ஆலயம் காப்போம்.

This entry is part 1 of 11 in the series 12 ஜனவரி 2020

அறமற்ற துறையால் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள் நான் நுழைவதில்லை என்பதில் பலகாலம் பிடிவாதமாக இருந்திருக்கிறேன். நமது பேராலயங்களின் முக்கியத்துவம் அறியாத, அதன் மதிப்பு குறித்து சிறிதும் அறிவில்லாத மூடர்கள் மட்டுமே தமிழக அறமற்ற துறையில் வேலை செய்கிறார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. பாழடைந்து இடியும் நிலையில் உள்ள நமது பேராலயங்களின் கதியைக் காண்கையில் ரத்தக் கொதிப்பு வந்துவிடுகிறது. மண்டபங்களைக் கார் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தும் அறமற்ற துறை அதிகாரிகளை என்ன சொல்வது?

அப்படியே கோவிலுக்குப் போனாலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தரிசனம் செய்யவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருப்பேன். சுவாமி தரிசனம் என்பது மாட்னி-ஷோவா என்ன? எவன் அப்பன் வீட்டுக் கோவில் இது? சுவாமியை தூரத்தில் இருந்து தரிசித்தால் எனக்கு அவர் அருள்புரிய மாட்டாரா என்ன? அதுபோலவே உண்டியலில் ஐந்து பைசா போடுவதில்லை. உண்டியலில் போடுகிற பணத்தைக் கொண்டு கோவிலில் என்ன முன்னேற்றம் செய்திருக்கிறார்கள் அறமற்ற நிலையத் திருடர்கள்? அதேசமயம், அர்ச்சகர் தட்டில் மட்டும் குறைந்தது நூறு ரூபாயாவது போடுவது என்பதில் மாற்றமில்லை.

நமது பேராலயங்கள் பிராம்மணர்களுக்குச் சொந்தமானவை என்கிறதொரு தவறானதொரு எண்ணத்தை நமது மனதில் திராவிடப் புண்ணாக்கர்களும், மதமாற்றிகளும் விதைத்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் எந்தக் கோவிலும் பிராம்மணர்களுக்குச் சொந்தமில்லை என்பதுதான் அது. அந்தக் கோவில்களையெல்லாம் கட்டியவர்கள் நமது பாட்டனும், முப்பாட்டனும்தான். அதாகப்பட்டது அந்தக் கோவில்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமானவை. தமிழ்நாட்டை எத்தனை பிராமணர்கள் ஆண்டிருக்கிறார்கள்? அனேகமாக ஒருவருமில்லை.

பெரும் பொருட்செலவிலும், உடல் உழைப்பிலும் கட்டப்பட்ட நமது பேராலயங்களில் ஆகம விதிகளின்படி பூசை, புனஸ்காரங்கள், இறைவனுக்குச் சேவைகள், நியம அனுஷ்டானங்கள், நைவேத்தியங்கள் போன்றவற்றை சரிவர நடத்துவதற்காக நமது முன்னோர்களால் நியமிக்கப்பட்டவர்களே பிராமணர்களும், பூசாரிகளும் என்பதினை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நீங்கள் ஒரு கல்லூரியைக் கட்டி அதனை நிர்வகிக்கத் தகுதியுள்ள ஆட்களை நியமிப்பது போலத்தான் ஆலயங்களில் பிராமணர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக ஆலயங்கள் வெறும் சாமி கும்பிடும் இடங்கள் மட்டுமில்லை. அவை நமது வரலாறு, கலாச்சாரத்தைப் பறைசாற்றும் பெட்டகங்கள். நமது முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் அவை என்பதினை நீங்கள் உணர வேண்டும்.

திரும்பவும் சொல்கிறேன். தமிழ்நாட்டு ஆலயங்கள் எல்லா சாதிக்காரர்களுக்கும் சொந்தமானவை. எல்லா சாதியினரின் கைங்கர்யமும் அந்தக் கோவில்களில் உண்டு. அந்த நினைவு உங்களுக்கு வந்தால்தான் அறமற்ற துறைத் திருடர்கள் நமது கோவில்களில் செய்துவரும் அழிவுவேலைகளைத் தட்டிக்கேட்க எண்ணம் வரும்.

இன்றைக்கு அதுபோன்றதொரு கோவிலை நம்மால் கட்ட இயலுமா என்ன? ஒரு சுவற்றைக் கூடக் கட்ட முடியாது என்பதுதானே உண்மை? உலகில் இத்தனை அற்புதமான, கலைநயம் மிக்க கோவில்கள் வேறெங்கிலும் உண்டா? இந்த ஆலயங்களைப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்த நமது முன்னோர்களைப் போலவே நாமும் அதனைப் பாதுகாத்து நமது சந்ததிகளிடம் ஒப்படைப்பதுதானே நம் கடமை?

மிகுந்த தயக்கத்துடன் இந்தமுறை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குப் போனேன். ஆலய உட்புறம் மெச்சத் தகுந்த வகையில் இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது பராமரிக்கப்படுகிறது போலத்தான் எனக்குத் தோன்றியது. இன்னமும் தீயில் எரிந்து இடிந்தபோன மண்டபத்தைச் செப்பனிடாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. அதனைக் குறித்தான அக்கறை எவனுக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனால் ஆலயத்திற்கு வரும் வழியில் மதுரை மாநகரம் அங்கிங்கெனாதபடி ஓடும் சாக்கடைகளுடனும், குண்டும் குழியுமான சாலைகளுடனும் மிகக் கேவலமான முறையில் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமான மதுரையை இப்படியா நிர்வகிப்பது? சந்து பொந்துகளில் புகுந்து மீனாட்சியம்மனின் ஆலயத்தை அடைவதற்குள் போதும், போதும் என்றல்லவா ஆகிவிடுகிறது?

ஊரை இப்படி வைத்திருந்தால் எத்தனை டூரிஸ்ட்டுகள் மதுரைக்கு வருவார்கள்? எனக்கென்னவோ மீனாட்சியம்மனின் ஆலய முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காகவே வேண்டுமென்றே எவனோ வேலைசெய்து கொண்டிருக்கிறான் எனத் தோன்றுகிறது? தங்களின் ஊர் இருக்கும் இருப்பைக் கண்டு மதுரைக்காரர்கள் நாணித் தலைகுனிய வேண்டும். ஊராய்யா அது?

இன்னும் இரண்டொரு மதுரைக் கோவில்களுக்குப் போகும் வாய்ப்பு கிட்டியது. அதைப்பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்.

இப்போதைக்கு நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான்,

கோவில்களின் சீர்கேட்டைத் தட்டிக் கேளுங்கள். அவை உங்களுக்கும், உங்களின் சந்ததிகளுக்கும் சொந்தமானவை.

ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் தாராளமாக பணம் அளியுங்கள். அரசாங்கம் தரும் சம்பளத்தை வைத்து அவர்களால் இன்றைக்கு ஜீவனம் நடத்துவது மிகவும் சிரமமானதொரு காரியம். ஏதொவொரு ஏழைப் பிராமணந் கிழிந்த வேட்டியுடனும், அரைப்பட்டினியுடனும் இறைவனுக்குப் பூசை, புனஸ்காரங்கள் செய்வது அந்த இறைவனையே நாம் அவமதிக்கும் செயல் என்பதினை உணருங்கள்.

நண்பர்களே, அர்ச்சகர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை அவர்கள் கேட்காமலேயே செய்யுங்கள் என இருகரம் கூப்பி வேண்டுகிறேன். வறுமையிலும் அர்ப்பணிப்புடன் ஆலய பூசைகளை நிறுத்தாமல் செய்கிற ஏழை பிராமணனுக்கு மதிப்பளியுங்கள். அவர்களை இழந்தால் நமது புராதன பேராலயங்கள் பாழ்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்.

ஆலயம் காப்போம்.

Series Navigationதங்கத்திருவோடு
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Vinayagam says:

    //அப்படியே கோவிலுக்குப் போனாலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தரிசனம் செய்யவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருப்பேன். சுவாமி தரிசனம் என்பது மாட்னி-ஷோவா என்ன?//

    தர்ம தரிசனம் இருக்கவே இருக்கிறது பணம் இல்லாதவருக்கு.

    விரைந்து கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு வெளியே வர விரும்புவோருக்குத்தான் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு. ஸ்கூட்டரை அல்லது காரை ஸ்லோ பண்ணி நைசா ஜென்டலா கும்பிட்டுவிட்டு சாலையில் விரைந்தோடும்
    மனிதருக்குதான் சிறப்பு தரிசனம். அவருக்கு நேரமும் பணம் சம்பாதிப்பதும் முதலில் வருவன; சாமி பின்னால் கைகட்டி வரவேண்டும். அவர்களிடம் பணம் இருக்கிறது. செலளிக்கிறார்கள். மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ? Let money roll in society. Money is muck if not spread.
    May God help that good economy for the nation !

    வி ஐ பிக்கள் தரிசனத்தால் மற்றவர்கள் சங்கடத்துக்கு ஆளாகிறார்கள். இதைத்தான் தட்டிக்கேட்க வேண்டும். திருப்பதி கோயிலில் கேட்டார்கள். இப்போது வி ஐ பி தரிசனம் நிறுத்தப்பட்டது என்று தெரிகிறது.

    மதுரை மீனாட்சி கோயில் பெரிய கோயில்தான். ஆனால் வழிபடுவோர் எண்ணிக்கை நெரிசலைத் தருவதில்லை. சிறப்பு நாட்களில் மட்டுமே நெரிசல். கோயிலுக்குச சென்று இறைவனை கும்பிட்டு வர மனமிருப்போருக்கு, தர்மம் தரிசனம் ஒரு பொருட்டே அன்று. ஒரு நாள் முழுவதையும் மதுரை போன்ற கோயிலுக்குச் சென்று வரவேண்டும் என்று செலவழித்தால், மனம் வருந்த இடமே இராது.

    ‘நிதி.மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
    அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
    ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
    ….
    எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும்
    இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்”

    என்று பாரதியார் சொன்னது, கோயில்களுக்குச சென்றுவர விழைவோருக்கும் பொருந்தும். வாரீர் தரும தரிசனத்துக்கு !! :-)

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    நிச்சயமாக இந்து ஆலயங்களை அறநிலையத்துறையின் கோரப்பிடியிலிருந்து அகற்றி அக்கறையும் மனிதநேயமும் உள்ள ஆன்மீகவாதிகள், ஆகமவிதிகளில் பாண்டித்யம் உள்ள நிபுணர்கள், சீர்திருத்தவாதிகள், சான்றோர்கள் என்ற ஒரு குழு அமைத்து அதன்மூலம் நிர்வகிக்கப்படவேண்டும்.

    1. Avatar
      Vinayagam says:

      எல்லாரும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆனால் இது ரொம்ப vague என்பதை மறுக்கிறார்கள். Very easy to say, isn’t?

      யாரந்த சான்றோர்கள்? மனித நேயமிக்க ஆன்மீகவாதிகள் ? சீர்திருத்தவாதிகள் ? It is impossible to find them out. In today society, there is no un-corrupt man Sir! Even women are not safe with god men!

      ஆகமவிதிகளில் பாண்டித்தியம் மிக்கோர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிய முடியும்: வைணவ கோயில்களை பொறுத்தவரை, ஜீயர்கள்; சைவ கோயில்களுக்கு மடாதிபதிகள் அல்லது ஜீயர்களால், மடாதிபதிகளால் வழிமொழியப்பட்டவர்கள்.

      கோயில்கள் பலபல வகையன. அரசைப் பொருத்த வரை எந்த கோயிலுக்கு கூட்டமோ அதை எடுத்துக்கொள்கிறது: ஒரு தாழ்த்தப்பட்ட மக்களில் கோயில் பிரபலம் என்றால் அரசு எடுத்துக்கொள்கிறது. அங்கே எந்த குழுவை யார் அமைப்பது?

      வைதீக முறைப்படியான பெருங்கோயிகளுக்கு மட்டுமே இவர் சொல்வது ஒரளவு சாத்தியம். அதுவும் டவுட்டுதான். ஏனென்றால் அக்கோயில்கள் அரசு உடைமை ஆக்கப்பட்ட காலத்திற்கு முன்பு சில குடும்பத்தாரின் கைகளில் இருந்தன. அவர்களே தக்கார்; அறங்காவலர்கள்; தர்மகர்த்தாக்கள். இன்று கூட அக்குடும்பத்தாரின் பெயர்தான் கல்வெட்டில் நிற்கிறது: ஏ.கா. திருநீர்மலை.

      குடும்பம் கூட பரவாயில்லை. ஆனால் பல கோயில்கள் அங்கு உள்ள ஆதிக்க சாதியின் கைகளில்தான் இருந்தன. இவர்கள், அரசு விலகிய பின் பிறரை விட சம்பாதிப்பாரா ? அவர்கள் ஆதிக்கம் செலுத்து வரும்போது அரசின் காலில் விழுந்து ‘அவர்களிடம் இருந்து காப்பாத்துபிங்கோ !” என்றால் அரசு சிரிக்கும். :-)

      அரசு விலக வேண்டும் … அப்புறம் தெரியும் இக்கோயில் எவர் சாம்ராஜ்யத்தின்கீழ் என்று ! நலிந்தோர் தூரம் செல்ல பன்னெடுங்கால பழைய கதை திரும்பும்.

      இது போக, மத அரசியல்வாதிகள் புகுந்து அவர்கள் அஜண்டாக்களை திணிக்க புதிய மதம் உருவாகும் . The Brahmins will enter with their varnashradhama and impose it in the temples. திருப்பாணாற்று ஆழ்வாரை கல்லால் அடித்த கதை தெரியுமில்ல ? அவர் அடிவாங்கினார். இன்று அடிபடுமுன்பே தலித்துக்கள் ஓடிவிடுவார்கள் ”இவனுங்க கோயில் நமக்கு வேண்டாம்ல !”

      கீழ்சாதிப்பயலுவ தேர் எம் தெரு வழியாக வரக்கூடாதுஎன்றுதானேயே தாக்கப்பட்டார்கள் விழுப்புரமருகில் ? அப்படியிருக்க அரசு விலகிய பின் என்ன உத்தரவாதம் எல்லாருக்கும் Mr Pon. Muthukumar ?

      கோயில் என்பது வெறும் கடவுளை பற்றியல்ல; காசு, பணம், துட்டு ! அசையும் அசையா சொத்துக்கள் ! Might is Right. The money will go to that Mighty !

      Come with appropriate acceptable alternative . Don’t dream.

Leave a Reply to Vinayagam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *