அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….

This entry is part 15 of 33 in the series 11 நவம்பர் 2012

 

ஒரு சமூகத்தின் வளர்ச்சியோ மேம்பாடோ அந்த சமூகத்தில் பெண்கள் நிலையை  முன் வைத்தே கணக்கிடப்படுகிறது.  வாஸந்தி அவர்களின் படைப்புகள் இந்திய சமூகத்தின் ஒரு பகுதி சமூகப் பெண்கள் பற்றியோ, பெரும்பான்மைப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருப்பவர்களையோ முன் நிறுத்துபவை. அவரின் கடைசியாக  வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு சர்வதேச அரசியலை முன் வைத்து அல்லது உலகின் பல்வேறு நாடுகளின் பிரசிசினைகளை முன் வைத்து ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை  அல்லது ஊடாடிய அரசியல் அனுபவப் பார்வை என்ற அளவிலும், ஒரு தமிழ் வாசகன் சென்றடைய வேண்டிய வெவ்வேறு களங்களை முன் நிறுத்தியவை. இத்தொகுப்பில் அவ்வகைக்கதைகளின் முன்மாதிரியாக புத்தகத் தலைப்புக்கதையை மட்டும் சொல்லலாம். அதுவும் கூட ஈழமக்களை முன் வைத்து அந்த மண்ணில் நடந்ததாக இல்லாமல் இந்திய மண்ணில் அகதிகளாக இருந்து ஈழ மண்ணுக்குப் போக ஆசைப்படுகிறவர்களின் மன உணர்ச்சிகளை மையமாகக் கொண்டே அமைந்திருக்கிறது. இந்திய மண் அவர்களுக்கு வழங்காத நியாயத்தையும் அவர்களை கவுரவமாக நடத்தாததையையும் உறுத்தலாக்கியிருக்க்றது. அந்த வகையில் இத்தொகுப்பின் கதைகளின் மையங்களை சாதாரண் விளிம்பு நிலை மக்களைப் பற்றினதாகவே பெரும்பாலும் எடுத்துக் கொள்ளலாம்.   முதுமை பற்றிய பிரஸ்தாபங்களை இரண்டில் ஒரு பகுதி கதைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன். பெருகி வரும் முதியோர் இல்லங்களில் புழுங்கித் தவிக்கும் இதயங்கள் தென்படுகின்றன்.  அல்லது முதுமை ஒரு தொல்லை தரும் நோயாக பீடித்திருப்பது பற்றி பேசுகிறது.  முதுமை சாந்த நோய்கள் பலவீனராக்குகிறது. ஒரு குழந்தைத்தனத்திற்கு கொண்டு  செல்கிறது.  முதுமை குறித்த எதிர்ப்புணர்வு செருப்பை எடுத்து  வீசி விட்டுப் போகச் செய்கிறது.  இருத்தியலியல் அளவில் இந்த முதுமையோ, துன்பங்களோ தற்கொலைக்கு கொண்டு செல்லும் க்தைகளையும் பார்க்கிறோம் இதில்.

aaaaஅதிகாரமும், சுயநலமும்   மனதளவில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடுதைப்பற்றி பல ஆய்வுகள் உள்ளன.இதில் கலைக்கோ, இலக்கியத்திற்கோ இடமில்லை. இதில் பாட்டு கற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.  அல்லது கற்றுக் கொண்ட பாட்டை  தொடர்ந்து பயிற்சியின் மூலம் மீட்டெடுக்க முடியவில்லை.  இந்தக் குறை ஏதோ வகையில் அழுத்திக் கொண்டே இருக்கிறது, கர்ப்பத்தில் இடம் பெறாத பூச்சியும் அதை தொடர்ந்து இம்சைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சாமார்த்தத்தை தேவாரம், திருவாசகம், தியாகப்ரும்மம்ன்னு நிறுத்திக் கொள்ளலாம் என்று ஆவேசமும் படுகிறது.  அமுதாவும், கம்லாவும், சண்முகநாதனும் இந்த ஆவேசங்களுக்குள் அலைபடுகிறார்கள்.எல்லோரும் கலைஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ரசிகன் ரொம்பவும் முக்கியம் என்ற பாவனை வெளிப்படுகிறது. கலை  மேல்  அபரிமிதமான காதல் இருக்கும் போது  எந்த அவமானமும் உறைக்காது என்பதும்  தெளிவாகிறது.

நுகர்வு சந்தை சமூக உறவிலிருந்து மனிதனை துண்டிக்கும் அவலத்தை தற்கொலைகள் மூலம்  ராமப்பாவைக் கொண்டு காட்டுகிறார். கோபம் பொருள் ஈட்ட வேண்டியுள்ள அற விழுமியங்களை அழித்து விடும் அவலம் கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுகிறது. கோபம்  வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்த்துப் போராடும் குணத்தை   கோடிட்டாலும் அதைநிர்மூலமாக்கி  இல்லாதாக்கி விடுகிறது. இத்தகைய மனிதனது உலகம் உருவாக்குபவை இயந்திர பொம்மைகளை.இந்த இயந்திர பொம்மைகள் சலித்துக் களைத்துப் போகிறார்கள். முன் எப்போதானக் காலத்தை விட இக்காலத்தில் தான் இந்த பெண் பொம்மைகள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் அவலம் பற்றி இவை பேசுகின்றன.மிரசுவிடம் அடைபட்டிருக்கும் பெண்  வெளியேறத்துடிக்கும் ஆவலும், படிக்க ஆசைப்படுவதும் எதேச்சையாக நிகழ்ந்து விடுவதில்லை. இந்த  ஆசைதான் உடல் உபாதை மீறி காசியில் அலைய வைக்கிற்து. காது கேட்காமல் டமாரமாகவே இருந்து விடுவதில் இருக்கும் சவுகரியம் நல்லது என்று படுகிறது. இக்கதைகளின் உரைநடையில் நனவும் கனவும் முயங்கிய உணர்வு  வாசிப்பில் சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்து விடுகிறது.உரையாடலில் தென்படும் சாதாரணதன்மையை  மீறிய அறிவுஜீவித்தன்மையோ, தர்க்கரீதியான தனமோ, நாடகீய உட்கூறுகளோ சுவாரஸ்யத்தினைத் தருகிறன்றன.  தொடர்ந்து மனிதர்களை இணைக்கும் கண்ணிகளாக மனித நேயமும், அன்பும் இக்கதைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.முன் முடிவுகள் இன்றி இயல்பாக இக்கதாபாத்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.பிராமணியச் சூழலும், கர்நாடக மாநிலப் பின்ணணியும், கன்னட வார்த்தைப் பிரயோகங்களும் பல கதைகளை சுவாரஸ்யமாக்குகின்றன.

இத்தொகுப்பின் தலைப்புக்கதையின் விடுதலை உணர்வை  பெரும்பான்மையான கதைகளில் பார்க்க முடிவது எதேச்சையானதல்ல. இலங்கையிலிருந்து வந்து அகதி வாழ்க்கை வாழ்ந்து அவமானப்பட்டு அதிலிருந்து மீட்சிக்கு அவர்கள் முயல்கிறார்கள். முதுமையிலிருந்து விடுபட்டு குழந்தைத்தனத்துள் அகப்பட்டுக் கொள்ள பல முதியவர்களுக்கு ஆசை இருக்கிறது. காது மநதமாக் இருந்து உலகின் கசடுகளை  அறிந்து கொள்ளாமல் இருப்பதே  சுப்பம்மாவிற்கு விடுதலையை அளிக்கிறது.மீராசுதாரிடம் இருந்து விடுபட்டு படுக்கையிலிருந்து படிக்கப் போக ஆசைபடுவது லட்சுமிக்கு மீட்சியாக இருக்கிறது.. மீட்சிக்கான இடம் சிலருக்குக்  காசியாக் அமைந்து விடுகிறது.  கேட்கிற பாடல் கொண்டு வரும் அசாதாரணத்தன்மையும் பய்மும் கூட தப்பிக்க வழி சொல்கிறது.  ஞானிகளாக இருப்பதை விட அசடாக இருப்பது மேல் என்று பலருக்குப் பட்டு விடுகிறது. ஆண்கள் காலாகாலமாய் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பெண்களின் பங்கு குறைத்து கணிக்கப்படுகிறது. காலகாலமாய் பெண்கள் சிசுக்களிலிருந்தே கொல்லப்பட்டு வரும் அவலத்தை தயங்காமல் சொல்பபட்டிருக்கின்றன..பெண்கள் சுய மதிப்பும், பொருளாதாரச் சுயச்சார்பும் பெற்று விட்டால் மட்டுமே சமுதாயத்தில்  ஆரோக்கியமான  மாற்றம் உருவாகும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்  வாஸ்ந்தி அவர்கள். ஒடுக்குமுறையாளர்களோடு ஒன்றிப்போய் மற்றவர்களுடனான தொடர்பு இல்லாமல் தனிமை கொண்டு வாழ்ந்து துன்பங்களிலிருந்து விடுபடுதலை ஒரு அரசியல் நிலையாகப் பார்க்கும் ஒரு கோணத்தை போன தொகுப்பில் இவர் வெளிப்படுத்தினாலும், இத்தொகுப்பு அதிலிருந்து மாறுபட்டு லவுகீக தளத்தில் அலைவுறும் பெண்களைப் பற்றி அதிகம் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம்.உலகின் மீதான் நேசம், போராட்ட உணர்வுகள், தங்களின் கடமையை உணர்ந்து செயல்படுதல்  என்பதே பெண்களின் மீட்சிக்கான வரலாறாக அமைந்துள்ளது. முடக்கப்பட்ட,  மறைக்கப்பட்ட விசயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை வாஸந்தியின் எழுத்துக்கள் தேடுபவை.ஆரோக்கியமான சமூகத்தில் பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாகவும், இயந்திரங்களாகவும் இல்லாமல் மீட்சி கொண்டவர்களாக இயங்க வேண்டும் என்ற ஆசையை அவரின் எழுத்துக்கள் தொனிப்பவை. பெண்கள் என்ற பாகுபாட்டில் அக்கறை கொள்ளாவிட்டாலும் அவர்களைப் பற்றி அதிகம் பேச ஆசைப்படுபவை. சமூகத்தின் செயல்பாடுகளால் திருப்தியுறாத எதிர் செயல்பாடாய் இக்கதைகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.படைப்பாளி மனதில் வைத்திருப்பதையெல்லாம் கொட்டி விடமுடிவதில்லை.கொட்டுவதில் அள்ள கொஞ்சம்  இருந்து கொண்டே இருக்கிறது.அதைத்தான் இத்தொகுப்பின் கதைகளும்  சொல்ல முயல்கின்றன.

 

                                   சுப்ரபாரதிமணியன்

                                                     subrabharathi@gmail.com

( மீட்சி, வாஸந்தி சிறுகதைகள்,  கவிதா பப்ளிகேசன் வெளியீடு, சென்னை 17

ரூ70)


Series Navigationசவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *