அகமும் புறமும் கவிதையும்

This entry is part 1 of 9 in the series 4 டிசம்பர் 2022

 

 ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார்.

’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார்.

’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார்.

’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது கவிதைக்கு.

ஆனால் அது கண்ணாடிக்கு அப்பாலிருக்கிறது.

அதற்கு அசரீரியாகப் பேச வராது.

வேண்டும்போது ரௌத்ரம் பழகினாலும்

பொதுவாக கவிதை கனிவானது

குட்டிப்பாப்பா போல் மென்மையானது.

புறாக்கண்களை உருட்டி உருட்டிப் பார்ப்பதே

அதற்கு மிகவும் பிடிக்கும்.

சண்டை பிடிக்கவே பிடிக்காது.

’இத்தனை சொல்லியும் திரும்பிப்பார்க்க மறுக்கிறாயே –

என்னவொரு திமிர்

எத்தனை தெனாவெட்டு

என்னோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள

எத்தனை பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா

சுண்டைக்காய் நீ – சோப்ளாங்கி’

என்று அன்னார் உச்சஸ்தாயியில் கூவக்கூவ

கமறிய அவர் குரல்வளையிலிருந்து

இருமல் பெருகிவர

வேகவேகமாய்ச் சென்று எங்கிருந்தோ வொரு

மினரல் வாட்டர் புட்டியையும்

ஒலிவாங்கியையும்

கொண்டுவந்து கொடுத்துவிட்டுத்

தன்வழியே செல்கிறது கவிதை.

 

Series Navigationகுக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி – 21 – 28
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *