“ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல

author
29
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 22 in the series 24 ஜனவரி 2016

 

முனைவா் பு.பிரபுராம்

          உலகில் நூற்றுக் கணக்கில் பல்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் பயன்படுகின்றன. அவற்றில் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவே. பிறகு ஏனய்யா தமிழ்நாட்டில் பல மேதாவிகள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும், நிறையச் சம்பாதிக்க முடியும் என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள்?. ஏன் பல பெற்றோர்கள் இலட்சக் கணக்கில் செலவு செய்து, தங்கள் பிள்ளைகளை எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற அரும்பெரும் படிப்புகளில் சோ்க்கிறார்கள்?. ஏன் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்க வைப்பதற்கே பல இலட்சங்களை அள்ளி இறைக்கின்றனா்?. மருத்துவம், பொறியியல் போன்ற இன்னபிற பட்டப் படிப்புகளுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. இலட்சங்கள் தாண்டி கோடிகளைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்பவா்களெல்லாம் முட்டாள்களா?. இல்லை ஆங்கில வழிக் கல்வியை மட்டுமே ஆதரிக்கும் மேதாவிகள் எல்லாம் அறிவுக் குறைபாடு உள்ளவா்களா?.

முதலில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டியது, கல்விக்காகச் செலவழிக்கும் கோடிக் கணக்கான பணம் அந்தந்தக் கல்விநிலைய முதலாளிகளுக்குப் போய்ச்சேருகிறது என்பதைத்தான். அதேசமயம் ஆங்கிலத்தில் நன்றாகப் படித்தால் வெளிநாடுகளுக்குச் செல்லலாம், நிறைய வருமானம் ஈட்டலாம் என்கின்றனரே?. ஆம் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்காக வேலை பார்த்தால் நம் நாட்டில் கிடைப்பதைக் காட்டிலும் நிறைய சம்பளம் கிடைக்கும்தான். ஆனால் நம் உழைப்பால் அந்தக் கம்பெனி முதலாளிகள் அடையும் இலாபம் நமக்குக் கிடைக்கும் சம்பளத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். அவா்களைப் பொருத்தவரை நாம் குறைந்த சம்பளத்திற்கு அதிகநேரம் உழைக்கும் கூலி ஆட்களே. வேண்டுமென்றால் வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். தேவையில்லை யென்றால் வேலையைவிட்டு விரட்டிவிடுவார்கள்.

ஆங்கிலவழிக் கல்வியால் தமிழ்நாட்டின் கல்வி நிலைய முதலாளிகள் இலாபத்தை அள்ளுகின்றனா். ஆங்கிலத்தை நன்றாகப் படித்த நம் நாட்டவா் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குப் பெரும் இலாபத்தைத் தேடித்தருவதற்காக உழைக்கின்றனா். இந்தப் பண முதலைகளால்தான் தமிழ்நாட்டுப் பெற்றோர்களிடையே ஆங்கில மோகம் திட்டமிட்டு நிலைநாட்டப்படுகிறது. ஆங்கிலவழிக் கல்வியை அங்கீகரிப்பவா்களும் தொலைநோக்குச் சிந்தனை அற்றவா்களாகவோ முதலாளிகளின் கைக்கூலிகளாகவோ இருக்கின்றனா்.

உள்நாட்டுக் கல்வி வியாபாரிகள் போதாக்குறைக்குத் தற்போது வெளிநாட்டுக் கல்வி வியாபாரிகளும் நம் நாட்டில் கால்பதிக்கத் துடிக்கின்றனா். ஏன் நமக்கெல்லாம் கல்வி கற்பிப்பதற்கு அவா்களுக்கு அவ்வளவு ஆா்வமா?. இல்லவே இல்லை. நம் நாட்டு மக்கள் கல்வி என்றால் கண்மூடித்தனமாகக் காசு செலவழிக்கத் துணிபவா்கள். கால் வயிற்றுக் கஞ்சி குடித்தாலும் பரவாயில்லை என்று வயிற்றைப் பட்டினி போட்டுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்று ஆசைப்படுபவா்கள். நாந்தான் நல்லாப் படிக்கலே, என் பிள்ளையாவது நல்லாப் படிக்கணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற நல்ல உள்ளம் உடையவா்கள். ஆகவே கல்வி வியாபாரச் சந்தையை நம் நாட்டில் விரித்தால் நிறைய இலாபம் அடையலாம் என்று திட்டமிட்டு சதி வலை வீசுகின்றனா். அதில் புழுப் பூச்சிகளாகச் சிக்கிச் சாவது நம் நாட்டு அப்பாவிப் பெற்றோர்களே.

கல்விக்காகச் செலவு செய்வது என்பது வேறு. ஆங்கில வழிக் கல்விக்காகச் செலவு செய்வது என்பது வேறு. இவ்வேறுபாட்டினை முதலில் நாம் உணரவேண்டும். பெற்றோருக்கு நன்றாகத் தெரிந்த தமிழ்மொழியில் பாடநூல்களும் அறிவுக் களஞ்சியங்களும் இருந்தால் போதுமே. அவா்களே பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் நடத்த ஆரம்பித்துவிடுவார்களே. பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளில் கொண்டுசென்று சோ்ப்பதற்கான தேவையே இல்லாமல் போய்விடுமே. அப்படி நடந்துவிட்டால் கல்விச் சந்தைக் கடைக்காரர்களுக்கு எப்படி இலாபம் கிடைக்கும்?. கல்வி வணிகத்தில் இலாபம் ஈட்டுவதற்கான உத்தி இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதா?

நம் முப்பாட்டன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையும், நம் பாட்டன் இராஜஇராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும் எந்தக் கட்டிடப் பொறியியல் கல்லூரியில் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டன?. நம் மூதாதையா்களுக்குக் கட்டிடக் கலை சார்ந்த அறிவில்லாமலா இவ்வளவு பெரிய கலைநுட்பங்களை உருவாக்கி விட்டனா். என்னமோ ஆங்கிலத்தில் சிவில் இன்ஜினியரிங் படித்தால்தான் கட்டிடக்கலை வல்லுனா் ஆகமுடியும் என்றெல்லாம் பிதற்றுவது யாரை ஏமாற்றும் வேலை?. ஏன் தமிழில் கட்டிடப் பொறியியல் படித்துவிட்டால் நாம் கட்டும் கட்டிடம் கோணலாகப் போய்விடுமா என்ன?. ஆங்கில வழிக் கல்வியால் நம்நாட்டின் பல மரபு சார்ந்த தொழில்களை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நம் கிராம விவசாயிகள் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பயின்றவா்களா?. நம் நாட்டு மீனவா்கள் எந்தக் கடல்சார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்துவிட்டு மாதக் கணக்கில் ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்கின்றனா். இவா்களுக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும் என்பதால் இவா்களை அறிவற்ற மூடா்கள் என்று கூறமுடியுமா? அப்படிச் சொன்னால் நாம்தான் அறிவிலிகளாய் வரும் காலத்தில் மதிக்கப்படுவோம்.

நாய் என்றாலே அது ஒரு விலங்கு என்று எங்கள் பிள்ளைகளுக்குத் தெரிகிறது. அதை dog என்று படித்தால் தான் அறிவு வளரும் என்று கூறுவது யார் தலையில் மிளகாய் அரைகும் வேலை. தற்போது வேண்டுமென்றால் இப்படித் தலையில் அரைக்கப்படும் மிளகாய் மக்களுக்கு உரைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் வரும் காலத்தில் தலையில் அரைக்கப்படும் மிளகாயின் எரிச்சல் தாங்க முடியாமல் தமிழ்நாட்டு மக்களுக்குச் சுரனை வரும். அதனால் விழிப்புணா்வு வரும். இன்னும் சில ஆண்டுகளில் கல்வி வணிகத்தின் ஏமாற்று வேலையும், வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு ஆள்சோ்க்கும் வேலையும் செல்லாக் காசுகளாகிவிடும். ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அறிவு அல்ல என்ற விடயத்தை மக்கள் உணா்வதற்கான வாய்ப்பு வந்தே தீரும். ஆனால் அவ்வாய்ப்பு வரும்வரை இன்னும் எத்தனை மாணவா்கள் தங்கள் உன்னதமான வாழ்க்கையை மொழிச் சிக்கலினால் இழக்கப் போகிறார்களோ என்ற சிந்தனையால் கனத்த மனத்துடன் இந்தக் கட்டுரையிலிருந்து விடுபடுகிறேன்.

 

Series Navigationமனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது
author

Similar Posts

29 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும், நிறையச் சம்பாதிக்க முடியும் என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள்?.//

    தமிழ் நாட்டுப் பெற்றோர் எவரும் தங்கள் குழந்தை அறிவு வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பதில்லை.பெரிய பதவியில் அமர்ந்து கைநிறைய சம்பாரிக்க வேண்டும் என்ற இயல்பான எண்ணமே. ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சி பெற்றால் அதன் விளைவு ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாகி சமுதாய முன்னேற்றமாக மாறும்.
    ஆனால் ஒரு மாணவன் வயிற்றுப்பிழைப்புக்காக கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன் தரும்.

    தனி மனிதர்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதே இன்றைய ஆங்கிலக் கல்வி.இந்தக் கல்வியால், தமிழர்களால் எந்த புதுமையோ,அறிவியல் கண்டுபிடிப்புகளோ நிச்சயம் உருவாக்க முடியாது.ஆங்கில எஜமானுக்கு சேவை செய்யும் அடிமைக்கல்வியைதான் காலனிய நாடுகளுக்கு அவர்கள் காணிக்கை உண்டியலாக தந்து விட்டு சென்றுள்ளனர்.இந்த உண்டியலில் விழுந்த IIT,போன்ற மாணவர்களும் அவர்களுக்கு சேவை செய்யவே செட்டிலாகி விடுகிறார்கள்.

    தாய் மொழிக் கல்வி மட்டுமே அறிவு வளர்ச்சிக்கு உற்ற தோழனாக விளங்கும்.இந்த அறிவு வளர்ச்சியின் மாற்றங்களே பெரும் கண்டுபிடிப்புகளும் அதைத்தொடர்ந்து வரும் சமுதாய முன்னேற்றத்திற்கும் காரணமாக மாறும். தாய் மொழியில் படித்து பெரும் சாதனை புரிந்து தம் நாட்டை வளப்படுத்திய பெருமக்கள், சீனம்,ஜப்பான்,கொரியா,ரஷ்யா,இஸ்ரேல்,பிரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி, என்று உலகமுழுவதும் இன்றும் நமக்கு உதாரண புருஷர்களாக உள்ளனர். ஆகவே தாய் மொழிக் கல்வி எனும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளாக நம் மக்களை மாற்றுவோம்.ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்றோம்.ஆங்கிலத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.விழியும் மொழியும் இரு கண்கள். அறிவியற் சிந்தனைகள் மலர இவையே ஆதாரம்.

  2. Avatar
    BSV says:

    சிவில் எஞ்ஜினியர் என்றால் கட்டிடக்கலை பொறியாளரா ? கட்டுமானப் பொறியாளரா? முன்னவருக்கு ஆர்கிடெக்ட் என்றுதானே பெயர்? ஆங்கிலக்கல்வி கற்றோரெல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களில் மட்டுமே பணிபுரியச் செல்கிறாரென்றால் வெள்ளைக்காரனுக்கு ஊழியம் செய்கிறார் என்ற வாதம் ஓரளவுக்குப் பொருந்தும். அப்படியில்லை. இந்திய நிறுவனங்களுக்குத்தான் பெருமளவில் செல்கின்றனர். கண‌ணிப்பொறியாளர்கள் விப்ரோ, இன்ஃபோசியஸ், டி எசி எஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்குத்தான் செல்கின்றனர். தற்போது பல சிறிஒய நிறுவனங்கள் உருவாகி பலரை நல்ல ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துகின்றன். இந்நிறுவனங்கள் ஆங்கிலம் தவிர வேறெந்த இந்திய மொழிகளில் அப்படிப்பைக் கற்றோரை வேலைக்கு எடுக்கா. எப்படி வெள்ளைக்காரனுக்கு ஊழியம் செய்து, அவன் நினைத்த நேரத்தில் வெளியே போ என்றால் போய்த்தான் ஆக வேண்டுமோ அப்படி இந்திய நிறுவனங்களும் செய்யும். டி சி எஸ், கூண்டாகப் பலரை வெளியேற்றியதே சில்லாண்டுகளுக்கு முன்!

    மேற்கல்வி ஆங்கில வழி இல்லாவிட்டால் தமிழ் நாடு தேர்வாணையக்குழமம் நடாத்தும் தேர்வை எழுதி தமிழ்நாட்டில் மட்டுமே பணிபுரிய முடியும்! எத்தனை பேருக்கு தமிழக அரசு வேலை தர முடியும்?

    மருத்துவம், பொறியியல் போன்ற மேற்கல்விகள் மட்டுமல்ல. கலை, விஞ்ஞான மேற்படிப்புகளும் தமிழ் வழியில் பள்ளிக்கல்வி கற்று வந்தோரால் முடியாது. ஏனெனில் அவை ஆங்கில வழி மட்டுமே. ஆங்கிலத்தில்தான் அப்படிப்புக்களுக்கான நூல்கள் உள; தமிழ்வழி படித்தோர் பாடு திண்டாட்டம்தான். ஏன் அவர்களை நாம் இன்னலுக்காளாக்க வேண்டும்? மாணவர்கள் நிலையிலிருந்துதான் பார்க்க வேண்டும். அவர்கள் மனவேதனை – கல்லூரி முதலாமாண்டில் – எனக்குத்தானே தெரியும் பட்டவன் நான் என்பதால்.

    ஆங்கிலம் மொழி மட்டும்தான். ஏன் – தமிழென்ன வானத்திலிருந்தா குதித்தது? அதுவும் வெறும் மொழி மட்டும்தான் எனச்சொல்லலாமே? ஒரு மொழி சிறப்பாக வளர்ச்சியடைந்திருந்து, அம்மொழியைக் கற்றால், பலன்கள் பலபல நமக்கே…என்று தெரிந்தால், அம்மொழி வெறும் மொழி மட்டுமன்று. நம் ஆளுமையை நன்கு மெருகூட்டும் வலிமை கொண்டது எனப் புரியலாம்.கிறது. தமிழ் அப்படி ஆங்கிலத்துக்கு நிகராக வளர்ந்து விட்டதா?

    சப்பானிய, பிரஞ்சிய, செருமானிய, சீன – மொழிகள் எல்லாம் அவ்வாறு வளர்ந்த படியால் அனைத்து படிப்புக்களையும் அம்மொழியிலேயே கற்கலாம். தமிழிலோ, பிறவிந்திய மொழிகளிலோ முடியாது என்பது மறுக்கவியலா உண்மை.

    ஆக, மொழி என்பது வெறும் மொழியே என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது. அது கல்வியின் திறவுகோல். அறிவை நமக்குப் புகட்டும் ஒரு கரண்டி. தமிழ் இன்றளவும் இலக்கிய மொழியாகவே நிலைத்து நிற்கிறது. இலக்கிய வாதிகளுக்குப் பேரையும் புகழையும் கொடுக்கவே :-( எனவே, முன்பு எழுதினேன்: தமிழ் இலக்கியம் படிக்கவே எனக்குதவுகிறது. காலையிலிருந்து இரவு வரை ஆங்கிலத்திலேயே பணி செய்துவிட்டு, மனச்சோர்வை இரவில் போக்குவதற்கு தமிழ் பண்டை இலக்கியம். Life of literary leisure – Many many thanks to Tamil language for that :-)

    மீனவன் என்ன ஆங்கிலக்கல்வி கற்றா மீன் பிடிக்கிறான்? என்ற கேள்வி எனக்கு அதிர்ச்சியூட்டுகிறது. கொத்தனார் வீடு கட்டுவார். பின்னர் கட்டுமானப்பொறியாளர் எதற்கு? தூத்துக்குடியில் தமிழக அரசின் மீன்கலைப் பலகலைக்கழகமே இருக்கிறது. அங்கு என்னென்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது? அக்கல்வி எப்படி மீனவருக்கு உதவுகிறது என்று தெரிந்தால் மீனவனுக்கு என்ன ஆங்கிலக்கல்வி கற்றா மீன் பிடிக்கிறான் என்ற கேள்விகள் எழா. நம் கடலில் மீன் வளர்ச்சிக்கும், மீனவர்களுக்கு எங்கு எப்போது மீன் படும் (நிறைய கிடைக்கும்); போன்ற பலபல ஆராய்ச்சிகள் செய்து, மீனவர்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்த அக்கல்வி உதவுகிறது. மீனவர்களே அவர்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தவியலாது. அதே போல கொத்தனார்களும் சித்தாட்களும் நெடிதுயர்ந்த கட்டிடங்களையும், பெருமரங்குகளை தாங்களே கட்டிவிட முடியாது. கல்வி பெற்ற பொறியாளரால் மட்டுமே முடியும்.

    1. Avatar
      முனைவா் பு.பிரபுராம் says:

      கல்வி கற்றால் அறிவு வளரும், நிறைய ஊதியம் பெறலாம் என்பதற்கும். ஆங்கில வழிக்கல்வி கற்றால் மட்டும்தான் அறிவு வளரும், நிறைய ஊதியம் அடையலாம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அருள்கூா்ந்து சிந்தித்துப் பாருங்கள். என் தமிழ் எழுத்து நடையில் தவறு கண்டுபிடிப்பவா்களை மேலும் ஊக்கப்படுத்துகிறேன். தாங்கள் கூறும் பிழை திருத்தம் மிகச் சாியானது என்றால் ஏற்றுக் கொள்வேன். இல்லையென்றால் உதறிவிடுவேன், அவ்வளவுதான்.

      1. Avatar
        BSV says:

        ஆங்கில மொழியறிவு கல்வியின் திறவுகோல் என்பதே என் வாதம். ஆங்கிலம் படித்தால் மட்டுமே அறிவு வளரும் என்பதன்று. ஆங்கிலம் தெரியாவிட்டால் அத்திறவுகோல் எங்கிருந்து வரும்?

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    ஆஹா ஆஹா மிகச்சரியான வாதம். இன்னமும் தாய்மொழியிலேயே பயிலும் தேசங்களில் ஜப்பான், ஜெர்மனி, கொரியா போன்றவையும் உள்ளன. அவர்களெல்லாம் என்ன அழிந்தா போய்விட்டார்கள் ?

    நமது முட்டாள்தனத்துக்கும், இயலாமைக்கும், தற்குறித்தனத்துக்கும், மிக முக்கியமாக தாழ்வுமனப்பான்மை மற்றும் உளவியல் அடிமைத்தனத்துக்கும் தமிழை குற்றம் குறை சொல்லிக்கொண்டிருந்தால் இப்படியே அடுத்தவன் காலை நக்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    ”தமிழைப்படித்தால் என்ன வேலை கிடைக்கும் ?” என்பது முக்கியமான கேள்வி.

    தமிழ் படித்தால் எந்த வேலையும் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தாதது எவர் செய்த பிழை ?

    ”தமிழிலேயே படித்தால் வெளிமாநிலங்களில் / வெளிநாட்டில் வேலை பார்க்க முடியுமா ?” என்பது அடுத்த முக்கியமான கேள்வி.

    ஆங்கிலம் ஒரு மொழிப்பாடம் என்ற அளவில் – தேவையெனில், மூன்றாம் மொழியாக ஹிந்தியையும் கூட – கற்றுக்கொடுத்திருக்கலாம். அதை வைத்துக்கொண்டு தமிழகம் விட்டு இடம்பெயர் விரும்புவோர் பெயர்ந்துகொள்ளலாம். தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு தமிழ் நாட்டுக்குள்ளேயே உரிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்து மாநிலத்தைவிட்டு வெளியேற தேவையில்லாத நிலையை உருவாக்காதது எவன் செய்த குற்றம் ?

    1. Avatar
      BSV says:

      கோடிக்கணக்கான தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெருக்க தமிழக அரசாலோ வேறெந்த அரசாலோ அவர்கள் மக்களுக்கு முடியாது. எனவே வேலை தேடி புலம் பெயர்தல் கட்டாயமாகிறது. அப்படியே வேலை தன் மாநிலத்திலே கிடைத்தாலும், தன் தகுதி, தன் எதிர்பார்ப்புக்களின்படி கிடைக்காது.

      ஹிந்தி தெரிந்த பீஹார், ஜார்க்கண்ட, சட்டிஸ்கார் வாசிகள், தங்கள் தாய்மொழி மட்டுமே அறிந்த அசாமிகள் – எல்லாம் சென்னையிலும் பிற் மாநிலங்களிக்கும் வந்து குமிந்து கூலி வேலை செய்துவருகிறார்கள் தாய் மொழி ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? தாய் மொழியில் கற்ற இவர்கள் அழியவில்லை. ஆனால் கொத்தடிமைகளாகி விட்டார்கள்.

      இந்தி தெரிந்த தமிழர்கள் 10 லட்சம் பேருக்கும் அதிகமாக தில்லி மாநகரத்தில் சேரிகளில் வசிக்கிறார்கள். அனைவரும் நாட்கூலிகள். மராட்டி, இந்தி தெரிந்த 10 லட்சத்துக்குமதிமான தமிழ் சேரி மக்கள் பம்பாய் வாழ்கிறார்கள். இந்தி இவர்கள் வாழ்க்கையை மாற்றி விட்டதா? மூன்றுதலைமுறைகளக்கடந்தும் அதே வாழ்க்கைதானே?

      அதே சமயம். இவ்வூர்களில் ஆங்கிலக் கல்வி பெற்ற தமிழர்களும் வாழ்கிறார்கள்: பெரும் நிறுவனங்களில். நோய்டாவிலும் குர்கானிலும் வாழ்பவர்களும் பம்பாயில் பெருநிறுவனர்களங்களிலும் வேலை பார்த்து வாழும் தமிழர்கள் ஆங்கிலக்கல்வி மூலமே அங்கு சென்றனர்.

      கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு எனபது, இன்றைய நிலையில், ஆங்கில வழி கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்ற பொருளில் மட்டும் வரும். தமிழ் மட்டுமே என்றால் பம்பாயில் ரோடு போடும் கூலி வேலையும், தில்லியில் குப்பை பொறுக்கும் வேலை மட்டுமே கிடைக்கும். வாழலாம். But life without dignity is not worth living.

      என் பிள்ளைக்கு எப்படியாவது இங்கிலீசு சொல்லித்தாப்பா என்று கேட்கும் தில்லிச் சேரித்தமிழர்கள் ஏராளம். எவருமே என்னிடம் தமிழ் சொல்லித்தாவென்று கேட்கவில்லை. Why, Mr Pon Muthukumar ?

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        இயலாது இயலாது என்று சொல்லிக்கொண்டே இருந்தால் தட்டிலிருக்கும் சோற்றைக்கூட எடுத்து வாயில் போட இயலாதுதான். இயலாது என்பது செய்ய முனையா – செய்யத்துணியா பேடி அரசுகளின் வக்கற்ற நிலை. எத்தனை அமெரிக்கன், ஜெர்மன், ஜப்பானியன் வேலை இல்லையென்று தேடி வெளி நாடு ஓடுகிறான் ? சிவப்பிந்தியர்களிடமிருந்து பிடுங்கி ஒன்றுமில்லாத இடத்திலிருந்து இன்றைய நிலையை அமெரிக்கா எப்படி அடைந்தது ? இயலாது இயலாது என்றே சொல்லிக்கொண்டேவா இருந்தார்கள் ?

      2. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        // என் பிள்ளைக்கு எப்படியாவது இங்கிலீசு சொல்லித்தாப்பா என்று கேட்கும் தில்லிச் சேரித்தமிழர்கள் ஏராளம். எவருமே என்னிடம் தமிழ் சொல்லித்தாவென்று கேட்கவில்லை. Why, Mr Pon Muthukumar ? //

        நதியின் பிழையன்று நறும்புனலின்மை. இவ்வளவுதான் சொல்ல இயலும். இதற்குமேலும் இன்னும் இன்னும் என விரித்துப்பொருளுரைக்க ஆயாசமாக இருக்கின்றது.

    2. Avatar
      முனைவா் பு.பிரபுராம் says:

      தமிழ் வழியில் பயின்றவா்களுக்குத் தமிழ் நாட்டிற்குள்ளேயே உாிய வேலை வாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கிக் கொடுக்கமுடியும் என்பது மிகச் சாியான முடிவு. எந்த வேலைக்கு ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் சாா்ந்த அறிவு அவசியமோ, அந்த வேலைக்குச் செல்ல விரும்புவோா் அம்மொழிகளைத் தெளிவாக எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். மனிதன் தன் வாழ்நாளில் விருப்பத்தின் அடிப்படையில் எத்தனை மொழிகளை வேண்டுமானலும் கற்றுக்கொள்ளலாம். உளவியல் அடிமைத்தனம் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமான விடயம். அது இன்னும் நம் மக்களுக்கு விாிவாக விளக்கப்படவேண்டியது. அதை நம் போன்றவா்கள்தான் இயன்றவரை செய்து முடிக்கவேண்டும்.

  4. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இன்னும் நினைவில் உள்ள என் அனுபவம் :

    84-ம் ஆண்டு. எட்டாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்தில் படித்துவிட்டு ஒன்பதாம் வகுப்பிற்கு மயிலாடுதுறையிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் சேர அழைத்துச்செல்லப்பட்டேன். தலைமை ஆசிரியரே நேர்முகம் செய்தார். எட்டாம் வகுப்பு மதிப்பெண்ணை பார்த்துவிட்டு (சராசரிக்கும் கொஞ்சம் மேல்) என்னை இரண்டு கேள்விகள் கேட்டு பதில் எழுதச்சொன்னார். ஆம், ஆங்கிலத்தில்தான்.

    தமிழில் ஓரிரு வரிகள் பிழையில்லாமல் எழுதும் திறன் இருக்கிறதா, கணிதமோ அறிவியலோ வரலாறோ புவியியலோ சரிவர தெரிந்திருக்கிறதா என்று சோதிக்காமல் எடுத்த எடுப்பிலேயே எனது ஆங்கில மொழிப்புலமையை சோதிக்கவேண்டும் என்று அவரை நினைக்க வைத்த காரணி எது என்று இன்றுவரை யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

    பி.கு : இரண்டு கேள்விகளுக்குமான விடையை படித்துப்பார்த்த த.ஆ, என்னை அழைத்துப்போயிருந்த என் சித்தப்பாவிடம் காட்ட, அவரும் படித்து தலையிலடித்துக்கொண்டார், என்பது வேறு விஷயம் :)

    1. Avatar
      முனைவா் பு.பிரபுராம் says:

      இது உங்களுடைய பள்ளி அனுபவம் மட்டுமல்ல. தமிழ் நாட்டில் பலருடைய பள்ளி மற்றும் கல்லூாி அனுபவம் இதுதான். உதாரணத்திற்கு என் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளைப் பாருங்கள். நான் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவன். அதுவும் 12-ஆம் வகுப்பில் வரலாற்றுத்துறையினை முக்கியப் பாடமாகப் பயின்றேன். அப்பொழுது நான் பயின்ற வரலாற்று நிகழ்வுகள் இன்னும் என் நினைவில் உள்ளன. பாபா் தொடங்கி ஔரங்கசீப் வரை நிகழ்ந்த முகலாயா் ஆட்சியைப் பற்றிக் கூறு என்று ஒரு கேள்வி கேட்டால் அக்கேள்விக்கு என்னிடம் குறைந்தபட்சம் பத்து நிமிடம் சொல்லக் கூடிய அளவிற்குப் பல முக்கியப் பதில்கள் உள்ளன. பின் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றேன். பயின்ற மூன்றாண்டுக் காலத்தில் தேசிய மாணவா் படையில் இணைந்து இரண்டரையாண்டுகள் தொடா்ந்து இராணுவப் பயிற்சிகளைப் பெற்றேன். துப்பாக்கி சுடுதல், தடைகளைத் தாண்டுதல், உடல் கட்டுக்கோப்பு, அணிவகுப்பு, தேச வரைபடத்தின் மூலம் செல்ல வேண்டிய இலக்கினை அடைதல் போன்ற பல்வேறு பயிற்சிகளில் சிறப்புத் தோ்ச்சி அடைந்தேன். C சான்றிதழில் A கிரேடு பெற்றேன். அதன் மூலம் லெப்டினட் என்ற இராணுவ அதிகாாி பதவிக்குப் பேட்டித் தோ்வின்றி நோ்காணலின் மூலம் மட்டுமே தோ்ச்சிபெறும் அளவிற்குத் தகுதியடைந்தேன். அங்குதானே வந்தது மொழிச் சிக்கல் நோ்காணலில் ஆங்கிலத்திலோ இந்தியிலோ நான் பேசியாக வேண்டும். தமிழில் பேச இயலாது. ஆனால் தமிழில் மட்டும் தான் என் மன எண்ணங்களைச் சிறப்பாக எழுத்துரைக்க என்னால் இயலும். என் இரண்டரை ஆண்டுகால உழைப்பு, தேசத்திற்காக உயிா்விடத் துணிந்த வீர உணா்வு, நான் உடல் மற்றும் உள்ள அளவில் அடைந்த இராணுவத் திறன் அனைத்தும் மொழிச் சிக்கலால் மதிப்பிழந்துவிட்டன. இங்கு இராணுப் பணிக்கான அறிவு என்பது போய், குறிப்பிட்ட இரண்டு மொழித்திறன் என்ற தவறான தோ்ச்சிமுறை என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்தி பேசுவது என்பது ஒரு சிக்கலல்ல. வடநாட்டிற்குச் சென்று குறைந்த பட்சம் ஒரு ஆண்டு இராணுவப் பணியில் ஈடுபட்டால் போதும். அம்மக்களுடன் இணைந்து இந்தியை எளிமையாகப் பேசக் கற்றிருக்கலாம். என் இந்திய நாட்டின் என் உயிா் போன்ற உயா்ந்த இராணுவப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என்பதை எண்ணிப் பாா்க்கையில் எண் கண்கள் கலங்குகின்றன. என்னுடன் பயின்ற மற்றும் என் போன்ற எத்தனையோ தமிழ் மொழி மட்டுமே நன்றாகப் பேசவும் எழுதவும் தொிந்த, திறன் பொருந்திய மாணவா்களை வேறு ஒரு மொழி தொியாத காரணத்திற்காக நம் நாட்டு இராணுவம் இழந்து கொண்டிருக்கிறது. இது போன்று பல உதாரணங்களைக் கூறலாம். நான் கற்பனை செய்து கட்டுரை எழுதும் வழக்கம் உடையவன் அல்லேன். உண்மைகளை எழுத வேண்டும் என்று நினைப்பவன். நான் என் ஆசிாியா் பணியில் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான முதலாமாண்டு கல்லூாி மாணவா்களைக் காண்கிறேன். அவா்கள் ஆங்கில வழிக் கல்வியால் போதிய புாிதல் இன்றி தவிப்பதை நோில் உணா்பவன் நான். சாியான புாிதல் இல்லாமையால் பல தீய விளைவுகளுக்கு அவா்கள் ஆளாகின்றனா். எத்தனை காலம் என் அன்பிற்கினிய இளைய தலைமுறையினா் என்னைப் போன்று பாதிப்படைவாா்களோ தொியவில்லை. சிலா் அநாகாிகமாக என்னைத் திட்டி பதில் எழுதுவதும் உண்டு. ஆனால் எனக்குக் கவலையில்லை. நிச்சயம் நம் போன்றவா்களின் தொடா்ந்த முயா்சியால் மொழிச்சிக்கலிலிருந்து மாணவா்கள் விடுபடும் காலம் கனியும்.

  5. Avatar
    முனைவா் பு.பிரபுராம் says:

    லெப்டிணன்ட், இராணுவ என்பதைப் போன்ற சில இடங்களில் தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பிழைபொறுத்து உதவவும்.

  6. Avatar
    Mahakavi says:

    >>ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அறிவு அல்ல <<
    Yes it is true but there is more to it than what it says. English is the medium for studying and advancing science and technology as we know them today. Yes, Karikalan built kallaNai, Rajarajan built the marvelous temple in Thanjavur. But unfortunately those technologies died with them. Rajarajan was more interested in his personal glory and wanted to leave a big legacy for posterity. If only he developed a school for architecture and engineering and cultivated their propagation then students need not study them in English. Agriculture and fisheries were primitive professions but they too needed development and advancement. That was not done Using Thamizh as the medium.
    Nalanda University in Bihar fell by the wayside. The Gupta period developed astronomy, mathematics, and ayurvedic medicine. But they did not develop it further and let those disciplines die after their time.

    History tells us that in order to stay in the same place we have to walk and walk faster if we want to get ahead. That was not done before in Thamizh and that is how we find ourselves in our current predicament. The price for advancement is eternal vigilance and continuous hard work. Currently English is the medium which is helping everybody do that. Of course the Germans, French and a few other nationals are also doing their education in their own languages. But they benefit with the concurrent use of English. One cannot deny that.

    Unless there is a huge bounty to spend on developing Thamizh as the medium in science and technology education (like American's moon project), we cannot hope to catch up with the west in science and technology. Who has the money of such magnificent proportion? We can't even remove poverty among Thamizh people. Let us pay attention to that first. வயிறு நிறைந்த பின் மொழியை வளர்ப்போம்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      மஹாகவி, நீங்கள் சொல்வது பிறப்படிப்படையிலான குலக்குழுக்கள் நிலஉடைமை சமூகமாக வளரும் காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் தொழில்திறன் என்பது குலங்களுக்குள்ளாக மட்டுமே இருந்தது, உழவுத்திறன் வேளாண்குடியினரிடத்து மட்டும் என்பது போல. அப்போது மட்டுமல்ல பின்வந்த நூற்றாண்டுகளில்கூட கல்வி என்பது ஜனநாயகப்படுத்தப்படவில்லை. தொழில் தவிர்த்த மற்றைய அறிவு/ஞானம் (கணிதம், வானவியல் இன்னபிற) ஒரு குழுவினரிடம் மட்டுமே இருந்தது. எந்த குழுவினரும் தமது பரம்பரை அறிவை, ஞானத்தை பகிர்ந்துகொள்ளாத – அதுவே இயல்பென்று இருந்த காலகட்டம் அது. எனவே எந்த தொழிலும் திறனும் ஆவணப்படுத்தப்படவில்லை, வளர்த்தெடுக்கப்படவில்லை. (அதனாலேயே பெரும்பாலான பரம்பரை ஞானம் அழிந்தேபோயிருக்கலாம் என்பது வேறு. அதிலும் குறைந்தபட்சமாக ஆவணப்படுத்தப்பட்டு, பரம்பரையாக பாதுகாக்கப்பட்ட ஓலைச்சுவடிகளும் அழிந்துபோனது, அறிவு வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமைந்துவிட்டிருக்கும்) இது புரிந்துகொள்ளக்கூடியதே. இதே பரிணாமத்தை வளர்ந்த நாடுகளும் கடந்தே வந்திருக்கும். இதற்கு மொழியை குற்றம் சாட்ட இயலாது.

      நாம் ஜனநாயக சமூகமாக அடுத்த படி ஏறும்போதுதான் கல்வி என்பது பொது உரிமை என்ற உணர்வு வந்து பள்ளி என்ற அமைப்பு உருவாகியிருந்திருக்கும். அப்போதுதான் மொழிக்கல்வி என்பது சாத்தியமாக இருக்கும்.

      இந்த காலகட்டத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் பிற அறிவுத்துறை நூல்கள் நேரிய முறையில் தமிழ்க்கல்விக்கேற்ப தமிழில் மொழிபெயர்க்கப்பட்டும் அதை படித்துத்தேர்ந்தவர்களை – அவர்களது அறிவையும் திறனையும் பயன்படுத்திக்கொள்ளும் முகமாகவும் ஊக்குவிக்கும் முகமாகவும் சமூகத்தை வளர்த்தெடுத்திருக்கவேண்டியது ஒரு அரசு செய்யவேண்டிய பணி. ஆனாம் நாம் பள்ளிக்கல்வி மட்டும் தாய்மொழியில் வைத்துக்கொண்டு கல்லூரி மற்றும் உயர்கல்வியை ஆங்கிலத்தில் வைத்துக்கொண்ட அபத்தத்தால்தான் மொழிக்கல்வி என்பது இனி கானல் நீரே என்ற அளவுக்கு போய்விட்டது. (அப்படியும், பொறியியலை தமிழ்வழியில் பயில எம்.ஜி.ஆர் அரசு முயன்றது என்றும் ஆதரவில்லாத காரணத்தால் தோல்வியுற்றது என்றும் அறிகிறேன்)

      ஜெர்மன்காரர்களுக்கு ஆங்கிலம் உதவுகிறது, மறுக்கவே இல்லை. ஆனால் அது அவர்கள் தாய்மொழியில் கற்று, திறன் வளர்த்து பாண்டித்யம் பெற்றபிறகு அவர்களது வணிகத்த்திற்கு உதவுகிறது. இன்றும் அவர்கள் ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களை உடனுக்குடன் ஜெர்மனுக்கு மொழிபெயர்த்து கற்கிறார்கள் என்றுதான் கேள்விப்படுகிறேன். நம்மிடம் இந்த வசதி இல்லாமல் போனதாலும், அப்படியே தமிழில் பொறியியல் போன்ற உயர்கல்வி கற்றவர்களுக்கு உள்நாட்டிலேயே உரிய வேலைகளை வழங்கும் பெரும் கட்டமைப்பை வளர்த்தெடுக்கத்தவறியதாலுமே இன்று மொழியியல் ரீதியாக வறுமைப்பட்டுக்கிடக்கிறோம்.

      1. Avatar
        பாலா says:

        தங்களது அருமையான கருத்துக்கள்.
        [ஜெர்மன்காரர்களுக்கு ஆங்கிலம் உதவுகிறது, மறுக்கவே இல்லை. ஆனால் அது
        அவர்கள் தாய்மொழியில் கற்று, திறன் வளர்த்து பாண்டித்யம் பெற்றபிறகு அவர்களது வணிகத்த்திற்கு உதவுகிறது. இன்றும் அவர்கள் ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களை உடனுக்குடன் ஜெர்மனுக்கு மொழிபெயர்த்து கற்கிறார்கள் என்றுதான் கேள்விப்படுகிறேன்.]
        தாங்கள் கேள்விபட்டது உண்மை.

        1. Avatar
          BSV says:

          You give the impression that English is better than German. Gosh, no German here !

          It is vice versa. The English are quick to bring out translations of French and German books. I read all German philosophers in English translations only. The translators say, certain German words are unique i.e. untranslatable because the philosopher gave his own import to such words. For e.g.Schopenhauer and Heidegger. So, they use the same word explaining it away.

          The other day I was reading an essay on a Shakespeare’s Comedy. The flow of fresh thoughts struck me. I turned back to the first page to know the author. He was Wolfgang Clemens. Oh, a German Shakespearean ! What a great mastery of English language ! I thought. My chum corrected me. No, he wrote the essay in German and it was translated into English in UK. He wrote introductions to all Shakespeare’s plays in German only – which are classics.

          Clemens is rated highly as a Shakespearean scholar. But we have to read him only in English translation.

          This shows whether the Germans, or French, or Spaniards, or the Italians – won’t bow before English. Rather, the English should.

          As you said, English is learnt for its utilitarian value in international arena.

          1. Avatar
            BSV says:

            மண்ணாங்கட்டி என்ற பெயரையுடைவன் மகத்தான சாதனைகளைச் செய்து தான் வாழும் நாட்டு மக்களை மகிழ்வித்தானென்றால், அவன் பெயரை உச்சரிக்கும்போதே கேட்ட போதோ, அம்மக்கள் மெத்த மரியாதையுணர்வு கொள்வர். அழகு சுந்தரம் என்ற பெயரை வைத்துக்கொண்டு கயவாளித்தனம் செய்து ஊரைக்கெடுப்பவன் பெயரைக் கேட்டாலே மக்கள் முகஞ்சுழிப்பர். எனவேதான் செகப்பிரியர் சொன்னார்: பெயரில் என்ன இருக்கிறது? ரோசாவை பெயர் மாற்றியழைத்துவிட்டால் அது துர்நாற்றம் தந்து விடுமா?

            ஈன்ற பொழுதன்று; சான்றோன் எனப் புகழப்படும் பொழுதே உவ‌கை என்றார் வீரத்தமிழர். (conscious use to distinguish from the slavish people)

            இதுவே மொழிக்கும். ஒரு மொழிக்கு மரியாதையையும் மதிப்பையும் சிறப்பையும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கை பண்பாடே (கலாச்சாரம்) நிர்ணயிக்கிறது. குப்பை பண்பாடு குப்பையான மொழியை உருவாக்கும். மொழி மட்டுமன்று. அதில் எழுதப்படும் அவர்தம் இலக்கியம் அக்குப்பைப் பண்பாட்டைத்தான் பிரதிபலிக்கும். People create language. Language does not create people. Literature holds mirror to life.

            வானத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் தமிழ் மொழி பொத்தென்று குதித்துவிட்டதாக நினைத்துக்கொள்வது தவறான பாதைக்கே இட்டுச்செல்லும். Put the horse before the cart !

            தமிழ் மொழி சிறக்க, எல்லாரும் படித்து உவகை கொண்டு பாராட்டி, பரப்பப்பட, ஆங்கிலத்தைவிட்டு இளைய தலைமுறைகள் தமிழைத்தழுவ, வாழ்ந்து காட்டுங்கள்.

  7. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    ”வயிறு நிறைந்தபின் மொழியை வளர்ப்போம்” என்பது “அலை ஓய்ந்தபின் குளிக்கிறேன்” என்பதற்கு ஒப்பாகும். எண்பதுகளில் இருந்த வறுமையைவிட இன்று வறுமை பலபடிகள் குறைவு. ஆனால் அன்றைய மொழி வளர்ச்சியைவிட இன்று மொழி இன்னும் கீழேதான் இருக்கிறது. வயிறு நிறைந்தவர்கள் யாரும் வளர்த்துவிடவில்லை.

  8. Avatar
    Mahakavi says:

    I do not deny the points put forward by pon. Muththukkumar. When we talk about German technology they developed their engineering expertise over 2 or 3 hundred years. Their agriculture was developed long ago. Their prosperity enabled them to turn their attention to lifestyle conveniences–such as automobiles, machinery, oil field development etc. That is what makes me say “let everybody’s stomach fill first”. The basic needs of the population have to be fulfilled. We have been lagging for a long time in science and technology. We have the necessary intelligence to develop the technology in the language in which we learnt it. But to start from scratch—translate everything, learn them in our mother tongue and then develop it further will take a massive effort. Money is the greatest obstacle. Besides English has taken the position of world language. No going back on that. We are better of in using our knowledge to develop technology that is required for development. The government should make sure that happens by providing funds appropriately.Reinventing the wheel is a very expensive proposition.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      நீங்கள் சொல்வது புரிகிறது. நமக்கு நேர்ந்த மாபெரும் விபத்து, பற்பல அன்னிய படையெடுப்புக்கள், அதனால் நேர்ந்த கலாச்சார அழிவுகள், பரம்பரையாக கைமாற்றப்பட்ட அறிவும் ஞானமும் ஆவணப்படுத்தப்படாமலும் ஒரு தரப்படுத்தப்பட்ட கல்விமுறைக்கு உள்ளாக்கப்படாமலும் அழிந்துபோனது இன்னபிற. இன்னொரு மிக முக்கியமான காரணமாக நான் எண்ணுவது ஆங்கிலேயரிடம் நாம் அடிமைப்பட்டுப்போனது. ஆங்கிலமே உயர்மொழி என்ற எண்ணம் வலுவானது அதனால்தான். அந்த கலாச்சார மற்றும் உளவியல் அடிமைத்தனமே இன்று ஆங்கிலம் தெரியாதவனை முட்டாளாக / இளக்காரமாக பார்க்கும் ஆபாசமாக நீட்சி பெற்றிருக்கிறது. (ஒரு நீயா நானா நிகழ்ச்சியில், ஆங்கிலத்தில் பேசிய அனைவரும் ஆதரித்த ஒரு விஷயம் “ஆங்கிலத்தில் பேசுவது அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் தருவது” என்பதை) அனேகமாக உலகில் வேறெந்த இனக்குழுவும் தனது தாய்மொழியில் பேசுவதை அவமானமாகவும் தன்னை அடிமைப்படுத்தியவனது மொழி பேசுவதை அந்தஸ்து தரும் விஷயமாக நினைக்குமளவுக்கு விசித்திரமாக இருக்குமா என்பது கேள்விக்குரியே. சில இனக்குழுக்களில் மேட்டுக்குடியினர் வேறு மொழி பேசுவது இயல்புதான் – ஒரு காலகட்டத்தில் பிரபுத்துவ ரஷ்யர்கள் ஃப்ரெஞ்ச் பேசியது போல. ஆனால் ஒரு சமூகமே எனில் ?

      மற்றபடி நீங்கள் சொல்லும் “சக்கரத்தை மறுகண்டுபிடிப்பு” செய்வது வீண்செலவு என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமும் இல்லை. அப்படியே ஒருவேளை சாத்தியமானாலும் – உட்டோப்பிய கனவுதான் – பொதுமக்களின் ஒத்துழைப்பை பெறப்போவதுமில்லை.

      இப்போது குறைந்தபட்சமாக நாம் செய்ய வேண்டியதெல்லாம் தமிழ் மொழியின் பயன்பாட்டை குறையவிடாமல் இருப்பதும், மாணவர்களுக்கு கல்விப்புலத்துக்கு வெளியே தமிழ் நூல்கள் வாசிப்பை ஊக்குவிப்பதும், பள்ளி இறுதி வரை கட்டாயமாக தமிழ் கற்பிப்பதும், ஆங்கிலம் தெரியாதவரை இழிவுபடுத்தாமல் இருப்பதும், தமிழை தாய்மொழியாகக்கொண்ட யாரும் தனக்கு ’தமிழ் தெரியாது’ என்று சொல்வது பெருமையாக அல்லாமல் இழிவாக உணரச்செய்யும் சமூகச்சூழலை உருவாக்குவதுமே.

  9. Avatar
    BSV says:

    செருமன், உருசியம், பிரஞ்சு, இத்தாலி, போன்ற ஐரோப்பிய மொழிகளில் அனைத்துமே இருக்கின்றன. மேலும், இவர்கள் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பல துறைகளில் மற்ற நாட்டவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். எனவே இந்நாட்டு மக்களுக்கு ஆங்கிலம் படித்தால்தான் வாழ்வு; அல்லது ஆங்கிலமே அறிவின் திறவுகோல என்ற வாதத்தை நான் அங்கு வைக்க முடியாது. அவர்கள் மொழியே அவர்களுக்குப் போதும். நம் நிலை அபபடி இல்லை. தமிழ் மொழி அம்மொழிகளுக்கு ஈடாக வளரவில்லை. எனவே ஆங்கிலம் இங்கே இன்றியமையா கருவி ஆக வேண்டும். ஆங்கிலம் இல்லாவிட்டால், இத்தாலி, செருமன், உருசிய, பிரஞ்சு மொழி – ஏதாவது ஒன்று போதும். ஆனால் ஆங்கிலேயர் இங்கு 300 ஆண்டுகள் இருந்தபடியால் ஆங்கிலம் சிறப்பாக அமர்ந்து கொண்டது. ஆங்கிலம் தோதாகிறது. விஞ்ஞானம் மட்டுமன்று: கலைகளிலும் இம்மொழிக்காரர்கள் தன்னிச்சையாக சிகரத்திலேறிவிட்டார்கள். தத்துவமென்றால், செருமன் மொழிக்காரர்கள்தான். சிற்பமென்றால் இத்தாலியர்கள்தான்.

    தமிழ்நாட்டில் அறிவு வளர்ச்சி தடைபெறக்காரணம், தனிநபர் சிந்தனை பன்னெடுங்காலத்திற்கு முன்பே முடக்கப்பட்டுவிட்டதால், ஆன்மிகம் தனிநபர் சிந்தனையை வளர்க்காது. மக்கள் கூட்டுச்சிந்தனையே ஒரே வழி எனவும் தனிநபர் சிந்தனையென்றால், அஃது அழித்தொழிக்கப்படவேண்டுமென்றும் மனத்தளவில் ஊறிவிட்டார்கள். இந்நிலை நம்காலத்தில் மிகவும் உயரத்திலேறிக்கொண்டேயிருக்கிறது. சாக்கரடீசு இரவில் ஒரு லாந்தர் விளக்கையேந்திக் கொண்டு ஒவ்வொரு வழிப்போக்கனையும் உற்றுப்பார்த்தாராம். ஏன் என்றால், மனிதனைத் தேடுகிறேன் என்றாராம். உண்மையோ பொய்யோ, அதேதான் இங்கேயும்: மசூதிகள், தேவாலயங்கள்; ஆயிரம்கோயில்களில் இவ்வாண்டு அம்மா அவர்கள் கட்டளையில் குடமுழுக்குக்கள்: ஆன்மிக வெள்ளம் காட்டான்று வெள்ளமாக கரைபுரண்டோடுகிறது இதில் சாகரடீசு எங்கே இறைவன் என்று தேடத்தான் வேண்டும்.

    ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் பயப்படுகிறார்கள். நமக்கேன் வம்பு என்று. ஆன்மிகம் ஒரு பெரிய ஆனை. அது வந்து நம் வீட்டுக்குள் உட்கார்ந்து வீட்டை முழுவதுமே அடைக்க, அஃதை இடராக நினைக்காமல் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆன்மிகமே வேண்டாமெனபதன்று வாதம். ஆன்மிகம் பல சிற்றாறுகளை விழங்கி அணைத்து அழிக்கும் பேராற்றல் கொண்ட பெரியாறு எனபதும். அது தமிழகத்தில் பன்னெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் என்பது என் வாதங்கள்.

    மற்றவருக்கு ஈடாக நம்மால் ஆக இயலவில்லை. மேற்காட்டிய வாழ்க்கை அமைப்பில் ஆகவே முடியாது. அடிமைச்சிந்தனை ஒரு அடிமைக் கலாச்சாரத்தை உருவாக்க, அக்கலாச்சாரத்தை முன்னே கொண்டு செல்லும் கடப்பாடு நம்மாசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் இருப்பதால், மாணவர்களும் அப்படியே உருவாகின்றார்கள். Everthing is interconnected. Don’t blame it on a single link. இவ்வடிமைக்கலாச்சாரத்தை உருவாக்க எழுதப்பட்டதே நம் இடைக்கால இலக்கியம். வாழ்க்கை பண்பாடுகளும். அவை தொடர்கின்றன.

    அழகுள்ள மொழிதான் தமிழ். படிக்க, எழுத வாசிக்க இன்பமான மொழிதான். அதிலும் தூய தமிழ் என்று ஒன்றிருக்கிறதே அது தருவது இன்பமென்று சொல்வதைவிட போதை என்றுதான் சொல்வேன். பல தமிழறிஞர்கள் எழுதும் தமிழே அது.

    இருப்பினும். ஒரு மொழி எதற்காக பயனபடுகிறது என்பதைப் பொறுத்தே அம்மொழிக்கு மதிப்பு. .

    நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச்செயல்.

    The person who wrote the above lines, is the finest model I hold up today for all. However, the credit for his powerful intellectual development and courage of conviction to speak his mind should be attributed to the times he lived in: both rational and spiritual thought were abroad without attempting to crush one another. Only one example of thought here. He wrote so many: all bold and unnerving.

    After him, the deluge :-( The age of epics, brought about by the Jain, Buddhist and Hindu monks – enriched Tamil language but chained the Tamil mind.

  10. Avatar
    ஷாலி says:

    //ஆன்மிகம் ஒரு பெரிய ஆனை. அது வந்து நம் வீட்டுக்குள் உட்கார்ந்து வீட்டை முழுவதுமே அடைக்க, அஃதை இடராக நினைக்காமல் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆன்மிகமே வேண்டாமெனபதன்று வாதம். ஆன்மிகம் பல சிற்றாறுகளை விழங்கி அணைத்து அழிக்கும் பேராற்றல் கொண்ட பெரியாறு எனபதும். அது தமிழகத்தில் பன்னெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் என்பது என் வாதங்கள்…//

    திரு.BSV அவர்கள் கூறும் கருத்திலும் உண்மையுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
    தமிழ் என்னும் பெரியாறு, கடவுளர்களின் கதைகளை புனிதப்படுத்தவும் குடமுழுக்காற்றவும் ஆன்மீக அன்பர்களால் முழுதும் உருஞ்சப்பட்டுள்ளது.தமிழின் நவீன சிந்தனை வளர்ச்சியின் வாசலை இவ்வான்மீக கும்பல் கடவுள் சன்னதியில் களப்பலி ஆக்கி விட்டார்கள்.

    ஐரோப்பிய நாடுகளில் கிருஸ்துவ போப்பின் ஆதிக்கத்தை அரசியல் சமுதாய நிலைகளில் கட்டுப்படித்திய பின்பு, அங்குள்ள மொழிகள் இயல்பாகவே ஆன்மீகத்தை தவிர்த்து பிற துறைகளில் கலை,கல்வி,அறிவியல் வளர்ச்சி சார்ந்த சிந்தனைகளின் வாசலைத் திறந்தன.அதுவே தொழிற்புரட்சிக்கு காரணமாக அமைந்தது.இதுவே இன்றும் அவர்களை வல்லரசாக வாழவைக்கிறது.

    தமிழ்நாட்டின் தமிழ், ஆண்டவனுக்கு பாமாலை பாடுவதற்கும்,புராணங்களை புல்லரிக்கும் காவியங்களாக புனைவதற்க்குமே பெரிதும் பயன்படுத்தினார்கள்.தமிழ் அறிவியற் கலைசொற்களில் வளம்பெறாமல் வாழ்விழந்ததற்க்கு பெரிதும் காரணம்,புனைவுப் பூசாரிகளே! இவர்கள்தான் ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கியவர்கள்.இவர்களே தமிழை சீரழித்து இறுதியில் நீஷ பாஷை என்று முத்திரை குத்தி குற்றுயிர் ஆக்கி, ஆகம சட்டத்தில் வைத்து அடக்கம் செய்து விட்டார்கள்.

  11. Avatar
    ஷாலி says:

    பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பிறகு 6.30 மணி வாக்கில் காந்திஜி அவருடைய அறைக்கு சென்று விட்டார். மீண்டும் 11 மணிக்கு ஒரு அறையின் பளபளப்பான தரையில் பத்து பதினைந்து பேர் சுற்றி இருக்க. அவர் உட்காந்திருப்பதை பார்த்தேன் . அழைக்கபடாமல் நுழைவது என் சுபாவம் அல்ல . தயக்கமும் வெட்கமும் மேலிட நான் மெதுவாக அறைக்குள் நடந்து போய் காந்திஜிக்கு சாத்தியமான நெருக்கத்தில் உட்கார்ந்தேன். அவர் என்னைப் பார்த்தார். அந்த குழுவிலேயே நான் தான் வயதில் மிக இளையவன் .

    அவர் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். விமானப்படையிலும் பிறகு ராணுவத்திலும் சிறிது காலம் இருந்ததால் என்னால் இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் பால் வேறுபாடு காட்டும் வார்த்தைகளோடு வினைச்சொற்களை இணைப்பதில் எனக்கு சிரமம் இருந்தது . எனவே பேசுவதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து நான் வருகிறேன் என்று காந்திஜி என்னைக் கேட்டார். “நான் கேரளாவிலிருந்து வருகிறேன்” என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். “கேரள மக்களுக்கு ஆங்கிலம் தான் தாய்மொழியா?” என்று அவர் மீண்டும் இந்தியில் கேட்டார் . மலையாளி அல்லாதவர்களோடு பேசும் பொழுது கேரள மக்கள் ஆங்கிலத்தில் பேசுவதாக நான் ஆங்கிலத்திலேயே சொன்னேன் .

    நான் என்னுடயை தாய்மொழியில்தான் பேசவேண்டும் என்று காந்திஜி வலியுறுத்தினார். நான் சொன்னேன் . “பாபுஜி, நீங்கள் இங்கிலாந்தில் படித்தவரென்பதும் , ஆங்கிலத்தில் பேசுபவர் என்பதும் எனக்குத் தெரியும். எந்த மொழியிலும் என்னுடயை சரளத்தை காட்டுவதற்காக நான் இங்கு வரவில்லை. நான் இங்கு எண்ணப் பரிமாற்றத்திற்காக வந்திருக்கிறேன். ஆங்கிலம்தான் இந்தியாவில் இணைப்பு மொழி. நாம் பேசுவதால் தீங்கில்லை”. பிறகு அவர் கேட்டார் . “இந்தியாவின் தேசிய மொழியில் நீ ஏன் பேசவில்லை?” இளமையும் தன் முனைப்பும் ஏற்படுத்திய கோபத்தில், “இந்தி என்னுடைய தாய்மொழியுமல்ல , தந்தைமொழியுமல்ல ” என்று ஆவேசத்துடன் சொன்னேன் .

    பிறகு மென்மையான குரலில் காந்திஜி பதில் சொன்னார். “பிரிட்டிஷாருக்கு நீ அடிமைப்பட்டிருக்கிறாய் . எஜமானனின் மொழியில் பேசுவதில் ஒரு அடிமை கர்வம் கொள்வான். நீ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும் வரை உன்னால் உன் தாய்மொழியில் பாண்டித்தியம் பெறமுடியாது. உன்னுடைய தேசிய மொழியிலும் பேச முடியாது”.

    -நித்திய சைதன்ய யதியும் காந்தியும்…..தமிழினி வெளியீடு.
    http://www.gandhitoday.in/2015/03/blog-post_28.html

  12. Avatar
    BSV says:

    இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆராய்ச்சியில் சில வரலாற்றறிஞர்கள் முன் வைத்த கருத்தை நான் முன்பே சொன்னேன். இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தது ஆங்கிலமே/ ஆங்கிலம் இணைப்பு மொழியாக விடுதலைப் போராட்டத்தலைவர்களிடையே புழங்கியது மட்டுமன்றி, ஆங்கிலேய அரசாரிடம் பேச்சுக்கள் நடாத்தி தம் நிலையைப் ;புரிய வைக்க ஆங்கிலமே உதவியது. மறைந்த வரலாற்றுப் பேராசிரியர் சேர்வபள்ளி கோபால் (ஜே என் யூ) தன் நீண்ட சொற்பொழிவில் இதையே வலியுறுத்தினார்.

    காந்தி சொல்வது ஏற்கமுடியா கருத்து. ஆங்கில உரைநடைக் கொத்து என்று பலகலைக்கழகங்கள் உலகமெங்கும் மாணாக்கருக்கு வெளியிட்டுப் போதிக்கின்றன. அதில் கண்டிப்பாக காந்தியில் எழுத்துக்கள் எப்படி ஆங்கிலத்தில் நெருக்கி எழுதி மயக்க முடியும் கேட்போரை என்பதற்கு முன்மாதிரியாக காட்டப்படும். இந்திய எழுத்தாளர்களில் இவரின் ஆங்கிலமே அட்டகாசம். He is a master of English prose. His prose style is unique and is called CONDENSED ENGLISH. Not found in any writer. His argument in English in a case before the English Judge is a classic and included in the anthology of English Prose. The Judge was amazed and taken in by the style of English sentences and the result was: Gandhi was released in that case.

    இளைய பாரதம் பத்திரிக்கை ஆசிரியர் இவர். இவர் எழுதிய தலையங்கங்க‌ள், கட்டுரைகள் இந்தியா முழுவதும் அப்போது சீர்ப்பாயந்தன. விடுதலைப்போராட்டத்தின் வழிவகைகள் உணர்ச்சி வேகம் எல்லாவற்றையும் இந்தியர்களிடையே காட்டாறு வெள்ளமாக ஓட வைக்க ஆங்கிலத்தையே நாடினார். தன் தாய்மொழியான குஜராத்தியை அன்று. All editions of Young India are available in bound volumes to delight present and future generations of English readers. Read them day and night, night and day, and you will become a master of English prose soon.

    இன்று ஆங்கிலம் நம்மை அடிமைப்படுத்தியோரின் மொழியாகக் கொள்ளப்படவில்லை. அதை பேசினால், எழுதினால், வாசித்தால், ஓரடிமை கர்வம் வருமென்றால், தன் தாய்மொழியில் திறமை வராதென்றால், கோ, காந்திக்கோ அக்கர்வமில்லை? தாய்மொழி தடுமாறவில்லை? மணமானபின் மனைவி வந்து வீட்டில் உட்கார, தாயன்பு போய் விடுமா? அதே நேரத்தில் மனைவியை மாற்றாளாகவா பார்க்கிறோம்? கணவன் வந்தபின் தந்தையை அயலாள் என்று பரிகாசமா பண்ணுவோம்?

    வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் விடுதலை போராட்டத்தின் ஒரு கொள்கை: நம் நாட்டுடை பொருட்கள் அனைத்துமே மேல். அவற்றையே நாம் கைக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்களின் பொருட்கள், அவர்தம் மொழி கூட வேண்டாம்;; ஏனெனில் அவை நம் அடிமைச்சின்னங்கள என்ற கருத்து பரப்பப்பட்டது. அன்று தேவை. இன்று அஃது அடியோடு ஓடிவிட்டது. இந்துத்வாவினர் தங்கள் அரசியலுக்காக ஆங்கில மொழியை வெறுக்க வேண்டியதிருப்பதால், அவர்களிடம் அக்கருத்து தேங்கி நிற்கவேண்டியதாகிறது There are no principles in politics: only conveniences. Hate English campaign is one such convenience in Hindutva politics.

    ஆங்கிலம் இந்திய மொழி அன்று. ஆனால் இந்திய அரசு மொழிகளில் ஒன்றாகவே நிலைக்கிறது. இந்திய இலக்கிய அமைப்பு (Sahitya Academy) இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு விருது வழங்கி அழகு செய்கிறது. அதே சமயம், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட படைப்புக்களுக்கும் அவ்விருது உண்டு. சமீபத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட அவ்விருதை திருப்பி அவ்வமைப்பினரிடமே கொடுத்துவிட்டார் நயாந்தரா சேகல். அவ்விருது அவரின் ஆங்கில எழுத்துக்களுக்கே கொடுக்கப்பட்டது. ஓர் எடுத்துக்காட்டே.

    ஏன் உங்கள் தாய்மொழியான தமிழில் தங்கள் புதினங்களைப் படைக்கவில்லை என்று கேட்டதற்கு ஆர் கே நாராயண், “எனக்கு வசதியான மொழியில்தான் எழுதமுடியும்? அது ஆங்கிலமே” என்றார்.

    போனவருடம், இந்திய உச்சநீதிமன்றம், நீதிமன்ற மொழி ஆங்கிலமாக இருக்கக் கூடாது என்ற மனுவைத் தள்ளுபடி செயதது.

    ஆங்கிலம் படித்தால் அடிமைத்தனமே; தாய்மொழியில் நன்கு பயிற்சியும்,புலமையும் வாரா என்ற காந்தியார் சொற்களை அவரின் வாழ்க்கைகூட உண்மையென்று காட்டவில்லை.. என் வாழ்க்கையும் காட்டவில்லை.

  13. Avatar
    ஷாலி says:

    // ஏன் உங்கள் தாய்மொழியான தமிழில் தங்கள் புதினங்களைப் படைக்கவில்லை என்று கேட்டதற்கு ஆர் கே நாராயண், “எனக்கு வசதியான மொழியில்தான் எழுதமுடியும்? அது ஆங்கிலமே” என்றார்..//

    இதைத்தான் காந்தி (ஆர் கே நாராயண்ணை பார்த்து) இப்படிச் சொல்கிறார், ““பிரிட்டிஷாருக்கு நீ அடிமைப்பட்டிருக்கிறாய் . எஜமானனின் மொழியில் பேசுவதில் ஒரு அடிமை கர்வம் கொள்வான். நீ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும் வரை உன்னால் உன் தாய்மொழியில் பாண்டித்தியம் பெறமுடியாது. உன்னுடைய தேசிய மொழியிலும் பேச முடியாது”.

    என்ன..BSV ஸார்! இது சரிதானே…….

  14. Avatar
    BSV says:

    அவரின் ஆங்கில நாவல்கள் அவரின் அடிமையுணர்வின் வெளிப்பாடே என்று எப்படிச்சொல்ல முடியும்? தமிழிலும் எழுதத்தெரிந்த ஒருவர் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? தமிழரல்லாதவரையும் போய்ச்சேர்வதற்குத்தானே? அதில் நாராயண் வெற்றியடைந்தார். நோபல் பரிசுக்கும் ப‌ரிந்துரைக்கப்பட்டவர்தான் அவர். அப்பரிசு அவருக்குக்கொடுப்படா காரணம் அவர் நாவல்கள் தரமற்றவை என்றன்று; அவர் நாவல்களின் வீச்சுக்குறைவே காரணம். அவற்றுள் சொல்லப்படும் கதைகளிலும் கருத்துக்களிலும் புதுமையோ, அல்லது புரட்சிகரமோ இல்லை. பாமரத்தனமானவை.

    ஆனால், அவரின் நாவல்கள் எவரால் படிக்கப்பட்டு வியக்கப்படவேண்டுமென்று நினைத்தாரோ அது நடந்தேறியது. இன்று உலகமெங்கும் வாசிக்கப்படுகின்றன. இலக்கியச்சுவை நிறைந்த எழுத்துக்கள்.

    அடிமைத்தனத்தைக் காட்டவன்று தான் நினைப்பதைச் சாதிக்க எது கருவியாக உதவுமோ அதையே தேர்ந்தெடுத்தார். ஆங்கிலம் அதற்கு வசதி செய்து தந்தது. இதுதானே என் மையக்கருத்து இங்கே?

    தமிழை மட்டுமே படித்து ஆங்கிலமென்றால் கிலோ 10 உருபாக்குக்கொடுப்பார்களா என்ற கேட்கும் நிலையிலிருந்தால், இன்று துண்டுப்பீடியில் தம்மடித்துக்கொண்டு கைலியைத் தூக்கிகட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருந்திருப்பேன். பெண்ணைப்பெத்த எவனாவது என்னைப் போட்டுத்தள்ளியிருப்பான் அல்லது அவ அண்ணன் என்னை எங்கவூர் கடலில் போட்டமுக்கிக் கொன்று போட்டுவிட்டு அனாதைப்பொணம் ஒதுங்கியிருக்கிறது. காதல் தோல்வி என்றழந்திருப்பான். இப்போ ஊருக்குப்போனாலும், துண்டுப்பீடி நண்பர்கள்: ஏல மக்கா1….நீயெல்லாம் இங்கிலீசு படிச்சே… உருப்பட்டே…நாங்களெல்லாம் இப்படி துண்டுப்பீடி நிலைக்குக்காரணம் இங்கிலீசு பேப்பரில காப்பியடிச்சும் பாஸ் பண்ண முடியாமல், பின்னர் தமிழையே படித்துத்தொலைக்க வேண்டியதால்! தமிழ் எங்களை போட்டுத்தள்ளி விட்டது. நல்லாயிருடா… லே!//

  15. Avatar
    Prakash Devaraju says:

    BSV அவர்களே தங்களுடைய கருத்துக்கள் மிகவும் சமன்பட்ட நிலையிலுள்ளதாக உணர்கிறேன். கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடியாயினும், இடையில் அடிமைப்பட்ட காலத்தில், மேற்கத்திய நாடுகள் அறிவியல் வளர்க்கும் வேளையில் தமிழினம் சோம்பிக் கிடந்துவிட்டது. மக்கள் சோம்பலுற்றதால் மக்கள் பேசும் மொழி மட்டும் விதிவிலக்கா? மொழிப்பற்று வேறு மொழியின் பயன்பாடு வேறென்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்ணையை வலம் வருகிறேன். மிகவும் பண்பட்ட கருத்து விவாதங்களை படிக்க வாய்ப்பு கிட்டியதில் அகமகிழ்கிறேன். தொடரட்டும் கருத்து பரிமாற்றங்கள்!

  16. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // தமிழில் படிப்பதால் யாரும் சோடை போவதில்லை. தாய்மொழியில் படித்ததுதான் என்னுடைய பலம். அதனால் நான் விஞ்ஞானியாக வளர்ந்தேன் என இந்திய விண் வெளி செயற்கைக்கோள் ஆய்வு மையத்தின் தலைமை திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார்.

    திருப்பூர் அருகே சிங்கனூர் தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: நான் முதல் வகுப்பு படிக்கும் போது, மாட்டுக்கொட்டகையில் தான் படித்தேன். என்னை முழுக்க முழுக்க என் பெற்றோர் 11 ஆண்டுகளாக, தமிழில்தான் படிக்க வைத்தார்கள். அதனால்தான், இன்றைக்கு விஞ்ஞானியாக வளர்ந்துள்ளேன். என்னுடைய பலம் தாய் மொழியில் படித்தது தான்.

    குழந்தைகள் தாய் மொழியில் படித்தால் முன்னேறாமல் இருப்பார்கள் என்கிற பெற்றோர்களின் எண்ணம் தவறானது. தமிழில் படிப்பதால், யாரும் சோடை போகப்போவதில்லை. முதல் 15 ஆண்டுகள் இயல்பானவர்களாக குழந்தைகள் இருக்க வேண்டும். அவர்களை இறுக்கமானவர்களாக மாற்றக்கூடாது. இஸ்ரோவில் பணிபுரியும் 90 சத வீதம் பேர் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான் என்றார். //

Leave a Reply to முனைவா் பு.பிரபுராம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *