அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)

author
4
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 26 in the series 9 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா

    28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக்  காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும் நம்புகிறேன். மச்சாவதாரம் தொடங்கி அனைத்து அவதாரங்களும்  சார்ந்த இலக்கியங்கள் இந்தப் புவியில் உயிரினங்களின் தோன்றத் தொடங்கியதிலிருந்தான பரிணாம வளர்ச்சியையே எடுத்துச் சொல்லுகின்றன.  மனிதனாய்ப் பிறக்கும் எவரும் ராமனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதையே ராமாவதாரம் தெரிவிப்பதாய்த் தோன்றுகிறது.  அதாவது, எந்த மனிதனாலும் முழுக்க முழுக்க அப்பழுக்கே அற்றவனாக இருக்க முடியாது என்பதே ராமாயணத்தின் செய்தி எனப் படுகிறது.  அதிலும் பெண் என்று வரும்போது, அவள் கிள்ளூக்கீரைதான் என்பது ஆனானப்பட்ட அவதார ராமனின் கருத்தாகவே இருக்கும் போது, பிற சாதாரணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை என்பதே ராமாயணத்தின் செய்தி. எனவே, ராமன் எனும் மனித அவதாரத்தை நொந்து பயனில்லை.  மானிடனை அவ்வாறு படைத்துள்ள ஆண்டவனைத்தான் நோக வேண்டும்.

    திரௌபதியைத் துகிலுரிக்கச் செய்யப்பட்ட முயற்சியைத் தடுக்காமல் செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பீஷ்மரை இன்றளவும் பலர் பிதாமகர் என்கிற அடைமொழியுடன் கொண்டாடிப் பிதற்றிக்கொண்டிருப்பது, மகாபாரதத்தைப் புனிதம் என்று தவறாய்க் கருதுவதன் விளைவேயாகும்.  அவரது பொறுப்பு ராஜ்ய பாரம்
மட்டுமே என்றும் அதனால் திரௌபதியின் மானபங்கத்தைத் தடுக்க அவர் முயலாதது குற்றம் ஆகாது என்றும் கூறிக் குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாத அவரது பண்பற்ற செயலை நியாயப் படுத்துதல் போன்றதே ராமர் ஓர் அரசர் எனும் காரணத்தால் அவர் சீதையை விரட்டியது சரியே என்று ராமருக்கு வக்காலத்து வாங்குவதும் ஆகும். மாபெரும் இலக்கியங்களுக்கு மதச் சாயத்தை அளவுக்கு மேல் பூசி, அவற்றின் பால் பெரிதும் பற்றுக் கொள்ளூவதால், நியாய அநியாயங்களைப் பாகுபடுத்தி நடுநின்று ஆராய்ந்து விமர்சிப்பது அறிவுஜீவிகளுக்கும் கூட இல்லாமல் போகிறது என்பதற்கு இவ் விரண்டு அநியாயங்களும் எடுத்துக்காட்டுகளாம்.

    ராமர் சீதையைக் கைவிட்டது எந்த அடிப்படையில் ராஜரீகமான அவசியம்? மக்களின் அபவாதப் பேச்சு அரசாட்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு, சோ அளிக்கும் விளக்கம் ஏற்புடையதன்று. ‘இப்படி சீதையைப் பற்றிச் சந்தேகப்படுகிற பேச்சு பரவிக்கொண்டே போனால், அது அவளுக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல’ என்ற முடிவுக்கு அவர் வந்தார் என்கிறார் சோ.  மக்களுள் சிலர் பரப்பிய அவதூற்றின் அடிப்படையில் சீதையைத் துரத்தியது மட்டும் அவளுக்கு நல்லதாமா! இதென்ன வாதம்? ஒரு விதிவிலக்குக்கூட இல்லாமல் மக்களில் அனைவருமே அந்த அபவாதத்தை ஏற்றிருப்பார்களா என்ன? அக்கினிப் பிரவேசம் செய்து சீதை தனது அப்பழுக்கின்மையை உலகுக்கு மெய்ப்பித்துவிட்ட நிலையில் அந்த அபாண்டத்தை நம்புவதற்கு அத்தனை மக்களும் அறிவிலிகளா!

அரசனின் மனைவி பற்றி நாட்டில் பலவித விமர்சனங்கள் எழுந்துவிட்டால், அவனது ஆணைகளுக்கு மரியாதை இருக்காது என்று சோ சொல்லுகிறார். சீதை தனது தூய்மையை நிரூபித்த பின்னரும், ராமர் அவளைக் காட்டுக்கு அனுப்பியது அநீதி என்னும் கருத்துக்கொண்ட பலரின் அதிருப்தி மட்டும் அரசாட்சியைப் பாதிக்காதா?  இத்தகையோருக்கு ராமர் மீது மரியாதையும், அவர்தம் ஆணைகளை ஏற்கும் கீழ்ப்படிதலும் வந்து விடுமா?

    தமக்கே உடன்பாடு இல்லாத நிலையிலும், ராமர் சீதையை அக்கினிப் பிரவேசத்துக்கு உட்படுத்தியது அவளது களங்கமின்மையை உலகுக்குக் காட்டுவதற்காகத்தானே? அப்படி மெய்ப்பித்த பிறகும், ராமரே சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என்ன நியாயம்? கடவுள் மனிதனாக அவதரிக்கும் போது மனிதனுக்குரிய இயல்புகளுடன்தான் நடந்து கொள்ளுவார் என்று சொல்லப்படுகிறது.  எனவே, ராமர் மீது கடவுள்தன்மையை அதீதமாய்த் திணித்து அவரது ஒவ்வொரு செயலுக்கும் – வாலிவதம் உட்பட – நியாய்ம் கற்பித்தல் சரியாகுமா?

    சோவின் விமர்சனக் கருத்துச் சரியென்றால், ராமர் முடிதுறந்து சீதையோடு அரண்மனையை விட்டு வெளியேறியன்றோ இருக்க வேண்டும்? அதுதானே சரியான தீர்வாக இருந்திருக்கும்? சீதைக்கும் வருத்தம் நேர்ந்திராது; மக்களுக்கும் ராமரின் ஆணைகளை மதிக்காத மனநிலை ஏற்பட்டிராதல்லவா? சீதையை வெளியேற்றிய பிறகு ராமர் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது சீதைக்கு அவர் இழைத்த கொடுமையை இல்லை யென்றாக்கிவிடாது. அவரது ஏகபத்தினி விரதத்தைப் பாராட்டலாமே யன்றி, அவர் சீதைக்கு இழைத்த கொடுமையை இதன் மூலம் நியாயப் படுத்திவிடவோ சரிக்கட்டி விடவோ முடியாது.

    ஆனானப்பட்ட ராஜாஜியே, தமது ராமாயணத்தின் முடிவுரையில் ராமனின்பால் தம் அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, ‘ சீதையின் துயரம் இன்னும் முடியவில்லை. நம் பெண்களின் வாழ்க்கையில் அது தொடர்கிறது’ என்றல்லவோ அங்கலாய்த்திருக்கிறார்?

    முடிவாக, நம் மதிப்புக்குரிய சோ இது போல் சிந்திப்பதும், ராமருக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவதும் ஏமாற்றம் அளிக்கிறது.

………

jothigirija@live.com

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    sampath kumar says:

    Rama was a king.He is governed by the laws of a king.He would have exiled himself even if a single citizen had accused him of some misconduct.Look at the present day politicians,chief ministers ,prime ministers and presidents who are unmoved even when their sons,daughters sons in law are involved in scams of million crores

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ராமராஜியம் நடாத்திய இராம பிரான் மக்கள் சொற்படி நடப்பவன். வண்ணான் புகார் கேட்டு தர்ம பத்தினி சீதாவை நாடு கடத்திய ஏக பத்தினி வேந்தன். ஆனால் சீதாவைத் தன் நாட்டுப் பிரஜையாக அவர் கருதி, புகாரை அவளுக்குத் தெரிவித்து, தன் எதிர்ப்பைக் காட்ட ஒரு வாய்ப்பளித்து தண்டனையைக் கூறினாரா ?

      சி. ஜெயபாரதன்

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    http://jayabarathan.wordpress.com/seethayanam/ [சீதாயணம் முழு நாடகம்]

    ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லிய தாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப் போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சி களாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையி லிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

    இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை! ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான் மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும் அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக் கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ?

    சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ தீண்டப்படாதவள் ஆகி விட்டேன். அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத சாபம் பெற்றவள்! நிரந்தர மாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள் பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் என்னிடமிருந்து பிரிக்கப் போகிறார்கள்! கோவென்று அழுகிறாள்)

    சி. ஜெயபாரதன்.

  3. Avatar
    ஷாலி says:

    திரு.சோ வின் காவிய ராமருக்கு எதிராக கேள்விக்கணை தொடுத்த ஜோதிர்லதாகிரிஜா அவர்களின் துணிவு பாராற்றுக்குரியது.அவதார இராமனால் அவதிப்பட்ட சீதையின் நியாயங்களை சீர்தூக்கிப் பார்க்கும் பெண்கள் மிகச்சிலரே.
    //இராமரின் ஏகப்பத்தினி விரதத்தை பாராட்டலாமேயன்றி, அவர் சீதைக்கு இழைத்த கொடுமையை இதன் மூலம் நியாயப்படுத்திவிடவோ சரிகட்டிவிடவோ முடியாது.//
    கண் காணாத காவிய நாயகிக்காக கசிந்துருகும் நெஞ்சமே!
    அயோத்தி இராமன் பெயரால் கண் முன்னால் கொல்லப்பட்ட 2000 மக்களுக்கு நீர் அழுத கணக்கெங்கே? கவியரசு வைரமுத்து சரியாகத்தான் சொன்னார்.”ஊமை வெயிலுக்கு உருகி விட்ட வெண்ணைகள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *