அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !

This entry is part 51 of 51 in the series 3 ஜூலை 2011

(கட்டுரை -6)

(ஜூன் மாதம் 8, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

BBC News (June 23, 2011)

ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%).  அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

BBC News (May 30, 2011)

 

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)


“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

 

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

கட்டுரை ஆசிரியர்

முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

புகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (ஜூன் 20, 2011)

புகுஷிமா : 1 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.

புகுஷிமா : 2 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.

புகுஷிமா : 3 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.

புகுஷிமா : 4 தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால்,
தீயும் வெடிப்பும் நேர்ந்தன.

புகுஷிமா : 5 & 6 அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.

மொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது.  அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப்படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

சென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் :   (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன.  இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.

(முன் வாரத் தொடர்ச்சி)

11. மெக்ஸிகோ :  துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.

12. நெதர்லாந்து :  டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.

13. ருமேனியா : அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.

14.  ரஷ்யா : ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார்.  நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும்
அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

15. தென் ஆப்ரிக்கா : தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது.  ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.  2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.

16 தென் கொரியா : 2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.

17 சுவீடன் : 2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும்.  2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவுகளை (Stress Tests) அனுப்ப வேண்டும்.

18. சுவிட்ஜர்லாந்து : 2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது.  அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.

19. டெய்வான் : டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.  அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

20. பிரிட்டன் : பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

21 அமெரிக்கா : 2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது.  ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது.  1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது.  அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கையும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.  1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%.  திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக்களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது.  ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது !

முடிவுரை: பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

(தொடரும்)

***************

தகவல்:

1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2001)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) June 26, 2011
http:jayabarathan.wordpress.com/

 

Series Navigationதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *