இயேசு ஒரு கற்பனையா?

author
88
0 minutes, 4 seconds Read
This entry is part 6 of 34 in the series 28அக்டோபர் 2012

எம்.எம். மங்காசரியான்

மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்

நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை உண்மையா? என்றும் பரீட்சிக்க விரும்பினால் என்ன செய்வான்?

எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பிடமும், பிறந்த நாளும் இருக்கும். லிங்கனைப் பற்றிய அனைத்து ஆவணங்களும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது போதுமானதாய் இராவிடினும் முக்கியமான ஆதாரங்களுள் ஒன்று.

இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன. இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும் போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும். டிசம்பர் இருபத்தைந்தாம் தேதியை இயேசுவின் பிறந்த நாளாகக் குறித்தது தன்னிஷ்டப்படி எடுக்கப்பட்ட முடிவல்ல. அந்த நாள் சூரியக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். தேவ மைந்தனும், சூரியனும் ஒரே நாளில் பண்டிகை கொண்டாடுவது எதைக் குறிக்கிறதென்றால், ஒரு காலம் வரையில் இருவரும் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தார்கள் என்பதை. இயேசு இறந்த போது சூரியன் மறைந்ததாகக் கூறப்படும் கதையும், இயேசு இறந்த அன்று இளவேனிற்கால நாட்சமநிலை என்ற பாரம்பரிய நம்பிக்கையும், இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள கதைகளும் இயேசுவின் கதை சூரிய தேவனின் புராணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டது என்பதை நிரூபிக்கின்றன. இயேசு பூமிக்கடியில் மூன்று நாட்கள் இருந்தது, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்தது, ஹெர்குலிஸ் திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள் இருந்தது, லிட்டில் ரெட் ரைடிங் ஹுட் ஓநாயின் வயிற்றில் இருந்தது போன்ற கதைகள் பழங்கால மனிதன் இரவையும் பகலையும் சுற்றிப் பின்னிய கற்பனைக் கதைகளை ஒத்திருக்கின்றன. சூரியன் ஒரு டிராகன் அல்லது திமிங்கலம் அல்லது ஓநாயால் விழுங்கப்படுவது இருட்டை ஏற்படுத்துகிறது. அந்த டிராகன் கொல்லப்படும் போது சூரியன் வெற்றிகரமாக அடுத்த நாளில் காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட கதைகள் எகிப்திய நாகரிகத் துவக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரையிலான அனைத்து மதங்களிலும் வழக்கில் இருக்கின்றன.

மத்தேயு அதிசய நட்சத்திரத்தைப் பற்றியும், அது பெயரில்லாப் பிச்சைகளான மந்திர வித்தைக்காரரை அதிசயக் குழந்தையின் தொட்டிலுக்கு வழிநடத்திச் சென்றதைப் பற்றியும் கூறியுள்ளார். ஆனால் இந்த விண்மீன் என்னவாயிற்று என்பதைப் பற்றியோ, அந்த மந்திர வித்தைக்காரர், அவர்கள் கொடுத்த பரிசுகள் என்ன ஆயிற்று என்பவற்றைப் பற்றியோ மத்தேயு மூச்சு விடவில்லை. இந்த சுவிசேஷ எழுத்தாளரின் சோதிட விருப்பங்களையே இந்த நட்சத்திரம் பற்றிய நிகழ்ச்சி தெரிவிக்கின்றது. நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையை நிர்ணயிப்பவை என்ற நம்பிக்கை மிகப் பழமையான ஒன்று. நமது மொழியில் உள்ள சொற்களான (ஆசிரியர் ஆங்கிலத்தைக் குறிப்பிடுகிறார்) ill starred”,”lucky star, “lunacy” போன்ற சொற்கள் மனித மனத்தின் மீதான சோதிடவியலின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இன்றும் நாம் மனிதரின் பல்வேறு உணர்வுகளைக் குறிப்பிட கிரகங்களின் அடிப்படையில் அமைந்த பெயர்களை உபயோகிக்கிறோம். சுவிசேஷங்களில் சூரியனுக்கும், விண்மீன்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயேசுவை சரித்திரப்பூர்வமான மனிதர் என்பதிலிருந்து சோதிடவியலின் அடிப்படையில் அமைந்த கற்பனா கதாபாத்திரம் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுந்ததாகக் கருதப்படும் நாள் ஆகியவற்றை சரியாகக் கூற முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிச்சயமற்ற நிலை ஒரு குறிப்பிட்ட அளவு வரையாவது இயேசுவின் உண்மைத் தன்மையை கேள்விக் குறியாக்குகிறது.

டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி இயேசுவின் பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது. ஆனால் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்தநாளைப் பற்றி எதுவும் கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஆனாலும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் இயேசு டிசம்பர் இருபத்தைந்தில் தான் பிறந்தார் என்பதை மறுக்க முடியும். பாலஸ்தீனம் வெப்ப நாடாயிருப்பினும் டிசம்பர் மாதத்தில் பனி பெய்வதால் மேய்ப்பர்கள் ஆடுகளுடன் டிசம்பர் மாதத்தில் இராத்தங்குவதில்லை. பெரும்பாலும் இந்த நேரங்களில் மலைச்சிகரங்களும் பனியால் மூடப்பட்டிருக்கும். மேய்ப்பர்கள் உண்மையிலேயே வானம் திறந்ததையும் தேவதூதர்கள் பாடுவதையும் கண்டிருப்பார்களானால் அது நிச்சயமாக டிசம்பர் மாதத்தில் நடந்திருக்காது. ஆரம்பகாலங்களில் கிறிஸ்தவர்கள் மே மாதத்திலும், ஜுன் மாதத்திலும் இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.

இயேசு பிறந்த நாளைப் பற்றி அறிய வேண்டியது நமக்கு அவசியமில்லை. ஆனால், அது ஏன் அறியப்படவில்லை? இயேசுவின் பிறந்த நாள் மட்டுமல்ல, இயேசு பிறந்த ஆண்டு எது என்பதைப் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்கு இல்லை. சுவிசேஷகர்களில் ஒருவரான மத்தேயு இயேசு ஏரோதின் ஆட்சிக் காலத்தில் பிறந்ததாகச் சொல்கிறார். ஏரோதின் ஆட்சிக்காலத்தில் தான் மூன்று ஞானிகளின் வருகை நிகழ்ந்ததாகவும், இயேசுவைக் கொலை செய்யும் திட்டத்தை ஏரோது செயல்படுத்தியதாகவும் மத்தேயு கூறுகிறார். ஆனால் லூக்கா கூறுகிறார், சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது. அப்படியானால், இயேசுவின் பிறப்பு மத்தேயு கூறுவதை விட பதினான்கு வருடங்கள் பிந்தி நடந்திருக்க வேண்டும். வரலாற்று ஆவணங்களில் இப்படிப்பட்ட தவறுகள் இருக்குமா? சில தெய்வீக இயலாளர் கூறுகின்றார்கள், “பிழைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் இப்படிப்பட்ட உத்திகள் உபயோகப்பட்டிருக்கலாம்” என்று. ஆனால் ஏன் மத நூல்களில் மட்டும் ‘இப்படிப்பட்ட உத்திகள்’ உபயோகிக்கப்பட வேண்டும்?

மத்தேயு, ஏரோது இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் யோசேப்பும், மரியாளும் குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் இக்கதைகளுக்கு சரித்திர மதிப்பை அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்குகிறது.

இயேசுவைப் பற்றிய முக்கியமான அத்தியாயங்களுள் நுழையும் போது நமக்கு சிக்கல் மேலும் அதிகமாகிறது. ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? இயேசுவின் மரண நாள் வெள்ளிக்கிழமை என்பது மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டிருந்தாரானால் கூட அவருடைய துல்லியமான மரண தேதி இன்னதென்று யாருக்கும் தெரியாது. போதகர்களின் மாநாடுகள் ஒரு செயற்கையான தேதியை நிர்ணயித்தன. ஒரு வெள்ளிக்கிழமையின் போதே சிலுவை மரணம் நினைவு கூரப்படுகிறது. ஆனால் எந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது ஒவ்வொரு வருடத்துக்கும் வேறுபடுகிறது. புனித வெள்ளி வசந்த கால நாட்சமநிலைக்கு முன்னால் கொண்டாடப் படுவதில்லை. ஆனால் வசந்த கால நாட்சமநிலை முடிந்தவுடன் முழுநிலவின் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் இந்தப் பண்டிகையானது சூரியன் நட்சத்திரக் கூட்டங்களினிடையே (ராசிகளிடையே) இருக்கும் நிலையின் அடிப்படையிலும், நிலவின் நிலைகளின் அடிப்படையிலும் கொண்டாடப்படுகிறது. இப்படித் தான் சிலை வழிபாட்டுக்காரரின் கடவுளான ஆஸ்டிராவின் பண்டிகையும் கொண்டாடப் படுகிறது. ஆஸ்டிரா என்ற பெயரிலிருந்தே ஈஸ்டர் என்ற பெயர் வந்தது. இப்படிப் பட்ட விஷயங்களால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்கிறோம், பிற மதப் புராணக் கதைகளுக்கும் இயேசுவின் கதைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

ஆதி திருச்சபை பிதாக்களுள் ஒருவரான ஒரிஜன், இயேசுவின் உண்மைத் தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதியான செல்சசுக்கு பதில் அளிக்கும் போது வரலாற்று ரீதியில் இயேசுவின் உண்மைத் தன்மையை நிறுவ முற்படாமல் கிரேக்க- ரோமக் கடவுள்களை விட இயேசுவின் கதை நமப முடியாத தன்மையில் அமைந்தது அல்ல என்று விடையளிக்கிறார். நான் ஒரிஜினின் சொந்த வார்த்தைகளையே தர விரும்புகிறேன், நான் செல்சசுக்கு பதிலளிக்கும் முன் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் உண்மையை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் நம்மிடம் எதுவும் இல்லை. இதன் மூலமாக கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே இயேசு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அறியப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஆதாரங்கள் இல்லாத நிலையில் வெறுங் கோட்பாட்டின் அடிப்படையிலான வாதங்களை ஒரிஜன் செல்சஸ் முன்வைக்கிறார். 1. பிற மதத்தாரின் புராணங்கள் உண்மை என்று கருதப் படுகிற போது இயேசுவின் வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? 2. இயேசுவின் கதை உண்மை இல்லையென்று கருதினால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லை என்று அர்த்தப்படுகிறது. செல்சசின் பகுத்தறிவு வாதத்துக்கு முன்பு சொத்தையான வாதம் ஒன்றை ஒரிஜன் முன் வைக்கிறார். அதாவது இயேசு என்ற கற்பனையை ஏற்றுக் கொள்ளாதது பிற மதத்தவர் மற்றும் யூதரின் புராணங்களை ஏற்றுக் கொள்ளாததற்கு சமமாகும் என்று கூறுகிறார். இயேசு உண்மையில்லை என்றால் அப்பொல்லோ உண்மை இல்லையென்றும், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லையென்றும் கூறுகிறார். நமக்கு புராணக் கதைகள இருக்குமானால் அதனோடு இயேசு என்ற கற்பனையையும் சேர்த்துக் கொள்வதால் என்ன நட்டம் என்று ஒரிஜன் கேட்கிறார். இயேசு என்ற கற்பனைக்கு ஆதரவாக வாதாடியவர்களால் இதைவிட சொத்தையான, பலவீனங்களை ஒப்புக் கொள்ளும் வாதம் ஒன்றை முன் வைக்க முடியாது.

இனி ஆதி திருச்சபை பிதாக்களுள் ஒருவரான ஜஸ்டின் மார்ட்டியர் அவநம்பிக்கையாளர்கள் முன் இயேசுவுக்கு ஆதரவாக வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். கடவுளின் முதல் பிறப்பான அந்த வார்த்தை பாலுறவு இல்லாமல் உருவாக்கப்பட்டது. அவரே நமது குருவான இயேசு. அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்து, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிப்போனார். இதை நாம் சொல்லும் போது ஜுபிட்டரின் மகன்களைப் பற்றி சொல்லப் படுவதை விட அதிகமாக சொல்லி விடவில்லை, என்கிறார். பிற மதத்தவரின் புராணங்களுக்கும், இயேசுவின் கதைக்கும் அதிக வித்தியாசமில்லை, எனவே பிற மதத்தவரின் கதைகள் எவ்வளவு உண்மையோ அதே அளவு இயேசுவைப் பற்றிய கதைகளும் உண்மையே என்று ஜஸ்டின் மார்ட்டியர் நிரூபிக்க விரும்புகிறார் என்று தோன்றுகிறது. அவர் தனது வாதங்களை தொடரும்போது பிற மதத்தவரின் கதைகளுக்கும், தான் போதிக்கும் விஷயங்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதை உணர்கிறார். அவர் தொடர்கிறார், ஜுப்பிட்டருக்கு எத்தனை புதல்வர்கள் உண்டு என்று உங்களுக்குத் தெரியும். மெர்க்குரி, ஏஸ்குலாப்பியஸ், ஹெர்குலிஸ், பெர்சியஸ், பெலரபோன் முதலியவர்கள் மனிதர்களாகப் பிறந்து பெகாசசின் குதிரைகள் வழி மேலுலகத்துக்குப் போனவர்கள். ஜஸ்டின் மார்ட்டியர் கேட்க விரும்பும் கேள்வி இது தான். ஜுபிட்டருக்கு ஆறு மகன்கள் இருக்கும்போது யெகோவாவுக்கு ஒரு மகன் இருக்கக் கூடாதா?

சீசர், அலெக்ஸாண்டர் முதலியோர் வாழ்ந்ததை நிரூபிக்க வரலாற்றுச் சான்றுகளோ நம்பத் தகுந்த ஆதாரங்களோ காட்டப் படுகின்றன. ஆனால் ஜஸ்டின் மார்ட்டியர் இயேசுவின் உண்மைத் தன்மையைப் பற்றிய விளக்கத்திற்கு புராணங்களை துணைக்கு கூப்பிடுகிறார். ஜஸ்டின் மார்ட்டியருடைய விருப்பம் என்னவென்றால் அக்கால தேவர்களில் இயேசுவுக்கு முக்கியமான இடம் தரப்பட வேண்டும் என்பதாகும்.

தங்கள் விவாதங்களுக்கு உதவுவதற்காக பழைய ஏற்பாட்டில் பல குளறுபடிகளை கிறிஸ்தவ மத சார்பாளர்கள் செய்தார்கள். கிழக்கத்திய புத்தகங்களில் இருந்து மாட்டுக் கொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையையும், சுற்றி நின்று உற்றுப்பார்க்கும் மிருகங்களையும் இரவல் வாங்கிய கிறிஸ்தவர்கள் இது ஏற்கனவே முன்குறிக்கப்பட்டது என்று கருதுவதற்காக ஆபகூக் நூலில் ஒரு குளறுபடியை செய்தார்கள். கர்த்தாவே! வருஷங்களின் நடுவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்(ஆப 3:2) என்று இருந்ததை கர்த்தாவே! மிருகங்களின் நடுவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும் என்று மாற்றினார்கள். இது போன்ற பொய் வாதங்களின் அடிப்படையிலேயே கிறிஸ்தவ மதம் எழுப்பப்பட்டு இருக்கிறது, இதிலிருந்தே கிறிஸ்தவ மதம் எத்தனை சதவீதம் உண்மையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நாம் வாதங்களை தொடரலாம். ஆபிரகாம் லிங்கனின் நண்பர்களும், சமகாலத்தைச் சேர்ந்தவர்களும் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியிருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் தோழர்களோ இயேசுவைப் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களாகத் தான் இருக்கிறார்கள். மத்தேயு யார்? மாற்கு யார்? யோவான், பேதுரு, மரியாள், யூதாஸ் இவர்களெல்லாம் யார்? அப்படி யாரும் இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாம் அவர்களை புதிய ஏற்பாட்டு நூற்களைத் தவிர வேறு எங்கேயும் பார்க்க முடிவதில்லை. பேதுரு ரோமுக்கு புதிய கொள்கையுடன் போனால் வரலாற்றாசிரியர்கள் ஏன் பேதுருவைப் பற்றி எழுதவில்லை? பவுல் மார்ஸ் மேடையிலிருந்து தனது விசித்திர சுவிசேஷங்களை பிரசங்கித்திருந்தால் ஏன் ஏதென்ஸ் வரலாற்று நூற்கள் பவுலைப் பற்றி எதுவும் கூறவில்லை? பவுலும் பேதுருவும் உண்மையிலேயே வாழ்ந்திருக்கலாம். ஆனால், அது ஒரு ஊகம் மட்டுமே. அவர்கள் இருந்ததை தெளிவுபடுத்தக் கூடிய எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. இயேசுவின் அப்போஸ்தலர்களைப் பற்றிய நிச்சயமின்மை, இயேசுவைப் பற்றிய நிச்சயமின்மைக்கு கொண்டு செல்கிறது.

இயேசுவுக்கு பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் உண்டு என்பதும் புராணங்களின் போக்கில் அமைந்த கற்பனை என்றே கூறலாம். ஏழு, மூன்று, நாற்பது என்ற எண்களைப் போன்றே பன்னிரெண்டு என்ற எண்ணும் சூரியக்கடவுளின் அனைத்து புராணங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அவை பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. யாக்கோபின் பன்னிரெண்டு மகன்கள், இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்கள், ஒரு வருடத்தின் பன்னிரெண்டு மாதங்கள், சொர்க்கத்தின் பன்னிரண்டு தூண்களும், பன்னிரண்டு வாசல்களும் இன்னும் இவை போன்ற பிறவும் பன்னிரண்டு என்ற எண்ணின் ஆதிக்கத்தைக் குறிக்கின்றன. உலகின் பெரும்பாலான மதங்களில் பன்னிரண்டு என்னும் எண் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டு சிஷ்யர்களில்லாத தேவ இரட்சகர்கள் மிகக் குறைவு. புதிய ஏற்பாட்டின் ஒருசில பகுதிகளில் இயேசு உலகத்தில் சுவிசேஷத்தை பரப்புவதற்காக எழுபது பேரை அனுப்பினார் என்று கூறப்படுகிறது. இது இன்னொரு கற்பனையாதாரத்திலிருந்து வந்தது. அந்தக் காலத்தில் உலகில் எழுபது நாடுகள் இருந்ததாகக் கருதப்பட்டன. எழுபது அறிஞர்கள் எழுபது தனித்தனி அறைகளில் அமர்ந்திருந்து பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்ததாக ஒரு பாரம்பரியக் கூற்று உண்டு. அதனால் அவர்களின் மொழிபெயர்ப்பு செப்டுவாஜின்ட் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இவையனைத்தும் கற்பனையே. இவற்றுக்கு ஆதாரம் இல்லை. ஆதித் திருச்சபைப் பிதாக்களில் ஒருவர் மட்டும் எழுபது அறைகளையும் சொந்தக் கண்ணால் பார்த்ததாக சாதிக்கிறார். மொத்தத்தில் அவர் மடடும் அப்படிக் கூறுகிறார். அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களுள் பெரும்பாலோர் காட்சிகளில் அவ்வளவாக வருவதில்லை. பேதுரு, பவுல், யோவான், யாக்கோபு, யூதாஸ் ஆகியோரே நிகழ்வுகளை மொத்தமாக ஆக்கிரமிக்கின்றனர். பவுல் அப்போஸ்தலராக இருந்தால் நமக்கு மொத்தம் பதினாலு அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள். யூதாஸை விட்டுவிட்டு மத்தியாவை சேர்த்துக்கொண்டால் சீடர்களின் எண்ணிக்கை பதின்மூன்று.

ஆதிகால புராணக்கதைகள் பலவற்றில் நாற்பது என்ற எண் வருகிறது. யூதர்கள் வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் அலைந்ததும், இயேசு நாற்பது நாள் உபவாசம் இருந்ததும், மோசே கடவுளோடு நாற்பது நாட்கள் இருந்ததும் இந்தக் கதைகளில் சில. இவை உண்மையாகக் காட்சியளிக்கவில்லை. செயற்கைத்தனமாக காட்சியளிக்கின்றன. லிங்கனின் வரலாற்றை எழுதியவர்களும், சாக்ரடீசின் வரலாற்றை எழுதியவர்களும் எண்களில் ஆர்வம் செலுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் கதை எழுதவில்லை. வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

மட்டுமல்லாமல் லிங்கனின் சமகாலத்தவர் பலரும் லிங்கன் இருந்தார் என்பதற்கு சாட்சி கொடுக்கிறார்கள். அவரது காலத்திலிருந்த வரலாற்றாசிரியர்களும், அரசியல்வாதிகளும் அவரோடு தொடர்பு கொண்டிருந்தார்கள், இல்லையேல் கேள்வப்பட்டு இருந்தார்கள். ஆனால் இயேசுவின் சமகாலத்தவர்களான பல எழுத்தாளர்களும், வரலாற்றாசிரியர்களும் இயேசுவைப் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை என்பதை விளக்க முடியவில்லை. ஆபிரகாம் லிங்கன் தனது சமகாலத்தவரின் கவனத்தை ஈர்த்திருப்பாரானால் இயேசுவால் ஏன் அது முடியவில்லை? இயேசுவைப் பற்றி புறமத எழுத்தாளர்களும், யூத எழுத்தாளர்களும் அநேகங் காரியங்களைக் கேள்விப்பட்டும் ஒன்றும் கூறவில்லையென்பது பகுத்தறிவுக்குத் தகுந்ததாகக் கருதப்படுகிறதா? அவர்கள் எல்லாரும் இயேசுவுக்கெதிராய் சதியில் ஈடுபட்டிருந்தார்களோ? இந்த முழு மௌனத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அதிசயங்களைச் செய்கிற இயேசுவை அவர்கள் எப்படி அறியாமல் இருந்திருக்க முடியும்? காரணம் இது தான். அவர்களுக்கு இயேசுவைப் பற்றித் தெரியாது. ஏனென்றால் இயேசு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவரல்ல. இந்த பூமியில் அப்படிப்பட்ட யாரும் பிறக்கவில்லை.

இப்பொழுது ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றை ஆய்வு செய்யும் அம்மாணவனை எடுத்துக் கொள்ளுங்கள். ஆபிரகாமின் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய யாரும் ஆபிரகாம் லிங்கன் எங்கு பிறந்தார் என்றோ, எங்கு வாழ்ந்தார் என்றோ குறிப்பிடவில்லை என்றால் அவர்கள் ஆபிரகாம் லிங்கனை மிகைப்படுத்துகிறார்கள் என்று அம்மாணவன் கருத இடமுண்டு. நாமும் அது போன்ற நிலையில் தான் இருக்கிறோம். பல மாமனிதர்களின் பிறந்த தினமும், பிறந்த இடமும் நமக்குத் தெரியாது. ஆனால், அவர்களைப் பற்றிய பிற ஆதாரங்கள் அவர்களின் இருப்பைக் குறித்த சந்தேகங்களை நீக்கி விடுகின்றன. ஆனால், இயேசுவைப் பற்றிய எந்த தெளிவான ஆதாரமும் இல்லை. இயேசுவின் சமகாலத்தவர்களாய் கருதப்படும் சுவிசேஷ ஆசிரியர்கள் கூட இயேசுவைப் பற்றி எந்த தெளிவான விவரமும் கொடுக்கவில்லை.

ஆனாலும், நாம் ஆய்வைத் தொடருவோம். ஆபிரகாம் லிங்கனைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கும் செய்திகளின் உண்மைத் தன்மையை நம்மால் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இயேசுவைப் பற்றிய செய்திகளை ஒப்புமைப்படுத்தி சரிபார்ப்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்தவர், விடுதலை சாசனத்தில் கையெழுத்திட்டவர், கொலை செய்யப்பட்டவர் என்பது போன்ற செய்திகளை சரிபார்த்து விடலாம்.

இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இப்படிப் பட்ட தகவல்களை நாம் சரிபார்க்க முடியாது. வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் இப்படிப் பட்ட தகவல்கள் ஏற்கத் தகுந்தன அல்ல. இவை புராணக்கதைகளின் பாற்பட்டவை ஆகும். இப்படிப் பட்ட தகவல்கள் இயேசுவின் கதைக்கு உண்மைத் தன்மையை அளிப்பதைவிட சிதைப்பதிலேயே அதிக வேகத்துடன் செயல்படுகின்றன.

அதுபோலவே இயேசு ஒரு கடவுள் என்கிற தகவலையும் நம்மால் சரிபார்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நபர் கடவுள் தன்மை பெற்றவரா இல்லையா என்பதை நாம் எப்படி நிரூபிக்க முடியும்? இயேசு ஒரு அபூர்வ மனிதராக இருக்கலாம். ஆனால் எல்லா அபூர்வ மனிதர்களும் கடவுளாக முடியுமா? இயேசு தான் கடவுள் என்று கூறியிருக்கலாம். எத்தனையோ மனிதர்கள் தங்களைக் கடவுள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள்கள் என்பதற்கு நிரூபணங்கள் என்ன?

சாதாரண மனிதரான இயேசு இருந்திருக்கலாம், இல்லாதவராயும் இருக்கலாம். ஆனால் கன்னிக்குப் பிறந்த கடவுளை நம்புவதை விசுவாசம் என்ற பெயரால் நியாயப்படுத்துவது அர்த்தமில்லாத ஒன்று. இயேசு என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான இறுதி வாதமாக விசுவாசம் முன்வைக்கப்படுகிறது. இதே விசுவாசத்தின் அடிப்படையில்தான் முகமது தான் கூறுவதை நிரூபிக்கவும், பிரிஹம் யங் தனது வெளிப்படுத்தலை முனவைக்கவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட குறுக்கு வழிகளைத் தவிர கன்னிக்குப் பிறந்த மனிதனின் இருப்பை நிரூபிக்கக் கூடிய வழியில்லை. இப்படிப்பட்ட விசுவாசம் சுதந்தரமானதல்ல. இக்காலத்தில் வாளாலும், பிற்காலத்தில் நரகத் தீயாலும் அது பாதுகாக்கப்படுகிறது.

ஆபிரகாம் லிங்கன் தம் மரணத்தைக் குறித்து முன்னறிவித்து இருந்தாலோ, தனது தோழர்களிடம் நான் ஆகாயத்தில் தோன்றும் வரை நீங்கள் என்னைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருந்தாலோ, நான் பரலோகத்தில் உங்களுக்கு சிங்காசனங்களைத் தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தாலோ, தனது தோழர்களிடம் நீங்கள் எனது பெயரால் விஷத்தைக் குடிப்பீர்கள் என்று சொல்லியிருந்தாலோ, நீங்கள் எனது பெயரில் எதைக் கேட்டாலும் உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தாலோ அப்படிப்பட்ட லிங்கனின் இருப்பைப் பற்றி நமக்கு சந்தேகம் எழுவது இயல்பு. ஆனால் இதைப் போன்ற பல மொழிகள் இயேசுவின் வாயிலிருந்து வெளிவந்துள்ளன. என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அது உங்களுக்குக் கொடுக்கப்படும். எந்த மனிதனும் இப்படிப்பட்ட நடக்காத விஷயங்களை யாரிடமும் நடக்கும் என்று சொல்லி சத்தியம் பண்ணுவதில்லை. இப்படிப் பட்ட வெற்றுப் பேச்சுகள் ஒரு மனிதனைக் கடவுளாக்குவதுமில்லை. இயேசு தனது சத்தியத்தைக் காப்பாற்றினாரா? அவர் தன்னைப் பின்பற்றுபவர்கள் தம் பெயரால் எதைக் கேட்டாலும் கொடுப்பாரா? இதற்கு ஒரு சொத்தை பதில் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு எது நல்லது என்று அவர் கருதுகிறாரோ அதை அவர் கொடுப்பார். இதை விட ஒரு சத்தியத்திலிருந்து நழுவ சிறந்த வழியுண்டா? இதை அவர் சொல்லக் கருதியிருப்பாரானால் ஏன் முதலில் இன்னொரு விஷயத்தைச் சொன்னார்? அவர் சொல்லக் கருதியதை ஏன் அவர் சொல்லவில்லை? இப்படிச் சொல்வது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நிறைவேறாத எதிர்பார்ப்புகளை உண்டாக்கும் என்பதை அவர் ஏன் உணரவில்லை? குறைந்த வாக்குறுதிகளை அளித்து விட்டு அதிகமாகச் செய்வது, அதிகமான வாக்குறுதிகள் கொடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட எவ்வளவோ மேலானது. இப்படிப் பட்ட நிறைவேற்றாத ஒரு சத்தியத்தை இயேசு செய்தார் என்பது அவரது இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. புராணங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும். இயேசு தான் கொடுத்த சத்தியத்துக்கு மதிப்பளித்திருந்தால் இவ்வுலகத்தில் துன்பம் இருக்காது, அனாதைகள் இருக்க மாட்டார்கள், குழந்தையிழந்த தாய்மார்கள் இருக்க மாட்டார்கள், கப்பல் விபத்துகள் நிகழ்ந்திருக்காது, வெள்ளப் பெருக்கு இருக்காது, பஞ்சம் இருக்காது, வியாதி இருக்காது, ஊனமுற்ற குழந்தைகள் இருக்க மாட்டார்கள், மனவியாதி இருக்காது, யுத்தங்கள் இருக்காது, குற்றங்கள் இருக்காது, தவறுகள் இருக்காது. எத்தனை ஆயிரம் பிரார்த்தனைகள் பூமியின் முகத்தைப் புண்ணாக்கும் தீமைகளுக்கு எதிராக நடந்திருக்கிறது? பின் ஏன் இத்தனை அதிருப்தி? இயேசுவைப் பின்பற்றுபவர்களால் மலைகளை நகர்த்த முடிந்ததா? விஷங்களைக் தீங்கின்றி குடிக்க முடிந்ததா? பாம்புகளை கையில் பயமின்றி எடுக்க முடிந்ததா? இயேசு செய்ததாகச் சொல்லப்பட்ட அற்புதங்களை விட பெரிய அற்புதங்களைச் செய்ய முடிந்ததா? தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்ட எத்தனையோ மதஸ்தர்கள் அப்படிப்பட்ட போதனைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் எத்தனை பிரச்சினைகள் வந்தன?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் தன் தாய் எவ்வளவு கண்ணீரோடு முழங்காலில் நின்றார்கள் என்றும், எப்படிப்பட்ட விசுவாசத்தை இயேசுவின் உதவும் தன்மை மீது வைத்திருந்தார் என்றும், பட்டினியாய் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிப்பேன் என்று இயேசு கூறியதன் மீது வைத்திருந்த விசுவாசத்தைப் பற்றியும் கூறுகிறார். அவர்கள் ஜெபிக்கும் போது அவர்கள் சுமை குறையவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்தது. ஒரு கல்லோ, மரக்கட்டையோ கூட அவர்கள் கண்ணீரினால் கசிந்துருகி விடும். அந்த நாட்களை எண்ணும் போது என் மனது வலிக்கிறது என்று ஹோலியாக் எழுதுகிறார். ஒருநாள் அவர் அருட்திரு. கிரிபேஸ் என்ற பாதிரியாரிடத்தில் சென்றார். அவாpடம் கேட்டார், நாம் விசுவாசத்தோடு எதைக் கேட்டாலும் அது கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?. மேலும் ஹோலியாக் எழுதுகிறார், அந்த போதகரின் நைந்து போன துணியும், அரைப்பட்டினித் தோற்றமும், வசூலாக வேண்டிய பணத்திற்கு காத்திருக்கும் நிலையும் அவர் தனது வருமானத்திற்கு விசுவாசத்தை சார்ந்திருக்கவில்லை என்று எனக்கு அப்போது உணர்த்தவில்லை. பிரார்த்தனையால் எல்லா உதவியும் கிடைக்குமென்றால் எந்த சபைக்கும் தேவைகள் இருக்காது, எந்த விசுவாசியும் வறுமையாளராய் இருக்க மாட்டார் என்று அப்போது எனக்கு உறைக்கவில்லை. தனது கேள்விக்கு அந்த பாதிரியார் அளித்த பதிலைப் பற்றி அவர் எழுதுகிறார். அவர் பல வார்த்தைகளால் அதை விளக்கினார். இயேசு கொடுத்த உறுதிமொழியின் கூட ஒரு வார்ததை சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர் தமது விசுவாசிகளின் நன்மைக்கானதை அளிப்பார் என்றார். அப்படியானால் இயேசு ஏன் தான் உறுதிமொழியளிக்கும் போது இவ்வார்த்தையைக் கூறவில்லை? இயேசு ஒரு உறுதிமொழியின் அரைப்பகுதியை மட்டும் கூறிவிட்டு, தன்னிடம் கோரிக்கை வைத்து நம்பிக்கையிழந்தவர்களிடம் அடுத்த அரைப்பகுதியை உபயோகப்படுத்துவாரா? ஆனால் அவர் சொன்னார், என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் உங்களுக்குச் செய்வேன். அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேனே என்கிறார். அவர் தாம் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததைக் கூறாமல் வேறு எதையோ கூறினாரா? உண்மை என்னவென்றால் சுயநினைவோடு இருக்கும் மனிதன் இப்படிப்பட்ட அசாதாரணமான, சாத்தியமில்லாத சத்தியங்களைச் செய்வதில்லை. இயேசு இப்படிக் கூறுவதாக இருக்கும் தகவல், அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரமே என்ற கூற்றுக்கு வலு சேர்க்கிறது.

ஹோலியாக்குக்கு உண்மை புரிந்த போது அவர் பரலோகத்திற்கு விண்ணப்பங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அவர் அந்த செயலை வெற்றுக் கிணற்றில் வாளியை விடுவது போனறது என்பதை உணர்ந்து கொண்டார். தனது உதவிக்காக பிற இடங்களை நாடினார். இந்த உலகின் முன்னேற்றம் எதில் இருக்கிறது என்றால் மனிதர் பரலோக உதவியை எதிர்பாராமல் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வதில் தான் இருக்கிறது. பிரார்த்தனை அல்ல, சுயமுயற்சியே அறியாமை, அடிமைத்தனம், வறுமை, ஒழுக்கக்குறைவு போன்ற அனைத்திற்கும் மருந்தாக இருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இல்லாத இயேசுவையும், சாத்தியமில்லாத சத்தியங்களையும் காட்டி மனுக்குலத்தின் வளர்ச்சயை தள்ளிப்போட மட்டுமே திருச்சபையால் முடிந்ததேயொழிய அதை நிறுத்தி விட முடியவில்லை. இதுவே மனிதனின் இயல்புக்குக் கிடைத்த வாழ்த்தாகும். மேலும் பயத்தால் அடக்கி வைக்கப்பட்டு மவுனத்திலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடந்த மனித இனம் விரைவில் இது போன்ற மாயைகளிலிருந்து விடுதலை பெற்று விடும் என்பதற்கு இப்போதைய நிலைகள் உறுதியளிக்கின்றன.

——————————————-

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8அக்னிப்பிரவேசம் -7
author

Similar Posts

88 Comments

  1. Avatar
    Kavya says:

    இக்கட்டுரை 1909ல் எழுதப்பட்டு பிரபலமானது என்று விக்கிப்பீடியாவில் அறியலாம். இதை எழுதியதால் ஆசிரியர் கொல்லப்படவில்லை. இதற்கு எதிர் பதிலகளும் விளக்கங்களும் போடப்பட்டன. சுந்தரவடிவேலு அவைகளில் ஒன்றினை மொழிபெயர்த்துப் போட்டால் திண்ணை வாசகர்களுக்கு இருபக்கங்களையும் அறிய வாய்ப்புக் கிடைத்து அவர்களாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள். இல்லாவிட்டால் வடிவேலு வாசகர்களுக்கு ஒரே ஒருபக்கத்தை மட்டும் காட்டி மறுபக்கமே இல்லையென நம்ப வைக்கிறாரென்றே பொருள். சரியா?

    மங்காசாரின் ஒரு அமெரிக்கர். இக்கட்டுரைக்குப்பின்னர் பிரபலமானவர். அவர் எழுதியபின் இயேசுவைப் பற்றிய ஆராய்ச்சிகள் உசுப்படுத்தப்பட்டன. ஐரோப்பிய கிருத்துவர்களில் பலர் அதைச் செய்தார்கள். பிறமதத்தவரல்ல.
    கிருத்துவர்களில் பல பிரிவுகள்: அவர்களுள் ஒருசாரார் இயேசுவை ஒரு அவதார புருஷராக எடுத்துக் கொள்ளாமல், அவரின் போதனைகளை மட்டுமெடுத்துக் கொள்வது. கிருத்துவர்கள் அனேகம்பேர் அவர் செய்த அற்புதங்கள், அவரின் அமானுஷ்ய பிறப்பு இவற்றை ஒதுக்கி விடுவர். போதனைகளை விட்டுவிட்டுத் தேவனைப்பிடித்தென்ன இலாபமென்பது அவர்கள் கட்சி. அவர்களிடம் இக்கட்டுரை சென்றடையாது. மங்காசரின் கட்டுரை வெளிவந்த 1909 ஆண்டுக்குப்பின் எத்தனை பேர் கிருத்துவ மதத்தைவிட்டு வெளியேறினார்கள் ?

    இக்கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்களை ஒரு கிருத்துவர்தான் வந்து படித்துப் பதிலெழுத வேண்டும். செய்யமாட்டார்கள் அவர்கள். காரணம் அவர்களின் சிறப்பே இப்படிப்பட்ட கருத்துகளை உதாசீனம் செய்வதுதான் என்று வரலாற்றில் அறியலாம். இறைமறுத்தவர்களை எரித்த்து ஆதிகாலம்தான் (மிடில் ஏஜ்). அதன் பிறகு. கிருத்துவர்கள் நீண்ட பயணம் செய்துவிட்டார்கள் பின் ஆருக்காக இக்கட்டுரையென்று வடிவேலு (ரங்கராஜன் சுந்தரவடிவேலு)தான் சொல்லவேண்டும் !

    இதைப்படித்துவிட்டு திரு ஜான்சன் இந்துவாக மாறிவிடுவார் என்று திரு ர.சு.வடிவேலு நினைக்கலாம். இசுலாமியராகி விடுவார் என்று திரு சுவனப்பிரியன் நினைக்கலாம். நான் என்ன நினைக்கிறேனென்றால், திரு ஜான்சன் மேலும் கிருத்துவராகி விடுவார்.

    ஏனென்றால், நம்பிக்கை என்றூமே 100/100 தான். 99.9 இருந்தால் அது நாத்திகம், ஆத்திகம் வேடம்போட்ட கதை.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    இயேசு ஒரு கற்பனையா எனும் ஒரு பிரமிப்பூட்டும் கேள்வியை தலைப்பாகக் கொண்ட ஒரு பழங்கால கட்டுரையை ஆழ்வகராட்சி மூலம் தேடி எடுத்து திண்ணை வாசகர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கியுள்ள ரங்கராஜன் சுந்தரவடிவேலுவுக்கு உலக கிறிஸ்துவ மக்கள் சார்பாக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் காவ்யா அவர்கள் கூறியுள்ளதுபோல் இக் கட்டுரைக்கு அன்றே வெளிவந்துள்ள மறுப்புகளையும் விளக்கங்களையும் சிரமம் பாராது மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
    இந்த சர்ச்சையில் ஒரு உண்மையை நாம் உணர்ந்தே ஆகவேண்டும். இயேசு பிறந்த காலத்தில் பிறந்த நாளை பதிவு செய்யும் அரசாங்க இலாகா இல்லாமல் போனதால் வந்த வினை இது. உலகின் வேறு கடவுள்களின் நிலை என்னவோ என்பது எனக்கு சரிவர தெரியவில்லை. திரு சுந்த்ரவடுவேல்தான் இது பற்றி கூறவேண்டும்…நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    தங்கமணி says:

    //மங்காசரின் கட்டுரை வெளிவந்த 1909 ஆண்டுக்குப்பின் எத்தனை பேர் கிருத்துவ மதத்தைவிட்டு வெளியேறினார்கள் ? //

    ஏராளமான பேர்கள்!

    http://en.wikipedia.org/wiki/Blasphemy_law
    இப்படித்தான் கிறிஸ்துவ நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளிலும் அவரவர் தங்கள் தங்கள் தெய்வங்களை அவதூறுகளிலிருந்து காப்பாற்றுகிறார்கள்.
    அந்த பாதுகாப்பு இல்லையென்றால் இந்த ஆபிரஹாமிய தெய்வங்கள் எப்போதோ காணாமல் போயிருப்பார்கள்.

  4. Avatar
    K A V Y A says:

    Mr தங்கமணி !
    “ஏராளமான பேர்கள்” என்ற பதிலுக்கும் கொடுத்த இணைப்புக்கும் தொடர்பில்லையே !

    அந்தவிணைப்பு பொதுவாக இசுலாமிய நாடுகளைத்தான் காட்டுகிறது. அந்நாடுகளில் ஒருவர் இசுலாமை விட்டு விலகி, ஏன் விலகினேன், அல்லது இசுலாமில் தனக்கு எவை பிடிக்கவில்லையென்றால், அவரை அந்தச் சட்டம் தண்டிக்குமென்று பயந்து அவர் இசுலாமை விட்டு விலகாதிருப்பாரெனலாம்; எண்ணிக்கை குறைவு ஏற்படாதிருக்கும். இல்லையா? அதைத்தானே சொல்கிறீர்கள்? இதைப்பற்றி நீங்கள் ஏற்கனவே பல தடவைகள் திண்ணையில் எழுதியிருக்கிறீர்கள். இணையதளங்களைப் படிக்கும் தமிழ் இசுலாமியராவது உங்களைப்படித்து இந்துக்களாகி விட்டிருக்கலாமே ? ஏனில்லை?

    The reply would be:, it is the Belief in which the believers are rooted. Not in historical evidences and intellectual brownie points.
    அஃது இசுலாமைப்பற்றி. இங்கே இயேசுவைப் பற்றித்தான் கட்டுரை. எழுதப்பட்ட ஆண்டு 1909. எழுதியவரைக் கொல்ல ஃபாட்வா வீசப்படவில்லை சால்மான் ருஸ்டியின் மேல் வீசப்பட்டது போல. விக்கிபீடியா அவர் பயந்து தலைமறைவாக வாழ்ந்தார் என்று கூட சொல்லவில்லையே !!

    அமெரிக்காவில் நீங்கள் சொன்ன அச்சட்டமிருந்ததா? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் இயேசுவை கற்பனையென்று நம்பியதால்? அல்லது அமெரிக்கர்கள் இயேசு உண்மையிலேயே வாழவில்லையென்று நம்பி கிருத்துவ மதத்தை விட்டு விலகி அம்மதம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டதா அமெரிக்காவில் ? எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லுங்கள்.

  5. Avatar
    K A V Y A says:

    இந்தியாவில் இயேசு கற்பனையா என்ற இக்கட்டுரைக்கு ஏதேனும் தடையா? இந்தியக்கிருத்துவர்கள் தாராளமாகப்படித்து நம்பி விலகி விடலாமே? உலகில் பல கிருத்துவ நாடுகளில் படிக்கலாமே தாராளாமாக பயமில்லாமல் இப்போது ? அங்கெல்லாம் அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியிருந்தால் இன்று அந்நாடுகளில் கிருத்துவம் அழிந்திருக்குமே ? ஏன் நடக்கவில்லை? கொல்வேன் என்று எவரேனும் மிரட்டினார்களா ?

    கிருத்துவத்தின் மேல் வெறுப்பு வருமேயானால் அஃது இப்படிப்பட்ட கட்டுரைகள், கருத்துக்களினாலன்று. அம்மதகுருமார்கள் செய்யும் சில பல நடவடிக்கைகளினாலே. உண்மையிலே அப்படிப்பட்ட நடவடிக்கைகளினாலேயே கிருத்துவம் முதன்முறையாக இரண்டாகப் பிளந்தது. எனினும் அந்நடவடிக்கைகள் அவர்களை கிருத்துவத்தில் இன்னொரு பிரிவுக்குத்தான் கொண்டு போனதே தவிர, அம்மதத்தை விட்டு விலகி வேறு மதத்தில் சேர ஏதுவாக்கவில்லை.

    Such tracts as this essay here can be written not only against Xánity but also against your own religion. But the Hindus will remain steadfast in their religion just as Xians do. You may give a link to prove that many Tamil vaishnavas gave up their religion just because Rajaji said Andal never existed; and all that which are attributed to her, were indeed authored by Periyaazhwaar !
    In case the Hindus want to leave the religion, it is not so much for the reasons that someone has conclusively proved that so and so saints hadn’t actually existed; or Ramar is all mythology but for the reasons like the domination of the Brahmins; or denial of dignity to some people.

  6. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள காவ்யா,

    இணைப்பு நீங்கள் சொன்ன 99% சதவீத நம்பிக்கை 1 சதவீத அவநம்பிக்கைக்கு கொடுத்த இணைப்பு.
    சிந்தித்து பார்த்தால், இவ்வாறு கிறிஸ்துவ நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அவரவர் தெய்வங்களை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற விரும்பும் நம்பிக்கையாளர்கள் அவர்களது தெய்வங்கள் தங்களைத்தாங்களே காப்பாற்றிகொள்ள இயலாதவர்கள் என்று கருதித்தானே அவர்களை காப்பாற்ற சட்டங்களை இயற்றி, தெய்வங்களை அவமரியாதை செய்பவர்களை தண்டிக்கிறார்கள் அல்லது கொல்கிறார்கள்? இவர்களுக்கு தங்கள் தெய்வங்கள் சக்தி வாய்ந்தவை என்ற எண்ணம் இருந்தால், இப்படி தெய்வங்களை காப்பாற்ற சட்டம் போடுவார்களா?
    ம்ம்ம்…

    ஏராளம் என்று சொன்னதற்கு இணைப்பு வேண்டுமென்றால் நிறைய தரலாம். அப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தாலும் ஏராளமானவர்கள் இஸ்லாமிலிருந்தும் கிறிஸ்தவத்திலிருந்தும் வெளியேறிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

    ஐரோப்பாவில் வளரும் நாத்திக வாதத்தை பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.
    http://en.wikipedia.org/wiki/Demographics_of_atheism

    அமெரிக்காவிலும் பௌத்தமதமே வெகுவேகமாக வளர்கிறது.
    In a 2007 Pew Research Center survey, at 0.7% Buddhism was the fourth largest religion in the US after Christianity (78.4%), no religion (10.3%) and Judaism (1.7%).[56] In 2012 on the occasion of a visit from the Dalai Lama, U-T San Diego said there are 1.2 million Buddhist practitioners in the U.S., and of them 40% live in Southern California.[57]

    கத்தோலிக்க பாதிரிகளின் குழந்தை வல்லுறவு செயல்களால் மனம் நொந்த பலர் புராட்டஸ்டண்ட் பிரிவுகளுக்கு சென்றாலும், மேலும் பலர் கிறிஸ்துவத்தை விட்டே விலகுகிறார்கள் என்பதும் உண்மை.

    1. Avatar
      K A V Y A says:

      சட்டங்களை இயற்றாமலும் பிறமதத் தெய்வங்களை இகல்பவர்களைத் தண்டிக்கலாம். தட்டிக்கேட்கலாம். அவர்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யலாம். தெருவில் இறங்கி போராடலாம். மிரட்டல் விடலாம்.

      சட்டங்கள் தண்டிப்பதற்கு மட்டுமன்றி; தவறு செய்தோர் எனக்குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஒரு நீதிபதியின் முன் தன்னிலை விளக்கம் கொடுக்க வாய்ப்பு கொடுக்கவும்தான். ஆனால் சட்டமில்லாவிட்டால் ? அவன் கொல்லப்படுவான். கேட்பதற்கு நாதியில்லை. சட்டமில்லாவிட்டால் எல்லாரையும் தங்கள் தங்கள் மனம்போல பேசயிடகொடுத்துவிட்ட்டார்கள் என்பதாகாது. சட்டம் ஒரு சமூகத்தின் நல்வளர்ச்சியடைந்த நாகரிகத்தின் அளவுகோல்.

      கருநாநிதி, இராமரைக் குடிகாரன் என்றார். உடனே நீங்கள் சும்மாயிருந்து விட்டீர்களா? சட்டமில்லை (No blasphemy law) எனவே அவர் பேசட்டும் என்றா விட்டீர்கள்? எதிர்ப்பு கிளம்பவில்லையா? வராணாசி சாமியார் ஒருவர்: கருநாநிதியின் தலையை வாங்குவேன் என்று சொல்லவில்லையா? சட்டமிருந்தால் மு கவை கோர்ட்டுக்கு இழுத்திருப்பீர்கள. நீதிபதியின் முன், வால்மீகி இராமாயணத்தைப் படித்துக் காட்டி இராமரும் இலக்குவனும் சுரபானம் அருந்தும் வழக்குமுடையோர் என்று போட்டிருக்கும். இதைத்தான் சொன்னேன் என்றிருப்பார். இல்லையா? ஆக, அவருக்கு ஒரு வாய்ப்பு சட்டம் கொடுக்கும்.

      நீங்கள் சுட்டுவது கிருத்துவம் பிடிக்காமல் நாத்திகவாதிகளாக மாறியதைப் பற்றி. உங்கள் கணிப்புப்படி, கிருத்துவம் பொய்யென்று அவர்கள் நம்பினால், ஏன் அவர்கள் வேறு மதங்களுக்குத் தாவியிருக்கக்கூடாது? நாத்திகர்களாகத்தானே போனார்கள்? அப்படி இன்றைய தலைமுறையிடையே நாத்திகம் பெருகி வருகிறது என்பதை கிருத்துவர் மட்டுமன்றி, எல்லா மதத்தவரும் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், மதத்தால் நடந்தேறி வரும் மக்கட்சண்டைகள்; கொலைகள்; வெறுப்புணர்ச்சி; மூடநம்பிக்கைகளால் மனிதனின் தனி முயற்சியைத் தடுத்தல், பெண்ணடிமைத்தனம், மக்களின் பணத்தையும் உழைப்பையும் இறைவ்ன பெயரால் சுரண்டல்: இவையெல்லாமே ஒரு இளைஞனை “இது மதமா? அன்பைப்போதிக்கவேண்டிய மதம் ஏன் வெறுப்பை வளர்க்கிறது? இதைவிட்டால் நல்ல வாழ்க்கை வரும்தானே ?” என யோசிக்க வைக்கிறதன்றோ?

      வெறும் கடவுள் ஒரு கற்பனை என்ற தியரியால் நாத்திகரானவரை விட, அகனிஸ்டுகளே அதிகம்.

  7. Avatar
    ஹரன் says:

    முந்தைய, முந்தைய யுகங்களில் வாழ்ந்தவர்களைக் கடவுளாகவே ஏற்றுக்கொண்ட நாடு இது. இங்கு போய் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் கற்பனை என்றால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.

  8. Avatar
    புனைப்பெயரில் says:

    பௌத்த மதம், துப்பாக்கி, குண்டு, ஹவாலா… என்பதெல்லாம் இன்றி பரவுகிறது. புயலுக்கும் பின்னே அமைதி தான் இறுதி… இறை மார்க்கம் என்று இறுமாப்புடன் அடுத்தவர்களை அழித்து மதம் பரப்புபவர்கள் தோற்பார்கள். பசுத் தோல் போர்த்திய புலிகளாய், அரஜாக எண்ணம் கொண்டோர் அமைதி மார்க்கம் என்று விளம்பரத்தில் ஈடுபடுவது நிலைக்காது…

    1. Avatar
      K A V Y A says:

      உலக வரலாற்றிலேயே மாபெரும் படுகொலைகளை நடாத்திய சிங்களவ்ர்கள் புத்தமதத்தினர்; இலங்கைத் தமிழருக்கு உரிமைகள் அளிக்ககூடாதென்று போர்க்கொடி தூக்கிப்போராடுவோர் இலங்கைப் புத்த பிக்குகள்; இந்துக்கோயில்களை அழித்து புத்தவிஹாரங்களைக்கட்டிக்கொண்டிருப்பதாக தகவல்.

  9. Avatar
    Dr.G.Johnson says:

    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனையான போலியான படைப்பு என்று ஒருசில கேள்விகள் கேட்டு இப்படி கட்டுரை எழுதி வாசகர்களின் கவனத்தை ஈர்ந்து திடீர் புகழ் அடையும் நபர்கள் அவ்வப்போது தோன்றுவதும் மறைவதுமாக உள்ளனர். இவர்கள் எழுப்பும் கேள்விகளால் கிறிஸ்துவ மக்கள் யாருமே அவற்றை நம்பி வேறு தெய்வங்களை வணங்கப் போவதிலலை. காரணம் எந்த தெய்வம் உண்மையானது என்பது யாருக்கு தெரியும். உண்மையான தெய்வத்தைப் பார்த்தவன் யார்? நாம் அனைவருமே எந்த விதமான சந்தேகமும் கொள்ளாமல்தான் கண்டு அறியமுடியாத அவரவர் நம்பும் கடவுளை வழிபடுகிறோம். அப்படி பல கடவுள்களை நாம் அறியாமல் வழிபட்டுவந்தாலும் இருப்பது ஒரு கடவுள்தான் என்று கூறுவதுதான் பகுத்தறிவு…அகவே நமது பகுத்தறிவை பயன்படுத்தி அந்த ஒரே தேவனை வழிபடுவோம் வாருங்கள்……நன்றி……
    டாக்டர் ஜி. ஜான்சன்.

  10. Avatar
    K A V Y A says:

    //கத்தோலிக்க பாதிரிகளின் குழந்தை வல்லுறவு செயல்களால் மனம் நொந்த பலர் புராட்டஸ்டண்ட் பிரிவுகளுக்கு சென்றாலும், மேலும் பலர் கிறிஸ்துவத்தை விட்டே விலகுகிறார்கள் என்பதும் உண்மை.//

    கத்தோலிக்கம் மட்டுமில்லை. மற்ற பிரிவுகளிலும் இப்படிப்பட்ட பாதிரியார்களைக் காணலாம். கிருத்துவம் மட்டுமில்லை, பிற மதங்களிலும் ஒரு சில சாமியார்கள் ஊழல் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். நித்தியில்லையா? அது போல. சாமியார்கள் சரியில்லை என்று ஒருமதத்தைவிட்டு விலகினால், எல்லா மதங்களுமே காலி.

    மதங்கள், அவற்றின் கொள்கைகள், அவற்றின் புனிதப்பனுவலகள், இவற்றையொட்டிய மத வாழ்க்கை – இவற்றை வைத்து ஒருவன் தனியாகவே கிருத்துவனாகவோ, இசுலாமியனாகவோ, சீக்கியனாகவோ, ஜெயினனாகவோ, பவுத்தனாகவோ வாழலாம்.

    த‌மிழ்நாட்டிலும் இப்ப‌டிச்சாமியார்க‌ள் வந்துகொண்டேயிருக்கிறார்க‌ள். நித்தி ச‌ம்ப‌வ‌ம் எல்லாருக்கும் தெரியும், திருச்சியில் ஒரு க‌த்தோலிக்க‌ பாதிரியார் த‌காத‌ உற‌வு கொள்ள‌ க‌ட்டாய‌ப்ப‌டுத்தினாரென்று ஒரு குற்ற‌ச்சாட்டு. சென்னைக்க‌ருகில் ஒரு நில‌ மோச‌டியில் ஒரு புராட்டெஸ்டெண்டு பாதிரியார். சி.எஸ்.ஐ த‌மிழ்நாட்டில் நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்குக‌ள் அவ‌ர்க‌ளுள் ஒருவ‌ரையொருவ‌ர் எதிர்த்துப்போட்ட‌ – சொத்துக்க‌ளுக்காக‌, ப‌த‌விக‌ளுக்காக‌ – வ‌ழ‌க்குக‌ள் தேங்கிக்கிட‌க்கின்ற‌ன‌. ச‌துர்வேதி சாமியார் த‌ன் ம‌னைவியையும் ம‌க‌ளையும் ஏமாற்றி த‌ன்னிட‌மிருந்து பிரித்துவிட்ட‌தாக‌ ஒரு க‌ண‌வ‌ர் புகார். வ‌ழ‌க்கு ந‌ட‌க்கிற‌து. சாமியார் சிறையில்

    என் கேள்விக‌ள்:

    நித்தியினால் எத்த‌னை பேர் தேவார‌ம் திருவாச‌க‌ம் வேண்டாம்; சைவ‌மதத்‌திலிருந்து வில‌குகிறோமென்றார்க‌ள்?

    காஞ்சி ஜெயெந்திரர் – ச‌ங்க‌ர‌ராம‌ன் வ‌ழ‌க்கினால் எத்த‌னை பேர் இந்து மதமே வேண்டாமென்றார்கள்?

    திருச்சி க‌த்தோலிக்க‌ப்பாதிரியார் விட‌ய‌த்தினால், எத்த‌னை த‌மிழ் கத்தோலிக்க‌ர்க‌ள் அம்ம‌த‌த்தைவிட்டு வில‌கினார்க‌ள்?

    சி எஸ் ஐ வ‌ழ‌க்குக‌ளினால் எத்த‌னை பேர் கிருத்துவ‌ ம‌த‌த்திலிருந்து வில‌கினார்க‌ள்?

    ச‌துர்வேதிச்சாமியாரின் லீலையால், எத்த‌னை பேர் நாங்க‌ள் நாலாயிர‌த் திவ்ய‌ பிர‌ப‌ந்த‌த்தை நிராக‌ரித்து இந்து ம‌த‌த்திலிருந்து வில‌கினார்க‌ள்? இச்சாமியார் ஆழ்வார்க‌ளின் பாசுர‌ங்க‌ளில் எக்ஸ்ப‌ர்ட்.

    சாமியார் த‌ப்பென்று ம‌த‌த்திலிருந்து வில‌குப‌வ‌ன் ஒரு ம‌ட‌ச்சாம்பிராணி.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ஆனால் கன்னிக்குப் பிறந்த கடவுளை நம்புவதை விசுவாசம் என்ற பெயரால் நியாயப்படுத்துவது அர்த்தமில்லாத ஒன்று. இயேசு என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான இறுதி வாதமாக விசுவாசம் முன்வைக்கப்படுகிறது\

    ஸ்ரீ சுந்தர வடிவேலு அவர்களுக்கு மிக்க நன்றி. ப்ரச்சினை விஸ்வாசம் என்ற பெயரால் யேசுவை ந்யாயப்படுத்துகிறார்கள் என்பது அல்ல. இது போன்று தர்க்கத்திற்கும் வரலாறு அறிவியல் இவற்றின் படி ஒவ்வாத நிகழ்வுகளை விஸ்வாசம் மூலம் மட்டும் தான் ந்யாயப்படுத்த முடியும். ஆனா, என்னிடம் பேசிய சில க்றைஸ்தவ அன்பர்கள் உங்கள் ராமன் க்ருஷ்ணன் போன்று எங்கள் யேசு கற்பனைப் புராண கதாபாத்ரமன்று. அவர் ரத்தம் சதையோடு இப்புவியில் வாழ்ந்தது வரலாறு அவர் நிகழ்த்திய அர்ப்புதங்கள் வரலாறு என்றெல்லாம் சாதித்தனர். பிறிதொரு முறை மதமாற்ற எண்ணங்களொடு என்னை தொந்தரவு செய்ய விழையும் க்றைஸ்தவ அன்பர்கள் யேசு கற்பனை கதாபாத்ரமன்று மாறாக இப்புவியில் வாழ்ந்தவர் வரலாற்றில் பதியப்பட்டவர் என சாதித்தால் அதை ஆதார பூர்வமாக எதிர்கொள்ள இது போன்ற வ்யாசம் கை கொடுக்கும். ஆணித்தரமான தரவுகளுடன் பிறிதொரு பாஷையில் எழுதப்பட்ட ஒரு வ்யாசத்தின் தெளிவான தமிழாக்கம் இது.

    தேவையில்லை என்று சொன்ன பின்பும் கேழ்க்காது பலவந்தமாக பைபள் ப்ரசங்க ப்ரசுரங்களை கொடுத்து தொந்தரவு செய்யும் க்றைஸ்தவ மதமாற்ற ஊழியர்களை எப்படி ஆரம்பத்திலேயே வெட்டி விடுவது என திகைக்கும் ஹிந்து சஹோதரர்களுக்கு இந்த வ்யாசம் ஒரு வரப்ரசாதம் என்றால் மிகையாகாது.

    மீண்டும் ஸ்ரீ சுந்தர வடிவேலு அவர்களுக்கு மிக்க நன்றி

    1. Avatar
      K A V Y A says:

      1909ல் வந்த கட்டுரைக்கு பல எதிர்க்கருத்துகள் கிருத்தவர்களாலேயே போடப்பட்டுவிட்டதால், மத மாற்றம் செய்ய வருவோர் அப்பதிலகளுடந்தான் வருவர். மதத்தர்க்கவாதத்தில் எவருக்குப் பேச்சுத்திறன் உண்டோ அவரே மற்றவரைத் தன்பக்கம் இலகுவாக இழுக்க முடியும். எனவே தர்க்கவாதம் புரிய மாற்றுக்கருத்துகளும் தெரிந்திருக்க வேண்டும். எனவேதான் திரு ரங்கராஜன் சுந்தரவடிவேலை அவைகளையும் தமிழ்படுத்தி இங்கு போடச் சொன்னேன்.

      இக்கட்டுரையைத் தலைகீழாக மனனம் செய்து கொண்டு அத்தர்க்க வாதிகளிடம் போனாலும் வெற்றி என்பது நிச்சயம் இல்லை நுமக்குப் பேச்சுத்திறனில்லாவிடில்.

      தன் மதத்தைத் தான் முழுமையாக நம்பி அதில் ஆழ்ந்து வாழ்வோர் எந்த மதமாற்றிகளுடனும் தர்க்கம் புரியத் தேவையில்லை. அவர்களை ஆரும் அசைக்க முடியாதன்றோ!

      என்னிடமும் பல மதமாற்றிகள் வந்திருக்கிறார்கள். வருகிறார்கள். அவர்கள் சிறிது நேரத்தில் என்னைப்புரிந்து கொண்டு போய்விடுவர். நாணல் புயலைக்கண்டு அஞ்சுவதில்லை.

      தன் மதத்தை அரைகுறையாக நம்பி வாழ்வோருக்கே இக்கட்டுரை ஓரளவு உதவலாம். அப்படிப்பட்ட அரைகுறைகளைத்தானே மதமாற்றிகள் தேடிக்கொண்டலைகிறார்கள். இல்லையா?

      Earlier response was not allowed by administrator. Hopefully this one will appear.

  12. Avatar
    புனைப்பெயரில் says:

    இந்து மதக் கடவுள்களைத் தவிர all those imported Gods are true. சந்தோஷமா…?

    1. Avatar
      K A V Y A says:

      God cant be measured as true or false. Here, we r talking abt Jesus as a historical figure, who cant be compared to Hindu Gods who are in the realm of imagination as God Himself is an imagination.

      You imagine therefore you are. You think therefore you are. If you lose that faculty, there is no God for you.
      To know all about God u need a mental faculty in fine fettle.

      It therefore concludes that beyond your capacity, too, God exists. He is neither true nor false as He is beyond your capacity to know. He is/was/will be/, and that means, He is beyond the limits of tenses: timelessness. The religion talks about that God only. Hopefully.

      Whether Jesus really existed is the qn here. As Haran tersely put it, you don’t believe him to be true; but want to believe Shri Ram to have been truly lived and when ? 75 lakh years ago in Thredayuga !

      Thangamani is the right person to respond. Hopefully.

    2. Avatar
      paandiyan says:

      imported Gods bring more currency boss!!! for that purpose only those people should raise voice loudly other wise who will give free money — “Koovaama irundha”. paavam people try to switch the issue something else as usual but noting happening so far.. let them try very hard.. though this is old artilce what is wrong here to analysis again

  13. Avatar
    Dr.G.Johnson says:

    ஏசு சரித்திரப் பூர்வமாக வாழ்ந்த மனிதர் அல்ல, அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரமே என நடைபெறும் இந்த சர்ச்சையில் ஒருசில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். அவரின் பிறப்பு பற்றி பைபிளில் மட்டும் எழுதப்படவில்லை. . புனித கூரானிலும் e எழுதப் பட்டுள்ளது. இன்று உலகின் மதங்களில் இந்த இரண்டிலும்தான் அதிகமானோர் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த சர்ச்சைப்படி பார்த்தால் இவர்கள் அனைவருமே இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி ஏற்றுக்கொண்டவர்களா?
    மதம் மாறுபவர் பற்றி நிறைய பேசப்படுகிறது. நாம் தொன்றுதொட்டு பல்வேறு மூட நம்பிக்கையில் வாழ்ந்த முன்னோர் வழிவந்தவர்கள். கடவுள் பற்றிய நம்பிக்கையில் உறுதியற்றவர் வேறு புது கடவுள் தேடுவர்.
    இறுதியாக இந்த கடவுள்கள் அனைத்துமே மனிதனின் படைப்பே என ஒரு காலம் வந்தால் நம் பிற்கால சந்ததியினர் நம்மையும் அவ்வாறே கற்பனைக் கடவுள்களை வழிபட்ட மூடர்களாகவே எண்ணுவர் என்பது திண்ணம்!

    1. Avatar
      A. Dharmaraj says:

      Yes, all gods were/are really created by great/intelligent man/woman.The best among the people were/are celebrated in all fields.To honour these good people,the public called them in the name of their great invention [GOD].No ones generation will belong to a same religion.No Religion can exist with out political support.Hence change of religious faith to a man/woman will give additional knowledge to him/her.

  14. Avatar
    ராமசாமி says:

    திண்ணை பின்னூட்டங்களில் பல தர்க்க பிழைகளை ( fallacy) காண முடிகிறது. அதை சுட்டிக்காட்டுவது திண்ணையின் பின்னூட்டங்களுக்கு என்னாலான பங்களிப்பு என கருதுகிறேன் . இவ்வாறு சுட்டிக்காட்டுவதால் தங்கள் கருத்துக்கு எதிரானவன் என்று எண்ணாமல், மாற்றுக்கருத்து அளிப்பது நலம்.

    உதாரணமாக, உலகில் அதிகமானோர் நம்பிக்கை வைத்துள்ளதால் அது உண்மை என்று கூறுவது போல் அமைவது : “Argumentum ad populum”
    இது போல் பல ‘Red herring’ ‘பிழை’களை பல விவாதங்களில் காணலாம்.
    (fallacy என்பதன் சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. பிழை என்பது தவறு, ஏனெனில் பல fallacy கள் தர்க்க வெற்றிக்காக அறிந்தே செய்யப்படுவதை காணலாம்)

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் காவ்யா,

    தர்க்கப்பிழைகள் (fallacy) பற்றி ஸ்ரீமான் ராமசாமி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

    தாங்கள் அதற்கு ஆங்க்ல பாஷையில் கருத்துப்பதிந்து த்ருஷ்டாந்தங்களுடன் விளக்குமாறு கேட்டிருந்தீர்கள்.

    சரியான முடிபுகளை அடைய தர்க்கத்தை உபயோகப்படுத்துகிறோம். பின்னிட்டும் சில சமயம் தவறான முடிபுகள் எடுக்க நேரிடுகிறது. அப்படியானால் தர்க்கிப்பதில் (in putting forth arguments) பிழை உள்ளது.

    நம் பாரதீய ந்யாய சாஸ்த்ர முறையில் மூன்று வாக்யங்களை எடுத்துக்கொண்டு கோட்பாடுகளை விசாரம் செய்யும் முறை அல்லது ஐந்து வாக்யங்களை எடுத்துக்கொண்டு கோட்பாடுகளை விசாரம் செய்யும் முறை உள்ளது. three membered syllogism and five membered syllogism என்று சொல்லலாம். மூன்று வாக்ய முறையில் வாக்யங்களை முறையே த்ருஷ்டாந்தம், ஹேது, பக்ஷம் அமைத்து கோட்பாடுகளை விசாரிக்கிறார்கள். இது போல western logic ல் method of deduction படி முறையே Major premise, minor premise and conclusion என்ற படிக்கு கோட்பாடுகள் விசாரிக்கப்படுகின்றன. ஐந்து வாக்ய முறையில் முறையே ப்ரதிக்ஞா, ஹேது, த்ருஷ்டாந்தம், உப்நய, நிகமன என்று ஐந்து வாக்யங்கள் அமைத்து இவை விசாரிக்கப்படும். பூர்வ மீமாம்சகர்கள், அத்வைதிகள், மற்றும் பௌத்தர்கள் இம்முறையின் படி தங்கள் கோட்பாடுகளை நிறுவினர்.

    நாம் விசாரிக்க இருப்பது மூன்று வாக்ய முறைப்படியான அமைப்பு.

    பௌத்தர்கள் கையாளும் ஒரு த்ருஷ்டாந்தம் பார்ப்போம்.

    த்ருஷ்டாந்தம் (Major premise) உருவாக்கப்படுவதெல்லாம் அநித்யமானவை

    ஹேது (Minor Premise) ஒலி என்பது உருவாக்கப்படுகிறது

    பக்ஷம் (conclusion) ஆகவே ஒலி என்பது அநித்யமானது

    சற்று கடினமானதாக இருக்கலாம். லகுவாக ஒரு த்ருஷ்டாந்தம் பார்ப்போம்.

    புகையிருக்குமிடத்தில் நெருப்பிருக்கும்

    மலைமுகட்டில் புகை தெரிகிறது

    ஆகவே அங்கு நெருப்பிருக்கும்

    இது தர்க்க முறை. தர்க்கப்பிழைக்கான த்ருஷ்டாந்தம் தெளிவைக் கொடுக்கும். ஸ்ரீமான் காவ்யா அவர்கள் தவறாக எண்ண வேண்டாம் அவருடைய உத்தரத்திலிருந்து தர்க்கப்பிழைக்கான த்ருஷ்டாந்தம் எடுக்கப்படுகிறது. தர்க்கிக்கும் முறைகளில் எப்படி தவறு எற்படவியலும் என்பதற்காகத் தான் இந்த த்ருஷ்டாந்தம்.

    ஸ்ரீமான் காவ்யா அவர்களின் 4ம் திகதிய கருத்து,

    “அரைகுறைகளைத்தானே மதமாற்றிகள் தேடிக்கொண்டலைகிறார்கள். இல்லையா?”

    த்ருஷ்டாந்தம் (Major Premise) – மதமாற்றிகள் தேடிக்கொண்டலைபவர்கள் அரைகுறைகள் (மந்த விஸ்வாசி?)

    ஹேது (Minor Premise) – ஸ்ரீ சாமி அவர்களை மதமாற்றிகள் அணுகியுள்ளார்கள்

    பக்ஷம் (conclusion) – ஸ்ரீ சாமி அவர்கள் அரைகுறை (மந்த விஸ்வாசி?)

    ஸ்ரீமான் காவ்யா அவர்களின் இன்னொரு கருத்து,

    “என்னிடமும் பல மதமாற்றிகள் வந்திருக்கிறார்கள். வருகிறார்கள்.”

    இங்கு மேற்கண்ட த்ருஷ்டாந்தத்தின் படி எடுக்கப்பட வேண்டிய முடிபு – பக்ஷம் – conclusion,

    ஸ்ரீமான் காவ்யா அவர்கள் அரைகுறை (மந்த விஸ்வாசி?)

    ஸ்ரீமான் காவ்யா அவர்கள் தன்னை த்ருட விஸ்வாசி என கருத்துப்பதிந்துள்ளார். ஆக அவருடைய தீர்மானமான விஷயமான

    “அரைகுறைகளைத்தானே மதமாற்றிகள் தேடிக்கொண்டலைகிறார்கள்”

    என்பது தவறான Argument / Hypothesis (தமிழில் என்ன என்று தெரியவில்லை – மன்னிக்கவும்)

    Western Logic ல் Major premise and Minor Premise இவையிரண்டிலும் தோஷமில்லாத பக்ஷத்தில் conclusion தவறு என்றால் அதை Invalid Argument என்று சொல்வர்.

    இது Logic படி தர்க்கப்பிழைகளை விளக்குவது.

    தீர்மானம் அல்லது Argument இதற்கான Hypothesis நாம் முன்வைப்பதில் bias / prejudice இருந்தால் அது தவறான ஒரு Argument வைப்பதற்கு ஹேதுவாகும். அல்லது இதற்கு நேர் மாறாக Method of Induction என்ற் உண்டு western logic ல். அதன் படி முதலில் தனித்தனியான individual cases ல் தீர்மானத்தை சரி பார்த்து அதன் மூலம் ஒரு முடிபு எட்டுவது. அதன்படி கூட நாம் எடுத்துக்கொண்ட த்ருஷ்டாந்தத்தில் பிழைகளை விளக்க இயலும். ஆனால் விளக்கம் நீளும்.

    ஸ்ரீமான் காவ்யா அவர்கள் ஸ்ரீமான் ராமசாமியை த்ருஷ்டாந்தங்கள் அளிக்கக் கேட்டுக்கொண்டார். ஆயினும் நான் வாசித்தறிந்த படிக்கு விளக்கம் கொடுத்துள்ளேன். Logic படி விளக்கங்களில் தவறு சுட்டப்படுமானால் மகிழ்ச்சியே.

    Secret generosity, cheerful hospitality to strangers, not speaking in public about one’s own good deeds, proclaiming the benefits received from others, freedom from pride in prosperity and due respect in speaking of otheers – this is the vow of exceeding difficulty taught by the good.

    verse – 64 – NIti Satakam – Barthruhari

  16. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    Dear Sriman Ramaswamy,

    I took up Method of Deduction ( an easy way to explain logical reasoning in western logic) with bharatheeya nyaya shasthra. I had to take sanskrit words since I could not match up exact tamizh words for drushtantha, hetu, paksha or for that matter Major premise, Minor premise and conclusion. I found it somehow difficult to make an exact match. May please feel free to go through the example and improve upon the explanation. Especially, if you could explain with pure tamizh words. Admin may please pardon me to type out this in English. Regards.

    1. Avatar
      K A V Y A says:

      நான் இன்று அனுப்பிய ஒரு பின்னூட்டம் போடப்படவில்லை. அதன் விளைவு ஒரு தவறான எண்ணத்தை கிருஸ்ணகுமாரிடம் ஏற்படுத்திவிட்டது. என் பின்னூட்டம் ராமசாமிக்கும், பொதுவாகவும் போடப்பட்டது. மீண்டும் எழுதுகிறேன். திண்ணையாசிரியர் போட்டு குழப்பத்தைத் தீர்ப்பாரென்று நம்புகிறேன். அத‌ற்குமுன்:

      இங்கு போடப்பட்ட அனைவரின் பின்னூட்டங்களைப் படியுங்கள். எவராவது மங்காசாரன் கருத்துக்களை வாதிட்டார்களா? இல்லை. மாறாக மொழிபெயர்ப்பின் நோக்கம், கட்டுரையின் நோக்கு, விளைவு இவைபற்றித்தான் பேசியிருக்கிறார்கள். கிருத்துவரை வெறுப்பவரும் இக்கட்டுரையின் விளைவைத்தான் – கிருத்துவர்கள் தங்கள் மதத்தை விட்டு இக்கட்டுரையப்படித்து விலகிவிட்டார்கள் ! – என்றுதான் சொன்னார். இயேசு, முகமது நபிகள் கற்பனை; இராமர் மட்டுமெ உணமை என்று சுமிதா என்பவர் எழுதுகிறார். ஆக, இங்கு தர்க்கமே நடக்கவில்லை. அப்படியிருக்க ராமசாமி எப்படி தர்க்கங்களின் பிழைகளைக்கண்டுபிடித்தார்? எனவே அவையெவை என்று நான் கேட்டேன். பதிலாக கிருஷ்ண குமார் நான் தர்க்கமில்லா ஒரு பொதுக்கருத்தை இக்கட்டுரைக்குத் தொடர்பில்லா ஒன்றைச்சொல்ல, அதைத்தர்க்கமாக எடுத்து ஆபரேசன் செய்துவிட்டார்.

      நான் போட்ட பின்னூட்டம் திண்ணையாசிரியால் போடப்படவில்லையென்றேன். அது வருமாறு:

    2. Avatar
      K A V Y A says:

      வாழ்க்கையில் நாம் காணும் உண்மைகளை இங்கு எடுத்தியம்புதல் வாதமோ தர்க்கமோ ஆகா. அதன்படி நான் சொன்னது இது:

      மதமாற்றிகள் எவர் அவரின் மதத்தில் அவநம்பிக்கை கொண்டேரெனத் தேடுவர்; அல்லது எவர் அனைத்தையும் இழந்து வாழ்க்கையில் அவநம்பிக்கை கொண்டுள்ளார் என்பதை அறிகிறார்கள். அவர்களே மதமாற்றிகளின் இலக்கு. அவர்களிடம் போய் மதப்பிரச்சாரம் செய்வர். இதை நான் கண்டதுண்டு. பள்ளத்தை நோக்கி நீர்பாயும் என்பதுதானே உண்மை. இதைச்சொன்னால் தர்க்கமா ?

      எம்மதத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ அதில் ஆழமாக ஊன்றி நில்லுங்கள். நம்பிக்கையென்பது முழுமையாக இருக்கட்டும். இல்லாவிட்டால் அம்மதத்தைவிட்டு விலகிவிடுங்கள். விலாகாமல் அரைமனதாக ஒரு அவசியமாக இருந்தால் மதமாற்றிகளுக்கு இரையாவீர் என்பதுதான் என் வாக்கியாமான: அரைகுறைகளைதேடி அலைவார்கள் என்பதன் பொருள்.

  17. Avatar
    K A V Y A says:

    கட்டுரை இயேசு கற்பனை என்று வாதிக்கிறது. 1909 ல் வெளிவந்தது. இக்கட்டுரையாசிரியர் ஒரு கிருத்துவ பாதிரியாகவிருந்து நாத்திகரானார். வேற்றுமதத்துக்குத் தாவவில்லை. எனவே அவருக்கு கிருத்துவ மதத்தில் மட்டும் வெறுப்பு என்று சொல்லமுடியாது. நாத்திகன் அனைத்து மதங்களையும் போலியென்பவனே. இல்லையா? அவர் விலகியது ஒரு தர்க்கபூர்வமாக மட்டுமே. அவருக்கு உள்ளோக்கம் எதுவுமேயில்லை. அவர் ஒரு சுதந்திர சிந்தனையாளர். அவரின் சிந்தனை அவரை எங்கு இட்டுச்சென்றதோ அங்கு அவர் சென்றார்.

    இக்கட்டுரை மொழிபெயர்த்தவரின் நோக்கம் மாசுபடாமிலிருக்க இக்கட்டுரையின் முடிவில் –

    மங்காசாரனின்
    கருத்துக்களுக்கு எதிர்வாத கருத்துக்கள் பலரால் உடனேயே வைக்கப்பட்டன. தன்னால் அவற்றையெல்லாம் தமிழாக்கம் செய்ய அவகாசமில்லை. எனவே திண்ணை வாசகர்கள் தாங்களாகவே அவற்றைத்தேடிபிடித்து வாசித்து சிந்தித்து இயேசு கற்பனையா என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். மாறாக, அவர் வெறும் தமிழாக்கத்தை மட்டும் போடுவதன் நோக்கம் சந்தேகத்துக்குரியது.

    அப்படியே அவர் போட்டாலும் மங்காசாரனின் கருத்துக்களுக்கு எதிர்வாதக்கருத்துகளை இங்கேயே வைப்பதற்கு கிருத்துவரில்லை. ஜான்சன் வாதம் செய்யவில்லை. அவரும் பொதுக்கருத்தை, கிருத்துவர் என்ற முறையில்தான் வைக்கிறார்.

    அதே வேளையில், இசுலாத்தைப்பற்றியும் மொழிபெயர்ப்புக்கட்டுரைகள், இசுலாம் வெறுப்பாளர்களால் அவ்வப்போது போடப்படுகின்றன. ஆனால், அங்கு இசுலாமியரான சுவனப்பிரியன் என்பார் வாதங்கள் வைக்கிறார். தீர்க்கமான பதில்களை வைக்கிறார்.

    Principles of natural justice demands that when there is other side to a controversial issue like this , it should be either shown to the readers in detail, or at least, they be informed that such a side does exist. They get thus alerted so as not to form their opinion based only on what appears here. It is the minimum courtesy that a writer owes to the readers of Thinnai.

    No arguement on the points raised by Mangasaran is taking place here; and therefore, no need to take classes on Logic. Sorry to remind that !

  18. Avatar
    vedamgopal says:

    கடவுள்பாதி மிருகம்பாதி கலந்து செய்த கலவை நாங்கள் (பாலைவன மதம்)
    உள்ளே மிருகம் வெளியே கடவுள் அதுதான் (ஏசுவின் போதைனையோ)?
    உள்ளே கடவுள் வெளியே மிருகம் அதுதான் (அல்லாவின் போதனையோ)?
    மிருகம் கொன்று வயிறு வளர்த்து மனிதனை கொன்று கடவுள் வளர்த்து
    மனித உணர்வு மறந்து மனித நேயம் அழிக்கின்றாய்
    மதத்தைகொண்டு மிருகம் கொன்று மனிதனாக வாழ்திடுடா
    மிருக ஜாதியில் பிறந்த மனிதா மிருக உணர்வை மறப்பாயா
    குரங்கிலிருந்து மனிதன் என்றால் மனிதனை தெய்வம் செய்வாயா
    மதத்தைகொன்று மனிதனாகி தேவ ஜோதியில் கலப்பாயா

  19. Avatar
    smitha says:

    நாத்திகன் அனைத்து மதங்களையும் போலியென்பவனே.

    Kavya,

    How we wish this is true in your case?

  20. Avatar
    Dr.G.Johnson says:

    ஏசு ஒரு கற்பனையா என்று எழுதியவர் ஒரு கிறிஸ்துவ பாதிரியாக இருந்து நாத்திகர் ஆனவர்.தந்தை பெரியார்கூட ஒரு இந்துவாக இருந்து நாதிகவாதியானவர்.இந்த இருவருமே தங்களின் மதம் தொர்டபுடைய நூல்களை நன்கு கற்றபின்பே அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கடவுள் இல்லை என்று வாதிட்டனர்.நம்மைபோன்ற சாதாரண மனிதர்கள் அவர்களைப்போன்று வேதங்களை ஆழ்ந்து கற்றால் ஒழிய இதுபோன்ற சர்ச்சைகளில் சரிவர வாதிட முடியாது. ஆகவே இந்த கட்டுரைக்கு வேத வல்லுணர்கள் எவ்வாறு பதில் தந்தனர் என்பதையும் இங்கு தந்தால்தான் பலருக்கும் பயன் தரும். அதற்கு மாறாக இது பற்றி வாதிடுவது வெட்டி வேலையாகும். அதோடு இது கடவுள் பற்றியது. கடவுள் எனும் புரியாத புதிரான மாபெரும் சக்திபற்றி வாதிட நான் தகுதியற்றவன். இந்நாள்வரை கடவுளை யாரும் கண்டதும் இல்லை இனியும் காணப்போவதும் இல்லை. இதுவே உண்மை! ..டாக்டர் . ஜி. ஜான்சன்.

  21. Avatar
    புனைப்பெயரில் says:

    இனியும் காணப்போவதும் இல்லை —> if thats the case, u know the secret and u r the GOD…

  22. Avatar
    புனைப்பெயரில் says:

    புனித கூரானிலும் e எழுதப் பட்டுள்ளது.— Dr.J i dont know whether u know this or not, most of the Arab muslims say that the one christians show as Jesus is a theif… came out of the cave .

  23. Avatar
    ராமசாமி says:

    >> ஆக, இங்கு தர்க்கமே நடக்கவில்லை. அப்படியிருக்க ராமசாமி எப்படி தர்க்கங்களின் பிழைகளைக்கண்டுபிடித்தார்?
    இது நான் ‘logical fallacy’ என்பதற்கு ‘தர்க்கப்பிழை’ எனற சொல்லை உபயோகித்ததின் விளைவு என்று எண்ணுகிறேன்.
    if there, logical fallacies can be identified in any statement and not just in arguments.

    நீங்கள் கூறியது போல், பின்னூட்டங்களில் பல கட்டுரையின் சாரத்தை விட்டு விலகியே உள்ளன. ஆகவே அவை அனைத்தையும் ‘red herring’ என அழைக்கலாம் அல்லவா?

    1. Avatar
      K A V Y A says:

      I am not a specialist, i.e. I dont know the subject of Logic. I am a generalist. நானறிந்தவரை ரெட் ஹெரிங்க் என்பது கவனைத்தைத் திசை திருப்பும் ஒரு உபாயமாகக் காட்டப்படுமொன்று. காட்டுவோரின் உள்ளோக்கம் கட்டுரை அல்லது செயலின் மையக்கருத்தை/மைய நோக்கத்தை அறியவிடாமல் மறைமுகமாகத் தடுப்பது. இஃது குற்ற விசாரணைகளில் காணப்படும் அடிக்கடி. குற்றம் செய்தவன் வேண்டுமென்றே சில தடயங்களை விட்டுச்சென்று போலீசை வேறுதிசையில் திருப்பச் செய்வான். அவை ரெட் ஹெரிங்க்ஸ் எனவழைக்கப்படும் போலீசுக்குத்தெரிந்தால். இல்லாவிட்டால் குற்றவாளிக்குத்தான் வெற்றி.

      இங்கே போடப்பட்ட கட்டுரை இயேசு கற்பனையா என்பது பற்றி. ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை. உள்ளோக்கமில்லாதிருந்தால் அவர் இக்கட்டுரையின் வாதத்துக்கு எதிர்வாதத்தையும் அவராகவே வைக்கவேண்டும்; அல்லது விக்கிபீடியாவைப்போல, உள்ளது எனவாவது கூறியிருக்கவேண்டும். இப்படியாக‌ வாசிப்பவர்களை இக்கட்டுரையைப் படித்து மட்டும் தாமே தீர்மானிக்கக்கூடாதென்று முடிவெடுக்க அவர் உதவவேண்டும் என்று நான் சொன்னேன்.

      இப்படி நான் சொன்னது ரெட் ஹெரிங்க் என்று எப்படி எடுக்கமுடியும் திரு இராமசாமி? கட்டுரையை வாசிக்காதீர்; எதிர் வாதத்தை மட்டுமே தேடிப்பிடித்து வாசியுங்கள் என்று நான் சொல்லியிருந்தால், நானும் மொழிபெயர்ப்பாளர் செய்த தவறையே அல்லது உள்ளோக்கத்துடனே எழுதுகிறேன் என்று சொல்லலாம்.

      Pray, where is the red herring in my comments ? By alerting the readers that they should not content with the essay in order to conclude ? In fact, the translator has inserted a red herring by creating the impression that the arguments of managasaaran were accepted in toto !

      All of us must bear in mind the fact that today internet world is abused by a variety of political, religious, racist and casteist mongers, to spread hatred against other religion/caste/community/party. That is why, we must voice our concern whenever such an attempt is being made.

      தீவிர இந்துக்கள் செய்ய மாட்டார்)கிருத்துவ மதத்தை/இசுலாமைப் பழித்தும். தீவிர கிருத்துவர்கள் இந்துமதம்/இசுலாமைப்பழித்தும், தீவிர இசுலாமியர், கிருத்துவம்/இந்துமதத்தைப் பழித்தும் திண்ணையில் கட்டுரைப்போட்டுக்கொண்டிருந்தார்களானால் எப்படியிருக்கும்?

      1. Avatar
        ராமசாமி says:

        > இப்படி நான் சொன்னது ரெட் ஹெரிங்க் என்று எப்படி எடுக்கமுடியும் திரு இராமசாமி?
        ஐ(யோ)யா கவிதா , எப்பொழுது நீங்கள் சொன்னதை redherring என்றேன் ?

        “நீங்கள் கூறியது போல்**, பின்னூட்டங்களில் பல கட்டுரையின் சாரத்தை விட்டு விலகியே உள்ளன”
        என்றுதானே கூறினேன்!

        red herring பற்றி எளிமையான விளக்கம் இன்டர்நெட்லிருந்து :

        1. Topic A is under discussion.
        2. Topic B is introduced under the guise of being relevant to topic A, even though topic B has no relevance to topic A.
        3. Topic A ends up being abandoned.

        **”இங்கு போடப்பட்ட அனைவரின் பின்னூட்டங்களைப் படியுங்கள். எவராவது மங்காசாரன் கருத்துக்களை வாதிட்டார்களா? இல்லை. மாறாக மொழிபெயர்ப்பின் நோக்கம், கட்டுரையின் நோக்கு, விளைவு இவைபற்றித்தான் பேசியிருக்கிறார்கள். கிருத்துவரை வெறுப்பவரும் இக்கட்டுரையின் விளைவைத்தான் – கிருத்துவர்கள் தங்கள் மதத்தை விட்டு இக்கட்டுரையப்படித்து விலகிவிட்டார்கள் ! – என்றுதான் சொன்னார். இயேசு, முகமது நபிகள் கற்பனை; இராமர் மட்டுமெ உணமை என்று சுமிதா என்பவர் எழுதுகிறார். “

        1. Avatar
          K A V Y A says:

          //Topic A is under discussion.
          2. Topic B is introduced under the guise of being relevant to topic A, even though topic B has no relevance to topic A.
          3. Topic A ends up being abandoned.//
          நான் எழுதியதை நீங்கள் இன்டர்னெட்டிலிருந்து போட்டிருக்கிறீர்கள். நான் ஒரு உதாரணமும் சொல்லி விளக்கினேன்.

          இங்கே ரெட் ஹிரிங்க் எனபதற்கு நான் எழுதியதையே காட்டுவதிலிருந்து அதைத்தான் ரெட் ஹெரிங்க் என்கிறீர்கள் என நினைக்கிறேன்.

          முதலில் நாமறிய வேண்டுவது: திண்ணை வாசகர்கள் பாப்பாக்களல்ல. சீக்கிரம் ரெட் ஹெரிங்கைப்போட்டு கவனத்தைத் திருப்ப. அவர்கள் தாராளாமாக இக்கட்டுரையைப் படிக்கலாம். அவர்களின் சிந்தனையை தன் வசப்படுத்த ஆசிரியர் கையாணட தந்திரம் பற்றியே யான் கதைத்தது.

          அதை ஒரு குறையாக நான் சொன்னேன். அதற்குப் பதிலை அவர் இரண்டாம் பாகத்தில் போட்டு அக்குறையை நிவிர்த்தி பண்ணுகிறேன் என எழுதியிருக்கிறார். படித்துப்பார்க்கலாம்.

          என்னைப்பொறுத்தவரை இயேசு கற்பனையா உண்மையா என்ற விவாதத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. இப்படிப்பட்ட மதச்சண்டைகள் எனக்குப் பிடிக்கா. அவைகளைப்படித்து விவாதிக்க பலர் இருக்கிறார்கள். நானும் சில கருத்துக்கள் சொன்னேன் அவை எம்மதத்துக்கும் பொருந்தும். அது ஜியார்ஜ் பெர்க்கிலியின் தத்தவத்தை அடிப்படையாகக் கொண்டது. My views are general, not Xian specific. I dont bother whether Jesus was a fiction; or a real person. All that I am morally concerned with his teachings; and explore their relvance to our current world. No religious hatred for or against Jesus.

          The bell has rung; the curtain rolled up; the scene opens; players enter. Devapriya Solomon has begun his dialogue. Hear! Hear !!

          Let us enjoy watching. Join me if you please Sir.

  24. Avatar
    ராஜ்குமார் says:

    //இந்நாள்வரை கடவுளை யாரும் கண்டதும் இல்லை இனியும் காணப்போவதும் இல்லை.//
    இது கிறிஸ்துவ நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறதே.

    கிறிஸ்து இறந்த பின்னால் அவர் பலருக்கு காட்சியளித்ததாக புதிய ஏற்பாடு கதைகள் கூறுகின்றன
    Matthew chapter 28
    Mark chapter 16
    Luke chapter 24
    John Chapter 20 and 21

    1 கொரிந்தியர் 15 அதிகாரம்
    3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
    For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures;
    4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
    And that he was buried, and that he rose again the third day according to the scriptures:
    5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
    And that he was seen of Cephas, then of the twelve:
    6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
    After that, he was seen of above five hundred brethren at once; of whom the greater part remain unto this present, but some are fallen asleep.
    7. பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
    After that, he was seen of James; then of all the apostles.

    இருநூறுக்கும் மேலே பலருக்கு காட்சி அளித்துவிட்டு, அதற்கு பிறகு 2000 வருஷமாக காட்சியளிக்க மாட்டேனென்கிறார்.

    ஆனால் யோவான் 14ஆம் அதிகாரத்தில்
    13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
    And whatsoever ye shall ask in my name, that will I do, that the Father may be glorified in the Son.
    14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
    If ye shall ask any thing in my name, I will do it.

    என்று இயேசு சொல்கிறார்.

    இப்போது கிறிஸ்துவர்கள் யாரேனும் தொலைக்காட்சியில் பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருக்கும்போது மனமுருகி எல்லோருக்கும் காட்சியளிக்கும்படி கேட்டால் இயேசு தொலைக்காட்சியில் காட்சி தருவார்தானே?

    அப்படி காட்சி தந்தால், அந்த பைபிள் உண்மை. இல்லையென்றால் கதை

  25. Avatar
    Dr.G.Johnson says:

    கடவுள்கள் என்பவர்கள் தோன்றியதெல்லாம் அந்தகாலம்.அப்போது மக்கள் கல்வியறிவு இல்லாமல் காடுமிராண்டிகளாக வாழ்ந்தார்கள். கடவுள் பற்றிய கட்டுக் கதைகள் அந்த காடுமிராண்டிகளுக்கு தேவைப்பட்டது. அதனால்தான் அதன்பின் புதிதாக கடவுள்கள் யாரும் இந்த இருபது நூற்றாண்டுகளில் தோன்றவில்லை. காரணம் நாம் பகுத்தறிவிலும், கல்வியிலும், அறிவியலிலும், அந்த கடவுள்களைவிட எவ்வளவோ முன்னேறியுள்ளோம். அதனால்தான் இனி அந்த கடவுள்களுக்கு இங்கு வேலை இல்லை. இதைத்தான் புதுமைப்பித்தன்கூட கடவுளும் கந்தசாமி பிள்ளையும் எனும் சிறுகதையில் எழுதுயுள்ளார்.
    காட்டுமிராண்டிகளுக்குதான் கடவுள் தேவை என்பதால்தான் பெரியார்கூட கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று கூறினார். இந்த வரிகள் தமிழகத்தில் காணப்படும் பெரியார் சிலைகளின்கீழ் பகிரங்கமாகவே காணலாம். இந்த பகுத்தறிவு வளர்ந்துவருவதால்தான் இன்றைய உலகில் கடவுள் பக்தி படிப்படியாக குறைந்து வருகிறது. அதோடு நித்தியானந்தா போன்ற போலி சாமியார் கூட்டமும் பெருகி வருகிறது. இந்த சாமியார்களுக்கு தெரியும் கடவுள் இல்லை என்பது. அதனால் கடவுள் பெயரை வைத்து எளிதில் மக்களை ஏமாற்றிவிடலாம் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பகுத்தறிவு வளர்ச்சி காரணமாகவே, இன்றைய இளைய சந்ததியினர்கூட இணையத் தளத்தில் காட்டும் ஆர்வத்தை ஆலயங்கள் செல்வதில் காட்டுவதில்லை. இதே காரணத்தால்தான் நாமும் ஒருவர் வழிபடும் கடவுளை அடுத்தவர் போலி என்று கூறி தொடர்ந்து வாதித்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். …அப்படியே நாம் வழிபடும் கடவுள்கள் அனைவரும் வானவெளியில் எங்காவது இருக்க நேர்ந்தாலும் ( இதற்கு ஒரு சத விகித வாய்ப்பும் இல்லைதான் ) இன்றைய உலகில் மீண்டும் அவதாரம் எடுக்க விரும்ப மாட்டார்கள். இன்றைய மனிதனைக் கண்டால் கடவுள்களும் பயந்துபோவார்கள்!…. டாக்டர் .ஜி. ஜான்சன்.

  26. Avatar
    K A V Y A says:

    //இப்போது கிறிஸ்துவர்கள் யாரேனும் தொலைக்காட்சியில் பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருக்கும்போது மனமுருகி எல்லோருக்கும் காட்சியளிக்கும்படி கேட்டால் இயேசு தொலைக்காட்சியில் காட்சி தருவார்தானே?

    அப்படி காட்சி தந்தால், அந்த பைபிள் உண்மை. இல்லையென்றால் கதை
    //

    பிரமாதமான முடிவு ! I am bemused.

    கடவுள் என்பது ஒரு பொருள் அன்று. God is not a tangible object to touch and feel or see and feel, or get touched and feel (as air). God cannot therefore be proved true through empirical evidences. இருப்பினும் கடவுளைக்கண்டேன் என்று கிருத்துவர் மட்டுமில்லாமல் மற்றவரும் சொல்கிறார்; சொன்னார். இராஜ்குமாரின் படி அனைத்தும் கதை.

    இங்கு ஒன்று கவனித்தாக வேண்டும். ஒரு தத்துவஞானி சொன்னார்: பெர்க்லி என நினைக்கிறேன். பொருளைப்பார்க்காதவரை அப்பொருள் உண்மையன்று. அதாவது ஒரு மேஜை இருக்கிறது. அது மேஜை என்று உம் கண்கள் பார்த்து உம்மூளைக்குச் சொன்னாலொழிய அது மேஜையன்று உம்மைப்பொருத்தவரை. அதே போல கிருத்துவர்கள் சொல்கிறார் எனக்கு இயேசு காட்சி தந்தார். அவரைப்பொருத்தவரை உணமைதான். அதை எப்படி பொய் அல்லது கதை என்று இராஜ்குமார் சொல்கிறார் என்று தெரியவில்லை !

    ஆயிரம் பேர் சொன்னால் அஃது உண்மையாகத்தான் இருக்கும் என்பது லாஜிக்கில் கிடையாது என்று திரு இராமசாமி இங்கே எழுதியுள்ளதைப் படிக்கவும். அதையே திருப்பியும் போடலாம்: ஆயிரம் பேர் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் அது பொய்யாகாது. இது கண்ணால், அல்லது மெய்யுணர்ச்சிகளால் அறிய முடியாத கடவுள் விடயத்தில் பேருண்மை.

    இதுதான் கடவுள் நம்பிக்கை. கடவுளைக் கண்டேனென்று அவர்தான் சொன்னார். இராஜ்குமார் சொல்லவில்லை. எப்படி கதையென்கிறார்? எனவே இயேசு காட்சி தந்தார் டிவியிலன்று; அவரவர் மனத்தில். அவர்கள் மனதுகளில் புகுந்து இராஜ்குமாரால் பார்க்கவியலுமா?

    மீண்டும் சொல்கிறேன். சாதாரண விடயங்களில்தான் கதை, கற்பனையென முடிக்க முடியும். கடவுள் விடயத்தில் கற்பனையா, கதையா என்பதே கிடையா.

    ஒருவேளை இராஜ்குமார் சொன்னதை ஒத்துக்கொண்டு, கற்பனையே என்று முடிவெடுத்தால், முடிவெடுத்தால்….ஹி..ஹி…எல்லா மதங்கள் மட்டுமல்ல, எல்லா அப்ஸ்டராக்ட்ஸ் விடயங்களும் காலி ! வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை. கல், மண், என்று மட்டுமே இருக்கும். மனிதன் அம்போ !!

  27. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    முதலில் புனைந்த மாற்கு சுவிசேஷக் கதாசிரியர், இயேசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவானது என்றும் அது முழுமையும் கலிலேயாவில், ஏசு பாவ மன்னிப்பு -ஞானஸ்நானம் பெறுவதற்கும் மற்றும் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு கர்த்தருக்காக ஆடு கொலைபலிக்காக யூதேயா ஜெருசலேம் வந்தார் எனக் கதை. ஆனால் யோவான் சுவி கதையில் இயேசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடம் மேலும் ஒரு சில நாட்கள் எனக் காட்டுவார், மேலும் இயெசு மரணதண்டனைக்கும் முன் 8 மாதங்கள் யூதேயாவில் என்பார். 70 – 75ல் புனைந்த மாற்கு வேண்டுமென்றே மாற்றினார்!

    யோவான்6:35 இயேசு அவர்களிடம், ‘ வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
    35 இயேசு அவர்களிடம், ‘ வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.//
    இயேசு சொன்னதாக- மன்னாவை உண்டும் பூமியில் மரணமடைதது போல் இல்லாமல், இயேசுவை ஏற்றால் பூமியில் மனிதனுகு மரணம் இல்லை.
    பவுல் கூறும் கதை- பூமியில் மரணம் வரக் காரணம் ஆதாமிற்கு சாத்தான் கருணையோடு பகுத்தறிவு தர, கனி உண்டதால்- ஆதாமின் பாவம் இயேசுவின் மரணதண்டனையால் போனதாம்.

    அப்போஸ்தலர் முதல் அனைவரும் மரணமே- ஏன்?

    1. Avatar
      K A V Y A says:

      இயேசுவின் மரணத்திற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகளுக்குப்பின்னரே விவிலியம் எழுதப்பட்டதாக படித்திருக்கிறேன்.

      அதே வேளையில், புனித பவுல் – சிசிலி நாட்டிலிருந்து இயேசுவைக் கொல்ல ஏவிவிடப்பட்ட யூதர் – இயேசுவின் பாடுகளின் போது அப்பாடுகளை நேரடியாகப்பார்த்தோருள் ஒருவர் எனவும் படித்திருக்கிறேன். ஆனால் அவரொன்றும் பெரிய ஆள் அப்போது கிடையாது. மேலும் அவர் கொல்லத்தான் வந்தார். வரும் வழியில் தனக்கு இயேசுவப்பற்றி சொல்லப்பட்டது நான் மனம் மாறினேன் என்பதை டமாஸ்கஸில் ஒரு ஒளியைக்கண்டேன் என்று மெட்டாஃபாரிக்கலாகச் சொன்னாரென்றும் படித்திருக்கிறேன்.

      இயேசு ஒரு மதஸ்தாபகரன்று. அவர் வாழ்க்கை இப்படி:

      பிறந்தார்; வாழ்ந்தார்; பேசினார்; கொல்லப்பட்டார். (கிருத்துவ நம்பிக்கையின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்)

      கிருத்துவம் என்ற ஒரு மதம் புனித பவுலினால் உருவாக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, அவர் பாடுகள், அவர் குருதி – இவைகளுக்கு ஒரு புதிய உருவகத்தையும் பொருளையும் கொடுத்து அவற்றினடிப்படையில் அம்மதம் உருவாக்கப்பட்டது எனப் படிக்கிறேன்.

      யூதர்களிடையே அவர் அப்புதிய மதத்தைப் பரப்பாமல் சமூகத்தில் தாழ்ந்த நிலையுலுள்ளொர்களிடையே பரப்பினார் என்றும் படிக்கிறேன்.

      பின்னர் அம்மதம் பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அரசர்களாலுமில்லை. மாறாக, இப்புதியமதத்தைத் தழுவியோர் அரசர்களால் கொத்துகொத்தாகக் கொல்லப்பட்டனர்.

      இறுதியில் புனித பவுலும் கொல்லப்பட்டார். என்று படிக்கிறேன்.

      இதிலிருந்து தெரிவதென்னவென்றால், நாம் காணும் கிருத்துவ மதத்துக்கும் இயேசு ஒரு கற்பனையா என்ற கேள்விக்கும் தொடர்பு வராது.

      புனித பவுலே கிருத்துவ மத ஸ்தாபகர். புனித பவுல் ஒரு கற்பனை என்று வாதிட்டால் ரொம்ப நன்றாகயிருக்குமன்றோ !

    2. Avatar
      K A V Y A says:

      மிஸ் பிரியா எழுதுபவை எதனடைப்படையில் என்பதைக் குறிப்பிட்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், இவர் ஒரு தமிழர் என நினைக்கிறேன். இவருக்கு எப்படி 2000 ஆயிரமாண்டுகளுக்கு முன் நடந்தவைகளைப் புட்டுபுட்டாக வைக்கிறார் என்ற என் வியப்பைப் போக்க ஆதார எழுத்தாளர்களைக் காட்டினால் நன்று.

      அடுத்து விவிலியத்தை எழுதியவர்கள் பலர். அவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு எழுதினாரா? இல்லை, ஒருவருக்கொருவர் தெரியாமல் எழதினாரா? இல்லை, ஒரே காலத்தில் எழுதினாரா? இல்லை, ஒருவரையொருவர் காப்பியடித்தாரா?

      சரி, அவர் எழுதியதை இவர் மாற்றினார் என்கிறார் பிரியா. அப்படி மாற்றினால் ஏன் கூடாது? அவர் எழுதியதை இவர் தவறென்று நினைத்திருக்கலாமே?

      பலபல நூல்களாக இருந்து ஒருவருக்கொருவர் தெரியாமல் எழுதியவை வெகுகாலத்துக்குப் பிறகு ஒரே நூலாகத் தொகுக்கப்பட்ட பின்னர்தானே விவிலியமென்றே உருவானது? அதைப்பற்றித்தானே பிரியா சொல்கிறார் ?

      முதலில் பிரியா சொல்லட்டும். ஒருவர் எழுதியதை இன்னொருவர் மாற்றியதில் என்ன தவறு ?

      இந்து மதத்தில் இப்படிப்பட்ட இடைச்செருகல்கள் ஏராளம். பகவத்கீதையே பாரதத்தில் எழுதப்படாதது; பின்னர் வந்த இடைச்செருகல் என்றுதானே சொல்கிறார்கள் ?

      Ms Priya,…please tell us what is wrong with the act of amendments/emendations/insertions etc?

      Your wonder in the last line is also mine! Surprised? No need.

      I allow such belief for anyone who wants to hold that belief dear to his life provided he doesn’t harm the interests of other therewith.

      It is not Belief that matters; but what one does with that Belief? Does he live a moral and righteous life with it or lead a life of debaucheries and deceit? I hope you will face the qn square and fair and come up with your reply. I am waiting eagerly.

      I have had a dekko at your fantastic blog and it becomes clear to me that you are the most brightest and hardworking Bibilical scholar alive. It is a pity that I haven’t read it earlier. Thanks.

      If beliefs of Xians are your targets of attack, there wont be an end at all in attacking such beliefs in all religions, including your religion as EVR has done :-)

      If your religion is not based on Belief of various kinds – good, bad and ugly – then on what basis does it stand? Rationalism? Periyaar must be turning in his grave. Because here is one, that too, a pukka Hindu, who tries to resurrect him ?

  28. Avatar
    smitha says:

    Johnson,

    Going by yoiur argument, can you prove God does not exist? If you say, why do you have to prove something which is not there, then it is fine.

    But then has science proved everything? There are so many unexplained miracles that science is still unable to prove. There are many theories it is hallucination, imagination etc., but has you been able to methodically disprove everything?

    So, the fact is that we do not know. Then can we say we are agnostics?

    1. Avatar
      K A V Y A says:

      //the fact is that we do not know//

      Blistering barnacles. Thundering typhoons !!

      Smitha is on the spot. We dont know – is an inescapable fact.

      1. Avatar
        K A V Y A says:

        Add to this St Augustine’s statement:

        I DON’T KNOW EVEN WHAT I DON’T KNOW.

        It is not merely a statement of humility; but a hard fact.

  29. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மோஸஸ் ஒரு கற்பனை, ஏசு பெருமான் ஒரு கற்பனை, புத்தர் மகான் ஒரு கற்பனை, முகமது நபிநாயகம் ஒரு கற்பனை, இராமபிரான், சீதா, இராவணன் ஒரு கற்பனை என்பவற்றை எல்லாம் சில காரணங்களை மட்டும் காட்டி உறுதியாக நிரூபிக்க முடியாது.

    அதுபோல் மகா அலெக்ஸாண்டர் ஒரு கற்பனை, அசோகன் ஒரு கற்பனை, கண்ணகி ஒரு கற்பனை, கிளியோபாத்ரா ஒரு கற்பனை, வள்ளுவர் ஒரு கற்பனை, ஔவையார் ஒரு கற்பனை, கம்பர் ஒரு கற்பனை, ஒட்டக்கூத்தர் ஒரு கற்பனை, ஆண்டாள் ஒரு கற்பனை என்று ஏன் வீணாகத் தர்க்கமிடக் கூடாது.

  30. Avatar
    Dr.G.Johnson says:

    இந்த சர்ச்சையில் நாம் திசைமாறிப் போகிறோம். இது கடவுள் என்பவர் உள்ளாரா அல்லது இல்லையா என்ற கேள்வி பற்றியதில்லை. அதற்கு மாறாக ஏசு என்பவரைப் பற்றி பைபிளில் எழுதியுள்ளது உண்மையா அல்லது பொய்யா என்பதே. அனைத்தும் உண்மையே என்று கிறிஸ்துவர்கள் விசுவாசிகின்றனர். நிச்சயமாக மற்றவர்கள் நம்பப் போவதில்லை.. இது ஏன் எனில் இவை மனிதர்களால் எழுதப்பட்டவை.
    இதுபோன்றே புனித குரானும், ராமாயணமும், மகாபாரதமும் மனிதர்களால்தான் எழுதப்பட்டவை. இவற்றின் மீதும் இதே கேள்விதான் கேட்கப் படுகின்றது. அவற்றையும் மற்றவர் நம்புவதில்லை.
    ஆனால் அதே வேளையில் ஹோமர் எழுதிய இலியட் பற்றியோ, சாக்ரடீஸ் பற்றி பிளாட்டோ எழுதியது பற்றியோ, குறள் எழுதிய வள்ளுவர் பற்றியோ யாரும் கேள்வி கேட்டது இல்லை. .. ஏன்.
    அவர்களின் எழுத்தில் மாய மந்திரங்கள் இல்லை. வாழ்வியல் யதார்த்தம் மட்டுமே பார்க்கலாம். அதனால் அனைவரும் நம்புகிறோம்.
    ஆனால் மதச் சார்புடைய நூல்களில் மட்டுமே மனித கற்பனைக்கு எட்டாத பல குளறுபடிகள் உள்ளதால் இவற்றை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    அதனால் மத நூல்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உண்மையா என்பதை நம்மால் கூற இயலாது. எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் பதில் சொல்ல இயலாது.
    அப்படியே அந்த உண்மையான ஆண்டவரே உண்மையை எடுத்துச் சொல்ல வந்தாலும் அதை இன்றைய மக்கள் யாரும் நம்பவும் மாட்டார்கள்.
    அதோடு கடப்பிதழ் இல்லாமல் வரும் ஆண்டவரை யாரும் நாட்டுக்குள் அனுமதிக்காமல் கைது செய்து சிறையில் தள்ளினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! ….டாக்டர் ஜி. ஜான்சன்..

    இந்த சர்ச்சையில் நாம் திசைமாறிப் போகிறோம். இது கடவுள் என்பவர் உள்ளாரா அல்லது இல்லையா என்ற கேள்வி பற்றியதில்லை. அதற்கு மாறாக ஏசு என்பவரைப் பற்றி பைபிளில் எழுதியுள்ளது உண்மையா அல்லது பொய்யா என்பதே. அனைத்தும் உண்மையே என்று கிறிஸ்துவர்கள் விசுவாசிகின்றனர். நிச்சயமாக மற்றவர்கள் நம்பப் போவதில்லை.. இது ஏன் எனில் இவை மனிதர்களால் எழுதப்பட்டவை.
    இதுபோன்றே புனித குரானும், ராமாயணமும், மகாபாரதமும் மனிதர்களால்தான் எழுதப்பட்டவை. இவற்றின் மீதும் இதே கேள்விதான் கேட்கப் படுகின்றது. அவற்றையும் மற்றவர் நம்புவதில்லை.
    ஆனால் அதே வேளையில் ஹோமர் எழுதிய இலியட் பற்றியோ, சாக்ரடீஸ் பற்றி பிளாட்டோ எழுதியது பற்றியோ, குறள் எழுதிய வள்ளுவர் பற்றியோ யாரும் கேள்வி கேட்டது இல்லை. .. ஏன்.
    அவர்களின் எழுத்தில் மாய மந்திரங்கள் இல்லை. வாழ்வியல் யதார்த்தம் மட்டுமே பார்க்கலாம். அதனால் அனைவரும் நம்புகிறோம்.
    ஆனால் மதச் சார்புடைய நூல்களில் மட்டுமே மனித கற்பனைக்கு எட்டாத பல குளறுபடிகள் உள்ளதால் இவற்றை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    அதனால் மத நூல்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உண்மையா என்பதை நம்மால் கூற இயலாது. எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் பதில் சொல்ல இயலாது.
    அப்படியே அந்த உண்மையான ஆண்டவரே உண்மையை எடுத்துச் சொல்ல வந்தாலும் அதை இன்றைய மக்கள் யாரும் நம்பவும் மாட்டார்கள்.
    அதோடு கடப்பிதழ் இல்லாமல் வரும் ஆண்டவரை யாரும் நாட்டுக்குள் அனுமதிக்காமல் கைது செய்து சிறையில் தள்ளினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! ….டாக்டர் ஜி. ஜான்சன்..

    இந்த சர்ச்சையில் நாம் திசைமாறிப் போகிறோம். இது கடவுள் என்பவர் உள்ளாரா அல்லது இல்லையா என்ற கேள்வி பற்றியதில்லை. அதற்கு மாறாக ஏசு என்பவரைப் பற்றி பைபிளில் எழுதியுள்ளது உண்மையா அல்லது பொய்யா என்பதே. அனைத்தும் உண்மையே என்று கிறிஸ்துவர்கள் விசுவாசிகின்றனர். நிச்சயமாக மற்றவர்கள் நம்பப் போவதில்லை.. இது ஏன் எனில் இவை மனிதர்களால் எழுதப்பட்டவை.
    இதுபோன்றே புனித குரானும், ராமாயணமும், மகாபாரதமும் மனிதர்களால்தான் எழுதப்பட்டவை. இவற்றின் மீதும் இதே கேள்விதான் கேட்கப் படுகின்றது. அவற்றையும் மற்றவர் நம்புவதில்லை.
    ஆனால் அதே வேளையில் ஹோமர் எழுதிய இலியட் பற்றியோ, சாக்ரடீஸ் பற்றி பிளாட்டோ எழுதியது பற்றியோ, குறள் எழுதிய வள்ளுவர் பற்றியோ யாரும் கேள்வி கேட்டது இல்லை. .. ஏன்.
    அவர்களின் எழுத்தில் மாய மந்திரங்கள் இல்லை. வாழ்வியல் யதார்த்தம் மட்டுமே பார்க்கலாம். அதனால் அனைவரும் நம்புகிறோம்.
    ஆனால் மதச் சார்புடைய நூல்களில் மட்டுமே மனித கற்பனைக்கு எட்டாத பல குளறுபடிகள் உள்ளதால் இவற்றை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    அதனால் மத நூல்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உண்மையா என்பதை நம்மால் கூற இயலாது. எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் பதில் சொல்ல இயலாது.
    அப்படியே அந்த உண்மையான ஆண்டவரே உண்மையை எடுத்துச் சொல்ல வந்தாலும் அதை இன்றைய மக்கள் யாரும் நம்பவும் மாட்டார்கள்.
    அதோடு கடப்பிதழ் இல்லாமல் வரும் ஆண்டவரை யாரும் நாட்டுக்குள் அனுமதிக்காமல் கைது செய்து சிறையில் தள்ளினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! ….டாக்டர் ஜி. ஜான்சன்..

    இந்த சர்ச்சையில் நாம் திசைமாறிப் போகிறோம். இது கடவுள் என்பவர் உள்ளாரா அல்லது இல்லையா என்ற கேள்வி பற்றியதில்லை. அதற்கு மாறாக ஏசு என்பவரைப் பற்றி பைபிளில் எழுதியுள்ளது உண்மையா அல்லது பொய்யா என்பதே. அனைத்தும் உண்மையே என்று கிறிஸ்துவர்கள் விசுவாசிகின்றனர். நிச்சயமாக மற்றவர்கள் நம்பப் போவதில்லை.. இது ஏன் எனில் இவை மனிதர்களால் எழுதப்பட்டவை.
    இதுபோன்றே புனித குரானும், ராமாயணமும், மகாபாரதமும் மனிதர்களால்தான் எழுதப்பட்டவை. இவற்றின் மீதும் இதே கேள்விதான் கேட்கப் படுகின்றது. அவற்றையும் மற்றவர் நம்புவதில்லை.
    ஆனால் அதே வேளையில் ஹோமர் எழுதிய இலியட் பற்றியோ, சாக்ரடீஸ் பற்றி பிளாட்டோ எழுதியது பற்றியோ, குறள் எழுதிய வள்ளுவர் பற்றியோ யாரும் கேள்வி கேட்டது இல்லை. .. ஏன்.
    அவர்களின் எழுத்தில் மாய மந்திரங்கள் இல்லை. வாழ்வியல் யதார்த்தம் மட்டுமே பார்க்கலாம். அதனால் அனைவரும் நம்புகிறோம்.
    ஆனால் மதச் சார்புடைய நூல்களில் மட்டுமே மனித கற்பனைக்கு எட்டாத பல குளறுபடிகள் உள்ளதால் இவற்றை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    அதனால் மத நூல்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உண்மையா என்பதை நம்மால் கூற இயலாது. எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் பதில் சொல்ல இயலாது.
    அப்படியே அந்த உண்மையான ஆண்டவரே உண்மையை எடுத்துச் சொல்ல வந்தாலும் அதை இன்றைய மக்கள் யாரும் நம்பவும் மாட்டார்கள்.
    அதோடு கடப்பிதழ் இல்லாமல் வரும் ஆண்டவரை யாரும் நாட்டுக்குள் அனுமதிக்காமல் கைது செய்து சிறையில் தள்ளினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! ….டாக்டர் ஜி. ஜான்சன்..

    இந்த சர்ச்சையில் நாம் திசைமாறிப் போகிறோம். இது கடவுள் என்பவர் உள்ளாரா அல்லது இல்லையா என்ற கேள்வி பற்றியதில்லை. அதற்கு மாறாக ஏசு என்பவரைப் பற்றி பைபிளில் எழுதியுள்ளது உண்மையா அல்லது பொய்யா என்பதே. அனைத்தும் உண்மையே என்று கிறிஸ்துவர்கள் விசுவாசிகின்றனர். நிச்சயமாக மற்றவர்கள் நம்பப் போவதில்லை.. இது ஏன் எனில் இவை மனிதர்களால் எழுதப்பட்டவை.
    இதுபோன்றே புனித குரானும், ராமாயணமும், மகாபாரதமும் மனிதர்களால்தான் எழுதப்பட்டவை. இவற்றின் மீதும் இதே கேள்விதான் கேட்கப் படுகின்றது. அவற்றையும் மற்றவர் நம்புவதில்லை.
    ஆனால் அதே வேளையில் ஹோமர் எழுதிய இலியட் பற்றியோ, சாக்ரடீஸ் பற்றி பிளாட்டோ எழுதியது பற்றியோ, குறள் எழுதிய வள்ளுவர் பற்றியோ யாரும் கேள்வி கேட்டது இல்லை. .. ஏன்.
    அவர்களின் எழுத்தில் மாய மந்திரங்கள் இல்லை. வாழ்வியல் யதார்த்தம் மட்டுமே பார்க்கலாம். அதனால் அனைவரும் நம்புகிறோம்.
    ஆனால் மதச் சார்புடைய நூல்களில் மட்டுமே மனித கற்பனைக்கு எட்டாத பல குளறுபடிகள் உள்ளதால் இவற்றை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    அதனால் மத நூல்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உண்மையா என்பதை நம்மால் கூற இயலாது. எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் பதில் சொல்ல இயலாது.
    அப்படியே அந்த உண்மையான ஆண்டவரே உண்மையை எடுத்துச் சொல்ல வந்தாலும் அதை இன்றைய மக்கள் யாரும் நம்பவும் மாட்டார்கள்.
    அதோடு கடப்பிதழ் இல்லாமல் வரும் ஆண்டவரை யாரும் நாட்டுக்குள் அனுமதிக்காமல் கைது செய்து சிறையில் தள்ளினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! ….டாக்டர் ஜி. ஜான்சன்..

  31. Avatar
    Dr.G.Johnson says:

    எனது பின்னூட்டம் தவறாக ஐந்து முறை வந்துவிட்டது. சொன்னதையே இப்படி மீண்டும் சொல்லத் தேவையா? இதுபோன்றுதான் ஏசு கிறிஸ்துவின் பிறப்பு நான்கு நற்செய்தி நூல்களிலும் மீண்டும் ஒரே மாதிரி சொல்லப்படவில்லை. நால்வரும் வெவ்வேறு பாணியில் ஏசுவைப் பற்றி அறிந்ததை எழுதியுள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது? இவற்றில் லூக்கா என்பவரே பிறப்பு பற்றி விரிவாகக் கூறியுள்ளார். இதில் என்ன சர்ச்சை வேண்டியுள்ளது?……Dr. G. Johnson.

  32. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஜெயபாரதன் மற்றும் ஜான்சன்,

    தங்கள் இருவரது கருத்துக்களிலும் முரண்பாடுகள் காணக்கிட்டுகிறது. எப்படி என்பதை கீழே பகிர்ந்துள்ளேன்.

    எழுத்தாளர் முன்வைக்கும் விஷயம், ஏசு கற்பனையா

    இதை சரித்ரரீதியாக ஆராய முற்படுகிறார். ஆய்வில் கிட்டும் பதில்களை பகிர்ந்துள்ளார்.

    மங்காசரியான் என்பவர் எழுதிய பிறிதொரு பாஷையில் எழுதியுள்ள ஒரு வ்யாசத்தை மொழிபெயர்த்து ஆசிரியர் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதே விஷயம் சம்பந்தமாக ஸ்ரீ சீதாராம் கோயல் அவர்கள் Jesus Christ – An Artifice for Agression என்ற நூல் எழுதியுள்ளார். அதிலும் இதே கருத்து விசாரிக்கப்படுகிறது.

    கேள்வியின் நாயகன் ஏசுபிரான்.

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடலில்

    இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை
    எல்லோரும் படிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

    என்று வரும். இங்கு பகிரப்பட்ட கருத்துக்களை வாசித்த பின் அதுவே நினைவுக்கு வருகிறது.

    நான் ஹிந்து மதத்தைச் சார்ந்தவன். சங்கீதம் பயில்வதன் மூலம் க்றைஸ்தவ பாடல்கள் மற்றும் ஸூஃபியானா கலாம் (தற்போது நமது தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மோ(ஹ்)தர்மா பேகம் அபீதா பர்வீன் அவர்களின் தமாதம் மஸ்த் கலந்தர் இவ்வகை) எனும் இஸ்லாமிய பாடல்களும் கற்றுள்ளேன். “சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம், தந்தானை துதிப்போமே, ஏசுவையே துதிசெய் மனமே ஏசுவையே துதி செய்” போன்ற பாடல்கள் பிள்ளைப் ப்ராயத்தில் கற்றவை. கடையிரண்டு ரெவரெண்டு வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களது. சாஸ்திரியார் பூஜ்ய ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் காலத்தவர். “ஸுஜன ஜீவனா ராமா சுகுண பூஷணா” என்று ஸ்ரீ ஸ்வாமிகளது ராமர் மீதான பாடல் போன்று “பரம ஜீவனா” என்று அதே கமாஸ் ராகத்தில் சாஸ்திரியார் தானும் பாடல் எழுதியுள்ளார். வடவெல்லையில் உத்யோகத்தில் இருக்கும் எனக்கு இன்னும் இப்பாடல்கள் நினைவிலுண்டு. க்றைஸ்தவ அல்லது இஸ்லாம் மதத்தை நான் பின் பற்றாதவன். ஆனால் அம்மதப் பாடல்களில் சங்கீதத்தின் வாயிலாக ஈடுபாடு உடையவன். பிற மதங்களில் த்வேஷம் இல்லாதவன். இவ்விஷயத்தை நான் அணுகுவது சரித்ரம் என்ற கண்ணாடி மூலம்.

    ஒரு க்யாதி வாய்ந்த ஒருவர் இப்புவியில் வாழ்ந்தார் என்று சொல்லப்பட்டால் சரித்ரம் என்ற உரைகல்லின் மூலம் அவர் வாழ்ந்தாரா என்பது ஊர்ஜிதப் படுத்தப்பட வேண்டும்.

    அதற்கு உலகமெங்கும் ஆராய்ச்சியாளர்கள் சில யுக்திகளைப் பயன் படுத்துவர்.

    முதலில் ஒரு மனிதர் க்யாதியுடன் இப்புவியில் வாழ்ந்தார் என்பது ஒரு basic hypothesis என்று வைத்துக்கொள்வோம்.

    பின்னர் அதை இரண்டு வழிகளில் ஆராய முற்படுவர். Primary Soruces & Secondary Sources.

    Primary Sources என்ற படிக்கு அந்த நபர் ஏதேனும் நூற்கள் எழுதியிருந்தால் அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவர் கருத்துக்களை ஒப்புக்கொள்ளும் மற்றும் அதை எதிர்க்கும் மற்றைய நபர்கள் பற்றிய ப்ரஸ்தாபம் கவனிக்கப்படும். அதே போல் அவர்காலத்துக்குப் பின் வாழ்ந்த நபர்கள் தாங்கள் எழுதியுள்ள நூற்களில் அவரது கருத்துக்களை ஒத்தும் எதிர்த்தும் கருத்துக்கள் பதிந்திருக்கக் கூடும். நாம் ஆராயும் நபரின் வாழ்ந்த காலம் இதன் மூலம் கணிக்கப்படும். இதற்கு இரண்டு வரையரைகள் கையாளப்படும் terminus post quem and terminus ante quem. அதாவது முறையே காலமுன்வரையறை மற்றும் காலபின்வரையறை. இன்னாருக்குப்பின்னும் இன்னாருக்கு முன்னும் நாம் ஆராயும் நபர் வாழ்ந்தார் என்பது முடிவு செய்ய இயலும்.

    Secondary Sources என்ற படிக்கு நமக்குக் கிடைக்கும் கல்வெட்டுக்கள், தாம்ரசாஸனங்கள், அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் இவைகளில் நாம் ஆராயும் நபர் பற்றிய குறிப்புக்கள் கால ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும். தேவையானால் கிடைக்கும் ஆதாரங்கள் carban dating போன்ற விக்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டும் கால நிர்ணயங்கள் செய்யப்படும்.

    இப்பொழுது கேள்வியின் நாயகனான ஏசுபிரானுக்கு வருவோம்.

    விசாரிக்கும் நபர் கடவுள் என்றால் அவர் எந்த மதத்தைச்சார்ந்தவராயினும் உருவமுள்ளவராயினும் அல்லாதவராயினும் அதுபோன்ற ஒருவரை சரித்ர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

    விவகாரத்திற்கு ஊற்றுக்கண் போன்றது க்றைஸ்தவ சபையினர்கள் ஏசுபிரானை நகமும் சதையும் ரத்தத்துடன் இப்புவியில் வாழ்ந்தவர் என்று சாதிப்பது. அதுவும் அவர் தன் காலத்தில் வந்தார் போனார் என்றில்லாது மிக க்யாதியுடன் வாழ்ந்து இறந்து பின் மீண்டும் உயிர் கொண்டு எழுந்தது சரித்ரமாக க்றைஸ்தவர்களால் சொல்லப்படுவது. க்றைஸ்தவ அறிஞர்கள் ஏசுவை சரித்ர நாயகன் என சாதிப்பதால் அவர் சரித்ரம் என்ற உரைகல்லில் ஆராயப்படுவது இயல்பே.

    தேவனின் தூதனாக இப்புவியில் வாழ்ந்த ஏசுபிரான் தன் கருத்துக்களை தான் ஏதும் எழுதிவைக்கவில்லை.சமகாலத்தில் மற்றும் ஏசு இறந்ததாகச்சொல்லப்படும் காலத்திற்கு உடன் பிற்காலத்தில் வாழ்ந்த யஹூதி (jew) மற்றும் பேகன் (pagan) சம்ப்ரதாயத்தைச்சார்ந்தவர்களது நூற்களில் ஏசு என்ற நபரைப்பற்றி ஏதும் ப்ரஸ்தாபமில்லாதது கவனிக்கத்தக்கது. மிகக்யாதியுடன் வாழ்ந்த இவரைப்பற்றி ஏன் எவரும் ப்ரஸ்தாபிக்கவில்லை என்பது நோக்கத்தக்கது.

    மேலும் ஏசுபிரானின் கருத்துக்கள் என்பதாக அவரின் சிஷ்யர்களாகிய 12 அல்லது 13 அல்லது 14 அப்போஸ்தலர்கள் மூலம் அறியப்படுவது. முக்யமாக எழுத்தாளர் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ள ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களைத்தரும் சுவிசேஷங்கள். மிக முக்யமானது எழுத்தாளர் இரண்டாம் பாகத்தில் குறிப்பிடும் படிக்கு க்றைஸ்தவர்கள் முன்வைக்கும் எந்த நூல்களும் அசல்கள் அல்ல. அனாமதேய நகல்கள்.

    சீதாராம் கோயல் அவர்கள் ஏசு ஒரு கற்பனை என்று மட்டும் விவாதித்துள்ளார். ஆனால் எழுத்தாளர் ஒருபடி மேல் போய் ஏசுமட்டுமல்ல அவர் சிஷ்யர்களான அப்போஸ்தலர்களும் கூட கற்பனையே என்று சொல்லியுள்ளமை சரித்ரம் என சாதிக்கும் க்றைஸ்தவ ப்ரசார அஸ்திவாரத்தையே அசைக்கும் சமாசாரம்.

    அன்பர் ஜான்சன் அவர்கள் சொல்லியுள்ளது,

    “அதற்கு மாறாக ஏசு என்பவரைப் பற்றி பைபிளில் எழுதியுள்ளது உண்மையா அல்லது பொய்யா என்பதே”

    முதலில் ஏசுபிரான் என்று சரித்ர ரீதியில் ஒரு நபர் இருந்ததில்லை என்றால் அவரது அப்போஸ்தலர்கள் என்று சொல்லப்படும் சிஷ்யர்கள் சரித்ர ரீதியில் இல்லை என்றால் அவர்கள் எழுதிய நூற்களின் அசல்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட நம்பகமான நகல்கள் இல்லையென்றால் சரித்ர ரீதியில் ஏசு என்பவரைப்பற்றி பைபளில் எழுதியுள்ளது உண்மை என ஏற்கவியலாது.

    அன்பர் ஜெயபாரதன் சொல்லியுள்ளது,

    “புத்தர் மகான் ஒரு கற்பனை என்றால்”

    புத்தர் சரித்ர ரீதியில் வாழ்ந்தவர் என்று சரித்ர ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தைக்கணிப்பதில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.

    \அதுபோல் மகா அலெக்ஸாண்டர் ஒரு கற்பனை, அசோகன் ஒரு கற்பனை, கண்ணகி ஒரு கற்பனை, கிளியோபாத்ரா ஒரு கற்பனை, வள்ளுவர் ஒரு கற்பனை, ஔவையார் ஒரு கற்பனை, கம்பர் ஒரு கற்பனை, ஒட்டக்கூத்தர் ஒரு கற்பனை, ஆண்டாள் ஒரு கற்பனை என்று ஏன் வீணாகத் தர்க்கமிடக் கூடாது.\

    எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆண்டாள் ஒரு கற்பனை என வாதிட்டுள்ளார். வைஷ்ணவத்தை கசடறக்கற்ற அன்பர்கள் இதற்கு விடையளிக்க இயலும். நீங்கள் சொன்ன மற்ற நபர்கள் வாழ்ந்ததற்கு வண்டி வண்டியாக சரித்ர ஆதாரங்கள் இருப்பதால் அவர்கள் எப்போது வாழ்ந்தார்கள் என்பதில் அர்த்தத்துடன் தர்க்கமிட இயலும் என்றாலும் அவர்கள் வாழ்ந்தார்களா என்று கேள்விக்குறியிடுவது சரியான தர்க்க ஆதாரங்களுடன் இல்லாது போனால் வீண் குதர்க்கமே ஆகும்.

    1. Avatar
      K A V Y A says:

      //எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆண்டாள் ஒரு கற்பனை என வாதிட்டுள்ளார். வைஷ்ணவத்தை கசடறக்கற்ற அன்பர்கள் இதற்கு விடையளிக்க இயலும். //

      சொன்னவர் இராஜாஜி. அப்படியே சுஜாதா சொல்லியிருந்தாலும் எவரும் சட்டை செய்ய மாட்டார்கள். எழுத்தாளர்களின் பொதுக்கருத்துக்கு இலக்கிய இரசிகர்கள் மட்டுமே சர்ச்சை பண்ணுவார்கள்.

      இராஜாஜி பொதுவாக போற்றப்படும் (தூற்றுவோரும் உண்டு) தலைவர். மேலும், தமிழ்ப் பார்ப்ப்னர்களிடையே – எப்படி தேவர்கள் முத்துராமலிங்கம் என்பவரைப் பார்க்கிறார்களோ – அப்படி வைத்துப் போற்றப்படுபவர்.

      தமிழ்நாட்டு வைணவம் இரு ஜாதியாரால் பிழைத்துக்கிடக்கிறது: தமிழ்ப்பார்ப்பனரில் ஒரு சாரார்; நாயுடுக்கள். முன்னவர் இராஜாஜியை பெரிதும் போற்றுபவர்கள். இவர்கள் இராஜாஜியின் கருத்தைக்கேட்டு மதிமயக்கம் கொள்வரோ என்று பயந்துதான் இராஜாஜியின் கருத்து ஆச்சார்யார்களால் எதிர்க்கப்பட்டது.

      சுஜாதாவின் கருத்து காற்றில் கலந்து காணாமல் போய்விட்டது.

      “வைஷ்ணவத்தை கசடறக்கற்ற அன்பர்கள் இதற்கு விடையளிக்க இயலும்”!

      என்னும் கிருஸ்ணகுமாரின் பேச்சு சிண்டுமுடியும் வேலை. விடை தேவையில்லை. ஆண்டாள் இலக்குமியின் அவதாரம். மறுபேச்சுக்கு எந்த வைணவரும் இடம் கொடுக்கமாட்டார்.

      “வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்க
      போய பிழையும் புகுதருவா னின்றனவும்
      தீயினில் தூசாகும் செப்பலோ ரெம்பாவாய்.”

      On the above, my mge written in Tamil Hindu.com long ago, is reproduced:

      The aforesaid siththaantham is there or given to the Vaishnavaas with the sole objective of making God appraochable to anyone, irrespective of status, position or previous acts of commissions and omissions
      Nothing is insurmonuntable if the surrender is total. No conditions apply.

      She says,

      ‘Dont worry about your past, or your present conditions, that you may think, will put you far from God. Come along with me, lets chant His sacred names, concentrate on Him in our mind, and everything vanishes like saw dust in a fire”

      Shrivaishanvaas greately love these three lines – the quintessence of the aforesaid Siththaantham (Total surrender).

      No words are sufficient to praise Andaal for giving us such a concise and effective defintiion of saranaakaththi thaththuvam.

      தீபாவளி வாழ்த்துகள்.

  33. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சாக்ரடிஸ் ஞானி தன் கையால் போதனை நூல் எதுவும் எழுதவில்லை. புத்தர் தன் கையால் எதுவும் ஏட்டில் எழுதிய தாகத் தெரிய்வில்லை. இராம பிரான் தன் சுய சரிதை எழுத வில்லை.
    சில ஆண்டுகளுக்கு முன்பு “ஏசுநாதர் பிறந்தது உண்மையா” என்று பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானிகள் ஆய்ந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர், ஜனவரி மாதங்களில், ஏசு கிறித்து பிறந்த போது வானில் மூன்று கோள்கள் [வியாழன், சுக்கிரன், புதன் ?] அருகில் ஒன்றிய ஒளிமயம் தோன்றியது மெய்யா வென்று கணனி மூலம் தேடி அது உண்மைதான் என்று நிரூபித்துள்ளார்கள்.
    ஏசு பெருமான் கன்னித்தாய் பிறப்பில், உயிர்த்தெழுச்சியில் ஐயம் இருந்தாலும், அப்படி ஒரு ஞானக் குழந்தை [தேவ தூதர்] பிறந்தது என்பதில் நூற்றுக்கு நூறு மெய்ப்பாடு உள்ளது.

    நாளுக்கு நாள் வளரும், உலகிலே மிகப் பெரிய கிறித்துவ மதத்தை நிரந்தர மாக்கிய ஏசுநாதரைக் கற்பனை என்று வீணாகத் தர்க்கமிடுவது கறிக்குதவாத ஏட்டுச் சுரைக்காய் என்பது என் அழுத்தமான கருத்து.
    சி. ஜெயபாரதன்.

  34. Avatar
    K A V Y A says:

    //க்றைஸ்தவ அறிஞர்கள் ஏசுவை சரித்ர நாயகன் என சாதிப்பதால் அவர் சரித்ரம் என்ற உரைகல்லில் ஆராயப்படுவது இயல்பே. //

    கிருத்துவ அறிஞர்கள்தானே சாதிக்கிறார்கள்? அவர்கள் சாதிக்கட்டும். கிருத்துவர்கள் அவரைக் கடவுளாகவே பார்க்கிறார்கள். கிருத்துவ அறிஞர்கள் ஒரு சிலர்; கிருத்துவர்களே எங்கும். இதை உங்களால் மறுக்கமுடியுமா? அப்படிப்பார்ப்போருக்கு இயேசு கற்பனையா உண்மையா என்ற கேள்வி irrelevant. Neither Mr Jeyabarathan nor Dr Johnson is a Xian scholar. Assuming the former as a Xian coz I dont know for certain, and being certain that the latter is a Xian, we can take it that they are ordinary Xians. No scholars. They believe because they want to. They feel a need to. For them, religion is belief that should be practised to a better living. To intellectualise it is to squeeze it to its dregs and make it empty and useless. An intellectual cant follow any religion. But he will pretend to. This point I have already highlighted in my comments in Tamil hindu.com in the essay of Sathuragiri apropos Jeyamohan feedback comments. Religion is not for intellectuals and philsophers unless they can willingly suspend their intellectual side, just as I do when I watch a masala movie.

    As things that are seen are mind-dependent for their proof of existence, as George Berkely argued, so also the belief in God and all that a religion speaks of or stands for, are mind-dependent, not intellect dependent. Common folk are not theologians. A theologian cant aspire to be a true devotee unless he sloughs off for a brief moment his theological arguementative skin or self and become an ordinary man or a woman with humility.

    பாமர கிருத்துவர்களை எந்த கோயலும் எந்த மங்காசாரனும் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் அசைக்க முடியாது. ராமர் பாலம் பொய்யென்றால் ராமேசுவரத்தில் கூட்டம் குறைந்து விடுமா? ராமர் உணமையென்று நிரூபித்தால்தான் ராமரைத் திருமாலில் அவதாரமென ஏற்றுக்கொள்வேனென்பீர்களா?

    மங்காசாரனின் கட்டுரையையும் கோயலில் நூலையையும் இலவசமாக வீதிவீதியாக விநியோகித்தாலும் கிருத்துவர்களெல்லாம் இந்துக்களாகி விடுவார் என்று நான் நம்பவில்லை. நீங்கள் ?

    மங்காசாரன் ஒரு அறிஞர். அவருக்கு எந்தவித உள்ளோக்கமும் கிடையாது. கோயல் அறிஞரோ இல்லையோ எனக்குத்தெரியாது. ஆனால் அவர் ஒரு இந்துத்வ எழுத்தாளர். அவருக்கு உள்ளோக்கமுண்டு என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

    இக்கட்டுரை இங்கே போடப்பட்டது எதற்காக என்று நினைக்கிறீர்கள்? இக்கட்டுரைக் கருத்துக்களை ஒட்டியோ வெட்டியோ பேசும் கிருத்துவ அறிஞர்கள் எவருமில்லையிங்கே. எனவேதான் போடப்பட்டிருக்கிறது. அதே சமயம், இசுலாமைப்பற்றிக் கட்டுரைகள் மொழிபெயர்த்து உள்ளோக்கம் கொண்டோரால் போடப்பட்டிருக்கின்றன; படித்துக்கொண்டும் வருகிறோம். அதை எதிர்வாதம் செய்ய இசுலாமைப்பற்றி நன்கு தெரிந்த இசுலாமியத் தமிழர்கள் இணைய தளத்தில் உள்ளார்கள்.

    அதே போல இந்துமதத்தைப்பற்றி உள்ளோக்கம் உடையோரால் கட்டுரைப்போடப்பட்டால் நீங்கள் இருக்கிறீர்கள். தங்கமணி இருக்கிறார். பிரியா இருக்கிறார். மலர்மன்னன் இருக்கிறார் திண்ணையில் !

    இதற்கு ஒரு காரணமுண்டு எனலாம். ஏற்கனவே சொன்னதுதான். கிருத்துவர்கள் இப்படி தம் மத்ததைத் தூடனை செய்து எவராவது எழுதினால் கண்டுகொள்வதில்லை. உங்களைப்போன்றவர்களைத் தவிர (தீவிர இந்துக்கள்), மற்ற இந்துக்களும் கண்டு கொள்வதில்லை இந்துமதத்தூடணையைக் கண்டுகொள்வதில்லை.

    இக்கட்டுரைப் படித்து இன்புறுவது நீங்களே. கருநாநிதி போல. இராமாயணத்தையும் ம்ஹாபாரதத்தையும் ஆழ்ந்து படிப்பவர் அவர். ஏனெனில் அப்போதுதான் இந்துமதத்தாக்கலை நடத்த‌ செய்ய உதவுமன்றோ?

    கோயலுக்கு இருந்த கிருத்தவ மத அறிவு ஒரு இந்தியக்கிருத்துவருக்கு இருக்குமா? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Devil will cite scriptures to prove its point. Its meaning : the Devil is more knowledgeable in such things which it wants to repudiate.

    நான் ஜெயபாரதனின் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். அஃது ஏற்கனவே என்னாலும் சொல்லப்பட்டதுதான். அஃதாவது எதையும் எவரும் கற்பனை என்று நிரூபிக்கத் தேவையில்லை. இறை, இறையின்பம். அனுபவித்தல், மதத்தின்படி வாழல் – இவை போதும். இல்லாவிட்டால் வேறெதற்கு மதமென்று சொல்லுங்கள் ?

  35. Avatar
    K A V Y A says:

    வரலாற்றாராய்ச்சி என்பது முடிந்த முடிபுகளல்ல. இன்று கோயல் சொன்னதும் மங்காசாரன் சொன்னதும் சரியாக இருக்கலாம். அதாவது அவர்கள் கொடுத்த தரவுகள் உண்மையிலே கண்டெடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அவை முடிந்த முடிபுகளல்ல.

    ஏனென்றால், நாளை ஒன்று கண்டுபிடிக்கப்படலாம் அகழ்வாராய்ச்சி அல்லது வேறெந்த வழியிலாகவோ. அது கோயலையும் மங்காசாரனையும் பொய்யென நிரூபிக்கலாம்.

    மொஹன்சாதாரோதான் ஹாரப்பாதான் வெள்ளைக்காரர் மார்ஷல் தோண்டியெடுத்துக்கண்டுபிடித்தது. அதன் பின்னர் பலவிடங்கள் தோண்டப்பட்டு, சிந்து சமவெளி நாகரிகம் குஜராத்தையும் தாண்டி பரவியிருந்தது எனவாயிற்று. நாளை எப்படியோ?

    இன்றைய‌ உண்மை இன்றைக்குச் சரி. நாளைக்கும் சரியென்று சொல்ல இன்றுள்ள தரவுகள் பொய்யாகாமல் நாளையும் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்ப‌டி ந‌ட‌க்காது.

    எனவே எதையும் அறுதியிட்டுச்சொல்வது ஃபனாடிசிசம். Here religious bigotry too if it is said by those who are against that particular religion.

  36. Avatar
    புனைப்பெயரில் says:

    இயேசு என்பது ஒரு கதாபாத்திரமே. கஸின் பிரதர்ஸ் ஃபைட் நம்ம ஊரில் மகாபாரதம்… மிடில் ஈஸ்ட்டில் இயேசு, நபி இரு கேங் வார். தட்ஸ் ஆல்…. என்ன ராமர் கிருஷ்ணர் லோக்கல்.. இந்த இயேசு என்ன இருந்தாலும், இமயமலையில் அலைந்து கற்றுக் கொண்ட வித்தை வைத்து மீன் அப்பம் என பங்கிட்டு அசத்தினார். மத்தபடி ஒரு இனத்தின் அடையாளமே இவர்கள் எல்லாம்… லோக்கல்ல மரியாதை கிடைக்கலைன்னு, கனடா, துபாய் போன மாதிரி தான், கருப்பசாமி, மாயாண்டி விட்டு இயேசு, நபி என்று பின் போவது…

    1. Avatar
      paandiyan says:

      வெள்ளைகாரரர்கள நாளை ஒன்று கூடி ஆமாம் இது எல்லாம் பொய் என்று சொன்னால் கூட இங்கு உள்ளவர்கள் இல்லை இல்லை என்று கூவி கொண்டுதான் இருப்பார்கள். கூவுவதுக்கு தான பணம் இங்கு வெள்ளமாக பாய்ந்து கொண்டு இருகின்ன்றது.

      1. Avatar
        K A V Y A says:

        இங்குள்ளவர்களைப்பற்றி நீங்களேன் கவலைகொள்கிறீர்கள். இவர்கள் நாலைந்து பேர்தானே? தமிழகத்தில் கோடிக்கணக்கான கிருத்துவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வெள்ளைக்காரன் வந்து வண்டிவண்டியாகக்கொட்டினால் நம்பி விடுவார்களா? அதைச்சொல்லவும்.

  37. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    புனை பெயரான் கண்ணை மூடிக் கொண்டு சித்திரங்களைப் பார்க்கிறார். பண்டித நேரு, மதமே எல்லாவற்றையும் விட உலகத்தில் பல்வேறு மக்களைப் பின்னிப் பிணைக்கும் மிக வலுவான இணைப்புச் சங்கிலி என்று சொல்கிறார். உதாரணம் புத்த மதம் [புத்தர்], கிறித்துவ மதம் [ஏசுநாதர்], இஸ்லாமிய மதம் [முகமது நபி நாயகம்]. இப்படி இந்து மதத்துக்கு ஒரு குரு நாதர் இல்லை.

    மாபெரும் மதங்கள் உலகில் படைத்த புத்தர், ஏசு பெருமான், முகமது நபி நாயகம் வெறும் காகிதத் தூதர்கள் அல்லர்.

    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      paandiyan says:

      அது என்ன நேரு .நேரு ஒன்றை சொன்னால் அது என்ன வேத வாக்க என்ன ? நேரு மற்றும் அவரின் இபோதைய பரம்பரை குடும்ப இத்தாலி பாசத்திற்கு — இங்குள்ள கிறிஸ்துவர்களுக்கு அளவுக்கு அதிகமா போகி கொண்டு இருகின்றது . நீங்கள் சொன்ன “குரு நாதர்” கான்செப்ட் தான இது எல்லாம். எங்களுக்கு அப்படி ஒன்று இல்லாததுதான் சுதந்திர காற்றை சுத்தமாக சுவாசித்து கொண்டு இருகின்றூம் என்பதை மறந்து விடாதீர்கள்

      1. Avatar
        K A V Y A says:

        இந்து மதத்துக்கு அம்மதத்தோரைக்கட்ட ஒரே தலைவன் அல்லது குருநாதரில்லையென்பது தெரிந்த உண்மை. ஆனால் மடங்களுக்கு உண்டு. சித்தாந்தகளுக்கும் உண்டு. அதாவது ஆதிசங்கரர் சொன்னதுதான் வேதாந்தம். இராமானுஜர் சொன்னதுதான் விசிஸ்டாத்வைதம். நீங்கள் போய் அச்சித்தாந்தங்களை மாற்றமுடியாது. ஜீயர் மடத்தில் சேர்ந்து கொண்டு, நான் சிவபூஜை பண்ணுவேன் என்றால் அடித்துவெளியே தள்ளிவிடுவார்கள்.

        இந்து மதம் என்ற ஆம்னிபஸ் கான்செப்டுக்கு மட்டுமே உங்கள் ‘நோ லீடர்’ தியரி ஒத்துவரும். அப்படிப்பட்ட தியரியும் சர்ச்சைக்குரியதே. இதே திண்ணையில் நான் எழுதிய கட்டுரையொன்றில் இப்படி நோ லீடர் கான்சபட்டினால் இம்மதம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்று விளக்கியிருக்கிறேன்.

        தலைவன் இல்லாத வீடோ, கட்சியோ எப்படி போகும்? தாறுமாறாகப்போகும். தடியெடுததவனெல்லாம் தண்டல்காரன் என்றாகும். அல்லது எவரும் எதையும் செய்யலாமென்று போய் இறுதியில் வீடே உருத்தெரியாமல் போகும. கட்டுப்பாடு தேவை. மக்கள் ஒரு மதத்திலோ, கட்சியிலோ இருப்பின்.

        எங்கள் மதத்தை நாங்கள் எப்படியும் அனுசரிப்போம் எங்களை எவரும் கேட்கமுடியாது என்பதாலேதானே ஒருவர் சாதிகள் அவசியமென்கிறார்; இன்னொருவர் இல்லையென்கிறார். பூஜாரி எங்கள் ஜாதி ஆட்கள்தான் ஆக முடியும் என்கிறார் ஒருவர்; இன்னொருவர் எவரும் ஆகலாமென்கிறார். நீதிமன்றத்திலும் அடிததுக்கொள்கிறார் தமிழா? சமசுகிருதமா?. காஞ்சிகோயில் ஆனைக்கு வடகலை நாமமா அல்லது தென்கலையா? என்றெல்லாம் ஒற்றுமை ஒழிந்து பிரிவினை பிறந்து ஒருவரையொருவர் தூடனை செய்து, நாங்களே இந்துக்கள் என்று குடுமிப்பிடிச்சண்டை போடுகிறார். இப்பிளவுகளினாலேயே இந்துக்களிடையே சாலிடாரிட்டியில்லாமல் இந்துமதம் மற்றமதங்களுக்கு வழிவிட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு கிருத்துவருக்கு கிருத்துவ‌ மதத்திலும் ஒரு இசுலாமியருக்கு இசுலாத்திலும் உள்ள பிடிப்பை இந்துக்களிடம் காண்பது அரிது. மேலும், எவரும் எப்படியும் போகலமென்றால் வலிந்தோன் நலிந்தோனை வாட்ட மதமே இடங்கொடுக்கிறதென்றே வரும். தலித்துக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வறுத்தெடுத்தீர்களலல்லவா?

        குருநாதர் வேண்டும். திக்குத்தெரியா காடாக மதமிருக்கக்கூடாது.

  38. Avatar
    suvanappiriyan says:

    //புனித பவுலே கிருத்துவ மத ஸ்தாபகர். புனித பவுல் ஒரு கற்பனை என்று வாதிட்டால் ரொம்ப நன்றாகயிருக்குமன்றோ !//

    இதை விவாதித்தால் அனைத்து உண்மைகளும் வெளி வந்து விடும்.

  39. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    சுவனர் சொல்வதை நீட்டி,
    ஆபிரகாம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை, எகிப்தில் எபிரேயர் வாழவே இல்லை, யாத்திரை என்பது முழுமையான பொய், கட்டுக் கதை என இஸ்ரேலின் டெல் அவிவ் பலகலைக் கழக புதைபொருள் துறைத் தலைவர் நூல் சொல்கிறது.
    (இணைப்பு)http://www.mediafire.com/view/?y177tc2oa3tegam
    ஆதியாகமம் சொல்லும் நாடு- ஊர்கள் எல்லாம் பொ.மு. 300இல் அப்பெயர் பெற்றவை. பழைய ஏற்பாட்டின் நூல்கள் அனைத்துமே பொ,மு. 300க்கும் பொ.கா. 100க்கும் இடையே எபிரேய – கிரேக்க மொழிகளில் புனையப்பட்டது என்பது இன்று பைபிளியல் அறிஞர்களால் ஏற்கப் படுபவை.
    http://www.mediafire.com/?wu8iqkxeus2b6by
    தீர்க்கர்கள் என்பது பொய், நடந்ததை, அவர் முன்பே சொன்னார் எனப் புனைந்ததே நபிகள் என்னும் கதை.

    எ-டு. இயேசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு வந்து காட்சி கலிலேயாவில் தருவேன் எனச் தீர்க்கம் சொன்னதாக மத்தேயு-மாற்கு சுவியில் உண்டு, லூக்கா யோவான் சுவியில் கிடையாது.

    மேசியா – கிறிஸ்து என ஒருவர் மூல எபிரேயத்தில் கிடையாது, அது ஒரு சில யூத மூட நம்பிக்கைக் குழுவில் கிழம்ப, அப்படி கிறிஸ்து – இறுதி தூதர் வந்தால் அவர் வாழும் போது உலகம் அழியும் என்பது நம்பிக்கை.
    கிறிஸ்து யார்- இயேசுவா?-http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html

    இயேசு நேரில் வந்து
    ஜான்சன் //அதனால் மத நூல்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் உண்மையா என்பதை நம்மால் கூற இயலாது. எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் பதில் சொல்ல இயலாது.
    அப்படியே அந்த உண்மையான ஆண்டவரே உண்மையை எடுத்துச் சொல்ல வந்தாலும் அதை இன்றைய மக்கள் யாரும் நம்பவும் மாட்டார்கள்.//
    யோவான்6:32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்.
    49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
    -இயேசு தெய்வீகர் எனில் யாரும் மரணம் அடைந்திருக்க முடியாது.

    1. Avatar
      K A V Y A says:

      But the death of Jesus is given different meanings and interpretations. You may seek the friendship of a popular evangelists many of whom are easily avaialble. They will give you the meaning. It is not Death according to Xians in the sense you and I die. So, there is no room for your last sentence ie. If he is God, he cannot die.

      Similarity exists in Ramayana. In yesterday The Hindu letters, you may find Hindus defending Ram against Jethamalanai’s attack on Him. Jethmalanai called him a bad husband; and the defenders say Sriram did because he was not a Man, but came to earth in the avatara of man so he needs to bow to the popular will as a Kshatriya; therefore, he puts his wife to public shame of proving her chastity in front of others.

      One could have easily written like you: If he is God, he could have silenced all by showing his Viswaroopam!

  40. Avatar
    புனைப்பெயரில் says:

    ஜானின் தமிழ் தட்டச்சு அருமை. பண்டித நேரு என்ன தீர்ப்பு மாத்தமுடியாத நாட்டாமையா… மதம் என்பது அபின். அது எதேச்சிகாரத்தை மனோ ரீதியாக செலுத்துகிறது. உலகை கொள்ளையடிக்க முதலாளித்துத்தின் ஒரு ஆயுதமே… எல்லோரும் ஒரு நாள் சௌதிக்கு அடிமையாக்க கண்டுபிடிக்க பட்டதே இஸ்லாம்.. வாடிகனுக்கு ஒரு கிறிஸ்துவம். ஆனால் தத்துவ கோட்பாட்டுகளில் இயங்குவது இந்து மதம். புத்தம் என்பது மதமல்ல.. அது உண்மை உணரும் நிலை. ஆனால், அதை மஞ்சள் முகத்தினர் தனதாக்கினர். கோழை மதத்தில் தன்னை நுழைத்துக் கொள்கிறான்… வீரன் மதத்தை ஆக்கிரமித்து கோழையை ஆளுமை செய்கிறான். இதில் இந்து என்ன.. கிறிஸ்துவம் என்ன… இஸ்லாம் என்ன..? இந்துவிலாவது பரதேசி இருக்கிறான்.

    1. Avatar
      K A V Y A says:

      பரதேசியாக இருக்கவிழைவோர் இந்துமதத்தை தழுவிக்கொள்ளட்டும். இல்லாதோர் எம்மதம் நிரந்தரமாக இடம் தருகிறதோ அம்மத்ததில் இருக்கட்டும். இதில் உங்களுக்கு என்ன பிர்ச்சினை? ஏன் அவர்களைத் தடுக்க வேண்டும்?

      கிருத்துவ மதத்தில் பல பிரிவுகள்; அவற்றில் ஒன்றேயொன்றுதான் கத்தோலிக்கம். அதிலும் உட்பிரிவுகள் உண்டு. எது உரோமன் கத்தோலிக்கம் என அழைக்கப்படுகிறதோ அதற்குத்தான் வாடிகன் தலைமையிடம்; போப் ஒரே தலைவர். மற்றபடி கிருத்துவப்பிரிவுகள் எப்படியும் இருக்கும். ஒருவன் எப்பிரிவையும் சேராமல் வெறும் விவிலியத்தைப்படித்துக்கொண்டு வாழும் கிருத்துவனாகவும் இருக்கலாம். அப்படியும் ஒரு பிரிவு உண்டு. இப்போது சொல்லுங்கள். இந்து மதம் மட்டுமா திறந்த மடம்? You may read more and more about Xianity before writing here. You are not giving correct picture

  41. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \சாக்ரடிஸ் ஞானி தன் கையால் போதனை நூல் எதுவும் எழுதவில்லை. புத்தர் தன் கையால் எதுவும் ஏட்டில் எழுதிய தாகத் தெரிய்வில்லை. இராம பிரான் தன் சுய சரிதை எழுத வில்லை.\

    முதற்கண் ஆய்வுக்குறிய நபர் அவர் கையால் எழுதியது மட்டும் Source என்பது வரலாற்று ஆய்வாளரின் அலகீடு இல்லை. ஆம் புத்தர் தன் கையால் ஏதும் ஏட்டில் எழுதவில்லை தான். ஆனால் மிகவும் க்யாதி வாய்ந்த அப்பெருமகனார் பற்றி அவர் சமகாலத்து மற்றும் அவரின் காலத்துக்கு உடன் பின்னர் வந்த சான்றோர் அவரைப்பற்றி எழுதியதால் புத்தர் பிரானைப் பற்றிய கால வரையறை செய்ய ஏதுவாகிறது. ஏசு பிரான் காலத்திற்கு உடன்பின் எழுதப்பட்ட க்யாதி வாய்ந்த யஹூதிய, பாகனிய நூற்களில் ஏசுபிரான் பற்றிய குறிப்பேதுமில்லை என்பதை மறைத்துப் பூசி மெழுகுவது விக்ஞானமாகது. குதர்க்கமாகும்.

    \ஏசு பெருமான் கன்னித்தாய் பிறப்பில், உயிர்த்தெழுச்சியில் ஐயம் இருந்தாலும், அப்படி ஒரு ஞானக் குழந்தை {தேவ தூதர்] பிறந்தது என்பதில் நூற்றுக்கு நூறு மெய்ப்பாடு உள்ளது.\

    சரித்ரம் என்ற உரைகல்லில் உரைக்கையில் மங்காத சொக்கத் தங்கம் மட்டுமே உண்மையாகும். நூற்றுக்கு நூறு மெய்ப்பாடு உள்ளது என்று உரத்துச் சொன்னால் மட்டும் பொய் மெய்யாகாது. எழுத்தாளர் மாற்றுக்கருத்துகளையும் முன்வைப்பதாகச் சொல்லியுள்ளார். அதில் வரும் தகவல்களைப் பார்ப்போம். ஆய்வலகீடுகளுக்கு பதில் தரும் தரவுகள் கேள்விக்குள்ளான சரித்ர நாயகனைப்பற்றிய சரித்ர இருப்புக்கு வலு சேர்க்குமானால் ஒரு சரித்ர உண்மையை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் வேண்டும்.

    \நாளுக்கு நாள் வளரும், உலகிலே மிகப் பெரிய கிறித்துவ மதத்தை நிரந்தர மாக்கிய ஏசுநாதரைக் கற்பனை என்று வீணாகத் தர்க்கமிடுவது\

    oh! thats a classic example for the fallacy of “Argumentum ad populum”. With all due respects to a scientist in your personality, at whatever decibels one shout, a fallacy can never be considered as truth. A historical fact is proved by convincing logic with documented proof that can withstand critical scrutiny. Proving a point by shouting is no scientific way of proving a historical fact.

    தரைகடலுயிர் வாழ் ஸகலமும் படைத்த சர்வலோகாதிபனான இறைவன் என்ற ஒரு கோட்பாட்டை இங்கு யாரும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. உரத்துப்பேசப்படும் பொய்களை உண்மை என சாதித்து புறமுதுகிட்டோடும் ஒரு கோட்பாட்டை விக்ஞானம் என ஏற்கவியலாது.

    \கிருத்துவ அறிஞர்கள்தானே சாதிக்கிறார்கள்? அவர்கள் சாதிக்கட்டும்.\

    பொய். தெருத்தெருவாய் துண்டுப்ரசுரங்கள் வினியோகிக்கும் மதமாற்ற கும்பல்கள் கூட இப்பொய்யை உண்மை என சாதிக்கின்றனர்.

    \கிருத்துவர்கள் அவரைக் கடவுளாகவே பார்க்கிறார்கள். \

    அதை நான் மிகவும் மதிக்கிறேன். மதித்துப் போற்றுகிறேன். எனக்கு அதில் முரண்பாடு ஏதுமில்லை

    \உண்மையா என்ற கேள்வி irrelevant. \

    Truth can never be irrelevant and a lie however sweet coated it may be could never be relevant.

    ராமர் பாலம், தங்கமணி, மலர்மன்னன், க்றைஸ்தவ தூஷணை, Religious bigotry, உள்ளோக்கம் (உள்நோக்கம்?) – இத்யாதி, இத்யாதி – Red herring – Sir, you have mastered it as an art. Not my cup of tea.

    \வரலாற்றாராய்ச்சி என்பது முடிந்த முடிபுகளல்ல\

    உண்மையை அறிய முற்படுவோர் என்றும் திறந்த மனத்துடன் இருப்பர்.

    \நாளைக்கும் சரியென்று சொல்ல இன்றுள்ள தரவுகள் பொய்யாகாமல் நாளையும் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்ப‌டி ந‌ட‌க்காது.\

    I am not here to discuss prophecies of fortune tellers.

    1. Avatar
      K A V Y A says:

      திரு கிருஸ்ணகுமார் எழதியது: “க்றைஸ்தவ அறிஞர்கள் ஏசுவை சரித்ர நாயகன் என சாதிப்பதால் அவர் சரித்ரம் என்ற உரைகல்லில் ஆராயப்படுவது இயல்பே.”

      இப்படி எழுதினால் என்ன பொருள்? கிருத்துவ அறிஞர்கள்தான் சாதிக்கிறார்கள் என்று பொருள். நான் எழுதியதன் பொருள் மங்காசாரியனைப் பாமர கிருத்துவர்கள் அலட்டிக்கொள்வதில்லை என்பதும் இப்படிப்பட்ட தர்க்கங்கள் உங்களுக்கும் (அந்நிய மதத்தைக்கொண்ட கிருத்துவ மத விமர்சகர்கள்) மற்ற தர்க்க அறிஞர்களும்தான் என்று பொருள்.

      துண்டு பிரசுரம் கொடுப்பவர்களும் படிப்பவர்களும் பாமர கிருத்துவர்கள். அதில் மங்காசாரனுக்கு போயின்ட் பை போயின்ட பதிலிருக்காது. இருந்தால் சொலலவும்.

      //\உண்மையா என்ற கேள்வி irrelevant. \ Truth can never be irrelevant and a lie however sweet coated it may be could never be relevant//

      நான் சொன்னதை உங்களால் புரிய இயலவில்லை. நான் சொன்னது ஒரு பாமர கிருத்துவனுக்கு இயேசு கற்பனையா உண்மையா என்பதும் ஒரு பாமர இந்துவுக்கு இராமர் பாலம் கட்டினாரா இல்லை, வெறும்பொய்யா என்பதும் irrelevant. Sweet, bitter என்பனவெல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை. இந்துக்கள் இராமரைத் திருமாலில் அவதாரமாகத்தான் பார்க்கிறார்கள். நீங்கள் எந்த அகழ்வாராய்ச்சியைக்காட்டி எத்தனைத் தரவுகள் காட்டி இராமரைப்பொய்யென்றாலும் இந்துக்கள் அவரைத் தெய்வமாக வ‌ணங்குவதை நிறுத்த மாட்டார்கள். Take it from me. அதேதான் கிருத்துவத்திலும். இதுதான் என் கருத்து.

      \வரலாற்றாராய்ச்சி என்பது முடிந்த முடிபுகளல்ல\

      உண்மையை அறிய முற்படுவோர் என்றும் திறந்த மனத்துடன் இருப்பர்.//

      அப்படியா! இங்கு இயேசு கற்பனையென்று எழுதுபவர் எவரோ அவர்கள் திற்ந்த மனத்துடனா எழுதுகிறார்கள்? அடித்துப் பேசுகிறார்களே! கோயல் திறந்த மனத்துடனா எழுதுகிறார்?

      \நாளைக்கும் சரியென்று சொல்ல இன்றுள்ள தரவுகள் பொய்யாகாமல் நாளையும் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்ப‌டி ந‌ட‌க்காது.\

      I am not here to discuss prophecies of fortune tellers.
      //

      எனக்குப் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் என்று. வரலாற்றில் உண்மைகள் என்பன நிரந்தரமல்ல‌. அதிலும் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படுபவை. நீங்கள் அவற்றை உண்மைகள் என்று வரிந்துகட்டிக்கொண்டு நீண்ட பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டிருப்பதால் நினைவு படுத்தவேண்டியதாகிறது. மனிதன் எங்கே முதலில் வாழ்தான் என்பதை நாளுக்கு நாள் மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். சிந்து சமவெளியில் குதிரை இருந்ததா என்பதையும் ஆரியர் திராவிடர் என்று பிரிவினை உண்டா ஆதிகாலத்தில் என்பதையும் பொழுதுக்குபொழுது எதையாவது காட்டி மாற்றிக்கொண்டிருக்கிறார்களே? வரலாறு ஒரு 100/100 சரிவராது. இதை ஒப்புக்கொண்டுவிட்டால் வரலாற்று உண்மைகளை அடித்துச் சொல்லி வரிந்துகட்டிக்கொண்டு அதை எதிர்ப்போரைத்தாக்குவதும் நின்று விடும். நீங்கள் மங்காசாரனுக்கு மற்றவர் போட்ட எதிர்கருத்துக்களைப் படித்தால் உங்களுக்குத் திறந்த மனது. இல்லையென்றால் ஃபனாடிசிசமே. இருபக்கங்களையும் பார்த்து சீர்தூக்குபவனே அறிவாளி; திறந்த மனதுள்ளவன். எப்படி சரியா?

  42. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு புத்தபிரான் பேரில் என்ன கோபம்.

    ஏசுபிரான் மற்றும் முஹம்மத் – அன் நபி – அர் ரஸூல் – அல் ஹபீப் (Peace be upon him) போன்றோர் ஆப்ரஹாமிய மதங்களால் இறைத்தூதராக முன்வைக்கப்படும் புருஷர்கள்.

    த்ரிபிடகத்திலோ, மூலமத்யமககாரிகையிலோ, வஜ்ரயான தந்த்ர சாஸ்த்ரங்களிலோ அல்லது எந்த ப்ராக்ருத சம்ஸ்க்ருத நூற்களில் அல்லது புத்தபிரான் பற்றிப்பேசும் தமிழ் நூற்களில் புத்தபிரானை இறைத்தூதர் என்று சொல்லியுள்ளது? விளக்கவும். இறைத்தூதர் என்றே இல்லாத ஒருவரை இறைத்தூதர் என்று ஏன் பட்டியலிட வேண்டும்?

    அவலோகிதேஸ்வரர், மஞ்சுஸ்ரீ, மைத்ரேய எனப்படும் போதிசத்வர்களை நான் ஆல்சி மடாலயத்தில் தரிசித்த போது அப்பெருமகனார்களை முறையே God of Compassion, God of Wisdom, God of future என் குறிப்பு வைத்து அதில் God என்ற சொல் அடிக்கப்பட்டு அதை buddha of compassion, buddha of Wisdom and buddha of future என திருத்தியிருந்தார்கள்.

  43. Avatar
    Dr.G.Johnson says:

    ஏசுவுக்குப் பின்பு பல வருடங்கள் அவரின் போதனைகள் எருசலேமிலும் சுற்று வட்டார நாடுகளிலும், குறிப்பாக கிரேக்கத்திலும் சுற்று வட்டார நாடுகளிலும் போதிக்கப்பட்டு பல சபைகள் உருவாகின. இதற்கு முக்கிய காரணமானவர் பரிசுத்த பவுல் என்பவர். இவர் ஏசுவை நேரில் பார்த்ததில்லை. இன்னும் சொன்னால் கிருஸ்துவை போதிப்பவர்களுக்கு எதிரி. யூத மத தலைவர்களுக்கு கிருஸ்துவர்களை சிறை பிடித்து தண்டிக்க உதவியவர். ஆனால் அவருக்கு ஏசுவின் தரிசனம் கிட்டியதால் மனம் திருந்தி ஏசுவைப் பற்றி கூற மேற்கூறிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்தவர். ஏசு சபைக்காக பல நாடுகளில் தர்க்கம் செய்தவர்.
    இதில் இருந்து என்ன தெரிகிறது?
    கற்பனை ஏசுவை கண்டதாக கூறி இவ்வளவு தீவிரமாக யாரவது செயல்பட்டு ஒரு மாபெரும் மதம் உருவாக காரணமாக இருப்பார்களா?

  44. Avatar
    e.paramasivan ruthraa says:

    இயேசு கற்பனையா
    என்ற கட்டுரை
    சூடான சுண்டலின்
    பரபரப்பு வியாபாரமே தவிர‌
    வேறு ஒன்றுமில்லை.
    நாத்திகத்தைவைத்து
    வியாபாரம் செய்யும்
    ஆத்திகர்களின் தந்திரம் இது.
    கடவுள் மறுப்புக்கோட்பாட்டில்
    தர்க்கம் செய்யும்
    பொருள் முதல் வாதிகளுக்கே
    இயேசு கற்பனை என்றோ
    அது பாமரர்கள் உள்ளத்துக்குள்
    விற்பனை செய்யப்பட‌
    வந்தது என்றோ
    சொல்லும் உரிமை உண்டு.

    கற்பனையின் மோசமான‌
    வடிவங்களை
    கல் வடிவப்படுத்தி
    வழிபட்டுக்கொண்டிருக்கும்
    க‌டைந்தெடுத்த‌
    பிற்போக்கு வாதிக‌ள்
    இந்த‌ புள்ளிவிவ‌ர‌ப்
    புளுகு மூட்டைக‌ளை
    அவிழ்த்துக்காட்டுவ‌தில்
    ஒரு விஷ‌ம‌த்த‌ன‌மான‌ நோக்க‌ம்
    ம‌ட்டுமே இருக்கிற‌து.

    சூரிய‌னை
    க‌ற்ப‌னையாய் ம‌ந்திர‌ம் சொல்லி
    க‌ரு த‌ரித்த‌
    குந்தி தான்
    ந‌ம் பார‌த‌ புத்திர‌ர்க‌ளுக்கெல்லாம்
    மூல‌ அன்னை.

    அது போல்
    ராமாய‌ண‌க்க‌தைக‌ளோ
    ப‌ல‌ப் ப‌ல‌ வித‌மாய்
    இருக்கிற‌து.
    த‌சாவ‌தார‌க்க‌தைக‌ளில்
    விஷ்ணு க‌தாநாய‌க‌ன்.
    சிவ‌னும் சிவ‌ ப‌க்த‌னுமே அர‌க்க‌ன்.
    சீதை ஜ‌ன‌க‌ருக்கு பிற‌க்க‌வில்லை.
    பூமிக்குள்
    ஒரு பெட்டியில்
    சிவ‌ த‌னுசுவுட‌ன் இருந்த‌
    குழ‌ந்தை.
    அந்த‌ “சிவ‌னுக்குரிய‌வ‌ளை”
    ம‌க‌ளாய் த‌த்து எடுத்து
    வ‌ள‌ர்க்க‌ வ‌ந்த‌வ‌னே..அந்த‌
    க‌டுஞ்சிவ‌ ப‌க்த‌ன் ராவ‌ண‌ன்.
    இப்ப‌டியும் ஒரு
    ராமாய‌ண‌ம் உண்டு.
    இத‌ற்குள்
    ஆரிய‌ திராவிட‌ க‌ற்ப‌னைக‌ளும்
    உண்டு.
    இன்று ராம‌ர் கட்டிய‌ பால‌ம்
    என்ற‌ க‌ற்ப‌னையே
    சேதுத்திட்ட‌த்தை
    சின்னாபின்ன‌ம் ஆக்கிக்கொண்டிருக்கிற‌து.
    உண்மையில்
    அது த‌மிழ் வான‌ர‌ன்க‌ளால்
    (அதாவது “வால‌றிவு” மிக்க‌
    த‌மிழ் இன‌த்தால் தான்)
    க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து என்று
    ஒரு ஆராய்ச்சிக்க‌ட்டுரை
    யாரேனும் எழுதினால் போதும்
    அப்புற‌ம்
    சேது திட்ட‌த்தை
    அவ‌ர்க‌ள் கையில் எடுப்பார்க‌ள்
    இவ‌ர்க‌ள் க‌டலுக்க‌டியில்
    த‌மிழ‌னின் தொல்லிய‌ல்
    மியூசிய‌ம் ஆக்குவார்க‌ள்.
    இப்ப‌டி
    “பொலிடிக‌லி மோடிவேட்ட‌ட்”
    க‌ட‌வுள் க‌ருத்துக‌ள் தான்
    முத‌லாளித்துவ‌த்தின்
    கொத்த‌டிமை சாத‌ன‌ங்க‌ள்.
    ம‌ங்காச‌ர‌ன் அவ‌ர்க‌ளின் க‌ட்டுரை
    “டாவின்சி கோடு” போன்ற‌
    விள‌ம்ப‌ர “மேனியாக்” ம‌ட்டுமே
    தின‌வெடுத்த‌ ப‌த்திரிகைக‌ளுக்கு
    தீனி கொடுக்கும் ச‌மாசார‌ம் இது.
    ஞானத்தின் ஆணி வேர்
    இங்கு தான் இருக்கிறது என‌
    மார் தட்டும்
    இந்திய ஆத்மீக வாதிகளே!
    கற்பனையின் சதுப்புக்காட்டில்
    மனிதம் நாலு விதமாய்
    “வர்ணி”க்கப்பட்ட
    மலக்கழிவுகளாய்
    மக்கிக்கொண்டிருக்கும்
    அஞ்ஞான‌ தேச‌க்கார‌ர்க‌ளுக்கு
    க‌ற்ப‌னையோ க‌ருத்தோ
    ம‌னித‌ப்ப‌ணிக்காக‌
    அவ‌ன் க‌ண் திற‌க்க‌
    அவ‌ன் நிலை உய‌ர‌
    சுட‌ர்ந்து நின்ற‌ அந்த‌
    சுவிசேஷ‌மே
    சிற‌ந்த‌ தொரு ந‌ற்செய்தி.
    க‌ற்ப‌னையாய் இருந்தாலும்
    அந்த‌ சிலுவையே
    உல‌க‌த்தையே சும‌க்க‌ வ‌ந்த‌
    க‌னமான‌ “க‌ன‌ப‌ரிமாண‌ம்”
    குவாண்ட‌ம் டெலிபோர்டேஷ‌ன்
    எனும் விஞ்ஞான‌ம் தேடி
    அவ‌ர்க‌ள்
    இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்க‌ள்.
    இன்று உங‌க‌ள்
    ம‌டியிலும் (லேப்)
    கையிலும் (செல்)
    அவ‌ர்க‌ள் முத‌ல் க‌ற்ப‌னையான‌
    எல‌க்ட்ரோ மேக்ன‌டிஸ‌ம் தான்
    செல்ல‌ம் கொஞ்சிக்கொண்டிருக்கிற‌து.
    நீங்க‌ள் வேண்டுமானால்
    எங்க‌ள் “அணிமா ம‌கிமா” ம‌ற்றும்
    ப‌ர‌காய‌ப்ரவேச‌ம்” எனும்
    ஸ்லோக‌ங்க‌ளைத்தான் அவ‌ர்க‌ள்
    சுருட்டித்த‌ந்து கொண்டிருக்கிறார்கள் என்று
    சோம‌ பான‌ம் அருந்தி
    க‌ற்ப‌ன‌யில் நொதித்துக்கொண்டிருக்க‌லாம்.
    யானை ப‌டுத்தால்
    குதிரை ம‌ட்ட‌ம் என்ப‌து போல்
    அவ‌ர்க‌ள் க‌ற்ப‌னையே ந‌ம்
    அடி ம‌ட்ட‌த்து அஞ்ஞான‌ம்.
    உண்டு என்றால் உண்டு
    இல்லை யென்றால் இல்லை
    என்ப‌தை
    அஸ்தி ய‌ஸ்தி நாஸ்தி
    நாஸ்தி ய‌ஸ்தி நாஸ்தி
    என்று
    “அஸ்ப‌ர்ஸ‌ யோக‌ம்”
    (தொடாம‌ல் தொட்டுப்பார்
    என்று அர்த்த‌ம்)
    ப‌ற்றி
    கௌட‌பாத‌ரின்
    மாண்ட்டூக்யோப‌நிஷ‌த் காரிகை
    ந‌ம் சிந்த‌னைப்ப‌டிவ‌த்தையே
    தோல் தோலாய் உரிக்கிறது.
    செதில் செதிலாய் உதிர்க்கிற‌து.
    உங்க‌ள் குத‌ர்க்க‌ங்க‌ளால்
    தொடாம‌ல் தொட்டுப்பாருங்க‌ள்.
    “மர‌த்தை ம‌றைத்த‌து மாம‌த‌ யானை
    ம‌ர‌த்தில் ம‌றைந்த‌து மாம‌த‌ யானை
    ப‌ர‌த்தை மறைத்து பார்முத‌ல் பூத‌ம்
    ப‌ர‌த்தில் ம‌றைந்த‌து பார்முத‌ல் பூத‌ம்”
    என்றான் திருமூல‌ன்.
    சிலுவை என்ற
    மர‌த்திலும்
    ப‌ர‌த்திலும்
    தெரிவ‌து
    ம‌னித‌ நேய‌ம் ம‌ட்டுமே
    ஆம்.
    ம‌னித‌ நேய‌ம் ம‌ட்டுமே.
    திட‌ரூப‌மாய் இருக்கும்
    க‌ருப்புப்ப‌ண‌த்தின் மீது
    ஒரு ஊதுப‌த்தியைக்கூட‌
    கொளுத்த‌ முடியாத‌வ‌ர்க‌ளே!
    போங்க‌ள்
    அந்த‌ க‌ற்ப‌னை அர‌க்க‌ன் மீது
    சிவ‌காசி வெடிக‌ளை
    கொளுத்திப்போட்டுக்கொண்டே இருங்க‌ள்.
    “ஹேப்பி தீபாவ‌ளி”

    =================================================ருத்ரா

  45. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \//எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆண்டாள் ஒரு கற்பனை என வாதிட்டுள்ளார். வைஷ்ணவத்தை கசடறக்கற்ற அன்பர்கள் இதற்கு விடையளிக்க இயலும். //

    சொன்னவர் இராஜாஜி. \

    அன்பார்ந்த ஸ்ரீமான் காவ்யா,

    எனக்குத் தெரிந்து இவ்விஷயம் பற்றி ப்ரஸ்தாபித்தவர் ஸ்ரீ சுஜாதா. சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யார் சொன்னாரா எனக்குத் தெரியாது. ஹிந்துக்களில் தங்களது ஆதர்சர்கள் சரித்ரத்தில் இருந்தார்களா என கேழ்வி கேட்ட நபர்கள் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் நான் பகிர்ந்தது இது. அவ்வளவே.

    \“வைஷ்ணவத்தை கசடறக்கற்ற அன்பர்கள் இதற்கு விடையளிக்க இயலும்”!

    என்னும் கிருஸ்ணகுமாரின் பேச்சு சிண்டுமுடியும் வேலை.\

    No is my simple disagreement to your comment. Ofcourse, you have every right to have your opinion.

    in lighter vein,

    it is quite amusing that you decided to get on to that fold of

    “வைஷ்ணவத்தை கசடறக்கற்ற அன்பர்கள்”

    கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக

    நான் விரும்பிக் கேழ்க்கும் காலக்ஷேபங்களில் ஒன்று ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய ச்ரேஷ்டர்கள் “வைணவச் சுடராழி”, “ஜோஸஃப் பாகவதர்” மற்றும் “ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி” என ஆதுரத்துடன் அழைக்கும் பரம பாகவதரான மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி.

    கொக்கைப்போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப்போல் இருப்பான்

    என ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமிகளிடம் வைஷ்ணவ லக்ஷண வ்யாக்யானம் கேட்டுள்ளேன். நான் ஸ்ரீ வைஷ்ணவன் அல்லன். அது என் நிலை அல்ல. நான் எட்ட வேண்டிய நிலை என அறிவேன்.

    ஸ்ரீ திருவாழ்மார்பன் அந்நிலையை எட்டியிருக்கலாம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் பெயரை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் பாக்யமளித்த உமக்கு எனக்கு மனதார்ந்த க்ருதக்ஞதைகள். எமது அன்பார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அரங்கத்தெம்மான் அருள இறைஞ்சுகிறேன்.

    திண்ணை அட்மின் குழுவுக்கும் அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். உத்தரங்களை கால வாரியாக ஒன்றன் கீழ் ஒன்று போட்டால் வாசிப்பவருக்கு எளிதாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். சார்புடைய பத்துப் பதினைந்து உத்தரங்களின் பின்னால் சொருகி விடுகிறீர்கள். அதனால் அது படிக்கப்படாமல் போகலாம் என்பது என் அபிப்ராயம்.

    விதிவிலக்கான எனது தடம் விலகலுக்கு க்ஷமா யாசனங்கள்.

    1. Avatar
      K A V Y A says:

      வைஷ்ணவத்தை கசடறக்கற்ற அன்பர்கள்”

      கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக

      நான் விரும்பிக் கேழ்க்கும் காலக்ஷேபங்களில் ஒன்று ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய ச்ரேஷ்டர்கள் “வைணவச் சுடராழி”, “ஜோஸஃப் பாகவதர்” மற்றும் “ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி” என ஆதுரத்துடன் அழைக்கும் பரம பாகவதரான மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி.

      கொக்கைப்போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப்போல் இருப்பான்

      என ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமிகளிடம் வைஷ்ணவ லக்ஷண வ்யாக்யானம் கேட்டுள்ளேன். நான் ஸ்ரீ வைஷ்ணவன் அல்லன். அது என் நிலை அல்ல. நான் எட்ட வேண்டிய நிலை என அறிவேன்.

      ஸ்ரீ திருவாழ்மார்பன் அந்நிலையை எட்டியிருக்கலாம்.
      //

      Since Mr Krishna Kumar is labouring under certain wrong notions about Shreevaishnavism, it is urgent for me to correct you.

      மூவைகை நபர்கள் உண்டு:

      1. வைணவர்கள் (இராமனுஜர் கொடுத்த விசிஸ்டாத்வைதம், ஆழ்வார்கள் பாசுரங்கள், மற்றும் வடமொழி பனுவலகளை ஏற்றோர். ஏன் சொல்கிறேன்றால், ஹரே ராம ஹரே கிருஸ்ணா இயக்கத்தைச்சேர்ந்தவரும் வைணவரே. ஆனால் அவரிங்கு குறிப்பிடப்படவில்லை.)

      2. வைணவ அறிஞர்கள் (இவர்கள் எவராயினும் இருக்கலாம். ஒரு கிருத்துவரோ இசுலாமியராகவோ இருக்கலாம். சென்னைப்பல்கலைக்கழகத்தில் எம் ஏ வைணவம் கற்று முனைவர் ஆராய்ச்சி பண்ண மதம் தடையில்லை. பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் ஒரு மாபெரும் வைணவ அறிஞர். முனைவர் தெ ஞான சுந்தரமும் அவ்வாறே. கல்விக்கடல் கோபாலையர் அவ்வாறே. இவர்களெல்லாம் சைவர்கள்.)

      3. வைண‌வ‌ ஆச்சாரிய‌ர்க‌ள்.

      இம்மூவ‌ரையும் குழ‌ப்ப‌க்கூடாது. ஏன் சொல்கிறேனென்றால், சுட‌ராழி ஜோச‌ப் சுவாமிக‌ளை இம்மூவ‌ரோடும் சேர்த்துக்குழ‌ப்பி அடிக்க‌டி எழுதிக்கொண்டி வ‌ருகிறீர்க‌ள். த‌வ‌று. He does not come under these 3 categories.

      இம்மூவரல்லாதோரில் உள்ள‌வ‌ர் அவ‌ர். அவ‌ர் ஆழ்வார்க‌ளின் பாசுர‌ங்க‌ளில் அறிஞ‌ர் என்ற‌ முறையில் ஈடுப‌ட்ட‌வ‌ர் அன்று. அப்ப‌டி அவ‌ரைக்குறிப்பிடுவ‌து மாபாவ‌ம். செய்யாதீர். அவ‌ர் அப்பாசுர‌ங்க‌ளைத் தெய‌வ‌ப்ப‌னுவ‌ல‌க்ளாக‌க் கொண்டு ஆழ்வார்ப‌க்தியில் மூழ்குப‌வ‌ர். அப்ப‌டி ப‌ல‌ரிருக்கிறார்க‌ள். ஆழ்வார் பக்தர்கள் அருகிக்கொண்டுவருகிறார்கள். சிறுவயதில் நான் கண்ட திருனெல்வேலி நம்மாழ்வார் சபைகளை இன்று காணோம். அப்படி அருகிக்கொண்டுவருபவர்களில் இருக்கும் ஒருவரையாவது அபச்சாரம் பண்ணாமலிருக்க் கூடாதா”? ‘Whereof one cannot speak, thereof one must be silent” (Ludwig Wittgenstein)

      திண்ணையில் ஆண்டாளைப்ப‌ற்றி எழுதிவிட்டால் ஒருவ‌ன் (அதாவ‌து நான்) பெரிய‌ வைண‌வ‌னா? அல்ல‌து அம்மூவ‌ரில் வ‌ருவேனா? அல்ல‌து நான்காம‌வரில் வ‌ருவேனா? I may be an atheist, or an agonist, or melorist, or a Xian or a Muslim – all labels are irrelevant to this forum. Just read me Sir. And enjoy reading or criticise. The matter should end there please.

  46. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர்கள் ஜான்சன் மற்றும் ஜெயபாரதன் denail mode ல் மட்டும் வ்யாசத்தை வாசித்தால் வ்யாசத்தில் உள்ள மறுக்க முடிந்த வாதங்கள் கூட கண்களில் படாது போனமை ஆச்சரியம் அல்ல.

    நான் முன்னமே சொன்னபடி ஏசு என்ற கடவுளைப் பற்றி எனக்கு எந்த கேழ்வியும் இல்லை. அந்த ஏசு என்ற கடவுளை வணங்கும் க்றைஸ்தவர்களை நான் மதிக்கிறேன். மதித்துப்போற்றுகிறேன்.

    ஆயினும் ஏசு என்ற நபர் சரித்ரத்தில் வாழ்ந்தவர் என்று சொன்னால் அவசியம் ஆதாரங்கள் கேட்கப்படும்.

    வ்யாசத்தில் ஏசு என்ற கடவுளை பரிகசிக்கும் வாசகங்கள் ஏன் உங்கள் கண்களில் படவில்லை எனத் தெரியவில்லை. மாற்றுக்கருத்து எல்லாம் அது வரும்போது பாருங்கள். உள்ள கருத்தில் உள்ள ஓட்டைகள் ஏன் கண்களில் படவில்லை?

    \ஆனால் கன்னிக்குப் பிறந்த கடவுளை நம்புவதை விசுவாசம் என்ற பெயரால் நியாயப்படுத்துவது அர்த்தமில்லாத ஒன்று. இயேசு என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான இறுதி வாதமாக விசுவாசம் முன்வைக்கப்படுகிறது. இதே விசுவாசத்தின் அடிப்படையில்தான் முகமது தான் கூறுவதை நிரூபிக்கவும், பிரிஹம் யங் தனது வெளிப்படுத்தலை முனவைக்கவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட குறுக்கு வழிகளைத் தவிர கன்னிக்குப் பிறந்த மனிதனின் இருப்பை நிரூபிக்கக் கூடிய வழியில்லை. இப்படிப்பட்ட விசுவாசம் சுதந்தரமானதல்ல. இக்காலத்தில் வாளாலும், பிற்காலத்தில் நரகத் தீயாலும் அது பாதுகாக்கப்படுகிறது.\

    விச்வாசம் பற்றிய விஷயம் சரித்ரத்திற்கு அப்பாற்பட்டது. சரித்ர வ்யாசத்தில் அதற்கு அவசியமில்லை. விச்வாசம் நிரூபணத்தின் பாற்பட்டதன்று.

    \இயேசு ஒரு வரியாகிலும் எழுதவில்லை. பரவலான நம்பிக்கையின்படி அவர் கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்தும் முக்கியமான பணிக்காக பூமிக்கு வந்தார். ஆனால் அவர் கடவுளின் விருப்பத்தை தமது வாழ்நாளில் எழுத்துகளில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையில் பரலோகத்திலிருந்து யாராவது தேவபோதனையாளராய் வந்திருந்தால் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர் தமது பணியை தவறுகள் செய்யக் கூடிய அநாமதேய எழுத்தாளருக்கு விட்டுச் செல்கிறார்.\

    ஏசு சரித்ர நாயகனா என்பதை நிரூபிப்பதற்கும் அவர் ஒரு வரியாகினும் எழுதினாரா என்பதற்கும் சம்பந்தமே இல்லை. க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு என்ற மஹாபுருஷர் கண்ணனின் திருநாமத்தையே தன் வாழ்நாள் முழுதும் தன் திருவடி பட்ட இடமெலாம் பரப்பினார். சிக்ஷாஷ்டகம் என்ற எட்டு ஸ்தோத்ரங்கள் மட்டும் அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.( பஞ்ச டீகா எனும் இன்னொரு நூல்). ஆனால் அவருடைய முக்ய சிஷ்யர்கள் லக்ஷம் லக்ஷமாக ச்லோகங்கள் எழுதிப்பொழிந்தார்கள். சரித்ரத்தில் ஒருவர் இருந்திருக்க வேண்டும் என்றால் அவர் தேவ தூதனாகவே இருந்தாலும் அவர் கையாலேயே எத்தையாவது எழுதியிருக்க வேண்டும் என்பது அபத்தமாக இருக்கிறது.

    அன்பர் ஜான்சன் அவர்களுடன் நான் முரண் படும் விஷயங்கள் கீழே :-

    \அவரின் பிறப்பு பற்றி பைபிளில் மட்டும் எழுதப்படவில்லை. . புனித கூரானிலும் e எழுதப் பட்டுள்ளது.\

    என் முஸல்மாணிய நண்பர்கள் ஈசாமசி(ஹ்) என்னும் ஏசுபிரானை மிக மதித்தாலும் க்றைஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு ஆதாரமான ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டமை இறந்த பின் உயிர்த்தெழுந்தமை மனிதர்களுடைய பாவங்களுக்காக பாடு சுமந்தது போன்ற விஷயங்களை ஏற்பதில்லை. மிக முக்யமாக அவரை தேவமைந்தன் என ஏற்பதில்லை.

    ஏசு யார். அவர் பிறந்த தேதி என்ன. எப்படி இறந்தார். இறந்த பின் உயிரெழுந்தாரா. இந்த கேழ்விகளுக்கு எத்தனை புஸ்தகங்கள் பார்க்கிறீர்களோ அத்தனை ஒன்றுக்கொன்று முரணான விடைகள். க்றைஸ்தவரான ஒருவருக்கு ஏசு என்ற கடவுள் பைபள் சொல்லும் படி மட்டும் தான் என்பது என் தாழ்மையான புரிதல். குரான்-ஏ-ஷெரீஃப்புக்கு தாவ வேண்டிய அவசியமில்லை.

    \இதற்கு முக்கிய காரணமானவர் பரிசுத்த பவுல் என்பவர். இவர் ஏசுவை நேரில் பார்த்ததில்லை. இன்னும் சொன்னால் கிருஸ்துவை போதிப்பவர்களுக்கு எதிரி. யூத மத தலைவர்களுக்கு கிருஸ்துவர்களை சிறை பிடித்து தண்டிக்க உதவியவர். ஆனால் அவருக்கு ஏசுவின் தரிசனம் கிட்டியதால் மனம் திருந்தி ஏசுவைப் பற்றி கூற மேற்கூறிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்தவர். ஏசு சபைக்காக பல நாடுகளில் தர்க்கம் செய்தவர்.
    இதில் இருந்து என்ன தெரிகிறது?
    கற்பனை ஏசுவை கண்டதாக கூறி இவ்வளவு தீவிரமாக யாரவது செயல்பட்டு ஒரு மாபெரும் மதம் உருவாக காரணமாக இருப்பார்களா?\

    ஐயா, பவுல் என்பவரே ஒரு ஊகம் தான் என வ்யாசம் சொல்கிறது. பவுலின் வாழ்க்கையை ஆதரமாகக் கொள்ளுமுன் பவுலுக்கு ஆதாரம் வேண்டும் முதலில். வ்யாசத்தின் கீழ்க்கண்ட வாசகங்களை வாசியுங்கள்.

    \பவுலும் பேதுருவும் உண்மையிலேயே வாழ்ந்திருக்கலாம். ஆனால், அது ஒரு ஊகம் மட்டுமே. அவர்கள் இருந்ததை தெளிவுபடுத்தக் கூடிய எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை.\

    1. Avatar
      K A V Y A says:

      க்றைஸ்தவரான ஒருவருக்கு ஏசு என்ற கடவுள் பைபள் சொல்லும் படி மட்டும் தான் என்பது என் தாழ்மையான புரிதல். குரான்-ஏ-ஷெரீஃப்புக்கு தாவ வேண்டிய அவசியமில்லை//

      திரு கிருஸ்ணகுமார்!

      இஃதொரு வரலாற்றுக்கட்டுரை. இயேசு கற்பனையா இல்லையா என்பதை வரலாற்றின் படி பேசுகிறார் மங்காசாரனும் நீங்களும்.

      நீங்களும் அவரும் ஒரு கட்சி. மாற்றுக்கட்சிக்காரர்கள் இயேசு உண்மையே என பேசுகிறார்கள்.

      அப்படி வரலாற்றின்படி பேசும்போது நீங்களே என்ன தரவுகளிருப்பினும் எடுத்துப் பேசலாமென்றிருக்கிறீர்கள். சரி.

      அதன்படி, திருக்குரானில் இயேசுவைப்பற்றிக் குறிப்புள்ளது எனப்து ஒரு வேலிட் போயிண்ட் சார்! அதை எப்படிவிட முடியும்?

      பரிபாடலில் திருமால் வணக்கமுண்டு என்றும் அதனால் ஆதிகாலத்திலேயே வைதீகமதம் தமிழர்கள் மதமாக இருந்திருக்கிறதென்றும் எழுதும்போது, திருக்குரானில் ஈசா நபி இருந்தார் என்பதைமட்டும் விட வேண்டுமென்கிறீர்களே ஏன்?

      Krishna Kumar has alredy written here the following:

      Nov 11 740 pm

      ஏசுபிரான் மற்றும் முஹம்மத் – அன் நபி – அர் ரஸூல் – அல் ஹபீப் (Peace be upon him) போன்றோர் ஆப்ரஹாமிய மதங்களால் இறைத்தூதராக முன்வைக்கப்படும் புருஷர்கள்.

      Between Nov 11 and Nov 13, how many days r there?

    2. Avatar
      K A V Y A says:

      //மிக முக்யமாக அவரை தேவமைந்தன் என ஏற்பதில்லை. //

      This is the basic belief system of Muslims. No one, including Prophet Mohammed, is accepted as God. Prophet Mohammed is only the Messenger. Not the son of God.

      இப்படி முகமது நபிகளையே கட்டமைக்கும் இசுலாம் எப்படி இயேசுவை தேவகுமாரனாக ஏற்கவில்லையென்பதை ஒரு பெரிய உண்மையாகச்சொல்கிறீர்கள். இந்துக்களும்தான் ஏற்கவில்லை! சீக்கியரும் ஜைனரும்தான் ஏற்கவில்லை. இவை எப்படி உங்களுக்கு உதவும்?

  47. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    http://ancienthistory.about.com/od/churchhistory/qt/121507JesusBirt.htm
    The Star of Bethlehem and the Dating of the Birth of Jesus
    If It’s a Comet, the Star of Bethlehem Can Help Date Jesus’ Birth
    By N.S. Gill, About.com Guide

    When was Jesus born? The question seems to have an obvious answer since our dating system is based on the idea that Jesus was born between the eras we call B.C. and A.D. In addition, those of us who do so celebrate the birth of Jesus near the Winter Solstice, on Christmas or the Epiphany (January 6). Why? The date of Jesus’ birth is not explicitly stated in the Gospels. Assuming Jesus was an historical figure, the Star of Bethlehem is one of the main tools used to calculate when he was born.
    There are many puzzling details about the birth of Jesus, including the season, the year, the Star of Bethlehem, and the census of Augustus. Dates for the birth of Jesus often hover around the period from 7-4 B.C., although the birth could be several years later or possibly earlier. The Star of Bethlehem could be the bright celestial phenomenon shown in planetariums: 2 planets in conjunction, although the Gospel account of Matthew refers to a single star, not a conjunction.
    Now after Jesus was born in Bethlehem in Judea in the days of Herod the king, magi from the east arrived in Jerusalem, saying, “Where is He who has been born King of the Jews? For we saw His star in the east, and have come to worship Him.” (Matt. 2:1-1)
    A good case can be made for a comet. If the right one is picked, it can provide not only the year, but even the season for the birth of Jesus.
    Winter Christmas
    By the 4th century, historians and theologians were celebrating a winter Christmas, but it wasn’t until 525 that the year of Jesus’ birth was fixed. That was when Dionysius Exiguus determined Jesus was born 8 days before a New Year’s day in the year 1 A.D. The Gospels provide us with clues that Dionysius Exiguus was wrong.
    Star of Bethlehem as Comet
    According to Colin J. Humphreys in “The Star of Bethlehem — a Comet in 5 BC — and the Date of the Birth of Christ,” from Quarterly Journal of the Royal Astronomical Society 32, 389-407 (1991), Jesus was probably born in 5 B.C., at the time the Chinese recorded a major, new, slow-moving comet — a “sui-hsing,” or star with a sweeping tail in the Capricorn region of the sky. This is the comet Humphreys believes was called the Star of Bethlehem.
    Magi
    The Star of Bethlehem was first mentioned in Matthew 2:1-12, which was probably written in about A.D. 80 and was based on earlier sources. Matthew tells of the magi coming from the East in response to the star. The magi, who were not called kings until the 6th century, were probably astronomer/astrologers from Mesopotamia or Persia where, because of a sizable Jewish population, they were acquainted with Jewish prophecy about a savior-king.
    Humphreys says it was not uncommon for magi to visit kings. Magi accompanied King Tiridates of Armenia when he paid homage to Nero, but for magi to have visited Jesus, the astronomical sign must have been powerful. This is why Christmas displays at planetariums show the conjunction of Jupiter and Saturn in 7 B.C. Humphreys says this is a powerful astronomical sign, but it doesn’t satisfy the Gospel description of the Star of Bethlehem as a single star or as one standing over the city, as described by contemporary historians. Humphreys says expressions like “‘hung over’ appear to be uniquely applied in ancient literature to describe a comet.” If other evidence emerges showing conjunctions of planets were so described by the ancients, this argument would fail. A New York Times article (based on a National Geographic Channel show on the birth), What Jesus’ Birth May Have Looked Like , cites John Mosley, from the Griffith Observatory, who believes it was a rare conjunction of Venus and Jupiter on June 17, 2 B.C.
    “The two planets had merged into one single gleaming object, one giant star in the sky, in the direction of Jerusalem, as seen from Persia.”
    Determining Which Comet
    Assuming the Star of Bethlehem was a comet, there were 3 possible years, 12, 5, and 4 B.C. By using the one relevant, fixed date in the Gospels, the 15th year of Tiberius Caesar (A.D. 28/29), at which time Jesus is described as “about 30,” 12 B.C. is too early for the date of Jesus’ birth, since by A.D. 28 he would have been 40. Herod the Great is generally assumed to have died in the spring of 4 B.C., but was alive when Jesus was born, which makes 4 B.C. unlikely, although possible. In addition, the Chinese do not describe the comet of 4 B.C. This leaves 5 B.C., the date Humphreys prefers. The Chinese say the comet appeared between March 9 and April 6 and lasted over 70 days.

  48. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    நான் சொன்னது

    \பரம பாகவதரான மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி.\

    ஸ்ரீமான் காவ்யா சொல்லும் பொய் :

    \அவ‌ர் ஆழ்வார்க‌ளின் பாசுர‌ங்க‌ளில் அறிஞ‌ர் என்ற‌ முறையில் ஈடுப‌ட்ட‌வ‌ர் அன்று. அப்ப‌டி அவ‌ரைக்குறிப்பிடுவ‌து மாபாவ‌ம். செய்யாதீர்.\

    பாகவதர் என்பவர் அடியார்

    வித்வான் என்று சொல்லியிருந்தால் அறிஞர் என்று சொல்லி வ்யாக்யானாதிகள் கொடுக்கலாம்.

    பொய் சொல்லலாகாது பாப்பா (காவ்யா)

    1. Avatar
      K A V Y A says:

      பாகவதரோ பக்தரோ அவர் பெயரை ஈகோ கிராடிஃபிகேஷனுக்குப் பயன்படுத்தக்கூடாது. என்னிடம் வாதம் செய்வதற்காக என்னை அவருடன் சேர்த்து அவரைவிட நீர்பெரியவரில்லை என்ற தொனி. தயவு செய்து விட்டுவிடுங்கள் கிருஸ்ணகுமார்.

  49. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \இந்துக்களும்தான் ஏற்கவில்லை! சீக்கியரும் ஜைனரும்தான் ஏற்கவில்லை. இவை எப்படி உங்களுக்கு உதவும்?\

    Atleast for an exception, Sh.kavya, could you talk something relevant to the context and avoid cherry picking.

    The reason for me to tell Dr.Johnson to avoid the life and times of Jesus as per Quran-e-sherif is not only that Quran-e-sherif refuses to accept Jesus as son of God but other important beliefs central to christianity viz., crucifiction and resurrection of Jesus is also not accepted in Quran-e-sherif.

    As many contradictory accounts are there about the historical Jesus in as many sources, that would naturally lead one to doubt the validity of historicity of this historical Jesus.

    \திருக்குரானில் ஈசா நபி இருந்தார் என்பதைமட்டும் விட வேண்டுமென்கிறீர்களே ஏன்?

    Krishna Kumar has alredy written here the following:

    Nov 11 740 pm

    ஏசுபிரான் மற்றும் முஹம்மத் – அன் நபி – அர் ரஸூல் – அல் ஹபீப் (Peace be upon him) போன்றோர் ஆப்ரஹாமிய மதங்களால் இறைத்தூதராக முன்வைக்கப்படும் புருஷர்கள்.

    Between Nov 11 and Nov 13, how many days r there?\

    Is it wrong on my part to expect some logic in your reasoning

    My reference to Esa-ale-salam and prophet Mohammad (PBUH) are these personalities as al-masih, i.e Esa-ale-salam as being mentioned in Quran-e-sherif as masih. I had adnausea repeated in this forum that I do not dispute the divine Jesus or Jesus as a divine personality. What I am not convinced with is the fact whether there existed a historical person Jesus.

    To establish historicity of Jesus, you have to show source documents that are available either at the alleged historical life and times of Jesus or just thereafter. Do you know, when Jesus christ was alleged to be crucified and when Quran-e-sherif was available to the followers of Islam.

    ‘Whereof one cannot speak, thereof one must be silent” (Ludwig Wittgenstein) – endevour, just not to quote but to grasp the content.

    Why could not you put something worthy and relevant to the discussion?

    Admin may pardon me to type out my complete reply in English because I felt I may not articulate the facts if I type it out tamizh.

    1. Avatar
      K A V Y A says:

      //The reason for me to tell Dr.Johnson to avoid the life and times of Jesus as per Quran-e-sherif is not only that Quran-e-sherif refuses to accept Jesus as son of God but other important beliefs central to christianity viz., crucifiction and resurrection of Jesus is also not accepted in Quran-e-sherif.

      As many contradictory accounts are there about the historical Jesus in as many sources, that would naturally lead one to doubt the validity of historicity of this historical Jesus.
      //

      நான் சொன்னதைத்தான் உறுதிப்படுத்துகிறீர்கள். கம்பார் கான்ட்ராஸ்ட் உத்தியைப்பயன்படுத்துகிறீர்கள். அதைச்சரியென்கிறேன்.

      //To establish historicity of Jesus, you have to show source documents that are available either at the alleged historical life and times of Jesus or just thereafter. Do you know, when Jesus christ was alleged to be crucified and when Quran-e-sherif was available to the followers of Islam. //

      இதைத்தானே நானும் சொல்கிறேன். இயேசு கற்பனையா உண்மையா என்ற வாதத்துக்கு, எந்த ஆதிகாலக்குறிப்புகள் – பாசிட்டிவாக, அல்லது நெகட்டிவ்வாக – இருந்தாலும் சரி, உதவும். நானும் நீங்களும் ஒரே வழியில்தானே சொல்கிறோம்?

    2. Avatar
      K A V Y A says:

      திருக்குரானில் ஈசா நபிகளையும் அன்னாரது தாயாரைப்பற்றி சொல்லப்பட்டிருப்பது ஈசா நபிகள் கற்பனையன்று என்பதற்கு ஒரு நல்ல ஆதாரமென என் கருத்து.

  50. Avatar
    vedamgopal says:

    ”சிலுவை என்ற மரத்திலும் பரத்திலும் தெரிவது மனித நேயமே”
    இந்த கண்டுபிடிப்பிற்கு நிச்சயம் நோபிள் பரிசு அளிக்கவேண்டும்

    1. Avatar
      K A V Y A says:

      மதத்தை நம்புவோர் பரிசுகளுக்காக நம்புவதில்லை. மனித நேயம் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துத்தான் சொல்லவியலும். வாத்தியார் பாடம் மட்டும்தான் சொல்லித்தருவார். பரீட்சை எழுதித்தர மாட்டார். மாணவன்தான் படிக்கவேண்டும். அதைப்போல மதம் சொல்லும். செய்வது மனிதன் கையில். இது எல்லாமதத்துக்கும் பொருந்தும். எங்கள் மதத்தில்தான் மனித நேயம்; உங்கள் மததத்தில் இல்லையென்பது ஒரு சுய சொறிதல்.

      தர்மபுரியில் 160 தலித்துக்கள் குடிசைகளை எரித்தோர் ஒரு மதததைச் சார்ந்தவர்தான். மனித நேயம் எங்கே போச்சு வேதம் கோபால்?

      1. Avatar
        vedamgopal says:

        சுதந்தரத்திற்குபின் ஜாதி கலவரங்கள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் இந்த மதமாற்ற கும்பல்களால் புதிதாக உண்டான ஹிந்து கிருஸ்துவர்களை தூண்டிவிட்டு மீசிநரிகளால் நடத்தபடும் கலவரங்கள்தான் இன்று தமிழ்நாட்டில் மலிந்து கிடக்கின்றன என்பது நிதர்சனம்.

  51. Avatar
    vedamgopal says:

    இங்கே ஏசு கதை எப்படியாகிலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் ஏசுவின் பெயரால் நடந்துமுடிந்த நடந்துகொண்டிருக்கின்ற நடக்கபோகிற மனித இன பேரழிவும் கலாசார சீர்அழிவும் சரித்திர குளருபடிகளும் எண்ணில் அடங்காதது. இப்படிப்பட்ட மனிதநேய மதத்தை பாராடாமல் இருக்கலாமா ?
    Conversion is nothing but soul harvesting or soul purchasing business to increase their goat strength. Prostitution also called soul selling trade. In both the case the soul giver gets monitory benefit. Hindus are not against any true conversion without any financial or material benefit. Unfortunately 95% of conversion done through allurements and it is an offense punishable under Indian law and nobody bother about it due to minority appeasement policies of political parties to grape their vote. Because of this the Hindu majority is slowly diminishing and it is the duty of every Hindu to oppose invasion through conversion and expose the true color of Christianity.

    CHRISTIANITY
    C = Convert ignorant people and make them a permanent slave, domination by appointing puppet government
    H = Homosexuality, incest practitioners – practiced and propagated by almost all the messiah (Habitual adulteration of world history to establish Christian superiority)
    R = Racism – worst kind of inhuman behavior – still existing
    I = Inquisition – barbaric – even stone age people better when compare the torture done
    S = Slavery – worst kind of exploitation done – polluted them in the animal gages
    T = Torcher – inventor of torture cross –their own son of God died in the cross – do
    Prayer in front of dead body photo/statue
    I = Illegitimate child producers (your son and my son are playing with our son)
    A = Addiction – drugs, alcohol, pills, opium, kanja, cigarettes, Viagra spamming etc.,
    N = Nigger Yard or camps des Noirs’ place for dumping the indenture labor slave
    like cattle shed
    I = Imperialism – colonization and domination of poor countries
    T = Trading – in the name of globalization swindling others money also
    famous in flesh trade
    Y = Yeoman – The above are the Yeoman contribution of Christ /followers for
    the younger generation
    This is how Christianity did yeoman contribution to humanity as above.
    REJECT CHRISTIANITY – REJECT CHRISTIANITY –REJECT CHRISTIANITY
    FIRST STOP CONVERSION (INVASION THROUGH CONVERSION).

  52. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    இயேசு பிறப்பில் நட்சத்திரத்தைக் கொண்டு காலம் குறித்தலை சகோ. ஜெயபரதன் காட்டுகிறார்.

    முதலில் மத்தேயுபடி பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் வாரிசு இயேசு- ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை.
    லூக்கா கதைப்படி நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் வாரிசு இயேசு- ஆபிரகாமிலிருந்து 57வது தலைமுறை.

    இருவருக்கும் இடையே 15 தலைமுறை- அதாவது 425 வருடம் முன் பின்னே வாழ்ந்திருக்க வேண்டும்.

    பட்டியலை விட்டு, பெரிய ஏரோது காலத்தில் – இயேசு பிறப்பு எனில் பொ.மு.6 இல் சரி, ஆனால் லுக்கா கதையின் கிரேனியு தலைமையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எனில் அது பொ.கா. 7 ௮ இல் வரும், அதாவது 12- 13 ஆண்டு இடைவெளி.

    நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்- பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் இருவரும் ஒருவராக இருக்க முடியாது.

  53. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் சிசு ஒன்று பிறக்கும் போது கால நேரத்தைப் பதிய அந்த நேரத்தில் அவ்விடத்தில் உள்ள கோள்களின் இருப்பும், கோணங்களும் ஜாதக உருவில் எழுதப்படும்.

    கிருஷ்ணக்குமார் தனி மனிதர் தாக்குதலின்றி நாகரீகமாக, கண்ணியமாக, ஆத்திரப் படாமல், அடக்கமாக, அறிவோடு வலையில் எழுத எப்போது கற்றுக் கொள்ளப் போகிறார் ?

    சி. ஜெயபாரதன்.

  54. Avatar
    தேவப்ரியா சாலமன் says:

    Dr.G.Johnson says:
    November 11, 2012 at 10:17 am
    ஏசுவுக்குப் பின்பு பல வருடங்கள் அவரின் போதனைகள் எருசலேமிலும் சுற்று வட்டார நாடுகளிலும், குறிப்பாக கிரேக்கத்திலும் சுற்று வட்டார நாடுகளிலும் போதிக்கப்பட்டு பல சபைகள் உருவாகின. இதற்கு முக்கிய காரணமானவர் பரிசுத்த பவுல் என்பவர். இவர் ஏசுவை நேரில் பார்த்ததில்லை… அவருக்கு ஏசுவின் தரிசனம் கிட்டியதால் மனம் திருந்தி ஏசுவைப் பற்றி கூற மேற்கூறிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்தவர். ஏசு சபைக்காக பல நாடுகளில் தர்க்கம் செய்தவர்.
    இதில் இருந்து என்ன தெரிகிறது?..///

    மத்தேயு10:5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
    மத்தேயு15:24 இயேசு மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார். 26 ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.

    மாற்கு13:30 இவையனைத்தும் நிகழும்வரை இப்போது வாழும் மக்கள் மரணம் அடைய மாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.-அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
    யோவான் 6:35 இயேசு அவர்களிடம், ‘ வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
    48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

    1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.//

    இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார், தன்னை ஏற்போருக்கு மரணம் இல்லை என்றார்.

    பவுலும் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார்.

    தேவதூதர் சொன்னது, கதையில் உயிர்த்ததான கடவுள் மகன் சொன்னது, அதிசயஙள் எல்லாவற்றையும் – நம்ப இவை பலித்திருக்க வேண்டும்…

Leave a Reply to vedamgopal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *