இயற்கையைக் காப்போம்

author
2
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

கௌரி சிவானந்தன்,திருச்சி.

அழகிய இயற்கையைப் பாடி மகிழ்வோம்-அதன்
அற்புதப் புதிர்களைத் தேடித் தெளிவோம்!
பழகிய உறவுகள் கைவிட்டாலும்-நம்மை
படைத்தநல் இயற்கைதான் கா்ப்பாற்றுமே!

குறுகிய உளம்தனில் கொள்கையினால்-கொண்ட
கூர்மதி குறைவதால் கெடுதல் செய்வார்,
இளகிய மனங்களை இசையச் செய்தே-எழில்
இயற்கையின் வளங்களை என்றும் காப்போம்!

பஞ்சமும் பிணியும் பாரினிலே-கொண்டு
பாழாகும் மானுடம் பாராயோ,
நெஞ்சமும் நிதம் நிதம் தான் நொந்ததே-உடல்
நாளையை நினைத்தேதான் நலிவுற்றதே!

பறவைகள் மிருகங்கள் பதை பதைக்க-காட்டை
பாவிகள் வேரோடு கருவறுக்க,
உறைவிடம் இன்றியே பறி தவிக்க-அவை
ஊருக்குள் வருவது தாம் பிழைக்க!

மனிதர்கள் இல்லையேல் கவலை இல்லை-அதற்கு
மதியிலே குறைந்தவர் உறவுமில்லை!
புனிதமாம் இயற்கையின் பரிவிலையேல்-நாமும்
பூமியில் வாழ்வது கேள்வி நிலை!

மரங்களை அழித்தல்தான் மதியாமோ-மண்ணில்
மழையினைத் தடுத்தல்தான் முறையாமோ!
சிரங்களைக் கொய்தல் போல் வலியன்றோ-அன்னை
சீரினை சிதைத்தல்தான் பழியன்றோ!

கரங்களை இணைத்தேதான் காத்திடுவோம்-உள்ள
கடமையைச் செய்தேதான் உயர்ந்திடுவோம்!
முறண்களை மறந்தேநாம் ஒன்றினைவோம்-பெரும்
அரண்கள்தான் இயற்கையே என்றுரைப்போம்!

புகை கக்கும் வாகனங்கள் பால் படுத்தும் சூழலையே,
பகை கொண்டு இயற்கையும்தான் பாழாகி நோகிறதே!
வகை அறியா மானிடரின் வழி முறைதான் தவறுதலால்,
ஓசோனில் துளை விழுந்து வெண் தனலாய் காய்கிறதே!

உழைப்பு எனும் ஓர் வரத்தால் உடல் வலிமைப் பெற்றிடலாம்,
களைப்பு அதில் தோன்றுவதால் கண்மூடித் துயில் பெறலாம்,
விழிப்புணர்வு பெற்றிருந்தால் வளமாகும் வாழ்க்கைமுறை,
களிப்பு தனைக் கைக் கொண்டே கவலை இன்றி வாழ்ந்திடலாம்!
களிப்பு தனைக கைக் கொள்ளும்

கை பேசிக் கோபுரங்கள் கட்டாயம் இல்லை எனும்
கருத்தினையே உருவாக்கும் காலமும்தான் வாராதோ?
வாய் பேசும் மனித இனம் வாழாமல் சாவதுடன்
வாயில்லா ஜீவன்களின் வாழ்வினையும் அழிப்பதுவோ?

ஐந்தறிவு உள்ளவைகள் அல்லல் செய்ய நினைப்பதில்லை
ஆறறிவாம் மனித இனம் அதைத் தவிற்க முயல்வதில்லை!
சிந்தனையில் சீர் பெறவே வந்துதித்த எண்ணங்களை
சிறப்புடனே செயல் படுத்தி சாதனைகள் புரிந்திடுவோம்!

விளை நிலங்கள் வீடாகும் விபரீதம் தடுத்திடுவோம்,
இலை தழைகள் இயல்பான உரம் என்று உணர்த்திடுவோம்,
விளைச்சலிலே புரட்சி செய்து புதுமைகளைப் புகுத்திடுவோம்,
உழைப்பினிலே உயர்வு கொண்டு உன்னதமாய் உயர்ந்திடுவோம்!

அ. கௌரி,
திருச்சி.

Series Navigation
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் கௌரி,

    நல்ல சமூக சிந்தனையோடு எழுதிய கவிதை.
    பாராட்டுக்கள்.

    அன்புடன்

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply to வினோத் பெஞ்சமின் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *