானே அவ்வாறு ஒரு கதை எழுதுவதாக உறுதி கூறி விட்டு முட்டாள் சங்கரன் என்று எழுதினார்! அதோடு விஷயம் முடிந்தது. இதை இந்த காவ்யா திரித்து எழுதுகிறார்.
    3. சோவுடன் மலர்மன்னனுக்குப் பழக்கம் எதுவும் இல்லை. இதிலும் காவ்யா மலர்மன்னன் பதிவைத் திரித்துள்ளார்.
    4. மண்டைக்காடு சமயத்தில் மலர்மன்னன் குமரி மாவட்டத்திலேயேதான் இருந்தார். அவரை உள்ளே நுழையக் கூடாது என்று யாரும் உள்ளே நுழைய விடாமல் தடுக்கவில்லை. இதுவும் கவ்யாவால் திருத்தி எழுதப்பட்டுள்ளது.
    துவேஷம் காரணமாக உள்நோக்கத்துடன் மலர்மன்னன் அவர்களின் கவுரவத்தைக் குலைக்கும் வகையில் அவதூறு செய்யும் கவ்யா என்ற நபர் தமது அடையாளத்தை வெளியிட இனியும் தாமதம் செய்தல் கூடாது. தவறினால் அவரை சைபர் குற்றவாளி எனப் புகார் செய்ய வேண்டிவரும்.
    ஆர். சத்தியபாமா

  27. Avatar
    Kavya says:

    I didn’t know MM previously as I was not familiar with Tamil journalists. Only on reading Thinnai and, simultaneously, Tamilhindu.com, I came to know about the person called MM and others like Ve Saaminathan. All that I have written about him is based on these two internet magazines. I dont know anything about his writings outside. My reading of Tamil newspapers started only after I came to TN very late. His writings in this Thinnai are proof and evidences of my messages here. I cant archive for anyone. Every one should it on her or his own. Search and you will found them.

    In this old age, a person should be above all, and should look upon all human beings as equal worthy of consideration regardless of their religion, caste or color of skin.

    Hopefully, MM will reach that stage. Good luck to him.

  28. Avatar
    ஆர். சத்தியபாமா says:

    காவ்யா என்கிற நபர் இப்போது மலர்மன்னன் அவர்களைப் பற்றித்தனக்கு எதுவும் தெரியாது என்று கோழைத்தனமாகப் பின் வாங்குகிறார். இவர் ஏதோ இப்போதுதான் வட துருவத்திலிருந்தோ தென் துருவத்திலிருந்தோ தமிழகம் வந்திருப்பதுபோல் பாசாங்கு செய்கிறார். மலர்மன்னன் அவர்கள் எழுதிய மதிப்புரை கணையாழியில் வெளிவந்து பின்னர் திண்ணையில் மறு பிரசுரம் ஆனது. குற்றம் சாட்டும் அதிகப் பிரசங்கி அரைகுறை காவ்யா மறுபடியும் அதைப் படித்துப் பார்க்கட்டும். மகா வீராப்பாகப் பேசிய நபர் மலர்மன்னன் பற்றி மீண்டும் அவதூறாக எழுதும் புத்தியை மாற்றிகொள்ளவில்லை. மலர் மன்னன் மதம் சாதி இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டுவதாக அவதூறு செய்துள்ளார். இவர் உடனடியாக இனி அவதூறு செய்வதில்லை என வாக்களித்து மன்னிப்பும் கோர வேண்டும். இன்னும் ஏழு நாட்களுக்குள் காவ்யா என்ற போலிப் பெயரில் எழுதும் நபர் மன்னிப்புக் கேட்டு வாக்குறுதியும் அளிக்கவில்லையேல் மலர்மன்னன் அவர்கள் பெருந்தன்மையுடன் தடுத்தாலும் நாங்கள் கவ்யா மீது சைபர் குற்றவாளி என அதற்குரிய தனிப் பிரிவில் மலர் மன்னன் சார்பில் புகார் செய்ய நேரிடும். கூசாமல் பொய்களை எழுதிவிட்டு என்னைத் தேடிப் படிக்கச் சொல்லும் தப்பித்தல் செல்லுபடியாகாது. அவதூறு செய்பவர்தான் அவர் எழுதியதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் விளைவினைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்.
    -ஆர். சத்தியபாமா

    1. Avatar
      Kavya says:

      முதல்வரியைப்பற்றி.

      எனக்கு வெசா என்பவரையும் மலர்மன்னன் என்பவரையும் திண்ணைப்படிக்கத்தொடங்கிய நாட்களிலிருந்துதான் தெரியும் என்பதை பலமுறை திண்ணைப்பின்னூட்டங்களில் எழுதியிருக்கிறேன்.

    2. Avatar
      Kavya says:

      முதல்வரி பற்றி.

      மலர்மன்னையும் வெசாவையும் தெரியாதவர்கள் தமிழகத்தில் கோடானு கோடிபேர். அவர்களுள் நானும் ஒருவன். இப்படி இருவர் உள்ளார்கள் என்பது நான் திண்ணைப்படிக்கத்தொடங்கிய நாள்களிலிருந்துதான் தெரியும் என்று பலமுறை திண்ணைப்பின்னூட்டங்களில் எழுதியிருக்கிறென்.

      தப்பு செய்தவர்கள்தான் மன்னிப்பு கேட்கவேண்டும். அவரே எழுதியவற்றைத் திண்ணையிலும் தமிழ்ஹிந்து காமிலும் படித்தபின் தான் அவர் அப்படி எழுதலாமா என்று கேட்டேன். திண்ணைக்கட்டுரைகள் இருக்கின்றன. அவை ஆர்க்கைவில் உள்ளன. அவர் ஜெயகாந்தன் வீட்டிற்கே போனதாகவும் அவர் தன்னைப்பார்க்க மறுத்தாதாகவும், சோ இராமசாமி இவரின் கட்டுரை சற்றுத்தூக்கலாக இருப்பதால் போட மறுத்ததாகவும் மலர்மன்னன் எழுதியதை நான் படித்தபிந்தான் அவற்றை நினைவு கூர்ந்து இங்கு சொல்கிறேன்.

      இங்கு திண்ணையில் இருவாரங்களுக்கு முன், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களைக் ‘குழந்தைகள்’ என அழைத்துப்பேசுகிறார். அவர்கள் சுயசிந்தனையில்லாத்வர்கள்; எவரிடமும் ஏமாறுவார்கள் என்பதாக. போய்ப்படியுங்கள். என் பின்னூட்டமும் அங்கு இருக்கும்.

      இவர் ஜாதிமக்களை, மூளையில்லாதவர்கள்; எவரிடமும் இலகுவாக ஏமாறுவார்கள் என்றால் ஒத்துக்கொள்வாரா? சத்யபாமா ஒத்துக்கொள்வாரா? முதலில் அதைச்சொல்லவும். எல்லாருக்கும் ஒரே நீதி.

      ஒரு தனிநபருக்கு இவ்வளவு தூரம் விவாதிக்கவேண்டிய தேவையில்லை. போன பின்னூட்டத்தி;லேயே முடித்துவிட்டேன். அவர் எப்படி வாழவேண்டுமென்பது அவரின் விருப்பம். ஆனால் பிறரைப்புண்படுத்தும் வரிகளை – எகா. மற்ற மக்களைக் குழந்தைகள் எனவழைத்தது- எழுதினால், ஏன் நாங்கள் குழந்தைகளா ஏன்று கேட்பது தவறொன்றுமில்லை.

      1. Avatar
        Kavya says:

        அவதூறு என்றெல்லாம் சொல்லமுடியாது சத்யபாமா. ஒருவர் திண்ணையில் எழுதுகிறார்/ அவர் வைக்கும் கருத்தோ அல்லது சொற்களோ ஏற்றுக்கொள்ள முடியாதபோது நாம் நம் எதிர்ப்பைக் கண்ணியமான சொற்களின் காண்பிக்கிறோம். இஃதை அவதூறென்றால், அவரின் எழுத்துக்களில் எதுவும் இருக்கும்; கண்டுகொள்ளாமல் போங்கள் என்கிறீர்களா? பதில் சொல்லுங்கள். பிணத்தைக்கும்பிடுகிறார்கள் என இழிவுபடுத்துகிறார் சாரங். இதைவிட அவதூறு இருக்கமுடியுமா?

  29. Avatar
    மலர்மன்னன் says:

    //“நெகிழ்ந்தேன். பிரமித்தேன்”. என்று வெசா பாணி விமர்சனங்களும் எழுத்துக்களும்.//
    எந்த எழுத்தையும் கலைப்படைப்பையும் லேசில் பாராட்டாத கறார் விமர்சகர் வெ.சா. அதனாலேயே பலராலும் வெறுக்கப்படுபவர். அவரைப்பற்றி இப்படியொரு அறியாமையான அபத்தக் கருத்து ! அவரைத் தூற்றுபவர்களே எதையாவது நன்றாகப் படைதந்து அதை வெ சா பாராட்டிவிட்டால் அந்தத் தூற்றிய நாவே வெ.சா.வே பாராட்டிவிட்டார் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு நடமாடுவதுதான் வழக்கம்! நிதர்ச்னம் இவ்வாறிருக்க, நெகிழ்ந்தேன், ப்ரமித்தேன் என்று வெ.சா. பாணி விமர்சனமாம். இந்த மெளட்டீகத்துக்கு ஒரு எல்லையே இல்லையா?
    -மலர்மன்னன்

  30. Avatar
    Kavya says:

    இருக்கலாம்.

    ஆனால் நான் தற்போது அவரெழுதிய ‘என் பார்வையில்’ என்ற விமர்சனக்கட்டுரைகளைப் படித்துவருகிறேன். அதில் ஒரு கட்டுரை உவேசாவைப்பற்றி. அதில்தான் இப்படி எழுதியிருக்கிறார். மலைத்தேன்; பிரமித்தேன் என்றெல்லாம் எழுதுவது ஒரு விமர்சனமா?

  31. Avatar
    punai peyaril says:

    வெ.சா, மம வின கருத்துக்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.. அதற்காக துவேஷ சிந்தனை தேவையில்லை காவ்யா… அவை கிழங்கள் அல்ல… காவியின் களம் வெல்ல முன் நிற்கும் கிருஷ்ணர்கள்… முதுமையில் இருப்பினும், போகும் உயிர் மூச்சுத்திணறி… நெஞ்சு துடிப்பு நின்று எனப்போகாமல்… நிமிர்ந்த நெஞ்சுடன் எங்களை வழி நடத்தி பேடிகளாய் இருந்த எம்மை… வீரர்களாய் மாற்றும் இலட்சிய மனிதர்கள்…

  32. Avatar
    punai peyaril says:

    ஆர்.சத்தியபாமா, காவ்யாவிற்கு விடுத்திருக்கும் மிரட்டல் கண்டிக்கத்தக்கது. ஒரு வேளை கலைஞருக்கு வீரமணி போல் இவர் மம-வின் மனசாட்சியா தெரியவில்லை… மம- தனக்கு புகழ்வது பிடிக்காது என்றும், அவரை தாக்குபவர்கள் தான் அவருக்கு கிரியா ஊக்கி என்றும் நான் பின்னொரு பின்னூட்டத்தில் அவரைப் பாராட்டிய போது சொல்லியிருந்தார். ஆனால், ஆர்.ச.பாமாவின் பின்னூட்டத்தை மம ரசிப்பது ஏன் என்று தெரியவில்லை… சைபர் குற்றம் என்ன காவ்யா செய்து விட்டார் என்று விளக்குதல் நன்று. அதுவும் போக, ஒரு வார மிரட்டலின் பின் காவ்யா பற்றி சைபர் கிரைமில் புகார் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். அப்படி செய்யும் பட்சத்தில், நிச்சயம் நான் முன்வந்து அந்த வழக்கில் இணைத்து கருத்துக்களைச் சொல்லத் தயார். காவ்யாவுடன் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால் அவருக்கு விடப்பட்டிருக்கும் மிரட்டலை வெ.சா, மம, ரா.த என யாருமே ரசிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்… யாரும் ஒளிந்து தப்பிக்க இது ஒன்று சந்து போஸ்ட் ஆபிசில் போஸ்ட் செய்யப்படவில்லை… ஐபி முகவரி, சரி பார்க்கப்பட்ட முகவரி என பல நிலை உள்ளது. திண்ணை ஆசிரியர் அப்படியொரு வழக்கு வந்தால் காவல் துறையிடம் கொடுப்பதில் யாருக்கும் ஆட்சேபம் கிடையாது. ஆர்.ச.பாமாவின் மிரட்டலில் நாம் காவ்யாவிற்கு துணை நிற்போம். அதே சமயம் உடன்படா காவ்யா கருத்துக்களுடன் ஆரோக்கியமான வழியில் எதிர்த்து நிற்போம். ஜெய்ஹிந்த்…

  33. Avatar
    லெட்சுமணன் says:

    லைக் பட்டன் என்று ஒன்று இருந்தால் அப்படியே “லைக்கியிருப்பேன்”

Leave a Reply to மலர்மன்னன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *