’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்

This entry is part 3 of 8 in the series 15 ஜூலை 2018

 

 

லதா ராமகிருஷ்ணன்

 

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போதெல்லாம் அதிகமாய்க் கண்ணில் படும் குறள்கள் இரண்டு:

 

  • இனிய உளவாக இன்னாத கூறல்

      கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

 

  • வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

               தீமை இலாத சொலல்.

 

இந்த இரண்டு குறள்களுமே இவற்றிற்கு இருக்கும் உரைகளைக் காட்டிலும் அதிகமாய் எத்தனையோ அடுக்குகளைக்கொண்ட அர்த்தங்கள் செறிந்தவை. ஆனால், ’எனக்கு பழத்தை விட காய் தான் பிடிக்கும்’ ’பழத்தை விடக் காயே அதிக சத்துவாய்ந்தது’ என்றோ ’யாதொன்றும் தீமை இலாத சொலல் என்றால் இனிய பொய் தான் வாய்மை என்றாகிறது’ என்றோ ’ யாதொன்றும் தீமை இலாத சொலல் இருக்க வழியில்லை. அதுபோல் ‘வாய்மை என்று ஒன்றிருக்க வழியில்லை’ என்றோ யாரேனும் கூறுவாரேயாயின் அது சரியில்லை என்று நமக்குத் தெளிவா கவே புரியும்.

 

முகநூலில் சேர்ந்த பின் அதில் எழுதிவரும் எத்தனையோ,  அறியப்படாத எனில் அற்புதமான கவிஞர்களின் நுண்ணுணர்வுமிக்க கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்துவருகிறது. அதேசமயம் நுண்ணுணர்வு மிக்க படைப்பாளிகளாய் அறியப்படுபவர்கள், அத்தனை நுண்ணுணர்வு மிக்க கவிதைகளை எழுதிவருபவர்கள், சில விஷயங்களைப் பேசும்போது எதிராளியை மதிப்பழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மொழியை எத்தனைக் கொச்சையாகக் கையாள்கிறார்கள், கூராயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

 

தங்களுக்கிருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்ற பிரக்ஞயேயின்றி சிலர் மற்றவர்கள் மேல் (தரங்)கெட்ட வார்த்தைகளை, சகட்டுமேனிக்கு வீசியெறிவதைப் படிக்கும்போதெல்லாம் எல்லையற்ற வருத்தம் ஏற்படுகிறது.

 

அவரவர் மதிக்கும் மனிதர்களைப் பற்றி அடுத்தவர் அத்தனை கேவலமாய்ப் பேசுவது இங்கே பரவலாக நடந்துவருகிறது. தங்களுக்குத்தான் எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கவும், கருத்துரைக்கவும் உரிமையிருக்கிறது என்பதுபோல் சிலர் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அதில் உள்ள அதிகாரவுணர்வைப் பற்றி எண்ணாமலிருக்க முடியவில்லை.

 

மாற்றுக் கருத்தை கண்ணியமாக முன்வைக்க முன்வராமல், மாற்றுக்கருத்தை அதற்குரிய மரியாதை யோடு அணுக முயலாமல் ஏசுவதும் வசைபாடுவதும் மொழிசார் கூருணர்வு மிக்க படைப்பாளிகளும் எளிதாகக் கைக்கொள்ளும் எதிர்ப்புமுறை, எதிர்தரப்பினரை வாயடைக்கச் செய்யும் முறை என்பதைக் காணும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

 

அப்படி வேதனையளித்த ஒரு சில பதிவுகள்:

 

(*யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல, சொல்லப்பட்ட விஷயமே, அதில் தொக்கிநிற்கும் insensitivity எடுத்துக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பதால் சொன்னவர்களின் பெயர்கள் தரப்படவில்லை. மற்றபடி, கிசுகிசு பாணியில் எழுதுவது நோக்கமல்ல)

 

 

 

 

 

  1. அறச்சீற்ற INSENSITIVITYகள் :

“அதத்தான் நானும் சொல்ல வர்றேன். செவிடன் காதுல ஊதுனது சங்கு ன்னுன்னாவது கண்ணு தெரிஞ்சவனுக்கு தெரியும். இங்க சுயகுருடர்கள் (கோபமா சொல்லணும்ன்னா.. குருட்டு கபோதிகள்)தானே அதிகம்.”

 

_ தமிழக அரசு குறித்த விமர்சனமாய் படிக்கக்கிடைத்த ‘கமெண்ட்’ இது. ஒரு விஷயத்தை தர்மாவேசத்தோடு அறச்சீற்றமாய் எழுதுபவர்கள் பார்வையற்ற வர்களை, ஊனமுற்ற வர்களை இப்படி உவமை காட்டுவதிலுள்ள insensitivityஐப் பற்றி எண்ணிப்பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இது குறித்து பார்வையற்றவர்கள் பலர் என்னிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்கள். பள்ளிப்பருவத்திலேயே யானை முதலான விலங்குகள் பறவைகளின் உடல்வடிவம், உறுப்புகளையெல்லாம் உரிய பொம்மைகள் வார்ப்புவடிவங் களைத் தொட்டுப் பார்க்கச் செய்து அறியச்செய்வார்கள். ஆனாலும் இந்த யானைக் கதை மட்டும் அப்படியே தொடர்கிறது என்று வருத்தமும் கோபமுமாகக் கூறுவார்கள். பார்வை யின்மையை மீறி படித்துப் பட்டம் பெற்று இன்று தர்மபுரி கல்லூரியில் பேராசிரியராக (Principle-in-charge என்று நினைக்கிறேன்) பணியாற்றிவரும் கவிஞர் கோ.கண்ணனின் ‘ஓசைகளின் நிறமாலை’ என்ற தொகுப்பில் இடம்பெறும் கவிதை இந்த கோபத்தையும் வருத்தத்தையும் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கும்:

 

தடயம்

(கோ.கண்ணன்)

 

காவியம் பாடி காலம் வென்றனர் எம் முன்னோர்

அலட்சியப்படுத்திய அறிவீலிகளின் முகத்திரையைக் கிழித்ததாய்

சொல்லப்பட்டனர் எம் மூதாதையர்.

எம் ஞானகுருவோ எம் அறிவுத் திறவுகோலுக்காய்

அறுபது ஆண்டு அகிம்சைப் போர் புரிந்தார்.

அளவிலா புகழ் கொண்டு அறிவால் வென்றார்.

மூவாசல் கதவுகள் அடைபட்டும் எம் மூதாட்டி

விரல் வழி உலகளந்தார்;

வினோதங்களின் வினோதமாய்த் திரிந்தார்

இன்று எம் சோதரர் இமயத்தில் கால் பதித்து

பனி கண்டத்தே பவனி வருகின்றனர்.

சக மனிதர்க்குச் சமமாய் நாங்களும் அமர்ந்திருக்க

இன்றும் சித்தரிக்கப்படுகிறோம்

துந்தனா சகித தெருப்பாடகராய்,

திருவோட்டோடு.

காட்சிக்கூடங்களில் கண்காட்சிப்பொருள் ஆக்கப்படுகையில்

எப்படி எங்கே தேடி மீட்பது

எமக்கான உண்மைத் தடயத்தை?

 

  1. இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும்

எதிர்வினை என்பது அதற்குக் காரணமான வினையின் அளவு அல்லது அதற்கும் அதிகமாக மோசமாகிவிடும் போது அந்த எதிர்வினை அதற்குக் காரணமான வினை குறித்து குறை சொல்லும், தீர்ப்பளிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது.

ஒரு பிரதி புரியவில்லை என்று படைப்பாளியிடம் சொல்லும்போது அது தனக்கும் தன்னொத்தவர்களுக்கும் புரியும்படியாக எழுதப்படவில்லை, எழுதப்படவேண்டும், அப்பொழுதுதான் அது இலக்கி யமாகக் கொள்ளப்படும் என்ற அதிகார தொனி அதில் ஊடுபாவாக இடம்பெறுவதை உணரமுடியும்.

(உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ‘புரியவில்லை’ என்று சொல்லிக் கேட்பவர்களின் தொனியும் அணுகுமுறையும் தெளிவான அளவில் வேறாக இருக்கும். இந்த ‘புரியவில்லையைப் பொருட்படுத்தி விரிவாகப் பேசுவது எந்தவொரு படைப்பாளிக்கும் மனநிறைவைத் தரும்; தரவேண்டும்.)

அதேசமயம், இந்த அதிகாரத்தொனிக்கு எதிர்வினையாற்றுவதாய் கருத்துரைப்பவர்கள் தரமாக எழுதும் சக படைப்பாளியை “நீ யார்னே தெரியாது என்று கூறுவதில், “உன் இலக்கியப் பங்களிப்பு என்ன?” என்று கேட்பதில் உள்ள அதிகார தொனியையும் அதிலுள்ள INSENSITIVITYஐயும் எண்ணிப்பார்த்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.

களிப்பும் பரிதவிப்புமே எழுதத்தூண்டும் படைப்பாளிக்கு தன் இலக்கியப் பங்களிப்பை அளக்க சிலர் கைகளில் ஆழாக்குகளோடும், அவரவர் அதிகாரத்திற்கேற்ற துலாக் கோல்களோடும் அலைபாய்ந்துகொண்டிருப்பது குறித்து பிரக்ஞையிருக்க வழியில்லை.

அதுசரி, இங்கே இலக்கியப் பங்களிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாக மட்டுமா இருக்கிறது? இறுதிசெய்யப்படுகிறது?

 

  1. INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசுகிழவர்

வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மனதால் நிர்ணயிக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சி யொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?

பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.

‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக்கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலானவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களையும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.

சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

 

  1. காவியம் சார் INSENSITIVITY:

ராமன் என்பது சீதை மட்டுமல்ல
சீதை என்பது ராமன் மட்டுமல்ல

‘ராவணன் இருக்கையில் சீதைக்கு பயமேது’ என்பது போன்ற வாசகங்களைப் படிக்க நேரும்போதெல்லாம்(அடிக்கடி படிக்க நேர்கிறது) அதிலுள்ள அடிமட்டமான INSENSITIVITY மனதில் அறைகிறது.

ஒரு காவிய நாயகன் நாயகி, காவியக் கதை எல்லா வற்றிலுமே சாரமும் உண்டு; சக்கையும் உண்டு. எல்லாவற்றிலும் சாரத்தை எடுத்து சக்கையை விடுத்துச் செல்வதே வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது.

ராமன் என்ற காப்பிய நாயகனை நாம் ஏன் எப்போதுமே சீதையை சந்தேகித்தவனாக மட்டுமே அணுக வேண்டும்? அறுபதினாயிரம் மனைவியரை ஒரு மன்னர் வைத்திருந்த காலத்தில் ஒரு சொல் ஒரு இல் ஒரு வில் என வாழ்ந்தவனும் அவன் தானே. எல்லாப் பெண்களுக்குமான ஆத்மார்த்தமான எதிர்பார்ப்பு அவன் வழி சீதைக்கு லபித்ததல்லவா! சீதையை சந்தேகித்ததில், அவள் பிரிந்ததில் அவன் மகிழ்ச்சியடைந்தானா? மனநிம்மதியடைந்தானா?

’தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்தான்’ என்று ஒரு பரத்தைமீது கல்லெறி பவர்களை நோக்கி ஏசு கூறுவது பரத்தையர்களைக் குறை சொல்வதாக தொனிக்கிறது. அவர்கள் பரத்தைய ரானதற்கு இந்தச் சமூகம்தானே காரணம் என்று எழுத்தாளர் தேவகாந் தன் தனது கதையொன் றில் குறிப்பிட்டிருப்பார். இதுவோர் ஆழமான சமூகநேயம் மிக்க பார்வை என்பதில் சந்தேக மில்லை. ஆனால், ஏசுவின் வாசகத்தில் தொனிப்பது, அடர்ந்திருப்பது பரத்தையை குறை சொல்லும் போக்கா, அல்லது அவளை ஏசுபவர்களுக்கு புத்திபுகட்டும் நோக்கமா? எழுத்தாளர் தேவ காந்தனை எனக்குத் தெரியும். பல வருடங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தகாலத்தில் நாங்கள் இதுகுறித்து விவாதித்ததுண்டு.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று முடியும் சுமைதாங்கி திரைப் படப் பாடலைப் பற்றி (கண்ணதாசன் எழுதியது) ஒருவர் நமக்குக் கீழே உள்ளவர் கோடி என்னும் போது அதை நினைத்துப்பார்த்து நிம்மதியாக இருக்கமுடியுமா, அப்படிச் சொல்வது அக்கிரம மல்லவா என்று கோபத்தோடு எழுதியிருந்தார். அவருடைய சமூகப் பிரக்ஞையைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும் அந்தப் பாட்டில் இடம்பெறும் அந்த வரிகள் அலைப்புறும் நாயகனை அமைதிப் படுத்தப் பாடப்படுவதே தவிர ’அவருக்குக் கீழே உள்ள மனிதர்களைப் பொருட்படுத்தாமலிருக்கும்படி போதிப்பதல்ல.

இருபதாண்டுகளுக்கு முன்பு என் தோழியொருவர் ஆசிரியராக இருந்து வெளிவந்துகொண் டிருந்த சூர்யோதயா என்ற இதழொன்றில் ‘படி தாண்டிய பாஞ்சாலி’ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். மகாபாரதப் போரில் தங்கள் கணவர்கள், குழந்தை கள், தகப்பன், தமையன் என்று எல்லோரையும் இழந்துபோன பெண்கள் பாஞ்சாலியை சந்தித்து உங்கள் வீட்டு விவகாரத்திற்காக எங்கள் மக்களையெல்லாம் போரில் பலியாக்கிவிட்டீர்களே இது என்ன நியாயம் என்று கோபத்தோடு கேட்க, அந்தக் கேள்வியின் உண்மையுணர்ந்த பாஞ்சாலி தன் கணவர்களிடம் தன்னுடைய சீதனத்தை கேட்டு வாங்கி அவர்களை விட்டு நீங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றச் செல்வதாய் அந்தக் கதை விரியும்.

மகாபாரதத்தை ஒரு புதிய சமூகக் கண்ணோட்டத்தில் அணுகிவிட்டதாய் எனக்கு உள்ளூற ஒரு பெருமை இருந்திருக்கக் கூடும். அதற்குப் பின் சில காலம் கழித்து ஆங்கில நாளித ழொன்றில் வாசிக்க நேர்ந்த KURUKSHETHRA AND ITS AFTERMATH என்ற கட்டுரை என் கதை முன்வைத்த பார்வையும் அதைத் தாண்டிய பல பார்வைகளும், போரின் கொடுமை, மக்கள் சீற்றம், போரின் வெற்றி யாருக்குமே மகிழ்ச்சியளிக்காது என்ற உண்மை என பலப்பல குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு’ என்பதாய் அந்தக் காப்பியத்திலேயே விரிவாகப் பேசப்பட்டிருப்பதை விரித்துக் கூறியிருந்தது!

வால்மீகி ராமாயணம் என்ற கடலில் தனது காப்பிய முயற்சி ஒரு துளி என்று கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டிருப்பார். கம்பராமாயணத்தில் இந்திரனோடு கலந்திருந்த தன் விளைவாகக் கிடைத்த சாபத்தால் கல்லாகச் சமைந்திருக்கும் அகலிகை ராமனின் கால்பட்டு மீண்டும் உயிர்பெற்றதும் ராமனின் காலில் விழுந்து வணங்குவதாக வரும். ஆனால் மூல காவியமான வால்மீகி இராமாயணத்தில் இந்திரனின் அழகில் மயங்கி, தெரிந்தே அவனோடு கலக்கும் அகலிகை சாபத்தால் அருவமாக உலவிக்கொண்டிருக்க ராமன் அந்த இடத்தின் எல்லையை மிதித்ததும் உருவம் பெறுவாள். ஆனால், ராமன் தான் அவள் காலில் விழுந்து வணங்குவான். தெய்வாதீனமாக நேர்ந்துவிட்ட ஒன்று என்றுதான் அவளுடைய இந்திரக் கலப்பை அவள் மகனே குறிப்பிடுவான். அதற்காக யாரும் அந்தப் பெண்மணியை மதிப்பழித்து நடத்தமாட்டார்கள். வால்மீகி இப்படி எழுதியதால் சோரம் போகிறவள் பெண், பெண் சோரம் போவதே சரி என்று சொல்வதாய் எடுத்துக்கொள்வது சரியா? கம்பர் இதை மாற்றி யெழுதியதால் அவர் ஆணாதிக்க வாதியாக முத்திரைகுத்தத் தக்கவரா?

நான் இந்தக் காப்பியங்களையெல்லாம் முழுமையாகப் படித்ததாகச் சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால், இந்தக் காப்பியங்களிலும் சரி, வேறு பல ஆழமான படைப்புகளிலும் சரி – அடிநாதமாக ஒரு தொனி, ஓர் உட்குறிப்பு வேர்ப்பிடித்து ரீங்கரித்துக் கொண்டிருக்கும். அதை நாம் மாற்றிப்போடலாகாது. ஒரு பிரதியில் மறைவான உட்பிரதி, உப பிரதி இருந்தால் அதைக் கண்டுகொள்ளலாம், வெளிக்கொணரலாம். ஆனால், நாமே மறைவான பிரதிகளை உருவாக்க லாகாது.

இராமாயணம் முன்வைப்பது ராமன் கொடுமைக்காரக் கணவன், அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து கொண்டு போகிறவனே பேராண்மையாளன் என்பதா? இல்லையென்றே நான் நினைக் கிறேன். அப்படியிருக்குமானால் இராமாயணம் இத்தனை காலம் மக்களிடையே நிலைத் திருக்க வழியில்லை.

 

சீதை என்ற கதாபாத்திரத்தைப் பற்றி எவ்வளவு இழிவாக,ச் சித்தரிக்கப்பட்டாலும் அதைப் பற்றி சிந்திக்கும் பெண்களே கூட எதிர்வினையாற்ற முன்வராதிருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த INSENSITIVITYயின் மறுபக்கமே Adding Insult to Injury என்பதாய் ஓர் ஊரில் சில பத்து ஆண்டுகளுக்கு முன் குழந்தையற்ற பெண்கள் ஊர்த்திருவிழாவின்போது மலைமீதுள்ள கோயிலுக்குச் சென்று யாரோடும் கலந்து கருவுறும் வழக்கமிருந்ததாக, உண்மையாகவே இருக்கும் ஊரின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த ஊர்ப்பெண்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல் கதையுருவானதும், அதை பெண்ணியப் பிரக்ஞையுள்ள பெண்களும்கூட கருத்துரிமை என்ற பெயரில் ஆதரித்துப் பேசியதும் எழுதியதும்

காப்பியங்களாக இருந்தாலும் சரி, சமகாலப் படைப்புகளாக இருந்தாலும் சரி, வாழ்வின் BIG PICTURE அல்லது அதன் பிரதிபலிப்புகளை முன்வைக்கும் படைப்புகளை நாம் ஒற்றைப்பரிமாண வாசிப்பாக, பொருள்பெயர்ப்பாகக் குறுக்கிவிடுவதால் என்ன பயன்?

தவிர, ராமன் என்பவன் சீதையின் கணவன் மட்டும் தானா? ஒரு தனி மனிதன், ஒரு சமூக மனிதன், ஒரு தனயன், ஒரு அரசன், ஒரு மகன், ஒரு நண்பன் – ஒரு கருத்தாக்கம், ஒரு சிந்தனைப்போக்கு, ஒரு வாழ்முறை, ஒரு கற்றல்(நல்லதும் அல்லதும்) – இன்னும் எத்தனையோ. நாம் உள்வாங்கிக்கொள்வதில்தான் இருக்கிறது எல்லாம்

நான் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணச் செய்யுள்கள் சில பாடமாக உண்டு. அதில் ஒன்று – முதல் நாள் பட்டாபிஷேகம் என்ற போதும் மறுநாள் காட்டுக்குப் போ என்றபோதும் ‘சித்திரத்தில் வரைந்த செந்தாமரையைப் போல் அப்படியே இருந்தது அவன் முகம் என்பதாய் விவரிக்கும். அந்தப் பக்குவப்பட்ட மனம் வாய்க்க வேண்டும் என்பதே, அதற்கான வழிகாட்டியே என்னைப் பொறுத்த வரை எனக்கான இராமார்த்தம்.

 

  1. முகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கையும் அவை முன்வைக்கும் INSENSITIVITYயும்:

நாளும் நிறைய பேர் நட்புக்கோரிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பலரைப் பற்றி அவர்களது முகநூல் பக்கத்தில் எவ்வித விவரக் குறிப்பும் இல்லை. சிலருடைய முகநூல் பதிவுகளில் அநாகரீகமான ஆபாசமான பதிவுகள் சொல்லாடல்கள் மண்டிக்கிடக்கின்றன.

நான் சாதாரண ஆள். எந்த இலக்கியக் குழுவிலோ, அரசியல் கட்சியிலோ அங்கம் வகிக்காதவள். எனக்கு சரியென்று பட்டதை என் முகநூலில் கண்ணியம் குறையாமல் பதிவிடுகிறேன். அத்தகை யோரிடமே நட்பு பாராட்டவும் விரும்புகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு TAMI L (or tami l) என்பவரிடமிருந்து நட்புக் கோரிக்கை வந்திருந்தது. அவரைப் பற்றி விவரம் அறிய அவருடைய முகநூல் பக்கத்தில் சென்றால் அப்பட்டமான நீலப்படம் ஓட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்க கூகுளில் எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே – இவரிடம் நட்பு பாராட்டித்தான் பார்க்க வேண்டுமென்பதில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.

இணையக் குற்றங்கள், அவற்றிற்கான தண்டனைகள் என்று எத்தனை பேசப்பட்டாலும் இத்தகைய அநாகரீகங்கள், அத்துமீறல்கள் இருந்துகொண்டுதானிருக்கும் போலும். அந்த முகநூல் கணக்கை ‘ஸ்பாம்’ செய்துவிட்டேன்.

பல வருடங்களுக்கு முன் என்னுடைய கட்டுரை அல்லது கதைக்கு எதிர்வினையாய் வந்த தபாலில் ஆண்-பெண் உடலுறவு சம்பந்தமான கோட்டோவியங்கள் பல அனுப்பப் பட்டிருந்தன. அது குறித்து ஒரு பத்திரிகையில் எழுதும்போது படங்கள் உண்மையிலேயே நன்றாக வரையப்பட்டிருந்தன. ஆனால், அவை அனுப்பப்பட்டிருந்ததன் நோக்கம் (ஒரு பெண்ணைக் கேவலப்படுத்துதல், அச்சுறுத்துதல்) நன்றாக இல்லை என்று நான் குறிப்பிட்டி ருந்தது நினைவுக்கு வருகிறது.

தங்கள் முகநூல் பக்கங்களில் இத்தகைய ஆபாசமான படங்களைப் பதிவேற்றிய கையோடு பெண்களுக்கு நட்புக்கோரிக்கையும் அனுப்புவதில் அடங்கியுள்ளது உச்சபட்ச insensitivity.

நீலப் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்துக்கொள்ளலாம். நிறைய பேருக்கு அது வடிகாலாகக் கூட அமையலாம். அது குறித்து நீதிநெறி புகட்டுவது என் நோக்கமல்ல. ஆனால் என்னளவில் இந்த நீலப்படங்கள் ஆண்-பெண் உறவை வெறும் உடல் ரீதியானதாக்கி, காட்சிப் பொருளாக்கி் கொச்சைப் படுத்துகின்றன. ஒரு பெண் எத்தனை ஆண்களால் வேண்டுமானாலும் என்னென்ன வக்கிரமான வழிகளிலும் புணரப்படலாம் . எந்தப் பெண்ணும் அதை உள்ளூர விரும்புவாள் என்ற எண்ணத்தையே இந்த நீலப்படங்கள் எல்லாவழிகளிலும் உருவேற்றிக் கொண்டே யிருக்கின்றன.

இந்தப் படங்களில் ஒரு பெண்ணின் உடல், மன ரீதியான விருப்பம், விருப்பமின்மை குறித்த பிரக்ஞை அறவே ஓரங்கட்டப்படுகிறது. ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை அவளது முதலாளி தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது வெகு இயல்பானது என்பதாய், அதில் அந்தப் பெண் உள்ளூறப் பெருமையடைவதாய் திரும்பத்திரும்பக் காட்டப் படுகிறது.

அவள் உடலில் இதனால் ஏற்படும் ரணகாயங்கள், தாங்கமுடியாத வலி குறித்த பிரக்ஞையை இவை கச்சிதமாக ஓரங்கட்டிவிடுகின்றன.

இதன் சாதக பாதகங்கள் தெரியாத இளம்பருவத் தினர் வாழ்வுகளில் இந்தப் படங்கள் எத்தனையோ விதமான அக,புற பாதிப்புகளை ஏற்படுத்திவருகின் றன.

இந்தப் படங்களில் இடம்பெறும் பெண்கள் எப்படி யெல்லாம் வலைக்குள் சிக்கவைக்கப்படு கிறார்கள், இத்தகைய படங்களைக் காட்டி இளம் பெண்களும், ஆண்களும் எப்படியெல்லாம் தூண்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதை யெல்லாம் தினசரி பார்க்க, கேட்க நேர்கிறது.

இன்று தனிநபர்களாலும், கும்பலாலும் நடத்தப்படும் வன்புணர்ச்சிகள் அதிகமாக முக்கியக் காரணம் கைபேசி வழியாகவும் இணையம் வழியாகவும் காணக்கிடைக்கும் இத்தகைய நீலப்படங்களே என்று தோன்றுகிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவர இந்த இணைய, கைபேசி நீலப் படங்களும் ஒரு முக்கியக் காரணம்.

இத்தகைய படங்கள் கைபேசியிலும் இணையத்திலும் மலிந்துகிடப்பது குறித்த சமூகப் பிரக்ஞை இன்னும் பரவலாகவேண்டியது இன்றியமையாதது.

 

Series Navigationசிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்தொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறை
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    லதா ராமகிருஷ்ணனின் ‘ இனிய உளவாகவும் insensitivity களும் ” கட்டுரை படிக்க சுவையாகவும் இன்றைய இணைய யுகத்தில் நடைபெறும் இழிவுகளை ஆதாரத்துடன் எடுத்துச் சொல்வதாக உள்ளது. மகாபாரதம், கம்பராமாயணம் ஆகியவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ள உதாரணங்களும் கருத்துக்களும் சிந்திக்கத் தக்கவையே. இன்றைய இலக்கியத்திலும் ஒரு சிலர் நவீனம் என்று சொல்லி ஆபாசத்தை எழுதிவருவதும் உற்று நோக்கத் தக்கது. இவர்களுக்கு கனிகள் கசந்துவிட்டன.அதனால்தான் காயை கடித்து ருசி பார்க்கின்றனர். முக நூலில் சிலர் ஆபாசப் படங்களைப் போடுவது அவர்களின் மன நிலை குன்றிய தன்மையைக் காட்டுகிறது. அவற்றை உதாசீனம் செய்வதே சாலச் சிறந்தது.
    ” இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பாக காய்கவர்ந் தற்று . ” என்னும் 100 வது குறள்2300 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டாலும் அதன் பொருள் காலத்தால் அழியாதது! நல்ல சிந்தனையும் ஆய்வும் கொண்ட இக் கட்டுரையை எழுதியுள்ள லதா ராமகிருஷ்ணனுக்கு என்னுடைய வாழ்த்துகள். தொடர்ந்து திண்ணையில் எழுதுங்கள்…..டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *